Thinathorum Deiveegam
()
About this ebook
மனித வாழ்வை சீர்படுத்தவும், மண்ணில் நல்ல வண்ணம் வாழவும் இறைவனின் மீதான பக்தியே உதவுகிறது. பக்தி என்பது கோவில், கோவிலாகச் செல்வது அல்ல. நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாக, நல்ல எண்ணங்களுடன், சிந்தனைகளுடன், பரம்பொருள் ஒன்றே என்ற நம்பிக்கையுடன் நடப்பதே.
அதைத்தான் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் நமக்குப் பெரியவர்கள் உணர்த்திச் சென்றுள்ளார்கள். நம் இதிகாசங்களும், புராணங்களும் வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல. மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல அரிய கருத்துக்களுடன், பக்தி பூர்வமாக எழுதப்பட்டவை.
Read more from Sairenu Shankar
Utharavindri Ulley Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNaga Megalai Rating: 0 out of 5 stars0 ratingsManjal Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Sai; Ellam Sai! Rating: 0 out of 5 stars0 ratingsChathura Saravedigal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Crazy Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsAariya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAruvikarai Koyil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thinathorum Deiveegam
Related ebooks
Unnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsSaranagadhi Rating: 0 out of 5 stars0 ratingsThaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsRangarattinam Rating: 5 out of 5 stars5/5Varadha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Indha Nool Vaangalam - Part 1 & 2 Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsAkkini Kunjondru Rating: 0 out of 5 stars0 ratingsAmma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Karunai Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivamalar Rating: 0 out of 5 stars0 ratingsArputham Arubathu Rating: 0 out of 5 stars0 ratingsMagale Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Arul Anandham Rating: 0 out of 5 stars0 ratingsIraivanai Naadu! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi La. Sa. Ra.vin Ninaivu Kurippugal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 3 - Sriramajayam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thinathorum Deiveegam
0 ratings0 reviews
Book preview
Thinathorum Deiveegam - Sairenu Shankar
http://www.pustaka.co.in
தினந்தோறும் தெய்வீகம்
Thinathorum Deiveegam
Author :
சாய்ரேணு சங்கர்
Sairenu Shankar
For more book
https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. பயணக் கட்டுரை
2. எட்டுகிறேன் ஐயனே!
3. ருரு கதை கேளுங்கள்!
4. நெகிழ்வு தரும் நிகழ்வு
5. மாவரைத்ததும் மாநூல் உரைத்ததும்
6. மலைமகளுக்கு அருள்புரிந்த மல்லிகார்ஜுனர்!
7. ஆரியங்காவு ஐயனே! சரணம் ஐயப்பா!
8. பெரியது எது?
9. புனிதம்! பூரணம்! பொங்கும் மங்கலம்!
10 அன்பின் ஒளி!
11. சடைகொண்ட சிவம்!
12 ஸ்ரீ ந்ருஸிம்ம வைபவம்
13 மகாபாரதத்தில் இராமாயணம்
14 தர்மத்தின் வெற்றி
15. ரக்ஷை செய்வது யார்?
16 ஏன் மறுக்கிறேன், கண்ணா?
17. கருடனும் ஆதிசேஷனும்
18. பாம்பினால் பிறந்த பாடல்
19 இந்திர விஜயம்
20 தூக்கிய துதிக்கை!
21. பாஸிட்டிவ் அவுட்லுக்!
22 இரு மகன்கள்; இரு தந்தைகள்!
23 ஒரு பிடி அவன்!
24 பானைக்கும் பரமபதம்!
25 நான் சொல்லும் முன் உணர்வான்
26 அனுமன் எத்தனை அனுமனடி!
27. பொன்மழை பொழிந்ததே!
28. மாயையை வெல்வதோ? மாயையைக் கொள்வதோ?
29. அக்ஷயம்!
30 திரைகடலோரம் கருணைக் கடல்!
31. நோய்தீர்க்கும் நூதனவுருப் பெருமாள்!
32. ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம!
முன்னுரை
A picture containing person, text, human face, clothing Description automatically generatedஜி.ஏ. பிரபா.
தெய்வீக அருள் பெறும் முன்...
இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.
மனித வாழ்வை சீர்படுத்தவும், மண்ணில் நல்ல வண்ணம் வாழவும் இறைவனின் மீதான பக்தியே உதவுகிறது. பக்தி என்பது கோவில், கோவிலாகச் செல்வது அல்ல. நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாக, நல்ல எண்ணங்களுடன், சிந்தனைகளுடன், பரம்பொருள் ஒன்றே என்ற நம்பிக்கையுடன் நடப்பதே.
அதைத்தான் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் நமக்குப் பெரியவர்கள் உணர்த்திச் சென்றுள்ளார்கள். நம் இதிகாசங்களும், புராணங்களும் வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல. மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல அரிய கருத்துக்களுடன், பக்திபூர்வமாக எழுதப்பட்டவை.
எங்கள் சங்கப் பலகையில் (A Facebook group consisting of budding as well as elite authors) மாதம் ஒரு தலைப்பு என்று போட்டிகள் வைத்தபோது, தெய்வீகக் கதைகள் என்ற தலைப்பில் எழுதப்பட்டவை இத்தொகுப்பில் உள்ள கதைகள். முப்பது கதைகளுக்குப் மேல் எழுதி பரிசு வென்ற திருமதி சாய்ரேணுவின் கதைகளே தற்போது தினந்தோறும் தெய்வீகம்
என்ற தொகுப்பு நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராமா
என்று ராமநாமத்தின் பெருமை சொல்லும் கதை, திரைகடலோரம் கருணைக் கடல்
என்று திருச்செந்தூர் முருகனின் வரலாறு, அக்ஷயம்
என்று அக்ஷய திருதியை பற்றி, பொன்மழை பொழிந்ததே
என்று ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த கதை, அனுமன் எத்தனை அனுமனடி
என்று அவனின் புகழ், பாசிடிவ் அவுட்லுக், என்று நம்மை ஒவ்வொரு கதைகளும் உளம் பூரிக்க வைக்கிறது.
தாத்தா, பேரன், பேத்தி என்று மூவர் கூட்டணியில் கதைகளைச் சொல்லும்போதே, இப்படி வீட்டில் ஒரு பெரியவர் இருந்தால், அந்த இல்லத்து குழந்தைகள், சிறந்த பண்புகளோடு வளர்வார்கள் என்பதையும், அது தெய்வீகம் மணக்கும் வீடு என்று மறைமுகமாகக் கூறுகிறார்.
கதைகளை வெறும் சம்பவமாகக் கூறிச் செல்லாமல், அதன் அடிப்படை கருத்துக்களையும் விளக்கும்போது, நம்மை அறியாமல் ‘அட’ போட வைக்கிறார். வாழ்ந்த மனிதர்களின் தெய்வீக வரலாறுகளை இப்படி விளக்கும்போது அது குழந்தைகள் மனதில் ஆழப் பதிந்துவிடும். ஆழ்ந்த நுண் உணர்வுகளை கதையாகக் கூறிச் சென்ற தாத்தா இதிகாச சம்பவங்களின் மூலம் அதன் அடிப்படைக் கருத்துக்களை விளக்குகிறார். தர்மர், கண்ணன், கர்ணன், கருடன், ஆதிசேஷன் போன்றவர்களைப் பற்றிய கதைகள் சிறப்பு.
இவைகள் வெறும் கதைகள் அல்ல. இறைவனுக்குச் சூட்டப்பட்ட பூமாலைகள். பயபக்தியுடன், ஆழ்ந்து படித்துச் சிந்திக்க வேண்டியவை. மிக எளிமையாக, ஆழ்ந்த புலமையுடன், சிரத்தையாக, அழகுத் தமிழில் இவர் எழுதிய கதைகளை ஆழப் படித்து ரசிக்க வேண்டும். போகிற போக்கில் படித்துத் தூக்கி எறியக்கூடியவை அல்ல.
மகாபாரதம், ராமாயணத்தில் ஆழ்ந்த புலமையும், ஆர்வமும் கொண்ட அவர், மிகச்சிறந்த கவிதாயினி. அந்தக் கவிதையின் அழகு அவரின் கதைகளிலும் உள்ளது. அமானுஷ்யம், கிரைம் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடைய இவர் ஆன்மீகக் கதைகளிலும் முத்திரை பதித்துவிட்டார்.
இவரின் தெய்வீகக் கதைகள் சங்கப்பலகையில் வெளியான போது மிகுந்த வரவேற்பும், பாராட்டுதல்களும் பெற்றது. இவர் எங்கள் சங்கப்பலகை எழுத்தாளர் என்று நாங்கள் பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம்.
எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மேலும், மேலும் பல கதைகள் எழுதி, பிரபல்யம் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். வெகுஜனப் பத்திரிகைகளில் இவரின் சிறுகதைகள், நாவல்கள் வெளிவர வேண்டும். இன்னும், இன்னும் இவரின் எழுத்துக்கள் தொகுப்பாக வெளிவந்து பல பரிசுகள், விருதுகள் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
ஸ்ரீ மகா பெரியவா அருளால் சாய்ரேணு நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன், சகல சௌபாக்கியத்துடன் வாழ்ந்து இன்னும் நிறைய படைப்புகளைப் படைக்க வேண்டும். சங்கப் பலகையின் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஜி.ஏ. பிரபா.
1. பயணக் கட்டுரை
இருண்ட குகையொன்றில் கண்விழித்தேன் நான்.
தட்டுத் தடுமாறி அக்குகையின் குறுகிய வாயில் வழியாக வெளிவந்தேன்.
திக்குத் தெரியாத காடு. வானளாவிய மரங்களும், வனவிலங்குகளும், கால்வருத்தும் கற்களும் பாறைகளும், அருவிகளும் நதிகளும், புதைகுழிகளும்...
இந்தப் பிரம்மாண்டம் மூச்சடைக்கிறது, மூளை குழம்பி மயக்கம் வருகிறது. அதற்காக இங்கேயே நிற்க முடியுமா? இந்தக் காட்டைக் கடந்தால் என் உறவினர் வீடு உள்ளது. அங்கு சென்றுவிட்டால் பிழைத்துக் கொள்வேன். நிம்மதியாக வாழ்வேன்.
நடை. நடக்க நடக்கத் தொலையாத நடை. சிலர் சேர்ந்து நடக்கிறார்கள். காடுகளின் உழைவு நுழைவுகளில் சிலர் பிரிகிறார்கள். சிலர் பின் வந்து சேர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் முன்பே என்கூட நடந்தவர் தாமோ?
நடை. பார்ப்பவை எல்லாம் பயமுறுத்துகின்றன. பிறாண்டும் பூச்சியிலிருந்து பிரமாண்ட டைனாசர் வரை, இதுதான் ஜுராசிக் பார்க்கா?
நடை. இருளும் நிழலுமாய நடை. இன்பமும் இளப்பமுமாய நடை. விழுதலும் எழுதலுமாய நடை. பிரிதலும் சேர்தலுமாய நடை. துவங்கிய இடம் வந்து மயங்கி, மயங்கிய நிலை மாறித் துவங்கி...
தப்பும் தவறுமாய் எத்தனை சுற்றுக்கள் ஐயனே!
திடும்மென்றுதான் அந்த வெளிச்சம்.
அப்பாடி, உன்னைப் பார்த்து விட்டேன். வா, போகலாம்!
கைவிளக்கேந்திக் கொண்டு அந்த உருவம். முகத்தில் சக்தி ததும்புகிறது. கண்களில் கருணை கொப்புளிக்கிறது.
ஹேய், உன்னை முன்பு பார்த்திருக்கிறேன். நீயும் இந்தக் காட்டில் சுற்றியவன்தானே?
ஆமாம். ஒரு வழியாய்க் காட்டுக்கு வெளியே போய்விட்டேன்.
வெளியே? பின் இங்கே என்ன செய்கிறாய்?
உன்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் உள்ளே வந்தேன். வா, விளக்கைப் பின்பற்றி நட.
சாந்தப் பேரலை ஒன்று சுனாமியாய்த் தாக்கி என் பயத்தையும் ஐயத்தையும் அடித்துப் போகிறது.
உற்சாகமாய் எழுந்தேன். உதட்டில் பாட்டுக்கூடத் தோன்றியது.
நடை. இப்போது ஆனந்தமான நடை. விளக்கின் பின்னால் விவேகமான நடை. இந்தக் கானகம் இத்தனை அழகு வாய்ந்ததா? முன் தப்பிக்க இயலாத ஒரு கவர்ச்சி போல் எனக்குத் தோன்றியதே! இத்தனை இனிய கனிகளும் மலர்களுமா? ஆபத்துகளைத் தவிர, வேறேதும் முன்பு என் கண்ணில் படவில்லையே!
அது ஊரா? இத்தனை வேகமாக வெளியிலா வந்துவிட்டோம்?
அரண்மனை வாசல் திறந்தேயிருக்கிறது. அவன், என் சொந்தக்காரன், நகரத் தலைவன், தலைவாசலிலேயே நிற்கிறான். வழி தெரிந்ததா? எத்தனை நாளாயிற்று பார்த்து
அவன் தேன் குரல் கேட்கிறது.
பதில் சொல்லத் தெரியவில்லை. வழிகாட்டி என் கைப்பிடித்து அவனிடம் ஒப்படைக்கிறான். வா, உள்ளே போகலாம்
என்கிறான் உறவினன்.
திரும்பினேன். நின்று விட்டேன். நீ வரவில்லையா நண்பனே!
கைவிளக்கேந்திய அந்தக் கருணைப் பெருக்கைக் கேட்கிறேன்.
தலையசைத்து மறுக்கிறான். இன்னும் எத்தனை பேர் அந்தக் காட்டிலே! நீ சொந்தக்காரனிடம் போ, நான் அந்தகாரத்திடம் போகிறேன்
- சிரிக்கிறான். கைவிளக்கு பளபளக்கக் காடு நோக்கி நடக்கிறான்.
விழிநீர் சோர அவனை வெகுநேரம் பார்த்துக் கொண்டு நின்றோம்.
எத்தனை மகிழ்ச்சி இங்கே! வேதமும் கீதமும் உறவும் நிறைவும் அமுதும் அருளும் எல்லாம் இங்கே. இது என் வீடு. இவர்கள் என் மனிதர். இவன் என் இறைவன்.
இல்லை சஞ்சலம். இடையறாது பொங்கும் மங்கலம்.
பெயர்கள் சொல்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறேன்.
நானிருந்த அந்தக் காட்டின் பெயர் சம்சாரம். இருளை மாயா என்பார்கள். அடைந்த ஊரோ மோட்சம். ஊர்த்தலைவன் பெயர் சுவாமி.
அழைத்து வந்த அன்பு நண்பன் குரு. அவன் கைவிளக்கு ஞானம். செல்லும் பாதை தர்மம்.
ஓ! ஒன்றை விட்டுவிட்டேன்.
என் பெயர் ஆத்மா!
2. எட்டுகிறேன் ஐயனே!
திருவிரிஞ்சிபுரம் ஆலய மண்டபத்தில் ‘திருதிரு’வென்று விழித்துக் கொண்டு நின்றிருந்தான் சிவசர்மன். அருகில் அமர்ந்திருக்கும் அவன் தாய் எதற்காக மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. பாவம், சிறுவன்தானே!
இந்தச் சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டான். அதற்காக அம்மா எவ்வளவோ அழுதுவிட்டாள். இப்போது வேறெதற்கோ அழுகிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
மார்க்கபந்தீச்வரா! வழியின்றித் தவிக்கிறோம், வழிகாட்டு ஈசனே!
என்று அவன் தாய் ஏன் கதறுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.
திருவிரிஞ்சிபுரத்திலே மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீச்வரர் திருக்கோயிலில் அர்ச்சகராக இருந்த சிவநாதனின் மகனே சிவசர்மன். சிவசர்மனின் தந்தை மரித்துவிட்டதால், அவன் தாயார் தாயாதிமார்களை அணுகி சிவசர்மனுக்கு உபநயனமும் சிவதீட்சையும் செய்வித்து முறைப்படி இறைவனுக்குப் பூஜை செய்யும் ஊழியத்தையும் அவனுக்குப் பெற்றுத் தருமாறு வேண்டினாள். சிவசர்மரின் குடும்பத்திற்குத் தந்தைக்குப்பின் மகன் என்று சிவனுக்குப் பூஜை செய்யும் உரிமையும் அதற்காகக் காணியாட்சியும் (குறிப்பிட்ட வயலிலிருந்து பெறும் நெல் / வருமானம்) இருந்தது. இதனைப் பறிக்க எண்ணிய தாயாதியர் அவனுக்கு உபநயனமோ, சிவதீட்சையோ செய்விக்க மறுத்தனர்.
சிவசர்மனின் தாயார் இதனை எண்ணி, எண்ணி ஏங்கி அழுவாள். அம்மா, என் நண்பர்கள் எல்லோரும் பூநூல் போட்டுண்டிருக்கா, எனக்கு எப்போ போடுவீர்கள்?
என்று அப்பாவியாகச் சிவசர்மன் கேட்பதைக் கண்டு கலங்குவாள்.
இவ்விஷயம் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமலில்லை. ஊர்ப் பெரியவர்கள் தாயாதிகளைப் போய்ப் பார்த்து, சிவசர்மனின் தாயாரின் சார்பில் பேசினார்கள். சிவசர்மனுக்குச் சீக்கிரம் உபநயனமும் சிவதீட்சையும் செய்து வைக்குமாறு தூண்டினார்கள். பரம ஏழ்மை நிலையிலிருந்த தாய்க்கும் மகனுக்கும் கோயில் கைங்கரியம்தான் கஞ்சி வார்க்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்கள்.
அட, நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். அவன் அம்மாதான் செலவுக்குக் கணக்குப் பண்ணிக் கொண்டு அவனுக்கு உபநயனம் செய்து வைக்க மறுக்கிறாள். உபநயனம் செய்யாமலே கோயில் கைங்கரியத்தில் பழக்கு என்கிறாள். அது எப்படிச் சாத்தியம், சொல்லுங்கள்? ஆகம் விதிகளை மீறி நடக்கலாமா?
என்று தாயாதிகள் சாமர்த்தியமாகப் பேசிவிடவே, ஊர்க்காரர்களின் கோபம் சிவசர்மனின் தாய்மீதே திரும்பியது. என்றாலும், தாயாதிக்காரர்களே சிவசர்மனுக்குச் சீக்கிரம் உபநயனம் செய்து வைக்க வேண்டும் என்றும், அதற்காக ஊர்ப் பொதுவில் இருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றுவிட்டார்கள்.
இதெல்லாம் உனக்குத் தெரியாதா ஈசனே? நாங்கள் சிவனுக்குக் கைங்கரியம் பண்ணிக் கொண்டு சிவனே என்று வாழத்தான் விரும்புகிறோம். அதற்கும் வழி இல்லாமல் இருக்கிறதே! எங்கே ஊர்க்காரர்கள் தூண்டி எங்கள் தாயாதிகளை இவனுக்கு உபநயனம் செய்ய வைத்துவிடுவார்களோ என்று, என்ன சதி பண்ணியிருக்கிறார்கள் பார்த்தாயா?
இன்று காலை வந்து சொல்கிறார்கள் - நாளைக்கு இவன் பூஜை செய்கிற முறையாம்! கோயில் ஏட்டில் எழுதியாகிவிட்டதாம்! நாளைக்கு வந்து பூஜை செய் என்கிறார்கள். கோயில் தருமகர்த்தாக்கள் உபநயனமும் சிவதீட்சையும் ஆகாமல் சிவனுக்குப் பூஜை செய்ய இவனை விடமாட்டார்கள் என்பதாலும், அப்படியே ஒரு வேளை இவ்விஷயம் அறியாது அவனை அனுமதித்தாலும் இவனுக்குப் பூஜை முறைகள் ஒன்றும் தெரியாததைக் கண்டு பூஜை உரிமையைப் பறித்துத் தங்களில் ஒருவருக்குத் தந்துவிடுவார்கள் என்பதாலும் அன்றோ அவர்கள் இவ்வாறு சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்!
சரி, போகாமல் இருந்துவிடலாமா என்றால், கோயில் ஏட்டில் எழுதியபின் போகாமல் இருந்தால், பின் எப்போதும் கோயிலுக்குள் போக முடியாது. ஆலயக் கைங்கரியம் அல்லாது நாங்கள் வேறு என்ன செய்து பிழைப்போம்? இந்த ஊரிலேயே சிவன் கோயில் அர்ச்சகர் குடும்பம் என்று மதிப்புடன் வாழ்ந்த நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மனிதர்க்குக் கைங்கரியம் செய்து வாழ்வதா? என்ன கீழ்நிலைக்கு வந்துவிட்டோம்! இந்த ஊரைவிட்டே போய்விடலாமா என்றால், சொந்த ஊரிலேயே வாழ நாதியற்றவர்கள், எங்குபோய் என்ன செய்வோம்? பக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதோடு, வழித்துணையாகவும் வருபவன் என்றல்லவோ நீ மார்க்கபந்து என்று நாமங்கொண்டிருக்கிறாய்? இப்போது எங்களுக்கு என்ன வழி? இருப்பதா, போவதா சொல்!
என்று அன்று முழுக்கக் குமுறிக் குமுறி அழுதாள் அந்தத் தாய்.
பாவம், அந்தப் பிறவியில் கீழ்நிலைக்கு வந்துவிட்டதாக வருந்திய தாய்க்கு என்ன தெரியும், கீழ்நிலைக்கு இறங்க வேண்டி வந்ததால்தான் ஒரு தெய்வப்பிறவியைத் தன் மகனாகப் பெற்றிருக்கிறாள் என்று!
யார் அந்த தெய்வப்பிறவி? அறிய நாம் திருவிரிஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லவேண்டும். காலத்திலும் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
யார் பெரியவர்?
என்று அயனும் அரியும் பிணங்க, அயன் அடிமுடி காண இயலாத ஜோதி மலையாகத் தோன்றிய கதை நமக்கெல்லாம் தெரியும்தானே? அந்தக் காலத்திற்குச் செல்ல வேண்டும்.
அடிதனை அறியாத ஹரி, அடியேன் அறியேன்
என்றார். அந்த மெய்வாழும் நெஞ்சிலே நடராஜனாகக் குடிகொண்டார் சிவன். அரியும் சிவமும் ஒன்று
என்று அறிந்து கொண்டோம் நாம்.
முடிதேட முடியாத பிரம்மா அதனைக் கண்டுவிட்டதாகப் பொய்யுரைத்தார். நான்மறை சொன்ன நான்கு வாய்கள் நஞ்சாகக் கள்ளமுரைக்க, இனி விதியாம் பிரம்மனுக்குப் பூமியில் வழிபாடில்லை என விதித்தார் அரனார். அவர்தம் தேவ வடிவம் நீங்கவும் அவர் பிராயச்சித்தம் தேடிப் பூமியில் பிறக்கவும் ஆணையிட்டார்.
ஆம், பிரம்மனேதான் திருவிரிஞ்சிபுரத்தில் சிவசர்மனாக அவதரித்தது! அவதார நோக்கம் பிராயச்சித்தம் என்பதால் போலும், பிறந்ததிலிருந்தே சொல்லொண்ணாத் துன்பங்கள்! ஏன், பிரம்மா தோன்றும்போதே முப்புரிநூலுடனும், கரங்களில் நாரணன் தந்த வேத நூலுடனும், ஜபமாலையுடனும் தோன்றினார் என்று விரிக்கும் புராணம். இங்கே அந்தப் பிரம்மாவதாரனுக்கோ, முப்புரிநூல் அணிவிக்க மறுக்கப்பட்டது, வேதம் கற்பிக்கப்படவில்லை. ஜபமும் பூஜையும் புரிய தீக்ஷை அளிக்கப்படவில்லை!
பண்டைய நினைவுகளும் ஞானமும் சிறிதும் இன்றி, அறியாச் சிறுவனாக அன்னை முன்பு நின்றுகொண்டிருந்தான் சிவசர்மன். அவனைப் பார்த்துப் பார்த்து அழுதாள் தாய். நேரம் ஓடியது. ஆலயக் கதவு சார்த்தப்படும் வேளையும் வந்துவிட்டது. அவளுக்குச் சிவன் எந்த நம்பிக்கைக் கதவையும் திறக்கவில்லை.
அநாதநாதன் தங்கள்மீது இத்தனை அலட்சியம் பாராட்டும் காரணம் புரியாதவளாக, அகம் திரும்பினாள் தாய். அழுதழுது கொண்ட அயர்ச்சியில் சற்றுக் கண்ணயர்ந்தாள்.
ஆஹா! என்ன காட்சி! கனவா நனவா? அல்லது இவற்றைக் கடந்த நிலையா? யார் அவளுக்கு அருளவில்லை என்று கையறுநிலையில் கதறினாளோ, அவரன்றோ அவளுக்கு ரிஷிகளும் காணவியலாத திவ்ய ரூபத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்!
அம்மா! வருந்தாதே! நாளை உன் மகனை ஆலயத்துக்கு அழைத்துவா. திருக்குளத்தில் மங்கள ஸ்நானம் செய்துவை
என்று பரமேச்வரர் அவளுக்குக் கட்டளையிட்டு மறைந்தார்.
அக்கட்டளையைச் சிரமேற்கொண்ட தாய் மறுநாள் அதிகாலையில் சிவசர்மனுடன் ஆலயம் சென்று அவனை மங்கள நீராட்டினாள். உன் மகனா அம்மா? ஏழு வயதாகிவிட்டது போலிருக்கிறதே, இன்னும் ஏன் உபநயனம் செய்யாமல் வைத்திருக்கிறாய்?
- குரல் கேட்டது.
ஆஹா! யாரோ இது? சிவச்சின்னங்கள் அணிந்திருக்கிறார். வயோதிகர் போன்று தோற்றமளிக்கிறார்.
உபநயனம்... செய்ய வேண்டும்...
என்று அவள் தடுமாறுவதற்குள்ளேயே அவர் சிவசர்மனைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். குளக்கரையிலேயே சிவசர்மனுக்கு உபநயனம் செய்வித்து சிவதீட்சையுமளித்தார்.
தாயிடம் வந்து வணங்கி நின்ற சிவசர்மனை அவளுக்கே அடையாளம் தெரியவில்லை. அசட்டுப் பிள்ளையாக அல்ல, ஆன்றவிந்தடங்கிய சான்றோனாக, பிரம்ம தேஜஸ் பொலிய நின்றான் அவன்!
ஆனந்தக் கண்ணீருடன், அவனுக்கு உபநயம் செய்வித்த பெரியவரைத் தேடினாள் தாய். அவர் கண்ணுக்குப் படவில்லை, எங்கோ மறைந்துவிட்டார்.
(எங்கோ மறைந்துவிட்டார் என்று சொல்வது சரிதானா? எங்கும் நிறைந்துவிட்டார் என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆயினும், இந்த அற்புத லீலையை நினைவுபடுத்திக் கொண்டு அன்றிலிருந்து இன்றுவரை ‘பிரம்ம தீர்த்தம்’ என்றே புகழ் பெற்றுவிட்ட அந்தத் திருக்குளக்கரையில் மகாலிங்க வடிவாக உறைந்து நிற்கிறார் அந்த மாய வயோதிகர்!)
புதிய சிவசர்மனைப் பார்த்து வியந்து அங்கே ஒரு கூட்டமே கூடிவிட்டது. பலரும் வியக்கும் வண்ணம் அங்கு ஒரு யானையும் தோன்றியது. அசரீரியாகக் கேட்ட ஈசனார் உத்தரவுப்படிச் சிவசர்மனைத் திருமஞ்சனக் குடத்துடன் யானைமீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தது ஊர். கோயிலை அணுகியவுடன் கோயிற்கதவுகள் தானாகத் திறந்தன.
என்ன ஆச்சரியம்! பல்லாண்டுகள் பூசனை செய்து பழகியவன் போல சிவசர்மன் சுவர்ண கணபதியை முதலில் ஆராதித்துப் பின் சிவனாரைப் பூஜிக்கலானான். பல்வேறு திரவியங்களும் நன்னீர் நிரம்பிய திருமஞ்சனக் குடமும் தயாராக இருந்தன. பூர்வாங்க பூஜைகள் முடிந்துவிட்டது. இனி அபிஷேகம் ஆரம்பிக்க வேண்டும்.
அடடா! மார்க்கபந்தீச்வரர் பெரிய திருமேனியாயிற்றே! இறைவனுக்கு அபிஷேகம் செய்ய எத்தனிக்கும் போது உயரமான மார்க்கபந்தீச்வரரின் திருமுடி அவனுக்கு எட்டவில்லை. எந்தையே! எமக்கு எட்டவில்லை நும் முடி
என்று ஏங்கி வேண்டினான் சிவசர்மன்.
பிரம்மாவாக இருந்தபோது அவன் எதைச் சொல்லவில்லையோ, அதை இந்தப் பிள்ளை சொல்லிவிட்டது! அரன் பெரியோனுக்கும் பெரியோன் என்று அறிந்து சொல்லியது. அவனுக்கு முன் தான் ஏதுமில்லை, வெறும் அசட்டுப் பிள்ளைதான் என்று உணர்ந்து சொல்லியது.
சத்தியத்தின் சக்தி எத்தகையது! அவ்வளவில் ஈசன் திருமேனி சாய்ந்து கொடுத்தது. சிறுவனுக்கு எட்டுமாறு தன்னைத்தானே செய்துகொண்டது. சிவசர்மனின் சிவபூஜை எவ்வித விக்னமுமின்றித் தொடர்ந்து இனிதே நிறைவடைந்தது.
வினை அகன்றது. விதாதாவின் சாபமும் நீங்கியது. அவர் தன் சுயவடிவம் பெற்றுப் படைப்புத் தொழிலையும் அடையுமாறு அருள்கூர்ந்தார் மார்க்கபந்தீச்வரர்.
இறைவன் தானே மனம் வைத்தாலொழிய அவனை எட்டுவது எவருக்கும் அரிதான செயலே, உண்மையும் பக்தியும் உள்ளவர்க்கோ இறைவன் தானே கட்டுப்படுவான், தவறு செய்தாரும் மனம் வருந்தி இறைவனை ஆராதித்தால் அவருக்கு மீட்பு உண்டு எனும் மூன்று உண்மைகளை உலகறியப் பண்ணுவதற்காக இத்தகைய லீலைகளை நிகழ்த்தியிருக்கிறார் மார்க்கபந்தீச்வரர்.
தவறு செய்தால் தண்டனை உண்டு
– இது தர்ம நெறி.
தவறை உணர்ந்தால் மீட்சி உண்டு
– இது கருணை மொழி.
நித்யம் சிதாநந்த ரூபம்
நிஹ்னுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்தஸ்வ ராகேந்த்ர சாபம்
க்ருத்திவாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா