Apoorva Ramayanam : Volume 3 - Sriramajayam
5/5
()
About this ebook
மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் ராமநாமம் மூலமாகத்தான் மக்களை ஒருங்கிணைத்தார். இன்று சுதந்திர இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள். அந்தப் பிரச்னைகள் நீங்கி மக்களுக்கு நல்வாழ்க்கை அமையவும், சுதந்திரம் பெற்றுத் தந்த அதே ராமநாமம் உதவும் என்பது என் நம்பிக்கை.
இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் மக்களிடையே ராம பக்தியை உண்டாக்கி, இந்திய தேசத்தில் தனிமனித ஒழுக்கத்தையும் சமுதாய ஒழுக்கத்தையும் வளர்க்கட்டும். அதற்கு ராமபிரான் திருவருள் துணை நிற்கட்டும்.
Read more from Dr. Thiruppur Krishnan
Shirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural Rating: 1 out of 5 stars1/5Sri Annai Rating: 5 out of 5 stars5/5Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Aravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsElakkia Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsNala Charitham Rating: 0 out of 5 stars0 ratingsKannan Kadhaigal Rating: 1 out of 5 stars1/5
Related to Apoorva Ramayanam
Related ebooks
Thinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsSaranagadhi Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Vivekanandar Rating: 5 out of 5 stars5/5Siva Bakthi Uyarvukku Vithitta Naayanmarkal!! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsArupathu Moondru Nayanmargal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsRamayanam Balakandam Oru Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsSirappuyar Seevagasinthamani Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsஅருணகிரிநாதர் Rating: 0 out of 5 stars0 ratingsDeviyar Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsKadhamba Vanam Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குமரனடியார்கள் Rating: 0 out of 5 stars0 ratingsVendiyana Arulum Thiruthalangal Rating: 0 out of 5 stars0 ratingsSabarimalai Yathirai Oru Vazhikatti Rating: 0 out of 5 stars0 ratingsThiruppavai Pasura Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangal Paadum Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Apoorva Ramayanam
1 rating0 reviews
Book preview
Apoorva Ramayanam - Dr. Thiruppur Krishnan
http://www.pustaka.co.in
அபூர்வ ராமாயணம்: தொகுதி – 3
ஸ்ரீராமஜயம்
Apoorva Ramayanam : Volume 3
Sri Ramajayam
Author:
டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்
Dr. Thiruppur Krishnan
For more books
http://www.pustaka.co.in/home/author/dr-thiruppur-krishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. ஸ்ரீராமஜயம்
2. ராமனைப் பார்க்க வந்தாள் பார்வதி!
3. விண்ணில் பறந்த மூக்குத்தி!
4. ராமனின் நான்காவது தாய்!
5. சுலபா கொடுத்த ஞானம்!
6. பார்வதி கொடுத்த வரம்!
7. ஓடிவந்து மாலையிட்டாள்!
8. அந்த இரு ஆண்மக்கள்!
9. சிவன் தந்த விளக்கம்!
10. ஒலித்தது அசரீரி!
11. சீதையும் மந்தரையும்!
12. இந்திரன் கேட்ட வேண்டுகோள்!
13. கைகேயி ராமனிடம் கேட்ட சத்தியம்!
14. ஊர்மிளை கேட்ட வரம்!
15. மாமனாரின் மாப்பிள்ளை!
16. மனம் மாறிய பரதன்!
17. ராமன் விதித்த நிபந்தனை!
18. பறவைகளின் மொழி!
19. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
20. சீற்றம் தந்த சங்கடம்!
21. ஒரு நிழல் நிஜமாகிறது!
22. ஊனமுற்றோரைக் கிண்டல் செய்யலாகாது!
23. மாரீசன் சொன்ன அறிவுரை!
24. வானில் பறந்த தேர்!
25. காகம் சொன்ன தகவல்!
26. சீதை கேட்ட குரல்!
27. இந்திரன் தந்த விளக்கம்!
28. அந்த ஒரு மரதம்!
30. சனிபகவான் செய்த மாறுதல்!
31. வென்றவனை வென்றவன்!
32. அங்கதன் சொன்ன அறிவுரை!
33. சோகம் துளைத்து உடல்!
34. கங்கை எங்கே போனாள்?
35. ராமனுக்கு வரம் கொடுத்த முனிவர்!
36. முதல் மரியாதை!
37. புதிதாய் மூன்று புதல்வர்கள்!
38. மாறியது மனம்!
39. அயோத்தியின் யுவராஜா யார்?
40. வாழ்வெல்லாம் இனிமை!
41. ஊர்மிளை என்றோர் உத்தமி!
42. அவள் ஒரு தெய்வம்
43. விமானத்தின் வேண்டுகோள்!
44. தம்பிக்கும் ராஜாராமன் தான்!
45. எங்கிருந்தோ வந்தான்!
46. பூமிக்குள் சென்ற புனிதவதி!
47. லட்சுமணன் பெற்ற தண்டனை!
48. ஒரு ராமாயணம் பிறந்த கதை!
முன்னுரை
ராமாயணம் என்ற அற்புதமான இதிகாசத்தில்தான் எத்தனை பார்வைகள்! எத்தனை கோணங்கள்! ஒவ்வொரு கோணத்திலும் எத்தனை அறநெறிச் சிந்தனைகள்! அறத்தை நேரடியாக போதிக்கும் திருக்குறளும், அறத்தைக் கதை வழியே போதிக்கும் ராமாயணமும் பிறந்த திருநாட்டில் நாமும் பிறக்கக் கிடைத்தது எத்தனை பெரிய பேறு!
ஸ்ரீஅரவிந்த அன்னை சொன்னார்,‘பிரான்ஸ் தேசம் பிறப்பால் எனது தாய்நாடு. இந்தியாவை என் தாய்நாடாக நான் தேர்வுசெய்து கொண்டிருக்கிறேன்!’என்று. (‘France is my country by birth. India is my country by choice.’).
ஸ்ரீஅரவிந்த அன்னை போல் இந்த பாரத தேசத்தின் பெருமையுணர்ந்து அதைத் தாய்நாடாகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லாமல், இயல்பிலேயே நம் தாய்நாடாக பாரதம் வாய்த்திருப்பது நமக்குக் கிடைத்த பெரும் பேறு. ஆனால் இயல்பிலேயே அவ்வித அதிர்ஷ்டம் வாய்த்துவிட்டதால் இந்த இந்திய தேசத்தின் பெருமையை நாம் சரிவர உணரவில்லையோ என்று தோன்றுகிறது.
நான் இந்த ராமாயணக் கதைகளை எழுதுவதற்குப் பெரிதும் ஊக்கமளித்தவர்கள் சம்ஸ்க்ருத அறிஞர்களாக விளங்கிய என் தந்தை திரு பி.எஸ். சுப்பிரமணியன் அவர்களும் என் தாய் திருமதி கே. ஜானகி அவர்களும்.
என் தந்தை 96 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தார். அவரை இறுதிவரை பராமரித்து விண்ணுலகிற்கு வழியனுப்பி வைத்த என் தாய், என் தந்தை காலமான பின்னர் ஆறாண்டுகள் உயிர்வாழ்ந்து தன் 90 வயதில் ஒரு கணத்தில் மரணத்தைத் தழுவினார். அநாயாச மரணம் என்ற கிடைத்தற்கரிய அரிய வரத்தை அவருக்கு வழங்கி அருள்புரிந்தான் இறைவன்.
என் எழுத்துக்களுக்கு உந்து சக்தியாகவும் என் எழுத்துகளை நெறிப்படுத்தி வழிகாட்டுபவராகவும் என் வாசகியாகவும் என் விமர்சகராகவும் இருந்த என் அன்னையின் மறைவு என்னைத் துயரில் ஆழ்த்தியது. இப்போது நான் எழுதும் படைப்புகளைப் படிக்க அவர் இல்லையே என்ற ஏக்கம் என்னில் படர்கிறது.
என்றாலும் அவரின் ஆன்மா என்னையும் என் எழுத்தையும் வழிநடத்திச் செல்வதாகவே நான் உணர்கிறேன். அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் என் எழுத்துப் பணி தொடர்கிறது.
ராமாயணத்தை விமர்சனபூர்வமாகக் கையாண்டு நிறைய எழுத்தாளர்கள் கதை எழுதியிருக்கிறார்கள். ‘வீடணன் வெற்றி’என்ற அற்புதமான ராமாயணக் கதையை எழுதிய ஆர். சூடாமணியை எப்படி மறக்க முடியும்? ராமாயணம் எத்தனையோ பேரை ஈர்த்திருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் அம்பை உள்ளிட்ட இன்னும் பலரும் ராமாயணக் கதைமேல் தங்கள் விமர்சனங்களை வைத்துப் புதிய நோக்கில் பல படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள்.
என் படைப்புகள் ராமாயணக் கதைகளை விமர்சனம் செய்யும் நோக்கில் அமைந்தவை அல்ல. இதுவரை பலப்பல மொழிகளிலும் பல வகைப்பட்ட ராமாயணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தியாகராஜர், ராமதாசர் போன்ற பல பக்தர்கள் புதிய ராமாயணக் கதைக் குறிப்புகளைத் தங்கள் கீர்த்தனைகளில் வழங்கியிருக்கிறார்கள். குருதேவர் பரமஹம்சர் வேறெங்கும் நமக்குக் கிடைக்காத ராமாயணக் கதைகளைச் சொல்ல, அவை ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் என்ற நூலில் பதிவாகியுள்ளன. இப்படிப் பல இடங்களில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களையெல்லாம் தமிழில் கதைகளாக வழங்கவேண்டும் என்பதே என் முயற்சி.
கரு ஏற்கெனவே உள்ளதுதான். உரு மட்டுமே நான் கொடுத்திருப்பது. கிடைக்கும் சின்னச் சின்ன ராமாயணக் கதைக் கருக்களை சிறுகதை உருவில் வாசகர்களுக்கு வழங்க முடிவதில் ஒரு தனித்த ஆனந்தமும் நிறைவும் ஏற்படுகின்றன.
இந்தக் கதைக் குறிப்புகளைப் பல புத்தகங்களிலிருந்தும் இணைய தளங்களிலிருந்தும் நான் பெறுகிறேன். என் நண்பர்களும் உறவினர்களும் பற்பல குறிப்புகளைத் தொலைபேசி வழியாகவும் கடிதங்கள் மூலமாகவும் தந்து உதவுகிறார்கள். ராமாயணத்தின் பல்வேறு பரிமாணங்களும் பதிவாக வேண்டும் என்பதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை அவர்கள் உற்சாகத்திலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தெலுங்கு மொழியையும் இந்தி மொழியையும் நன்கு அறிந்த என் மனைவி திருமதி ஜானகி, அந்த மொழிகள் சார்ந்த ராமாயணக் கதைகளைப் பல தெலுங்கு நூல்களிலிருந்தும் இந்தி நூல்களிலிருந்தும் தொலைக்காட்சியில் இடம்பெறும் தெலுங்கு, இந்திச் சொற்பொழிவுகளிலிருந்தும் எனக்குத் திரட்டித் தருகிறார்.
ராமாயணத்தில் அணில் செய்த பணிபோல், ராமாயணத்திற்கு என்னால் செய்யப்படும் ஓர் அணில் பணிதான் இது. ராமபிரானது திருவருள் காரணமாகவும் நானே எதிர்பாராத அளவு வாசகர்கள் அளிக்கும் மகத்தான ஆதரவு காரணமாகவும் இப்பணி தொடர்கிறது.
என் ராமாயணக் கதைத் தொகுதிகள் ஒவ்வொன்றின் அட்டையையும் தான் வரையும் அழகிய சித்திரத்தால் பொலிவு பெறச் செய்பவர் என் அபிமான ஓவியரான மணியம் செல்வன். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அபூர்வ ராமாயண வரிசையில் இந்த நூல் மூன்றாம் தொகுதி. அடுத்தடுத்து இன்னும் பல தொகுதிகள் வெளிவரவுள்ளன. முதல் இரு தொகுதிகளுக்கும் உற்சாகமான வரவேற்பளித்த வாசகர்கள் இத்தொகுதியையும் வரவேற்று ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்.
மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் ராமநாமம் மூலமாகத்தான் மக்களை ஒருங்கிணைத்தார். இன்று சுதந்திர இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள். அந்தப் பிரச்னைகள் நீங்கி மக்களுக்கு நல்வாழ்க்கை அமையவும், சுதந்திரம் பெற்றுத் தந்த அதே ராமநாமம் உதவும் என்பது என் நம்பிக்கை.
இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் மக்களிடையே ராம பக்தியை உண்டாக்கி, இந்திய தேசத்தில் தனிமனித ஒழுக்கத்தையும் சமுதாய ஒழுக்கத்தையும் வளர்க்கட்டும். அதற்கு ராமபிரான் திருவருள் துணை நிற்கட்டும்.
அன்புடன்,
திருப்பூர் கிருஷ்ணன்,
***
1. ஸ்ரீராமஜயம்
கைலாயம் அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. முருகனுக்கும் விநாயகனுக்கும் ஏதோ போட்டி நடத்தப்படப் போகிறது என்ற தகவல் எல்லா சிவகணங்களுக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சிவகணத்தைச் சார்ந்த அனைவரும் போட்டியை வேடிக்கை பார்க்க ஆவலோடு காத்திருந்தார்கள். சிவபெருமானின் நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டும் நந்தியும் அன்று என்ன நடக்கப் போகிறது என்றறிய ஆவலாய்க் காத்திருந்தார்.
எதற்குத் தாய் தந்தை இருவரும் தங்களை அழைத்தார்கள் என்று தெரியாமல் விநாயகனும் முருகனும் அவர்கள் முன் வந்து நின்றார்கள். பணிவோடு தங்கள் பெற்றோரை நமஸ்கரித்து, தங்களை அழைத்த காரணமென்ன என்று வினயமாய்க் கேட்டார்கள்.
பார்வதி தன் குழந்தைகள் இருவரையும் மிகுந்த பாசத்தோடு பார்த்தாள். அவர்கள் இருவரையுமே தன் அருகே அழைத்து வாஞ்சையோடு அவர்களின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தாள்.
பின் தன் கணவரான சிவபெருமானைப் பார்த்த பார்வதி,நாதா! நீங்களே விவரத்தைச் சொல்லுங்கள். அதுதான் முறையாக இருக்கும். எனக்கு நீங்கள் ஏற்கெனவே விளக்கி விட்டீர்கள். இப்போது நம் குழந்தைகளுக்கும் விளக்குங்கள்! நான் அடையும் பயனை நம் குழந்தைகளும் அடையவேண்டும் அல்லவா? அப்போதுதானே அவர்கள் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ள முடியும்?
என்றாள்.
அப்படியே ஆகட்டும்!
என்று தலையசைத்து ஒப்புக்கொண்ட பரமசிவன்,குழந்தைகளே! நான் தெரிவிக்க விரும்பும் விஷயத்தை வெறுமே விளக்கப் போவதில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைத்து அதன்மூலம் விளக்கப் போகிறேன்!
என்றார்.
முருகப் பெருமான் கலகலவென்று சிரித்துவிட்டுக் கேட்டான்:
தந்தையே! மறுபடியும் போட்டியா? நாரதர் கொண்டுவந்த மாம்பழத்திற்காக ஒருமுறை போட்டி நடத்தி, அதில் நான் தோற்றது போதாதா? நான் மயிலில் ஏறி உலகமெல்லாம் சுற்றி வந்தேன். என் அண்ணா விநாயகரோ உங்கள் இருவரையும் சுற்றி வந்து நீங்களே உலகம் என்று சொல்லி அந்த மாங்கனியைப் பெற்றுக்கொண்டு விட்டார். மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று நான் உங்களிடம் கோபித்துக் கொண்டு பழனி மலையில் போய் உட்கார்ந்தேனே? என் அண்ணனிடம் தோற்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக சந்தோஷம்தான். ஆனால் இந்த முறை தோற்றால் எனக்கு ஒரு சிக்கல் உண்டு.
முருகப் பெருமானின் குறும்புப் பேச்சை ரசித்துக் கேட்ட விநாயகன்அது என்ன சிக்கல்?
என்று கேட்டான்.
அதுசரி. இந்தப் போட்டியில் உன்னிடம் நான் தோற்றால் இனி நான் எந்த மலையில் உட்கார்வது? எல்லா மலைகளிலும் ஏற்கெனவே நான் கோயில் கொண்டு விட்டேனே? இனி என்ன செய்வது?
அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு முருகன் பேசிய பேச்சைக் கேட்டு விநாயகனோடு சிவனும் பார்வதியும் சேர்ந்து கலகலவெனச் சிரித்தார்கள். முருகனைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்ட பார்வதி தேவி புன்னகையுடன் சொன்னாள்:
சேயோன் மேய மைவரை உலகமும் என்று பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியமே குறிப்பிட்டுவிட்டதே முருகா? தமிழ்க் கடவுளான உனக்கு இது தெரிந்ததுதானே? இப்போது நீ எந்த மலைக்கும் போக வேண்டாம். உன் அடியவர்கள் மலைக்கும் அளவு அவர்களுக்கு நீ செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை வழக்கம்போல் வாரி வாரி வழங்கிக் கொண்டிரு. இப்போது நிகழும் போட்டியில் உன் அண்ணன் விநாயகன் மட்டுமே கலந்து கொள்ளட்டும். நீ அதை வேடிக்கை பார்த்தால் போதும். என்ன நான் சொல்வது சரிதானே?
என்று பரமசிவனைப் பார்த்தாள் பார்வதி.
ஒருவர் மட்டுமே கலந்துகொண்டால் அது எப்படிப் போட்டியாகும் தேவி? போட்டி என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேராவது வேண்டாமா?
என்று நகைத்தார் பரமசிவன். பிறகு சற்று யோசித்த பரமசிவன் பின் பேசலானார்:
நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு முதலில் விநாயகன் விடை எழுதட்டும். பின்னர் அது சரியல்ல என்று கந்தனுக்குத் தோன்றினால் பிறகு அவன் விடை எழுதட்டும். எது சரியான விடை என்பதை நான் சொல்கிறேன். போட்டியில் வெல்பவரை என் சிவ கணங்களின் தலைவனாக்கப் போகிறேன். இப்போது எனக்குப் பணியாற்றும் பூத கணங்கள் எல்லாம் இனி இந்தப் போட்டியில் வெல்பவரின் தலைமையின் கீழ் வந்துவிடும். சிவ கணங்கள் இனி என் சொல்படி நடக்கத் தேவையில்லை. போட்டியில் வெல்பவர் சொல்படி நடந்தால் போதும்.
சிவபெருமானின் பேச்சைக் கேட்ட விநாயகனும் முருகனும் வெகு பிரியமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
சொல்லுங்கள் தந்தையே! போட்டி என்ன?
என்று ஆவலோடு கேட்டான் விநாயகன். சிவபெருமான் போட்டியை விளக்கத் தொடங்கினார்:
எந்த மந்திரம் உலகில் எல்லா மந்திரத்தையும் விட உயர்ந்ததோ, எந்த மந்திரத்தை ஜபித்தால் எல்லா மந்திரங்களையும் ஜபித்த பலன் கிட்டுமோ, எந்த மந்திர ஜபத்தின்போது வேறு நியம நிஷ்டைகள் எதுவும் தேவைப்படாதோ, குளிக்காமல் கூட எந்த மந்திரத்தை ஜபிக்கலாமோ, எந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை மட்டுமே போதுமானதோ அந்த மந்திரம் எது? எல்லா மந்திரத்தையும் வாய்விட்டுச் சொல்வதில் ஆர்வம் காட்டும் மக்கள் இந்தப் புனித மந்திரத்தை மட்டும், எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே அந்த மந்திரம் எது என்பதை வாயால் சொல்லாமல் இங்கே தரையில் எழுதிக் காட்டு! நீ சரியான மந்திரத்தைத்தான் எழுதுகிறாயா என்பதுதான் இன்றைய போட்டி!
என விநாயகனிடம் தெரிவித்தார் சிவபெருமான்.
முருகப் பெருமான் கலகலவென நகைத்தான்.
இதற்கான விடை எனக்குத் தெரியும் தந்தையே! ஆனால் அண்ணாவே விடையை எழுதட்டும், போட்டியில் வெல்பவரைப் பூத கணங்களின் தலைவராக்கப் போவதாகத் தாங்கள் சொன்னீர்கள். மூத்தவர் இருக்க இளையவன் தலைவனாவது சரியல்ல! எனவே அண்ணாவே போட்டியில் வெல்வதுதான் சரி! என்ற முருகன், ஏற்கெனவே வியாசர் சொல்லச் சொல்ல தந்தத்தை ஒடித்து மகாபாரதம் எழுதிய அனுபவம் உண்டே அண்ணா உனக்கு? இப்போது இந்த மந்திரத்தைத் தரையில் எழுதிக்காட்டுவது உன்னைப் பொறுத்தவரை பெரிய செயல் அல்லவே! எழுது!
என வேண்டினான்.
விநாயகன் நகைத்தவாறே தரையில் விரலால் அந்தப் புனித மந்திரத்தை பக்தியோடு எழுதத் தொடங்கினான். ஸ்ரீராம ஜயம் என ஓவியம் தீட்டுவதுபோல் அழகிய கையெழுத்தில் பிள்ளையார் எழுதிய எழுத்துகளைப் பார்த்து முருகப் பெருமான் கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
பரமசிவனும் பார்வதி தேவியும் அண்ணன் தம்பி இருவரின் ஒற்றுமையைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். சிவன் ஸ்ரீராமஜயம் விநாயகரால் தரையில் எழுதப்பட்ட அந்த மந்திரத்தைக் கைகளால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார். பின் குழந்தைகள் இருவரையும் அன்பு ததும்பப் பார்த்த அவர் பேசலானார்:
குழந்தைகளே! திருமாலுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு. ஆனால் இந்த‘ராம’என்ற ஒரு நாமம் மற்ற அத்தனை நாமங்களையும் சொன்னதற்குச் சமமான பலனைத் தரும் வலிமை பெற்றது. இதன் மகத்துவம் பற்றி ஏற்கெனவே நான் உங்களின் அன்னை பார்வதி தேவிக்குச் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து இந்த மந்திரத்தை ஜபித்து உங்கள் அன்னை தனக்குத் தேவையான எல்லா நற்பலன்களையும் பெற்று வருகிறாள். நீங்கள் இருவரும் கூட இந்த மந்திரத்தை ஜபித்துப் பலன்பெற வேண்டும் என்று உங்கள் தாய் விரும்பினாள். அதனால்தான் ஒரு போட்டிபோல் வைத்து இந்த மந்திரத்தின் பெருமையை உங்களுக்குத் தெரிவித்தேன். நல்லது. ஓயாமல் இந்த மந்திரத்தை ஜபித்து உங்களின் தெய்வீக ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இந்த மந்திர ஜபம், உங்களின் தெய்வீக ஆற்றலை மேலும் மேலும் மிகுதிப் படுத்தும். இந்த மந்திரத்தை ஒருமுறை எழுதியதற்கே விநாயகனுக்குப் பெரிய பலன் இப்போது கிட்டப் போகிறது. இனி விநாயகன்தான் கைலாய மலையில் உள்ள பூத கணங்கள் அனைத்திற்கும் தலைவனாவான். கணங்களின் தலைவன் என்ற பொருள் வரும் வகையில் அவன் இனி கணபதி என்ற பெயர் பெறுவான்!
சிவபெருமான் இப்படிச் சொன்னதும் பார்வதி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.கணபதி வாழ்க! கணபதி வாழ்க!
என்று முருகப் பெருமான் உரத்துக் குரல் கொடுத்தான். அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த அத்தனை சிவ கணங்களும் அந்த முழக்கத்தை ஆரவாரத்தோடு எதிரொலித்தன.
கணபதி முருகப் பெருமானைப் பார்த்து,நான் எதிரிகளின் படைக்கு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதல்லவா பழமொழி!
என்று சொன்னதைக் கேட்டு அத்தனை சிவகணங்களும் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள்முருகப் பெருமான் வாழ்க! முருகப் பெருமான் வாழ்க!
எனக் குரல் கொடுத்தனர். அன்று அந்தக் கைலாயமே திருவிழாக்கோலம் பூண்டது.
ராம ராம என்றவாறே சிவனும் பார்வதியும், தங்களை வணங்கிய கணபதியையும் முருகனையும் அத்தனை சிவகணங்களையும் உளமார ஆசீர்வதித்தார்கள். எல்லா மந்திரங்களிலும் உயர்ந்த மந்திரம் எது என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சொரிந்த பூமாரியால் அன்று அந்தக் கைலாய மலை புஷ்ப மலையாகத் தோற்றம் கொண்டது.
***
2. ராமனைப் பார்க்க வந்தாள் பார்வதி!
உள்ளமெல்லாம் மகிழ்ச்சிப் பூரிப்பு மேலோங்க, தொட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகாராணி கௌசல்யை. மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில் ஸ்ரீராமன் உறங்கிக் கொண்டிருந்தான். நான்கு வயது பால ராமன். அதிகாலை வேளையில் அவன் கண்விழிப்பதற்காகக் காத்திருந்தாள் அவள்.
கௌசல்யா சுப்ரஜா ராம என்று பின்னாளில் அவளின் புத்திரன் என்று சொல்லித்தான் அவனை எழுப்ப சுப்ரபாதம் பாடப்போகிறார்கள். இப்போது அவளே அல்லவா தன் மகனை உறக்கத்திலிருந்து எழுப்பவிருக்கிறாள்! எங்கும் நிறை பரப்ரும்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை என்று வியந்தது கண்ணனின் தாயான யசோதைக்கு மட்டுமா பொருந்தும்? ராமனின் தாயான கௌசல்யைக்கும் அது பொருந்துவது தானே?
உதய சூரியன் மெல்ல எழுந்துகொண்டிருந்தான். ஆனால் தன் அரண்மனைத் தொட்டிலிலேயே ஓர் உதய சூரியன் உறங்குவதாகத் தோன்றியது அவளுக்கு. உடலெங்கும் மரகத ரேகைகள் உள்ளே ஓடினாற்போல் ஒரு நீல வண்ண மினுமினுப்பு. ஒரு துண்டு ஆகாயமோ ஒரு துண்டுக் கடலோ தொட்டிலில் ஆரவாரமில்லாமல் படுத்திருப்பதுபோலவும் தோன்றியது. நீலத் தாமரை இதழ் போன்ற நீண்ட நயனங்கள். ரோஸ் நிற உதடுகள். குலுகுலுவென்று கருமேகம் போல் அடர்ந்திருந்த தலைமுடி. பட்டுப் பட்டாய்த் தளிர்போல் கைகளும் கால்களும். சின்னஞ்சிறு பிறை நிலவாய் நகங்கள். பிள்ளையார் எறும்பு வரிசைபோல் புருவங்கள்.
ராம ராம
என்று தேனினுமினிய தன் குரலால் மெல்ல அழைத்தாள் கோசலை. என்ன இனிமை அந்த நாமம்! ஒருவேளை பாயசம் சாப்பிட்டுப் பிறந்த குழந்தை என்பதால் அந்தக் குழந்தையின் பெயர் கூடத் தித்திக்கிறதா! வசிஷ்டர் பரமேஸ்வரனின் நாமத்தில் இரண்டாம் எழுத்தான‘ர’என்பதையும் உமாமகேஸ்வரியின் நாமத்தில் இரண்டாம் எழுத்தான‘மா’ என்பதையும் இணைத்து‘ரமா’என்ற சொல்லை உருவாக்கினார். பிறகு ஆண்குழந்தைக்கு ஏற்ற வகையில் அதை‘ராம’என்று மாற்றிப் பெயர் சூட்டினார். வெறும் நாமமா அது! மந்திரமல்லவா? திருமாலின் ஆயிரம் நாமங்களில்‘ராம’என்ற அந்த ஒரே நாமம் மற்ற 999 நாமங்களின் கூட்டான மகிமைக்கு, தான் மட்டுமே சமமானது என்றல்லவா பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்தார்!
அப்போது பார்வதி தன் எதிரேயே ஒரு குறத்தி வடிவில் நின்றுகொண்டிருப்பதை அறியாதவளாய்த் தன் மகனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கோசலை. கௌசல்யா தேவியின் தாய்ப்பாசம் நிறைந்த பார்வையைப் பார்த்து உலகத் தாயான பார்வதியின் மனமும் பூரித்தது. உலகம் தொடர்ந்து இயங்குவதற்காக அல்லவா எல்லா உயிரினங்களுக்கும் இந்தத் தாய்ப்பாசம் இயற்கையாகவே ஊட்டப்பட்டிருக்கிறது!
குறத்தியாக நின்ற பார்வதியும் குழந்தை ராமனையே தான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். திருமாலின் அவதாரம் அல்லவோ அவன்! திருமால் பார்வதிக்கு அண்ணன் அல்லவோ! தன் அண்ணனையே சின்னஞ்சிறு குழந்தையாகப் பார்க்க முடிந்த வியப்பில் பார்வதியின் மனம் குதூகலம் கொண்டது.
***
கைலாயத்திலிருந்து புறப்படும்போது தன் கணவர் பரமசிவனிடம் சொல்லிக்கொண்டு தான் புறப்பட்டாள் அவள். தாட்சாயணியாக அவரிடம் சரிவரச் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டதன் விளைவை ஒருமுறை அனுபவித்ததே போதாதா? இப்பொதெல்லாம் பரமசிவன் முழுமனதுடன் அனுமதி அளித்தால் அன்றிப் பார்வதி எங்கும் வெளியே புறப்படுவதில்லை.
அயோத்தியில் என் அண்ணன் மகாவிஷ்ணு குழந்தையாகப் பிறந்திருக்கிறானே, அவனைப் பார்த்துவிட்டு வருகிறேன் ப்ரபோ!
பராசக்தி தன்னிடம் அனுமதி கேட்டபோது பரமசிவன் மலர்ச்சியாக நகைத்தார்.
சென்று வா. ஆனால் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப வந்துவிடு. தேவர்களில் பலர் அயோத்தி சென்று குழந்தை ராமனின் அழகில் ஈடுபட்டுத் திரும்பிவர மனமின்றி அங்கேயே தங்கிவிட்டார்கள்.
பார்வதி கலகலவென நகைத்தாள்.
என்னிலும் மூத்தவனைக் குழந்தையாகக் காணும் ஆவலில் செல்கிறேன். அம்மட்டே. உடன் திரும்பிவிடுவேன்!
அப்புறம் தேவி. இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள். ராமனுக்குத் தான் அவதாரம் என்பதே தெரியாது. மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழவேண்டும் என்பதால் தான் கடவுள் என்ற நினைப்பை மறந்து வாழ்வதாக அவன் சித்தம் செய்துகொண்டு பிறந்துள்ளான். எனவே அவன் அவதாரம் என்பதையோ அவனது வாழ்வின் எதிர்காலச் சம்பவங்களையோ நீ அயோத்தியில் யாருக்கும் தெரிவித்துவிடலாகாது.
தங்கள் சித்தம் பிரபோ!
எந்த வடிவில் செல்லப் போகிறாய் தேவி?
மலைகளிலும் கானகங்களிலும் வாழும் குறத்தி வடிவில் செல்லவே எண்ணியுள்ளேன்!
நல்லது. செனறுவா. ராமனின் அழகைக் கண்ணாரக் கண்டுவா. ராமக் குழந்தையின் அழகைப் பற்றி வந்தபிறகு எனக்கும் சொல். நாள்தோறும் நான் சொல்லச் சொல்ல நீ ராமாயணக் கதையைக் கேட்டு அனுபவித்து வருகிறாயே? அந்தக் கதை தான் எதிர்காலத்தில் நடக்கப் போகிறது என்பதை மட்டும் அங்கே யாருக்கும் தெரிவித்துவிடாதே!
பரமசிவன் மீண்டும் எச்சரித்து அனுப்பினார். பார்வதி தலையசைத்தாள். ஒரு கணத்தில் குறத்தியாக உருமாறி விடைபெற்றாள். அப்போது பார்வதி வளர்க்கும் பஞ்சவர்ணக் கிளியும் சடாரென அவள் தோளில் தொற்றிக்கொண்டது. அந்தக் கிளியின் மூலம் ஒரு பிரச்னை உருவாகப் போகிறது என்பதைப் பார்வதி அப்போது அறியவில்லை.
***
தொட்டிலில் உறங்கும் கட்டித் தங்கத்தை எழுப்ப வேண்டுமே?ராமா ராமா
என மறுபடி மறுபடி மெல்ல அழைத்தாள் கோசலை. அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ராமக் குழந்தையின் விழி மலரவில்லை. அப்போதுராமா ராமா ராமா
என இன்னொரு பெண்குரல் அவனை அழைப்பது கேட்டது.
என்ன குரல் அது! குயிலையும் வீணையையும் பழிக்கும் குரல். சரஸ்வதி தேவி ஒருமுறை வீணை வாசிக்கும்போது பார்வதி வந்துகேட்டாளாம். பலே சபாஷ் என்று வாய்திறந்து பாராட்டினாளாம். அந்தப் பாராட்டுக்