Buddha Punitha Kaaviyam
()
About this ebook
கௌதம புத்தரைப் பற்றி நாம் எல்லோரும் ஒற்றை வரியில் சொல்லத்தக்க விதமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது - ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ இதனை வலியுறுத்தியவர் புத்தர். இதுதான் பலருக்கும் தெரியும்.
ஆனால் இந்த உண்மையைக் கண்டறிய அவர் அடைந்த கஷ்டங்களும், இன்னல்களும், துயரங்களும்... அப்பப்பா! சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. தன்னை வருத்தி மறுபிறப்பை வென்று ‘நிர்வாண மோட்ச’த்தை அடைந்த மகான் அவர்.
Read more from Kundril Kumar
Illuminati Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsAachi Manorama Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratingsMaaveeran Alexander Rating: 1 out of 5 stars1/5Maranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsChennapatina Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsAthira Vaikkum Marmangal Rating: 0 out of 5 stars0 ratingsUlavuthurai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Madhangal Rating: 0 out of 5 stars0 ratingsValamana Vazhvirku Sufi Thathuvam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Buddha Punitha Kaaviyam
Related ebooks
Kaaladiyil Pootha Kamala Malar Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsValamana Vazhvirku Sufi Thathuvam Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Madhangal Rating: 0 out of 5 stars0 ratingsSaathaga Alangarathil Chiththar Karuthukkal Rating: 5 out of 5 stars5/5Amaithiyana Vazhkaiku Aanmeega Vazhikatti Rating: 5 out of 5 stars5/5Madha Sirasetham Rating: 0 out of 5 stars0 ratingsBooker T. Washington Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Siddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Hindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kaattum Vazhkai Neri Rating: 0 out of 5 stars0 ratings120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun! Rating: 0 out of 5 stars0 ratingsPanmuga Nokkinil Vaniyal Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsHindu Matha Thathuvangalum Vilakkangalum Rating: 0 out of 5 stars0 ratingsShiradiyum, patratrupathan ragasiyangalum Rating: 0 out of 5 stars0 ratingsConfucius, Burma Patriya Ariya Thagavalgal! Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Neri Koorum Subhashithangal! Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsThathuvagnani Vedhathri Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsGeethodhayam Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Sai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Buddha Punitha Kaaviyam
0 ratings0 reviews
Book preview
Buddha Punitha Kaaviyam - Kundril Kumar
https://www.pustaka.co.in
புத்த புனித காவியம்
Buddha Punitha Kaaviyam
Author:
குன்றில் குமார்
Kundril Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/kundril-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
1. புத்தம்
2. சித்தார்த்தர்
3. கல்வியும் வீரமும்
4. திருமணம்
5. நான்கு காட்சிகள்
6. வெளியேறல்
7. துறவு
8. விம்பசாரன்
9. ஆலார காலாமர்
10. லட்சியத்தைத் தேடி..
11. பரிபூர்ண ஞானம்
12. முதல் உபதேசம்
13. யசாஸ்
14. சாரி புத்தா
15. கபிலவஸ்துவில் பகவான்
16. சோதனைகளும் சாதனைகளும்
17. தேவதத்தனின் சூழ்ச்சி
18. பரி நிர்வாணம்
19. இன்னும் சில..
என்னுரை
ப்ரியமானவர்களுக்கு,
கௌதம புத்தரைப் பற்றி நாம் எல்லோரும் ஒற்றை வரியில் சொல்லத்தக்க விதமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதாவது -
‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’
இதனை வலியுறுத்தியவர் புத்தர்.
இதுதான் பலருக்கும் தெரியும்.
ஆனால் இந்த உண்மையைக் கண்டறிய அவர் அடைந்த கஷ்டங்களும், இன்னல்களும், துயரங்களும்...அப்பப்பா! சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது.
தன்னை வருத்தி மறுபிறப்பை வென்று ‘நிர்வாண மோட்ச’த்தை அடைந்த மகான் அவர்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது மகா வரலாற்றை காவியமாக வடிக்கும் வாய்ப்பினை நல்கிய பதிப்பக உரிமையாளர் திரு.கோமதி நாயகம் அவர்களுக்கு உளப்பூர்வ நன்றிகள்.
ப்ரியங்களுடன்,
குன்றில்குமார்
1. புத்தம்
பௌத்த மதம் என்பது உலகளவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் நான்கு முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது
ஏனைய மதங்களைப் போலவே இதிலும் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் பௌத்த மதம் என்னும் புத்த மதத்தினருக்கு ஒரே இறைவனாகக் காட்சி தருபவர் புத்த பிரான்.
இந்தியாவில் பிறந்து, போதி மரத்தடியில் ஞானம் பெற்ற இந்த மகானை கிழக்காசியாவில் பெரும் பாலான தேசத்து மக்கள் வணங்கி வருவது மகிழ்ச்சியின் உச்சமே.
அனைத்து மதங்களைப் போலவேதான் புத்தர் பிரானும் அன்பு, அமைதி போன்றவற்றைப் போதித்தார். அவரைப் பின்பற்றுவோரும், இதர மதத்தைப் பின்பற்றுவோரைப் போன்றே அடிப்படைக் கொள்கைகளை மறந்துவிட்டு, வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு மன அமைதியை இழந்து தவித்து வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.
கி.மு. 563 480ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தவர் சித்தார்த்த கௌதம புத்தர். அரச குலத்தைச் சேர்ந்த இவர், முதுமை, கொடிய நோய், மரணம் போன்றவற்றை நேரில் பார்த்தபோது மனம் வேதனைப் பட்டார். இந்த வேதனைகளையும், துயரங்களையும் மறக்க வேண்டும் என்பதற்காக, மனைவி, குழந்தை, அரசவாழ்க்கை என அனைத்தையும் துறந்தார். காவி வேஷ்டியை இடையில் அணிந்து கொண்டு துறவறத்தைக் கடைப்பிடித்தார்.
இந்து மதத்தின் முக்கியக் கொள்கைகளான கர்மம், பிறப்பு, மரணம், மறுபிறவி போன்றவற்றை ஏற்றுக் கொண்ட புத்தர், உண்மை, ஒழுக்கம், மனஉறுதி, வழிபாடு ஆகியவை பிறவித் துன்பம் நீங்க வழிவகுக்கும் என்று போதித்தார். நிர்வாணம் என்னும் முக்திநிலையை அடையும் வரை மறுபிறவி என்னும் துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.
எனினும் வேதம், உபநிடதம், உயிர்க்கொலை போன்ற இந்து மதத் தத்துவங்களை அவர் எதிர்த்தார்.
‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்று அழுத்தமாகக் கூறிய புத்தர், அதனை அகற்ற வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
முதன்முதலாக அகிம்சையை உலகிற்குப் போதித்தவர் புத்தர் பெருமான் என்பதைத் தைரியமாகக் கூறலாம். இந்தக் கொள்கையைப் பின்னர் கெட்டியாகப் பற்றி உலகம் முழுமைக்கும் பரவலாகக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் மகாத்மா காந்தி.
புத்தரின் கோட்பாடுகள் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த, இப்போதும் கிடக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதாக இருந்தது. அத்துடன் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைக் களைவதாகவும் அமைந்திருந்த காரணத்தால் புத்தரின் சிந்தனைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதே உண்மை.
அவரது காலத்திற்குப் பிறகு சுமார் நூறு ஆண்டுகள் கழிந்த பிறகே புத்தரின் போதனைகளைப் பற்றி விவாதிப்பதற் காக வைசாலி என்னும் இடத்தில் அவரது சீடர் கூடினர்.
காஷ்யபா என்ற சீடரின் தலைமையின் கீழ் கூடிய இந்த விவாதத்தில் சுமார் ஐநூறு சீடர்கள் இருந்தனர். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகே புத்த மதக் கொள்கைகளும், அதன் நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டன.
எனினும் அந்தப் பேரவையில் கூடிய புத்த பிக்குகள் மெய்த்தன்மையையும், உள்ளீட்டையும் மாற்றியமைத்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு இன்றும் நிலவுகிறது.
வாழ்ந்த காலத்தில் தனது கருத்துக்களையோ, அனுபவங் களையோ, எண்ணங்களையோ நூலாக புத்தர் எழுதி வைக்கவில்லை. தனது போதனைகளைத் தொகுத்து வைக்குமாறு சீடர்கள் யாரையும் அவர் ஊக்குவிக்கவும் இல்லை.
எனவே புத்தர் வழங்கிய போதனைகள் அதற்குரிய செரிவான கருத்துக்களுடன் அவரது சீடர்களால் உணர்த்தப் பட்டனவா என்பதும், தொகுக்கப்பட்டனவா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியே.
புத்த சமயத்தைப் பொருத்தமட்டில் சில அடிப்படை நெறிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. மதகுருமார்கள் மஞ்சள் உடை அணிய வேண்டும் என்ற வழக்கத்தை புத்த சமயம் ஏற்படுத்தியது.
அதுவரை இருந்த குருகுலக் கல்வி முறை பள்ளிக்கூட முறையாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
மதகுருமார்களுக்கு என்று தனி விதிமுறைகள் வகுக்கப் பட்டன. அதீத ருசியான உணவு உண்பது, நறுமணம் பயன்படுத்துவது, பஞ்சணைப் படுக்கையில் படுத்து உறங்குவது, ஆபரணங்களை அணிந்து அழகு பார்ப்பது, நடனமாடி மகிழ்விப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்பது மதகுருமார்களுக்கு முக்கிய கட்டுப்பாடாக விதிக்கப் பட்டது.
இந்து சமய வேத, உபநிடதங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தன. எனவே அதற்கு மாற்றாக புத்த சமய நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்டன.
புத்த மதத்தில் கடவுள் பற்றிய கருத்துக்கள் எதுவுமே பதிவு செய்யப்படவில்லை. என்றாலும் புத்தர் சிலை உருவங்களை தங்கள் கோயில்களான ‘விகாரை’யில் அமைத்து வழிபடும் வழக்கம் காணப்படுகிறது.
முக்கியமாக இரண்டு பிரிவுகள் காணப்படுகிறது. ஒன்று பழைய கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ‘தேரவாதம்’ என்னும் பிரிவு. இதனை ‘சிறிய சக்கரம்’ என்றும் அழைக்கின்றனர். தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், இலங்கை போன்ற நாடுகளில் இந்தப் பிரிவினரே உள்ளனர். இதன் புத்த குருமார்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற கொள்கை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்தப் பிரிவுக்கு அங்கீகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ‘மகாயான புத்தம்’ என்னும் பிரிவு உள்ளது. இதனை ‘பெரிய சக்கரம்’ என்று கூறுகின்றனர். பின்னர் தென்கிழக்காசியாவிற்கு இடம்பெயர்ந்த சீனர்கள் மலேசியா, இந்தோனேஷியா, புரூனே ஆகிய நாடுகளிலும் இதே புத்தப் பிரிவைப் பரப்பினர்.
உலகம் முழுவதும் சுமார் 170 கோடி மக்கள் புத்த மதத்தை சார்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புத்த மதம் தோன்றி, எழுச்சி பெற்ற இந்தியத் திருநாட்டில் சுமார் 35 லட்சம் பேர் மட்டுமே புத்த மதத்தைத் தழுவியவர்களாகக் காணப்படுகின்றனர்.
புத்த மதத்தை கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் பரவச் செய்த பெருமை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மாபெரும் சக்கரவர்த்தியாக வாழ்ந்த அசோகரையே சாரும்.
இந்தியாவில் கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டு வாக்கில் சமண சமயம் எழுச்சி பெறத் துவங்கியது. இந்தக் காலக் கட்டத்தில் புத்த சமயத்தின் வளர்ச்சியை சமண சமயம் தடுத்து நிறுத்தியதோடு, புத்த குருமார்களை இந்தியாவை விட்டுத் துரத்தியடிப்பதிலும் முக்கியக் கவனம் செலுத்தியது.
எனினும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தின் வளர்ச்சியையும், சைவ மற்றும் வைணவ சமயம் விழுங்கத் தொடங்கியது என்பது வரலாறு.
ஆக, பெரும் சமயங்களாக விளங்கிய புத்த மதமும், சமண மதமும் இந்தியாவில் தனது வீழ்ச்சியைத் தடுக்க முடியாமல் சிதைந்து மறைந்தே போயின. இன்று பெயரளவுக்கு மட்டுமே நம் நாட்டில் அவை இருந்து வருகின்றன.
என்றாலும் புத்த சமயம் கிழக்காசிய நாடுகளில் தனது பெருமை மங்காமல் இன்றும் ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கௌதம புத்தர் வைகாசி தினத்தன்று முழு நிர்வாணம் அடைந்தார். நிர்வாணம் என்பது முக்தியைக் குறிக்கிறது. எனவே அந்த நன்னாளை ‘விசாகப் பூர்ண’ நாளாகவும், ‘புத்த பூர்ணிமா’வாகவும் புத்த சமயத்தினர் கொண்டாடி வருகின்றனர்
கடவுள் என்று ஒருவர் இருப்பதை அனுமானிக்காத மதமான புத்தம், கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குவதாக அடித்துக் கூறுகிறது. இதனையும் மீறிய சக்தி மிக்க இயற்கை ஒன்று இருக்கிறது என்பதை புத்தம் நம்ப மறுக்கிறது.
கடவுள் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும் புத்தரின் கருத்து அதுவாகத்தான் இருந்தது. என்றாலும் கடவுளுக்கு அடுத்ததாக நம்பப்படுகிற தேவர்கள், ரிஷிகள், முனிவர்களை அவர் அங்கீகரித்தார்.
இவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். அல்லது வேறொரு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் என்று கணித்தார். இவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுப் பட்டவர்கள் என்பதை உறுதியாக எடுத்துச் சொன்னார் புத்தர்.
எனினும் புத்த மதத்தினர் அவரது சிலையை ஆலயங்களில் வைத்து பூஜிக்கத்தான் செய்கின்றனர். அவரைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர்.
வஜ்ரயானம் என்னும் பிரிவும் புத்த மதத்தில் உள்ளது. இது திபெத், மங்கோலியா, ரஷ்யாவின் சைபீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் சிறந்து விளங்குகிறது.
உலகில் எத்தனையோ சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், ஒழுக்க சீலர்களும், துறவிகளும் வாழ்ந்திருக்கிறார் கள். அவர்கள் இந்த மனித சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காக எவ்வளவோ பாடுபட்டும் இருக்கிறார்கள். எத்தனையோ அமானுஷ்யங்களைச் செய்து அனைவரையும் வியப்படையச் செய்திருக்கிறார்கள். மனிதர்களின் மன மற்றும் உடல் ரீதியான இன்னல்களை, நோய்களை அவர்கள் தீர்த்தும் வைத்திருக்கிறார் கள்.
ஆனாலும் அவர்களில் யாரும் இத்தகைய கோடிக் கணக்கான மக்களால் போற்றிப் புகழப்படவில்லை. வணங்கப்பட வில்லை. வழிபடப்படவில்லை.
இந்து மதத்தைத் தவிர்த்து பார்த்தால் புத்தர், ஏசு, நபிகள் நாயகம் போன்றோர் மட்டுமே இன்றும் கோடிக்கணக்கான மக்களால் தொழப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எனினும் புத்தரைப் பொருத்தமட்டில் சற்று வித்தியாசமான வராகவும், வேறுபட்டவராகவும் இருந்துள்ளார் என்பதே உண்மை. இவர் மனிதனின் வாழ்க்கை முறைகளைப் பற்றியோ, அவனது செயல்பாடுகளைப் பற்றியோ தனது விளக்கங்களைப் பதிவு செய்யவில்லை. அதனைப் பற்றி சிந்திக்கவும் இல்லை.
அவரது சிந்தனை அனைத்தும் மனித வாழ்வில் ஏற்படுகிற கவலைகள், சோதனைகள் போன்றவற்றைப் பற்றியும், அதற்கான காரணம் குறித்துமே இருந்தது. குழந்தைப் பருவம் முதல் இளமை, வாலிபம், முதுமை போன்ற இயற்கையான மனித வளர்ச்சியில் ஏற்படுகிற மாற்றங்களும், அப்போதைய மன ரீதியிலான பாதிப்புகளும் பற்றி அவர் யோசித்தார். மனிதனின் பிறப்பு, இறப்பு, கவலை, நோய், ஆரோக்யம் போன்றவற்றைப் பற்றி நிறைய சிந்தித்தார். அதற்கான காரணங்கள் குறித்து யோசித்தார். இவற்றில் இருந்து விடுதலை பெறுவது எப்படி என்று அதன் தீர்வைக் குறித்து சிந்தித்தார்.
இதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் புத்தர். இதுபற்றியே நிறைய சிந்தித்தார். இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதற்காகவே ஆழ்ந்த தியானத்தைக் கடைப்பிடித்தார். தன்னை வெகுவாக வருத்தி அதற்கான விடையைக் கண்டறிந்தார் புத்தபிரான்.
என்ன அது?
‘மனிதப் பிறப்பெடுப்பதற்குத் தனியாக எந்தவொரு காரணமும் கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை அவனுள் ஏற்படுகிற அனைத்து மாற்றங்களும் சோதனைகளின் வடிவமே.
மனிதப் பிறவி என்பது வீணாகப் படைக்கப்பட்டதே. துன்பங்களில் சிக்கி, உழன்று கஷ்டங்களை அனுபவிப்பதைத் தவிர அவன் இவ்வுலகில் செய்வதற்கு எதுவுமே கிடையாது.
உண்மையில் அவனுக்கு இந்த உலகில் இன்பமும் கிடையாது; துன்பமும் கிடையாது. காரணம் அவனது ஒவ்வொரு இன்பத்தையும் தொடர்ந்து மிகக் கொடிய துன்பம் வந்தடைகிறது. அவனது சந்தோஷங்களின் பின்னால் மோசமான சோகம் மறைந்து கிடக்கிறது. பிறப்பின் பின்னால் இறப்பு என்னும் பயங்கரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஆக மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையடுத்து ஒன்றாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றுமே துன்பத்தையே அளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆசைப்படுதலில் இருந்து அவன் விடுபடாத வரை அவன் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான். அதாவது இறந்த பின்னும் இதே மனித வடிவில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பான். இதுதான் அவனுக்குக் கிடைக்கும் மாபெரும் தண்டனை.
இதிலிருந்து அவன் விடுதலை பெற வேண்டும். அப்போது தான் உண்மையான சந்தோஷத்தை அவனால் நன்றாக நுகர முடியும்.
அவ்வாறு விடுதலை பெறுவதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்?
ஆசையை அகற்ற வேண்டும். துன்பத்திற்குக் காரணம் ஆசைப்படுதலே என்பதைத் தெளிவாக உணர வேண்டும்.
அதாவது உலகத்துடனான எந்தவிதத் தொடர்பையும் அவன் வைத்துக் கொள்ளவே கூடாது. எதையாவது நேசிப்பது, எதையாவது எதிர்ப்பது என்று எதுவுமே கூடாது.
அன்பு, பாசம், பற்று, நேசம், உறவு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளத்தில் இருந்து துடைத்தெறிய வேண்டும். இந்த உலகத்தின் மீதான பிடிப்பு என்பதைவிட்டு சுத்தமாக விலக வேண்டும்.
இதுபோன்ற அன்பும், பாசமும்தான் அவனை மீண்டும் பிறவியெடுக்கக் காரணமாக அமைகிறது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவற்றை விட்டு விலகுவதால் ‘இருப்பு’ என்பதை விட்டு விலகி ‘இல்லாமை’ என்ற உயர்வற்ற, ஒப்பற்ற புனிதத்தை நோக்கி அவனால் நகர முடிகிறது.’
இதனைத்தான் புத்தர் ‘நிர்வாணம்’ என்கிறார். இந்த நிர்வாண நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும் என்பதே புத்த மதத்தின் ஒரே முக்கிய நோக்கம்.
இது சாதாரண நோக்கமாகக் கருத முடியாது. மிகக் கடினமான லட்சியப் பாதை. சாதாரண மனிதனுக்கு இந்த வழி மிகவும் சிக்கலாகவே தெரியும். இந்த வழியை அடைவது என்பது மிகக் கடினமானதே.
ஆனாலும் புத்த பிரான் அதைத்தான் வலியுறுத்துகிறார். அந்த வழியில் அனைத்து மனிதர்களும் செல்வதைத்தான் அவர் விரும்பினார்.
ஆனால் இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று காவி வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, தாடி வைத்த நவீன சாமியார்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.
மனிதனாகப் பிறந்தவன் ‘நோய்’ என்ற ஒன்றை வருந்தி அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நோயை வரவழைப் பதற்காக அவன் அதிக விருப்பம் கொள்ள வேண்டியதும் கிடையாது.
ஏனென்றால் அவன் ஆசைப்படாவிட்டாலும் நோய் அவனை வந்தடைந்தே தீரும். இது இயற்கையின் தவிர்க்க முடியாத விந்தை.
ஆனால் ‘நோயை அண்ட விடாமல் வாழ வேண்டும்’ என்று ஆசைப்படுவதுதான் சிறப்பானது. அதன்படி நடந்து கொள்வதுதான் நல்லது.
அதேபோலத்தான் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று மனிதர்களை உற்சாகப்படுத்துவதும்.
எந்த மனிதன் ஆசைப்படாமல் இருக்கிறான் என்று சொல்லுங்கள்.
எல்லா மனிதர்களுக்கும் மனம் நிறைய ஆசைதான் அடித்துக் கொண்டிருக்கிறது.
பணக்காரனாக ஆசை!
பணக்காரனுக்கு லட்சாதிபதியாக ஆசை!
லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனாக ஆசை!
கோடீஸ்வரனுக்கு உலகிலேயே முதல் கோடீஸ்வரனாக மிளிர ஆசை!
அழகான பெண்களைக் கண்டால் ஆசை!
‘சூப்பர் ஸ்டார்’ மாதிரி ஆக வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரேனும் உள்ளனரா?
ஆசைப்படுவதால்தான் டெல்லியில் பேருந்து ஒன்றில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்டார்.
ஆசைப்படுவதால்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
ஆசைப்படுவதால்தான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஆசைப்படுவதால்தான் சீனாவும், பாகிஸ்தானும் நம்மை நாள்தோறும் மிரட்டிக் கொண்டே இருக்கின்றன.
ஆசைப்படுவதால்தான் மங்கல்யான் என்னும் ராக்கெட்டை செவ்வாய் கிரகத்திற்கு நாம் அனுப்பியுள்ளோம்.
இப்படி உலகில் நடக்கும் அத்தனை நல்லது, கெட்டதும் ஆசைப்படுவதால்தான் நடக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற உபதேசம் தேவையா?
ஒருகணம் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இவர்கள் மனிதர்களை முட்டாள்கள் ஆக்குகிறார்களா? அல்லது அவர் களையே முட்டாள்கள் ஆக்கிக் கொள்கிறார்களா? அல்லது மனிதர்களுக்குப் பிடிக்கிற விஷயத்தைப் பற்றிப் பேசினால் மட்டுமே வியாபாரம் போணியாகும் என்கிற கீழ்த்தரமான தந்திரத்தோடு செயல்படுகிறார்களா?
ஜோசியக்காரர்கள்தான் இம்மாதிரியான தந்திரங்களைக் கனகச்சிதமாகப் பிரயோகிப்பார்கள். பணக்காரர்கள் ஜோசியத் தின் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்திருப்பதை அறிந்து கொண்டால் அவர்களுக்கு ஏற்றாற்போல கணிப்பை வெளிப்படுத்துவார்கள்.
‘இந்த வருஷம் உங்கள் பிசினசில் லாபம் ரெண்டு மடங்கு அதிகமாகும். உங்க மகளுக்கு கோடீஸ்வர மாப்பிள்ளை கிடைப்பான். உங்க பையன் கூடிய சீக்கிரம் அமெரிக்கா போற வாய்ப்பு வரும்...’ இப்படித் தங்கள் இஷ்டத்திற்கு அளந்து விடுவார்கள். அப்போதுதானே அந்தப் பணக்காரரிடம் இருந்து பணத்தை ஏராளமாகக் கறக்க முடியும்!
புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது கடினமானது தான். ஆனால் அவரது லட்சியங்களும், உபதேசங்களும் வாய்க்கு வந்தபடி அள்ளிவிடப்பட்டதல்ல. அத்தனையும் அவரால் பலகாலம் சிந்தித்து, தியானித்து தெரிந்து கொண்ட உண்மைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னோர்களின் அறிவுறுத்தல்கள் அனைத்துமே மிகக் கடினமான சோதனைகளுக்குப் பிறகே உணர்ந்து அருளியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை, குறிப்பாகத் தம்மைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் அவர்களிடம் இருந்ததே கிடையாது. மக்கள் ஒன்று திரண்டு கோரஸாகக் கைத்தட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் தெரிவித்ததும் கிடையாது.
‘ஆசையே அழிவுக்குக் காரணம்’ என்பது புத்தபிரானின் பொன் வாக்கு. இதைத்தான் இந்து சமயமும் கூறுகிறது. இஸ்லாமும் கூறுகிறது. கிறிஸ்தவமும் கூறுகிறது.
இப்படி அனைத்து மதங்களுமே ஆசைப்படுவதைத் தவிர்க்க வலியுறுத்தும்போது, புதிதாகப் புறப்பட்டுள்ள காவி கர்த்தாக்கள் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று கூறி மனிதர்களைத் தவறான வழிக்குத் திசை திருப்புவது வேதனை தரும் உண்மை.
2. சித்தார்த்தர்
கபிலவஸ்து நகரம் என்பது தற்போதைய இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் எல்லைப் பகுதி யில் அமைந்துள்ளது. இது நகரம் என்றாலும் மிகப் பெரிய பகுதியை உள்ளடக்கிய லும்பினி என்னும் சிறிய நாட்டின் தலைநகராக இருந் தது. இதன் பெரும்பகுதி நேபாள நாட்டிலேயே அமைந்துள்ளது.
பண்டைய கபிலவஸ்து என்பது எது என்பதில் இன்னும் சர்ச்சை இருந்து வருகிறது. பிப்ராஹ்வா என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் இதனை நேபாள நாட்டவர்கள் மறுக்கின்றனர். திலோராக்கொட் என்பதுதான் உண்மையான கபிலவஸ்து என்று அவர்கள் சாதிக்கின்றனர்.
கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, திலோராக்கொட் என்னும் பகுதியில் இருந்ததாக வும், இதற்குப் பிந்தைய கபிலவஸ்து பிப்ராஹ்வா என்னும் இடத்தில் இருந்திருக்கக்கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் நாம் ரோகிணி நதிக்கரையில் இருந்த கபிலவஸ்துவைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்நகரை ஜயசேனன் என்பவர் முன்னொரு காலத்தில் ஆட்சி செய்து வந்தார். சாக்கிய குலத்தைச் சேர்ந்த இவருக்கு சிம்மஹனு என்ற மகன் உண்டு. ஜயசேனனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை இவர் ஏற்றார்.
சிம்மஹனுவிற்கு ஏழு குழந்தைகள். சுத்தோதனர், சுல்லோதனர், தோதோனர், அமிதோதனர், மிதோதனர் என்று ஐந்து ஆண் குழந்தைகள். அமிதை, பிரமிதை என்று இரண்டு பெண் குழந்தைகள்.
சிம்மஹனுவின் மரணத்திற்குப் பிறகு பாரம்பரிய வழக்கப்படி, இவரது மூத்த மகனான சுத்தோதனர் மன்னராகப் பொறுப்பேற்றார்.
இவரது மூத்த மனைவி மகாமாயாதேவி. இவருக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. அக்குழந்தையின் பெயர் சித்தார்த்தர். பின்னர் புத்த பதவியை அடைந்து கௌதம புத்தராக வணங்கும் தெய்வமாக இருப்பவர்.
மாயாதேவி மரணமடைந்த காரணத்தால் இவரது உடன்பிறந்த தங்கையான பிரஜாபதி கௌதமியை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார் சுத்தோதனர். இவருக்கு நந்தன் என்ற ஆண் குழந்தையும், நந்தை என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.
சுத்தோதரரின் மூத்த மனைவி மாயாதேவியின் முற்பிறவியைப் பற்றியும் அப்போது தெரிந்திருந்தது.
அவர் ஓர் அந்தணரின் மகளாகப் பிறந்திருந்தார். ஒருமுறை அந்தணர் தனது மகளிடம் மணம் நிறைந்த மலர்களைக் கொடுத்து அதனைப் புத்தரின் திருவடிகளில் வைத்து வணங்கச் சொன்னார். அந்தப் பெண்மணியும் அவ்வாறே செய்தார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தர் ஒருவர் தோன்றுவார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பார்த்தால் புத்தர் பிரான் தோன்றுவதற்கு முன்பாகப் பல புத்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புத்தரின் திருமலரடி களில் மலர்களை அர்ச்சித்து அவர் வணங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த புத்தர், ‘‘அடுத்த பிறவியில் நீ புத்தர் ஒருவரைப் பெற்றெடுக்கும் பேற்றினை அடைவாய்’’ என்று அருளி வாழ்த்தினாராம்.
அந்தப் பெண்மணிதான் அடுத்த பிறவியில் கோலிய நாட்டு மன்னன் அஞ்சனனின் மகளாகப் பிறந்தார். அவர் பெயர்தான் மாயாதேவி. அவருக்கும் சுத்தோதனருக்கும் திருமணம் நடைபெற்றது. கபிலவஸ்துவின் மகாராணியாக அவர் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ஒருநாள் மாயாதேவி கனவு ஒன்றைக் கண்டார். அது ஒரு அற்புதமான கனவு.
கபிலவஸ்து நகரில் ஆண்டுதோறும் ‘ஆஷாடவிழா’ நடை பெறுவது வழக்கம். இது ஆறு நாட்கள் தொடர்ந்து நடை பெறும் ஒரு கோடை விழா ஆகும். அப்போது மக்கள் பெருந்திர ளாக அங்கே கூடுவார்கள். புத்தாடை அணிந்து, உற்சாகத்தோடு நடனமும், கும்மாளமுமாக களேபரமாக இருக்கும்.
அரண்மனை முன்பாக அமைக்கப்படும் மிகப் பெரிய அலங்கார மேடையில் மன்னரும், மகாராணியாரும் அமர்ந்து பொது மக்களுக்குத் தரிசனம் தருவார்கள். தளபதிகளும், அமைச்சர்களும் அங்கே அமர்ந்து மக்களை வரவேற்பார்கள்.
தெருவெங்கும் பூக்கள் சிதறிக் கிடக்கும். வண்ணப் பொடிகள் நகரை நிறைத்து நிற்கும். வாண வேடிக்கைகள் அதிரடியாக இருக்கும்.
விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும். அதில் அறுசுவை உணவுகளும் அன்போடு பரிமாறப்படும் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்தக் குறிப்பிட்ட ஆண்டு நடைபெற்ற விழாவில் ராணியார் மாயாதேவியும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டார்.
விழாவின் இறுதி நாளான ஆஷாட பௌர்ணமி தினத்தன்று அவர் பட்டாடை உடுத்தி பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தன் திருக்கரத்தால் இனிப்புப் பதார்த்தங்களை வழங்கினார்.
இந்த நன்னாளில் ‘அஷ்டாங்க சீலம்’ என்னும் நோன்பு இருப்பது வழக்கம். இது இல்லற வாழ்க்கையில் உயர்ந்தோர் பின்பற்றக்கூடிய நோன்பாக விளங்குகிறது.
யமம் (நீதி நெறிகள்), நியமம் (ஆத்ம சுத்தி), ஆசனங்கள், பிரணாயமம் (ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள்), ப்ரத்யாஹரம் (புலன்களை அடக்கியாளுதல்), தாரணம் (ஒருமுனைப்படுத்தல்), தியானம், சமாதி (தீர்க்கமான சிந்தனை) ஆகிய எட்டு யோகங்களை உள்ளடக்கியது அஷ்டாங்க சீல நோன்பு.
முதல் நான்கின் மூலம் உடலையும், பின்பாதி நான்கின் மூலம் உள்ளத்தையும் தூய்மையாக்கும் நோன்பு இது.
இந்த நோன்பை மாயாதேவியும் அன்று கடைப்பிடித்தார். பின்னர் இரவு அறுசுவை உணவை உண்டு படுக்கையறை சென்றார் ராணி.
இரவு ஆழ்ந்த உறக்கம்
அதிகாலைப் பொழுதும் வந்தது.
சூரிய பகவான் கீழ் வானில் மஞ்சள் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்த அற்புதமான காலை வேளை.
அப்போது வண்ணமயமான கனவு ஒன்று அவரை ஆக்ரமித்தது.
என்ன கனவு அது?
திருதராட்டிரன், விரூபாக்கன், விரூளாஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் மாயாதேவியின் படுக்கையறைக்குள் நுழைந்தனர். இவர்கள் இந்திரனின் திக்குப்பாலர்கள்.
இந்த நால்வரும் கட்டிலோடு மாயாதேவியைத் தூக்கிக் கொண்டு இமயமலைக்குச் சென்றனர். அங்கே மனோசிலை என்றொரு பெரிய பாறை இருந்தது. அங்கிருந்த சால மரத்தின் கீழே கட்டிலை இறக்கி வைத்துவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அப்போது அங்கே கொள்ளை அழகுடன் தேவர்களின் மனைவியர்கள் நால்வர் தோன்றினர். அவர்கள் மாயாதேவியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அநுவதப்தம் என்னும் ஏரியில் நன்கு நீராட்டினார்கள். அதன் பின்னர் மாயாவிற்கு அழகிய ஆடையை அணிவித்தார்கள். கண்ணைப் பறிக்கும் ஆபரணங்களை அணிவித்தார்கள். நறுமணம் வீசும் அழகிய பூ மாலைகளைச் சூட்டினார்கள்.
பின்னர் அங்கிருந்த வெள்ளிப் பாறை ஒன்றில் அமைந்திருந்த மிக அழகான பொன்னிற மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்று இருந்தது. அதில் மேற்குப்புறமாகத் தலை இருக்குமாறு மாயாதேவியைப் படுக்க வைத்தனர்.
அந்த நேரத்தில் அந்த மலையில் அற்புதமான வெள்ளை யானை ஒன்று உலவிக் கொண்டிருந்தது. அது அப்படியே இந்த பொன்னிற மாளிகையை நோக்கி வந்தது. அங்கிருந்த தாமரை மலர் ஒன்றைப் பறித்து தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டது.
பின்னர் தாமரை மலரை தும்பிக்கையில் ஏந்தியவாறே மாயாதேவி படுத்திருந்த கட்டிலினருகே வந்தது. சற்று நேரம் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. ஏதோ திருப்தி அடைந்த மாதிரி அந்தக் கட்டிலை மூன்று முறை வலமாகச் சுற்றி வந்தது. பின்னர் அப்படியே மாயாதேவியின் வலது பக்கமாக வந்து அவரது வயிற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்டது.
இக்கனவின் உண்மையான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன தெரியுமா?
துடிதலோகத்தில் இருப்பவர் போதிசத்துவர். இவர் அந்த லோகத்தை விட்டு இறங்கிவந்து, மாயாதேவியின் வயிற்றில் கருவாக உருவாவதைத்தான், வெள்ளை யானை ஒன்று வயிற்றில் நுழைந்ததைப்போல கனவாகக் கண்டார்.
இப்படித்தான் இந்தக் கனவுக்கு அர்த்தம் கொள்ளப்பட்டது.
போதிசத்துவர் என்றால் யார்?