Minsara Poove...
By Hansika Suga
1/5
()
About this ebook
கணவன் மனைவி உறவில் மிகவும் முக்கியமானது ஒருவர்மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை.
நம்பிக்கை சிதையும்போது நேசவலை அறுபடுகிறது. உணர்வுகளின் தீவிர சேதாரம் இருவருக்கும்..!
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்..!
முகிலன்-மதுவந்தி..! திருமணம் முடிந்து சோபனமுகூர்த்தம் நிகழ்வதற்குள் கோபம், சந்தேகம் என்ற வலையில் வீழ்கிறாள் நம் நாயகி.
அவளது செய்கையால் மனம் நொந்து போகும் முகிலன் அதற்குப்பின், அவளைத் திரும்பியாவது பார்த்தானா? அல்லது சீண்டிச்சீண்டி அழவைத்து வேடிக்கைப் பார்த்தானா?
காதலுடன் ஆரம்பித்த உறவு, கட்டிலறையில் மோதலாய் மாறிப்போனதை கலாட்டாவாகச் சொல்லும் கதை.
மன்னிப்பின் முடிவில் ஏற்பட்ட பூரண சரணாகதி. அவளிடம் அவன்..! அவனிடம் அவள்..!
இவர்களுக்கு நடுவே ஆதர்ஸ தம்பதியான ராஜராஜன்-இந்திரபிரியா. கதையின் மற்றுமொரு கலக்கல் ஜோடி கார்த்திக்-சாகம்பரி.
பிடித்தது யார்? முகிலன்-மதுவந்தி ஜோடியா? கார்த்திக்-சாகம்பரி கதாபாத்திரங்களா?
உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து ஆவலுடன்..!
Read more from Hansika Suga
Kannal Pesa Vaa... Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarum Rating: 3 out of 5 stars3/5Maayamenna... Ponmaane..! Rating: 4 out of 5 stars4/5Unakkena Vaazhum Idhayamadi... Rating: 4 out of 5 stars4/5Mannan Nee...! Ilanenjin Kalvan Nee...! Rating: 4 out of 5 stars4/5Paarvai Karpoora Deepamaa..! Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Pookkalin Ithayam Rating: 5 out of 5 stars5/5Anthapurathu Maharani Rating: 5 out of 5 stars5/5Kaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Mayakkum Penney...! Manthaara Poovey...!! Rating: 2 out of 5 stars2/5Neeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Kaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Kaadhal Mattum! Rating: 4 out of 5 stars4/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsSakkarai Nilave...! Rating: 4 out of 5 stars4/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Moongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Poomalaigal Konjum... Rating: 5 out of 5 stars5/5Verenna... Verenna... Vendum Rating: 5 out of 5 stars5/5Kal Vadiyum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsHello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Vizhiye Unakku Uyiranean..! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Ennai Kaadhal Seiya... Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Nee... Nerungi Vaa... Rating: 5 out of 5 stars5/5Yaaro Manathile... Yetho Ninaivile... Rating: 5 out of 5 stars5/5Roja Ondru Mutham Ketkum Neram... Rating: 3 out of 5 stars3/5Manaththai Mayakkum Mandhiramey! Rating: 4 out of 5 stars4/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5
Related authors
Related to Minsara Poove...
Related ebooks
Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsRajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Pookkalin Ithayam Rating: 5 out of 5 stars5/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Nee Vendum Ennarukil! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Ponnena Kanda Pozhuthile! Rating: 4 out of 5 stars4/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Solla Thudikkuthu Manasu Rating: 4 out of 5 stars4/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Nakshatra Rating: 0 out of 5 stars0 ratingsVaanile... Theanila... Rating: 2 out of 5 stars2/5Sakkarai Nilave...! Rating: 4 out of 5 stars4/5Vettiveru Vaasam... Rating: 2 out of 5 stars2/5Poi Solla Koodathu Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Nee... Nerungi Vaa... Rating: 5 out of 5 stars5/5Engirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Kaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Sahana Rating: 5 out of 5 stars5/5Unnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5
Reviews for Minsara Poove...
1 rating0 reviews
Book preview
Minsara Poove... - Hansika Suga
http://www.pustaka.co.in
மின்சாரப் பூவே...
Minsara Poove...
Author:
ஹன்சிகா சுகா
Hansika Suga
For more books
http://www.pustaka.co.in/home/author/hansika-suga
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 1
காலைக் கதிரவன் பகலின் உக்கிரத்தைத் தாங்கிப் பிடித்த நேரம். சாம்பாருக்குத் தாளித்துக் கொட்டும் கடுகு, கறிவேப்பிலை வாசனை வீடு முழுக்க கமகமவென்று நிறைந்து இருந்தது. சேனைக்கிழங்கு வறுத்த கறியின் வாசமும் சேர்ந்து வர, வீட்டின் நளபாகம் மதுவந்தியின் நாக்கில் எச்சில் ஊற வைத்தது.
பத்மாசினியும், இந்துவும் தங்கள் வீட்டின் சமையல்கட்டை ஆக்கிரமித்துக்கொள்ள, அங்கிருந்து அன்போடு விரட்டியடிக்கப்பட்ட புது மருமகள் மதுவந்தி செய்வதற்கு ஒரு வேலையும் இன்றி, கூடத்தில் மூங்கில் நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள். வழக்கம்போல் சின்னத்திரையில் இசைத்தேனை வழியவிட்ட காதல் கீதங்கள்....!
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்...
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்...
தேடினேன்... ஓ... என் ஜீவனே....
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே...
இளமை உணர்வுகளைக் கிளறிவிட்டு இதயத்தைச் சொக்க வைத்துக் கொண்டிருந்த பாடல்...! திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி.
முகிலனோடு திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் கழுத்தில் இருந்த புதுத்தாலி மெருகு குலையாமல் பளபளத்தது. அவளும் புதுமணப்பெண் என்ற மெருகு குலையாமல் கைபடாத ரோஜாவாய் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை...!
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியோடு ஆரம்பித்த வாழ்க்கை.
நடக்க வேண்டியதெல்லாம் சரியாக நடந்திருந்தால் தம்பதிகள் இருவரும் இந்நேரம் கோவாவில் தேனிலவு அல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்...! கற்பனைகள் அத்தனையும் வெறும் கனவாகவே நின்றுபோனதை விதியென்று சொல்வதா? சதியென்று சொல்வதா?
புகுந்த வீட்டில் முகிலனோடு தன் வாழ்க்கை தொடங்கிய விதத்தை நினைத்துக் கொண்டாள் மதுவந்தி.
முஹூர்த்தம் முடிந்த அன்று சோபன இரவு. வாசனை மலர்களால் நிரம்பியிருந்த வண்ணமிகு கட்டிலின் ஒரு மூலையில் பட்டும்படாமல், தவிப்புடன் அமர்ந்திருந்தவளை சிறு ஏளனப் புன்னகையுடன் பார்த்தான் முகிலன்.
சகுனி விளையாட்டின் சதியில் சிக்குண்டு மதுவந்தி கலங்கிக் கிடக்க, முகிலனின் மனமோ திகுதிகுவென்று எரியும் எரிமலைச் சிதறலாய்...!
அவனது வெறுப்பான பார்வை தன்னெதிரே அமர்ந்திருந்தவள் மீது படிந்தது. அவனிடம் தீக்கனலை வீசிய மதுவின் கண்கள் தற்போது கார்கால மேகமாய் மாறிவிட்டதில் அவனுக்குள் குற்றால அருவி குளிர்ச்சியாய் பொழிந்ததா?
அவளின் செந்நிற உதடுகள், தாம் செய்த தவற்றின் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒன்றையொன்று கவ்விப்பிடித்து ஆதரவாக இருந்தன.
ஜன்னலின் விளிம்பில் சாய்ந்து, மார்புக்குக் குறுக்கே கைகட்டியபடி முகிலன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையைச் சந்திக்கும் திராணியின்றி அருகிலிருந்த மலர் ஒன்றை தன் கை விரல்களால் கசக்கிக் கொண்டிருந்தாள் மதுவந்தி.
அவனிடம் மெல்லிய நகைப்பொலி கேட்டது.
இதெல்லாம் தானா கசங்க வழியில்லன்னு தெரிஞ்சதும் நீயா கசக்கி எறிஞ்சிட்டு இருக்கே... அதுவும் நல்லதுதான்...! காலையில நம்ம ரூமை எட்டிப் பார்க்கிற அம்மாவுக்கோ, அண்ணிக்கோ சந்தேகம் வராது.
நையாண்டி வார்த்தைகளோடு சம்மட்டியாய் மண்டையில் அடித்த அவன் பேச்சில் அதிர்ந்து பார்த்தாள் மதுவந்தி.
நமக்குள் இனி ஒன்றுமில்லை என்பதை எத்தனை பூடகமாகச் சொல்கிறான்...!
கடவுளே... காதலின் ஆரம்பமே தோல்வியில் முடியவேண்டுமா? தாமரை இதழ்களாய் விரிந்த கண்களில், அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது.
கணநேரம் அந்தக் காட்சியை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்ட முகிலன் தன் மனத்தின் கொந்தளிப்பு அடங்கிய திருப்தியில் படுக்கை அறையோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்த மற்றொரு அறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டான்.
மிகுந்த கோபத்தோடு அவன் அறைந்து சாத்திய கதவுச்சத்தம் அங்கு நிகழவேண்டிய கட்டில் சத்தத்தை மௌனமாக்கி வேடிக்கைப் பார்த்தது.
வானமகள் ஊர்வலம் செல்லும் வசந்தமான நேரம்...! எதையோ எதிர்பார்த்து நட்சத்திரங்கள் வெட்கத்தில் கண்சிமிட்டின. மன்மத நாடகம் அரங்கேறாத வேதனையில் தென்றலாய் வீச மறந்துவிட்ட காற்று...! நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளை பட்டு முந்தானையில் ஒற்றிக் கொண்டாள் மதுவந்தி.
காதல் களிப்பிலும், காமத்தின் ஜதியிலும் புதுமணத் தம்பதிகள் உல்லாசமாய்க் கலவிக் காதல் செய்யவேண்டிய அற்புதமான தருணத்தில், உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு தான் இப்படித் தனியே அமர்ந்திருக்க வேண்டிய தலைவிதி என்ன என்று நொந்து வெதும்பினாள்.
அழகான தேக்கு மரக்கட்டில்...! அப்பா கமலக்கண்ணன் அவளுக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கியது... கட்டிலைச் சுற்றி சரம்சரமாய் தொங்கவிடப்பட்டிருந்த வாசனை மலர்கள் சரம் கோர்த்து இறங்கிய அவள் கண்ணீருக்கு விடை சொல்லத் தெரியாமல் விழித்தன.
கலவரமாய்ச் சுருண்டுபடுத்தாள் மதுவந்தி. ‘விட்ட சவாலில் ஜெயித்தேனா இல்லையா?" என்று கொக்கரித்தபடி வக்கிரமாகச் சிரித்த சந்தோஷின் முகம் அந்த அறையில் பூதாகரமாய் நிறைந்திருப்பதைப் போன்ற பிரமை...!
தன் விரலைக் கொண்டே தன் கண்ணைக் குத்திக்கொள்ளச் செய்த சந்தோஷை வாய் விட்டுச் சபிக்கத்தான் முடிந்தது.
‘சபித்தால் ஆகிவிடுமா? உனக்கெங்கே போயிற்று அறிவு? சற்றே நிதானமாக இருந்திருந்தால் இந்தத் துன்பங்கள் தேவையா? என்னதான் நெருடல் என்றாலும் வார்த்தைகளில் நாகரீகம் வேண்டாமா? இடம், பொருள், ஏவல் தெரியாத சொல்லம்புகளால் முகிலனைக் குத்திக் கிழித்துவிட்டு இப்போது அந்த வலியில் நீயும் சேர்ந்தல்லவா துயரப்படுகிறாய்?’
கடப்பாறையாய் மனத்தில் இடறிய கேள்விகளுக்கு அவளிடம் பதில் இல்லை. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டோம் என்ற கவலையில் இதயத்தைப் பிழிந்தெடுத்த வேதனை...!
முதலிரவன்று முகிலன் தன்னைத் தீண்டாமல் உதாசீனப்படுத்திச் சென்றதன் வலி...! வரைமுறையின்றி அவன் தன்மானத்தை உரசிப் பார்த்ததால் அவளுக்குக் கிடைத்த தண்டனை...!
மறுநாள் காலை கதிரவனின் கால்பதிப்பில் பொழுது விடியும்போது ‘இனி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ?’ என்ற கவலையும் மதுவந்திக்குள் விஸ்வரூபமாய் விரிந்து எழுந்தது.
ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்த்தாள். உறக்கம் தொலைத்த விழிகள் சிவந்த வரிகளைச் சுமந்து நின்றன. வள்ளுவன் வகுத்த காமத்துப்பாலின் அத்தியாயங்கள் வாழ்க்கையில் இடம் பெறாத சோகத்தில் நாணமும், மென்மையும் நிறைந்திருக்க வேண்டிய அவள் முகத்தில் சோர்வு அப்பியிருந்தது. குளித்தால் சரியாகிவிடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் மதுவந்தி.
கையில் டவலோடு இணைப்பு அறையைத் தாண்டிச் சென்றவள், முகிலனின் அறைவாசலில் கணநேரம் தயங்கி நின்றாள். பொழுது புலர்ந்ததை முகிலன் உணரவில்லை என்பதை அழுத்தமாகச் சாத்தப்பட்டிருந்த கதவு அறிவித்தது.
இறுக்கிச் சார்த்தப்பட்டு இருப்பது அறைக்கதவு மட்டும்தானா அல்லது அவன் மனக்கதவுமா?
முன்தினம் நடந்த வார்த்தைகளின் பரமபத விளையாட்டில் இருவர் உள்ளமும் வெகுவாகக் காயப்பட்டுக் கிடந்ததென்னவோ உண்மை...!
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று சும்மாவா சொன்னார்கள்?
தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சிலந்திவலையில் புத்தியின்றி மாட்டிக்கொண்ட சுயபச்சாதாபத்தில் குளியலறை நோக்கிச் சென்றாள் மதுவந்தி. சில்லென்று உடலெங்கும் பரவிய நீர்த்துளிகள் அவள் மேனியின் வெப்பத்தோடு, மனத்தின் பலகீனங்களையும் சமன்படுத்தின.
இளம்கேசரி நிறத்தில் சாக்லேட் வண்ணப் பூக்கள் தெறித்த அழகான சேலையில் அவள் கூடத்துக்கு வந்தபோது, மதுவின் வருகைக்காகக் காத்திருந்தார் முகிலனின் அண்ணி இந்திரப்ரியா. 'இந்து' என்று அவர் கணவர் ராஜராஜனால் அன்போடு அழைக்கப்படுபவர்.
ராஜா பொறந்து பத்து வருஷம் கழிச்சு முகிலன் பொறந்தான். ரெண்டு பேருக்கும் நிறைய வயசு வித்தியாசம்.
சம்பிரதாயமாய் பெண் பார்க்க வந்த அன்று மாமியார் பத்மாசினி தன்னிடம் சொன்னதை நினைத்துக் கொண்டாள் மதுவந்தி. ஒன்றரை வருடம் முன்புதான் மாமனார் மாரடைப்பில் இறந்து போனாராம். முகிலனின் திருமணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.
அத்...தை... எங்க அக்கா?
பாத நமஸ்காரம் வாங்க வேண்டி இந்துவிடம் இழுத்தாள். மனத்தின் சோர்வு குரலில் தெரியாமல் பார்த்துக்கொள்ள சாதுர்யம் வேண்டியிருந்தது.
குட்மார்னிங் மதும்மா... அத்தை கோவிலுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்றதுக்குள்ள இந்த வீட்டைப் பற்றி சகலமும் நான் உனக்குச் சொல்லிடறேன். அதுக்கு முன்னாடி சுடச்சுட காபி குடிப்பியாம். முகில் இன்னும் எழுந்திருக்கலயோ? உனக்குத்தான் தெரியுமே...! என் புருஷனுக்கும், கொழுந்தனுக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம். கொழுந்தனாரே... தம்பி... மச்சினரே... அப்படினெல்லாம் கூப்பிடாம ஆரம்பத்துல இருந்தே முகில்-ன்னு பேர் சொல்லிக் கூப்பிட்டுப் பழக்கமாயிடுச்சு.
கைகள் படுவேகமாக காபி கலந்து கொண்டிருக்க, மடைதிறந்த வெள்ளமாகப் பேசினார் இந்து.
காபியில் கொட்டிய ஜீனியைப் போல் இந்துவின் பேச்சு சர்க்கரையாக இனித்தது. இத்தனைக்கும் அம்மணிக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை...! படித்திருக்கிறோம், பெரிய உத்தியோகத்தில் இருக்கிறோம் என்ற மமதை துளியும் இல்லை.
ராஜராஜன்-இந்திரப்ரியா தம்பதிக்கு கண்ணுக்கு அழகாய் இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பெயர் ஹரி. இளையவன் பெயர் விஷ்ணு. தங்கள் சித்தப்பாவின் திருமணத்தை ஒட்டிப் பத்து நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்ததில் வீட்டைத் துவம்சம் செய்து கொண்டிருந்தனர்.
இப்போது இருவரும் காலை நேர அனந்தசயனத்தில்...! அண்ணன் ஹரியின் முதுகில் சவாரி செய்த கோலத்தில் உறங்கிக் கொண்டிருந்தான் இளையவன் விஷ்ணு.
கோப்பையிலிருந்த காபியை ரசித்துக் குடித்தாள் மதுவந்தி. வீட்டு விசேஷத்தை முன்னிட்டு இந்துவும் விடுப்பு எடுத்திருந்ததால் அலுவலகம் செல்ல வேண்டிய பரபரப்பு இன்றி நிதானமாக சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். வாய் மட்டும் ஓயாமல் பேசியது.
நானும், அத்தையும் மாறி மாறி ராஜாங்கம் செய்யும் இடம் இந்தக் கிச்சன் தான்...! நம்ம தர்பார்ல நீயும் கலந்துக்க வந்தாச்சு...! ஆனா கொஞ்ச நாள் போகட்டும்... இப்பதானே வந்திருக்கே...! இந்த வீட்டுல என் சமையல குறை சொல்ல ஒரு ஆள் இருக்காருன்னா, அது என் வீட்டுக்காரரு மட்டும்தான் மதும்மா. இந்து... இந்து...ன்னு ஆயிரம் தடவை என் பேரை ஜெபிப்பாரே ஒழிய இதுவரைக்கும் கூட்டு நல்லாயிருக்குடி, அவியல் நல்லாயிருக்குடின்னு எதுக்கும் பாராட்டுப் பத்திரம் வழங்குனதே இல்ல. அவருக்கும் சேர்த்து அத்தையும், முகிலனும் என் நளபாகத்தை தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்க.
இந்து படபடவென்று பேசிக்கொண்டிருக்க, 'உன் மாமியாரும், மூத்தவளும் எப்படி இருப்பாங்களோன்னு நினைச்சேன்... நல்லவங்களா தான் தெரியறாங்க...' பார்த்த முதல் நாளே பாராட்டுப் பத்திரம் வாசித்த தன் அம்மா திலகவதியை நினைத்துக் கொண்டாள் மது.
முதல் சந்திப்பிலேயே இந்துவைப் பற்றிப் பாதி உணர்ந்தவள் அல்லவா மதுவந்தி. மீதியை முகிலனே பேச்சுவாக்கில் அவளிடம் சொல்லியும் இருக்கிறான். 'அம்மா...' என்ற வார்த்தையை விட, 'அண்ணி' என்ற வார்த்தை மூச்சுக்கு முன்னூறு முறை அவன் பேச்சில் பிரதிபலிக்கும்.
காபி குடிச்சிட்டே மனசுக்குள்ள என்னவோ கணக்குப் போட்டுட்டு இருக்கியே மதும்மா? புதுசா கல்யாணமாகி வர்ற பொண்ணுங்களுக்கு இருக்கற சராசரி விசனமெல்லாம் உனக்கு வேண்டவே வேண்டாம். இப்ப அத்தை வந்ததும் 'ராத்திரி எல்லாம் நல்லபடியா நடந்ததா'ன்னு கேப்பாங்க. நீ இப்படிக் குழப்பத்தோட நின்னா அவங்க மனசு என்னவோன்னு நினைச்சுக்கும். இந்த வீட்டைச் சேர்ந்தவங்க என்னைக்கும் சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருக்கணும்.
மதுவின் கன்னத்தை ஆசையோடு வழித்தவர், அவளுடைய தோளைத் தாண்டி கொஞ்சமே வளர்ந்திருந்த குட்டைக் கூந்தல் தாங்குமளவுக்கு மலர்களைச் சூடிவிட்டார். 'மதும்மா...' என்ற அந்த அழைப்பில் தான் எத்தனை பிரியம்...!
மதுவுக்கு யோசனையாக இருந்தது. அத்தை வந்ததும் கேள்வி கேட்பார்களா?
'எல்லாம் நல்லபடியாக நடந்தது...' என்று பொய் சொல்லவேண்டுமா? இன்பங்கள் தீண்டாத இரவைப் பற்றி வேறு என்னவென்று சொல்வது? அவளையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று கிளம்பியது.
*****
அத்தியாயம் - 2
புகுந்த வீட்டில் முதல் நாளே பொய்யோடு ஆரம்பித்த தன் வாழ்க்கையின் விசித்திரத்தை நெஞ்சில் சுமந்தபடி அமர்ந்திருந்த மதுவந்தி, வெளியே சென்றிருந்த முகிலன் திடீரென்று கூடத்தில் வந்து நின்றதைக் கவனிக்கத்தான் இல்லை.
தான் வந்தது கூடத் தெரியாமல் மோவாயில் கை வைத்து அமர்ந்திருந்த அவளையும், அங்கே செவிக்கினிமையாய் வழிந்தோடிக் கொண்டிருந்த சின்னத்திரை கீதங்களையும் மாறி மாறிப் பார்த்தான் முகிலன்.
பழைய முகிலனாக இருந்தால் கைகள் துறுதுறுக்க, அந்தப் பச்சை நிற ஷிபானில் அழகு தேவதையாய் இருந்தவளை நடுக்கூடத்தில் அள்ளி அணைத்துக் கொஞ்சிக் கொஞ்சியே மூச்சுமுட்டச் செய்திருப்பான். இப்போதோ மதுவைப் பார்த்தாலே அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
தேளாகக் கொட்டுவானேன்... திருதிருன்னு முழிப்பானேன்... ஹூம்... மனசுக்குள்ள இருக்கற ஏக்கத்தை இப்படிப் படம் பார்த்துத்தான் தீர்த்துக்கணும்-ன்னு விதி. அனுபவி.
அடுத்தவருக்குக் கேட்காத தொனியில் அவளை நெருங்கி எகத்தாளமாகப் பேசிவிட்டு உள்ளே சென்றவன், தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும்வரை திகைப்பு நீங்காமல் பதுமையாக நின்றிருந்தாள் மதுவந்தி.
அடங்க மறுக்கும் எரிமலைச் சீற்றமாய், விதவிதமான கோணங்களில் வெளிப்பட்டு, அவளைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த அவன் கோபத்துக்கு பதில் சொல்லத் தெரியாமல். மனம் ‘ஹையோடா’ என்ற களைப்பில் ஆயாசமாக உணரத் தொடங்கியிருந்தது.
சூரியன் தன் வெப்பத்தின் அளவுகோலை கூட்டத் தொடங்கியிருந்த வேளை. காலிங்பெல் சத்தம் கேட்டு மூத்தாளை முந்திக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள் மதுவந்தி.
'மதுக்குட்டி... எப்படிடா இருக்கே?'
தங்கள் மகளைப் புக்ககத்தில் பார்த்த சந்தோஷத்தில் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்த கமலக்கண்ணன்-திலகவதியின் முகங்கள்.
தங்களுடைய செல்லப் பெண் திருமணமாகி புக்ககம் சென்றுவிட்டதில் திலகவதிக்கும், கமலக்கண்ணனுக்கும் வீட்டில் வெறுமை தட்டிப் போனது. எப்போதடா மகளைப் பார்ப்போம் என்று காத்திருந்தது போல் இன்று கிளம்பி வந்துவிட்டார்கள்.
காலையில எழுந்ததுல இருந்து மது... மதுன்னு உன் புராணம் தான். ஆபீசுல பர்மிஷன் போட்டுட்டு அழைச்சிட்டு வந்திருக்கேன்.
ஏழுகடல் தாண்டி