Neruppu Malar
By Indhumathi
5/5
()
About this ebook
சரித்திர நாவல் என்றதும், சோழனும், பாண்டியனும், சேரனும், கத்தியும், குதிரைகளும் கச்சை கட்டிய பெண்களும்தான் என்பதாகப் பரவலான ஒரு எண்ணம் நிலவுகிறது. சரித்திர நாவல் என்கிறபோதே பின்னணியில் குதிரையும், வாளேந்திய வீரனும் நிற்பான். இவை மட்டுந்தானா சரித்திரம்? அதுவும் இந்திய சரித்திரம் ? 1948-இல் மகாத்மா காந்தியின் அகிம்ஸா யுத்தம் சரித்திரமில்லையா? சீன, பாகிஸ்தான் யுத்தங்களில் சரித்திரமில்லையா? ஏன், - இப்போதைய பஞ்சாப் இராணுவ நடவடிக்கை நாளையச் சரித்திரமில்லையா?
இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட இந்தப் பஞ்சாப் கலவரத்தையும் - ராணுவ நடவடிக்கை பற்றியும் தமிழ் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் - ஆர்வத்தில் பஞ்சாப் இராணுவ நடவடிக்கையை முக்கியமாக வைத்து மற்ற கதாபாத்திரங்களை மேற்பூச்சாக்கிக் கட்டப்பட்ட கட்டிடம் இந்த 'நெருப்பு மலர்'. இரண்டாம் உலக யுத்தத்தை விவரிக்கிற அமெரிக்க நாவல்களையும், ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளையும்யும், மிலா-18, எக்ஸோடஸ் போன்ற அது போல் தமிழில் ஒன்றை எழுதுகிற வாய்ப்பு இல்லையே என்று நினைத்துக் கொள்வேன். பஞ்சாப் ராணுவ நடவடிக்கையான Blue Star Oneration அதை ஓரளவு தீர்த்து வைத்துவிட்டது. வெறும் ராணுவ நடவடிக்கை பற்றியும், பொற்கோவில் ஆயுதக்கிடங்காக மாறின விதமும், பிந்தரன் வாலே பற்றியும் டெல்லி மேலிட உணர்வுகளைப் பற்றியும் மட்டுமே எழுதிக் கொண்டு போனால் அது வெறும் கட்டுரை.
இது போல் ஒரு புவனேஸ்வரி, கிருத்திகா அர்ஜுனையும் - அர்ஜுன் மூலமாக ஜெனரல் வைத்யா Blue Star 0peration - ஐ வெற்றிகரமாக நடத்தத் திட்டம் வகுத்துத் தந்த லெஃப்டினண்ட் ஜெனரல் சுந்தர்ஜி, அவரின் வலதுகரமான ரஞ்சித்சிங் தயாள், இவர்களின் திட்டத்தை இம்மி பிசகாமல் நடத்திக் கொடுத்துத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குல்திங்சிங் பிரார், அர்ஜுனைப் போன்ற ஆயிரமாயிரம் வீரர்கள்...
இவர்கள் எல்லோரும் சரித்திர புருஷர்கள்தான். Blue Star Operation சரித்திரத்தில் இடம் பெறப் போகும் நிகழ்ச்சிதான். அதனால் இதுவும் ஒரு சரித்திர நாவல்தான். முதல் முதலாக ஒரு சரித்திர நாவல் எழுதின பெருமையை, சந்தோஷத்தை 'நெருப்பு மலர்' எனக்குக் கொடுத்திருக்கிறது.
Read more from Indhumathi
Veenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Poongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Tharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Mannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsVeenaiyil Urangum Raagangal Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsVisham Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsAshokavanam Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Ninaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 0 out of 5 stars0 ratingsAgni Natchathirangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Illaiyaa Nithya? Rating: 0 out of 5 stars0 ratingsEndru Puthithai Pirappome... Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neruppu Malar
Related ebooks
Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsThavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Thulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsVaarayo... Vennilave... Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsVasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsNindru Kollum Rating: 4 out of 5 stars4/5Dheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsIrubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiranean! Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Velichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsIndru Nee Nalai Nee Endrum Nee Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5Sonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Neruppu Malar
1 rating0 reviews
Book preview
Neruppu Malar - Indhumathi
https://www.pustaka.co.in
நெருப்பு மலர்
Neruppu Malar
Author:
இந்துமதி
Indhumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/indhumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 1
கீழே அம்மாவின் அறையில் அடித்த அலாரம் மாடியிலிருந்த கிருத்திகாவைத் தூக்கத்திலிருந்து எழுப்பிற்று. சடாரென்று விழித்துக் கொண்ட அவள், கட்டிலின் பக்கத்திலிருந்த மேஜை விளக்கைப் போட்டு மணி பார்த்தாள். நான்கு அடிக்கவே சில நிமிடங்கள் இருந்தன. அம்மா ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். தான் எழுந்திருப்பதோடு அல்லாமல் தடதடவென்று வீட்டில் இருக்கிற அத்தனை பேரையும் எழுப்பி விட்டுவிடுகிற சுபாவம் அவளுடையது. அதற்குப் பயந்தே நேற்று மாலை சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணிக் கேட்டுச் சொன்னாள் கிருத்திகா.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் காலை ஏழு ஐந்திற்குத்தான் புறப்படுகிறதாம். நாம் ஆறே காலுக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும்மா. காலை நேரத்தில் டிராபிஃக் இருக்காது. பதினைந்தே நிமிடங்களில் ஸ்டேஷனுக்குப் போய் விடலாம். அதனால் என்னை ஐந்து மணிக்கு எழுப்பினால் போதும். நீயும் அப்போதே எழுந்திரு. வழக்கம் போலப் பரபர என்று மூன்று மணிக்கும், நாலு மணிக்கும் எழுப்பி அமர்க்களப் படுத்தாதேம்மா. போவது நான் ஒருத்திதான். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆனதால் சாப்பிடக் கையில் எடுத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. கிளம்புகிறபோது ஒரு கப் காப்பி மட்டும் தந்தால் போதும்... என்ன?
அப்போது தலையாட்டிய புவனேஸ்வரி இருப்புக் கொள்ளாதவளாகத் தன் வழக்கமான பரபரப்பிலும், அவசரத்திலும் நான்கு மணிக்கே எழுந்து விட்டாள். விளக்கைப் போட்டு, நாகம், எழுந்திரு. மணியாகிவிட்டது பார்...
என்று சமையற்கார அம்மாளை எழுப்பி, காப்பிக்கு டிகாக்ஷன் இறக்கச் சொன்னாள். பின் வாசல் வராந்தாவிற்குப் போய்ப் பால் வந்து விட்டதா என்று பார்த்தாள். வழக்கமாகப் பால் புட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மூலை காலியாக இருக்க, உள்ளே வந்து விசாரித்தாள்.
ஏன் நாகம், இன்னுமா முனியம்மா பால் வாங்கிண்டு வரலை. நம்ம பூத்திற்குத்தான் மூன்று மணிக்கே பால் வந்து விடுகிறதே... நேற்றுச் சாயந்திரம் அவள் வேலையை முடித்து விட்டுப் போகிறபோதே நூறுதரம் சொன்னேன். காலைல குழந்தை ஊருக்குப் போறா... அதனால் நான்கு மணிக்கெல்லாம் வந்து கொஞ்சம் பாலை மட்டும் வாங்கிக் கொடுத்துட்டுப் போயிடுன்னு...
முகத்தைக் கழுவிப் புடைவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே சமையலறைக் கதவைத் திறந்த நாகம்மாள் சொன்னாள்.
நீ சொல்லியனுப்பியிருக்கே இல்லையா புவனா...? அப்படியானால் வந்துடுவா...
நாகம்மாள் ஏதோ தூரத்து உறவு. புவனேஸ்வரி மாதிரி யாருமற்ற நிலைமை. அதனால் வந்து அவளிடமே ஒட்டிக்கொண்டு விட்டாள். வயது வித்தியாசமும், புவனேஸ்வரி கொடுத்திருந்த இடமும் ஒருமையில் அழைக்கிற துணிவைத் தந்திருந்தன.
வந்தால் சரி, இல்லை என்றால் ஃப்ரிஜ்ஜில் ராத்திரி பால் இருக்கு. எடுத்துச் சூடு பண்ணி முதலில் இரண்டு டம்ளர் காபி கலந்துடு...
கிருத்திகா எழுந்தாச்சா...?
இன்னும் இல்லை. இப்போதே எழுப்பினால் கத்துவாள். கெய்சர் போட்டிருக்கேன். தண்ணீர் சுட்டதும் குளித்துவிட்டு வந்து எழுப்பறேன்...
கீழிருந்து வந்த கணீர்க்குரல் ஏற்கெனவே தன்னை எழுப்பி விட்டிருப்பது தெரியாமல் அம்மா பேசினது அவளைப் புன்சிரிப்பாகச் சிரிக்க வைத்தது. அம்மா எழுந்த பின், அந்த வீட்டில் வேறு யார் தூங்க முடியும்...? யாரைத் தூங்க விட்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள் கிருத்திகா. அதுவும் மறுநாள் வெளியூர் பிரயாணம் என்றால் முதல்நாள் ராத்திரி முழுவதும் தூங்காமல், அவ்வப்போது எழுந்து, விளக்கைப் போட்டு, மணி பார்த்து...
ஏம்மா, அலாரம் எதுக்காக வச்சிருக்கே? இப்படி மணிக்கு ஒரு தரம் எழுந்து நேரம் பார்க்கவா...?
இல்லை கீர்த்தி, எனக்குத் தூக்கம் வரலை...
எதற்காக அம்மா இப்படி அமைதியற்று அலைகிறாள் என்று தோன்றும் கிருத்திகாவிற்கு. இப்போது மட்டுமில்லை. எப்போதும் அம்மாவிடம் இந்தப் பரபரப்பு இருக்கிறது. சின்ன விஷயங்களுக்குக்கூடப் படபடக்கிற சுபாவம் இருக்கிறது. சாயந்திரக் கச்சேரிக்குக் காலையில் இருந்தே வீட்டை அமர்க்களப்படுத்திக் கொண்டிருப்பாள். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நாகம்மாளைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பாள். வேலைக்காரியை மாடிக்கும் கீழிற்கும் விரட்டுவாள். ஸ்ருதிப் பெட்டியையும், ஹார்மோனியத்தையும், மாற்றி மாற்றிச் சரி பண்ணுவாள். அவளின் நிலை கொள்ளாத இயக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிருத்திகாவிற்குச் சிரிப்பு வரும். தராசுத் தவளை என்று தோன்றும். தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மெதுவாகக் கேட்பாள்.
ஏம்மா, நீ சௌதாமினியோட நாட்டியத்திற்குப் பின்னணி பாடப் போறியா... இல்லை, நீயே நாட்டியமாடப் போறியான்னு சந்தேகமாக இருக்கு...
ஸ்ருதிப் பெட்டியை விட்டுவிட்டுச் சடாரென்று நிமிர்ந்து மந்தஹாஸமான அந்த முகத்தைப் பார்ப்பாள் புவனேஸ்வரி.
ஏன் அப்படிக் கேட்கறே கீர்த்தி...?
அம்மாவின் முகம் வாடுவதைப் பார்க்கிறபோது கிருத்திகாவிற்குக் கஷ்டமாக இருக்கும். கண்களில் மினுமினுக்கிற சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்வாள்.
இல்லைம்மா. காலையிலிருந்து நீ படற அவஸ்தையைப் பார்த்தால் சங்கடமாக இருக்கு. பரதநாட்டிய சிகாமணி சௌதாமினி கூடத் தன்னை இப்படி அலட்டிக்க மாட்டான்னு தோணித்து...
என்ன அப்படிச் சொல்லிட்டே கீர்த்தி? இதுக்குப் பெயர் அலட்டல் இல்லை. கவலை. ஒவ்வொரு பாட்டும் நன்றாக அமையணுமே என்கிற பயம். சௌதாமினியின் நாட்டியம் எடுபடணும் என்றால் நான் பாவத்தோடு பாடணும் இல்லையா...? டான்ஸ் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குப் பாட்டும் முக்கியம்தானே...?
தன் கேள்வியின் மூலம் அம்மாவைச் சங்கடப்படுத்திவிட்டதை உணர்ந்து அவளை மென்மையாகப் பார்ப்பாள் கிருத்திகா. இந்த அம்மாவிற்கு தான் எதுவும் செய்யலாம் என்று தோன்றும். அவளை நிற்கவைத்து நமஸ்கரிக்க வேண்டுமென்கிற வேகம் வரும். ஒவ்வொரு நிலைமையிலும் அம்மாவை நிறுத்திப் பார்த்து மனசு சிலிர்ப்படையும். தன்னை வளர்க்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் அவள். அலுக்காமல் சலிக்காமல் எவ்வளவு உழைத்திருக்கிறாள்! எத்தனை கச்சேரிகள் பண்ணியிருக்கிறாள். டில்லி, பம்பாய், கல்கத்தா, ஹைதராபாத் என்று எத்தனை ஊர்கள். ஒரு இடத்திற்கு மறுத்திருப்பாளா...? ஒரு நாள் உடம்பு என்று படுத்திருப்பாளா...? மழை காற்று எதையாவது லட்சியம் பண்ணியிருப்பாளா...? அத்தனையும் யாருக்காக...? தனக்காக. இந்த வீடு, கார், டெலிபோன் வசதிகள் யாருக்காக...? தனக்காக, தன் படிப்பிற்காக, தன் மேன்மைக்காக.
மனதிற்குள் நெருப்புப் பற்றிக்கொண்ட மாதிரி அன்பு பிரவகித்துப் பரவ அதை வெளிப்படுத்துகிற வழி தெரியாமல் வார்த்தைகளை அதில் தோய்த்தெடுத்து மெதுவாகப் பேசினாள் அவள்.
இல்லைன்னு சொல்லலைம்மா நான். இன்ஃபாக்ட் பாட்டு இல்லை என்றால் நாட்டியத்திற்கே மதிப்பில்லை. ஆனால் சாயந்திரம் நடக்கப்போகிற நிகழ்ச்சிக்கு இப்போதிலிருந்து சிரமப்படுகிறாயே என்றுதான் சொன்னேன்...
ஆனால் இந்தப் படபடப்பும், பரபரப்பும் அம்மாவின் சுபாவமாகிப் போயிருந்தன. முன்பெல்லாம் அம்மா இப்படி இல்லை. அந்த அம்மாவை இவளுக்கு நன்றாக நினைவிலிருந்தது. அதாவது, அப்பா செத்துப் போவதற்கு முன்னால் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அம்மா... முதன்முதலாக சௌதாமினிக்குப் பின்பாட்டுப் பாட ஆரம்பித்திருந்த சமயம்... அப்போதெல்லாம் இன்னும் அழகாய் இருப்பாள். இப்போதிருக்கிற இந்தத் தென்னம் பூ நிறம் இன்னமும் பளபளக்கும். முகத்தில் அசாதாரண அமைதி தெரியும். உடம்பிலும் செய்கிற ஒவ்வொரு செயலிலும் அந்த அமைதி விரவி நிற்கிறாற்போலிருக்கும். கண்கள் சாந்தமாகப் பார்க்கும். பேச்சு தழைந்து நிதானமாக வரும். அத்தனை அமைதியும் அம்மாவை விட்டு விலகி எங்கே போய் ஒளிந்துகொண்டு விட்டது என்றுதான் கிருத்திகா ஆச்சரியப்படுவாள். அந்த நிதானம், அமரிக்கை எல்லாம் போய் இப்போதெல்லாம் சதா கண்களில் ஒரு துறுதுறுப்பு, எல்லை மீறின ஆவல், செய்கைகளில் பொறுமையின்மை, பேச்சில் தெறிக்கிற படபடப்பு...
அப்பாவின் மறைவிற்குப் பின்னர்தான் அம்மா இவ்வாறு மாறிப்போய் விட்டாள் என்று நினைத்துக் கொண்டாள். இருபத்தெட்டு வயதில் ஒன்பது வயதுப் பெண்ணோடு தனியாக நின்ற ஆதரவற்ற நிலைமை, யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பது தெரியாத சங்கடம். இனி வாழ்க்கை எப்படிப் போகுமோ என்கிற பயம். இவை அத்தனையும் ஒன்றாகச் சேர்த்து அவளை முற்றிலும் மாற்றியிருக்க வேண்டும். அல்லது பாடப்போன இடத்தில் சுற்றி இருந்தவர்களின் பேச்சுக்களாலும், செய்கைகளாலும் தானாக மாறியிருப்பாள்.
‘நான் சொல்றேன்னு தப்பாக நினைக்காதே புவனா. பாழும் நெற்றியுடன் மேடையில் ஏறிப் பாடக் கூடாது. அப்படிப் பாடுவது நன்றாகவும் இருக்காது. கலையை மதிக்கிற காரணத்தினால் சின்னப் பொட்டாக ஒன்று வைத்துக்கொள்...’
அம்மா சிவப்புச் சாந்தில் கடுகளவு பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்தாள்...
‘என்ன புவனேஸ்வரி இது...? இன்னிக்குப் போய் இப்படி நூல் புடவையில் வந்திருக்கே...? மினிஸ்டர் தலைமை தாங்கற பங்ஷன் இது. பளிச்சுன்னு பட்டு கட்டிண்டு வரக் கூடாது...? ஸ்டேஜின் ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கப் போகிறாய் என்றாலும், வருகிற பெரிய மனிதர்கள் கண்ணில் படாமலா போய் விடுவாய்...? நமக்காக இல்லை என்றாலும் மேடைக்காகவாவது பளிச்சுனு இருக்க வேண்டாமா...? அதுல என்ன தப்பு வந்துடுத்து...?’
அன்றிலிருந்து பட்டு கட்டிக்கொள்ளத் தொடங்கினாள். அதேபோல் காதில் பெரியதாய் வைரத்தோடுகள், மூக்கில் முத்துத் திருகு, தலையில் அடக்கமாகக் கொண்டை... சட்டென்று அம்மாவைப் பார்க்கிற யாருக்கும் அவள் விதவை என்றே தோன்றாது. சொல்லித் தெரிந்து கொண்டாலும், ‘நிஜமா...? நிஜமாகவா...?’ என்று மாய்ந்து போவார்கள். ‘இவ்வளவு நன்றாக இருக்கிறாளே...’ என்று அங்கலாய்ப்பார்கள்.
ஏம்மா, மேடையில் உட்கார்ந்து பின்னணி பாடறது யார், உனக்கு அக்காவா?
எதுக்குக் கேட்கறீங்க...?
இல்லை, உன் முகச் சாயலாகவே இருக்கே என்று கேட்டேன்...
எங்களுக்குள் என்ன உறவு என்பது தெரிந்தால்தான் மேலே பாட்டை ரசிப்பீர்களோ...?
முகத்தில் அறைகிற பேச்சுத்தான். ஆனாலும் அடுத்த கேள்வியைத் தவிர்க்க இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை கிருத்திகாவிற்கு. கேட்டவளின் முறைப்பை லட்சியம் பண்ணாமல் தில்லானாவை ஓர் அலாதி ஆர்வத்துடன் கவனிக்கிற பாவனையில் இருப்பாள்...
அதை நினைத்து மெல்லிதாய்ப் புன்னகைத்துக் கொண்டபோது, அம்மா உள்ளே வந்து விளக்கைப் போட்டு அவளைப் பார்த்தாள்.
நீ முழிச்சுண்டுதான் இருக்கிறாயா, கீர்த்தி...?
ஏம்மா, நீ எழுந்து கொண்டதற்கு அப்புறம் இந்த வீட்டில் யாராவது தூங்க முடியுமா...? தூங்கத்தான் உன் வெண்கலக் குரல் விடுமா...?
நான் மெதுவாகத்தானே பேசினேன். சரி, ரயிலுக்கு நேரமாகிறது. எழுந்து குளிச்சிட்டுக் கிளம்பு...
அவள் போர்வையை விலக்கிக்கொண்டே எழுந்து உட்கார்ந்து சொன்னாள்.
பேசாமல் நாம் ஒண்ணு பண்ணியிருக்கலாம்மா...
என்ன...?
ராத்திரியே போய் சென்ட்ரல் ஸ்டேஷனில் படுத்துக் கொண்டிருக்கலாம். இந்த நேரம் கூட ஆகியிருக்காது...
அடேடே...
என்று முகத்தை வருத்தமாய் வைத்துக் கொண்டாள் புவனேஸ்வரி.
அதை ராத்திரியே சொல்லியிருந்தால் செய்திருக்கலாம் இல்லை? சரி. இந்தத் தரம் போகட்டும். நவராத்திரி லீவிற்கு நீ காலேஜ் விட்டு டில்லியிலிருந்து வருவாய் இல்லை...? திரும்பிப் போகிறபொழுது அப்படியே செய்யலாம். இப்போ எழுந்து கிளம்புகிற வழியைப் பாரு...
சென்னையில் இத்தனை கல்லூரிகள் இருக்கிறபோது, +2வில் தகுதி வாய்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மேற்படிப்பிற்காக அம்மா தன்னைத் தனியாக ஏன் டில்லிக்கு அனுப்புகிறாள் என்பது அவளுக்குப் புரியவில்லை. இங்கே இத்தனை வசதிகளுடன் வீடு இருக்க, எதற்காகக் கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்க நினைக்கிறாள்? இதன் காரணம் என்ன...? முன்பின் தெரியாத, பாஷை புரியாத ஊருக்கு ஏன் போக வேண்டும்...?
ஏம்மா, என் மார்க்கிற்கு இங்கே இருக்கிற அத்தனை காலேஜிலும் கூப்பிட்டு இடம் கொடுக்கிறபோது எதுக்காக என்னை டில்லிக்கு அனுப்பறே...?
அம்மாவிடமிருந்து அதற்குச் சரியான பதிலாக வரவில்லை. ‘நீ தனியாக இருந்து பழகணும்,’ என்றாள். உனக்கு இன்னும் தைரியம் வரணும்" என்றாள். ‘அங்கே மெட்ராஸை விடப் படிப்பின் தரம் அதிகம்’ என்றாள். இப்படி எது எதையோ சொல்லிச் சமாளிக்கப் பார்க்கவே, அதற்குமேல் கிருத்திகா கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.
எத்தனை கேட்டாலும் அம்மாவிடமிருந்து நிஜமான காரணம் வரப் போவதில்லை. டில்லி போவதில் தனக்கும் ஆட்சேபணை ஒன்றும் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் இடம் கிடைத்தவுடன், பணம் கட்டி, இப்போது கிளம்பிக் கொண்டிருந்தாள். அதற்குமேல் படுக்க நேரமின்றிச் சுறுசுறுப்பாக எழுந்து குளித்து, வழக்கமான தன் உடையான ஸல்வார் கம்மீஸிற்கு மாறினாள். அடர்த்தியான தலை முடியை ரப்பர் வளையத்தினுள் அடக்கி ஒரு போதும் பவுடர் கண்டறியாத முகத்தில் புருவங்களுக்கிடையில் சின்னதாய்ப் பொட்டு வைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்த போது, கார் டிக்கியில் சாமான்களை ஏற்றிவிட்டு டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து காரைக் கிளப்பத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தாள் அம்மா...
முதல் பிளாட்பாரத்தில் நின்றிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னலோர ஸீட்டின் கீழ்ப் பெட்டியையும், ஹோல்டாலையும் அடைத்து, ரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் நின்றிருந்த அம்மாவிடம் வந்தாள் கிருத்திகா. சிறிது நேரம் மௌனமாகத் தூரத்தில் எங்கோ வெறித்துப் பின்,
சொல்லும்மா...
என்று பார்வையைத் திருப்பினாள்.
உனக்கு என்மேல் கோபமா கீர்த்தி...?
தனக்குள் குற்ற உணர்வுடனும், உறுத்தலாகவும் நின்ற கேள்வியைக் கேட்டுவிட்டாள் புவனேஸ்வரி.
எதுக்கு...?
உன்னை டில்லிக்கு அனுப்பறதுக்குத்தான்...
அதற்கு எதற்காகக் கோபப்படணும்...?
இங்கே இருக்கிற கல்லூரிகளை விட்டுவிட்டு அங்கே அனுப்பறதுக்கு...
ஒரு விநாடி பேசாமல் இருந்த கிருத்திகா பின் நிதானமாகச் சொன்னாள்,
கோபமில்லைம்மா... ஆனால் இதன் காரணம்தான் புரியலை...
அப்புறம் பின்னால் தானாகப் புரியும். அப்போது நான் செய்ததுதான் சரி என்று நீயே உணர்ந்துகொள்வாய்...
அதற்கு அவளிடமிருந்து பதிலில்லை. சுற்றி நின்ற மனிதர்களைப் பார்த்தாள். சின்ன இடைவெளியில் தெரிந்த வானத்தின் நீலத்தை நோக்கினாள். வண்டி புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியபோது புவனேஸ்வரி மிக அவசரமாகப் பேசினாள்.
ஜாக்கிரதையாக இரு கீர்த்தி. போனதும் ஒரு கால் புக் பண்ணிப் பேசிவிடு. தனியாக எங்கும் வெளியில் போகாதே. அதுவும் இருட்டியதற்கப்புறம் போகவே போகாதே... என்ன...?
‘சரி’ என்று தலையசைத்த கிருத்திகா, நேரமாயிடுத்து, நான் வரட்டுமாம்மா...?
என்று கேட்டு விட்டுச் சடாரென்று குனிந்து புவனேஸ்வரியின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டபோது, இருவர் கண்களும் கலங்கின.
சரி, நீ போய் ஏறி உட்கார்ந்துக்கோ...
ஜன்னலருகில் அவள் உட்கார்ந்தபின் கம்பியைப் பிடித்துக் கீழே நின்று கொண்டிருந்த புவனேஸ்வரி தன் கைப்பையைத் திறந்து சின்னதான வெள்ளை அட்டையைக் கையில் எடுத்தபடி சொன்னாள். நான் ஒருவர் பெயரையும், விலாசத்தையும் தரேன். டில்லி போன உடனே அவரைப் போய்ப்பார். என்ன...?
சரி...
எந்த உதவியானாலும் தயங்காமல் அவரிடம் கேட்கலாம். மறுக்காமல் செய்வார். அதனால் உடனே அவரைப் போய்ப் பார்த்து விடு...
சிவப்பு விளக்கு பச்சைக்கு மாறி ரயில் மெல்ல நகரத் துவங்கியதும் கூடவே நடந்து வந்த புவனேஸ்வரி தன் கையில் இருந்த விலாச அட்டையை அவள் கையில் திணித்தாள். அவர் பெயர் விஷ்ணு பிரசாத். மறக்காமல் போய்ப் பார். அடிக்கடி கடிதம் எழுது. அவரைப் பார்த்த விவரத்தையும் எனக்குத் தெரியப்படுத்து...
அம்மா அத்தனை தரம் அழுத்தி அழுத்திச் சொல்கிற அந்த விஷ்ணுபிரசாத் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் மெதுவாகக் கையசைத்து விடைபெற, அம்மாவின் உருவம் ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சீக்கிரமே மறைய, கையிலிருந்த விலாச அட்டையை ஒருமுறை பார்த்துப் பையில் போட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது, எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருந்த அந்தக் கம்பீரமான இளைஞன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்...
‘யார் இவன்...?’
அத்தியாயம் 2
‘யார் இவன்...’ என்ற கேள்வி மனத்தை ஆழமாய் நெருட. ஒரு விநாடி அவனையே பார்த்தாள் கிருத்திகா. நல்ல உயரமாக இருந்தான் அவன். கைவிரல்களும், முகமும், காது மடல்களும் அசாதாரணச் சிவப்பில் மின்னின. அவளும் வெள்ளைதான். ஆனால் இதுபோன்ற சிவப்புக் கலந்த வெண்மையில்லை. தென்னம் பூ மாதிரி மஞ்சள் சேர்ந்த வெண்மை. அவளும் உயரம்தான். ஆனால் அவ்வளவு உயரமில்லை. எழுந்து நின்றால் அவள் அவனின் தோளுக்கு வரக்கூடும். அல்லது சற்றுக் குறைவாகக்கூட இருக்கலாம். நாசியும், கண்களும் கிரேக்கர்களையும், ரோமானியர்களையும் நினைவுபடுத்த, அடர்த்தியான மீசை வைத்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக அந்த முகத்திற்கும், தோற்றத்தின் கம்பீரத்திற்கும் மீசை அந்நியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு இயல்பாகப் பொருந்தியிருந்தது. தலைமுடி மிகச் சிறிதாய் நறுங்க வெட்டப்பட்டிருந்த விதத்தில் அவன் ராணுவத்திலோ, விமானம் அல்லது கடற்படையிலோ பணிபுரிபவனாக இருக்கலாம் என்பதை அனுமானித்து, உடனே தன் கீழ் உதட்டை லேசாய்க் கடித்துக் கொண்டாள்.
அறிமுகமற்ற யாரோ ஒருவனைப் பற்றி இவ்வளவு