Malargalile Aval Malligai
By Indhumathi
()
About this ebook
'மலர்களிலே அவள் மல்லிகை' மணம் பரப்பிய நாவல். தமிழ் வாசகர்களிடையே சிறப்பான வரவேற்புப் பெற்ற நாவல். திருமதி. இந்துமதியை தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல Creative Writer ஆக இனங்காட்டிய நாவல் இது.
இந் நாவலிலே வருகிற ரமணி நம்மில் பலரின் பிரதிநிதி. எதெதுவினாலோ ஆன எத்தனையோ தாகங்களையும், எதிர்பார்ப்புகளையும், ரஸனைகளையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கிய மனித வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்தவன்; மறு பக்கங்களை யோசித்தறியாதவன் இவனுக்கு மாற்றமாய் வித்யாவும் சங்கருமாய் இருக்கிற கதாபாத்திரங்களைப் படைத்ததோடு இந்துமதி நின்று விடவில்லை ரமணியும் மணக்கத் தொடங்குகிற மகத்தான மாற்றத்திற்கு மெல்ல மெல்ல ஆனாலும் உணர்வு பூர்வமாய்- பூவின் வாசனையாலேயே கட்டி இழுக்கிற மாதிரி - இவனுக்கும் அந்தக் கதவுகளைத் திறந்து விடுகிற ரஸவாதத்தில் நாவலை முழுதுமாய் மலரச் செய்திருக்கிறார்.
Read more from Indhumathi
Oru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Tharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Veenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Veenaiyil Urangum Raagangal Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Mayamaan Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsAshokavanam Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsVisham Rating: 0 out of 5 stars0 ratingsIndru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsEndru Puthithai Pirappome... Rating: 0 out of 5 stars0 ratingsAgni Natchathirangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsSai Saritha Leelamrutham Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Paravaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Illaiyaa Nithya? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Malargalile Aval Malligai
Related ebooks
Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Konda Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Nee Nalai Nee Endrum Nee Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Nazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Kidaikkuma Anbu? Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Poo Rating: 3 out of 5 stars3/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Kanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsMaaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Malargalile Aval Malligai
0 ratings0 reviews
Book preview
Malargalile Aval Malligai - Indhumathi
https://www.pustaka.co.in
மலர்களிலே அவள் மல்லிகை
Malargalile Aval Malligai
Author:
இந்துமதி
Indhumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/indhumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
1
பாரீஸ் கார்னரின் கோடியில் இருந்த ஆபீஸ் கட்டடத்தின் வாசலில் சாப்பாட்டுக் கூடைகள் சேர ஆரம்பித்தன. வெயிலில் டாலடிக்கும் எவர்சில்வர் கேரியர்கள், அதன் பளபளப்புடன் போட்டி போட்டுத் தாழ்வு மனப்பான்மையுடன் புழுங்கும் பித்தளைக் கேரியர்கள், அந்தத் தாழ்வு மனப்பான்மைக்குக் கூட ஒரு தகுதி வேண்டுமென்று நினைத்து அழுது
வடிகின்ற அலுமினியக் கேரியர்கள், சுற்றப்பட்ட வாழையிலைச் சுருள்கள், அவற்றைச் சுமந்துகொண்டு வந்த சிவப்பும் பச்சையுமான முரட்டு நூல் புடவைகள், அவற்றின் கறுப்பு உடம்புகள். கறுப்பில் சற்று அடர்ந்த கறுப்பு, மெலிந்த கறுப்பு, சாம்பல் கறுப்பு… வரிசையில்லாமல் வெற்றிலைக் கறையும், புகையிலைச்
சாறும் படிந்த காவிப் பற்கள், கண்ணாடி வளையல்கள்…
அப்போது ஆபீசைவிட வாசல் கலகலப்பாக இருந்தது. ஆபீசோ தானே பசியாக இருக்கிற மாதிரி வாடிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சுறுசுறுப்பையும், பரபரப்பையும் தள்ளி வைத்துக் கொண்டிருந்தது. எல்லா டிபார்ட்மெண்டுகளும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தன. கம்யூட்டர் மெஷின்களின் பஞ்ச்சிங் சத்தம் இறங்கிக் கொண்டே வந்தது. ஒவ்வொரு மேஜையாகக் காலியாக ஆரம்பித்தது. டாய்லெட் வாசலில் க்யூவாக நீண்டது.
கொலேட்டரின் எதிரே உடம்பும், ஆபீசுக்குக் கிளம்பு முன் சண்டை போட்ட அப்பாவிடம் மனமுமாக நின்று கொண்டிருந்தாள் வித்யா, அப்பா ஆபீசுக்குப் போனாரோ, இல்லை, லீவு போட்டுவிட்டு ‘உர்உர்’ரென்று உறுமிக் கொண்டிருக்கிறாரோ? அப்படிச் செய்யக் கூடியவர்தான் அவர். அப்பாவை நினைத்தபோதே வித்தியாவின் மனசெல்லாம் வெறுப்பு வழிந்தது. அம்மாவிடமிருந்த அனுதாபம் அதிகமாகியது. ஆனால் அம்மாதான் ஆரம்பத்திலிருந்தே அவரது அநாவசியமான மிரட்டலுக்கும், வேண்டாத அதிகாரத்துக்கும் அதிகமாகப் பயந்து, பணிந்து போய் அவரை இப்படி வெறியேற்றி விட்டுவிட்டாள் என்றும் தோன்றியது. அப்பா தன்னிடமிருந்த மூன்று விஷயங்களுக்கு எல்லாரையும் பணிய வைத்துவிடுவார். வைத்துவிட்டார். கண்களை உருட்டி - விழித்துப் பார்க்கும் மிரட்டல், உடம்பில் விசிறத் துடித்துக்கொண்டு நிற்கும் பெல்ட், பேங்க் பேலன்ஸில், பர்சில் பிதுங்கிக் கொண்டிருக்கும்
பணம்…
அடிமைகள்! அடிமைகள்!
‘அப்பா, என்னை உங்களால் வாங்க முடியலையே. இதற்கெல்லாம் அடிமையாக்க முடியலையே…’
கத்தைக் கார்டை எடுத்துச் செருகி மெஷினை ஆன் பண்ணினாள். எரர் லைட் சிவப்பாக முழித்துப் பார்த்தது. எங்கோ தவறு பண்ணியிருக்கிறாள். எங்கே? காலையிலிருந்தே இந்தச் சிவப்பு இப்படித்தான் அடிக்கடி முழித்து அவளைப் பார்க்கிறது. வித்யாவுக்கு அப்பாவின் கோபக்கண் ஞாபகத்திற்கு வந்தது. ‘அதற்கே பயப்படலையே’ என்று சொல்லிக்கொண்டு, ‘எங்கே தப்பு’ என்று பார்க்கக் குனிந்தாள். இந்த மாதிரித் தப்பு பண்ணும்போதெல்லாம் எரியும் விளக்கு வாழ்க்கைக்கும் கிடைத்திருந்தால், உடனே நின்றுவிடும் மெஷின் மாதிரி அடுத்துச் செய்யப் போகும் செய்கைகள் எல்லாம் செய்ய முடியாமல் நின்று போகுமானால், அப்பா எப்போதோ திருந்தியிருப்பார்.
டேபுலேட்டரை நிறுத்திவிட்டு, அவள் பக்கத்தில் வந்து நின்றாள் ஷோபா. வித்யா நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டுக் குனிந்து தவறைக் கண்டுபிடித்துக் கார்டுகளை வரிசைப்படுத்தி எடுத்துப் போட்டு மெஷினை ஆஃப் பண்ணினாள். மணி பார்த்தாள். ஒன்றடிக்க ஐந்து நிமிஷங்கள்.
எனக்கு இன்னைக்குக் கேரியர் வராது ஷோபா கேன்டீன்தான்.
ஏண்டி?
அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.
இப்படி அவள் அடிக்கடி பொய் சொல்ல வேண்டி நேர்கிறது. அப்பா வீட்டை அமர்க்களப் படுத்தும்போதெல்லாம் கேரியர் வராது. ஒரு நாளெல்லாம் கூட அடுப்பே பற்றவைக்காமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ‘அம்மா ஊரில் இல்லை, உடம்பு சரியில்லை, உறவுக்காரர் வீட்டிலே விசேஷம்…’ இப்படி ஏதாவது ஒன்று. பொய் சொல்லும் போதெல்லாம் வித்யாவுக்குத் தன் மீதே கோபம் வரும். ‘நீ ஒரு ஹிப்போகிராட். இந்தப் போலி கௌரவம் உனக்கும் தானே வேண்டியிருக்கு? ‘நோ. இது ‘டீஸன்ஸி’ - அவள் தன்னை உடனே சமாதானப்படுத்திக்கொண்டு விடுவாள்.’
மெயினை ஆஃப் பண்ணலையா?
என்று கேட்டுக் கொண்டே போய் ஆஃப் பண்ணினாள் ஷோபா. ட்யூப் லைட்டுகள் உடனே அணைந்தன. ஃபேனின் வேகம் குறைந்துகொண்டே வந்தது. வித்யா வெளியே வந்தபோது எல்லாரும் நாற்காலிகளை ஓரமாக நகர்த்திவிட்டு டிபன் பாக்ஸுடன் தரையில் வட்டமடித்தாயிற்று. ஊறுகாய், வடை, சாப்பாத்தி, எலுமிச்சை சாதம் எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொண்டாயிற்று. கம்மென்று எல்லாம் கலந்த ஒரு மணம். வெங்காய சாம்பார் யாரிடமோ… அதன் வாசனை தூக்கலாய்த் தெரிந்தது. - ஏன் நிற்கிறே வித்யா? கீழே போய் கேரியரைக்கொண்டு வரலையா?
- மீனா கேட்டாள்.
எனக்கு இன்னைக்குக் கேன்டீன் சாப்பாடு.
அடுத்த கேள்வியின் பொய்யைத் தவிர்க்க அறையைவிட்டு நகர்ந்துவிட்டாள் வித்யா.
பஞ்ச்சிங் மெஷின் ரூமில் டெலிபோனைப் பார்த்ததும் அம்மாவுக்குப் போன் பண்ணிவிட்டு நிலைமையைத் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. ‘இன்னமும் அழுது கொண்டிருக்கிறாளோ, என்னமோ?’ ஷோபா கூட இருந்தது. அப்போது, டெலிபோன் ஆபரேட்டரும் லஞ்சுக்குப் போயிருப்பாள் என்ற நினைவும் வரவே பேசாமல் படியிறங்கினாள்.
என்னவோ போல் இருக்கியே வித்யா… என்ன விஷயம்?
ஒன்றுமில்லை… தலைவலி. காலையிலேயே ஆபீசுக்கு வர வேண்டாம்னு பார்த்தேன்.
பேசாமல் லீவு போட்டுவிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழுந்து, ஏதாவது சினிமாவுக்குப் போயிருக்கலாமே!
சினிமாதானே
என்று கேட்ட வித்யா, மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். எங்க வீட்டிலேயே தினமும் கன்டினியஸ் பர்ஃபாமெனஸ்தாளே நடக்கிறது… அதுவும், தமிழ் சினிமா மாதிரி சலித்துப்போன காட்சிகள்…
முதல் மாடியிறங்கியதும் ஷோபா விடை பெற்றுக்கொண்டாள். அவளுக்குத் தினமும் சித்தப்பாவுடன் தான் சாப்பாடு. அவள் சித்தப்பாவும் அதே ஆபீசின் ஒரு பிரிவில் மேனேஜர். அவர் மூலமாகத்தான் வித்யாவுக்கும் இந்த வேலை கிடைத்தது. அவள் பக்கத்து பில்டிங்கில் இருந்த கேன்டீனுக்குப் போனாள். உள்ளே நாலைந்து ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் ஸ்டெனோகிராபர்கள். அவர்களில் அழகாக இருந்த மிஸ் ஷீலா மாத்யூஸ் இவளைப் பார்த்துச் சிரித்தாள். வித்யாவும் இலேசான புன்னகையோடு நிறுத்திக் கொண்டாள். அவளைத் தாண்டிப்போய்க் கோடியில் கடைசி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்போது ஊத்தப்பம் மட்டும் இருந்தது. அந்தக் கேன்டீனில் எல்லாமே மோசமாக இருக்கும். ஊத்தப்பம் இன்னும் மோசம். சாதம் சாப்பிடப் பிடிக்கவில்லை. ‘பாவம்! தங்கைகளும், தம்பியும் சாப்பிடாமலேயே ஸ்கூலுக்குப் போயிருப்பார்கள்’. நிஜமாவே அப்போது அவளுக்குத் தலை வலிக்கிற மாதிரி இருந்தது. ஒரு கப் காபி மட்டும் ஆர்டர் பண்ணினாள்.
அப்பாவின் ஹிட்லர் தனத்திற்கு வீட்டில் எல்லாரும் அடங்கிப் போகும்போது, அவளுக்கு மட்டும் எதிர்க்கும் தைரியம் எப்படி வந்தது? வித்யாவும் பயந்து, அடங்கி, அடி வாங்கிகொண்டு, மனசுக்குள் வெறுத்துக்கொண்டு, மீறத் துடித்துக் கொண்டுதானிருந்தாள். காலேஜில் நுழைகிற வரை மனசுக்குள் இருந்த தைரியம் வெளியே வரவில்லை, திடீரென்று ஒரு நாள் உதறிக்கொண்டு, உலுப்பிவிட்ட மாதிரி தன்னை வெளிக்காட்டியது. கல்லூரி பீஸ்கட்ட அப்பாவைப் பணம் கேட்டாள்.
எவ்வளவு?
- உறுமல்.
சொன்னாள்.
இந்தா… தொலைச்சுக்கோ. பணத்துக்கு மட்டும் தானே உங்களுக்கு அப்பா வேணும். அழுதுக்கோங்கோ…
அவள் முகத்திலே விழுந்த நோட்டுகள் பறந்தன. ஒரு நோட்டின் நுனி கண் மூலையில் பட்டு உறுத்திற்று. நீர் தளும்ப ஆரம்பித்தது.
வித்யா குனிந்து பணத்தைப் பொறுக்கவில்லை. தம்பி, தங்கைகள் பொறுக்குவார்கள். ஏன் முந்தின முறைவரை விசிறி எறியப்பட்ட பணத்தைப் பொறுக்கிக்கொண்டு வந்தவள்தான் அவளும். ஆனால் இந்தத் தரம் இது சகஜமாகத் தோன்றவில்லை. நடு ரோட்டில் உடம்பில் உடையில்லாமல் நிற்க வைத்த மாதிரிக் கூசியது. அப்பாவையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
என்னடீ முறைக்கிறே?
மனுஷத் தன்மைன்னு ஒண்ணு இருக்கே. உங்களுக்குத் தெரியுமா?
அதை. அவள் சத்தம் போட்டுச் சொல்லவில்லை. கோபத்தில் முகம் விகாரமாகவில்லை. கோபமோ, வெறுப்போ முகத்தை விகாரமாக்கிக் கத்திப் பேசி, அசிங்கமான முறையில் வெளிப்படுத்துவது அவளுக்குப் பிடிக்காது. உள்ளே நெருப்புக் கொழுந்தாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கும், அதன் ஒரு நாக்கின் நுனி கூட வெளியில் எட்டிப் பார்க்காது. கண்களில் மட்டும் தணலாக ஒரு சுடர் ஒரு நிமிஷம் நேரம் வந்து நின்றுவிட்டு அணைந்து போகுமே தவிர கட்டவிழ்ந்து கொட்டாது.
அதெல்லாம் சேர்த்து அவருக்கு முகம் விகாரமாகியது. கண்களில் சிவப்புக் கொழுந்து பறந்தது. வாய் கோணிற்று. பேச்சு தடுமாறியது. முதன்முறையாகத் தன்னை நோக்கி அம்பு பாய்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிதானமாகப் பாய்ந்தாலும் அம்பு அம்புதானே?
என்னடீ சொன்னே?
வித்யா இன்னும் நிதானமானாள். தாழ்ந்த குரலில் மெதுவாகக் கேட்டாள்.
அடிக்கப் போறீங்களா?
இரண்டாவது அம்பும் ஆழமாகப் பாய்ந்தது. அந்த அவமதிப்பில் சுலபமான அவமதிப்பில் ஆடிப் போய்விட்டார் அவர். ஆவேசம் அடங்கி வெறுப்பாக மாறியது.
சீ! என் முன்னே நிக்காதே போ… உள்ளே போயிடு…
வித்யா உள்ளே வந்துவிட்டாள். காலேஜுக்குப் போகக் கட்டிக் கொண்டிருந்த புடவையை அவிழ்த்துப் பழசைக் கட்டிக் கொண்டாள். அம்மா அவளை ஒரு புதுப் பார்வை பார்த்தாள். அதில் ஒரு மதிப்பு தெரிந்தது.
என்னம்மா பார்க்கிறே?
அம்மா ரகசியமாகக் கெஞ்சினாள். இதமாகச் சொல்லிப் பார்த்தாள்.
படிப்பைப் பாழாக்கிக்காதேடீ… அப்பா கால்லே விழுந்து, கெஞ்சிக் கேட்டாவது திரும்பப் பணத்தை வாங்கிக் கட்டிவிட்டு, ஒழுங்காகப் போடி…!
வித்யா சிரித்தாள். அந்த மாதிரிச் சிரிப்பு ஒரு நல்ல பதில். சில சமயங்களில் கேள்விக்கும் அதே சிரிப்புத்தான். அந்தச் சிரிப்பில் எத்தனை பேச்சுக்களைத் தவிர்க்க முடிகிறது. நல்ல வசதியான சிரிப்பு.
ஏய் ராஜி, ஏய் விஜி!
- கூடத்தில் அப்பாவின் கத்தல் கேட்டது.
அவளையே அதிசயமாகப் பார்த்துக்கொண்டு. ‘உள்ளுக்குள் நம்ம அக்காவுக்கா இவ்வளவு தைரியம்?’ என்று பாராட்டிக்கொண்டு அப்பா மேலே என்ன செய்வாரோ என்ற பயத்தில், பேசாமல் நின்று கொண்டிருந்த தங்கைகள் இரண்டு பேரும், இதோ வரோம்ப்பா…
என்று ஓடினார்கள்.
மெதுவாகப் போங்கோ
என்று சொல்லிவிட்டு ஜன்னல் வழியாகக் கூடத்தைப் பார்த்தாள் வித்யா.
அவர்கள் இரண்டு பேரும் அறையில் சிதறிப் பறந்து கொண்டிருந்த நோட்டுக்களை அடுக்கிச் சில்லறைகளைப் பொறுக்கிக் கொடுப்பது தெரிந்தது.
அப்பா… இந்த அடிமைத்தனம் தானே - உங்களுக்குத் திருப்தியாக இருக்கு?
வித்யா மனசுக்குள் குமைந்தாள்.
அன்றிலிருந்து காலேஜுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அவள் அப்பாவின் காலில் விழுந்து கெஞ்சவுமில்லை. காலேஜுக்குப் போகவுமில்லை.
சில சமயங்களில் திடீரென்று காலேஜ் ஞாபகம் வரும், எல்லாக் கஷ்டங்களுக்கும் மீட்சியாக இருந்தது அது ஒன்றுதான்.
வகுப்பை கட் பண்ணிவிட்டு ‘ட்ரைவ் இன்’னுக்குப் போனது. அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய போண்டாவையும் பாத்தையும் அலுக்காமல் சாப்பிட்டது, ப்ளு டைமண்டில் உட்கார்ந்து பொழுதைப் போக்கியது, இனிமேல் அப்படியெல்லாம் எங்கே போக முடியப் போகிறது?
திரும்ப எந்தத் தேவைக்கும் அப்பாவிடம் போய் நிற்கக் கூடாது என்ற பிடிவாதம் அவளிடம் ஏற்பட்டது. ஒரு புடவை, ஒரு ஜாக்கெட், ஒரு சினிமா, ஒரு ரூபாய்க் காசு…! இல்லவே இல்லை. இந்தத் தேவைகளைச் சரிக்கட்ட, தன் மனசுக்குள் இருந்த நியாயமான கர்வத்தை வளர்த்துக்கொள்ள, அப்பாவின் அகங்காரத்தை உடைக்க எதற்கும் அவர் கையை எதிர்பார்க்காமல் தன் சம்பளம் என்றிருந்து செலவு பண்ண - அவள் வேலை தேடினாள்.
அந்த 5 அடி 4 அங்குல உயரத்திற்கு - தேவையான, பார்வைக்கு இதமான வளைசலுடன் கூடிய உடம்பிற்கு, மலையாளத்து மண்ணை ஞாபகப்படுத்தக்கூடிய நிறத்திற்கு, அகலமான கண்களுக்கு, அழகான மூக்கிற்கு, வரிசையான வெள்ளைப் பற்களுக்கு சுத்தமாகப் பேசும் ஆங்கிலத்திற்கு, குரலில் தெறிக்கும் குளுமைக்கு வேலை கிடைப்பது கஷ்டமாக இல்லை.
முதல்முதலாக ஒரு டைப்பிஸ்ட் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டாள். ‘இன்டர்வ்யூ’விற்கு வரச் சொல்லிக் கார்டும் வந்தது. வித்யா அப்போது தான் மூன்று மாதங்களாக டைப்ரைட்டிங் கிளாசுக்குப் போக ஆரம்பித்திருந்தாள்.
மவுண்ட் ரோட்டிலிருந்த அந்த ஆபீசுக்குப் போனபோது அவளுக்கு முன் நாலைந்து பெண்கள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர். வித்யாவும் அட்டெண்டரிடம் தன் கார்டைக் கொடுத்து அனுப்பினாள். உடனே மேனேஜர் வரச் சொல்வதாக அவனே வந்து சொன்னான். வித்யா மேனேஜரின் அறைக்குள் நுழைந்தாள். ‘வெளியே இத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கும்போது நம்மை மட்டும் உடனே கூப்பிட்டு விட்டானே’ என்ற ஆச்சரியம்.
உள்ளே மேஜை எதிரே உட்கார்ந்திருந்த ஒரு ஹிட்லர் மீசை, அதாவது மேனேஜர் அவளைப் பார்த்துச் சிரித்தான். உட்காரச் சொன்னான். பின் அவளைப் பற்றின ஆராய்ச்சியில் இறங்கினான்.
அவன் ஒரு ஸிந்தியாகவோ, மார்வாடியாகவோ இருக்க வேண்டும்.
ஒரு கடிதம் ‘டிக்டேட்’ பண்ணினான். அவள் ‘ஷார்ட் ஹாண்ட்’ தெரியாது என்றதும், ‘நெவர் மைண்ட்’ என்று நிதானமாக, வார்த்தை வார்த்தையாகச் சொல்லிக்கொண்டு போனான். இரண்டு பாரா கடிதம். சின்னதுதான். டைப்ரைட்டிங் மெஷின் அவனுக்கு எதிர் அறையில் அதாவது அவன் அறைக் கதவு திறந்திருந்தால் டைப் அடிப்பவர்களை நன்றாகப் பார்க்கும் வசதியுடன் இருந்தது. அவன் கதவைத் திறந்துதான் வைத்துக் கொண்டிருந்தான்."
வித்யா மெஷின் எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தாள். ‘எனக்கு நேரத்தைப் பற்றிக் கவலை இல்லை. சுத்தமாக, தவறில்லாமல் அடித்துக்கொண்டு வந்தால் போதும்!’ என்று ஹிட்லர் மீசை சொன்னது நினைவுக்கு வந்தது. நிதானமாக அடிக்க ஆரம்பித்தாள்.
அடித்து முடித்ததும் மெஷினிலிருந்து காகிதத்தை உருவி, மேனேஜரிடம் கொடுத்தாள்.
இந்தச் சின்னக் கடிதத்தில் பத்து தப்பு போட்டிருக்கிறாயே?
எஸ்
என்று அழுத்தினாள், அதற்காக வருத்தப்படாத குரலில்.
யூ டைப் லைக் எ லர்னர்…!
ஐயாம் எ லர்னர்.
- பளிச்சென்று பதில்.
அவன் அதை லேசான சிரிப்புடன் ரசித்தான். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?
இருநூறுக்குக் குறையாத ஒரு தொகையை.
அவன் உதட்டைப் பிதுக்கினான். சிரிப்பு நின்றது. மற்ற அப்ளிக்கேஷன்களையெல்லாம் காட்டினான். ஒரு சாதாரண டைப்பிஸ்ட் வேலைக்கு ஒரு பி.ஏ. ஒரு பி.காம். ஒரு
எம்.எஸ்.ஸி. கூட எல்லாம் கேட்டிருப்பது குறைந்த சம்பளம் தான்.
‘வித்யாவுக்கு வருத்தமாக இருந்தது. நிறையப் படித்திருக்கிறார்கள். சம்பளம் குறைவாகக் கேட்கிறார்கள். அவன் ஏன் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?’ வித்யாவுக்குத் தெரிந்தது. அவள் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டதுண்டு. அலட்சியமாக வேலை நேரத்தைக் கேட்டாள். அவன் சொன்னான்.
காலை பத்திலிருந்து மாலை ஆறு மணிவரை.
ஆறு மணி வரைக்குமா?
ஏன்?
ஆறு என்றால் வீட்டுக்குப் போய்ச் சேர ஏழாகிவிடும்.
ஓ.கே. உனக்காக ஐந்தாக்குகிறேன். ஆனால் நீ கேட்கும் சம்பளம்தான் அதிகமாக இருக்கிறது.
- பேரம் மாதிரி பேசினான்.
வித்யாவின் அலட்சியம் அதிகமாயிற்று.
ஸாரி ஸார்! இதற்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய என் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள்.
அவன் தன் வீட்டு டெலிபோன் நம்பரை ஒரு சின்னக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தான்…
நூற்றைம்பது ரூபாய் தருகிறேன். நாளைக் காலை எட்டு மணிக்குள் எனக்கு போன் பண்ணு.
வித்யா அதை வாங்கிக் கொண்டாள்.
நான் நாளைக்குப் போன் பண்ணுகிறேன்.
இங்கே நீ நிறைய நேரம் டைப் அடிக்கலாம். உன் ஸ்பீடும் பிக்-அப் ஆகும். பின்னால் சம்பளமும் கூடும். இதையெல்லாம் உன் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லு!
ஆகட்டும்!
வெளியே வந்ததும் தன் கையில் இருந்த காகிதத்தைக் கிழித்து எறிந்தாள் வித்யா. அது அந்த ஹிட்லர் மீசை எழுதிக் கொடுத்த டெலிபோன் நம்பர்.
2
வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் ஹிட்லர் மீசை சொன்னதை ஒன்றுவிடாமல் சொன்னாள் வித்யா. ஒரே சிரிப்பு.
அப்பா இல்லாதபோது இந்த மாதிரிச் சிரிப்புச் சத்தம் கேட்பது வழக்கம்தான். வெகுநாட்களாக மூடியிருந்த கதவைத் திறந்து வைக்கிற மாதிரி, அப்பா, வீட்டுக்கே ஒரு பெரிய கதவு கோவில் கதவு. சந்தோஷம், கேலிப் பேச்சுக்கள், விளையாட்டுகள் எதையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிடுகிற கோட்டைக் கதவு.
அப்போ வேலைக்குப் போகப் போறதில்லே, இல்லையா?
- அம்மா நிம்மதியாக அந்தச் சிரிப்பு மாறாமல் கேட்டாள்.
இந்த வேலைக்குப் போகப் போறதில்லை.
அந்த ‘இன்டர்வ்யூ’ இந்தச் சிரிப்போடு நின்றுவிட்டது. அடுத்ததாக ஒரு பெரிய கம்பெனியில் ‘ரிசப்ஷனிஸ்ட்’ வேலைக்கு மனுப் போட்டாள். அந்த மேனேஜர் ஆங்கிலோ இந்தியன். முப்பத்திரண்டு வயசு இருக்கலாம். ஆறடி உயரத்தில், பார்க்க அழகாக இருந்தான். முகத்தில் ‘துருதுரு’வென்ற புத்திசாலித்தனம் தெரிந்தது. அது பேச்சிலும் வெளிப்பட்டது. அழகாகச் சிரித்தான். நேராக மனதுக்குள் பாயும்படி பார்த்தான். வேலையைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசினான். வித்யாவுக்கு அவனைப் பிடித்திருந்தது. அதனாலேயே இந்த வேலை கிடைத்தாலும் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள். ஆடுகிற நாற்காலியின் மேல் நிற்கிற மாதிரி இது. ஆடிக்கொண்டே இருக்கும். என்னதான் சமாளித்தாலும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கீழே தட்டிவிடும் என்று பயந்தாள்.
அவள் கிளம்பும்போது அறைக்கதவுவரை கூட வந்து ‘ஸ்மார்ட் கேர்ள்’ என்று முதுகில் தட்டிக் கொடுத்தான்.
வீட்டுக்கு வந்த பின்னாலும் வித்யாவின் முதுகு குறுகுறுத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் வரை அவன் சிரிப்பும், பேச்சும், உயரமும், பார்வையும் மனசைவிட்டு நகர மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தன.
அப்படியே நான்கு நாட்கள் போன பின்னால் அவனிடமிருந்து ‘அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர்’ வந்தது. அதில்கூட அவன் சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கிற மாதிரி தோன்றியது. அவன் ஒரு நல்ல ரசிகனாக இருக்க வேண்டும். அவளுக்குச் சரியாக இலக்கியம் பேசிய எந்த ஆணையும் அவள் இதுவரை சந்தித்திருக்கவில்லை. இவன் முதல் மனிதன். திருமணமானவன்! ஆங்கிலோ இந்தியன். அந்த உயரம், சிரிப்பு, பேச்சு… பேச்சு!
வித்யா அந்த ‘அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை’ மூலையில் தூக்கிப் போட்டாள்… அவன் நினைவையும் போட முயன்றாள். அதற்குப் பின்னாலும், இதே மாதிரி இரண்டு இன்டர்வ்யூக்கள். வீடு தேடி வந்த ஆர்டர்களைக் கிழித்துப் போட்டாள்.
கடைசியாகத்தான் இந்த பாரீஸ் கார்னர் ஆபீஸ் ‘இன்டர்வ்யூ.’
பார்த்தவுடனேயே அவளுக்கு அந்த சூழ்நிலை பிடித்திருந்தது. அங்கே வேலை செய்த ஆண்கள், ஆபீஸ், பைல், வீடு, பெண்டாட்டி என்ற அதே சூழலைத் தவிர, வேறு எதிலும் விருப்பமற்றவர்களாகத் தோன்றினார்கள். பெண்கள் நிறையப் பேர் வேலை செய்தார்கள். அவர்களும் சாதாரணமானவர்களாக இருந்தார்கள்.
அப்போதே ‘டைப்’ அடித்துக் கையில் கொடுக்கப்பட்ட ஆர்டரை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது அம்மா வியந்தாள். இவ்வளவு சீக்கிரம் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்துவிடுவாள் என்று அம்மா நினைக்கவில்லை.
நீ இப்போ வேலைக்குப் போய் என்ன ஆகணும்?
என்று கேட்டாள். ‘இது ஒரு பெரிய ரகளையாகப் போறதுடீ வித்யா. உன்னோடயும், அந்தத் துர்வாசரிடமும் அகப்பட்டுக்கொண்டு நான் தான் தவிக்க வேண்டியிருக்கு’ என்று பரிதாபத்துடன் பார்த்தாள்.
துர்வாசர் கேட்டால் எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடு. என்னைக் கேக்கட்டும். நான் பதில் சொல்லிக்கறேன்.
விஷயம் தெரிந்ததும் வேகமான, ஒரு பெரிய அலையாக அடித்தது அப்பாவிடமிருந்து. அதில் வித்யா அடித்துக்கொண்டு போய்விடவில்லை. இன்னும் நன்றாக அழுத்தமாகக் கால் ஊன்றி நிற்கக் கற்றுக் கொண்டாள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துத் தன் மனத்தில் இருந்ததை எழுதி, அவர் மேஜைமேல் வைத்துவிட்டு நின்றாள். அவரோட நேரில் பேசுவதைவிட, இப்படி எழுத்தில் பேசுவது சுலபம் என்று நினைத்தாள்.
‘அப்பா…
வீட்டிலேயே மூலையில் அடைந்து கிடக்க என்னால் முடியாது. பொழுதுபோவதற்காகத் தெருவிலுள்ள ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி அரட்டை அடிக்க முடியாது. சினிமாத் தியேட்டர்களை முற்றுகையிடப் பிடிக்காது. பத்திரிகைகளைப் படித்துக்கொண்டு மத்தியான நேரத்தில் தூங்கி நேரத்தை ஓட்டுவதென்பது என்னைப் பொறுத்தவரை நடக்காத காரியம். விவித்பாரதிக்காக ரேடியோவிற்கு எதிரில் தவம் கிடக்க முடியாது. இதையெல்லாம் தவிர்க்க, என் தேவைகளை நானே கவனித்துக்கொள்ள வேலைக்குப் போகிறேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்… இது உங்கள் வீடு. வீட்டை விட்டுப் போ… என்று சொல்லி விடுங்கள். நான் போய் விடுகிறேன்…’
படித்து முடித்த அப்பா, அம்மாவிடம் உறுமினார்.
கேட்டியா, உன் பெண் பேசறதை? அவளை நீ தான் இப்படிக் கெடுத்திட்டே.. வேலைக்குப் போக ஆரம்பிச்சு முழுசாக ஒரு நாளாகலை. அதற்குள் வீட்டை விட்டுப் போறாளாமே…! எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி எழுதிக் கொடுத்திருப்பாள்? சீ! என் பொண்ணாடி நீ? இனிமேல் நீ எனக்குப் பொண்ணுமில்லை. நான் உனக்கு அப்பனுமில்லை. உன்னைப் பத்தின எதுவும் என்னைப் பாதிக்காது. உன் நல்லதில் எனக்கு அக்கறையும் இல்லை. கெட்டதில் கவலையுமில்லை. உன் மூஞ்சியிலே முழிக்கவே பிடிக்கலை. என் கண் முன்னாலே வராதே. போ.
அதே மாதிரி அவர் இருந்தும் காட்டினார். வித்யா அதற்காக வருத்தப்படவில்லை. ஆனால் வித்யாவைச் சாக்காகத் திட்டுவதை, அவளைப் பார்த்தால் முகம் கடு கடுப்பதை ‘என் பொண் எனக்கு அடங்கலை’ என்று உறவுக்காரர்களிடம் சொல்வதை தேவையானபோது ஆயிரம் ஐந்நூறு என்று தாராளமாகத் திருப்பிக் கிடைக்காத பணமாகக் கொடுத்து "சுப்பிரமணியன் ரொம்ப