Ragasiya Theevu
()
About this ebook
ரகசிய தீவை ஆட்சி செய்யும் மதிமாறன் அக்கிரமக்காரன். அவன் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்பவன் பார்த்திபன். மதிமாறனுக்கு உதவியாக ஆயுதங்களை கப்பலில் கொண்டு வரும் நீலன் அவற்றை தன் உதவிமாலுமியான நஞ்சுண்டனிடம் பறி கொடுத்து விடுகிறான். ஆயுத கப்பலை கடத்தி செல்லும் நஞ்சுண்டன் அதை புரட்சி குழுவிடம் விற்க முயல்கிறான். தன் கப்பலை இழந்து தனியனாக நிற்கும் நீலன் தன் நண்பன் ஆதித்தனை தற்செயலாக சந்தித்து உதவி கேட்கிறான். இருவரும் இணைந்து நீலனின் ஆயுதகப்பலை மீட்டார்களா? நஞ்சுண்டனை தடுத்து நிறுத்தினார்களா என்பதே இந்த நாவலின் சுருக்கம்.
Read more from Erode Karthik
Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsAaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Idhayathai Thirudiyavan Rating: 0 out of 5 stars0 ratingsNaangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsAvan Peyar Aathithan Rating: 0 out of 5 stars0 ratingsKolvathellam Unmai Rating: 0 out of 5 stars0 ratingsMannil Maraiyum Minnal Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Athithan Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Vengiyin Mohini Rating: 0 out of 5 stars0 ratingsOonjal Rating: 0 out of 5 stars0 ratingsEllaiyil Oru Ethan Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Aarambam Rating: 0 out of 5 stars0 ratingsThedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsMarma Yogi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ragasiya Theevu
Related ebooks
Vedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsAmirtha Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsNee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Meenazhagi Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Rating: 0 out of 5 stars0 ratingsSuvadikal Sonnathillai Rating: 0 out of 5 stars0 ratingsPakkathil Paruva Nila Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Ondre Pothume Rating: 0 out of 5 stars0 ratingsMarma Yogi Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsArasar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Imaiyaney... Ithayaney... Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Urasum Karaiyoram...! Rating: 0 out of 5 stars0 ratingsஉன் வானம் நான்… Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsPallava Sundari Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathiyanidu Rating: 0 out of 5 stars0 ratingsNatpirkku Veettrirukkai Yathenin Rating: 0 out of 5 stars0 ratingsVanthana Avan Vanthana? Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNee Pookkalin Theevu Rating: 0 out of 5 stars0 ratingsNambuvatharkkalla Rating: 4 out of 5 stars4/5Sirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsRamar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsNere Vaa Nere Po Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsநான் ராஜா நீ என் ரோஜா! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ragasiya Theevu
0 ratings0 reviews
Book preview
Ragasiya Theevu - Erode Karthik
https://www.pustaka.co.in
ரகசிய தீவு
Ragasiya Theevu
Author:
ஈரோடு கார்த்திக்
Erode Karthik
For more books
https://www.pustaka.co.in/home/author/erode-karthik
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தாயம் ஆட்டம் ஆரம்பம்
2. ஓடுபவனுக்கு பல வழி!
3. முக்கூடலின் சங்கமம்
4. பணயத்தில் ஒரு பங்காளி
5. விசித்திர வழிகாட்டி
6. வஞ்சகர் உலகம்
7. தனித் தீவில் நரன்
8. வீழ்ச்சியும் மீட்சியும் ஒருவனால்
9. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் வித்தை
10. தர்க்க சாஸ்திரி
11. வாய்த் துடுக்கால் ஏற்பட்ட விபரீதம்
12. சிகப்பின் வருகை
13. பன்றி வைத்தியம்
14. அனுகூல சத்ரு
15. வில்லவன் பெருமூச்சு விட்டான்
16. ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள்
17. இரண்டில் ஒன்று
18. தப்பிக்கும் படலம்
19. காற்றில் கரைந்தவன்
20. நர மாமிசபட்சிணி
21. புதையல் காத்த பூதம்
22. சிறையில் ஒரு ஒப்பந்தம்
23. மாண்டவர் பூமி
24. இரு வல்லவர்கள்
25. மிரட்டல் மொழியாள்
26. காட்டிற்குள் கல்யாண விருந்து
27. இடுகாட்டில் எரி அம்பு
28. இறந்தவன் கடிதம்
29. ஆன்மீகத்தின் புதையல்
30. தேடி வந்த அதிர்ஷ்டம்
31. இறந்தவன் வருகை
32. பேசாதவன் பேசுகிறான்
33. தர்மத்தின் விளக்கம்
34. பேயின் அதிர்ஷ்டம்
35. இரண்டு உளவாளிகள்
36. கரிகாலனின் கதை
37. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்
38. இரும்பாய் வந்த இறைவன்
39. ரகசிய உளவாளி
40. புதிதாக ஒரு அவதாரம்
41. புதிதாக ஒரு கூட்டணி
42. பரகாயப் பிரவேசம்
43. வஞ்சக வலை
44. எதிர்பாராதது
45. முடிவல்ல தொடக்கம்
46. மூன்று சிக்கல்கள்
47. ஆபத்பாந்தவன்
48. முத்திரை மோதிரம்
49. இரு முகமூடிகள்
50. பலமான எதிரி
51. எல்லாவற்றையும் இழந்தவன்
52. தீயவனுக்கு திகைப் பூண்டு
53. இரண்டு எத்தர்கள்
54. காத்திருக்கும் எமன்
55. தூண்டிலில் மண்புழு
56. ஆள் மாறாட்டம்
57. சிலந்தி வலையில் சில்வண்டு
58. சாத்தானின் இருப்பிடம்
59. எதிரிக்கு எதிரி
60. ஒன்றை மூன்றாக்கும் மந்திரவாதி
61. ரகசியத்தின் ரகசியம்
62. புரியாத புதிர்
63. கையருகே நெய்
64. வட்டம்
65. புதையல் காத்த பூதம்
66. நரகத்திலிருந்து விடுதலை
67. அடுத்தடுத்த அச்சாணியம்
68. சிலந்தி வலை
69. நீலனுக்கு மாற்று
70. எத்தனின் மரணம்
71. எதிரிக்கு எதிரி
72. சகுனியும், சாணக்கியனும்
73. தனி தீவில் சதிகாரன்
74. உளவாளிகளின் படை
75. புதிதாக ஒரு சிக்கல்
76. தூதன்
77. ஆபத்தோடு பயணிப்பவன்
78. இரண்டு கப்பல்கள்
79. துருப்பு சீட்டு
80. இரண்டாவது நரன்
81. அரச சாசனம்
82. வழி இல்லாத வழி
83. சூழ்ச்சி வலை
84. மகளும், மருமகனும்
85. முன் எச்சரிக்கை
86. உண்மை வெளிப்படும் தருணம்
1. தாயம் ஆட்டம் ஆரம்பம்
என்ன இப்பாலஸ்! இன்னமும் தாயம் போடாமல் தவித்து கொண்டிருக்கிறாயே? ஆட்டத்தை துவங்க ஆசை இல்லையா?
என்றவனை நிமிர்ந்து பார்த்தான் யவனனான இப்பாலஸ். தாயம் விழாத ஏமாற்றம் அவனது நீல நிற விழிகளில் எதிரொளித்தது. அவனுக்கு எதிரே விரிக்கப்பட்டிருந்த தோலில் வரையப்பட்ட தாய கட்டங்களில் மற்றவர்கள் ஆட்டத்தை துவங்கி விட்டதற்கு அடையாளமாக காய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்தன.
இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வென்று விட்ட இப்பாலஸ் மூன்றாவது முறையாகவும் ஆட்டத்தை வென்று விட நினைத்திருந்தான். ஆனால் அவனது இஷ்ட தெய்வமான அப்போல்லோவின் அருள் கிடைக்காததால் அவனுக்கு ஆட்டத்தை துவக்கும் ஆரம்ப புள்ளியான தாயம் இன்னும் விழுந்தபாடில்லை.
ஏனோ என்னுடைய கடவுள் என் மீது கருணை காட்ட மறுக்கிறார். நான் தாயம் போட்டு ஆட்டத்தை துவக்கும் முன்பாக நீங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டு ஆட்டத்தை முடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே?
என்றான் இப்பாலஸ்.
விருத்தங்களை எண்ணி காய்களை நகர்த்தியவன் மனதை தளரவிடாதே இப்பாலஸ்! இதோ இப்போது காய்களை உருட்ட வேண்டியது உன்னுடைய முறை. உன் இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டு காயை உருட்டு
என்றான் மற்றொருவன்.
இப்பாலஸ் அப்போல்லோவை மனதில் நினைத்து கொண்டு காய்களை உருட்டினான். கடகடவென்று உருண்டகாய்கள் நிலை பெற்ற போது அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் வேண்டியது வீண் போகவில்லை. அவனது வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த்திருந்தார். அவன் இவ்வளவு நேரம் எதை வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தானோ அந்த காயம் என்ற ஒற்றை படை எண் விழுந்திருந்தது.
சபாஷ். இனி ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது. இப்பாலஸ் களத்தில் இறங்கி விட்டான்
என்றான் மற்றொருவன்.
இப்பாலஸ் தாயத்திற்கு பிறகு விழுந்த விருத்தத்திற்கு காயை நகர்த்தியபோது தான் அந்த குதிரை வெகு வேகமாக வந்து நின்றது. அதன் வாயில் தள்ளி கொண்டிருந்த நுரையும் குளம்பில் ஒட்டியிருந்த செம்மணலும் அதன் வேகத்தை சொல்லாமல் சொல்லின!
அந்த குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன் இப்பாலஸ்! உன்னை எங்கேயெல்லாம் தேடுவது? எஜமானர் உடனே உன்னை பார்க்க வேண்டுமென்கிறார். உடனே கிளம்பி வா
என்றான்.
நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்
என்ற இப்பாலஸ் தாயக் கட்டம் வரையப்பட்ட தோல் சுருளை சுற்றி எடுத்து குதிரை சேணத்தில் வைத்தான். காய்களை சிறு துணியில் முடிந்து இடுப்பில் சொருகியவன் ஓய்வு நேரம் முடிந்துவிட்டது நண்பர்களே! நமக்காக புது வேலை எதையாவது எஜமானர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். வாருங்கள் போகலாம்
என்றான்.
ஆட்டம் பாதியில் நின்று விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
அதற்காக சந்தோஷப்படு. ஆட்டத்தை இப்பாலஸ் துவங்கியிருந்தால் அவன்தான் ஜெயித்திருப்பான். வழக்கம் போல் நாம்தான் தோற்றிருப்போம்.
அவர்கள் அங்கிருந்து குதிரையில் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புவதை இரண்டு கண்கள் கவனித்து கொண்டிருந்தன.
இப்பாலஸ்! எங்கே உன் ப்ரிய நண்பனை காணவில்லை?
என்றான் சகாக்களில் ஒருவன்.
நான் அழைக்கும் வரை அவன் வரமாட்டான்
என்ற இப்பாலஸ் விசித்திரமான சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பினான்.
அதுவரை மரம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ராட்சஸ கழுகு சீழ்க்கை ஒலி கேட்ட மறுகணம் தன் பெரிய இறக்கைகளை விரித்து கொண்டு விண்ணில் ஏற துவங்கியது.
இப்பாலஸ் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.
கிரேக்க நாட்டை சேர்ந்த இப்பாலஸ் மோகினி தீவிற்கு வந்து சேர்ந்து ஐந்து வருடங்களாகி விட்டன. வாள் வீச்சிலும் சவுக்கை வீசுவதிலும் தீவில் அவனுக்கு நிகராக யாருமில்லை. செடிக்கு வலிக்காமல் அதன் பூவை தன் சவுக்கால் பறிப்பது அவனது பொழுதுபோக்கு. அந்த தீவின் தலைவன் மகேந்திரன் இவனை தன்னுடைய தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்த பின்பு தீவில் குற்றங்கள் குறைய தொடங்கி விட்டன. சிவந்த தலை முடியும், நீல நிற கண்களையும் கொண்ட அழகான தோற்றமுடைய அந்த யவனன் அங்கிருந்த தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். தமிழ் பேச தெரிந்த அந்த யவனனுக்கு தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாது. அந்த பலவீனம்தான் ஒரு விபரீதத்திற்கு அடி போட்டு வைத்திருந்தது.
அவனது கண் பார்வையில் படாமல் மோகினி தீவில் இருந்து எந்த கப்பலும் வெளியேறி விட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த இப்பாலஸ்சின் ஆணவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அடி விழுந்திருந்தது. காரியம் கை மிஞ்சி போய் விட்டதால் அவனால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த சம்பவத்தால் மகேந்திரனுக்கு இப்பாலஸ் மீது சற்று மன வருத்தம்தான்.
மகேந்திரனின் மாளிகைக்கு முன்னால் குதிரையை நிறுத்தி இறங்கிய இப்பாலஸ் தன் சகாக்களை அங்கேயே காத்திருக்கும்படி சைகை செய்து விட்டு மாளிகையினுள் நுழைந்தான்.
அவனது வரவுக்காக காத்திருந்த மகேந்திரன் இப்பாலஸ்! உள்ளே வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.
எப்போதும் அமைதியாக இருக்கும் மகேந்திரன் அன்று ஏனோ பரபரப்பாக இருந்தது யவனனுக்கு வியப்பை தந்தது. மகேந்திரனின் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டு கொண்டிருந்த யவனன் அதை இப்போது கைவிட்டான்.
மகேந்திரன் இருந்த அறைக்குள் யவனன் நுழைந்ததும் கதவை தாழிட்டவன் அவன் திரும்ப வந்து விட்டான்
என்றான் பரபரப்புடன்.
யவனனுக்கு அவன் யாரைப் பற்றி சொல்கிறான் என்று சற்றும் புரியவில்லை. தன் தடுமாற்றத்தை வெளியே காட்டி கொள்ளாதவன் யார்?
என்றான் ஒற்றை சொல்லாய்.
உன்னை ஏமாற்றி நம் சரக்குகளை தீவில் இறக்காமல் தன் கப்பலோடு தலைமறைவாகி போன நீலன் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தீவிற்கு வந்து விட்டான்.
யவனனின் முகம் கன்றி சிவந்தது. தன் எஜமானனிடம் தனக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அந்த குடிகார எத்தன் திரும்பவும் தீவிற்குள் தலை காட்டி விட்டதை தன் ஆளுகைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான்.
இந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்?
நேற்று நள்ளிரவு நம் ஒற்று ஆட்களில் ஒருவன் அவனை துறைமுகத்தில் அடையாளம் கண்டிருக்கிறான். அவன் நம் ஆளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எங்கோ தலைமறைவாகி விட்டான். அவன் இந்த தீவை தவிர வேறு எங்கும் போயிருக்க முடியாது.
அவனது முத்தழகி கப்பல்?
அதை காணவில்லை. பயல் கட்டுமரம் ஒன்றில் பயணமாகி இங்கே வந்திருக்கிறான்.
அவன் இந்த தீவில் எங்கே பதுங்கி கிடந்தாலும் அவனை கண்டுபிடித்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்.
அவன் தன் கப்பலை ஒரு நிமிடம் கூட பிரியமாட்டான். தன்னுடைய முதல் மனைவி என்றே அதை வர்ணிப்பான். இப்போது மனைவியில்லாமல் தனியாக வந்திருக்கிறான். அதுதான் எனக்கு குழப்பமாக இருக்கிறது.
ஆசாமியை நேரில் கொண்டு வருகிறேன். உங்கள் குழப்பத்தை விசாரித்து தீர்த்து கொள்ளலாம். அவன் முதலில் எங்கே இருப்பான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
கவனம். உன் முரட்டுத்தனத்தை அளவோடு பிரயோகப்படுத்து. நீலன் எனக்கு உயிரோடு வேண்டும்.
யவனன் தலையசைத்து விட்டு தன் ஆட்களோடு கிளம்பினான். குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்திருந்த கழுகை பிடித்து கூண்டில் அடைத்தவன் காத்திரு ஹேர்குலஸ்! சீக்கிரமாக திரும்பி வருகிறேன்
என்றான்.
நீலன் தன் கப்பல் முத்தழகியை பிரிந்து இருப்பதில்லை. அதேபோல் மதுவைப் பிரிந்தும் அவனால் இருக்க முடியாது என்று யவனனுக்கு தெரியும். அவன் அடிக்கடி தென்படும் மதுபான விடுதியை நோக்கி குதிரைகள் விரைந்தன. இடைப்பட்ட நேரத்தில் யவனன் தனக் கிடப்பட்ட பணியை தன் சகாக்களிடம் எடுத்து கூறினான். அவர்கள் நீலனை பிடிக்க தயாரானார்கள்.
குதிரைகளை மதுபான விடுதிக்கு வெளியே நிறுத்திய இப்பாலஸ் தன் சகாக்களை வெளியே நிறுத்திவிட்டு அவன் மட்டும் உள்ளே நுழைந்தான்.
மதுபான விடுதி உரிமையாளனின் முகம் இவனை பார்த்ததும் மாறியது.
வாருங்கள் இப்பாலஸ்! சுவையான யவன தேசத்து மது நேற்றுதான் கப்பலில் வந்தது. குடித்து பாருங்கள். சுவையில் சொக்கிப் போவீர்கள்.
நான் மதுவருந்த வரவில்லை நண்பா. உன் வாடிக்கையாளர் ஒருவரின் வருகையை பற்றி அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இங்கே நிறைய பேர் என் வாடிக்கையாளர்தான். நீங்கள் உட்பட. நீங்கள் யாரை கேட்கிறீர்கள்?
நீலன். முத்தழகியின் தாலிகட்டாத கணவன்.
ஓ! அந்த குடிகார கிழவனா? அவன் இந்த தீவை விட்டு போய் இரண்டு நாட்களாகி விட்டனவே? திரும்ப வந்து விட்டானா என்ன?
யவனன் அவனை ஒரு முறை உற்று பார்த்தான்.
ஏன் என்னை அப்படி பார்க்கிறீர்கள்?
நீ உண்மையை சொல்கிறாயா? இல்லை பொய் சொல்கிறாயா என்று யோசிக்கிறேன்.
நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.
அதையும் சோதித்து பார்த்து விடுவோம். எங்கள் நாட்டில் கத்தி சோதிடம் என்ற ஒரு சோதிடம் இருக்கிறது. அதை பரீட்சித்து பார்த்தால் நீ சொல்வது உண்மையா இல்லை பொய்யா என்று தெரிந்துவிடும்
என்றான் இப்பாலஸ் விசம புன்னகையுடன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முதலில் கையை நீட்டு அப்பனே! அப்போது தானே சோதிடம் பார்க்க முடியும்
என்ற யவனன் மெல்லிய குரலில் சீழ்க்கையடித்தான். உள்ளே நுழைந்த அவனது ஆட்களில் இருவர் மதுபான விடுதி உரிமையாளனை பின்புறமாக வளைத்து பிடித்தனர். இன்னொருவன் அவனது வலது கையை மேஜையில் வைத்து மணிக்கட்டோடு அழுத்தி பிடித்து கொண்டான்.
யவனன் தன் இடையிலிருந்த குறு வாளை எடுத்தான். விரிக்கப்பட்ட விரல்களின் இடைவெளிகளில் மெதுவாக கத்தியால் வரிசையாக குத்த தொடங்கினான். படிப்படியாக வேகத்தை அதிகரிக்க தொடங்கியவன் ஒரு கட்டத்தில் இடைவெளிகளில் கத்தியை பாய்ச்சுவதை நிறுத்தினான்.
இனிதான் உண்மையான சோதிட பலன் பார்க்கும் முறை, நான் கண்களை திறந்து கொண்டு செய்ததை இப்போது கண்களை மூடிக் கொண்டு செய்ய போகிறேன். அதுவும் கூடுதல் வேகத்துடன். உன் கையில் காயம் ஏற்பட்டாலோ, விரல் துண்டானாலோ நீ பொய் சொல்கிறாய் என்று அர்த்தம். உன் கைக்கு எந்த சேதாரமும் ஏற்படா விட்டால் நீ உண்மை பேசுவதாக அர்த்தம். ஆரம்பிக்கலாமா?
என்றான் இப்பாலஸ் விகார சிரிப்புடன்.
இல்லை. வேண்டாம். நான் உண்மையை சொல்லிவிடுகிறேன். அவன் மேல் மாடியில்தான் இருக்கிறான்.
யவன சோதிடம் உடனடியாக வேலை செய்கிறது. சக்தி மிக்க சோதிடம்தான்
என்ற இப்பாலஸ் மாடிப்படிகளை நோக்கி நடந்தான்...
2. ஓடுபவனுக்கு பல வழி!
நீலன் தங்கியிருந்த மேல் மாடிக்கான படிகளில் ஏறத் துவங்கிய இப்பாலஸ் திடிரென்று ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி மதுக்கடை உரிமையாளனை பார்த்து தன் நீண்ட நாள் வாடிக்கையாளரை காப்பாற்ற நம்முடைய நண்பர் ஏதாவது முயற்சி செய்ய நினைக்கலாம். அப்படி அவர் ஏதாவது முயற்சி செய்தால்?
என்ற யவனன் தன் வலது கையை கிடைமட்டமாக திரும்பி கழுத்தில் குறுக்காக வைத்து காட்டினான்.
அவனது சமிக்ஞையை புரிந்து கொண்ட அவனது சகாக்களில் ஒருவன் உருவிய வாளுடன் மதுக்கடை உரிமையாளனை நெருங்கி அவனது கழுத்தில் வாளை வைத்தான்.
நல்லது
என்று புன்னகைத்த யவனன் மாடிப்படிகளில் மீதமுள்ள ஆட்களுடன் ஏற துவங்கினான்.
உன் வாடிக்கையாளனை காப்பாற்ற ஏதாவது செய்வாயா என்ன?
என்றான் கழுத்தில் கத்தியை வைத்தவன்.
நான் சொல்வதை யாருமே நம்ப மாட்டார்கள். இந்த விடுதிக்குள் காலடி வைத்ததிலிருந்து இதுவரை நீலன் ஒரு மிடறு மதுவை கூட விழுங்கவில்லை. இது இறந்து போன என் மாமியார் மீது சத்தியம்.
உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் நீ சொல்வதுதான். பொய் சொல்லாதே! வாயை மூடு
என்றான் கத்தி காரன்.
அதே நேரம் படிகளில் ஏறிக் கொண்டிருந்த யவனனிடம்,
அந்த பயலைப் பிடிக்க நாம் ஆயுதங்களை தயாராக வைத்து கொள்ளலாமா?
என்றான் சகாக்களில் ஒருவன்.
அந்த கிழவனை பிடிக்க ஆயுதமா? அவன் எப்போதும் முழு போதையில் எங்காவது விழுந்து கிடப்பான். அவனை தூக்கி நிறுத்த ஆட்கள்தான் தேவை. ஆயுதம் தேவையில்லை
என்று புன்னகைத்தான் யவனன்.
சற்று நேரத்திற்கு முன்பு கீழே நடந்த உரையாடலை கேட்டிருந்தால் இப்பாலஸ் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க மாட்டான். எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடுபவன் தோல்வியை தழுவுவதுதான் உலக நியதி.
மாடிப்படிகள் முடிந்து இரண்டு அறைகள் திறந்து காணப்பட்டன. ஒரு அறையில் மதுபான கூடத்தில் ஏற்படும் அடிதடிகளால் உடைந்து போகும் நாற்காலி மேசைகள் கன்னாபின்னாவென்று குவிந்து கிடந்தன.
அடுத்த அறையில்தான் அவன் இருக்க வேண்டும்
என்று கண்களால் தன் சகாக்களுக்கு கட்டளையிட்ட யவனன் சத்தம் எழுப்பாமல் நடந்து அந்த அறைக்குள் நுழைந்தான். அவனை பின்தொடர்ந்து உள்ளே நுழைந்த அவனது சகாக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையின் சுவரை ஒட்டி ஒரு மரகட்டில் இருந்தது. அதன் விரிப்பு தரை வரை தொங்கி கொண்டிருந்தது. மற்றொரு மூலையில் ஒரு மேசையும் தண்ணீர் குடம் ஒன்றும் இருந்தது.
அங்கே பார்
என்றான் ஆட்களில் ஒருவன்.
அறையின் மூலையில் இருந்த சன்னலின் கம்பி ஒன்று வளைக்கப்பட்டிருந்தது. போர்வை ஒன்று கயிறாக திரிக்கப்பட்டு சன்னலிலிருந்து கட்டப்பட்டு தரையை நோக்கி தொங்கி கொண்டிருந்தது.
இப்பாலஸின் மூளை சிந்திக்க மறந்தது. அவன் நாம் வருவதை இந்த சன்னல் வழியாக பார்த்து விட்டு தப்பித்து சென்று விட்டான். அவன் வெகுதூரம் தப்பித்து சென்றிருக்க முடியாது. உடனடியாக அவனை தேடிப் பிடியுங்கள்.
அவனது உத்தரவை கேட்டவர்கள் தடதடவென்று படிகளில் இறங்கி விடுதியை விட்டு வெளியேறி நாற்புறமும் நீலனை தேட ஆரம்பித்தனர்.
அறையை விட்டு வெளியே வந்த இப்பாலஸ் ஏதோ ஒரு விசயம் தவறாக இருப்பதை உணர்ந்தான். ஆனால் அது என்னவென்று அவனால் உணர முடியவில்லை. வெளியேயிருந்து சன்னல் கம்பியை பார்த்தவனின் மூளை சட்டென்று விழித்து கொண்டது.
சன்னலின் ஒரே ஒரு கம்பியை வளைத்து வைத்து விட்டு அந்த இடைவெளியில் தன் பருத்த உடலை வைத்து கொண்டு நீலன் எப்படி வெளியேறியிருக்க முடியும்? இந்த கேள்வி அவனது மனதில் எழுந்ததுமே யவனன் உஷாரானான். அப்படியானால் நீலன் தப்பி சென்றதாக தன்னை நம்ப வைத்து விட்டு அறைக்குள்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் இடையிலிருந்த வாளை உருவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் பிரவேசித்தான்.
அவன் கட்டிலுக்கு கீழே தொங்கிய படுக்கை விரிப்பை வாளால் அகற்றிய போது கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்த நீலன் துரிதமாக செயல்பட்டான். கட்டிலை ஒரு முனையை பிடித்து அலேக்காக தூக்கியவன் அதை இப்பாலசின் மீது அப்படியே கவிழ்த்தினான். எதிர்பாராத இந்த தாக்குதலால் யவனன் நிலை குலைந்தான். கட்டிலின் மீது ஏறி மிதித்த நீலன் அறையை விட்டு வெளியேறி படிகளில் இறங்கி ஓடினான்.
அவன் மதுபான கூடத்திற்குள் நுழைந்த போதுதான் கடை உரிமையாளனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி ஒருவன் நிற்பதை பார்த்தான்.
இப்பாலசின் அலறலை கேட்ட கத்தி ஆசாமி உரிமையாளனை விட்டு விட்டு நீலனை தடுத்து நிறுத்த ஓடி வந்தான். வெளியேறும் வெறியில் ஓடி வந்து கொண்டிருந்த நீலன் மேசை மீதிருந்த ஒரு மதுபான புட்டியை கையில் எடுத்து கொண்டான்.
அதை குறி பார்த்து அவன் மீது எறியலாம் என்று நினைத்த போதுதான் அவனுக்கு தன்னுடைய பலவீனம் நினைவுக்கு வந்தது.
அதிகமான வாழ்நாளை கடலிலேயே கழித்து கொண்டிருந்ததால் நீலனின் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணாடி பாளமாக தகதகக்கும் கடலின் மேற்பாகம் சூரிய வெளிச்சத்தை அதிகமாக எதிரொளிப்பு செய்யும். அந்த வெளிச்சத்தை அதிகமாக பார்த்து பார்த்து நீலனுக்கு தூரப் பார்வை வந்து விட்டிருந்தது. அவனுக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் நிழலாக தெரியுமே தவிர தெளிவாக தெரியாது. ஆனால் இந்த குறைபாட்டை அவன் யாரிடமும் சொன்னதில்லை.
இப்போது கையிலிருக்கும் ஒரே ஒரு மது புட்டியை அவனை நோக்கி எறிந்து அது அவன் மீது படாமல் விலகி சென்று விட்டால் தன் கதி அதோ கதிதான் என்று நினைத்தவன் ஓடி கொண்டே அடுத்தடுத்த மேசைகளில் இருந்த மதுப் புட்டிகளையும் தன் இரு கைகளால் சேகரித்து கொண்டான்.
இப்போது அவன் கையில் ஐந்து மதுப் புட்டிகள் இருந்தன. தன்னை நோக்கி மங்கலாக ஓடி வருபவனை பார்த்து குத்துமதிப்பாக ஐந்து புட்டிகளையும் ஒரே நேரத்தில் வீசினான் நீலன்.
ஐந்து புட்டிகளில் இரண்டாவது அவனை தாக்கி வீழ்த்தி விடும் என்பது நீலனின் கணக்கு. அவனது யுக்தி பலித்து விட்டது. இரண்டு புட்டிகள் ஒரே நேரத்தில் உடலின் வெவ்வேறு இடங்களில் தாக்கியதில் அலறிக் கொண்டு வீழ்ந்தான் அவன்.
இனி தடுக்க யாரும் இல்லை என்ற நிலையில் தன் பருத்த வயிறை தூக்கி கொண்டு ஓடினான் நீலன்.
நடுத்தெருவில் தலை தெறிக்க ஓடும் தன்னை மற்றவர்கள் சந்தேகிக்க கூடும் என்பதால் சிறிது நேரத்திலேயே மென் நடைக்கு மாறினான் நீலன்.
யவனன் படிகளில் இறங்கி கூடத்தில் வீழ்ந்து கிடந்தவனை எழுப்பிக் கொண்டு நீலனை தேட ஆரம்பித்தான்.
நீலன் மேற்கே மறைய துவங்கியிருந்த சூரியனை பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுக்கு போக்கு காட்டி தப்பித்து விட்டால் பிறகு இருள்தான். எப்படியாவது தப்பித்து விடலாம். அவன் உடனடியாக துறைமுகத்திற்கு போக விரும்பினான். ஓடுபவனுக்கு பல வழி! துரத்துபவனுக்கு பல வழி என்ற தமிழ் பழமொழிக்கு அர்த்தம் தெரிந்து கொண்டான் யவனன் அன்று.
ஒன்றிரண்டு முறை அவன் யவனனின் ஆட்களின் கண்களில் பட்டு துரத்தப்பட்டு கொண்டிருந்தான். ஆள் அரவமற்ற ஒரு நாற்சந்திக்கு வந்து சேர்ந்த நீலன் அங்கே பராக்கு பார்த்தபடி நின்று கொண்டிருந்தவனின் முதுகில் தட்டி ஐயா! எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். துறைமுகத்திற்கு போகும் வழி எதுவென்று கூற முடியுமா?
என்றான்.
நானே அங்கு அழைத்து போகிறேன்
என்றபடி திரும்பினான் இப்பாலஸ்.
அவன் முகத்தை அருகில் பார்த்த நீலன் அதிர்ந்து போனான்.
நீயா? உன்னிடமா நான் வழிகேட்டேன்.
ஆமாம். விரியனே! நீயாக வந்து என்னிடம் அகப்பட்டு கொண்டு விட்டாய். உன் தோலை உரிக்கிறேன் பார்
என்றான் இப்பாலஸ் கோபத்துடன். அதற்குள் யவனனின் ஆட்கள் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். இனி தப்பிச் செல்ல எந்த வழியுமில்லை என்று நீலனுக்கு தெளிவாக புரிந்து விட்டது.
உனக்கும் எனக்கும் தாக்கல் எதுவுமில்லையே? எனக்கும் மகேந்திரனுக்கும் தான் பிரச்சனை. என்னை உன் எஜமானனிடம் அழைத்து செல்
என்றான் நீலன் அதிகாரமிடுக்கை செயற்கையாக வரவழைத்தபடி.
அது பிறகு. முதலில் என்னையும் என் ஆட்களையும் தாக்கியதற்கு நீ பதில் சொல்ல வேண்டாமா?
என்றான் இப்பாலஸ் விசம சிரிப்புடன்.
நீங்கள் மட்டும் அருசுவை உணவு படைக்கவா என்னை தேடி கொண்டிருந்தீர்கள்? நீ என்னை என்ன செய்ய நினைத்தாயோ அதை நான் முந்தி கொண்டு உனக்கு செய்து விட்டேன். அவ்வளவுதான் விசயம்.
வாய்ஜாலக்காரனாயிற்றே நீ? பேச சொல்லியா கொடுக்க வேண்டும். இதேபோல் இடக்காகத்தான் என் எஜமானனிடமும் நீ பேச போகிறாய். நீ ஒழுங்காக பேச என்னிடம் ஒரு வைத்தியம் இருக்கிறது. அந்த வைத்தியத்தை செயல்படுத்தினால் உன் வாய் துடுக்கு அடங்குவதுடன் உண்மையை மட்டுமே பேசவும் கற்று கொள்வாய்.
நீலனின் முகம் பீதியில் வெளுத்தது. யவனின் விதவிதமான வித்தியாச வைத்திய முறைகளை அவன் பலமுறை நேரிலேயே கண்டிருக்கிறான். அது இப்போது தனக்கே நேரும் என்று அவன் கனவுகூட காணவில்லை.
அவனை பிடித்து அருகில் இருக்கும் மரத்தில் கட்டுங்கள். வைத்தியத்தை ஆரம்பிக்கலாம்!
என்றான் யவனன் தன் இடையிலிருந்த சவுக்கை எடுத்தபடி.
நீலன் இப்பாலசின் ஆட்களால் அருகிலிருந்த மரத்தில் கட்டப்பட்டான்.
வேண்டாம். என்னை விட்டு விடு
என்றான் நீலன்.
என்னை மன்னித்து விடு நண்பா! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். உன்னை சிறு வயதிலேயே இப்படியான வைத்திய முறைகளுக்கு பழக்கப்படுத்தியிருந்தால் நீ திருந்தியிருப்பாய். உன் பெற்றோர் செய்ய வேண்டியதை இப்போது நான் செய்கிறேன். இனியாவது உன்னுடைய வாய் உண்மையை பேச கற்க வேண்டும்
என்ற யவனன் தன் சவுக்கை உதறி ஒருமுறை சொடுக்கெடுத்தான்.
நீலன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
இப்பாலஸ் தன் சவுக்கை வேகமாக சுழற்றினான். அது அவன் பேச்சை கேட்க மறுத்தது. சவுக்கின் நுனி வேறு எதிலாவது மாட்டி கொண்டு விட்டதோ என்று நினைத்த யவனன் திரும்பி பார்த்தான். சவுக்கின் நுனியை இறுகப் பிடித்தபடி ஒரு வாலிப வீரன் நின்று கொண்டிருந்தான்.
நடை பயிற்சி செய்யும் ஒரு வயதான முதியவரை இப்படி கட்டி வைத்து துன்புறுத்துவது நியாயமா நண்பா?
என்றான் கணீர் குரலில் அந்த வாலிபன்.
யார் நீ?
என்றான் யவனன் எதிர்பாராத இடைஞ்சலால் சினத்தின் உச்சிக்கு சென்றவனாக!
உன்னைப்போல் நானும் ஒரு அந்நியன்தான்
என்ற அந்த வீரன் சவுக்கின் நுனியை கீழே விட்டான்.
கண்களை மூடிக் கொண்டு கசையடியை எதிர்பார்த்து காத்திருந்த நீலனின் காதில் அந்த புதிய குரல் கணீரென்று விழுந்தது. அது புதிய குரல் அல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பாக அவனிடம் பேசி பழகிய பழைய குரல். ஆனால் அந்த குரல் இங்கே இவ்வளவு தொலைவில் கேட்க சாத்தியமேயில்லை. ஆனாலும் கேட்கிறது. நீலன் தன் கண்களை திறந்தான். மங்கலாக தெரிந்த புதிய உருவத்தின் உடல் மொழியை கவனித்தவன் தன் கணிப்பை உறுதி செய்து கொண்டான்.
யாரது? கள்வர் புரத்து கள்வன் ஆதித்தனா அது?
என்றான் நீலன்.
புதிய தீவில் தன்னையும் ஒருவன் அடையாளம் கண்டுபிடித்து விட்டானேயென்ற ஆச்சரியத்தில் ஆமாம். நான் ஆதித்தன்தான்
என்றான் ஆதித்தன்.
3. முக்கூடலின் சங்கமம்
தன்னுடைய ஆளுகை நிரம்பிய தீவில் தன்னை யாரும் எதிர்த்து பேசவோ தட்டி கேட்கவோ இயலாத சூழலை மட்டுமே இதுவரை கண்டிருந்த யவனனான இப்பாலசிற்கு புதிதாக ஒரு மனிதன் தன்னுடைய வைத்திய முறைகளில் தலையிடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைவிட அவன் அந்நியன் என்று தன்னை குறிப்பிட்டதில் அவனது கோபம் அதிகரித்தது.
அதே நேரம் நீலன் வியப்பின் உச்சியில் இருந்தான். உலகின் வேறு ஒரு மூலையில் முன்பின் தெரியாத ஆட்கள் நிறைந்த ஒரு தீவில் ஆதித்தன் எப்படி வந்து சேர்ந்தான் என்ற கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.
கள்வர்புரத்து கள்வனை நான் இங்கே சந்திப்பேன் என்று கனவுகூட காணவில்லை!
என்றான் நீலன் குரலில் ஆச்சரியம் வெளிப்பட.
எனக்கும் அதே ஆச்சரியம்தான் முதிய நண்பா! கடலோடியான உன்னை இப்படி ஒரு தீவில் சந்திப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.
ஆமாம். ஆ மட்டும் தனியே வந்திருப்பது போல் தெரிகிறதே? எங்கே உன் சகோதரன் அரிஞ்சயன்?
என்றான் நீலன்.
அண்ணன் கள்வர்புரத்தில் இருக்கிறார். ஒரு அபூர்வ மூலிகை ஒன்றை தேடி நானும் பைராகியும் இந்த தீவிற்கு வந்தோம். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது நம் சந்திப்பு.
ஆதித்தா! என் அருமை நண்பா! நான் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்.
நானிருக்க பயமேன்!
என்று சிரித்தான் ஆதித்தன்.
இருவரது சம்பாசணையை கேட்டு கொண்டிருந்த யவனன் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதை அந்த உரையாடலின் வழியே தெரிந்து கொண்டான்.
ஆதித்தனை பற்றி யவனன் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதனால் அவன் தன் முரட்டு தனத்தை கைவிட தயாராகவில்லை.
போதும்! உரையாடலை நிறுத்துங்கள். ஏய் கிழவா! துணைக்கு ஆள் வந்து விட்ட தைரியத்தில் எதையாவது செய்ய நினைத்தால் உன் வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்
என்றான் யவனன்.
வாலை நறுக்க நான் என்ன உன் வீட்டு வளர்ப்பு நாயா? மகேந்திரன் எய்த அம்பு நீ. என்னை மரியாதையாக அவனிடம் அழைத்து செல். நான் அவனிடம் பேசிக் கொள்கிறேன்.
உன் பழைய நண்பனை கண்டதும் உன் பேச்சு தோரணை மாறிவிட்டது.
நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் யவனனே... ! உன் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?
அதற்கு முன்னால் உன் பெயரை சொல்.
அவனைத்தான் நான் ஆதித்தன் என்று நான் பெயர் சொல்லி அழைத்தேனே? அது உன் காதில் விழவில்லையா?
என்றான் எரிச்சலுடன் நீலன்.
அது என் காதில் நன்றாகவே விழுந்தது. அதை விடவும் கள்வர் புரத்து கள்வன் என்ற வார்த்தை நன்றாகவே விழுந்தது. எங்கள் நாட்டில் கள்வர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க ஊருக்கு ஒரு பெயர் வைத்து கொள்வது வாடிக்கை. நீ கூறிய ஆதித்தன் என்ற பெயர் ஏன் இவனது புனைபெயராக இருக்க கூடாது?
என்று கூறி தன் மேதா விலாசத்தை வெளிக்காட்டினான் யவனன்.
நீ நினைப்பது தவறு. ஆதித்தன் என்பதுதான் என்னுடைய சொந்த பெயர். காரணமின்றி நான் புனைபெயர்களை சூட்டிக் கொள்வதில்லை. உன்னிடம் பெயரை மறைப்பதால் எனக்கு கிடைக்க கூடிய ஆதாயம் எதுவுமில்லை. என் நண்பனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
பரவாயில்லை. ஒருவன் முதுகைத்தான் என் சவுக்கு சுவை பார்க்கும் என்று நினைத்தேன். இப்போது துணைக்கு நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய். என் சவுக்குக்கு நல்ல வேட்டைதான். உன்னை பிடித்து வரச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு. அதை நான் செய்கிறேன். இனி உன்னை என்ன செய்ய வேண்டுமென்பதை மகேந்திரன் தான் முடிவு செய்ய வேண்டும். நடங்கள் முன்னே
என்றான் இப்பாலஸ்.
இறுதி வரை உன் பெயரை சொல்ல மறுத்து விட்டாயே? ஒரு வேளை உன் பெற்றோர் உனக்கு பெயர் வைக்காமலேயே வளர்த்து விட்டார்கள் போலிருக்கிறது. பரவாயில்லை. நான் உன்னை யவனன் என்றே அழைக்கிறேன்.
போதும் பகடி. என் பெயர் இப்பாலஸ். நீ என்னை எப்படி அழைத்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை
என்றான் எரிச்சலுடன் இப்பாலஸ்.
கவலை இல்லாத மனிதரே! உம்மிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். துறைமுகத்தில் என்னுடைய நண்பன் ஒருவன் நாவாய் ஒன்றில் காத்திருக்கிறான். அவனும் இங்கே வந்து மகேந்திரனுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உன் ஆட்களில் ஓருவனை துறைமுகத்திற்கு அனுப்பி அவரை அழைத்து வர சொல்ல முடியுமா?
அந்த நபரின் பெயரையும் நாவாயின் பெயரையும் கூறு அவனை அழைத்து வர ஆளை அனுப்புகிறேன்
என்றான் யவனன் வேண்டா வெறுப்பாக.
என் நண்பனின் பெயர் பைராகி. அவனது நாவாயின் பெயர் கழுகு
என்றான் ஆதித்தன்.
யவனன் சைகை செய்ததும் அங்கிருந்த வீரர்களில் ஒருவன் துறைமுகத்தை நோக்கி கிளம்பினான்.
யவனனுக்கு ஆயாசமாக இருந்தது. முதலில் நீலன். அவனை தொடர்ந்து ஆதித்தன். இப்போது பைராகி என்ற புது ஆசாமி. ஒருவனை கூட்டி வரச் சொன்னால் மூன்று பேரை கூட்டி வரும் தன்னை பற்றி மகேந்திரன் என்ன நினைப்பான் என்று அவனது மனம் கவலையில் ஆழ்ந்தது.
அந்த சிறு குழு அங்கிருந்து கிளம்பியது. வெளியே இருள் கவியத் துவங்கியிருந்தது. வானில் நிலவும் நட்சத்திரங்களும் உலாவரத் தொடங்கி இருந்தன. ஆங்காங்கே இருந்த விளக்கு தூண்களில் ஆட்கள் தீப்பந்தங்களை பொருத்தி இருளை விரட்டி வெளிச்சத்தை கொண்டு வர ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அந்த சிறு குழு மகேந்திரனின் மாளிகைக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டது.
இவர்களுக்கு முன்பாகவே அங்கே அழைத்து வரப்பட்டிருந்தான் பைராகி.
ஆதித்தனை பார்த்ததும் என்ன நண்பா! ஏதாவது பிரச்சனையா? ஊரை சுற்றி பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாயே? இப்போது பலத்த காவலோடு அழைத்து வரப்படுகிறாயே? ஏதேனும் விபரீதமா?
என்றான் பைராகி பரபரப்புடன்.
பிரச்சனை என்னால் வரவில்லை நண்பா! இதோ இந்த கிழட்டு நண்பனால் வந்தது. பிரச்சனையின் முழு பரிமாணமும் அவனுக்கு மட்டும்தான் தெரியும். நானே தலையும் புரியாமல் காலும் புரியாமலும் தான் இங்கே வந்திருக்கிறேன்
என்ற ஆதித்தன் நீலனை நோக்கி கையை காட்டினான்.
நீலனை பார்த்த பைராகி நண்பா! கடலோடியான உன்னை ஆதித்தன் எங்கே பிடித்தான்?
என்றான் ஆச்சரியத்துடன்.
அவன் எங்கே பிடித்தான்? நானல்லவா அவனைப் பிடித்தேன்
என்றான் இப்பாலஸ்...
இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறான். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி பைராகி. சூழ்நிலையை பார்த்தாயா? பழைய நண்பர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும் போது மகிழ்ச்சியான சூழல் நிலவவில்லையே?
என்றான் நீலன் வருத்தத்துடன்.
ஆபத்தில் உதவி செய்பவன் தானே நண்பன். நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சந்திப்பதே பொருத்தமானது
என்றான் ஆதித்தன்.
இவ்வளவு தூரம் நடத்தி வந்து விட்டு குடிக்க தண்ணீர் கூட தராமல் வேடிக்கை பார்க்கிறார்கள் பண்பாடு தெரியாதவர்கள்.
ஒருவேளை இது யவன நாட்டு வழக்கமாக இருக்கலாம்.
நீ குடிக்க வேறு தண்ணியை அல்லவா கேட்பாய்
என்றான் இப்பாலஸ் சினத்தை அடக்கி கொண்டு. இக்கட்டான நேரத்திலும் அதை பற்றி கவலையில்லாமல் நண்பர்கள் மூவரும் பகடி செய்தபடி பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் மது பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விட்டேன்
என்றான் நீலன் ரோசத்துடன்.
இன்று பலத்த மழை பெய்யும் என்று நான் நினைக்கிறேன்
என்றான் பைராகி சிரித்தபடி.
ஆமாம் அரிஞ்சயனை விட்டு விட்டு நீங்கள் இருவரும் படகில் என்ன செய்கிறீர்கள்?
என்றான் நீலன்.
சில அபூர்வ மூலிகைகளை தேடி பைராகி மேற்கொண்ட கடல் பயணத்தில் வழித்துணைவனாக நான் வந்தேன். இந்த மோகினி தீவில் ஒரு அபூர்வ மூலிகை ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டோம். அதை தேடித்தான் இங்கே வந்தோம். வந்த இடத்தில் இக்கட்டில் சிக்கிய உன்னை பார்த்தோம். பிறகு நடந்தவை உனக்கே தெரியும்.
நாம் இங்கு வந்த விவரத்தை கூறி விட்டோம். ஆனால் நம் நண்பன் தன் சிக்கலை பற்றி வாய் திறக்க மறுக்கிறான்
என்றான் பைராகி.
இங்கே நடக்கும் விசயங்களை முழுமையாக அறிந்தவர்கள் இருவர்தான். ஒருவன் நீலன். இன்னொருவன் இந்த யவனன்
என்றான் ஆதித்தன்.
எனக்கு பிரச்சனை மேலோட்டமாகத்தான் தெரியும். என் எஜமானருக்குத்தான் பிரச்சனையின் முழு கன பரிமாணமும் தெரியும்
என்றான் இப்பாலஸ்.
உன் எஜமானர் வரும் வரை நாம் நீலனின் பார்வையில் பிரச்சனையை கேட்போம்
என்ற ஆதித்தன் என்ன பிரச்சனையென்று முழுதாக கூறு நீலா!
என்றான்.
கிழவன் தட்டு தடுமாற ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்கு முன் இரவில் நடந்தவை அவனுக்கு அரை குறையாக நினைவுக்கு வந்தது.
நான் கல்லறை தீவில் இறக்கி விடப்பட்டதுதான் எனக்கு நினைவில் இருக்கிறது
என்றான் நீலன்.
கல்லறை தீவா? அங்கிருந்து யாரும் உயிரோடு தப்பித்ததாக சரித்திரமே இல்லையே?
என்றான் யவனன் வியப்புடன்.
அங்கிருந்து தப்பி வந்த முதலும் கடைசியுமான ஆள் நானாகத்தான் இருப்பேன்
என்றான் நீலன்.
அதே நேரம் கூடத்திற்குள் நுழைந்தான் மகேந்திரன். நீலனை பார்த்ததும் அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
உன்னை நல்லவன் என்று நினைத்தேனே நயவஞ்சகா! என்னை ஏமாற்றி ஐயாயிரம் பொன்னை பறித்தாய். கிட்டங்கியில் இறக்க வேண்டிய என் தானிய மூட்டைகளை இறக்காமல் அவற்றை கப்பலோடு கொண்டு போய் விட்டாய். எவ்வளவு துணிவிருந்தால் மீண்டும் இங்கே வர துணிந்திருப்பாய் துரோகி
என்ற மகேந்திரன் ஓடி வந்து நீலனின் கழுத்தை பிடித்தான்.
கழுத்தின் பிடி இறுக ஆரம்பித்ததும் நீலனின் விழி பிதுங்க ஆரம்பித்தது. நண்பர்கள் இருவரும் யவனனின் உதவியோடு மகேந்திரனை நீலனிடமிருந்து பிரித்தனர்.
சீராக மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட நீலன் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தானிய மூட்டைகளையும், பொன்னையும் இழந்தீர்கள். நானோ மனைவிக்கு இணையான என் கப்பலை இழந்து விட்டேன். நம் இருவரையும் முட்டாளாக்கியவன் வேறொருவன்
என்றான்.
இவன் பொய் சொல்கிறான். அன்று இரவு கப்பல் கிளம்ப அனுமதி கேட்டு என்னிடம் வந்தது இவன்தான்
என்றான் ஆணித்தரமாக யவனன்.
நண்பர்கள் இருவரும் எதுவும் புரியாமல் நின்றனர்.
4. பணயத்தில் ஒரு பங்காளி
கொலை வெறியோடு நீலனை அணுகி அவனை தாக்க முயன்ற மகேந்திரனை நண்பர்கள் இருவரும் தடுத்து நிறுத்தினார்கள். புதியவர்கள் இருவர் தன்னை தடுத்து நிறுத்தியதால் மகேந்திரன் கடும் சீற்றத்துடன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.
யார் இந்த அந்நியர்கள்? இப்பாலஸ் இவர்களை ஏன் இங்கே அழைத்து வந்தாய்?
மகேந்திரனின் கோபம் இப்போது யவனனின் மீது பாய்ந்தது.
இவர்கள் இருவரும் அந்த எத்தனின் நண்பர்களாம். அவனை காப்பாற்ற இங்கே வந்திருக்கிறார்கள்.
இவனுடைய நண்பர்களா? அவர்களும் இவனைப் போலத்தான் இருப்பார்கள். இவர்களை உடனே கைது செய்
என்றான் மகேந்திரன்.
யவனன் இருவரை நோக்கி நகர்ந்தான். மகேந்திரன் கடும் கோபத்தில் இருப்பதால் கண் மண் தெரியாமல் கோபத்தில் முடிவெடுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் அவனை நிதானத்திற்கு கொண்டு வர ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை நடத்துவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து விட்டான். பைராகியை நெருங்கிய யவனனின் இடுப்பில் சொருகியிருந்த குறு வாளை மின்னல் வேகத்தில் எடுத்த ஆதித்தன் அதை கண் இமைக்கும் நேரத்தில் மகேந்திரனின் கழுத்தில் வைத்தான்.
இப்பாலஸ்! இருந்த இடத்தை விட்டு அசையாதே! வில்லங்கமாக எதையாவது செய்ய நீயும் உன் ஆட்களும் முயற்சி செய்தால் உன் எஜமானனின் தலை தப்பாது
என்று கர்ஜித்தான் ஆதித்தன்.
எதிர்பாராமல் அங்கே நடந்த நிகழ்வால் காட்சி தலை கீழானது.
மகேந்திரன் நடந்த நிகழ்வால் திக் பிரமை பிடித்து நின்றான்.
இந்த தீவு என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இங்கிருந்து உங்களால் அவ்வளவு எளிதாக தப்பி செல்ல முடியாது.
நிலவரம் புரியாமல் பேசுகிறாய். என் நண்பன் உன் கண்களில் மண்ணை தூவிவிட்டு முத்தழகி என்ற மிகப் பெரிய கப்பலையே கடத்தி சென்ற போது நீ என்னதான் செய்து கொண்டிருந்தாய்? உன் வீண் பூச்சாண்டியை என்னிடம் காட்டாதே! நான் நினைத்தால் கத்திமுனையிலேயே உன்னை கடல் வரை கூட்டி சென்று என்னுடைய கலத்தில் தப்பிச் செல்ல முடியும். ஆனால் அப்படி செய்தால் அது என் நண்பன் செய்த குற்றத்தை ஒப்பு கொண்டது போலாகிவிடும். அதை நான் விரும்பவில்லை
என்றான் ஆதித்தன்.
ஆதித்தா! நமக்கு பிரச்சனை என்னவென்றே இன்னும் புரியவில்லையே?
என்றான் பைராகி குழப்பத்துடன்.
அய்யய்யோ! நீங்கள் நினைப்பதுபோல் கப்பலை நான் கடத்தி செல்லவில்லை
என்று பதறினான் நீலன்.
நீ இல்லாவிட்டால் வேறு யார்? கப்பலை இயக்கும், வழியை தீர்மானிக்கும் அதிகாரம் மீகா மகனாகிய உனக்குத்தானே இருக்கிறது
என்றான் மகேந்திரன் அவனது கழுத்தில் இருந்த குறுவாள் அவனிடம் நிதானத்தை வரவழைத்திருந்தது.
அது உண்மைதான். என் கப்பலை நானே கடத்தி சென்று விட்டு எதற்காக இங்கே திரும்ப வர வேண்டும்? சரக்கை இறக்காமல் ஏமாற்றி சென்ற என்னை நீ சும்மா விட மாட்டாயல்லவா? பிறகு நான் ஏன் இங்கே வந்தேன்?
ஒருவேளை சரக்கின் விலையான 5000 பொற்காசுகளை திரும்ப தர வந்திருக்கிறாயோ?
என்றான் மகேந்திரன்.
உன்னிடம் பெற்ற அந்த பணமும் இப்போது என்னிடமில்லை
என்றான் நீலன் தலையை தொங்கப் போட்டபடி.
பார்த்தீர்களா உங்கள் நண்பனின் லட்சணத்தை. இவனை எனக்கு பல வருடங்களாக வணிக ரீதியாக தெரியும். இந்த தீவிற்கு தேவையான உணவுப் பொருட்களை வியாபாரிகள் இவனது கப்பலில் அனுப்பி வைப்பார்கள். அவற்றிற்கான விலையை நான் இவனிடம் கொடுத்து விடுவேன். எல்லாமே இதுவரை நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. இவனது கடைசி வருகையின் போது என்னிடம் முன்கூட்டியே பொருட்களுக்கான பணத்தை பெற்று கொண்டான். அதுதான் அந்த 5000 பொற்காசுகள். அன்று இரவு என் கிட்டங்கியில் சரக்கை இறக்காமல் காசுகளை எடுத்து கொண்டு கப்பலோடு மாயமாகி விட்டான். துறைமுகத்தின் பொறுப்பதிகாரியான இந்த யவனனை எப்படியோ ஏமாற்றி கப்பலை எப்படியோ வெளியே கொண்டு சென்று விட்டான். இப்போது வேறு ஏதோ காரணத்திற்காக இங்கே வந்து விட்டு கப்பலை காணோம். காசையும் காணோம் என்று கதைவிடுகிறான். இவனுக்கு உதவ நீங்கள் இருவரும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை ஏமாற்ற நினைக்கிறீர்களோ என்னவோ?
என்றான் மகேந்திரன் கசப்பான குரலில்.
மகேந்திரனின்