Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivasamiyin Sabatham Part - 1
Sivasamiyin Sabatham Part - 1
Sivasamiyin Sabatham Part - 1
Ebook202 pages1 hour

Sivasamiyin Sabatham Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவசாமி எனும் ஜீவ்ஸ்

இரட்டை நாயனங்கள் பிணைந்து, பிரிந்து, ஒருங்கிணைந்து கம்பீரமாக வாசிக்கும் வாசிப்பே தனி.

இரண்டு முக்கியப் பாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நகைச்சுவை எழுத்தோவியங்களும் அவ்வாறே.

நகைச்சுவை எனும் தீஞ்சுவையை வாரி வழங்கிய இரு இமயங்களில் பி.ஜி. உட்ஹவுஸ் ஒருவர்.

மற்றொருவர் தேவன்.

ஆங்கிலத்தில் சொற்சிலம்பங்கள் பல ஆடி தன் 94 வயதுவரை வாசக விசிறிகளை காலம் காலமாக சிரிக்க வைக்க எழுதிக் குவித்தவர் உட்ஹவுஸ். கதாபாத்திரங்களில் அவர் படைத்த ஜீவ்ஸும், பெர்ட்டி ஊஸ்டரும், ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்ஸனைப் போல நிஜமாகவே உயிர் வாழ்ந்தவர்களா என்ற பிரமிப்பை உண்டாக்கக்கூடிய அளவில் உயர்ந்து, ரசிகர்களை இன்றும் மகிழ்விக்கின்றனர்.

உட்ஹவுஸின் நகைச்சுவையை தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்வது தொன்னையில் ஷாம்பெயினை ஊற்றி வழங்குவதற்கு ஒப்பாகும்.

லண்டன் சூழ்நிலையில் வலம்வரும் கதாபாத்திரமான பெர்ட்டி ஊஸ்டர் கட்டை பிரம்மசாரி.

அவருடைய பட்லர், காரியதரிசி, ஆலோசகர், ஆபத்பாந்தவராக பரிமளிக்கும் ஜீவ்ஸ் வெகுளியான தன் பணக்கார எஜமானனுக்கு உறுதுணையாக இருந்து எவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அவரைத் தன் இழுப்புக்கு இழுக்கிறார் என்பதை உட்ஹவுஸ் தன் வார்த்தை ஜாலங்களுடன் நடைச் சித்திரங்களாக்கி தெவிட்டாத நகைச்சுவை விருந்துகள் பல படைத்துள்ளார்.

ஜீவ்ஸும், ஊஸ்டரும் நம் நாட்டில் பிறந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கனவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களான சிவசாமியும் பஞ்சாமியும் வைத்து புனையப்பட்ட இந்த நூல் என்னுடைய அறிமுக முயற்சி. பொன் வைக்க வேண்டிய இடத்தில் நான் வைத்தது ஒரு பூவாகக்கூட அல்லாமல் ஒரு மொட்டாகவாவது அமைந்தது என்று, உட்ஹவுஸைப் பாராயணம் செய்தவர்கள், செய்பவர்கள் இம்முயற்சியைப் பரிசீலனை செய்துவிட்டுக் கருதினால் ஜீவ்ஸ் பாணியில் தன்னடகத்துடன் சிரம் தாழ்த்தி 'தாங்க் யூ ஸார்’ என்று நன்றி தெரிவிப்பேன்.

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127204373
Sivasamiyin Sabatham Part - 1

Read more from J.S. Raghavan

Related to Sivasamiyin Sabatham Part - 1

Related ebooks

Related categories

Reviews for Sivasamiyin Sabatham Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivasamiyin Sabatham Part - 1 - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    சிவசாமியின் சபதம்

    பாகம் - 1

    Sivasamiyin Sabatham

    Part - 1

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிவசாமி எனும் ஜீவ்ஸ்

    1.சிவசாமி ஆளவந்தால்....

    2. காமாட்சி என்ன செய்வார்?

    3. நடுவில் நின்ற நட்சத்திரம்

    4. 'சாமா’னியனா?

    5. அதிரடி 'வைத்தி’யம்!

    6. தெஸ்பியன் பஞ்சாமி

    7. மறந்த வாய்ப்பாட்டு

    8. தியாகியின் பட்டொளி

    9. லட்டு, மாம்பழம், டும்டும்!

    10. எம்மாம்பலம்!?

    11. கையைத் தூக்கி நின்று…!

    12. வாலாட்ட முடியுமா?

    13. போகப் போகத் தெரியும்

    14. சின்ன சகுனி

    சிவசாமி எனும் ஜீவ்ஸ்

    இரட்டை நாயனங்கள் பிணைந்து, பிரிந்து, ஒருங்கிணைந்து கம்பீரமாக வாசிக்கும் வாசிப்பே தனி.

    இரண்டு முக்கியப் பாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நகைச்சுவை எழுத்தோவியங்களும் அவ்வாறே.

    நகைச்சுவை எனும் தீஞ்சுவையை வாரி வழங்கிய இரு இமயங்களில் பி.ஜி. உட்ஹவுஸ் ஒருவர்.

    மற்றொருவர் தேவன்.

    ஆங்கிலத்தில் சொற்சிலம்பங்கள் பல ஆடி தன் 94 வயதுவரை வாசக விசிறிகளை காலம் காலமாக சிரிக்க வைக்க எழுதிக் குவித்தவர் உட்ஹவுஸ். கதாபாத்திரங்களில் அவர் படைத்த ஜீவ்ஸும், பெர்ட்டி ஊஸ்டரும், ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்ஸனைப் போல நிஜமாகவே உயிர் வாழ்ந்தவர்களா என்ற பிரமிப்பை உண்டாக்கக்கூடிய அளவில் உயர்ந்து, ரசிகர்களை இன்றும் மகிழ்விக்கின்றனர்.

    உட்ஹவுஸின் நகைச்சுவையை தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்வது தொன்னையில் ஷாம்பெயினை ஊற்றி வழங்குவதற்கு ஒப்பாகும்.

    லண்டன் சூழ்நிலையில் வலம்வரும் கதாபாத்திரமான பெர்ட்டி ஊஸ்டர் கட்டை பிரம்மசாரி.

    அவருடைய பட்லர், காரியதரிசி, ஆலோசகர், ஆபத்பாந்தவராக பரிமளிக்கும் ஜீவ்ஸ் வெகுளியான தன் பணக்கார எஜமானனுக்கு உறுதுணையாக இருந்து எவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அவரைத் தன் இழுப்புக்கு இழுக்கிறார் என்பதை உட்ஹவுஸ் தன் வார்த்தை ஜாலங்களுடன் நடைச் சித்திரங்களாக்கி தெவிட்டாத நகைச்சுவை விருந்துகள் பல படைத்துள்ளார்.

    ஜீவ்ஸும், ஊஸ்டரும் நம் நாட்டில் பிறந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கனவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களான சிவசாமியும் பஞ்சாமியும் வைத்து புனையப்பட்ட இந்த நூல் என்னுடைய அறிமுக முயற்சி.

    பொன் வைக்க வேண்டிய இடத்தில் நான் வைத்தது ஒரு பூவாகக்கூட அல்லாமல் ஒரு மொட்டாகவாவது அமைந்தது என்று, உட்ஹவுஸைப் பாராயணம் செய்தவர்கள், செய்பவர்கள் இம்முயற்சியைப் பரிசீலனை செய்துவிட்டுக் கருதினால் ஜீவ்ஸ் பாணியில் தன்னடகத்துடன் சிரம் தாழ்த்தி 'தாங்க் யூ ஸார்’ என்று நன்றி தெரிவிப்பேன்.

    ஜே.எஸ். ராகவன்

    1.சிவசாமி ஆளவந்தால்....

    விநாயகருக்குத் தேங்காய் உடைக்க வைத்திருந்த உளியை பூஜை அறையில் காணாமல் தவித்தார் டாக்டர் பஞ்சாமி. டாக்டர் என்றால் அவர் அவ்வளவாக டாக்டர் மாதிரி இருக்க மாட்டார்.

    உளி என்றாலும் அது உளி மாதிரி இருக்காது. உளிக்கும் மினி கடப்பாரைக்கும் மையமான உருவில் அது ஒரு நீளமான அணில் போல இருந்தாலும், பஞ்சாமி அதைக் குறிப்பிடுவது உளி என்றுதான்!

    'எலி இழுத்திண்டு போயிருக்குமோ?' என்ற சிந்தனையுடன் செயற்குழு கூட்டத்துக்காக திரண்ட மாதிரி கடவுள்கள் நிரம்பி வழிந்த பூஜை அறையில் தேடினவர் பிள்ளயாரின் கீழே இருந்த மூஞ்சூரை நோக்கி ஒரு திடீர் எஃப்.ஐ.ஆர் பார்வையை வீசினார்.

    'பஞ்சாமி! கும்பாச்சியா என்னிடம் இருக்கும் வெல்லக் கொழுக்கட்டையையே இது தொடுவது இல்லை. உன்னோட துருப்பிடித்த இரும்பு உளியையா இது சீண்டும்?' என்று லட்சுமி சரஸ்வதி கூட்டணியுடன் சாமந்திப் பூக்கலர் பிரேம் போட்ட படத்துக்குள் செளக்யமாக உட்கார்ந்து இருந்த விநாயகர், பஞ்சாமியைப் பார்த்து பொய்க் கோபப் பார்வையை வீசினார். பக்தன் தலையில் அவர் வைத்த மெல்லிய குட்டை ரசித்து, லட்சுமியும், சரஸ்வதியும் டைமிங்குடன் ஒருவரை ஒருவர் பார்த்து 'களுக்' கென்று சிரித்த மாதிரி பஞ்சாமிக்குப் பிரமையாக இருந்தது.

    சாமியார்களை வேண்டுமானால் சந்தேகப்படலாம். சம்மன் அனுப்பலாம். சந்திக்கு இழுக்கலாம். சாமியையே சந்தேகப்படுவதா? வலது ஆள்காட்டி விரலால் தாடையின் இரண்டு பக்கமும் மன்னிப்பாக போட்டுக் கொண்டார்.

    கல்யாணமான புதிதில், ‘எங்கேடி இங்கிருந்த உளி?' என்று சமையல் அறையை நோக்கி ஆப்பிரிக்கச் சிங்கமாக குரல் உருள கர்ஜித்திருப்பார். ஆனால், காமாட்சியின் கணவராக போட்ட முப்பது வருஷ சர்வீஸ், அவரது குரலை, மூணு நாள் ஜுரத்தினால் ஆறிய சீரக ரசத்தைக் கரைத்துக் குடித்தவரின் ஈனஸ்வரமாக தாழ்த்தி இருந்தது.

    'உளியை எங்கேயாவது பாத்தியா?' என்றார் மெல்லிய மியாவ் குரலில்.

    'உளியா? எதுக்கு? ஆயனச் சிற்பியா, ஏதாவது சிலை வடிக்கப் போகிறேளா? தேங்காய்த் துவையலை ஓட்டி ஓட்டி அரைக்க, அம்மி ஒண்ணை பொளிந்து தரப் போறதா?'

    சமையலறை நையாண்டியை ரசிக்காத பஞ்சாமி, கண்களை மூடி அவளை மணக்கச் சம்மதித்த தருணத்தை உள்ளம் வெதும்ப நொந்து கொண்டார்.

    முப்பது வருஷங்களுக்கு முன்னால் நாகப்பட்டினத்தில் ஒரு மந்தமான ஞாயிறு மாலையில் ‘வாடா என்னோட!', என்று பஞ்சாமியின் மாமா அவரோட மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து அதிரடியாக அழைத்துக் கொண்டு போனார். நீலா மடவிளாகம் தெருவில் ஒரு வீட்டின் முன்னாலே வண்டி குலுக்கலுடன் நின்றது. பஞ்சாமி திரு திரு என்று முழித்துக் கொண்டு இறங்கினார்.

    வண்டியை தாண்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர், 'பூப்போட்டுப் பாத்தது. அம்பாள் கல்யாணம் பண்ணலாம்னு உத்தரவு கொடுத்துட்டா, மாமி!' என்று பேசிக் கொண்டு போனார்.

    'சகுனம் ஆகிறது!' என்றார் மாமா வீட்டுக்குள் நுழைந்து கொண்டு.

    'சகுனமா? எதுக்கு?’ பஞ்சாமி குழம்பினார்.

    'வந்தாச்சு, வந்தாச்சு!' என்ற பெண்களின் பரபரப்பான குரல் கேட்டது. 'யார் வந்தாச்சு? எதுக்கு வந்தாச்சு?’ பஞ்சாமிக்கு ஒன்றுமே புரியவில்லை.

    'உள்ளே போகலாம், வா!' என்று மாமா அழைத்துக் கொண்டு போனார்.

    'வேற வீடு பாக்கணும்னு சொல்லிண்டிருந்தேளே, இதானா அது?' என்று பஞ்சாமி மாமாவின் காதில் கிசுகிசுத்தார் வெள்ளந்தியாக.

    'கொஞ்ச நேரத்திலே தானே தெரிஞ்சிப்பே!' என்றார்.

    கூடத்தில் சிறு கும்பல். நடுவே ஒரு பெரிய பட்டுப் பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதன் விளிம்பில் அவர்கள் உட்காரத் தயாராக, இரண்டு நாற்காலிகள்.

    'காபி டிபன் எல்லாம் அப்புறம். மொதல்லே பொண்ணை வரச் சொல்லுங்கோ!'

    பக்கத்து ரூமிலிருந்து நாணிக் கோணிக் கொண்டு ஒரு பெண் வந்தது. பெளடர் கன தூக்கல். தெர்மாமீட்டரை விட ஒல்லி. நல்ல உயரம். மாநிறம். புசுபுசுன்னு ஒரு பட்டுப் புடைவை. பாரமான மல்லி கனகாம்பரம் சூடி இருந்த தலை, முனிசிபாலிடி விளக்கைப் போல கேள்விக்குறியாக் குனிந்து கொண்டிருந்தது. மெல்லிய மருக்கொழுந்து மணம். உள்ளே இருந்து டிகாஷன் போடும் வாசனை.

    'நமஸ்காரம் பண்ணுடி!' - கதவு பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது. அதை அப்பெண் குளறுபடி இல்லாமல் செய்து எழுந்தது.

    'பாட்டுப் பாட வருமா?’ மாமா வலது காலை ஆட்டிக் கொண்டே கேட்டார்.

    'அப்படியே உக்காந்து, உனக்குத் தெரிஞ்ச பாட்டைப் பாடேண்டி! என்று கதவு உத்தரவிட்டது.

    பெண் ஒரு நிமிஷம் அமைதி காத்தது. மக்கர் செய்த தொண்டையை, கியர் சரியாக விழாத பஸ்ஸைப்போல சத்தம் செய்து ரிப்பேர் செய்து கொண்டது.

    'உன்னை அல்லால் வேறே கதி, எனக்குண்டோ!' என்ற குஞ்சரதாசனின் பாடலை ஹை பிச்சில் பாடிற்று. பாடிற்று என்று சொல்லிவிட முடியாது. ஏதோ செய்யுளை, தமிழ் வாத்தியார், ஹெட்மாஸ்டர் மற்றும் டி.ஈ.ஓ. குழுவுக்கு முன்னால் ஒப்பிப்பது போல, வழியில் சில அசம்பாவிதங்களுடன் சொல்லிற்று.

    'நேத்து மழையிலே நனைஞ்சா. தொண்டை கட்டிண்டு இருக்கு!’ பாட்டு என்கிற தேர் நிலைக்கு வந்தவுடன், கதவு வியாக்யானம் கொடுத்தது.

    'எப்படி?' என்று மாமா கண்ணாலேயே கேட்டார்.

    'லாரின்ஜைடிஸ்' என்றார் பஞ்சாமி. 'மருந்து ஒண்ணும் வேணாம். வெந்நீரில் டேபிள் ஸால்ட் போட்டு கார்கிள் பண்ணினாலே போதும்!' என்று மருத்துவமும் சொன்னார்.

    'நான் பாட்டைப் பற்றிக் கேட்டேன்டா!'

    சொஜ்ஜி, கதம்ப பஜ்ஜிக்கு அப்புறம் காபி. மூன்றுமே அம்சமாக இருந்தன. அதை அங்கீகரிக்கும் வகையில் மாமா மூன்று செல்ல ஏப்பங்களை விட்டார்.

    'பேரென்னம்மா?'

    'காமாட்சி!' என்று கதவிடமிருந்து பதில் வந்தது.

    'எப்படிடா பொண்ணு?' மோட்டர் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டே மாமா கேட்டார்.

    'நீங்கதானே சொல்லணும். உங்களுக்குத்தானே பாத்திருக்கேள்?'

    மாமா அதிர்வேட்டு போட்டது போலச் சிரித்தார். அது போதாது என்று நினைத்து, வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு இரண்டு கைகளையும் தட்டிவிட்டுச் சிரித்தார். கண்களைத் துடைத்துக் கொண்டார்.

    'என்னது? எனக்கா? இந்த வயசிலா?’

    'பின்னே எனக்கா?'

    'மண்டு. உனக்குத்தாண்டா!'

    பஞ்சாமி திருதிருவென்று விழித்தார்.

    'பிடிச்சிருக்கான்னு கேட்டேன். தலையை ஆட்டினியே!’

    'நான் பிடிச்சிருக்குன்னு சொன்னது டிபனை! பஜ்ஜியை, சொஜ்ஜியை!'

    ‘போடா கிராக்கு. உனக்குப் பொண்ணைப் பிடிச்சாச்சுன்னு சொல்லியாச்சு. அடுத்த வாரம் பழம் பாக்கு வெத்தலை மாத்திண்டுடலாம். கல்யாணம் தையிலே.'

    'என்ன மாமா இது?'

    'வண்டியிலே ஏறுடா. உன்னை அல்லால் வேறே கதின்னு’ அந்தப் பொண்ணு உன்னைப் பாத்து வேற பாடி இருக்கு. அப்படி சரணாகதின்னு வர பேஷன்ட்டை, டாக்டரா நீ கைவிட மாட்டே இல்லே. அதே மாதிரிதான் இந்தப் பொண்ணையும் கைவிடக் கூடாது. சரின்னு தலையை ஆட்டிடு. வேற வழியே இல்லை!'

    மிரளும் நினைவுகளில் ஆழ்ந்திருந்த பஞ்சாமி, ஒரு உலுக்கலுடன் நிகழ்காலத்துக்கு வந்தார். உடம்பு வியர்த்து விட்டிருந்தது.

    'என்ன, சத்தத்தையே காணும்? சிலையா, அம்மியா?' காமாட்சியின் குரல் கணீரென்று வந்து தாக்கி, உளியைப் பற்றிய சம்பாஷணையை நினைவு கூறியது.

    'தேங்காயை உடைக்கணும்டி. பூஜைக்குத் தேங்காயை உடைக்கணும். அதுக்குத்தான் உளியைத் தேடறேன். போறுமா?'

    குட்டிச்சாத்தான் மெகா சீரியல்களில் விசுக்கென்று கதாநாயகி முன் தோன்றும் அம்மன் வேகத்தில், பஞ்சாமி முன் காமாட்சி திடீரெனத் தோன்றினாள்.

    'நீங்களும் உங்க ஞாபக சக்தியும். இந்தத் தேங்காய், பூஜைக்கு உடைக்க இல்லை. தெருக்கோடி பிள்ளயாருக்கு சூரைத் தேங்காய் போடத்தான். வேற யாரும் இல்லை. போய் போட்டுட்டு வாங்கோ.'

    சூரைத் தேங்காய் என்றவுடன், பஞ்சாமிக்கு முகம் வெளிறியது. கைகள் துடித்தன. கால்கள் துவண்டன. கையில் இருந்த தேங்காய், ஆர்ம்ஸ் டீலரிடமிருந்து சாம்பிளாக வந்த ஹான்ட்டு கிரனேடாக கனத்தது.

    'என்ன, கிளம்பலையா?'

    'இதோ!'

    பள்ளிக்கூடம் அருகில் இருந்த அருள்மிகு விளையாட்டு விநாயகர் கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. பரீட்சைகள் முடிந்து விட்டபடியினால், மாணவ மாணவியர்கள் விநாயகர் தயவிலிருந்து வீ.சி.டிக்களுக்கும், கணபதியிடமிருந்து கணிணி கேம்ஸ்களுக்கும் தாவி இருந்திருக்க வேண்டும்.

    கையில் தேங்காயுடன் வந்த டாக்டர் பஞ்சாமி, மிதிலையில் ஜனகரின் வில்லை உடைக்க வந்த, தோள் தேடினால் தோளே காண முடியாத மூன்றாம்தர மன்னர்களில் ஒருவர் மாதிரி தேங்காயைப் பீதியுடன் பார்த்தார்.

    கோயில் வளாகத்தில் இரண்டு வயசாளி காக்கைகளைத் தவிர வேறு யாரும் இல்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1