Ponni Punal Poombavai
()
About this ebook
காவிரிப்பூம்பட்டனத்தின் நீண்ட காவிரிக் கரை மீது வீரசிம்மன் என்னும் இளைஞன் நடந்து கொண்டிருந்தான். அப்போது மனதில் தீடீர் தோன்றிய எண்ணத்தால் காவிரியை நோக்கி இருகரம் கூப்பித் தொழுதான். அதே சமயம் மிக அருகிலிருந்து ஒரு பெண் அலறும் ஒலி கேட்டிக் கொண்டிருந்தது. யார் அந்த பெண்? யார் அந்த வீரசிம்மன்? வேற்று மொழிச் சாயலில் தமிழ் பேசும் கந்தபீமனும், ரங்கம்மாவும், ஒரு அழகிய இளம்பெண்ணும் சோழ தேசத்திற்குள் எதற்காக வந்துள்ளனர், பின்னர் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன? என்பதைப் பற்றியும் வாருங்கள் வாசித்து அறிந்துக் கொள்வோம்…!
Read more from Gauthama Neelambaran
Sethupandhanam Rating: 5 out of 5 stars5/5Macedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsChola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsRajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Bhuvana Rating: 0 out of 5 stars0 ratingsSuthanthira Vengai Rating: 5 out of 5 stars5/5Eezhavendhan Sangili Rating: 0 out of 5 stars0 ratingsGauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsVeera Thalapathy Rating: 0 out of 5 stars0 ratingsSarithiram Pottrum Sambavangal Rating: 0 out of 5 stars0 ratingsMannan Maadathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsIval Devathai Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Nathi Rating: 0 out of 5 stars0 ratingsBuddhar Piran Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Yutham Rating: 0 out of 5 stars0 ratingsKalinga Mohini Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyamaai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Kottai Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Harry Potter Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Vettri Thilagam Rating: 0 out of 5 stars0 ratingsSivaneri Seelargal Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Alaivarisai Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ponni Punal Poombavai
Related ebooks
Kulothungan Sabatham Rating: 4 out of 5 stars4/5Mullai Paattu Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nayagi Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi Part - 2 Rating: 3 out of 5 stars3/5Ponniyin Selvan - Part 1 Rating: 5 out of 5 stars5/5Gangapuri Kavalan Part - 2 Rating: 5 out of 5 stars5/5Vanadeviyin Maindhargal Rating: 0 out of 5 stars0 ratingsKalkiyin Ponniyin Selvan Kathai Surukkam Rating: 0 out of 5 stars0 ratingsVeera Thalapathy Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsKanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Vallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsVandhiyathevan Vaal Rating: 4 out of 5 stars4/5Mohini Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMaravarman Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratingsPoonaachi Allathu Oru Vellatin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Ilakkia Inbam Rating: 0 out of 5 stars0 ratingsNaaga Salangai Rating: 5 out of 5 stars5/5Kalvanin Kaadhali Rating: 5 out of 5 stars5/5Yaazhisai Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 2 Rating: 5 out of 5 stars5/5Pandiyan Magal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvizhaa Rating: 0 out of 5 stars0 ratingsIshwara Allah Tere Naam Rating: 0 out of 5 stars0 ratingsVijaya Deepam Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ponni Punal Poombavai
0 ratings0 reviews
Book preview
Ponni Punal Poombavai - Gauthama Neelambaran
https://www.pustaka.co.in
பொன்னிப் புனல் பூம்பாவை
Ponni Punal Poombavai
Author:
கெளதம நீலாம்பரன்
Gauthama Neelambaran
For more books
https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
அந்த இளங்காலைப் பொழுதில், வீரசிம்மன் காவிரி நதியின் கரைமீது நடந்து கொண்டிருந்தான். இடம் காவிரிப்பூம்பட்டினமே தான். கடற்காதலனைத் தழுவும் ஆவலோடு விரைந்தாலும், காவிரிப்பாவை நளினம் குலையாமல், ஒல்கி ஒசிந்து நிதானமாகவே சென்று கொண்டிருந்தாள். அலையோட்டத்தில் ஆர்ப்பரிப்பு இல்லை. ஆனால், காவிரியான் வருகை கண்டு கடலரசன் மட்டும் மோகப் பரவசமுற்று கூத்தாடிக் கொண்டிருக்கிறான்.
அது, புலர்காலை பொழுதல்ல! வளர்காலை என உரைப்பதே பொருத்தம். வெயில், மலை மலையாக வளர்ந்து கிடக்கும் மாமரக் கூட்டங்களுக்கு மேலெழுந்து வந்து விட்டிருப்பினும், வானில் மேக மூட்டம் சற்று அடர்த்தியாகக் குவிந்து கிடப்பதால், சூரியன் இன்று சுளீர்ச் சாட்டையை இன்னும் கொடுக்கவில்லை. மழைத்தூறல் வரக்கூடும் என்று சொல்லிக்கொண்டிருந்தது, இதமாக வீசும் குளிர் காற்று.
வீரசிம்மன், காவிரி பற்றியும் காவிரிப்பூம்பட்டினம் பற்றியும் பல்வேறு நினைவுகளை மனதில் ஓடவிட்டவாறே கிழக்கு நோக்கி, வடகரையில் நடந்து கொண்டிருந்தான். சிலப்பதிகாரம், மணிமேகலை என இரண்டு அற்புதமான காப்பியங்களைத் தமிழுக்குத் தந்த காவிரிப்பூம்பட்டினம், தொன்மையான சிறப்புகள் பலவற்றைப் பெற்று, சோழர்களின் புகழ்மிகு தலைநகரங்களில் ஒன்றாகவும் திகழ்வதை அனைவரும் அறிவர். பெரிபுளுஸ், டாலமி போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்கள் வந்தபோது காவிரி கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில், பல கலங்கள் வந்து நிற்குமளவு ஆழம் இருந்ததாம். யவன மரக்கலங்கள் அங்கு வந்து நின்றதும், அந்த வெளிநாட்டு வணிகர்கள் பலரும் படகுகளை எடுத்துக்கொண்டு, காவிரியில் வெகுதூரம் பயணம் செய்து, தமிழ்நாட்டின் இயற்கை அழகை ரசிப்பார்களாம்.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்திலிருந்து வந்தவர்கள்... இன்னும் சீன தேசத்துப் பயணிகள் போன்ற ஏராளமான வெளிநாட்டினரின் வித்தியாசமான உருவங்களைக் கண்டு மகிழவும், அவர்களுக்குத் தேவையான தின்பண்டங்களை, மா, பலா, வாழை போன்ற கனிகளை வழங்கி, அதற்குப் பிரதி உபகாரமாய் அந்த வெளிநாட்டினர் அளிக்கும் அன்பான பரிசுப் பொருள்களைப் பெறவுமாய் ஏராளமான சோழநாட்டுச் சிற்றுர் மக்கள், காவிரியின் இரு மருங்கிலும் கூடி நிற்பார்களாம். அது ஒரு விலை வாணிபம் போலன்றி, அன்புப் பரிவர்த்தனையாகவே இருக்குமாம்.
இதையெல்லாம் எண்ணித்தான் கரிகால சோழர் தலைநகர் என்னும் சிறப்பை உறையூரிலிருந்து இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றி அமைத்தார். ‘ராமன் இருக்குமிடம் அயோத்தி’ எனப்படுவது போன்று, அரசன் எங்கே வசிக்கிறானோ, அவ்வூரே தலைநகர் என்கிற சிறப்பைப் பெற்று விடுகிறது. அப்படி ஆயிரம் ஆண்டுச் சிறப்பு இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு உண்டு என்றாலும், தொடர்ந்து பல சோழ அரசர்கள் இங்கேயே வசித்திராதது ஏனென்று புரியவில்லை. விஜயாலய சோழர் தஞ்சை மாநகரையே பிரதானமாய் ராஜதானியாய் அமைத்துக்கொண்டார். ராஜராஜ சோழரும் அதையே விரிவாக்கி, தஞ்சைப் பெருவுடையார் கோயிலையும் நிர்மாணித்து உலகப் பிரசித்தமாக்கினார். சில தலைமுறைகள் கீர்த்தி பெற்றுத் திகழ்ந்த தலைநகர் என்கிற சிறப்பை, ராஜராஜ சோழரின் புதல்வர் ராஜேந்திர சோழர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியமைத்தார். இன்றளவும் அந்த நிலையே நீடித்து வருகிறது. இப்போதும் காவிரிப்பூம்பட்டினம் புகழ் மங்கிப் போய்விடவில்லை. பரபரப்பான வாணிபத் தலமாகவே திகழ்ந்து வருகிறது. அரபு நாட்டிலிருந்தும், சீனத்திலிருந்தும் இன்னும் பல புதிய தேசங்களிலிருந்தும் வணிக மரக்கலங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு அடையாளமே போன்று அதோ கடல் தேர்களைப் போன்ற பல மரக்கலங்கள் அசைந்தாடி நிற்கின்றன. மருவூர்ப்பாக்கத்தில் கலங்கரை விளக்கம் கோபுரமாய் எழுந்து நிற்கிறது. துறைமுகம் பரபரப்பாக இயங்குகிறது. அருகில் ஆயத்துறைகள், சுங்கம் தவிர்த்த பொதிகளின் சோதனைக் கூடம், பண்டகசாலைகள், அயல் தேசங்களிலிருந்து வந்து செல்லும் வணிகர்கள் தங்கும் குடியிருப்புகள் எல்லாம் இருக்கின்றன.
ஆனாலும், பழைய பழக்கம் காரணமாகப் பலர் இங்கு வந்தாலும், புதிய துறைமுக நகரமாக நாகப்பட்டினம் தான் பிரபலமாகி வருகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை நாட்களிலேயே ஒரு பெரிய கடற்கோள் வந்து, காவிரிப்பூம்பட்டினம் அழிந்து போனதாகவும் கூறப்படுகிறது. மணிமேகலை, மணிபல்லவத் தீவிற்குச் சென்று திரும்பியபோது, புயலும் சூறாவளியும் பூம்புகார் நகரையே சிதைத்து, சின்னாபின்னப்படுத்தி விட்டதைக் கண்ணுற்றிருக்கிறாள். கடல் பெரும் பகுதி நகரத்தை விழுங்கிவிட்டதைக் கண்டு, அவள் காஞ்சி மாநகருக்குச் சென்றதாக ‘மணிமேகலை’ நூல் கூறுகிறது. அழிந்தவை போக, மிச்சமுள்ள பகுதிகளே இப்போதுள்ள பூம்புகார்.
காவிரி நதியும் முன்பு கரிகாலர் காலத்தில் இருந்தது போன்று இப்போது, ஆழமான மடுக்களை உடைய, முகத்துவாரம் வரையிலான நீட்சியைக் கொண்டதாக இல்லை. எப்போதும் பெருவெள்ளப் பிரவாகம் என்கிற நிலையெல்லாம் இப்போது இல்லை.
திருமாவளவன், வடநாட்டுப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இமயத்தில் புலிச்சின்னம் பொறித்துத் திரும்பும்போது, பல வடநாட்டு மன்னர்கள் பல்வேறுவிதமான காணிக்கைகளை அவருக்கு அளித்தனராம். அதில் வச்சிரநாட்டான் அளித்த ‘முத்துப்பந்தர்’, மகத நாட்டு மன்னன் அளித்த வித்தியா மண்டபம், அவந்தி மன்னன் உவந்தளித்த தோரணவாயில் ஆகியவை மிகவும் விலை மதிப்பற்றனவாகவும், அதிசயிக்கத்தக்கனவாகவும் இருந்தமையால், அம்மூன்றினையும், ‘சித்திர மண்டபம்’ என்னும் ஒரு மகா மண்டபத்தில் காட்சிப்பொருள்களாக வைத்திருந்தாராம் திருமாவளவன்.
அந்த அற்புத மண்டபமும், இன்னும் சிலப்பதிகாரம் வியந்து பேசும், ‘வெள்ளிடை மன்றம்’, ‘நெடுங்கல் மன்றம்’, ‘பூத சதுக்க மன்றம்’, ‘பாவை மன்றம்’ போன்ற புகழ் பூத்த இடங்களும் இப்போது எங்கே போயின? காலம் அழித்ததோ, அன்றி கடல்தான் விழுங்கியதோ, ஆயினும் புகார் நகரம் இன்னும் மிச்ச சொச்ச கீர்த்திகளுடன் இருக்கத்தான் செய்கிறது.
இப்படிப் பல சிந்தனைகளுடன், காவிரிப்பூம்பட்டினத்தின் நீண்ட காவிரிக்கரை மீது நடந்து கொண்டிருந்த வீரசிம்மன் என்னும் அந்த இளைஞன், ஓரிடத்தில் நின்று, திடீரென மனதில் தோன்றிய எண்ணத்தால் காவிரியை நோக்கி இருகரம் கூப்பித் தொழுதான்.
‘வாழிய வன்றன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய்; வாழி காவேரி!
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியா தொழுகல் உயிரோம்பு (ம்)
ஆழியாள்வான் பகல் வெய்யோன்
அருளே; வாழி காவேரி.’
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரப் பாடலை அவன் வாய் முணுமுணுத்தது. அதே சமயம் மிக அருகிலிருந்து ஒரு பெண் அலறும் ஒலி நாராசமாய் அவன் செவிகளைத் துளைத்தது. சற்று தொலைவில் வரும்போதே அங்கு இரண்டு மூன்று பெண்கள் நீராடுவதை அவன் கவனித்திருந்தான். ஒரு மருத மரம் சாய்வாக வளர்ந்து, பெரிய கிளை ஒன்று காவிரியின் உட்புறமாய் நீண்டு கிடந்தது. பெண் எழுப்பிய ஒலமும் அதைத் தொடர்ந்து மற்ற பெண்களின் கூக்குரலும் கேட்ட மறுகணம், வீரசிம்மன் அந்த மருத மரத்தின்மீது சரேலெனப் பாய்ந்து ஏறி, அங்கே என்ன அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என்று நோக்கினான்.
காவிரி அந்த இடத்தில் பரம சாது. ஆழமான மடுக்களோ வேகமான சீற்றமோ இல்லை. ஆபத்து நேர்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத அப்பகுதியில், இடுப்பளவு நீரோட்டத்தில் இந்தப் பெண்களுக்கு அப்படியென்ன இன்னல் விளைந்திருக்கும் என்று யோசித்த வண்ணம் மருத மரத்தில் ஏறிப்பார்த்த வீரசிம்மன், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானான். அங்கே ஒரு முதலை வாயைப் பிளந்தபடி ஓர் இளம் பெண்ணை நெருங்கிக்கொண்டிருந்தது. நீருள் மூழ்கி எழுந்த அவள் எதேச்சையாக அதைக்கண்டு அலறியிருக்கிறாள். சற்று விலகினாற் போன்று நீராடிய மற்ற இரண்டு மூன்று பெண்களும் இக்கோரக் காட்சியைக் கண்டு, ஐயோ! யாராவது வந்து காப்பாற்றுங்களேன்
என ஒலி எழுப்பியபடி அச்சத்தால் உறைந்துபோன முகங்களுடன் நின்றிருந்தனர்.
ஒரு கணம் தாமதித்தாலும் அந்த இளம் பெண்ணின் தலையை முதலை கவ்விவிடும் என்பதை உணர்ந்த வீரசிம்மன், தன் இடைக்கச்சில் செருகியிருந்த குறுவாளை உருவிக்கொண்டு, மருத மரத்தின் நீண்டு கிடந்த கிளையில் ஓடி, அங்கிருந்து நீருள் பாய்ந்தான். இலக்கை மிகத்துல்லியமாகத் தீர்மானித்து, அவன் முதலையின் வலப்புறமாய் குதித்திருந்தான். அந்தப் பேரரவம் கேட்டு முதலை தன் தலையைச் சற்று திருப்பிய தருணத்தில், பெண்ணே! நீ விரைவாக ஓடிக் கரையேறி விடு. மற்ற பெண்களும் கரையேறட்டும். நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன்
என்றான்.
அச்சத்தில் உறைந்துபோய், முகம் வெளிறிக்கிடந்த அந்த இளம் பெண், இன்னது செய்வதென்று புரியாமல் ஒரு கணம் அங்கேயே திகைத்து நின்றாள். அவளருகே பாய்ந்து வந்த இன்னொரு பெண், மோகினி, வா இந்தப்பக்கம்
என்று இரைந்து கூவி அவளின் கரம் பற்றி கரை நோக்கி இழுத்தாள்.
இல்லை ரங்கம்மா... பாவம் இவர், நமக்காக...
என ஏதோ சொல்ல முயன்ற அப்பெண்ணை, முரட்டுத்தனமாக இழுத்துச்சென்று கரையேற்றினாள் ரங்கம்மா. மற்ற பெண்களும் பதறியடித்துக் கரையேறினர்.
தன்னையே பரிதாபமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு கரையேறிய அவ்விளம் பெண்ணை ஏறிட்டு நோக்கவும் அவகாசமற்ற நிலையில், வீரசிம்மன் தன் கையிலிருந்த குறுவாளை ஓங்கி முதலையின் கண்ணை நோக்கிப் பாய்ச்சினான். ஆனால், குறுவாள் குறி பிசகி முதலையின் கழுத்தில் புதைந்தது. அதை இலட்சியம் செய்யாத அம்முதலை, எப்படியும் அவனை வளைத்துத் தன் பிடிக்குள் சிக்கவைக்கும் நோக்கில் வாலைச் சுழற்றியடித்தது. வாயைப் பிளந்து அவன் தலையைக் கவ்வத் துடித்தது.
வீரசிம்மன் மருத மரத்துக் கிளையில் தாவியேறும்போதே தன் மேல் உத்தரியத்தை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். இப்போது அதை அவிழ்த்து, முதலையின் பிளந்த வாய்மீது விசிறி அதைக் கட்ட முயன்றான். அது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. அவனைத் தாக்குவதில் அதன் ஆக்ரோஷம் அதிகரித்தது. கால்களால் அவன் மார்பில் பிறாண்டியது. பெருகும் குருதி, வலி எதையும் பொருட்படுத்தாமல் அதனுடன் போராடிய வீரசிம்மன், ஒரு வழியாக உத்தரியத் துண்டால் அதன் வாயைச் சுற்றிக்கட்டினான். அது ஒன்றும் பலமான கட்டு அல்ல: அந்தச் சிக்கலை விலக்கி வாயை மறுபடி பிளக்க அதற்கு ஒரு சில நொடிப்பொழுது தேவைப்படும்; அவ்வளவே. அதற்குள் அவன் ஏதாவது செய்து தப்ப வேண்டும்.
ஆனால், முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்று ஒரு சொல் வழக்கு உண்டே! அது அவனைக் கரையேற விடுவதாக இல்லை. புரண்டும் சுழன்றும் ஆர்ப்பாட்டம் பண்ணியது. நெடுநேரப் போராட்டத்திற்குப் பிறகு அவன் எப்படியோ அதன் வாலைப் பிடித்து இழுத்து, மின்னல் வேகத்தில் சுழற்றிக் கரை நோக்கி வீசியெறிந்தான். தண்ணீரில் மீண்டும் அது தாவாமல் தடுக்கவேறு அவன் போராட வேண்டியிருந்தது. அப்படி அந்த முதலையைக் கரை மேட்டில் இழுத்தும் புரட்டியும் தள்ளும்போதே அவன், அதன் கழுத்தில் புதைந்திருந்த குறுவாளைப் பிடுங்கி, மேலும் இரண்டு மூன்று குத்துகள் குத்தினான். அங்கே பெண்கள் எழுப்பிய கூக்குரல் கேட்டு, மாந்தோப்புப் பக்கமிருந்து ஆட்கள் பலர் ஓடிவந்து சூழ்ந்தனர். சில சிறுவர்களும் இருந்தனர். பிறகு கேட்க வேண்டுமா என்ன? ‘நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற’ என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கு அங்கே நிதர்சனமாகிக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவனும் அதை ஓர் உதை உதைத்துத் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த முயல, சிறுவர்கள் கல்லெறிந்து, கை கொட்டிக் குதூகலிக்க, ஒரு பெரியவர் வீரசிம்மன் அருகில் வந்து, தம்பி! நீ யாரோ, எவரோ... இந்தப் பெண்கள் உயிரைக் காக்க, உன் உயிரைத் துச்சமெனக் கருதிப் போரிட்டிருக்கிறாய். உன் வீரம் சங்கத்தமிழ் வீரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்படியொரு காட்சியை நான் என் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. உன்னைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளும் இல்லை...
என்றார்.
நன்றி ஐயா. இந்த இடத்தில் முதலை எப்படி, எங்கிருந்து வந்தது? வியப்பாக இருக்கிறதே.
உண்மைதான். நானறிந்து காவிரிப்பூம்பட்டினத்தில் முதலை ஏதும் கிடையாது. இங்கு ஆழமான மடுக்கள் எங்குமில்லை. எங்கிருந்தோ இது தப்பி வந்திருக்கிறது...
வேறு ஒருவர் தாத்தா! கொஞ்ச நாளாகவே இந்தப் பக்கம் ஆட்டுக்குட்டிகள், கோழிகள் காணாமல் போயின.
ஒரு நாள் ஒருவன், ‘கருக்கலில் காவிரிக்கரையில் கிடந்த மரக்கட்டையில் தடுக்கி விழுந்தேன். திடீரென அக்கட்டை காவிரியில் போய் தொபுக்கடீரென்று விழுந்தது’ என்று கூறிக்கொண்டிருந்தான். இன்னொருவன், என் குடிசையின் பின்னால் ஏதோ ஒரு உருவம் கிடந்தது. மரக்கட்டைன்னு நினைத்தேன். அதற்குள் அது உருண்டு காவிரியில் போய் விழுவதைப் பார்த்தேன். கருக்கல் பொழுது என்பதால் அது என்ன என்று ஊகிக்க முடியவில்லை. இப்போது புரிகிறது, அதற்கெல்லாம் இதுதான் காரணம் என்பது
என்றான்.
‘காரணம் அந்த முதலை மட்டும்தானா... அல்லது அதன் பின்னால் ஏதும் சதி வேலைகள் இருக்குமா?’ என்கிற எண்ணங்கள் ஓடின வீரசிம்மன் மனதில்.
அப்போது அங்கே ஓடிவந்த ஆஜானுபாகுவான ஒருவன், பதைபதைப்புடன், ரங்கம்மா
என்று கோபக்குரல் கொடுத்தவாறே பாய்ந்து அவள் கன்னத்தில் பளீரென்று அறைந்தான். என்ன காரியம்டி செஞ்சுட்டே, இந்தப் பொண்ணை வெளியே கண்ட இடத்துக்கும் கூட்டிகிட்டுப் போக வேணாம்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? முதலைகிட்ட இந்தப் பொண்ணு மாட்டியிருந்தா, நம்ம கதி என்ன ஆவும்னு உன் புத்தியில எட்டலியா?
என்று கத்தினான்.
அந்த முரட்டு மனிதன் பேசும் விதம், பிற மொழிக்காரர்கள் பேசும் தமிழ்போல் இருப்பதை வீரசிம்மன் கவனித்தான். அதேசமயம், அங்கு முதலையிடம் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பியிருந்த மோகினி என்கிற அந்த இளம்பெண், கந்தபீமா, ரங்கம்மாவைக் கோபிக்காதே. முதலில் நீ இந்த இளைஞருக்கு நன்றி சொல். இவர் மட்டும் வராதிருந்தால், இந்தக் கணம் நான் உயிருடன் இங்கு நின்றிருக்க முடியாது
என்றாள்.
அவள் குரலில் அதிகார மிடுக்கும் கட்டளையிடும் தொனியும் புலப்படுவதை வீரசிம்மன் கவனிக்கத் தவறவில்லை.
ஆகிருதியுடனும் ஆஜானுபாகுவாகவும் தோன்றிய அம்மனிதன், அந்தச்சிறு பெண்ணின் கட்டளை கேட்ட மறுகணம், அதீத பவ்யம் காட்டி, நெஞ்சு நிமிர்வை ஒடுக்கி நின்றவனாய், மோகினி, நீ செய்வதெல்லாம் சரியா, சொல். உன்னைக் கண்டிக்கவும் என்னால் முடியவில்லை. விளைவை அறியா உன் விளையாட்டுத்தனங்களைத் தடுக்கவும் என்னால் முடியவில்லை
என்று தன் ஆதங்கத்தையும் பணிவுடன் வெளிப்படுத்தினான். பிறகு வீரசிம்மன் பக்கம் பார்வையை திருப்பி, அடடே! நீங்கதானா தம்பி! எங்க மோகினிக்கு எங்கே ஆபத்து வந்தாலும், அதைத்தடுக்க நீங்க வந்துடறீங்களே! நேற்றும் இன்றும் இவங்க உயிர் உங்களாலதான் காப்பாற்றப்பட்டிருக்கு. உங்களுக்கு நாங்க எப்படி நன்றி சொல்லப்போறோம்னே தெரியலே. ரொம்ப நன்றி தம்பி! வீரசிங்கம்னா உண்மையாகவே நீங்க வீரசிங்கம்தான். பாருங்க, மாருலயும் தோள்லயும் எவ்வளவு காயம்! முதலை எவ்வளவு ஆக்ரோஷமா தாக்கியிருக்குனு இந்தக் காயங்களே சொல்லுதே. வாங்க தம்பி, மருத்துவர்கிட்ட கூட்டிக்கிட்டு போறேன்
என்று கூறி, அவனருகே வந்து நின்று தோள் தழுவி, தாங்கிப்பிடித்தான்.
கந்தபீமனின் பரிவுக்கு நன்றி கூறிய வீரசிம்மன், இல்லையில்லை... நானே மருத்துவரிடம் போய்க்கொள்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நடந்த விபரீதத்தில் உயிர்தப்பி, அதிர்ந்து போயிருக்கிற அந்தப் பெண்ணை அழைத்துச்சென்று ஆசுவாசப்படுத்துங்கள். கோபிக்க வேண்டாம்
என்றான்.
அவனுடைய வற்புறுத்தலால் கந்த பீமன் அந்தப் பெண்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். மோகினி முகம், தோள், இடுப்பென்று எங்கும் ஈரத்துடன் அலையலையாய்ப் படிந்து கிடக்கும் கூந்தலைத் துடைக்கவோ சரிசெய்யவோ தோன்றாமல் வீரசிம்மனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.
அவளை இரண்டொரு நாட்களுக்கு முன்புதானே சென்று காப்பாற்ற நேர்ந்த சம்பவத்தை எண்ணியபடியே வீரசிம்மன் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான்.
வீரசிம்மன் என்கிற அந்த இளைஞன் யார்?
அவனால் இருமுறை காப்பாற்றப்பட்ட அந்த இளம்பெண் மோகினி யார்?
வேற்று மொழிச்சாயலில் தமிழ் பேசும் கந்தபீமனும், ரங்கம்மாவும், மோகினி என்கிற அந்த அழகிய இளம்பெண்ணும் சோழ தேசத்திற்குள் எதற்காக வந்துள்ளனர்?
2
சோழமாதேவியாரிடமிருந்து அப்படியொரு வினாக்கணை புறப்பட்டு வந்து தம்மைத் தாக்குமென்று அநபாய மூவேந்தவேளார் சற்றும் எண்ணவில்லை; எதிர்பார்க்கவில்லை.
இளவரசன் இராஜராஜன் எங்கே போயிருக்கிறான்?
இதுதான் சோழமாதேவியார் கேட்க விரும்பியது. ஆனால், இனம்புரியாத சினம், சீற்றம், உள்ளார்ந்த கவலைகளின் கலவையாக,
இந்த அரண்மனையில் என்னதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது? எனக்கு எதையுமே தெரியவிடாமல், எப்போதுமே மூடி மறைத்துவிட எண்ணுகிறீர்களா...?
என அவர் வினவியதும், என்ன மறுமொழி கூறுவதென்று புரியாமல் ஒரு கணம் திகைத்தே போனார், மூவேந்தவேளார்.
அரசியாருக்குத் தெரியாமல் நான் எதையும் மறைப்பதா? அப்படி எந்தக் காரியமும் இங்கே நிகழவில்லையே... தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெளிவாக்கினால் நல்லது. நான் விளக்கம் கூற அது பேருதவியாக அமையும்...
என்றார், அவர் மெத்தப்பணிவுடன்.
நான் என்ன கேட்கிறேன் என்பது புரியவில்லையா?
புரியவில்லை மகாராணி.
வேளாரே! எதுவும் புரியாதவர் போன்று பேச வேண்டாம். உமக்குத் தெரியாமல் இந்தக் கங்காபுரி அரண்மனையில் ஒரு செயலும் நடவாது என்பதை நானறிவேன். மாவீரர் மட்டுமல்லாது, மகாராஜாவின் அந்தரங்கச் செயலாளராகவும் திகழ்பவர் நீர். இளவரசன் இராஜராஜன் எப்போது, எங்கே போவதானாலும் உம்மிடம் சொல்லாமல் செல்வதில்லை என்பதையும் நானறிவேன். என்ன காரணத்தாலோ அவனுக்கு இந்த அரண்மனையில் தங்கியிருக்கவே பிடிப்பதில்லை. அடிக்கடி வெளியேறி, ஊர் சுற்றுகிறான். உம்மிடம் சொல்வதோடு சரி. அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான்... எதுவுமே எனக்குத் தெரிவதில்லை. பெற்ற தாயிடமே பிணங்கித் திரிவது போன்றிருக்கிறது அவன் செய்கை.
அரசியாரின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் இதற்குப்போய் இத்தனை பெரிய கடுமை காட்ட வேண்டுமா என்பதுதான் புரியவில்லை. இளவரசர் அடிக்கடி இப்படி ராஜமாளிகையிலிருந்து வெளியேறிச் செல்வது இயல்பான ஒன்றுதான். அவர் அந்நிய தேசம் எதற்கும் சென்று விடவில்லை; சோழ நாட்டிற்குள்தான் உலவுகிறார். மாளிகைக்குள் அடைந்து கிடக்கிற வயதல்ல அவருடையது. மேலும் ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் வெளியே எங்கும் செல்ல வேண்டும் என நான் எதிர்பார்ப்பதும் சரியல்ல. அவர் அரசகுமாரர்... எனக்கென்று ஓர் எல்லை இருக்கிறது மகாராணி...
"மூவேந்த வேளாரே, விவரம் புரிந்துதான் இப்படிப் பேசுகிறீரா...? தகடூர் அதியமான் வந்திருக்கிறார்... திருக்கோவலூர் மலையமான் வந்திருக்கிறார்... இன்னும் கச்சிராயர், கடம்பராயர், காடவராயர், சம்புவராயர் என்று பல சிற்றரசர்கள் வந்துள்ளனர். அநபாய குலோத்துங்க சோழ மகாராஜா உடல் நலமற்றுப் படுத்துக்கிடக்கிறாரே என்கிற ஆழ்ந்த கவலை அவர்களுக்கு, மன்னரின் உடல் நலன் பற்றி விசாரிக்க வந்திருக்கும் அவர்கள், இளவரசனைப் பார்க்கவேண்டும் என்கின்றனர். அவர்களுக்கு நான் என்ன மறுமொழி கூறுவது? ‘அநபாயர்’ என அரசரின் விருதுப் பெயரை உமது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் நீரோ, ‘எனக்கு எதுவும் தெரியாது; என்னை எதுவும் கேட்காதீர்கள்’ என்கிற விதமாகப் பேசுகிறீர். நன்றாக இருக்கிறது சோழ மாமன்னரின் அந்தரங்கச் செயலாளர் பேச்சு. ‘சோழப் பேரரசு இனி அவ்வளவுதான்... முன்புபோல் அத்தனைக் கட்டுக்கோப்பு இப்போதெல்லாம் இல்லை. அரசர் படுத்துவிட்டார். அதிகாரம் செலுத்த ஆளே இல்லை. சோழகுமாரன் பொறுப்பற்ற இளைஞன். சோழ தேசம் இனி மெல்ல மெல்லச் சிதறுண்டு போகும். இதில் ஐயமில்லை...’ என்றே தூர