Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhik Dhik Kathaigal
Dhik Dhik Kathaigal
Dhik Dhik Kathaigal
Ebook236 pages1 hour

Dhik Dhik Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126704269
Dhik Dhik Kathaigal

Read more from Ra. Ki. Rangarajan

Related to Dhik Dhik Kathaigal

Related ebooks

Related categories

Reviews for Dhik Dhik Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhik Dhik Kathaigal - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    திக் திக் கதைகள்

    Dhik Dhik Kathaigal

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கறுப்பு ராஜா

    2. பெங்களூர் தக்காளி

    3. பழுதை என்று மிதிக்க முடியாது

    4. அலை - செருப்பு - அவள்

    5. ஆணி

    6. புதையலும் கட்டை விரலும்

    7. வாடகைக் கள்வன்

    8. ராஜி என் கூட்டாளி

    9. தினமும்

    10. படுகை

    11. மோகனா எங்கே?

    12. வினை

    13. ஜானகிராம் தயாரித்த சப்பாத்தி

    14. தாகம்தான், ஆனால்...

    15. நடு ஸ்டேஷனில்

    16. சாக்லெட் டப்பா

    17. வெளவால்

    18. கழுத்தை நெறித்து...

    1. கறுப்பு ராஜா

    நான் நந்தினி இல்லை என்றாள் நந்தினி.

    பின்னே? என்று ஆச்சரியத்துடன் கேட்டான் இளைய ஜமீந்தார் பூபதி. நந்தினி அப்படிச் சொன்னது மட்டுமல்ல அவன் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம். மணமான இந்த ஐந்து வருடத்தில், அந்தரங்கமாக இருந்தபோதும் சரி... பொது வைபவங்களில் கலந்து கொண்ட சமயங்களிலும் சரி... குடும்பத்தாருடன் சம்பாஷிக்கும் போதும் சரி, அவள் குரல் இந்த மாதிரி தொனித்தது கிடையாது. அது மனிதக்குரல் மாதிரி இல்லாமல், வேறே, வேறே... அது என்னவென்று ஊகிக்க அவனால் முடியவில்லை .

    அவர்கள் ஜமீன் நந்தவனத்தில் தென்றலை அனுபவித்த வண்ணம் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

    வண்ண மயிலொன்று ஒய்யார நடை போட்டு அருகில் வரவே... நந்தினி அதன் தோகையை வருடிக் கொடுத்து, இன்றைக்குக் கொய்யாப்பழம் சாப்பிட்டாயா? என் அப்பா தோட்டத்திலிருந்து வண்டி வண்டியாகப் பறித்து அனுப்பியிருந்தாரே! என்று கொஞ்சினாள்.

    மயில் தலையை ஆட்டியது. இப்போதும் பூபதி கவனித்தான். அவள் குரலின் வித்தியாசத்தைக் கவனித்துத் திடுக்கிட்டான்.

    நான் நந்தினி இல்லை என்று சொன்னாயே, பின்னே யார்? என்று கேட்டான்.

    ராஜா என்று அவளிடமிருந்து பதில் வந்தது.

    ராஜாவா? எந்த ஊர் ராஜா?

    எந்த ஊர் ராஜாவும் இல்லை. நம் திருமணத்தின்போது என் அப்பா சீர்வரிசைகளில் ஒன்றாகக் கொடுத்தாரே, கறுப்பு ராஜா... அதைச் சொன்னேன். பத்து நாள் முன்பு நீங்கள் சுட்டுக் கொன்றீர்களே, அந்தக் குதிரையைச் சொல்கிறேன். அதுதான் இப்போது என் பெயர்.

    உளறாதே! என்று கோபித்தான் பூபதி. அப்படி அதட்டிய விநாடியே அவனுக்குப் பொறிதட்டிய மாதிரி ஓர் உண்மை புலனாயிற்று. நந்தினியின் குரலில் ஏதோ வித்தியாசம் தென்படுவதாகத் தோன்றியதே, அது என்னவென்ற பயங்கரம் தெரிந்தது.

    ஆமாம்... அவளுடைய இனிமையான சாரீரத்தில் ஒரு குதிரையின் கனைப்பு கலந்திருந்தது.

    நந்தினி, என்ன ஆயிற்று உனக்கு? என்று அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கடுமையாகக் கேட்டான்.

    என்ன ஆயிற்றென்று எனக்கே தெரியவில்லை. ஆனால், நீங்கள் சுட்டுக் கொன்ற ராஜா என் சின்ன வயது முதல் என்னுடனே வளர்ந்த பிரியமான குதிரை. அதை நீங்கள் கொலை செய்தது ரொம்பத் தப்பான காரியம். அது எனக்குள் புகுந்து கொண்டு, 'என் பெயர் ராஜா... என் பெயர் ராஜா' என்று மந்திரம் ஜபிக்கிற மாதிரி சொல்லிக் கொண்டேயிருக்கிறது என்றாள் நந்தினி.

    'என்ன இவள், என்னவெல்லாமோ பேசுகிறாள்' என்று திகிலுடன் பார்த்தான் பூபதி. பைத்தியம் போலப் பேசாதே என்று சொல்லும்போது நிஜமாகவே இவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ என்ற பயமும் ஏற்பட்டது. நாலு மாசம் முன்பு, வல்லடம் கிராமத்தில், கங்கம்மன் திருவிழா நடக்கிறதென்று அந்தக் குதிரையின் மீது தானே ஏறிக்கொண்டு போனேன்? சாலையில் ஒரு பள்ளத்தில் நொடித்து அதுவும் விழுந்து என்னையும் தள்ளிவிட்டது. அது முதல் காலை ஒரு தினுசாக இழுத்துக் கொண்டு நடந்தது. சவாரிக்கு லாயக்கில்லை. அதை வைத்துக் கொண்டிருப்பது அசிங்கம்.

    'அதற்காக? பெரிய பாட்டிகூடத்தான் பக்கவாதத்தால் இழுத்து இழுத்து நடக்கிறார். கல்யாணபாளையம் மாமாவுக்குக் கை உதறிக்கொண்டே இருக்கிறது. அவர்களைச் சுட்டுக் கொன்று விடுவோமா?"

    மனிதர்கள் சமாசாரம் வேறு. மிருகங்களின் சமாசாரம் வேறு. ஒப்பிட்டுக் குழப்பாதே. உன் செல்லக் குதிரை ராஜாவை என்ன செய்திருக்க வேண்டும் என்கிறாய்? தீனி போட்டுக் காப்பாற்றுவது தண்டச்செலவுதானே?

    நம் ஜமீனில் பல பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்குக் குதிரையேற்றம் சொல்லித் தருகிறார்களே... அவர்களுக்கு உபயோகப்பட்டிருக்கும். அதோடு, அது ஒன்றும் காலை இழுத்து இழுத்து நடந்த மாதிரி எனக்குத் தெரியவில்லை . அது உங்கள் கற்பனை என்றாள் நந்தினி.

    நன்றாயிருக்கிற குதிரையைச் சுட்டுக் கொல்ல எனக்கு மூளைக்கோளாறா? என்றான் பூபதி கோபமாக. நடந்தது நடந்தாயிற்று. இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?

    ஒன்றும் செய்ய வேண்டாம். செத்துப்போன கறுப்பு ராஜா எனக்குள் புகுந்து கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. என் குரலில் ஏற்பட்டிருக்கிற மாறுதல் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியவில்லையா?

    'நேற்று ஏதோ பூஜை, விரதம் என்று சொல்லிக் குளத்துத் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தாய். அதனால் தொண்டை கட்டிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் வீணை வாசித்தபடி பாடு. சரியாகிவிடும். உள்ளே வா."

    நந்தினியின் இடையை அணைத்துக் கொண்டு அவளை மாளிகைக்கு அழைத்துச் சென்றான் பூபதி. படக்கூடாத ஸ்பரிசம் பட்டுவிட்டது போல அவள் லேசாக விலகிக் கொண்டு நடந்தாள். ஒட்டிப் பழகி இல்லறம் நடத்தி வரும் போது ஏன் அவனிடம் திடீரெனத் தனக்கு ஒட்டுதல் குறைகிறது என்று அவளுக்குப் புரியவில்லை . அதற்குக் காரணம் தன் பிரியத்துக்குரிய குதிரையை அவன் சுட்டுக் கொன்றது மட்டுமல்ல என்றும் தோன்றியது.

    அன்று இரவு சயனத்தின் போது பூபதி அவளை அணைத்துக் கொண்டான்.

    வேண்டாம். கொஞ்ச நாளைக்கு என்னைத் தொடாதீர்கள் என்று முரட்டுத்தனமாகச் சொல்லிவிட்டு நந்தினி நகர்ந்து கொண்டாள்.

    பூபதி ஒன்றைக் கவனித்தான். அவள் வேறு பக்கம் திரும்பி நிற்கும் சமயங்களில், 'நந்தினி' என்று கூப்பிட்டால் அவள் திரும்பிப் பார்ப்பதில்லை. வேறு யாரையோ கூப்பிட்ட மாதிரி பொருட்படுத்தாமல் இருப்பாள். 'ராஜா' என்று கூப்பிட்டால் உடனே திரும்பிப் பார்ப்பாள். அவள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.

    இந்த விசித்திர மாறுபாடுகளை அவன் தன் தந்தையிடமோ, தாயிடமோ சொல்லவில்லை. ஓர் அளவுக்கு அவனிடம் நெருக்கமான மாமனாரிடம் - நந்தினியின் தந்தையான - ஜெகவீரரிடம் மட்டும் சொன்னான்.

    அவர் தனது சொந்த ஜமீனைச் சேர்ந்த ஒரு ஜோசியரை அழைத்து வந்து பூஜைகளை நடத்தினார். பூஜையின் முடிவில் ஜோசியர் சொன்னார் - ஏதோ தோஷம் நடந்திருக்கிறது. ராஜா என்கிற அந்தக் குதிரையைப் புதைத்த இடத்தில் ஒரு ஹோமம் செய்வோம். அதன்பின் வேறொரு உயர்ந்த ஜாதிக் குதிரையை வாங்கி உங்கள் மருமகன் வளர்க்கட்டும். செத்த குதிரையின் ஆவிக்குச் சந்தோஷம் ஏற்படும்.

    அபத்தம்! என்று பூபதி கேலி செய்தபோதிலும், மனைவியின் விருப்பத்துக்கும் மாமனாரின் யோசனைக்கும் இணங்கி, பதினைந்து மைல் தொலைவில் இருந்த தோப்புப் பகுதிக்கு அவர்களை அழைத்துக்கொண்டு போனான். குதிரையைப் புதைத்த இடத்தைப் பூபதி காட்ட, ஜோசியர் பூஜை போட்டார்.

    அடுத்து, வேறொரு உயர்ந்த சாதி குதிரையை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. கடுகத்தனை இடம்கூடக் கறுப்பாக இல்லாமல், முழுக்க முழுக்கப் பால்போல் வெள்ளையாக இருந்த ஒரு குதிரையைக் கோவாவிலிருந்து ஓர் அராபிய வியாபாரி கொண்டு வந்தான்.

    ஆயிரம் பவுனுக்கு அதை விற்ற வியாபாரி, இது ரொம்ப ரோஷமுள்ள ஜாதிக் குதிரை. ஜாக்கிரதையாக நடத்துங்கள் என்று பூபதியிடமும் நந்தினியிடமும் சொன்னான்.

    பூபதி சிரித்தான். அதென்ன ரோஷமுள்ள குதிரை? பிடிக்காதவர்கள் ஏறினால் முரண்டு பிடித்துக் கீழே தள்ளி விடுமோ?

    அப்படியில்லை. மனிதர்களில் இரண்டு வகை உண்டு இல்லையா? அநீதியையோ, அக்கிரமத்தையோ கண்டால் வெளிப்படையாக உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்கிறவர்கள் ஒருவகை. அதுபோல் முரட்டுத்தனமான குதிரைகளும் உண்டு. எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து மறுகிப் போகிற மனிதர்கள் இன்னொரு வகை. இந்தக் குதிரை அந்த இரண்டாவது வகை மனிதர்கள் மாதிரி என்றான் அராபிய வியாபாரி.

    பஞ்சகல்யாணி குதிரை என்கிறார்களே, அது இது தானா? என்று நந்தினி கேட்டாள்.

    பஞ்சகல்யாணி என்று எந்தக் குதிரையும் கிடையாது. அது மிக உன்னதமான குதிரையைக் குறிப்பதற்காகக் கவிஞர்கள் செய்த கற்பனை என்றான் அந்த அராபிய வியாபாரி.

    நான் இதைப் பஞ்சகல்யாணி என்றே கூப்பிடப் போகிறேன் என்று சொன்ன நந்தினி, ஆசையுடன் அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

    பூபதி அவள் பேசுவதைக் கேட்டுப் பிரமித்துப்போய் நின்றான். ஏனெனில், சிறிது காலமாக மாறிப்போயிருந்த அவளுடைய குரல் பழைய இனிமையைப் பெற்றிருந்தது. குதிரைக் கனைப்பின் அறிகுறி கொஞ்சமும் தென்படவில்லை.

    மனைவியிடம் ஏற்பட்ட மாறுதலில் சந்தோஷப்பட்டவனாக பூபதி, நந்தினி, உள்ளே போகலாம், வா. இன்னும் ஏன் அதன் கழுத்தையே கட்டிக்கொண்டு இருக்கிறாய்? என்று சிரித்தான்.

    கொஞ்சம் இருங்கள்... பஞ்சகல்யாணி என்னுடன் பேசுகிறது என்றாள் நந்தினி. சற்று நேரம் கழித்து அதைப் பிரிய மனமில்லாதவளாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பூபதியுடன் மாளிகைக்குள் போனாள்.

    என்ன நந்தினி, என்ன பேசிற்று உன் பஞ்சகல்யாணி? என்று பரிகாசம் செய்தபடி அவளைப் பார்த்த பூபதி பயந்து போனான். அவள் முகத்தில் அப்படியொரு குரோதமும் வெறுப்பும் நிறைந்து அவன் பார்த்தது கிடையாது அதுவரையில். நான்மாட தீபங்களின் வெளிச்சம் அவள் முகத்தின் 'உக்கிரத்தை அதிகப்படுத்திக் காட்டியது. எல்லாம் சரியாகி விட்டது என்று எண்ணியிருந்தவனுக்கு அன்றிரவு படுக்கை அறையில் ஏமாற்றமே கிட்டியது. தூரத்து உறவாக ஒரு கிழவி மாளிகையில் தங்கியிருந்தாள். அவளுடைய அறையில் போய்ப் படுத்துக்கொண்டு விட்டாள் நந்தினி.

    அடுத்த நாள் காலை அவன் பஞ்சகல்யாணி குதிரையில் ஏறிக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

    தனியே செல்வதுதான் அவன் வழக்கம். என்றைக்குமே நந்தினி அவனுடன் சென்றது கிடையாது. முன்னெல்லாம் மாளிகை வாசல் வரை வந்து வழியனுப்புவாள். 'ராஜா' சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வருவது இல்லை. அவன் இரவு வெகு நேரம் கழித்துத் திரும்பும்போது வரவேற்பதும் கிடையாது.

    அது போல அன்றைக்கும் இரவு அவன் திரும்பியபோது அவள் கவனிக்கவில்லை. காலையில் மாளிகையிலிருந்து பார்த்தபோது, வாசலில் பஞ்சகல்யாணி நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதைப் பார்த்தோமே என்ற மகிழ்ச்சி ஒரு விநாடிதான் அவளிடம் நீடித்தது. உற்றுப் பார்த்தாள். கலவரமடைந்தாள். கண்களைத் தேய்த்துக் கொண்டாள். பார்ப்பது உண்மையா, பிரமையா என்று புரியாதவளாக தடதடவென்று படிகளில் இறங்கி, வாசலுக்கு வந்தாள்.

    சூரிய வெளிச்சத்தில் வெகு நன்றாக, துளியும் சந்தேகமின்றித் தெரிந்தது. பஞ்சகல்யாணியின் பின்னங்கால்கள் இரண்டும் கன்னங்கரேலென்று கறுத்திருந்தன. பஞ்சு வெள்ளையாக மற்ற பகுதிகள் இருந்ததால் அந்தக் கறுப்பு பயங்கரமாகத் தனித்துத் தெரிந்தது.

    'எப்படி... ஏன்...?' என்று நந்தினி திகைத்து நிற்கையில், பின்னாலேயே வந்து நின்ற பூபதியும் அப்போதுதான் அதைக் கண்டான். ஒன்றும் புரியாதவனாக அந்தப் பின்னங்கால்களைக் கையாலும் உத்தரீயத்தாலும் துடைத்தான். கறுப்பு போகவில்லை .

    'திரும்பி வரும்போது மழை தூறிக் கொண்டிருந்தது. ஏதாவது சேறு ஒட்டிக் கொண்டிருக்குமோ?" என்றவண்ணம் மறுபடி துடைத்தான். கறுப்பு அகலவில்லை.

    என்னம்மா பஞ்சகல்யாணி, என்ன நேர்ந்தது உனக்கு? என்று நந்தினி அதன் முகத்தை வருடிக் கொடுத்தவாறு விம்மினாள். பஞ்சகல்யாணி வாய்விட்டு எதுவும் பேசவில்லை. நிலத்தை நோக்கியபடி அசைந்து கொண்டு இருந்தது.

    அந்தக் குதிரை வியாபாரி ஏதோ சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறான் என்று கோபமாக முணுமுணுத்த வண்ணம் பூபதி திரும்பிப் போய்விட்டான்.

    இரண்டு நாள் சென்றபின், மறுபடியும் பஞ்சகல்யாணியின் மீது ஏறிக்கொண்டு வெளியே புறப்பட்டான் பூபதி.

    அன்று அவன் திரும்பியபோது, பஞ்சகல்யாணியின் முன்னங்கால்கள் இரண்டும் கறுத்துப் போயிருந்தன.

    "சந்தேகம்

    Enjoying the preview?
    Page 1 of 1