Ilakkiyam Moolam India Inaippu - Part 4
By Sivasankari
()
About this ebook
நான்கு தொகுதிகளைக் கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம், இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பீடித்திருக்கிறது!
கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டிகாண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையில்லிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!
ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Transcribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலி நாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாய் ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது.
சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில், முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும், ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கெளஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர், இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால், தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.
மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது. .
ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை, இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும், இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.
'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புகளையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புகளின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபடவைக்கும்... உறுதியாய்!
- சிவசங்கரி
Read more from Sivasankari
Thavam Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Ivalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Athu Sari Appuram? Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Shantha Yen Azhugiral? Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ilakkiyam Moolam India Inaippu - Part 4
Related ebooks
Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsGangai Karai Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Kadaloora Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsKanthan Varuvaan Rating: 0 out of 5 stars0 ratingsKongu Nattu Koilgal Rating: 0 out of 5 stars0 ratingsIlangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsChola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVendiyana Arulum Thiruthalangal Rating: 0 out of 5 stars0 ratingsMaharashtra Maanilathin 108 Punitha Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsVazhum Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Rating: 0 out of 5 stars0 ratingsIndraiya Thennaga Ilakkiya Pokku Rating: 0 out of 5 stars0 ratingsPuthukavithaigalin Payanam Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Nithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Ithu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsMannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsVaradha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Dharisanam India Payanakathai Rating: 0 out of 5 stars0 ratingsParavasamottum Kandhapurana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ilakkiyam Moolam India Inaippu - Part 4
0 ratings0 reviews
Book preview
Ilakkiyam Moolam India Inaippu - Part 4 - Sivasankari
http://www.pustaka.co.in
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு
(நான்காம் தொகுப்பு - வடக்கிந்திய மொழிகள்)
Ilakkiyam Moolam India Inaippu
(Naangam Thoguppu - Vadakindia Mozhigal)
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
என்னுரை - 1
என்னுரை - 2
என்னுரை - 3
என்னுரை - 4
தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்
பயணக்கட்டுரை
(பேட்டி: கதை / கவிதை)
ஜம்மு, காஷ்மீர்
01.முனைவர் ரஹ்மான் ராஹி
கவிதைகள்
02.முனைவர் ஆர். எல். ஷாந்த்
காலடியில் பூமி
03.முனைவர் நஸீம் ஷஃபாய்
கவிதைகள்
04.முனைவர் நீர்ஜா மட்டூ
மாறிவரும் பார்வை - சில காஷ்மீரிப் பெண் கவிஞர்கள்
ஆய்வுக்கட்டுரை - நவீன காஷ்மீரி இலக்கியம்
பயணக்கட்டுரை
(பேட்டி: கதை / கவிதை)
பஞ்சாப்
01.முனைவர் கே. எஸ். துகல்
இந்த அப்பா எப்போ செத்துப்போவார், அம்மா?
02.முனைவர் குர்தயாள் சிங்
இரு அறைகள்
அஜீத் கெளர்
முட்டுச்சந்து
03.முனைவர் எஸ். எஸ். நூர்
கவிதைகள்
04.பல்பீர் மாதோபூரி
உடைந்த கண்ணாடியின் கதை
ஆய்வுக்கட்டுரை - நவீன பஞ்சாபி இலக்கியம்
உருது
(பேட்டி: கதை / கவிதை)
01.முனைவர் கோபி சந்த் நாரங்
இந்திய இஸ்லாமியக் கலாச்சாரக் கலப்பும் கவ்வாலிக் கழகமும்
02.குர்ரதுலைன் ஹைதர்
ஓர் இந்தியச் சிறுபிராய நினைவுகள்
03.ஜோகீந்தர் பால்
மறுபடியும்
04.பால்ராஜ் கோமல்
கவிதைகள்
05.குல்ஸார்
ராவி நதியில்
ஆய்வுக்கட்டுரை - நவீன உருது இலக்கியம்
பயணக்கட்டுரை
(பேட்டி: கதை / கவிதை)
இந்திமொழிப் பிரதேசங்கள்
01.நிர்மல் வர்மா
விருந்தாளி
02.கிருஷ்ணா ஸோப்தி
கவியும் மேகங்கள்
03.அஷோக் வாஜ்பாய்
கவிதைகள்
04.கம்லேஷ்வர்
உடலினால் மட்டுமல்ல
05.ம்ருதுளா கர்க்
இந்த நூற்றாண்டின் மரம்
06.மோகன்தாஸ் நெமிஷ்ராய்
சுருங்கிய மனிதன்
ஆய்வுக்கட்டுரை - நவீன இந்தி இலக்கியம்
சம்ஸ்கிருதம்
(பேட்டி: கதை / கவிதை)
01.முனைவர் ராஜேந்திர மிஸ்ரா
பெயரில்லாதவள்
கவிதைகள்
02.முனைவர் ஆர். தியாகராஜன்
பண்டைய இந்தியாவில் விமானம் - ஒரு பறவைப் பார்வை
ஆய்வுக்கட்டுரை - நவீன சம்ஸ்கிருத இலக்கியம்
தகவல் குறிப்புகள்
சிவசங்கரி
எழுத்தாளர்களின் விலாசங்கள்
முன்னுரை
'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இந்த மகத்தான இலக்கியப் பணி முடிவுக்கு வரும் தருணம், சிவசங்கரிக்கு நிச்சயம் பெரும் நிறைவைத் தருவதாக இருக்கும். ஆனால், இதைப் பூர்த்தி செய்வதற்குள் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை ஓரளவுக்கு நம்மால் ஊகிக்க முடியும் தான்! தன் எழுத்தாள வாழ்க்கையின் பதினாறு வருடங்களை ஒரு தவமாகவே அவர் இவ்விலக்கியப் பணிக்காக அர்ப்பணித்துள்ளார். எடுத்துக்கொண்ட பணியை ஆக்கபூர்வமாக முடித்து, 'பல மொழிகளில் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றுதான்' என்ற டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே முதல் மூன்று தொகுதிகளைப் படித்திருக்கும் எனக்கு, அச்சேறும் முன்னரே நான்காவது தொகுதியைப் படிக்கும் கௌரவம் கிட்டியிருக்கிறது. இந்த வாசிப்பு, பிற இந்திய மொழிகள், அவற்றின் இலக்கியங்களை அறிந்துகொள்ள பெரிதும் உதவியுள்ளது. சிவசங்கரியே குறிப்பிட்டுள்ள விதத்தில், சக இந்தியர்களை முன்பு எப்போதுமில்லாத அளவில் அறிமுகப் படுத்தியிருக்கிறது. நாடு தழுவிய சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கும்முன், இந்தியர்களையும் அவர்களது கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ளவென, காந்திஜி பாரதம் முழுவதும் பயணித்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். அதைப் போன்று சிவசங்கரியும், நம் நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பயணிரித்து, பல்வேறு மொழி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு, இலக்கிய உலகம் சந்திக்கும் வெவ்வேறு தடங்கல்கள், பிரச்சினைகள் மீதும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்.
இந்த மாபெரும் பணியில் ஈடுபடும் முன்னரே சிவசங்கரியை ஒரு சிறந்த புனைகதை எழுத்தாளராக நான் அறிவேன். ஆனால், 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' நூலின் நான்கு தொகுதிகளும், அவருடைய பல்வேறு திறமைகளையும் எனக்குப் புரியவைத்துள்ளன. வெவ்வேறு மாநிலங்கள் குறித்தான அவரது அற்புதமான பயணக்கட்டுரைகளைத் தனியே தொகுத்தால், மக்களுக்கு இன்னொரு 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' கிடைக்கும் என்றே நம்புகிறேன். பண்டித நேருவின் புத்தகம் இந்தியாவின் பரவலான பெருமைகளை முழுமையாக நமக்கு அறிமுகப்படுத்தியதென்றால், சிவசங்கரியின் இப்பணி நமக்கு இதுகாறும் பரிச்சயமில்லாத 'இலக்கிய இந்தியா'வை மிக ஆழமாக அறிமுகப்படுத்துகிறது.
சிவசங்கரியின் பயணக்கட்டுரைகளின் வர்ணனைகள் விஸ்தாரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதில், வாசகராகிய நாமும் அவருடனே ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரில் கண்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. ஆங்காங்கே தல புராணம், கர்ணபரம்பரைக் கதைகள், இத்தியாதிகளை அள்ளித்தெளித்திருப்பது,.விஷயஞானத்தை அதிகரிப்பதாக இருக்கிறது. புது தில்லியை உருவாக்கிய ராபர்ட்லுட்யன். சண்டிகர் வரைபடத்தைத் தயாரித்தலே கர்புஸியர் ஆகியோரில் தொடங்கி, பேரரசர் சந்திரகுப்த மெளரியரால் கட்டப்பட்ட குதுப்மினார் இரும்புத்தூண் ஏன் துருப்பிடிக்காமல் இருக்கிறது என்பதுவரை, அனைத்து விவரங்களையும் பயணக்கட்டுரைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இவை மட்டுமின்றி, சில நதிகள், ஊர்கள், நினைவுச்சின்னங்களுக்கு அப்பெயர்கள் வரக் காரணம் என்ன, 'உருது', 'காஷ்மீர்' பெயர்களின் மூலகாரணம் என்ன, போஜ ராஜாவின் பெயரால் 'போஜ்பால்' என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இன்றைய 'போபால்' - போன்ற விவரங்கள், வாசகரின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
கர்ணபரம்பரைக் கதைகள்தாம், ஒரு மாநிலத்தின் சமூகக் கலாச்சார வரலாற்றின் பதிவாகத் திகழ்பவை. தனது பயணங்களின்போது கேட்ட அத்தகைய கதைகளை, கவனத்தை ஈர்க்கும் விதத்தில் விவரித்துள்ளார், சிவசங்கரி. கோமந்த்(கோவா) அல்லது சுடலிலிருந்து நிலத்தை மீட்டெடுத்த கேரளக் கடற்கரை - ஆகியவற்றை உருவாக்கிய பரசுராமரின் கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காஷ்மீரப் பள்ளத்தாக்கின் உருவாக்கத்தைப்பற்றி முற்றிலும் மாறுபட்டகதை ஒன்று இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்திலுள்ள ஏரியில் ஒளிந்துகொண்டிருந்த ஐலோட் போவா என்கிற அரக்கன், அப்பகுதியில் வசித்த மக்களைக் கொடுமைப்படுத்தி மிகுந்த துன்பத்துக்குள்ளாக்க, இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த காஷ்யப முனிவர், அம்மலையைக் குடைந்து, ஏரியின் நீரை வடியச் செய்தார். நீர் வற்றிய ஏரிப் பள்ளத்தாக்கில், மலையடிவாரத்து மக்கள் குடியேறியதும், காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்மீர் என்றழைக்கத் துவங்கினார்கள். அதேபோல, வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்பொருட்டு விசிஷ்த ஆற்றின் நீரை ஒழுங்குபடுத்திய அவந்தி வர்ம ராஜாவின் கதை, கங்கையாற்றின் போக்கை சீர்படுத்திய பகீரதனை நினைவூட்டுகிறது.
ஆம்... புது தில்லியின் குதுப் பிரதேசம், ஆடு மாடு மேயும் தரிசாகத்தான் காட்சியளிக்கிறது. ஏன்? அங்கு வாழ்ந்த நிஜாம்-உத்-தின் என்ற புனிதர், வழி பாட்டுத்தலம் ஒன்றைக் கட்டிவருகையில், அரசர் துக்ளக் அதைப் பாதியில் நிறுத்திவிட்டதால், கோபம் கொண்ட அப்புனிதர் இட்ட சாபமே இதற்குக் காரணம். மஹிர் குல் என்னும் கொடுங்கோல் 'ஹீ'ன்' அரசனைப்பற்றிச் சொல்கிறது மற்றொரு கதை. அவன், குன்றின் உச்சியிலிருந்து நூற்றுக்கணக்கான யானைகளைக் கீழே தள்ளி, சாகடித்து, அவை எழுப்பிய மரணஓலத்தை சங்கீதம் போல ரசிக்கும் வக்ரபுத்தி கொண்டவனாம், ராஜஸ்தானைச் சேர்ந்த மூமல் மற்றும் மகேந்திராவைப் பற்றியது, மனதைத் தொடும் கதை. ஜெய்ஸல்மாரின் இளவரசி மூமல், சிந்த் மாநிலத்தைச் சேர்ந்த இளவரசன் மகேந்திராவைக் காதலிக்கிறாள். இவர்களது காதலை எதிர்க்கும் மகேந்திராவின் தந்தை, மூமலைச் சந்திக்க மகேந்திரா செல்லும் நாளில், அவன் பிரயாணம் செய்யவிருந்த ஒட்டகத்தின் பாதங்களில் ஆணிகளை அடித்து, ஒட்டகத்தின் வேகத்தைத் தடுக்கிறார். இதற்கிடையில்,மூமலின் காதலனைச் சந்திக்க விரும்பும் அவளது சகோதரி, மேளக்கார ஆணாக வேடமிட்டு அவளுடன் காத்திருக்கிறாள். காத்திருக்கும் நேரத்தில், சகோதரியின் மேளதாளத்திற்கு மூமல் நாட்டியமாடுகிறாள். மெதுவாகச் செல்லும் ஒட்டகத்தில் மிகத் தாமதமாக மகேந்திரா வந்துசேரும்போது, மூமலும் அவளது சகோதரியும் சோர்வில் உறங்கிவிட்டிருக்கிறார்கள். ஆண்மகன் ஒருவனின் பக்கத்தில் மூமல் படுத்திருப்பதாகத் தவறாகக் கருதி கோபப்படும் மகேந்திரா, காதலியை இனி எப்போதும் பார்க்கப்போவதில்லை என்கிற முடிவுடன் தன் நாட்டிற்குத் திரும்பி விடுகிறான். சோகமான இந்நிகழ்ச்சி, ராஜஸ்தானிய கர்ணபரம்பரைக் கதைகளுள் ஒன்று.
கவனத்தை ஈர்க்கும் பல செய்திகள், பயணக்கட்டுரைகளில் நிறைந்துள்ளன. பிரம்மாவுக்குக் கோவில், புஷ்கரில் மட்டுமே உள்ளது… அவர்மீது கோபம் கொண்ட அவரது மனைவி சரஸ்வதி, உலகில் புஷ்கரைத் தவிர வேறெங்குமே அவருக்குக் கோவில் இருக்கக்கூடாது என்று சாபமிட்டுவிட்டதே இதற்குக் காரணம். க்வாஜா மொய்ன்-உத்-தீன் சிஷ்டி என்னும் பிரபல ஞானி, பாரசீகத்திலிருந்து அஜ்மீருக்கு II92-ல் பிரயாணம் செய்தார். பீகானேரில் கர்ணிமாதா கோவிலுக்குச் சென்றபோது, அங்கு கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் கடவுள் சிலையைத் தவிர, வெகு சுதந்திரமாக வளையவந்து, பக்தர்கள் படைக்கும் பாலைப் பருகி, இனிப்புகளைச் சுவைக்கும் ஆயிரக்கணக்கான எலிகளும், வழிபாட்டுக்குரியவையாகக் கருதப்படுகின்றன. இப்படிப் பல விசித்திரமான செய்திகளை விவரிக்கிறார் சிவசங்கரி.
சிவசங்கரியின் பயணக்கட்டுரைகள், கண்ணால் கண்டவற்றை மட்டும் தொகுத்தளிப்பவையல்ல... அந்நிகழ்வுகள் தொடர்பான சிந்தனையையும் விவரிப்பதே, அவரது அணுகுமுறை. மனம் திறந்து, தனது சுய அனுபவங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். உதாரணமாக, காசியிலுள்ள மணிகர்ணிகா படித்துறையில், ஒரு நாளின் இருபத்து நான்கு மணிநேரமும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டு மனதில் தோன்றும் பயத்தை வெளிப்படுத்துபவர், 'பிறப்பு எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் மரணம் என்பது... அழியக்கூடிய உடம்பை விட்டுவிட்டு அழியாத ஆன்மா வெளியேறுவதுதான் மரணம், இதுதான் வாழ்க்கை' என்பதை மணிகர்னிகா அனுபவம் சொல்லாமல் சொல்லிக்கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். சொத்துவரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக, பாட்னாவில் பல வீடுகள் சிமெண்ட் பூச்சு இல்லாமல் அசிங்கமாகத் தோன்றுவதைப் பற்றிய குறிப்பு, வேதனையளிக்கிறது. கயா நகரத்தின் அசுத்தமான தோற்றம், அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பிருந்தாவனத்திலுள்ள விதவாஸ்ரமங்களில், வாழ்க்கையைத் தொலைத்த இரண்டாயிரத்து சொச்சம் பெண்களின் வேதனையான நிலை, எதிர்காலத்தில் அவர்களைப் பற்றி நிச்சயம் எழுதவேண்டும் என்று தீர்மானிக்கத் தூண்டியுள்ளது. சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்திருக்கின்றன... காசியிலுள்ள தஸாஸ்வமேத படித்துறையில், கங்கை நதியில் நடைபெறும் ஆரத்தி வைபவத்தைப்பற்றி குதூகலத்துடன் விவரித்திருக்கிறார் சிவசங்கரி. கங்கையின் நிர்மலமான நீரில் படகுச்சவாரி செய்தபோது, கால இயந்திரத்தில் பயணித்து பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றதைப்போல உணர்ந்திருக்கிறார்.
காஷ்மீரப் பயணத்தில், முன்பு தான் கண்ட பழைய நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் இடையேயான வித்தியாசங்கள்; பள்ளி மாணவியாக இருந்தபோது,சென்னை மாநிலத்தின் சிறந்த நான்கு என்.ஸி.ஸி. காடெட்டுகளில் ஒருவராக குடியரசு தின விழாவில் பங்கெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லிக்கு முதன் முறையாக வந்ததை நினைவூட்டும் ராஜ்பாத்; தனது நாவல் ஒன்று திரைப்படமாக உருவெடுத்தபோது, அதன் படப்பிடிப்பு நிகழ்ந்த லக்னோ நகரம்; போதைமருந்தின் தீமைகளைக் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூர்; முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்த ராஷ்டிரபதி பவன்; எல்லாவற்றையும்விட முக்கியமாக, முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவர்களைப் பேட்டியெடுத்தபோது கிடைத்த அன்பான வரவேற்பு... இப்படி, பல ஆண்டுகளுக்கு முந்தைய தனது பயணங்களைப் பற்றிய அவரது தத்ரூபமான நினைவுகளும், படிப்பதற்கு சுவாரஸ்யமானவை.
புஷ்கர், சாஞ்சி, காசி, லடாக் போன்ற இடங்களைப் பற்றிய தெளிவான விவரிப்புகள், மனதைக் கவர்கின்றன. அவற்றைப் படிக்கையில், சிம்லா, குலுமனாலி, காசி, ஆக்ரா நகரங்களுக்கு நானே மறுபடி சென்றுவந்த உணர்வு ஏற்பட்டது... இதுவரை சென்றிராத இடங்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையும் உண்டாயிற்று. தில்லி, காசி, லடாக் ஆகிய ஊர்களை, கட்டாயம் எல்லோரும் சென்று சுற்றிப்பார்க்கவேண்டும் என்கிற சிவசங்கரியின் வேண்டுகோள், தான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டுமென்ற அவரது நல்லிதயத்திற்கு ஓர் உதாரணம்.
சிவசங்கரி, இலக்கியம் மூலம் ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டுபவர்... புதுமைகளைக் கண்டறிய விரும்புபவர். வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், எந்தப் புதுமையையும் விட்டுவிடாமல், சுயமாக அனுபவித்து உணர்வதில் நம்பிக்கை உடையவர். ஒருமுறை அவர் எனக்களித்த ஆலோசனையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... கோவாவிற்கு வந்த ஒரு சந்தர்ப்பத்தில், கடலில் மிதக்கும் சுரவேலா என்கிற கேளிக்கைக் கப்பலுக்குச் சென்று காண விரும்பி, அதைப் பற்றிய விவரங்களை என்னிடம் கேட்டார். அந்தக் கேளிக்கைக் கப்பலுக்கு நான் சென்றதில்லை, செல்வதற்கான வசதியும் எனக்கில்லை என்று நான் கூறியபோது, பளிச்சென்று அவரிடமிருந்து பதில் வந்தது... 'தாமோதர், நீங்கள் ஓர் எழுத்தாளர்... கேஸினோ கப்பலில் ஒரு மாலைவேளையாவது தங்கி அந்த அனுபவத்தைப் பெறவேண்டும். அதற்கான செலவு அதிகம் என்று தோன்றினாலும், அதை ஒரு முதலீடாகத்தான் பார்க்கவேண்டும்.' ஆம்... அப்போதிலிருந்து என் மனப்பாங்கை மாற்றிக்கொண்டேன்.
ஒவ்வொரு மொழிக்கும், அதற்கேயுரிய கடந்தகால வரலாற்றுப் பின்னணியும், நிகழ்கால பூகோளமும் உண்டு. என் தாய்மொழியான கொங்கணிக்கு, அதன் பூகோளத்தை உருவாக்கிய சரித்திரம் இருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் அச்சுறுத்தல்; பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில், மதமாற்றம், அதைத் தொடர்ந்து உடனடியாக நிகழ்ந்த 'இன்க்விஸிஷன்' சட்டத்தின் பிடி - ஆகியவற்றின் காரணமாக, கோவாவிலிருந்தும் அதன் சுற்றுப்புறத்திலிருந்தும் பெருவாரியான மக்கள் வெளியேறினர். அதன் விளைவுதான், கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தஞ்சம்புகுந்து வாழ்ந்துவரும் கொங்கணி மக்கள். இதன் பாதிப்பு, மொழியிலும் நிகழ்ந்தது. 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தொகுப்புக்களைக் கவனிக்கையில், சிந்தி, காஷ்மீரி, நேபாளி மொழிகளுக்கிடையே ஒற்றுமையை என்னால் காணமுடிகிறது. பஞ்சாபி, உருது மொழிகளும், வரலாற்றின் வேதனையை அனுபவித்தவையே. மொழிகளை வளர்ப்பதன் மூலம் இலக்கியத்தில் சிகரத்தை எட்டவேண்டுமென்ற உறுதியான ஆர்வம்தான், இருண்ட இந்த மேகத்தின் ஒளிக்கீற்றாகத் திகழ்கிறது.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற திட்டம் நிறைவடையும் தருணத்தில், பதினெட்டு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூறு எழுத்தாளர்களைச் சந்தித்திருப்பார் சிவசங்கரி. அந்த எழுத்தாளர்களுக்கிடையே காணப்படும் பூகோள ரீதியான இடைவெளி, வரலாற்றுப் பின்னணி, சமூகவேற்றுமைகளைப் போலவே, அவர்களும் அவர்களது படைப்புக்களும் பல்வேறானவையே. பெண்கள் மற்றும் தலித்தியத் தாக்கங்களை விட்டுவிடாமல், சமுதாயத்தில் நிலவும் உணர்வுகளை மிகத் திறமையாக எடுத்துக்காட்டியுள்ளார், சிவசங்கரி. இடர்பாடும் நிராகரிப்பும், ஒதுக்குதலும் எதிர்ப்பும், வலியும் வேதனையும் நிரம்பியதுதான், இந்தியாவிலுள்ள தலித்துக்களின் வாழ்வு. அதில் அறிவிப்புப் பலகையே கிடையாது. மோகன்தாஸ் நெமிஷ்ராயின் குமுறலைப் படித்தபோது, நமது முன்னோர்கள் செய்த தவறான செய்கைகளை எண்ணி, குற்றவுணர்வே ஏற்பட்டது. அநீதியை மறுத்தும் எதிர்த்தும் எழுந்த தலித்தியக் குரலின் வெளிப்பாட்டுக்கு, இன்றைய இலக்கியத்தில் இடம் கிடைத்துள்ளதோடு மட்டுமல்லாமல், மிகத் தீவிரமான கவனிப்பையும் அது பெற்றுள்ளது, மகிழ்ச்சியையே தருகிறது. தனது இன மக்களிடம் நெமிஷ்ராய் கொண்டுள்ள அக்கறை, போற்றத்தகுந்தது. அனைவருக்கும் சமஉரிமை கிடைக்கும் வரை, இடஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும்
என்று, சமத்துவத்திற்கான உரிமையை நிலைநாட்டுகிறார். எனினும், தகுதியான மற்ற தலித்துக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக, ஓரளவு வசதிபடைத்த தானும் தன் மனைவியும், குழந்தைகளும்,அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளாமல் மறுத்துள்ளார்.
மிக உரத்த குரலாக, தெளிவாக, வெளிப்பட்டிருப்பது - தங்களது மொழியையும் மாநிலத்தையும் பற்றிய காஷ்மீரிக்களின் கோபம். சூஃபியிஸம் வளர்ந்த மண். இன்று, ஒருசில தவறானவர்களின் செயல்களின் காரணமாக, தீவிரவாதிகளின் பூமியாக அடையாளப்படுத்தப்படுவது, வேதனைக்குரியது. நஸீம் ஷஃபாயின் பேட்டிக் கட்டுரை, காஷ்மீரிப் பெண்களின் உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாகச் சித்தரிப்பதன் மூலம், மனதைத் தொடுகிறது. ஒரு தாய்க்கு 6 குழந்தைகள் இருந்து, அதில் மூவர் நல்லவர், இருவர் எதிலும் பட்டுக்கொள்ளாதவர், ஒருவன் மிக மோசம் - என்றிருந்தால், அவள் நிலைமை எப்படியிருக்குமோ, அவள் அடையும் துன்பம் என்ன மாதிரி இருக்குமோ - அப்படித்தான் எங்கள் அனைவரது மனநிலையும் உள்ளது
என்று, காஷ்மீரிப் பெண்களின் நிலையை மிகப் பொருத்தமாக வெளிச்ச மிட்டுக் காட்டுகிறார். காஷ்மீர வரலாற்றில் ஒருபோதும் அடிப்படைவாதம் நிலவியதேயில்லை. பெண்கள், எந்தவிதமான வேற்றுமையையும் சந்தித்ததில்லை. காஷ்மீரை ஆண்ட யஷோமதி என்கிற பெண்மணிதான், உலகளவில் முழுமையான ராஜ்ஜியத்தை ஆண்ட முதல் பேரரசியாகக் கருதப்படுகிறார். பண்டைய காஷ்மீரத்தில், பெண்களுக்குப் பாலியல் கல்வியும் அளிக்கப்பட்டது என்பது, வியப்புக்குரிய செய்தி! கவிஞரும் ஞானியுமான ஷேக்-உல்-ஆலம், காஷ்மீரிக்கள் அனைவராலும் மதிக்கப்பட்டு, நுந்த் ரிஷி என்று அழைக்கப்பட்டார்.
இந்தத் தொகுப்பை நான் வாசித்தபோது, எதிர்பாராத பல உண்மைகள் முதன்முறையாக எனக்குத் தெரியவந்தன. காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர், விஸ்வாமித்திரர்; நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானியும், நாட்டிய சாஸ்திரம் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான பரதமுனி, காஷ்மீரத்தில் வசித்தவர்; ராம்குமார் வர்மா என்ற பிரபல ஓவியர், சிறந்த இந்தி எழுத்தாளரான நிர்மல் வர்மாவின் சகோதரர்... போன்றவை, இதுவரை நான் அறியாத செய்திகள். இந்தியாவில், விமானம் ஓட்டுவதற்கான அனுமதியை முதன்முதலில் பெற்ற பெண், முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்; பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குள், மத-இன-குல பேதங்களின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு; மற்றவர்களைவிட அதிக முற்போக்கானவர்கள் என்று கூறப் படும் சீக்கியர்களும், தாழ்ந்த சாதி சீக்கியர்களுக்குத் தனி குருத்வாராக்கள் அமைக்கு மளவுக்கு சாதிப் பாகுபாட்டைப் பின்பற்றுபவர்களே; சம்ஸ்கிருத மொழிக்கு காஷ்மீரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில், இன்றைக்கும், பனாரஸ் இந்து சர்வகலாசாலையின் பட்டமளிப்பு விழாவைத் துவக்கும் முன் காஷ்மீர் இருக்கும் திசையை நோக்கி ஓரிரண்டு அடிகள் வைத்து, வணங்கும் பழக்கம் உள்ளது... போன்றவை, பிரமிக்கவைக்கும் செய்திகள்.
அற்புதமான செவ்விலக்கியங்களை அளித்துள்ள சம்ஸ்கிருதத்தை நினைத்து நாமெல்லோரும் பெருமிதப்படுகிறோம். என்றாலும், காஷ்மீரிக்களின் கோபத்துக்கு நேர்மாறாக, சம்ஸ்கிருத அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ள அளவுகடந்த ஆர்வம் என்னை வியக்கவைக்கிறது. இழந்துவிட்ட கடந்தகாலப் பெருமையை, நிச்சயம் மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் சம்ஸ்கிருத எழுத்தாளர்கள். பாரத தேசமும், பண்டைய காலத்தின் தேவபாஷை என்றழைக்கப்படும் சம்ஸ்கிருதமும், வெகு தொலைவுவரை பரவியிருந்தன என்பது, சம்ஸ்கிருத அறிஞர்களின் அழுத்தமான நம்பிக்கை. ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்பிலாரண்யம்தான், இன்றைய கலிஃபோர்னியா என்று வாதிடுகிறார், டாக்டர் தியாகராஜன். அதோடு, அவர் குறிப்பிட்டுள்ள யுகம்-மகாயுகம் பற்றிய கணக்குகள், மலைக்கவைக்கின்றன. சம்ஸ்கிருதத்தை 'இறந்துவிட்ட மொழி' என்று குறிப்பிடுவது, அம்மொழி அறிஞர்களைக் காயப்படுத்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சம்ஸ்கிருதத்தைக் காத்து வளர்க்க வேண்டும் என்பதில் நாமெல்லோருமே ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்றாலும்கூட, இந்தியாவில் தற்சமயம் இம்மொழியில் சரளமாய் பேசுபவர்கள் ஐம்பது லட்சம் பேர்கள் இருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்புவது எனக்குச் சிரமமாக இருக்கிறது.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பின் இந்த நான்காம் தொகுப்பு, இந்தி, காஷ்மீரி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், உருது ஆகிய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றியது. ஒவ்வொரு மொழியிலும், அதன் படைப்பாளிகளுக்கு வேதனையளிக்கக் கூடிய பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பஞ்சாபி, உருது, காஷ்மீரி மொழிகள், அரசியலாக்கத்தின் உச்சத்தை எதிர்கொண்டுள்ளன. ஆங்கிலேயரின் 'பிரித்தாளும் சூழ்ச்சி', தற்போது சரித்திரமாக ஆகிவிட்டது. சீக்கிய பஞ்சாபிக்கள் குர்முகி லிபியையும், முகம்மதிய பஞ்சாபிக்கள் பாரசீக-அராபிய விபியையும் பயன்படுத்த வேண்டுமென்று கூறப்பட்டனர். பஞ்சாபி இந்துக்களைப் பொறுத்தவரை, தேவநாகரி லிபியை உபயோகிப்பதோடு, அப்பகுதியின் பேச்சுமொழி பஞ்சாபியாக இருந்தாலும் அவர்களது தாய்மொழியாக இந்தியையே கருதவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டனர். மொழி என்பது மண்ணுக்குரியது... தமிழ்நாட்டில் பேசப்படுவது தமிழ், வங்காளத்தில் பேசப்படுவது வங்காளமொழி - என்பதுதான் நியதி. மதச்சார்புகள், மொழியை எப்படித் தீர்மானிக்கலாம்? கோவாவிலும்கூட, நூறு விழுக்காட்டு மக்களும் கொங்கணியையே பேசியபோதும், 'கிறிஸ்தவர்களின் மொழி கொங்கணி' என்றும், 'இந்துக்களின் மொழி மராத்தி' என்றும் வாதிடுவதன் மூலம் மக்களைப் பிரித்தாள நினைத்தனர் அரசியல்வாதிகள். உருதுவை இஸ்லாமிய மொழி என்றோ, பஞ்சாபிமொழி சீக்கியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றோ - கூற முடியுமா? இது, மொழிகளின் அப்பட்டமான இனப்பாகுபாடுதான். உருது பேசும் மாணவர்கள், உருதுவை மூன்றாவது மொழியாகவேனும் பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பு, ஏன் மறுக்கப்பட்டது? மதரஸாக்கள் காளான் போலப் பெருகியிருப்பதற்கு, இந்த மாறுதலிப்புதான் காரணம் என்கிறார் முனைவர் கோபி சந்த் நாரங். காஷ்மீரிக்களுக்கு, காஷ்மீரி மொழியில் ஆரம்பகல்வி அமைவது, ஏன் மறுக்கப்படவேண்டும்? உருது நமது நாட்டில் செழித்து வளர்ந்துள்ளபோதும், அது பாகிஸ்தானின் மொழி என்ற அடைமொழியை ஏன் பெறவேண்டும்? அதிகிரந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலேயே, குர்முகி எழுத்தை சீக்கியருடையது என்று எதற்காக முத்திரை குத்தவேண்டும்? இப்படிப்பட்ட தவறான அடையாளங்கள், அந்த மொழிகளின் மறைவுக்குத்தான் வழிவகுக்கும். மிகுந்த வேதனையான விஷயம் என்னவென்றால், நமது கல்வியாளர்களும், அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களும், உலகமயமாக்கலின் தேவைக்கு இன்றும்கூடச் செவிசாய்ப்பதில்லை.
இந்த எழுத்துக் குளறுபடிகள், பல மொழிகளை, குறிப்பாக, அரசியல் அங்கீகாரத்தைத் தாமதமாகப் பெற்ற காஷ்மீரியையும் சிந்தியையும்தான் மிக மோசமாக பாதித்துள்ளன. என் தாய்மொழியான கொங்கணியும், அதே வரிசையில்தான் தொடர்கிறது. காஷ்மீரிப் பண்டிட்டுகள் தேவநாகரி லிபியிலும், இஸ்லாமியர்கள் பாரசீக - அராபிய லிபியிலும் எழுதுகின்றனர். உருது, ஆட்சிமொழியாகப் பரிச்சயமாகியிருந்ததால், பாரசீக - அராபிய லிபியைப் பயன்படுத்துவதையே தொடர்ந்தனர் காஷ்மீரிக்கள். பல்வேறு விதமான எழுத்துக்களைப் பயன்படுத்துவது எந்த மொழிக்கும் நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது, வேற்றுமைகனை உருவாக்கி, வாசிப்பின் எல்லையைக் குறைத்து, பேசுபவர்களைக் குழப்பி, அம்மொழியிலிருந்து விலக வைத்துவிடும்... அதன் காரணமாக, மொழியும் வளராமல் போய்விடும். வழக்கிலிருந்து மொழி மறைந்துவிடக்கூடியதன் பயத்தை, காஷ்மீரி எழுத்தாளர் ரத்தன் லால் ஷாந்த் வெளிப்படுத்துகிறார்... 'உருது, ஆங்கிலம், இந்தி மொழிகளைக் கற்பதில் காட்டும் ஆர்வத்தை, காஷ்மீரி கற்பதில் மக்கள் காட்டுவதில்லை. ஏனென்றால், வேலை வாய்ப்பு. வெளிமாநிலம், வெளிநாடு செல்வதற்கு மேற்சொன்ன மொழிகள் உதவும் வகையில் காஷ்மீரி பயன்படாது என்பது நிதர்சன நிலை!' என்கிறார். இக்கருத்து - வளர்த்துவருபவை, சிறுபான்மை மொழிகள் - ஆகியவற்றைப் பற்றியது மட்டுமல்ல; உலகமயமாக்கலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வளர்ந்த மொழிகளைப் பற்றியதும்தான். இந்தத் தாக்கம், மாநில மொழிகளின்மீது பாயக்கூடியது. இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், மலையாள மொழி பேசுபவர்களாக இருக்கலாம். ஆரம்பகல்வியை ஆங்கிலமொழியில் கற்கும் போக்கைக் கண்டித்து 'மலையாளத்தைக் காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தை அவர்கள் துவக்கியுள்ளனர்.
நமது தேசிய மொழி, இந்தி. அதிகாரபூர்வமான ஆதரவு கிடைப்பதால், அம்மொழி வளர்ச்சியடைவதில் ஆச்சர்யமேதுமில்லை. 'இலக்கியத்தில் மட்டுமல்ல, தேசத்திற்கே ஒரு மாற்றம் கொண்டுவருமளவுக்கு ஆற்றல்கள் (potentials) இந்திமொழிக்கு இப்பதாகவே நம்புகிறேன்' என்று கூறியுள்ளார், மறைந்த கம்லேஷ்வர். அவரது 'ஷிகார் கோஷ்' என்ற தொகுப்புப் பணியில் நான் உதவிய காலகட்டத்தில், தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் என்று என்னுடைய கடிதம் ஒன்றில் எழுதியிருந்தேன். அக்கடிதத்திற்கான பதிலில், 'இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் இந்திப் படைப்புக்கள்தாம், அம்மொழியை வளப்படுத்தும்' என்று குறிப்பிட்டிருந்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் மிக அதிகமான வாசிப்பை உடைய மொழி, இந்தி... அப்படியிருந்தும், 'இந்திமொழிக்கான தற்போதைய சூழல் மனச்சோர்வு தருவதாக உள்ளது' என்கிறார், அஷோக் வாஜ்பாய். உரைநடைக்கும் புனைகதைக்கும் இருக்கும் வரவேற்பு, கவிதைகளுக்கு இல்லை. இளைஞர்களின் கவனத்தை கவிதைகளின்பால் திருப்புவதற்கான எந்த முயற்சியும் இல்லை என்கிறார்.
உருதுவும் இந்தியும், அக்கா தங்கை சொந்தத்தைப் போன்று ஒன்றையொன்று பரஸ்பரம் சார்ந்திருப்பதோடு, பாராட்டிக்கொள்ளும் தன்மையும் உடையவை என்று நம்புகிறார், முனைவர் கோபி சந்த் நாரங். இந்திமொழி பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், அது தொடர்புமொழியாக உள்ளதாலும், அம்மொழிக்குப் பரவலான ஆதரவு கிடைத்துவருகிறது. உருதுமொழிக்கு, மதிப்புமிக்க பாரம்பரியம் உள்ளது. இந்திக்கும் உருதுவுக்குமிடையே உள்ள நெருக்கமான உறவு, இரு மொழிகளுக்குமே பரஸ்பர நன்மையைச் செய்துள்ளன என்பதில் சந்தேகமேயில்லை. மிகுந்த தரத்துடன்கூடிய மொழியான உருது, தனது பாரம்பரியத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறது. இந்த அணுகுமுறையின் காரணமாக, இதர மொழிகளின் தாக்கத்தைப் பெறுவதிலிருந்து விலகியே நிற்கிறது. இதற்கு மாறாக, இந்தித் திரைப் படங்களும், வெகுஜன ஊடகங்களும், உருது சொற்றொடர்களையும் சித்தரிப்புக்களையும் மிக அதிகமாகப் பயன்படுத்தியுள்ளதால், அவற்றை இந்திமொழிச் சொற்களாகவே மக்கள் நினைக்கின்றனர். இதன் விளைவாக, அதிகப் பலனடைந்தது இத்திதான் என்றே கூறலாம்.
உருதுவுக்கும் இந்திக்கும் அதிக வேறுபாடில்லை என்று சர்தார் ஜாஃப்ரி கூறியதைக் கேட்ட ஞாபகம் வருகிறது. 'பாரசீக அராபிய லிபியில் எழுதினால், அதுதான் உருது; தேவநாகரியில் எழுதுவதை, இந்தி என்கிறீர்கள்' என்றார். இவ்விரு மொழிகளுக்குமே, பொதுவான அடிப்படைதான், எனினும், இரண்டுக்குமே தனித் தனி அடையாளங்கள் உண்டு என்று அறிஞர்கள் கூறுவதை ஏற்கத்தான் வேண்டும். இதேபோன்றவைதான், பஞ்சாபிக்கும் உருதுவுக்கும் இந்திக்குமான தொடர்புகளும்.
எழுத்துலகப் பொருளாதார அம்சத்தையும் கவனிப்பது அவசியமாகிறது. மாநில மொழிகளுக்கான சூழல், ஊக்கம் தருவதாக இல்லை. எம்.டி. வாசுதேவன் தாயர், சுனில் கங்கோபாத்யாய போன்ற பிரபல எழுத்தாளர்களைத் தவிர, இதர படைப்பாளிகள் எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்வது சிரமம். எழுதுவதை வியாபார நோக்கமாகக் கொள்ளாதவரை, எழுத்தாளர்களிடமிருந்து தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்பார்க்கவும் முடியாது. விஸ்வரூபமெடுத்துள்ள வெகுஜன ஊடகங்களின் காரணமாக, வாசிப்புப் பழக்கம் தேய்ந்துகொண்டிருப்பதும் கவலையளிக்கிறது. இந்தி பேசும் பகுதிகளிலும் இத்தகைய நிலை காணப்படுவதை, அக்கறையுடன் குறிப்பிடுகிறார் அஷோக் வாஜ்பாய். 'துரதிர்ஷ்டவசமாக, இந்தி சமுதாயம் புத்தகத்தை நேசிக்கும் சமுதாயம் அல்ல' என்கிறார். 'வாழ்வின் அந்தரங்கமான அனுபவங்களைக் கொண்ட கவிஞரான' பால்ராஜ் கோமல், மிகுந்த சிரமத்துக்கிடையே வெளியாகும் ஒருசில பத்திரிகைகளும் எழுத்தாளர்களுக்கு எந்த சன்மானத்தையும் தராததைப் பற்றிய வேதனையையே வெளிப்படுத்துகிறார், படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படும்போதுதான் சன்மானம் கிடைக்கிறது என்கிறார். பஞ்சாபிக்களின் பிரச்சினை வேறுமாதிரியானது... பஞ்சாபிக்கள் அனைவரும் வீட்டில் பஞ்சாபி மொழியையே பேசுகின்றனர்; ஆனால், பெரும்பாலான பஞ்சாபிப் படைப்பாளிகள், ஆங்கிலத்தைத் தவிர இந்தி அல்லது உருதுவில் எழுதுவதையே விரும்புகின்றனர். காஷ்மீரிக்களின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதேபோன்ற பிரச்சினைகளை இதர மொழிகளும் சந்தித்து வருகின்றன. எப்படியிருப்பினும், அரசியல் ஆணை இருந்தாலே ஒழிய, முன்னணி மொழிகளுடன் போட்டிபோடுவது சிரமம். மக்களின் பரவலான ஆதரவுதான் அரசியல் தலைவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... அப்படி நிகழ்வதில்லை என்பதே உண்மை.
நமது பாரம்பரியத்தின் மதிப்பையும், இன்று நாம் சந்திக்கும் பிரச்சினைகளையும் குறித்துத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறது. 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணி. இதன் மூலம், இந்தியாவின் இலக்கியக் கலாச்சாரம் முழுவதையும் வெளிப்படுத்தியுள்ளார் சிவசங்கரி. பழக்கவழக்கங்களும் வழிமுறைகளும், உணவுப் பழக்கங்களும் நடைமுறைகளும், இயற்கைக் காட்சிகளும் வாழ்வியல் முறைகளும் - பல்வேறு விதமான கலாச்சாரச் சூழல்களை உருவாக்குகின்றன... இவை, சிவசங்கரியின் நூலில் தத்ரூபமாக வெளிப்படுகின்றன. அபிப்ராயங்களும் விமர்சனங்களும், கருத்துக்களும் குரல்களும் நிரம்பிய விரிவான காட்சியை அளிக்கின்றன, இந்நூலில் காணப்படும் மொழிகளும் இலக்கியங்களும். இவற்றின் ஒட்டுமொத்த பயன், அற்புதமானது. இந்நூலின் வாசிப்பு, ஞானிகளையும் முனிவர்களையும் சாதுக்களையும் சந்திக்கும் வாய்ப்பைத் தரும் இலக்கியப் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளதைப்போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படைப்பின் பரப்பில் புனித நீராடுதலைச் செய்கிறார் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன, விளக்கவுரைகள். ஆன்மீக இந்தியா, நிகரற்றது - என்கிற நமது நம்பிக்கையும் உறுதிப்படுகிறது.
எழுத்தாளர்களைப் பேட்டிகாண்பதற்கு முன் சிவசங்கரி மேற்கொள்ளும் ஆய்வுகளும் விவரச் சேகரிப்பும், பிரமிக்கவைக்கின்றன. தொண்ணூறு வயதான எழுத்தாளர் கர்தார் சிங் துகல், சிவசங்கரியின் நுட்பமான கேள்விகளைக் கண்டு வியந்து, 'வாரே வாவ்!' என்று உடனடியாகத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். பேட்டிகாண்பதற்கு ஓர் அற்றல் தேவை, அது சிவசங்கரியிடம் ஏராளமாகக் காணப்படுகிறது. துண்டித்துருவும் அவரது கேள்விகள், தேவையான விவரங்களைப் பெறுவதில் வெற்றிபெற்றுள்ளன. சில சமயங்களில், 'குறைவாகப் பேசுபவர்' என்று கூறப்படும் மறைந்த நிர்மல் வர்மா போன்று அதிகம் பேசுவதைத் தவிர்க்கும் எழுத்தாளர்களையும், விரிவாகப் பேச வைத்திருக்கிறார். கிருஷ்ணா ஸோப்தி, கோபி சந்த் நாரங், ஜோகீந்தர் பால் போன்று, ஒளிவுமறைவற்ற குணம் கொண்டவர்களுடனான அவரது பேட்டிகள், அற்புதமான ஆய்வுகளாக அமைந்துள்ளன.
முரண்பாடான, அதே சமயம் அறிவுபூர்வமாகவும் உள்ள, சில கருத்துக்களும் இந்நூலில் ஆங்காங்கே காணப்படுகின்றன. உதாரணமாக, மொழியையும் அதன் இலக்கணத்தையும் குறித்து பிரேம்சந்த் அக்கறை கொள்ளவில்லை என்கிற விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜோகீந்தர் பால், 'இலக்கியக் கலைஞர் என்ற வகையில், நாம் மொழியைப் படைப்பதில்லை... இலக்கியத்தைத்தான் படைக்கிறோம். படைப்பனுபவம்தான் இலக்கியத்தின் சாரம்' என்கிறார். இதற்கு மாறாக, சொல்வன்மைக்குப் பெயர்பெற்ற மூத்த இந்தி எழுத்தாளரான கிருஷ்ணா ஸோப்தி, 'மொழிக் கற்பனைத் திறனிலுள்ள பல்வேறு அம்சங்களைக் கலந்து கொடுப்பது எழுத்தாளரின் ஆற்றலைப் பொறுத்தது' என்று தீவிரமாகக் கூறுகிறார்.
படைப்பாளிகளிடமுள்ள மனதை மயக்கும் தன்மை, மிகப் பொருத்தமாக முன் வைக்கப்பட்டுள்ளது. நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருப்பதால், 'சிறுகதை என்பது ஒரு கவிதையை விஸ்தரித்து, நாவலின் உரைநடையில் எழுதும் ஓர் ஆர்வம்' என்ற நிர்மல் வர்மாவின் விளக்கத்துடன் என்னால் உடன்பட முடிகிறது. புகழ்பெற்ற உருதுக் கவிஞரும் திரைப்படக் கலைஞருமான குல்ஸார், ஏராளமாக வாசிப்பவர். நமது மொழியைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், இதர மொழிகளின் இலக்கியங்களையும் வாசிக்கவேண்டும் என்கிறார். 'எவ்வளவுக்கெவ்வளவு வாசித்து உள்வாங்கிக்கொள்கிறோமோ, அந்த அளவு நமது இலக்கிய எல்லையும் விரிவடையும்' என்றும் கூறுகிறார். இலக்கியமும் அறிவும், படைப்பாற்றல் என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். வீடு, கல்லூரிகள், சமுதாயம் - என்று எங்கும் ஆரோக்கியமான சூழல் நிலவவேண்டும் என்கிறார் ஜோகீந்தர் பால்... இவையனைத்தும் ஒருங்கிணையும்போது, அறிவில் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் குறைந்துவிட்டதைப்பற்றி சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஆர்வமின்மையை மட்டுமே அதற்குக் காரணமாகக் கூற முடியுமா? இளைஞர்களின் அக்கறையின்மை குறித்து பல மூத்த எழுத்தாளர்கள் தெரிவித்துள்ள கவலை, முக்கியமானது. பிரபல உருது விமர்சகரும், சாகித்ய அகாடமியின் முன்னாள் தலைவருமான கோபி சந்த் நாரங், 'புழக்கத்திலுள்ள மொழி, வளர்ந்துவரும் உயிரினத்தைப் போன்றது என்பதை மறக்கக்கூடாது. இளைய தலைமுறை, தங்களது மொழியின் வேர்களைக் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, தங்களது பாரம்பரியத்தைப் பற்றிய பெருமிதமும் கொண்டிருந்தாலே போதும்' என்கிறார். மூத்த பஞ்சாபி எழுத்தாளரான கர்தார் சிங் துகல், இளைஞர்களிடம் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர்களுக்கு மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்த, ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கோள்ளப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
'மனிதச் சமுதாயத்தின் ஆன்மாவின் குரல்தான் இலக்கியம். அது கலாச்சாரத்தின் எல்லை... மனித மதிப்புகளின் பாதுகாவலனாவும் திகழ்வது' என்று கூறும் கோபி சந்த் நாரங், 'இளைஞர்களுக்கு நிச்சயமாக மொழியின்மீது ஆர்வம் இருக்கிறது' என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார், 'இன்றைய இளைஞர்கள், மொழிகளை ஒன்றிணைப்பதன் மூலம் கிடைக்கும் கலப்புச் சொல்தொகுதியைப் பயன்படுத்தி, தொடர்புக்கான புதியதோர் முறையை உருவாக்குகின்றனர்' என்றும் கூறுகிறார்.
இருட்டு, வெளிச்சம் என்ற இரண்டு பக்கங்களையுமே கொண்டுள்ள உண்மையான உலகை, சரிவர வெளிப்படுத்துவதற்குத் தயாராக ஒரு மொழி இல்லாத போது, புதிய சொற்றொடர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பதில்தான் 'நியூ க்ரியேடிவ் சென்ஸிபிலிடி' எனப்படும் புதிய படைப்புணர்வு என்கிறார், காஷ்மீரி அறிஞர் ரஹ்மான் ராஹி, கலப்புமொழியே தற்போது புழக்கத்தில் உள்ளது. பண்பலை வானொலி நிலையங்களும், தனியார் தொலைக்காட்சிகளும், நமது சொந்த மொழியை மட்டுமே பயன்படுத்துவது சிரமமானது என்கிறார்போல், இந்தக் கலப்பைத்தான் பெரும்பாலும் உபயோகிக்கின்றன, முழுமையான கண்ணோட்டத்தில் உலகைக் கவனித்து, அதன் வழியே நாம் புரிந்துகொண்டதை சரியான வார்த்தைகளில் வெளியிடும் 'புதிய படைப்புணர்வு' எனப்படுவதைக் கையாள்வதற்கு, தீவிர முயற்சி தேவை... அதன் மூலம்தான் நம் தூய்மொழியிலுள்ள புதிய கருத்துக்களையும் சித்தரிப்புக்களையும் உணர்ந்துகொள்ளவும், மேற்கொள்ளவும் முடியும்.
வாசகருக்கு அவருடைய தார்மீகக் குறைகளைப் புரியவைத்து, அவரை சுயவிமர்சனமும் செய்யவைக்கிறார் எழுத்தாளர் - என்று கூறப்படுகிறது. சிவசங்கரியின் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' நூல், எழுத்தாளர்களையும் அப்படி சுயவிமர்சனம் செய்துகொள்ள உதவுகிறது. இத்திட்டம் - இந்தியாவின் ஒட்டுமொத்த இலக்கியத்தைப் பற்றிய சமகால வரலாறு, இலக்கிய இந்தியாவைக் குறித்த உண்மைபூர்வமான வரைபடம். இம்மாபெரும் பணி, சிவசங்கரியின் வாழ்வில் தீவிரப் படைப்பாற்றலுடன் கூடிய பல ஆண்டுகளை விழுங்கிவிட்டது. ஒரு வேள்வி போல, யாகம் போல இதில் ஈடுபட்டிருந்தார் அவர். இதில் சுட்டிக்காட்டவேண்டிய விஷயம் என்னவென்றால்... படைப்பாளிகளுக்கு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைந்த இவ்விலக்கியத் திட்டத்தின் களப்பணிக்கு, சற்றும் சிதறாத கவனத்தைச் செலுத்தவேண்டும் என்பதற்காக, புனைகதை எழுத்தாளரான சிவசங்கரியே, புனைகதை எழுதுவதை பதினாறு ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்தார்.
சிவசங்கரியின் பணியில் ஒரு வெற்றிடம் இருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் பல மொழிகள், இத்திட்டத்தில் விடுபட்டுப்போய்விட்டன. சிவசங்கரி இப்பணியைத் துவக்கிய ஆரம்ப காலகட்டத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பதினெட்டு மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்தன. எனினும், இதர பல மொழிகளும் பின்னர் சேர்க்கப்பட்டன. அதோடு, டோக்ரியும் ராஜஸ்தானியும், சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அப்புறம், இந்திய ஆங்கிலம் என்னாயிற்று? இவற்றை வைத்துப் பார்க்கையில், ஐந்தாவதாக இன்னொரு தொகுதியை எதிர்பார்ப்பது நியாயம்தானே! பரிணாம வளர்ச்சி என்பது தொடர்ந்துகொண்டே இருப்பதால், ஆண்டுகள் செல்லச்செல்ல இந்திய இலக்கியத்தில் புதிய வடிவங்களும் புதிய போக்குகளும் தோன்றி வளரும்... ஆகவே, ஒவ்வொரு பன்னிரண்டு முதல் பதினைந்தாண்டுகளுக்கு ஒருமுறையும், இத்தகைய திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எனது பணிவான ஆலோசனை.
பரிச்சயமான சில பழைய நண்பர்களைச் சந்திப்பதற்கு, இத்தொகுதியை வாசிக்கையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நண்பர்கள் சிலரையும் நினைவு கூர்ந்தேன். கம்லேஷ்வர், நிர்மல் வர்மா - இருவரின் பேட்டிகளையும் படிக்கையில், அவர்களே உயிர்த்தெழுந்தாற்போலிருந்தது. சிவசங்கரி, அவர்களை அழியாதவர்களாக நிலைக்கச் செய்துவிட்டார் என்றே கூறுவேன்.
மதிப்புமிக்க இத்தொகுதிக்கு முன்னுரை எழுதும் பொறுப்பை அளித்ததற்காக, சிவசங்கரிக்கு நன்றி தெரிவிக்க என்னிடம் வார்த்தைகளில்லை. துவக்கத்தில், இவ்வாய்ப்பை ஏற்க நான் தயங்கினாலும், அவர் உறுதியாக நின்றார். என்மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மாறாக நடக்க எனக்கு தைரியமில்லை. எனவே, சம்மதித்தேன். இப்போது, அவர் என்னை கௌரவித்துள்ளார் என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைவாக, எனது மனக்குறை ஒன்றை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை... சிவசங்கரியின் பெருந்தன்மையான பணிக்குரிய அங்கீகாரத்தை, எந்த தேசிய ஊடகமும் அளிக்கவில்லை. நாடு முழுவதிலுமுள்ள இலக்கிய அமைப்புகளும் கூட, உரிய ஊக்கத்தைத் தரவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. 'கடைசித் தொகுதியான 'வடக்கு' வெளிவந்த பிறகு இந்தியாவின் அனைத்து நூலகங்களிலும் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' புத்தகத்தின் நான்கு தொகுதிகளும் அனைத்து மக்களுக்கும் படிக்கக் கிட்டவேண்டும்' என்ற குல்ஸாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலமாவது இக்குறை தீர்க்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி, இந்தியாவைப்பற்றித் தெரிந்துகொள்ள வெளிநாட்டவர் ஆர்வம் காட்டிவருவதால், இந்நூல்கள் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டு, உலகெங்கிலும் கிடைப்பதற்கும் வழிசெய்யப்பட வேண்டும்.
- தாமோதர் மௌஸோ
கோவா
ஆகஸ்ட், 2008
என்னுரை - 1
(தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பில் இடம்பெற்றது)
நான் சின்னப்பெண்ணாக இருக்கையில் என் அம்மா ஒரு கதையைச் சொன்னதுண்டு. 'ஒரு ஊரில் ஒரு ஏழை அனாதைச் சிறுமி வசித்தாள். அவள் ரொம்ப நல்லவள். தன் கஷ்டத்தைப் பாராட்டாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் ரகம். இவன் ஒருநாள், 'கடவுளே... என்னிடம் மட்டும் ஒரு பணம் காய்க்கும் மரம் இருந்தால் எத்தனை பேருக்கு உதவி செய்யமுடியும்!' என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள். காலையில் கண்விழித்துப் பார்த்தால், குடிசைக்கருகில் பிரும்மாண்டமாய் ஒரு மரம், அதில் காய்களுக்குப் பதிலாய் வட்டவட்டமாய் தங்க நாணயங்கள்! 'இதற்கு யார் விதை போட்டது; இது எப்போது மரமானது?' என்று போவோர் வருவோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், தினமும் காசுகளைப் பறித்து சகல ஜனங்களுக்கும் அப்பெண் விநியோகித்ததால் அந்த நாட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போனது' - என்று அம்மா சொன்ன கதையின் முன்பகுதியை விட்டுவிட்டு, பின்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட அந்தச் சிறுமியின் நிலையில் நான் இருப்பது புரிகிறது.
'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இந்த விருட்சத்திற்கு, எது அல்லது யாரால் எப்போது என்னுள் அந்த வீரிய விதை விதைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாவிடினும், சரியான மண்வளம், நீர், உரம் கிட்டியதில் இந்த விதை ஆரோக்கியமாக முளைத்து வளர்ந்து, கிளைகளைப் பரப்பிய மாபெரும் மரமாகத் தழைத்துவிட்டதும், அதன் நிழல் தரும் சுகத்தையும், பூக்களின் மணத்தையும், கனிகளின் ருசியையும், மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளின் சங்கீதத்தையும் நான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல், என் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள விழைவதும் நிஜம்.
இப்போது இந்த முன்னுரையை எழுத உட்காரும் நிமிடத்தில் என்னுள்ளே சில நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்குமுன் மைசூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கறுப்பர் இனத்தைச் சார்ந்த அமெரிக்கப் பெண்மணி எழுதியிருந்த நாவல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கிட்ட, சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுமார் இருபது எழுத்தாளர்கள் ஒன்றுகூடி, அந்தப் புதினத்தைப் பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்த்து தந்த நினைவுடன் ஊர் திரும்பியபோது - சக்திவாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், லத்தீன் அமெரிக்கர் இலக்கியம், ஐரோப்பியர் இலக்கியம் என்று உலகளவில் படைக்கப்படும் இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து, விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு - மக்களை விடுங்கள், பரவலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா? நிச்சயம் இல்லை. காரணம்? இந்திய மொழிகளிடையே போதுமான மொழிபெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே?
மேற்சொன்ன அனுபவம்தான் எனக்குள்ளே நான் அறியாமலேயே ஒரு விதையாயிற்றோ? இருக்கலாம்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ஸிக்கியில் நடந்த எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதும், அங்கு வந்த எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டின் இட்லி சாம்பாரும், பட்டுப்புடவைகளும் அறிமுகமாகியிருந்தனவே ஒழிய, தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு குறித்தோ, தற்கால நடப்பு, இலக்கியங்கள் பற்றியோ எந்தப் பரிச்சயமும் இல்லை என்பது அப்பட்டமாக விளங்க, அந்த நிதர்சனம் என்னை மறுபடியும் கேள்வியாகத் தாக்கியது. நம்மைப்பற்றி அவர்கள் அறியவில்லை என்பது இருக்கட்டும்... மற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? கல்கத்தா என்றால் ரஸகுல்லாவும், ராஜஸ்தான் என்றால் சலவைக்கல்லும், கேரளா என்றால் தேங்காய்நார்ப் பொருட்களும்தானே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள்? உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம், பழக்கவழக்கம், சந்தோஷ துக்கங்களை எந்த அளவுக்குத் தெரிந்துகொண்டிருக்கிறோம்? அல்லது, அறிந்து, புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்?
காசியில் வாழும் மனிதர் தன் பிள்ளைக்கு 'ராமநாத்' என்று தென்கோடி ராமேஸ்வரக் கடவுளான ராமநாதனின் பெயரைச் சூட்டுவதும், தமிழ்ப்பெண்ணுக்கு இமயமலையின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் பெண்தெய்வமான வைஷ்ணவியின் பெயரை வைப்பதும், மீரா பஜன் தெற்கிற்கு வருவதும், கதக்களி டெல்லியில் பிரபலமாவதுமாக இப்படி மத, காலை, அரசியல் ரீதியாகச் சிகப் பிணைப்புக்கள் நடந்துகொண்டிருப்பதை நான் மறுக்கவில்லை, ஆனால், இன்றைய பாரததேசத்தை இன்னும் இறுக்கமாகப் பின்னி, இறுகச் செய்ய இவை மட்டும் போதுமா? இந்தப் 'பின்னல்' முயற்சியில் இலக்கியத்தின் பங்கு என்ன? 'பல மொழிகளால் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றே ஒன்றுதான்' என்று முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது இன்றைய சூழலுக்கும் பொருத்தமானதுதானா? செம்மையான படைப்புக்களால் இன்றைக்கும் மக்களின் சிந்தனைகளை வளப்படுத்திக்கொண்டிருக்கும் அஸ்ஸாமின் பிரேந்திர பட்டாச்சார்யாவையும், கர்நாடகத்தின் சிவராம் காரந்தையும், வங்காளத்தின் மஹாஸ்வேதா தேவியையும் எத்தனை இந்தியர் அறிவர்? இந்த அறிமுகத்திற்கும், அதன்மூலம் கிட்டும் பெருமை கலந்த வளர்ச்சிக்கும் மொழியே ஒரு பாலமாக வேண்டாமா?
சீறிக்கொண்டு எழுந்து மேற்சொன்ன கேள்விகள்தாம் ஒருவேளை என்னுள் விழுந்த வீரிய விதைக்கு உரமாகவும் தீராகவும் அமைந்து, அதை முளைவிட வைத்தனவோ? செடியாக, மரமாக, பேணிக் காத்தனவோ? இருக்கலாம்.
தொடர்ந்து, 'இதுகுறித்து என்னால் ஏதும் செய்ய இயலுமா?' என்று விடாமல் யோசித்தேன்.
பாரத தேசம் பழம்பெரும் தேசம்
நாம் அதன் புதல்வர்...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
முண்டாசுக் கவிஞர் பாரதியின் வார்த்தைகள் எனக்குத் தூண்டுகோலாக அமைய, அவற்றைச் சிரமேற்கொண்டு 'இலக்கியத்தின் மூலம் இந்திய இணைப்பு' பணியை நான்கு வருடங்களுக்கு முன் துவக்கியது இப்படித்தான்.
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதினெட்டு மொழிகளிலிருந்தும் சில எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியே அந்தந்த மாநில மக்களின் கலாச்சாரம், வரலாறு, இலக்கியத்தை மற்ற இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம். அந்தந்த பிராந்தியத்திலுள்ள மொழிகளில் ஆய்வு செய்து, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்று நான்கு தொகுதிகளாக இறுதியில் வெளியிட எண்ணம்.
நினைத்ததைச் செயலாக்க முனைந்தபோது நடைமுறைப் பிரச்சினைகள் - 'தனிப்பெண்ணாக மணிப்பூருக்கும் காஷ்மீருக்கும் எழுத்தாளர்களைத் தேடிச்சென்று சந்திப்பது சாத்தியமா? லட்சக்கணக்கில் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது? ஒரு மொழிக்கான தயாரிப்பில் இருக்கும்போது, மற்ற மொழிக்கான பயணத்திலும், இன்னொன்றை மொழிபெயர்த்து எழுதுவதுமாக ஒரே சமயத்தில் மூன்று தளங்களில் இயங்குவது தனிநபரால் செய்யக்கூடிய காரியம்தானா?' என்பது போன்ற பிரச்சினைகள் - நிறையவே எழுந்தன. இவற்றோடு - 'இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்யமுடியுமா?' என்ற விண்ணப்பத்துடன் மத்திய அரசையும், தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் இதர பெரிய ஸ்தாபனங்களையும் அணுகியபோது, 'நூதன, சிறப்பான திட்டம்; ஆனால், இதற்கு உதவி செய்ய எங்கள் விதிமுறையில் இடமில்லை' என்று அவர்கள் கையை விரித்ததும் - மனசு நொறுங்கித்தான் போயிற்று. நான்கு கடிதங்கள் போட்டும் பதில் எழுதாத சில எழுத்தாளர்கள், எந்த விவரத்தையும் கொடுத்துதவ முன்வராத இலக்கிய அமைப்புக்கள் போன்றவர்களின் மனோபாவமும்கூட என்னை பயமுறுத்தவே செய்தன. இருப்பினும், கடவுளின் ஆசிர்வாதமும், பல நல்லிதயங்களின் ஆதரவும் கிட்டியதில், கஷ்டங்களை மீறி செயல்பட முடிந்ததில், இப்போது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' முதல் தொகுதி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது மட்டுமில்லாது, கிழக்கு மொழிகளின் வேலை முடிந்து, அச்சுக்குப் போக அத்தொகுதி தயாராகிக் கொண்டிருப்பதையும், மேற்கு மொழிகளின் எழுத்தாளர்களைச் சந்திக்கும் பணி துவங்கியிருப்பதையும் உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு எழுதுவதைத் தொடர்ந்தால் கவனம் திசைதிரும்பிவிடும் என்கிற கவலையில், இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டத்தைத் துவக்கிய காலமாய் கதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். இதுகுறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் இந்த நான்கு வருடங்களில், பத்து மொழிகளில் எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்து, அந்தந்த மாநிலங்களில் முடிந்தவரையில் பயணித்து, மக்களை, அவரவர் பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டிருப்பது எனக்குள் உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வை எண்ணிப்பார்க்கையில் - ஒருவித பிரமிப்பிற்கு நான் வாஸ்தவமாக உள்ளாகிறேன். என்ன பேறு செய்தேன் இத்தகைய மகத்தான அனுபவங்களைப் பெற என்று நெகிழ்ந்துபோகிறேன். முடிந்தவரையில் எனக்குக் கிட்டிய அறிவை, ஞானத்தை, உணர்வுகளை, சீக்கிரமே என் பாரதநாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு என்னை ஆக்ரமிப்பதை உணர்கிறேன்.
ஒவ்வொரு மொழியிலும் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க நான் மேற்கொண்ட வழியை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆங்காங்கு இருக்கும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகை அலுவலகங்களுக்கு அந்த மாநிலத்தின் முக்கியப் படைப்பாளிகளை இனம்காட்டும்படி எழுதியதற்கு வந்த பதில்களில், பொதுவாகக் காணப்படும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு கடிதத்தொடர்பு கொண்டு, நேரில் சென்று பேட்டியெடுப்பதைப் பின்பற்றியதில், தகுதியான இலக்கியக் கர்த்தாக்களைக் கொண்டே இந்த இலக்கியப்பாலம் கட்டப்பட்டுவருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். முடிந்தவரையில் இளைய தலைமுறையினரின் கண்ணோட்டத்தையும் சேர்க்க முயற்சித்திருக்கிறேன்.
இதுவரை நான் சந்தித்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் ஆயிரம் பிறைகளைக் கண்டவர்கள்; ஓரிருவர் 90 வயதைத் தாண்டியவர்கள். அப்படியும் என்ன நினைவாற்றல், என்ன நிதானம், பேச்சில் என்ன தெளிவு! எல்லா வசதிகளும் சரியாக இருந்திருப்பின், அத்தனை பேட்டிகளையும் 'வீடியோ'வில் பதிவு செய்திருப்பேன்... கட்டாயம்! தற்சமயம் போட்டோ, 'டேப்'பில் பதிவு என்பதோடு நிறுத்தவேண்டியிருப்பது, எனக்குக் குறைதான். அதுவும், மலையாள மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீரை, நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய பஷீரை - கடைசியாக நீண்ட பேட்டியெடுத்தது நான்தான், அதன்பின் சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார் என்பதை நினைக்கும்போது, அத்தகைய 'நடமாடும் அறிவுப்பெட்டகங்களை' ஓளிநாடாவில் பதிவுசெய்யாதது என் குறையை அதிகரிக்கச் செய்கிறது.
இத்தொகுப்பில் வெளியாகியுள்ள உரையாடல்களில், எழுத்தாளர்களின் கருத்துக்களை, பதிவுசெய்யப்பட்ட பேட்டிகளிலிருந்து முழுக்கமுழுக்க அவரவர் வார்த்தைகளையே உபயோகித்து எழுத முயற்சித்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் தனிப்பட்ட, முரண்பட்ட கருத்துக்களுக்குக்கூட மறுபக்கம் உண்டு என்பதால், கூடுமான வரையில் எதிர்கருத்துக்களையும் சேகரித்து வெளியிட்டிருக்கிறேன். அப்படியும் குறிப்பிட்ட சில விமர்சனங்களுக்கு விளக்கம் கிட்டாததற்கு, பலமுறைகள் தொடர்புகொண்டும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பேட்டிக்கான நேரத்தை ஒதுக்காததுதான் காரணம்.
ஒரு மொழியில் பேட்டிகள் தொடங்குவதற்கு முன் அந்த மாநிலத்தைப் பற்றிய சின்ன பயணக்கட்டுரை இடம்பெறுகிறது. இயந்திரகதியில் வாழ்ந்து, எதையும் தேடிப் படிக்கக்கூட அவகாசமின்றி ஓடிக்கொண்டிருக்கும் சராசரி இந்தியருக்கு மற்ற மாநிலத்தில் வாழும் சக இந்தியர்களை அறிமுகப்படுத்தி வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாதலால், அவர்களை இலக்கியப் போட்டிகளுக்குள் இழுக்கும் முயற்சியாக இப்பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பேட்டிகளையும், அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் படித்தபின், அந்த மாநிலத்தை, அதன் மக்களை, அந்த மொழியை, அதன் இலக்கியத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வாசகர்களில் ஒருசிலருக்கு உண்டானால்கூட, இத்திட்டத்தை மேற்கொண்டதற்கான பலனை நான் தொட்டுவிட்டதாக மகிழ்வேன்.
'ஊர் கூடித் தேர் இழுப்பது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தத் திட்டம் அதற்குச் சரியான சான்றாகிறது. தனிநபராக நான் செயல்பட்டபோதும், எனக்குத் தோள்கொடுக்க எழுத்தாளர்களும், இன்னும் பலரும் முன்வரவில்லை என்றால், இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்கிற என் ஆசை கானல்நீராகவே இருந்திருக்கும்.
'சரி, இப்படி நான்கு தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் இந்திய ஒற்றுமை குறைவின்றி தழைத்துவிடும் என்று வாஸ்தவமாக நினைக்கிறாளா?' என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். இல்லை... அப்படியொரு அசாதாரண எதிர்பார்ப்பு கண்டிப்பாக என்னிடம் இல்லை. 'போய்ச் சேரவேண்டிய தூரம் அதிகம்; இதில் முதல் சில அடிகளை எடுத்துவைக்க இந்த முயற்சி உதவவேண்டும்' என்பதுதான் என் விருப்பம். இங்கு ராமாயணத்திலிருந்து ஓரிடத்தைச் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன். அனுமன் போன்று மிகப்பெரிய அளவில் உதவமுடியாதபோதும், அணில்கள் தண்ணீரில் முங்கி, மணலில் புரண்டு, சேது அணை கட்டுமிடத்திற்குச் சென்று உடம்பை உதறி, பாலம் கட்ட தங்களாலான உதவியைச் செய்ததாகச் சொல்லப்படும் விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியொரு சின்னஞ்சிறு அணிலாக இருந்து, என்னளவில் பாரததேசத்தை இன்னும் உறுதியாகப் பின்னுவதற்கு இழைகளை நெய்யும் முயற்சிதான் இந்த இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்தாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?
- மகாகவி பாரதி.
வணக்கம்.
- சிவசங்கரி
மே, 1997
சென்னை.
என்னுரை - 2
(கிழக்கிந்திய மொழிகளைப் பற்றிய இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றது)
நான்கு தொகுதிகளைக் கொண்ட இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998-ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம் இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குரித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை என்னைப் பிடித்திருக்கிறது! தென்னிந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நான்குடனும் நினைவு தெரிந்த நாள் முதல் பரிச்சயம் இருந்ததோடு, வருடா வருடம் விடுமுறைக்கு அண்டை மாநிலங்களிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வதைப் பழக்கமாக்கிக்கொண்டிருந்ததில், திருவனந்தபுரத்திற்கோ, பெங்களூருக்கோ, ஹைதராபாத்துக்கோ எழுத்தாளர்களைச் சந்திக்கவெனச் சென்றதும், தங்கியதும் எனக்குள் எவ்வித சங்கடத்தையும் உண்டுபண்ணவில்லை.
ஆனால் கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக நான் மேற்கொண்ட பயணங்கள், கண்னணக்கட்டிக் காட்டில்விட்ட தடுமாற்றத்தைப் பலமுறை எனக்குள் தோற்று விக்கவே செய்தன. மொழி புதுசு, ஊர் புதுசு, உணவுப் பழக்கவழக்கங்கள் புதுசு - என்று சாதாரணமாக எல்லோரும் சிரமமாகக் கருதும் விஷயங்களின் நீண்ட பட்டியலைவிட, சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டி காண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையிலிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!
ஒருமொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (spadework); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (field work]; சென்னைக்கு வந்த பிறகு 15-20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (transcribing) எடுப்பதற்கு மட்டும் தான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலிநாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் காலம் ஏகத்துக்கு ஓடிவிட்டது. (இந்தப் பிரச்சினை மேற்கு, வடக்கு மொழிகளை ஆய்வு செய்யும் போதும் கண்டிப்பாய் தலையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்!)
இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும், 1999-ல் வெளியாகியிருக்க வேண்டிய இரண்டாம் தொகுப்பை, 200௦-வது ஆண்டிலாவது என்னால் இயன்ற அளவுக்குச் செம்மையாக வெளிக்கொணர முடிந்ததே என்கிற சந்தோஷம் இந்த நிமிடம் என் நெஞ்சை முழுமையாய் நிறைப்பது நிஜம்.
அது என்ன 'இயன்ற அளவுக்கு?' என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பக் கூடும். இதோ விளக்கிவிடுகிறேன். முடிந்தவரையில் சந்தேகங்களை மீண்டும்மீண்டும் கடிதத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொண்டபோதிலும், சில படைப்பாளிகள் வெளியூர், வெளிநாடு போய்விட்டதாலும், சிலரிடமிருந்து பதில் குறித்த நேரத்தில் வராததாலும், ஓரிரு இடங்களில் என்னையும்மீறி சில விவரங்கள், தவறாக அச்சேறியிருக்கலாம். தவிர, பெயர்கள், தேதிகள், இத்தியாதிகள் ஒவ்வொரு குறிப்பில் ஒவ்வொரு தினுசாகக் காணப்படுவதும்கூட நான் தவறான விவரத்தை வெளியிடக் காரணமாகக்கூடும். ஹீக்ளி நதியின் பெயர் Hugly என்று ஒரு குறிப்பேட்டிலும், Hoogly என்று இன்னொன்றிலும்; சுந்தர்வனத்தின் (Sundarbans) விஸ்தீரணம் 9630 சதுர கி.மீ, என்று ஒரு கையேட்டிலும், 2608 சதுர கி.மீ. என்று மற்றதிலும்; சாந்திநிகேதன் பள்ளி 1901-ல் தாகூரால் துவக்கப்பட்டது என்று ஒரு இடத்திலும், 1890-ல் பிரும்ம வித்யாலயம் கவியரசரால் ஆரம்பிக்கப்பட்டது என்று வேறொன்றிலும் - காணப் படுவதைச் சில உதாரணங்களாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில் முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும் ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?
கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கௌஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாய கேட்கும் சக்தியை இழந்துவிட்டதால், தற்சமயம் அவரால் பலகையில் எழுதிக்காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.
மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களை யெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது.
ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும் இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.
'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புக்களையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல்கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புக்களின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபட வைக்கும். உறுதியாய்!
- சிவசங்கரி
சென்னை
31-3-2000
என்னுரை - 3
(மேற்கிந்திய மொழிகளைப் பற்றிய மூன்றாம் தொகுப்பில் இடம்பெற்றது)
மேற்கிந்தியாவில் பேசப்படும் கொங்கணி, மராத்தி, குஜராத்தி, சிந்தி மொழிகளின் தொகுப்பை, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற எனது பணியின் மூன்றாவது புத்தகமாக 2002-ல் கண்டிப்பாய் வெளியிட்டுவிட வேண்டும் என்று எண்ணியது நடக்காததற்கு முக்கியமாய் மூன்று காரணங்கள் இருக்கின்றன. 'ஒரு பெண்ணின் கதை', 'சொந்தம்' என்ற தலைப்புகளில் 'சென்னை', 'சன்' தொலைக்காட்சிகளில் நீண்ட தொடர்களாக எனது கதைகள் ஒளிபரப்பாகி, சிறந்த தொடர் விருதைப் பெற்றவையில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பங்கெடுக்க நேர்ந்தது - முதல் காரணம். தமிழன்னைக்கு ஓர் ஆபரணம் சூட்டும் ஆர்வத்துடன் தமிழுக்குத் தங்கள் படைப்புக்கள் மூலம் சீரிய தொண்டாற்றிக்கொண்டிருக்கும் 6௦ மூத்த எழுத்தாளர்களிடம் அவர்களின் சிறந்த சிறுகதையை அவர்களைவிட்டே தேர்ந்தெடுத்துத் தரச்சொல்லி 'நெஞ்சில் நிற்பவை' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாய் வெளியிடும் முழு பொறுப்பையும் ஏற்றுச் செயல்பட்டது இரண்டாவது காரணம். இவைதவிர, இன்னுமொரு காரணமும் உள்ளது. அதைப் பின்னர் கூறுகிறேன். முதல் இரண்டு காரியங்களும் வெகுநேர்த்தியாய் நிறைவேறி நிறைவைத் தந்திருப்பது நிஜம்தான் என்றாலும், கவனம், நேரத்தை அவற்றின்பால் செலவிட்டதில் சென்ற ஆண்டுகளில் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணி பின்னுக்குத் தள்ளப்பட்டது குறித்து எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது. சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு கதைகள் படைப்பதைத் தொடர்ந்தால் கவனம் திசைதிரும்பிவிடும் என்கிற ஆதங்கத்தில் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியைத் துவக்கிய காலமாய்-சுமார் 10 வருடங்களாய் - கதைகள் எழுதுவதை நிறுத்திவைக்க நான் எடுத்த முடிவு சரியானதே என்பதைத்தான் சென்ற இரு ஆண்டுகால நடப்புகள் உணர்த்துகின்றன. எது எப்படியாயினும், மேற்கு மொழிகளின் தொகுப்பு வெளியிடும் இத்தருணத்தில், வடக்கு மாநிலங்களைச் சார்ந்த மொழிகளின் வேலைகளில் ஈடுபட்டு, பஞ்சாபி மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எடுத்து முடித்துவிட்டு, காஷ்மீர மொழிக்கான ஆரம்பகட்ட பணிகளைத் துவக்கியிருப்பது, வடக்குத் தொகுப்பைக் குறித்த நேரத்தில் சீக்கிரமே வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறது.
மேற்கு மொழிகளின் தொகுப்புக்கான முன்னுரை எழுத உட்கார்ந்ததும் முதலில் என் சிந்தனையை ஆக்ரமிப்பது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் சந்தித்த ஒரு பேரிழப்பின் வலி. 'சிவசங்கரியின் வெற்றியை என் வெற்றியாக எண்ணி மகிழ்வேன்' என்று 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியின் துவக்கவிழாவில் பெருமிதத்துடன் கூறியதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகம் கொடுத்து என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவர் அமரர் திரு. ஜி.கே. மூப்பனார். ஊக்கம் என்றால்- வெறும் வாய்வார்த்தைகளாய் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளின் தொகுப்பான முதல் புத்தகம் அச்சிட பணஉதவி செய்ததில் தொடங்கி, 300 பிரதிகளைத் தன் சொந்தச் செலவில் வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது வரை அந்த நல்ல மனிதர் ஓசைப்படாமல் உதவியிருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திரு. மூப்பனாரின் ஆசிகள் என்னுடைய பணிக்கு என்றும் கிட்டி, விரைவில் நான்காவது தொகுப்பையும் சிறந்த முறையில் வெளியிடவைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணிக்காக அந்தந்த மொழி எழுத்தாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறேன், அந்தந்த மாநிலங்களில் அவரவர் இல்லங்களுக்கே சென்று ஓலிநாடாவில் அவர்களது பேட்டிகளை எப்படிப் பதிவு செய்துகொள்கிறேன் என்பதையும், மொழி, உச்சரிப்பு காரணமாய் ஒலிநாடாவிலிருந்து நகலெடுப்பதற்கு (tranScribing) எத்தனை சிரமப்படுகிறேன் என்பதையும் முந்தைய என்னுரையில் விளக்கியிருக்கிறேன். உச்சரிப்பு, பதிவுத் தெளிவின்மை காரணமாய் கிழக்குத் தொகுப்பு பிரசுரமானபின், ஓரிரு பேட்டிகளில் குறிப்புகள் தவறாக வெளி வந்திருப்பதை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியதில், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் மேற்கு மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எழுதிய பிறகு அவர்களுக்கே அனுப்பி, விவரப்பிழைகளை (factual error) திருத்தி அனுப்பும்படி கேட்டேன். இதற்கு பெரும்பான்மை எழுத்தாளர்கள் வெகு சிரத்தையுடன் ஒத்துழைப்பு தந்து, உடனுக்குடன் திருத்தின பேட்டிகளை அனுப்பிவிட்டபோதும், 2002 பிப்ரவரி மாதம் அனுப்பிய சில பேட்டிகள், தொகுப்பு அச்சேறும் இந்த நிமிடம்வரை - அதாவது 18 மாதங்கள் - நான்கு கடிதங்கள், பல தொலைபேசி அழைப்புகள் மூலம் நினைவூட்டியும் - இன்னமும் வந்து சேரவில்லை என்பதுதான் இத்தொகுப்பு தாமதமாய் வெளியாவதற்கு மூன்றாவது முக்கியக் காரணம். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மும்பைக்குச் சென்று, அங்கே தங்கி, தொலைபேசி மூலம் சந்திக்க நேரம் பெற்றுக்கொண்டு, நீண்ட பேட்டி எடுத்து முடித்து, சென்னைக்குத் திரும்பி ஒலிநாடாவிலிருந்து நகலெடுத்து, எழுதி, திருத்துவதற்காக சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, பல நினைவூட்டல்கள் செய்து, 'இன்னும் கொஞ்சம் அவகாசம் தாருங்கள்' என்று கேட்டுக்கொண்டவரின் நிலைமை புரிந்து காத்திருந்த பிறகு, சென்றமாதம் - அதாவது சுமார் 18 மாதங்கள் கழித்து - 'திருத்திக் கொடுக்க எனக்கு அவகாசம் இல்லை, ஆகவே என் பேட்டியைத் தொகுப்பில் சேர்க்க வேண்டாம்' என்று சொன்னவர் மராத்தி மொழியின் சிறந்த நாடகாசிரியரான திரு, விஜய் டெண்டுல்கர். இதை திரு. டெண்டுல்கர் மேல் ஒரு புகாராகக் கூறும் நோக்கம் நிச்சயமாய் எனக்கில்லை; ஆனால் மிகச்சிரமப்பட்டு எடுத்த பேட்டியை ஏன் தொகுப்பில் சேர்க்க முடியவில்லை என்ற காரணத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற வருத்தத்தோடுதான் எழுதுகிறேன்.
மேற்கில் நான் சந்தித்த எழுத்தாளர்களில் கொங்கணி, குஜராத்தி எழுத்தாளர்கள் என்னிடம் காட்டிய அக்கறை அலாதியானது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மூன்று அல்லது நான்கு முறைகள் செல்லவேண்டிவருவதில் செலவு எக்கச்சக்கமாய் ஆவதைப் புரிந்துகொண்டு, 'எங்கள் இலக்கியக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்ற கோவாவுக்கு வாருங்கள்' என்று அழைத்து, ஒரு பயண, தங்கும் செலவுகளைத் தங்கள் மொழி இலக்கிய அமைப்பு ஏற்க வழிசெய்த கொங்கணி மூத்த எழுத்தாளர் சந்திரகாந்த் கெனி, 'உங்களை எங்கள் எழுத்தாளர்கள் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும்' என்று கூறி உற்சாகத்தோடு குஜராத் சாகித்ய பரிஷத்தில் சிறப்பான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த குஜராத்தி மூத்த எழுத்தாளர்கள் திரு. போலாபாய் படேல், திரு. ரகுவீர் செளத்ரி போன்றவர்களுக்கு என் நன்றியை இக்கட்டுரை மூலம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மூத்த ஒரிய எழுத்தாளர் திரு. மனோஜ் தாஸின் ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்ட முன்னுரை இப்புத்தகத்திற்கு மேலும் மெருகு சேர்த்திருக்கிறது. அவரையும், இத்தொகுப்பு உருவாக ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்த அனைவரையும் நெஞ்சு நிறைந்த நன்றியோடு வணங்குகிறேன்.
- சிவசங்கரி
ஆகஸ்ட், 2003
சென்னை.
என்னுரை - 4
பதினாறு வருடங்கள்! கொஞ்சம் வியப்பாகவும், கொஞ்சம் நம்பமுடியாமலும் இருக்கிறது! 1992-ம் ஆண்டின் இறுதியில் அறிவிப்பு செய்துவிட்டு, 1993-ம் ஆண்டு மத்தியிலிருந்து தீவிரமாய் ஈடுபட்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற பணியை முழுமையாய் பூர்த்திசெய்வதற்கு நான் எடுத்துக்கொண்ட அவகாசம் பதினாறு வருடங்கள் என்பதை எண்ணிப்பார்க்கையில், பிரமிப்புத்தான் தோன்றுகிறது. இந்திய அரசியல் சாஸனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 15 மொழிகளை (பின்னர் ஒரு வருடத்திற்குள் இந்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துவிட்டது!) ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களைச் சந்திக்கப் பயணித்து, பேட்டிகண்டு எழுத, ஒரு தொகுதிக்கு ஒரு வருடம், ஆக, 4 வருடங்கள்; அச்சுக்குத் தந்து, பிழைதிருத்த 1 வருடம்; ஆகமொத்தம் 5 -மிஞ்சிப்போனால் 6 வருடங்கள்- என, 1993-ல் நான் போட்ட மனக்கணக்கு, பல காரணங்களால் சுத்தமாய் மாறி, இன்று 16 வருடங்களில் வந்து நிற்கிறது! கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌஸோ தனது முன்னுரையில் மிகக் கச்சிதமாய் குறிப்பிட்டுள்ளதுபோல, இது ஒரு தவம்தான்! 18 மொழிகள், அவற்றைச் சார்ந்த படைப்பாளிகளின் இலக்கியம் - என்று, ஒரு மாபெரும் இலக்கிய சாகரத்தில் மூழ்கி, நல்முத்துக்களாக நான்கு தொகுதிகளை உருவாக்கியதை ஒரு தவமாக மட்டுமின்றி, செம்மையான வேள்வியாகவும் நான் கருதுகிறேன்.
தங்கள் அழுத்தமான சிந்தனைகளால் ஒவ்வொரு மொழிக்கும் உரம் சேர்த்த இலக்கிய ஜாம்பவான்களை அவரவர் இல்லங்களிலேயே சந்தித்துப் பேட்டியெடுத்து உரையாடியதும்; அந்தச் சந்திப்புக்களுக்காக பாரததேசத்தின் குறுக்கும் நெடுக்குமாய் பலமுறைகள் பயணித்து, ஆயிரக்கணக்கான வருட சரித்திரத்தை உள்ளடக்கிய பாரம்பரியமிக்க இடங்களை தரிசிக்க முடிந்ததும், கடந்த 16 வருட அனுபவங்களின் உச்சகட்டம்! எத்தனை பேருக்குக் கிட்டும் இப்படியொரு அபூர்வமான வாய்ப்பு - என்பதை நினைக்கையில், நெஞ்சு வாஸ்தவமாகப் பூரித்து, நெகிழ்கிறது.
'வடக்கு' என்ற இத்தொகுதியில், இந்தி, காஷ்மீரி, பஞ்சாபி, உருது மொழிகளுடன் சமஸ்கிருதத்தையும் நான் சேர்த்திருப்பதற்கு, ஆதிநாட்களில் பாரததேசத்தின் எந்தப் பகுதியையும் விட காஷ்மீர் பள்ளத்தாக்கில் சம்ஸ்கிருதம் பல நூற்றாண்டுகள் கோலோச்சியதுதான் முக்கியக் காரணம்.
ஒரு மொழிக்குள் நுழைவதற்கு முன் அந்த மொழி சார்ந்த மாநிலத்தை வலம் வந்து, சுவாரஸ்யமான பயணக்கதையை வாசகர்களுக்குத் தருவது இந்தத் தொகுதியிலும் தொடர்கிறது. இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் - தில்லி, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்திராஞ்சல், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட்- ஆகிய எட்டு மாநிலங்களிலும் பயணித்து, கட்டுரைகளை எழுதியிருப்பதில், நான் தரிசித்த வடஇந்தியாவை ஓரளவுக்கு முழுமையாக வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன் என்ற திருப்தி என்னுள் எழுகிறது.
முந்தின மூன்று தொகுதிகளில் நான்குக்கும் குறைவாக எந்த மொழியிலும் படைப்பாளிகளைச் சந்திக்காத நான், சம்ஸ்கிருதத்தில் இரண்டு படைப்பாளிகளிடம் மட்டுமே கருத்துப் பரிமாற்றம் செய்து பேட்டியெடுத்துள்ளேன். இதற்கு, எத்தனை முயன்றும் பொருத்தமான சம்ஸ்கிருதப் படைப்பாளிகளின் அறிமுகம் கிட்டவில்லை என்பது ஒரு காரணம்; அதற்காகக் காலவரையறையின்றி காத்திருப்பது, இத்தொகுதி அச்சுக்குப் போவதற்குத் தடையாக இருந்தது என்பது இரண்டாவது காரணம். எனினும், நான் சந்தித்த இரண்டு படைப்பாளிகள் மூலமே சம்ஸ்கிருதத்தைப்பற்றி ஆக்கபூர்வமான தகவல்களைப் பெறமுடிந்திருப்பது ஆறுதலான விஷயம்.
One woman army-யாக இம்மாபெரும் பணியைத் திட்டமிட்டு, துவக்கி, நடத்தி, பூர்த்திசெய்ய முடிந்ததற்கு, தெய்வ அனுக்கிரகம், பெரியவர்களின் ஆசி, நல் விதயங்களின் வாழ்த்துக்கள், ஒத்துழைப்பு, கடினமான அயராத உழைப்பு - என்று அனைத்தும் ஒருசேர இணைந்தது. எனக்குக் கிட்டிய மிகப்பெரிய பலம். ஆனால், மிகுந்த ஆர்வத்துடன் என்னைச் சந்தித்து பேட்டியளித்த குர்ரத்துலைன் ஹைதர், நிர்மல் வர்மா, கம்லேஷ்வர் ஆகியோர், இப்புத்தகம் வெளிவரும் தருணத்தில் நம்மோடு இல்லை என்பதும்; ஓர் ஆத்மார்த்த சினேகிதியாய் என்னை உற்சாகப்படுத்தி, பாராட்டி, எப்போதும் வாழ்த்திய என் தாய், 'வடக்கு' தொகுதி வெளியாகி, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற எனது வேள்வி முடிவடைவதைப் பார்த்து சந்தோஷிக்க இப்பூவுலகில் இல்லை என்பதும் - வலி தரும் வேதனையான நிகழ்வுகள்.
சிரத்தையுடன் அனைத்துப் பேட்டிகள், பயணக்கட்டுரைகளையும் படித்து, சிறப்பான முன்னுரை தந்துள்ள கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌஸோவுக்கு என் அன்புகலந்த நன்றி.
'பாரத தேசம் பழம்பெரும் தேசம், தாம் அதன் புதல்வர்' என்று மீசையை முறுக்கி பெருமிதத்துடன் குரலெடுத்து மாகவிஞன் பாரதி பாடிய பாரதத்தில் என் சக்தி இடம்கொடுத்தவரை பயணித்து, அதை தரிசித்து, 'இந்திய இலக்கியம் பல மொழிகளில் எழுதப்பட்டாலும், அது ஒன்றுதான்' என்ற கருத்துடன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்வைத்த இந்திய இலக்கியத்தை என் சிற்றறிவுக்குத் தெரிந்தவரை ஆய்வு செய்துவிட்டேன். 16 வருடங்களாய் மிகுந்த அக்கறை, ஈடுபாட்டுடன், தெற்கு-கிழக்கு-மேற்கு-வடக்கு என்று நான்கு தொகுதிகளாய் வெளியிட்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற புத்தகங்களை, என் இந்திய இலக்கியத் தாய்க்கு நான்கு ஆபரணங்களாக சமர்ப்பிக்கிறேன். இந்த ஆபரணங்கள் அவள் அழகுக்கு அழகு சேர்க்கும், பெருமைக்குப் பெருமை சேர்க்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கிருக்கிறது.
வணக்கம்.
- சிவசங்கரி
செப்டம்பர், 2008
சென்னை.
தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்
இறைவன்
துவக்கத்திலிருந்து அனைத்து சிந்தனை, செயல்பாடுகளிலும் கூடவே இருப்பவர்.
திரு. ஏ.சி. முத்தையா, திருமதி தேவகி முத்தையா
புதுதில்லி ஸ்பிக் கெஸ்ட் ஹவுஸில் பாதுகாப்பாய்த் தங்கி, எழுத்தாளர்களைப் பேட்டியெடுக்க ஏற்பாடு செய்தவர்கள்.
டாக்டர் டீ.ராமசாமி (செயலர், அறிவியல் தொழில்நுட்பத்துறை, இந்திய அரசு)
காஷ்மீரி எழுத்தாளர்களைப் பேட்டியெடுக்க ஸ்ரீநகர், ஜம்மு நகரங்களில் தங்கும் வசதியைச் செய்துதந்தவர்.
திரு.ஜி. நாராயணன், திருமதி பிரியா நாராயணன்
ஆந்திர வங்கியின் சேர்மனாக இருந்தபோது முதல் தொகுதியில் இடம்பெற்ற ஆந்திரப் பிரதேசப் பயணக்கதை எழுத உதவியதோடு நின்றுவிடாமல், பின்னர் BIFER அங்கத்தினராக புதுதில்லியில் வசித்த ஐந்து வருடங்களில் 'வடக்கு' தொகுதிக்கான பயணங்களை மேற்கொள்ள உதவியவர்கள். தில்லியில் எனக்கு இனொரு வீடு என்று எண்ணும் விதத்தில் அனைத்து வசதிகளும் செய்து தந்தவர்கள்.
வடக்கிந்திய மொழி எழுத்தாளர்கள்
பேட்டிக்கு ஒப்புக்கொண்டு எந்த கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்து நட்புடன் பழகியவர்கள்.
திரு.சச்சிதானந்தன் (முன்னாள் செயலர், மத்திய சாகித்ய அகாடமி)
மத்திய சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்க்க அனுமதித்தவர்.
திரு. தாமோதர் மௌஸோ
அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோதும், கேட்டவுடனேயே சம்மதித்ததுமல்லாமல், மிகுந்த உற்சாகத்துடன் முழு தொகுதியையும் படித்து, அருமையான முன்னுரை வழங்கிய கொங்கணி எழுத்தாளர்.
திரு. தோட்டாதரணி
இந்திய மொழிகளிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு இப்புத்தகத்தின் மேலட்டையை அற்புதமாக உருவாக்கிக் கொடுத்தவர்.
எம்.ஸி.எஸ். கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஒவ்வொரு மாநிலத்தின் வரைபடத்தையும், பொருத்தமான படங்களையும் கொண்ட வண்ணப்பக்கங்களை உருவாக்கித் தந்தவர்கள்.
வானதி பதிப்பகம்
நான் எழுதத் துவங்கிய நாள் முதல் என்மீது ஒரு தந்தையைப் போன்று அக்கறை செலுத்தும் திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களும், பதிப்புத்துறையில் அலாதி ஈடுபாடு கொண்டுள்ள அவரது மகன் திரு. ராமு அவர்களும், இப்புத்தகம் அழகுற உருவாகக் காரணமானவர்கள்.
திருமதி லலிதா வெங்கடேஷ்
இத்திட்டத்தின் 'கரு' உருவான நாளிலிருந்து இத்தொகுதி புத்தகமாய் வெளியாகும் வரை சகலவிதத்திலும் - ஒலிநாடாவிலிருந்து பிரதியெடுத்து, எழுத்தாளர்களின் படைப்புக்களை தமிழில் மொழிபெயர்த்து, கணினியில் ஏற்றி, கட்டுரைகளைத் தொகுத்து, அச்சுப்பிழை திருத்தி - என்று அனைத்துக் காரியங்களிலும் எனது வலதுகரமாய் செயல்பட்டவர்.
என் குடும்பத்தார்
கண்களில் பெருமையும் சந்தோஷமும் வெளிச்சம்போட எனக்கு ஊக்கம் தந்தவர்கள்.
என் வாசகர்கள்
'பதினாறு வருடங்களாக நீங்கள் கதைகள் எழுதாதது குறையாக இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தை நல்லவிதமாய் முடியுங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்' என்று அன்போடு கூறியவர்கள்.
இவர்களைத் தவிர, இப்புத்தகத்தை உருவாக்க ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கும், நெகிழ்ந்த நெஞ்சோடு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- சிவசங்கரி
செப்டம்பர், 2008
சென்னை.
ஜம்மு, காஷ்மீர்
இந்தியத் திருநாட்டை பாரதமாதாவாகவும், மாநிலங்களை அவள் அணியும் அணிகலன்களாகவும் கற்பனை செய்தால், தாயின் தலையில் ஓர் அழகான கிரீடம் போல அமர்ந்திருப்பதுதான் ஜம்மு காஷ்மீர் மாநிலம். வடக்கில் சீனா, கிழக்கில் திபெத், தெற்கில் இமாலயப் பிரதேசம், மேற்கில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் புடைசூழ, இமயமலையில் சுமார் 2,22,000 சதுர கி.மீ. அளவில் இம்மாநிலம் பரவியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 14 மாவட்டங்கள், ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்று முக்கியப் பிரிவுகளில் அடங்கியுள்ளன.
ஆதிநாளில் காஷ்மீரத்தில் வாழ்ந்த கல்ஹணன் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ள 'ராஜதரங்கிணி' என்கிற நூல் காஷ்மீரத்தின் வரலாற்றை நமக்கு வெகு விமரிசையாகத் தருகிறது. 'நில்மத் புரான்' என்ற தொன்மைவாய்ந்த நூலில் வேதகால காஷ்மீரத்தைப் பற்றின சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று காணப்படுகிறது. அந்நாட்களில் அங்குள்ள ஏரி 'சதிஸார்' என்று அழைக்கப்பட்டு அதில் ஐலோட் போவா என்ற அரக்கன் வாழ்ந்து, மலைச்சரிவில் வசித்துவந்த மக்களை சாப்பிட்டு அவர்களை மிகுந்த துன்பத்துக்குள்ளாக்க, அங்கு வந்த காஷ்யப முனிவர், இதனனக் கேள்விப்பட்டு, நீண்ட நாட்கள் தவம் செய்து, தன் தவ வலிமையால் ஏரிக்கு அரணாக இருந்த வராஹமுல்லா (இன்றைய பாரமுல்லா) மலையைக் குடைந்து, சதிஸார் ஏரியின் நீரை வடியச் செய்து, உள்ளே ஒளிந்திருந்த அரக்கனை அழித்ததும் அல்லாமல், இந்தியாவிலிருந்து மக்களை அந்த உலர்ந்துபோன ஏரிப் பள்ளத்தாக்கில் குடியேறச் செய்ததில், சந்தோஷமடைந்த மக்கள் அந்தப் பள்ளத்தாக்கை காஷ்யப்--மார் (காஷ்யபரின் ஊர்) என்று அழைக்கத் துவங்கினார்கள் என்கிறது அந்த வரலாற்றுக் குறிப்பு. அதுவே மருவி காலப்போக்கில் 'காஷ்மீர்' ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள். 'கா' என்றால் 'தண்ணீர்', 'ஷிமீரா' என்றால் 'உலர்ந்த' என்ற அர்த்தத்தை வைத்துப் பார்க்கும்போது தண்ணீர் உலர்ந்து உண்டான இடம் என்று விளக்கம் 'நில்மத் புரான்'-இல் காணப்படும் குறிப்போடு ஒத்துப்போகிறது
என்று விளக்கம் தந்தார் என் காஷ்மீரத்து நண்பர்!
1149-1150 வருடங்களில் எழுதப்பட்ட கல்ஹணனின் 'ராஜதரங்கிணி' கிட்டத்தட்ட மகாபாரதக் கதை நடந்த காலத்தில் - அதாவது கலிகாலம் 653-ம் வருடம், முதலாம் கோணன்டா அரசரின் ஆட்சிக்காலத்தில் துவங்கி, அப்பிரதேசத்தை ஆண்ட முக்கிய மன்னர்களின் செயல்பாடுகளை விவரித்து, இந்து மகாராஜாவான ஜெயசிம்மாவுடன் (1128-1155) முடிகிறது. முதலாம் கோணன்டாவைத் தொடர்ந்து ஆட்சி செய்த 35 அரசர்கள் பற்றின விவரங்கள் கிட்டவில்லை என்று கல்ஹணன் தெரிவித்தாலும், தற்கால அறிஞரான பீர் ஜாடா ஹாஸன், இவ்வரசர்களைச் சார்ந்த சின்னச்சின்ன தகவல்களை 'ரத்னாகர்' என்கிற வடமொழி நூலிலிருந்து எடுத்து, பாரசீகத்தைச் சார்ந்த முல்லா அகமத் என்ற ஆசிரியர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்று உறுதியாய்க் கூறுகிறார். மெளரிய அசோகச் சக்ரவர்த்தி இப்பகுதியை ஆண்டபோது இன்றைய பழைய ஸ்ரீநகர் நகரத்தைத் தோற்றுவித்தார் என்றும், விஜேஸ்வரியில் (இன்றைய பிஜ்பெஹ்ரா) சிவன் கோவிலைக் கட்டி மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தார் என்றும், கூடவே மஜ்ஹந்திகா என்ற பெளத்த குருவை விட்டு பெரிய அளவில் புத்தமதப் பிரச்சாரம் செய்வித்தார் என்றும், இதனாலேயே அக்காலத்தில் பலர் பௌத்த மதத்தைத் தழுவினார்கள் என்றும் அந்நூல் நமக்குச் சொல்கிறது. இவ்விவரங்களைச் சீனப் பயணநூலாசிரியரான ஹுவான் ஸாங்கும் தனது நாட்குறிப்பில் உறுதி செய்கிறார், அசோகச் சக்ரவர்த்தியைத் தொடர்ந்து அவரது மகன் ஜாலுகா, அவரது பிள்ளை இரண்டாவது தாமோதர் ஆகியோர் செய்த நல்லாட்சி பற்றின தகவல்களும் மேற்சொன்ன நூல்களின் வழியே நமக்குக் கிட்டுகின்றன.
சுமார் 200 ஆண்டுகள் கோலோச்சிய இந்திய-கிரேக்க அரசர்களைத் தொடர்ந்து முக்கியமாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது துருஷ்கர்களின் (குஷார்கள்) ஆட்சி, அவ்வம்சத்தில் ஹஸ்கர், ஜூஸ்கர், கனிஷ்கர்களின் நல்லாட்சியை கல்ஹணன் தனது நூலில் விசேஷமாய்ச் சொல்கிறார். கனிஷ்கரின் காலத்தில் 'குண்டல் வனம்' (இன்றைய ஹர்வான்) என்ற இடத்தில் பெரிய மடாலயம் இருந்ததையும், அங்கு நடந்த மாநாட்டில் ஐநாறுக்கும் மேற்பட்ட பெளத்த, இந்து அறிஞர்கள் கலந்து கொண்டதையும், அதற்கு இந்து பிராமண அறிஞர் வசுமித்ரர் தலைமை தாங்கியதையும், அஸ்வகோஷர், நாகார்ஜுனர், சுகமித்ரர், ஜீனமித்ரர் போன்ற மிகச்சிறந்த பௌத்த அறிஞர்கள் அந்த சதஸில் பங்குகொண்டதையும் விவரிக்கும் ஹுவான் ஸாங் 'காஷ்மீரத்து அறிஞர்கள் ஈடிணையற்றவர்கள்' என்றும் பாராட்டியிருப்பது நம்மைப் பூரிக்கச் செய்யும் செய்தி.
காஷ்மீரை ஆக்ரமிப்புச் செய்த ஹீன் பரம்பரையைச் சார்ந்த மஹிர் குல் என்ற அரசரின் கொடுங்கோல் ஆட்சியைப்பற்றி கல்ஹணன் தனது 'ராஜதரங்கிணி'யில் அடுத்த கட்டமாகக் குறிப்பிடுகிறார். காட்டுமிராண்டித்தனமாய் ஆண்ட அந்த அரசரும் அவருடைய படையும், சகட்டுமேனிக்கு மனிதர், மிருகங்களைக் கொன்றதில், அவர்களிருக்கும் இடத்திற்கு மேலே பிணங்களின் மிச்சத்தை உண்ண வென எப்போதும் ஆயிரக்கணக்கில் கழுகுகளும் காக்கைகளும் வானத்தில் வட்ட மிட்டபடி இருக்குமாம்! பிர் பன்சால் என்ற கணவாயைக் கடக்கும்போது மலையின் உச்சியிலிருந்து வலுக்கட்டாயமாய் தாறு யானைகளை உருட்டி, தள்ளி, சாகடித்து, அவை எழுப்பிய மரணஓலத்தை சங்கீதம் போல மஹிர் குல் ரசித்தார் என்றும் கல்ஹணன் விவரிக்கிறார்!
காஷ்மீரத்தை அடுத்து ஆண்ட கார்கோடக வம்சத்தில் முக்கியத்துவம் பெறுபவர் லலிதாதித்யர் (724-761 கிபி). பஞ்சாப், திபெத், லடாக், கலிங்கம், குஜராத், மார்வார், சிந்து என்று அனைத்து இடங்களுக்கும் படையெடுத்துச் சென்று, வென்று, தனது சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய பெருமை இவரையே சாரும். காஷ்மீரப் பள்ளத்தாக்கில் பல அழகிய கோவில்கள் கட்டிய சிறப்பும் இவருக்கு உண்டு. லலிதாதித்யாரின் சபையை அலங்கரித்த அறிஞர்களில் பவபூதி முக்கியமானவர்.
கார்கோடகர்களின் ஆட்சியைத் தொடர்ந்து கி.பி. 856-ல் வந்த உத்பால் வம்சாவளியின் அவந்திவர்மன் மகாராஜா, அவந்திபூரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சியைத் தந்தார். இவருடைய ஆட்சிக்காலத்தில் பொறியாளராகத் திகழ்ந்த 'சூயா' என்பவர், விசிஷ்டா நதியின் வெள்ளப்பெருக்கை நிறுத்தவேண்டி புத்திசாலித்தனத்துடன் நதியின் கரைகனை உயர்த்திக் கட்டியதோடு, வராஹ முல்லாவில் நதி வரும் பாதையை அடைத்துக்கொண்டு கிடந்த பாறாங்கற்களை அப்புறப்படுத்தி, வெள்ளநீர் வழிந்தோட ஏதுவாய்ப் பல கால்வாய்களை வெட்டி, நதியின் ஓட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து, தரிசாய்க் கிடந்த நிலங்களை விவசாயம் செய்ய வழிசெய்ததைப்பற்றி காஷ்மீர் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குச் சொல்லுகின்றன.
உத்பால் வம்சாவளியைத் தொடர்ந்து லோஹரா பரம்பரையினர், இந்துக்களின் ஆட்சி 1339ல் முடிவுக்கு வரும்வரை காஷ்மீரத்தை ஆண்டார்கள். இந்தப் பரம்பரையில் கோலோச்சியவர்களில் தித்தா ராணி, ஹர்ஷர், ஜெய்ஸிம்ஹர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர்கள். இந்து வம்சாவளியில் கடைசியில் ஆண்ட உதயன் தேவின் மனைவி கோட்டா ராணி, தனது துணிச்சலான நடவடிக்கைகளுக்காக சரித்திரத்தில் இடம்பெற்றவர். காஷ்மீரத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றி ஆண்ட ஷோ மிர் பரம்பரையைச் சார்ந்த ஷா மிரை எதிர்த்துப் போரிட்டதும் அல்லாமல், ஏற்கனவே மணமான தன்னை ஷா மிர் மணக்க விரும்புவதைத் தெரிந்து கொண்டபின் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிரை விட்ட தீரப் பெண்மணி அவர்.
ஷா மிர்-உம் அவரது பரம்பரையும், அடுத்து வந்த 222 வருடங்கள் காஷ்மீரத்தை நன்கு பரிபாலனம் செய்து ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மிர் வம்சாவளியில் ஆட்சி செய்தவர்களில் சுல்தான் ஷிஹாபுத்-தீன், சுல்தான் ஜெயின்-உல்-அபீதின் இருவரும் அவர்கள் செய்த நல்லாட்சியின் காரணமாய் முக்கிய மானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்துக்களின்பால் அலாதி பரிவு, அன்பு காட்டியதுடன், நாட்டை விட்டு ஓடிப்போனவர்களை மீண்டும் வரவழைத்தது, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களை மறுபடியும் இந்து மதத்திற்கே மாற வழிவகுத்தது, இடிந்துபோன கோவில்களுக்குப் புனருத்தாரணம் செய்தது, பள்ளத்தாக்கில் உள்ள கோவில்களுக்கு விஜயம் செய்த இந்து யாத்ரீகர்களுக்கு இலவச உணவு விடுதியைத் திறந்தது, பசுவதையைத் தடுக்க சட்டம் கொணர்ந்தது - போன்ற பல நற்பணிகளை சுல்தான் ஜெயின்-உல்-அபீதின் செய்ததில், காஷ்மீரத்தை ஆண்ட அத்தனை அரசர்களில் அவர் மட்டுமே 'பாதுஷா' என்று சிறப்பாக அழைக்கப்பட்டார்.
1587-ல் பேரரசர் அக்பர் காஷ்மீரத்தின் மேல் படையெடுத்துச் சென்று அதை ஆக்ரமித்த பிறகு 1752 வரை அப்பிரதேசம் முகலாயர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. மூன்று முறை காஷ்மீரத்திற்கு அக்பர் விஜயம் செய்தபோது அவருடன் வந்த ராணுவத்தினர், உயர் குடும்பத்தினரில் பலர் அங்கேயே நிரந்தரமாய்த் தங்கி விட்டபோதும், ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில்தான் காஷ்மீரத்தின் அழகு வெகுவாகப் பிரபலமடைந்து, ஆயிரக்கணக்கானோர் வெளியிலிருந்து வந்து அங்கு குடியேறியது நடந்தது. காஷ்மீரத்தின் சீதோஷ்ணம், இயற்கையழகில் மயங்கிய ஜஹாங்கீர் 13 முறைகள் அங்கு வந்து தங்கியபோது உருவானவைதான் இன்றைக்கும் தல் (இதை 'தால்' என்று உச்சரிப்பது தவறு) எரியைச் சுற்றி நாம் காணும் ஷாலிமார், நிஷாத் நந்தவனங்கள். ஷாஜஹானின் ஆட்சியிலும் நிலவிய அமைதியான சூழல் ஒளரங்கசீப் காலத்தில் சீர்குலையத் துவங்கியது. அரசரின் அலட்சியம் காரணமாய், ஒவ்வொரு மாகாணத்திற்குப் பொறுப்பேற்றிருந்த சுவர்னர்கள் மக்களைத் தங்கள் இஷ்டத்திற்குக் கொடுமைப்படுத்தி, வரிவசூலிக்க முற்பட, நிலைமை இன்னும் மோசமானது. முகலாயர் ஆட்சியின் கடுமை தாளமுடியாமல்போனதில், காபூலின் அரசரான அகமத் ஷா அப்தலி, லாகூரில் 1752-ல் முகாமிட்ட சமயம், காஷ்மீரத்தைச் சார்ந்த இரண்டு பிரபுக்கள் - மிர் முக்விம் காந்த், க்வாஜா ஜாகிர் டிட்மாரி - லாகூருக்கே சென்று அவரைச் சந்தித்து காஷ்மீரத்தின்மேல் படையெடுத்து அதை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விண்ணப்பித்த நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து ஆஃப்கானியர்களின் ஆளுமையின்கீழ் 1752 முதல் 1819 வரை காஷ்மீரம் இருந்ததை 'சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்தது போன்ற மோசமான அனுபவங்களைக் கொண்டிருந்தது' என்கிறார் வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் எல். என். தார். 'மக்களின் பொருட்களை சகட்டுமேனிக்குக் கொள்ளையடித்து, செல்வந்தர்களைத் தங்கள் சொத்துக்களை உடனுக்குடன் விட்டுக்கொடுக்க பலவந்தம் செய்து, மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்று, சகலவிதங்களிலும் சூரையாடியதில், வெகு சீக்கிரமே காஷ்மீரம் தன் வளத்தையும் இயல்புநிலையையும் இழந்த அந்த வருடங்களை மிக மோசமான, இருட்டான காலம்' என்று விவரிக்கிறார். எல்.என். தார்.
அடுத்ததாக 27 ஆண்டுகள் (1819-1846) ஆண்ட சீக்கியர்கள், லாகூரில் தங்கியவாறு ஆட்சி செய்ததில், உள்ளூர் பிரச்சினைகள் கவனிக்கப்படாமல், நிர்வாகம் சீர்குலைய, காஷ்மீரம் வரலாறு காணாத பஞ்சத்தையும், அதன் விளைவாகக் காலரா, பிளேக் நோய்களின் தாக்குதலையும் அனுபவித்ததில், அதுவரை எட்டு லட்சமாக இருந்த ஜனத்தொகை இரண்டு லட்சமாகக் குறைந்துபோனது. 1846-ல் காஷ்மீரத்திற்குச் சென்ற ரானெல் டெய்லர் என்ற பயணி, தனது நாட்குறிப்பில், 'இந்த நகரத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. மரங்களாலான வீடுகள் எப்போது விழுமோ என்ற நிலையிலும், சாலைகள் அசுத்தம் நிறைந்ததாகவும், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியிருப்பதும் என்னை வேதனைப்பட வைக்கிறது' என்று எழுதியுள்ளார்.
ஆங்கிலேய - சீக்கியர்களுக்கிடையே நடந்த இரண்டு போர்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த இந்தியர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த கையோடு, சிந்து நதிக்குக் கிழக்கே, ராவி நதிக்கு மேற்கே உள்ள மலைப்பிரதேசங்களை அவர்களிடமிருந்து 75 லட்ச ரூபாய்க்கு வாங்கிய மகாராஜா குலாப் சிங், 1848-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது துவங்கிய டோக்ரா அட்சி, 1957-ம் ஆண்டுவரை நீடித்தது. ஜம்மு, பூஞ்ச், ராம்நகர், பஸோலி தவிர சுற்றியிருந்த இன்னும் பல சிறிய பிரதேசங்களின்மேல் படையெடுத்துச் சென்று, வென்று, அவற்றையும் காஷ்மீரத்துடன் இணைத்து, நவீன ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு அடிக்கோல் நாட்டிய பெருமை குலாப் சிங்கையே சாரும். தீர்க்கதரிசனமும், நிர்வாகத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்த குலாப் சிங் இரும்புக்கரம் கொண்டு கொள்ளையர்களையும், அட்டூழியம் செய்தவர்களையும் அடக்கி, காஷ்மீரப் பள்ளத்தாக்கில் சட்டஒழுங்கை நிலைநாட்டினார். 'நாங்கள் சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்கள்' என்று கூறிக்கொண்ட இந்தப் பரம்பரையில் 1885-ல் அரியணை ஏறிய மகாராஜா சர் பிரதாப் சிங், 40 ஆண்டுகள் ஆட்சிசெய்த காலத்தில் காஷ்மீரம் மேலும் பலவிதங்களிலும் நவீனமடைந்து வளர்ச்சி கண்டது. இந்தியாவுடன் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கை இணைக்கும் விதமாய் மலைப்பாதைகள் போடப்பட்டதும், மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் மோஹ்ரா என்ற இடத்தில் அமைக்கப்பட்டதும், கல்விக்கண்ணைத் திறக்கும் வகையில் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டதும், தந்தி தபால் நிலையங்கள் உருவானதும், இன்னும் பல ஆக்கபூர்வமான பணிகள் துணிந்து வளர்ந்ததும் இவரது ஆட்சியில்தான்.
பூலோகத்தின் சொர்க்கமாக வர்ணிக்கப்பட்ட காஷ்மீரத்தின் புகழ் எங்கும் பரவி, அதன்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு நிலம் வாங்கிக்கொண்டு ஆங்கிலேயர்கள் குடியேற முயன்றபோது, அதை முளையிலேயே கிள்ளியெறிந்து, காஷ்மீரம் பிரிட்டிஷ் காலனியின் அங்கமாய் மாறுவதைத் தடுத்தவர் துணிச்சல்காரரான மகாராஜா பிரதாப் சிங்தான். நிலம் வாங்கி வீடு கட்டி தங்கும் உரிமை ஆங்கிலேயர்களுக்கு இல்லாதுபோனதுதான் இன்றைக்குப் பிரசித்தமாயுள்ள படகுவீடுகள் பிறக்க வழி வகுத்திருக்கிறது! 1957 ஜனவரி ஒன்றாம் தேதி அரசாட்சியை ரத்து செய்துவிட்டு இந்தியாவுடன் இணைவது என்ற தீர்மானத்தைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாய் ஏற்கப்பட்டது. ஆக, ஜம்மு காஷ்மீரின் வரலாற்றைச் சுருக்கமாய்த் தெரிந்துகொண்டதை இதோடு நிறுத்திவிட்டு, பின்னர் நடந்த, இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் குறித்தான இந்திய-பாகிஸ்தான் சண்டைகளுக்குள் நுழையாமல், இனி, இன்றைய ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து ரசிக்கலாம்.
ஸ்ரீநகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டு முறையும், ஜம்மு, லடாக் பிரதேசங்களுக்குத் தலா ஒரு தடவையும் சென்று,