Magalukkaga
()
About this ebook
இன்பம் துன்பம் எது வந்தாலும் தன் அருகில் வைத்து தன் மகளுக்காகவே யோசிப்பது தான் ஒரு தாயின் குணம். தான்பட்ட துயரத்தை தன் மகளும் படக்கூடாது என்பதற்காக ஒரு தாய் தன் மகளுக்காக செய்த செயல்கள் என்ன? மகளுக்காக நாமும்...
Read more from Jyothirllata Girija
Porattam Rating: 0 out of 5 stars0 ratingsGnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsPurushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Thedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPenkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratings‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsAlaigalum Aazhangalum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Kannamma Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Sothu Rating: 0 out of 5 stars0 ratingsPuratchi Siruvan Manickam Rating: 0 out of 5 stars0 ratingsMathalangal Rating: 0 out of 5 stars0 ratingsVanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Manasu Rating: 0 out of 5 stars0 ratingsGopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsNallathambi Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Magalukkaga
Related ebooks
Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Unnai Vaithean Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Kalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsNagaraa Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsImaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Ennuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsVasanthamullai Rating: 1 out of 5 stars1/5வசந்தமுல்லை Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Manathodu Veesum Thendral Rating: 5 out of 5 stars5/5Naane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsPerukku Oru Manaivi! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Magalukkaga
0 ratings0 reviews
Book preview
Magalukkaga - Jyothirllata Girija
https://www.pustaka.co.in
மகளுக்காக
Magalukkaga
Author:
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For more books
https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. சரியான முடிவு
2. சாவி
3. மாயப் பிசாசங்கள்
4. பெண்ணுக்கென்று ஒரு கோணம்
5. செய்தது சரிதான்
6. இன்னிக்கு இவ்வளவு தான்!
7. பொட்டப்பிள்ளை
8. போதும் ஸ்கூட்டர் சவாரி
9. கழித்தல் இல்லாத கணக்குப்பாடம்
10. ஆண் வாரிசு
11. அப்பா, இனி என்னுடைய முறை!
12. அவர்கள் அப்படித்தான்!
13. அம்மாவுக்கு ஓர் அரண்
14. ஆசைகள்
15. இரண்டு நரிகள்
16. எச்சில் பழம்
17. கழிக்க முடியாத கடனாமே!
18. எழுதப்படாத சட்டங்கள்
19. ஏமாறாதே, ஏமாற்றாதே!
20. சன்னல்
21. கண்டவனையும் காத்திருக்கச் சொல்லலாமா?
22. சொந்த வீடு எரியும் போது
23. திருப்பம்
24. புதிய தெம்புடன்
25. பெரியப்பாவின் உயில்
26. மகளுக்காக
27. வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்
முன்னுரை
நூல் வெளியீட்டுத் துறையில் தனி முத்திரை பதித்துள்ள திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள் வெளியிடும் இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவற்றையும் வெளியிட்ட இதழ்களுக்கு முதலில் எனது நன்றி. (சுஜாதா-1. தேவி-3, அமுத சுரபி-2, கல்கி-4, பெண்-1, ராணி-2, சாவி-1, சுமங்கலி-1, மங்கை-1 சுபமங்களா-1, தினமணிக் கதிர்-2, முத்துமணி-1, ஆனந்த விகடன்-2, குங்குமம்-1, பாக்கெட் நாவல்-1, தமிழரசு-1, ஜெமினி மலர்-1, கலைமகள்-1)
சிறப்பானை முறையில் தொடர்ந்து என் படைப்புகளை வெளியிட்டு வரும் சேது அலமி உரிமையாளர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்களுக்கும், தலைசிறந்த ஓவியருள் ஒருவரான ஷ்யாம் அவர்களுக்கும் எனது நன்றி.
சென்னை - 600 101.
அக்டோபர், 2008.
1. சரியான முடிவு
சுசீந்திரனை அளவிட முடியாத பரபரப்பு ஆட்டிவைத்துக் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டுகள் கழிந்துவிட்டன! நம்பவே முடியவில்லை. பெற்ற குழந்தையைப் பார்த்தே நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்தத் தகப்பனாவது தன் குழந்தையைத் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்குப் பார்க்காமல் இருப்பானா என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே தன்னைப் பற்றிய குற்ற உணர்ச்சி தோன்றியது குற்ற உணர்ச்சி என்று வந்துவிட்டால் மனந்தான் எப்படி வேதனைப்பட்டுத் துடித்துப் போகிறது என்று எண்ணிச் சன்னமாய் ஒரு நெடுமூச்சை வெளிவிட்டான். நெடுமூச்சைத் தொடர்ந்து அவனது பார்வை அறைச்சுவர் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த சரளாவின் வண்ணப் புகைப்படத்தின் மீது விழுந்தது. மறுபடியும் ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து புறப்பட்டது. இந்தத் தடவை பெருமூச்சு ஒரு பாம்பின் சீறலைப் போல் நீட்சியாக ஒலித்தது.
சரளாவின் காலம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தன. அவனுக்கு மறுமணம் செய்துகொள்ளப் பிடிக்கவில்லை. அடிக்கடி மாற்றல் ஆகிற வேலையில் இருந்தான். திருமணம் செய்து கொண்டதற்கு அடையாளாமாய் ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொண்டாகிவிட்டது. அந்த ஒரு பிள்ளை போதும் என்று பட்டது. வீண் குடும்பத்தொல்லைகளையும் சுமைகளையும் இழுத்து விட்டுக்கொள்ள அவன் விரும்பவில்லை. சரளா பிள்ளைப் பேற்றில் இறந்து போயிருந்தாள். ஆறு நாள் குழந்தையை மாமனார் மாமியாரிடம் விட்டுவிட்டு அவன் உடனுக்குடனாக மாற்றலான பம்பாய்க்குப் புறப்பட்டுவிட்டான். மாதா மாதம் குழந்தையின் செலவுக்காக மாமனாருக்கு இருநூறு ரூபாய் வீதம் அனுப்பிக் கொண்டிருந்தான். கடந்த மூன்று ஆண்டுகளாக விலைவாசி ஏற்றங்கள். குழந்தையின் படிப்புச் செலவு ஆகியவற்றை உத்தேசித்து மாதம் ஒன்றுக்கு நானூறு ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தான். மாமனார் சராசரியாக மாதம் ஒன்றுக்கு இரண்டு கடிதங்கள் அவனுக்கு எழுதிவிடுவார். ஒரு கடிதத்திலாவது அவனை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவர் யோசனை சொன்னதே இல்லை. தம் மகளின் இடத்தை மற்றொரு பெண் பறித்துக்கொள்வதில் அவருக்கு விருப்பம் எப்படி இருக்கும் என்றெண்ணி அவன் சிரித்துக்கொண்டான். சரளா செத்துப்போன போது அவளுக்குப் பத்தொன்பது வயது. அவனுக்கு இருபத்தைந்து. இன்று அவனுக்கு முப்பத்தைந்து வயது முடிகிறது. மறுமணம் செய்து கொள்ளவில்லையே ஒழிய, பெண்ணின் உறவுகளைத் திட்டமிட்ட இடைவெளிகளில் அதற்கென்று உள்ள ஆட்களின் வாயிலாக அவன் அடைந்துகொண்டுதான் இருந்தான்...
சார்! டிக்கெட் வாங்கி வந்தாகிவிட்டது.
என்று கூறிய குரல் அவனது சிந்தனையைக் கலைக்க, அவன் தலை உயர்த்திப் பார்த்தான். சென்னைக்குப் போக அவனுடைய நேர்முக உதவியாளர் வாங்கி வந்திருந்த ரெயில் பயணச் சீட்டுகளை ஆங்கிலத்தில் நன்றி சொல்லிப் பெற்றுக் கைப்பெட்டியில் பத்திரப்படுத்தினான். திடுதிப்பென்று போய் நின்றால் மாமனார், மாமியார் வீட்டில் அப்படியே வியப்பில் மூழ்கிப் போவார்கள் என்று நினைத்துப் புன்சிரிப்புக் கொண்டான். சுசீந்திரத்தின் தம்பி மாதவனும் சென்னையில்தான் தற்போது இருந்து வந்தான். பம்பாய்த் தலைமை அலுவலகத்திலிருந்து சென்னைக் கிளைக்கு அவனை மாற்றி இரண்டு ஆண்டுகள் ஆயின. மாமனாரின் வீட்டையடைந்த பிறகு அவனோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டான். அவனைப் பார்த்து மூன்று ஆண்டுகள் ஆய்விட்டன. அவனுக்கும் வியப்பாகத்தான் இருக்கும். குழந்தை சேகருக்குத் தன்னை ஞாபகம் கூட இருக்காது என்றெண்ணிச் சற்று வேதனைப்பட்டுக் கொண்டான். என்ன இருந்தாலும் ஒரு தகப்பனுக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது என்று நினைத்துக் குற்ற உணர்வில் மேலும் சற்று ஆழ்ந்தான்.
மூன்றாம் நாள் காலை டாக்சியிலிருந்து இறங்கிப் பணம் கொடுத்து ஓட்டுநரை அனுப்பிவைத்தபிறகு அவன் மாமனாரின் வீட்டுக் கதவைத் தட்டியதும், யாரு?
என்கிற கேள்வியுடன் எதிர்ப்பட்ட இளம் பெண்ணைப் பார்த்ததும் சுசீந்திரன் அதிர்ந்து போனான். அயர்ந்தும் போனான். காலஞ்சென்ற அவன் மனைவியின் அச்சாகத் தோன்றிய அந்தப் பெண் தன் மைத்துனியே என்பதைக் கண்டுகொள்ள அவனுக்கு ஒரு நிமிட நேரம் கூடச் செலவாகவில்லை. கதவைத் திறந்த பிறகு தயக்கமான புன்னகையுடன் உள்ளே செல்ல முற்பட்ட அவளைப் பார்த்து வாயகன்ற புன்சிரிப்பொன்றை வீசிய சுசீந்திரன் தன் கண்களாலேயே விழுங்கியே விடுவான் போல் அவளைப் பார்த்துக்கொண்டே, என்ன சுஜாதா? அப்படியே மலைச்சுப் போய் நிக்கறே? நான் யாருன்னு தெரியலையா?
என்றவாறு உள்ளே வந்தான். உரிமையுடன் அவளை இடித்தபடி அவன் கடந்து சென்றான். அவள் சரேலென்று விலகிக்கொண்டதையும் ஓரத்துப் பார்வையால் கவனித்துக் கொண்டான். அவளைத் தான் இடித்ததையே அறியாதவன் போல், என்னது? இன்னுமா என்னைத் தெரியலை?
என்று சிரித்தான்.
இதற்குள் அங்கு வந்துவிட்ட மாமனார் வேம்பு, அடடே. வாங்கோ, வாங்கோ. என்னடி அப்படிப் பார்க்கறே, மக்குப் பொண்ணே. உங்க அத்திம்பேர்டி
என்றார். வெட்கத்துடன் சிரித்துவிட்டு சுஜாதா உள்ளே விரைந்து மறைந்தாள். அவள் முதுகுப்புறத்தையே பார்த்தபடி மலைத்துப் போய்ச் சில நொடிகள் நின்ற அவள் சட்டென்று தன் நினைவு வரப்பெற்று, மாமனாரின் கையில் பழக்கூடையைக் கொடுத்தான்.
மாமியார் செண்பகமும் இதற்குள் அங்கே வந்துவிட்டாள். வாங்கோ, மாப்பிளை! இப்பதான் வரத்துக்கு வழி தெரிஞ்சுதா?
என்றாள். பெண்ணைப் பற்றிய ஞாபகக் கிளறலில் அவள் கண்களில் நீர் திரண்டு விளிம்பு கட்டி நின்று பின் உருண்டது.
வரமுடியல்லே. மாமி... நானும் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்...
என்று பதில் சொன்ன போதிலும் தன் பதிலில் தனக்கே நம்பிக்கை இல்லாத உணர்ச்சி குரலில் தெரிய அவன் குற்ற உணர்ச்சியுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்து காலணிகளைக் கழற்றினான்.
சேகர் எங்கே?
என்று சம்பிரதாயமாய் அவன் விடுத்த கேள்விக்கு. அவன் தூங்கிண்டிருக்கான்
என்று மாமியார் பதில் சொன்னார்.
தூங்கட்டும். எழுப்ப வேண்டாம்... நம்ம சுஜாதாவுக்குக்கூட என்னை அடையாளம் தெரியல்லே...
அதெப்படித் தெரியும்? நாலு வருஷத்துக்கு முந்தி நீங்க வந்திருந்தப்ப அவ பாட்டி வீட்டுக்கு திண்டுக்கல்லுக்குப் போயிருந்தா. ஆக, உங்களை அவ பார்த்துக் கிட்டதட்ட ஏழு வருஷம் ஆகப் போறதே?...
என்றார் மாமனார்.
பல் தேய்ச்சுட்டீங்களா? காபி கொண்டு வரலாமா?
என்று மாமியார் கேட்டதும், உங்க காபிக்குக் காத்துண்டிருக்கேனாக்கும்!
என்று அவன் பதில் சொன்னான்.
வாய் அவர்களோடு பேசிக்கொண்டிருந்ததே தவிர, மனமெல்லாம் சுஜாதாவையே சுற்றிக் கொண்டிருந்தது. அவளுக்கு இப்போது என்ன வயசு இருக்கும் என்று மனக் கணக்குப் போட்டதில் பதினெட்டு என்கிற விடை வந்தது. அவன் மனைவி இறந்த போது சுஜாதா எட்டு வயசுச் சிறுமி, சரளாவின் மறு அச்சுப் போல் தெரிந்த இவள் இன்னும் சொல்லப் போனால் அவளை விடவும் அதிகச் செழுமையாக இருந்தாள். தாலிகட்டிய மனைவிக்கு முழு விசுவாசத்துடன் வாழ்ந்தவனில்லையானாலும், இவளைப் பார்த்ததும் பழைய நினைவுகள் அமோகமாய்க் கிளறப் பெற்று சுஜாதாவின் மீது அடக்க மாட்டாத கவர்ச்சிக்கு அவன் ஆளானான். விடுப்பை இன்னும் அதிகப்படுத்திவிட்டு, அவளை மணந்துகொண்டு தூக்கிப் போய்விடப் பரபரப்புக்கொண்டான். தனக்கும் அவளுக்குமிடையே இருந்த வயது வேறுபாடு நினைவில் நெருடினாலும், தனக்கு இன்னும் தலை நரைக்கவில்லை என்பதும், தொந்தி விழவில்லை என்பதும் ஆதரவு அம்சங்களாய் அவனுக்குத் தோன்றியதும், கேட்டுப் பார்க்கும் துணிவு பிறந்தது. வந்த அன்றே அந்தப் பேச்சை எடுப்பது நன்றாக இராது என்கிற நினைப்பில் மறுநாளுக்கு அதை ஒத்திப் போட்டுக்கொண்டான். அன்றிரவு தன்னால் உறங்கவே முடியாது என்று அப்போதே அவனுக்குத் தோன்றிவிட்டது.
மாப்பிள்ளையின் உள்ளத்து எண்ண ஓட்டங்களையறியாத மாமியார், அடியே, சுஜாதா! அத்திம்பேருக்குக் காபி கொண்டு வந்து குடுடி.
என்று கழுத்தைத் திருப்பி இரைந்து குரல் கொடுத்துவிட்டு, அப்புறம்? சொல்லுங்கோ. நீங்கள் எப்படி இருக்கேள்? நாலு வருஷமா இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கணும்னு தோணலியா?
என்றாள்.
அதான் சொல்லிட்டாரோல்லியோ மாப்பிள்ளை? மறுபடியும் அதே கேள்வியை வேற தினுசாக் கேக்கறியே?
என்று வேம்பு தம் மனைவியைக் கடிந்து கொண்டார்.
சுசீந்திரன் கைக்குட்யைால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு காற்சட்டைப் பையிலிருந்து ஒரு சீப்பை அவசரமாய் எடுத்துத் தலையை அழுத்தி வாரிக்கொண்டு காபி கொண்டு வரப்போகும் மைத்துனியைக் கண்களால் பருகத் தயாரானான். மூன்றே நிமிடங்களில் சுஜாதா காபிக் கோப்பையுடன் வந்தாள். அதை வாங்க அவன் கை நீட்டியதைக் கவனிக்காமல், அருகே இருந்த முக்காலி ஒன்றை நகர்த்தி அதன் மீது கோப்பையை வைத்துவிட்டுப் புன்சிரிப்புடன் அங்கிருந்து நீங்கினாள். மாமனார் மாமியார் அறியாத வகையில் அவன் தலையைச் சரித்துக்கொண்டு அவளை ஓரத்து விழிகளால் பார்த்தான்.
"சேகருக்கு சுஜாதாதான் எல்லாம். நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் ஆயிடுத்துன்னா எப்படித்தான் அவளை விட்டுப் பிரிஞ்சிருக்கப் போறானோ தெரியல்லே. சேகரையும் கூட வெச்சுக்குறதுக்கு அனுமதிக்கற பையனாத் தேடிப் பிடிக்கணும் என்று மாமியார் கூறியதும், சுசீந்திரனுக்குப் பட, படவென்று மனசு அடித்துக்கொண்டது. சொல்லவிருப்பதை வெளியிட்டுவிடச் சரியான வாய்ப்பு அது என்று பட்டாலும், வந்ததும் வராததுமாய் வாய் திறக்க அவனால் முடியாது போயிற்று. மறுநாளே அந்தப் பேச்சை எடுப்பது கூட அநாகரிகந்தான் என்றாலும், ஒத்திப்போட அவன் விரும்பவில்லை. மவுனமாய்க் காபியைக் குடித்து முடித்தான்.
சற்றுப் பொறுத்து எழுந்த சேகருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவன் குளிக்கப் போனான். அவன் குளித்துவிட்டு வந்த போது சுஜாதா கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தாள். பஞ்சாபி உடுப்பில் இன்னும் மிகுதியான கவர்ச்சியோடு அவனை அவஸ்தைப்படுத்தினாள். அரையான புன்சிரிப்புடன் போயிட்டுவறேன்
என்றாள்.
எந்தக் காலேஜ்ல படிக்கிறே? என்ன படிக்கிறே?
ஸ்டெல்லா மாரிஸ், அத்திம்பேர்! பி.ஏ. கடைசி வருஷம்.
சரி, சாயங்காலம் பார்ப்போம்
என்று அவன் கூற அவள் படி இறங்கினாள், ‘அத்திம்பேர்’ என்ற உறவுச்சொல்லால் தன்னை அவள் விளித்ததை அவன் மனம் அங்கீகரிக்கவில்லை. ‘அந்த உறவை மாத்திடறேன். இரு’ என்று சொல்லிக்கொண்டான்.
சற்றுப் பொறுத்து சேகர் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிச் சென்றான். பத்து மணிக்கு மாமனாருடன் உட்கார்ந்து உணவு அருந்தியதற்குப் பிறகு அவன் தன் தம்பி மாதவனோடு தொடர்புகொள்ளப் பொதுத் தொலைபேசியைத் தேடி வெளியே போனான்.
***
"ஹலோ, யாரு? மாதவன்தானே?... நான் சுசீந்திரன் பேசறேன்..."
அட, எங்கேருந்து பேசறேண்ணா?
இங்க மெட்றாஸ்லயேதான். ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்லேருந்து பேசறேண்டா. எப்படி இருக்கே?
நன்னாருக்கேண்ணா. மெட்றாஸ் வரப்போறதா நீ எனக்கு எழுதவே இல்லியே? இங்க உன் மாமனார் வீட்டுலதானே தங்கி இருக்கே? என்னிக்குடா வந்தே?
இன்னிக்குக் காலையிலதாண்டா வந்தேன். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல வந்தேன். உங்க ஆபீசுக்கு வரட்டுமா? நீ அதே லாட்ஜ்லதானே தங்கி இருக்கே?
ஆமாண்ணா, கண்டிப்பா வறியா? இப்பவே வேணாலும் வாயேன். நான் லீவ் போட்டுடறேன். ரெண்டு பேரும் என்னோட லாட்ஜ்க்குப் போகலாம். அப்படியே உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...
அப்ப உடனே கௌம்பி அங்க வர்றேண்டா.
சரிண்ணா... நான் இப்பவே லீவ் எழுதிக் குடுத்துடறேன்.
மாதவன் தன்னிடம் பேசப் போகும் முக்கியமான விஷயம் யாதாயிருக்கும் என்று அவனால் ஊகிக்க இயலவில்லை. கிராமத்தில் அவர்களின் பெற்றோர்க்குச் சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதன் வாடகையை அவன்தான் வாங்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை பாதி வாடகை தனக்குச் சேரவேண்டுமென்றோ அல்லது அந்த வீட்டை விற்று அதில் வருகிற பணத்தை ஆளுக்குப் பாதியாய்ப் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்றோ சொல்லுவதற்குத்தான் கூப்பிடுகிறான் என்று சுசீந்திரன் ஊகித்தான்.
***
ஸ்கூட்டரில் ஏறி லாட்ஜின் அறையை அடையும் வரையில் மாதவன் அந்தப் பேச்சை எடுக்கவில்லை. இருவரும் பொதுவாகவே பேசிக்கொண்டார்கள்.
அறைக் கட்டிலில் அமர்ந்து, மின் விசிறியைச் சுழலவிட்டுக் காபிக்குச் சொல்லியனுப்பிய பிறகு, என்னடா பேசப்போற?
என்றான் சுசீந்திரன். அவன் பார்வை தம்பியை அளந்து கொண்டிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் இருந்தது போன்ற சாயலுடனும் உடற்கட்டுடனும் கிட்டத்தட்ட அவன் தெரிந்ததைக் கவனித்தான். அந்தச் சுருட்டைமுடி ஒன்றைத் தவிர மற்ற எல்லாச் சாயல்களிலும், அங்க அமைப்பிலும் தன்னைப் போலவே அவன் தென்பட்டதை ஒரு வகை வியப்புடன் சுசீந்திரன் பார்த்து ரசித்தான். தனது இளமைக்கால மறுபதிப்பாய் இருக்கிறானே இவன் என்கிற வியப்பினின்று விடுபடாமல் தம்பியை முறைத்துப் பார்த்தான்.
இந்த மூணு வருஷத்துல மடமடன்னு வளர்ந்துட்டேடா.
மாதவன் கூச்சத்துடன் சிரித்தான்.
சொல்லுடா, மாதவா. என்ன சொல்லப் போற? நம்ம கிராமத்து வீட்டை விக்கிறது பத்தித்தானே?
இல்லேண்ணா, இது வந்து என் கல்யாண விஷயமா...
அடேடே சொல்லு, சொல்லு. யாருடா பொண்ணு? உங்கூட வேலை பாக்கிற பொண்ணா?
இல்லேண்ணா... இரு வறேன். அவளோட போட்டோவைப் பார்த்துட்டு நீயே கண்டுபிடி...
என்று எழுந்த மாதவன் தன் பர்சிலிருந்து ஒரு சிறு புகைப்படத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தான். குறும்புத்தனமும், இளமைப் பளபளப்பும் கண்களில் தெரிய சுஜாதா அதில் புன்னகை செய்து கொண்டிருந்தாள். ஒரே நொடியில் சுசீந்திரன் உடைந்து போனான்.
சுஜாதாதானே?
என்றான். குரல் மந்தமாய் ஒலித்தது. செயற்கையாய் அவன் புரிந்த புன்னகையில் ஏராளமாக வழிந்த அசடு மாதவனுக்குத் தெரியவில்லை.
ஆமாண்ணா, நீ இன்னிக்குக் காலையில் பார்த்திருப்பியே அவளை? நானே உனக்கு லெட்டர் எழுதணும்னு இருந்தேன். நீயே வந்துட்டே. பரீட்சை முடிஞ்சதும் கல்யாணத்துக்கு அவங்க வீட்டுல ஏற்பாடு நடக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நீ ஒரு வார்த்தை உன் மாமனார்கிட்ட சொல்லி வச்சுடு இப்பவே.
அவளுக்கு இஷ்டந்தானே?
மாதவன் வெட்கிச் சிரித்தான். என்னண்ணா இப்படிக் கேக்கறே? இஷ்டமில்லாமலா போட்டோ குடுத்திருக்கா? பின்னால திரும்பிப் பாரு...
அவன் திரும்பி அதைப் பார்க்க, ‘வித் லவ்’ என்கிற சொற்களுடன் சுஜாதா என்கிற கையெழுத்தும் காணப்பட்டது.
என்னண்ணா பேசாம இருக்கே?
மாமனார்கிட்ட சொல்றேன்டா, கண்டிப்பா சொல்றேன்...
என்று அவன் சிரித்த சிரிப்பிலும் சுரத்தே இல்லை என்பதையும் மாதவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நிமிஷம்!
என்று கூறி பாத்ரூமுக்குள் மாதவன் புகுந்து கொண்டதும், சுசீந்திரனின் பார்வை தற்செயலாய் எதிரே இருந்த மர அலமாரியின் கண்ணாடியில் பதிந்தது. அவன் தன்னைத் தானே அதில் பார்த்துக் கொண்டபோது, தலை நரைக்காவிட்டாலும் முடியில் அடர்த்தி குன்றி இருந்ததும், முகவாயின் இரு புறங்களிலும் கோடுகள் விழுந்து வயதைப் பறை சாற்றிக் கொண்டிருந்ததும், கண்களுக்குக் கீழே ஆழமான பள்ளங்களும், விழிகளின் மலர்ச்சிக் குறைவும் பார்வையை உறுத்த அவன் கணப்பொழுதுக்கு மேல் தாங்கமாட்டாமல் கண்களை அப்புறப் படுத்திக்கொண்டான்.
தன் பத்தொன்பது வயது மனைவியைப் போன்ற இளமை படைத்த மைத்துனியை மணக்கும் தகுதி தான் இருபத்தைந்து வயதில் இருந்தது போன்ற இளமையுடன் இப்போது இருக்கும் மாதவனுக்கே உள்ளது என்பது தெளிவாக, வலுக்கட்டாயமாக முகத்தில் தோற்றுவித்துக் கொண்ட புன்சிரிப்புடன் வருங்கால நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள அவன் தயாரானான்.
1987
2. சாவி
செல்லம் ஓரத்துப் பார்வையால் பங்கஜத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எவ்வளவு அழகாக இருக்கிறாள் இந்தப் பெண்!’ என்கிற வியப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முடியாமல் அவர் வக்கிரமான முறையில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களை உயர்த்தி அவள் தம்மைக் கவனித்துவிட்டால்... சட்டென அவர் தமது கோப்புக்குப் பார்வையை மாற்றினார். ஆனால் கணத்துக்கு மேல் அதில் கருத்து நிலைக்காத அலைபாய்தலுடன் திரும்பவும் அவளைத் திருட்டுப் பார்வை பார்க்கலானார்.
பங்கஜம் மடமடவென்று அவரது வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வாய்மொழிக் குறிப்புகளை நோட்டுப் புத்தகத்தில் கருமமே கண்ணாக எழுதிக்கொண்டிருந்தாள்.
சுருக்கெழுத்தாட்டிகள் பற்றியும் தட்டெழுத்தாட்டிகள் பற்றியும் இப்போதெல்லாம் பத்திரிகைகளில் அடிபடும் ஆபாச நகைக்கவைத் துணுக்குகளைச் செல்லம் நினைத்துப் பார்த்து, இந்த நாட்டைப் பொறுத்தவரையில் அவற்றில் உண்மை இருந்ததோ, இல்லையோ, அவற்றின் அடிப்படை உண்மையைப் புறக்கணித்து விடுவதற்கில்லை. மேனாடுகளில் பெண் ஊழியர்கள் ஒரு வேளை ஆண்களின் வக்கிரங்களுக்குத் தீனி போடுகிறவர்களாக இருக்கக்கூடும். இங்கே அது எங்கோ அத்தி பூத்தாற்ப்போல் மட்டுமே இருக்கக்கூடும் என்றும் எண்ணினார்.
ஒரு சுருக்கெழுத்தாட்டி தன் அலுவலரின் மடியில் உட்கார்ந்து வாய்மொழிக் குறிப்புகளை எடுப்பது போன்ற அடிப்படிடையில் வெளிவந்திருந்த துணுக்கு ஒன்று ஞாபகத்துக்கு வர, செல்லத்துக்குச் சிரிப்பு வரும்போலாயிற்று. அடுத்து, அவர் தம் மடியில் பங்கஜம் உட்கார்ந்து கொண்டிருப்பது போல் எழுந்த கற்பனையில் சிரித்தே விடுவார் போல் ஆன நிலையில் உதடுகளை உள்ளுக்கு மடித்துச் சிரிப்பின் அடையாளம் ஏதும் முகத்தில் தெரியாதபடி கவனமானார்.
‘இன்றைக்கு என்ன ஆயிற்று எனக்கு?’ என்று தம்மைத்தாமே கடிந்துகொண்ட செல்லம். அறைக்கதவு ‘டொக் டொக்’கென்று விரலால் தட்டப்பட்ட ஓசையால் தன்னிலைக்குத் திரும்பிவந்து, எஸ்... கமின் ப்ளீஸ்!
என்று குரல் கொடுத்தார்.
தலைமை எழுத்தர் கனகலிங்கம் உள்ளே வந்தார். நடையில் ஓர் அவசரம் தெரிந்தது. முகத்தில் கோடுகளும் தென்பட்டன.
என்ன மிஸ்டர் கனகலிங்கம்?
ஸார்! மிஸ் பங்கஜத்துக்கு ஒரு அர்ஜன்ட் போன்கால் வந்திருக்கு. ஆபரேட்டர் தப்பிதமா என் டேபிளுக்குக் கனெக்ஷன் குடுத்துட்டு லைனை விட்டுப் போயிட்டாங்க. ஆனா ரொம்ப அவசரமான கால், அதான் நேர்ல வந்தேன்...
பங்கஜம் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றுவிட்டதைச் செல்லம் கவனித்தார். தமது தலையசைப்புக்குக் காத்திராமல் தானாகவே சட்டென்று அவள் எழுந்துகொண்டதில் தெரிந்த அவளது கவலையை உணர்ந்த அவர், போய்ப் பேசிட்டு வாங்க,
என்றார்.
பங்கஜம் அவசரமாய் வெளியே போனாள்.
அவள் போனபிறகு தயங்கி நின்ற கனகலிங்கம், அவங்க அப்பாவுக்கு திடீர்னு என்னமோ சீரியஸா இருக்காம். பொறுக்க முடியாத மார்வலின்னு நர்சிங் ஹோம்ல சேர்த்திருக்காங்களாம். பங்கஜத்தோட சிஸ்டர்தான் பேசினாங்க...
என்று தெரிவித்ததும் செல்லத்துக்குக் கவலையாக இருந்தது. பிறகு அவர் அந்த அறையை விட்டு நீங்கினார்...
சற்றுப் பொறுத்துக் திரும்பிய பங்கஜத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கி இருந்தன.
என்ன பங்கஜம்?
சார்! எங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம். நெஞ்சு வலின்னு துடிச்சுட்டாராம். வைத்தியா நர்சிங் ஹோம்ல சேர்த்திருக்காங்களாம். என்னை உடனே கிளம்பி வரச்சொன்னாங்க... லீவ் வேணும் சார்.
எடுத்துக்குங்க, பங்கஜம். அப்புறம் உங்கப்பாவுக்கு எப்படி இருக்குங்கிறதுக்கு எனக்கு... போன் பண்ணுங்க. அவருக்கு என்ன வயசிருக்கும்?
நாற்பத்தெட்டுதான் சார் ஆறது!
பங்கஜத்தின் குரல் தடுமாறியது.
வெறும் ‘கேஸா’க் கூட இருக்கலாம், பங்கஜம். நெஞ்சுவலின்னா ஹார்ட் அட்டாக்தான்னு பயப்பட வேண்டியதில்லை. நீங்க கௌம்புங்க.
இப்ப நீங்க குடுத்த டிக்டேஷன்ஸ்...
அதையெல்லாம் பத்திக் கவலையேபடாதீங்கோ. நான் வேற யார்கிட்டயாவது மறுபடியும் சொல்லிக்கிறேன். லீவ் லெட்டர் கூட மெதுவா அனுப்புங்கோ... ஒண்ணும் கவலைப்படாமல் போயிட்டு வாங்க.
பங்கஜம் கண்ணீரூடே தன் அலுவலரை நன்றி பொங்கப் பார்த்துவிட்டுப் புறப்பட்டாள்...
பங்கஜத்தின் அப்பா தவறிப்போன செய்தி மறுநாள் வந்தது.
செல்லம் நேரில் சென்று பங்கஜத்துக்கும் அவள் அம்மாவுக்கும் ஆறுதல் கூறிவிட்டு வந்தார். "என்ன செய்யலாம்மா? இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு? என் குழந்தைகளுக்கு அம்மா இல்லே. உங்க குழந்தைகளுக்கு அப்பா இல்லே என்று பங்கஜத்தின் அம்மாவிடம் தாம் சொன்ன சொற்கள் தம் காதுகளிலேயே சுற்றிச் சுற்றிவர அவர் வீட்டுக்குப் போய்த் தீட்டுக்கழிக்கக்