Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithayam Palavitham
Ithayam Palavitham
Ithayam Palavitham
Ebook454 pages5 hours

Ithayam Palavitham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101500316
Ithayam Palavitham

Read more from Jyothirllata Girija

Related to Ithayam Palavitham

Related ebooks

Reviews for Ithayam Palavitham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithayam Palavitham - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    இதயம் பலவிதம்

    Idhayam Palavitham

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    எட்டரை மணிப் பரபரப்பில் அந்த வீடு அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றுச் சுவருக்குள் எட்டுக் குடித்தனங்கள் இருப்பதாலும், அந்த எட்டு வீடுகளிலுமே அந்த எட்டரை மணிப் பரபரப்புக் குடிகொண்டிருப்பதாலும் அங்கே மிகுந்த இரைச்சலாகவும் ஏதோ ரகளை நடப்பது போன்றதாறுமாறான சந்தடியாகவும் இருக்கிறது. அந்த எட்டு வீடுகளுக்கும் கதவு இலக்கம் ஒன்றேதான். அதாவது இருபத்தேழு. இருபத்தேழு என்கிற இலக்கம் சுற்றுச் சுவரின் கதவின்மீது ஓர் அட்டையில் கரிக்கட்டியால் எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கிறது, எனினும் சுற்றுச் சுவருக்குள் இருக்கும் எட்டு வீடுகளுக்கும் 27ஃ1, 27ஃ2, 27ஃ3… என்று 27ஃ8 வரையிலும் தனித்தனியாக இலக்கங்கள் அந்தந்தப் பகுதி வீட்டின் கதவின்மீது சாக்கட்டியால் எழுதப்பட்டிருக்கிறது.

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையில் இந்த 27ஃ1, 27ஃ2, 27ஃ3…என்கிற ஏற்பாடு இல்லைதான். ஆனால்தபால்காரர் சில நேரங்களில் ஒருவர் வீட்டுக் கடிதங்களை இன்னொரு வீட்டில் கொடுத்துச் செல்லும்படியாகிவிடுகிறது என்பதால் இந்தப் புதிய ஏற்பாட்டைக் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் முன் பகுதியில் இருக்கும் வெங்கோஜி ராவ் செய்து வைத்தார். காரணம், தவறிப்போய் ஒருவர் கடிதம் இன்னொருவருக்குப் போய்விடுகிறது என்பது ஒன்று மட்டுமே அன்று. அப்படிப் போய்விடுகிற கடிதங்களை உடனுக்குடனாக உரியவரிடம் அதைப் பெறுபவர் சேர்ப்பித்து விடமுடியும். ஆனால் அப்படிச் செய்ய மனம் வராமல் சிலர் - இவர்களில் ஆண் , பெண் இருபாலருமே அடக்கம் - பிறருக்கு வரும் அந்தக் கடிதங்களைப் பிரித்துப் படித்துவிட்டுத் தபால்காரனின் மீது பழியைப் போட்டும், கவனிக்காமல் தவறிப் போய்ப்பிரித்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டு அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்ப்பித்ததால், பாதிக்கப்பட்டவர்கள் வெங்கோஜிராவின் இந்த ஏற்பாட்டினை முழுமனத்துடன் வரவேற்றார்கள். இதனால், பிறர் கடிதங்களைப் பிரித்துப் படிக்க முடியாமற்போன துர்ப்பாக்கியம் நேர்ந்ததில், அதில் தனிச்சுவை காணும் சிலருக்கு உள்ளூறச் சிறிது ஏமாற்றமே.

    ஐந்தாம் இலக்கமிட்ட அந்த வீடு தனிப்பட்ட பரபரப்புக் கொண்டிருந்ததற்கு காரணம் அன்றாடம் நிகழும் எட்டரை மணிப்பரபரப்பு மட்டுமே அன்று. அந்த வீட்டில் வாழ்ந்து வரும் நபர்களின் எண்ணிக்கையில் இன்று ஒன்றுகூடி இருக்கிறது. அந்தப் புதிய உயிர் அழுத அழுகைச் சத்தம், அதைச் சமாதானப்படுத்தும் மற்ற குரல்கள் ஆகியன வேறு வழக்கமான கூச்சல்களுடன் சேர்ந்து கொண்டிருப்பதாலேயே அங்கே ரணகளமாக இரைச்சல் கேட்கிறது.

    அந்த ரகளையின் உச்சமாக, பேன் சீப்பு எங்கேடி காணோம்? என்ற ஞானத்தின் குரல் மேலோங்கி ஒலிக்கிறது. அந்தக் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அந்த வீட்டில் எத்தனையோ சீப்புகள் இருந்தும் குறிப்பிட்ட ஒரு சீப்புக்குத்தான் தலைப்பேன்கள் நழுவிவரும் என்பதால் அதற்கு பேன் சீப்பு என்று பெயர்.

    ஞானம் மறுபடியும் கத்துகிறாள். அவளது இரண்டாவது கூக்குரலுக்கும் பதில் வராததால், அவள் , இந்தாத்துலெ எந்த ஒரு சாமானும் வெச்ச எடத்திலே இருக்காதே? எது வேணும்னாலும் அதைத் தேடறதிலேயே பொழுதெல்லாம் வீணாயிடறது என்று பொதுவாக எல்லாரையும் திட்டியபடி அதைத் தேடுவதற்கு முற்பட்டாள். அவள் கைகள் இரண்டுமே தலையை வறட்டு வறட்டென்று மிக விரைவாகச் சொறிந்து கொண்டிருந்தன.

    அப்போது எதிர்ப்பட்ட ஜகந்நாதன் - அவளுக்குத் தம்பி ஏங்க்கா தலையைப் போட்டுக் குரங்கு மாதிரிப் பிச்சுக்கறே? என்று ராகம் போட்டு இழுத்துப் பேசி ஒரு விவித்பாரதி விளம்பரத்தைக் கடகடவென்று கேலியாகஒப்பித்தான். அவள் அடிக்கக் கையை ஓங்கியதும் அவன் அவசரமாக ஓடிப்போனான்.

    என்னடா இது அர்த்தமில்லாம ஒரு கேள்வி கேக்கறே அவளை? குரங்கு மாதிரி இருக்கிறதாலே குரங்கு மாதிரிப் பிச்சுக்கறா என்று அங்கே வந்த ஞானத்தின் அடுத்த தங்கை ரதி சொன்னாள்.

    ஞானத்தின் கண்கள் சட்டென்று கலங்கின. நீ ரொம்ப அழகாய் இருக்கறதாலே எல்லாரையும் கேலி பண்ணணும்னுட்டு ஒண்ணும் இல்லே. இந்த அழகு ஒண்ணும் சாசுவதமில்லேடி… என்றாள்.

    ரதி செருக்காக முகவாயைச் சாய்த்துவிட்டு நகர்ந்தாள். அவள் நடந்து சென்ற அழகைப் பார்த்த மனசுக்குள் பொருமியபடி ஞானம் நின்றாள். ‘இவதான் எம்புட்டு அழகாய் இருக்கா. நடைகூட அழகாய் இருக்கு. தானாக வாய்ச்ச நடையா, இல்லேன்னா அழகாய் இருக்கணும்கிறதுக்காக வேணும்னுட்டே அப்படி ஆட்டி ஆட்டி நடக்கிறாளா?’

    ஞானம் அந்தச் சிறிய அறையில் இறைந்து கிடந்த பள்ளிப்புத்தகங்கள், அழுக்குத்துணிகள், காகிதக்குப்பைகள் ஆகியவற்றிடையே சீப்பைத் தேடியவாறு யோசித்தாள். மறுபடியும் பேன் சீப்பைக் கண்டுபிடிக்க முடியாத அலுப்பில் தேடறதுலேயே பொழுதெல்லாம் வீணாறது என்று கத்தினாள்.

    என்னத்தைத் தேடிண்டிருக்கே? என்றபடி அப்போது தலையைத் துவட்டிக்கொண்டே அங்கே வந்த உஷா, தங்கையின் கண்கள் சிவந்திருந்ததைக் கவனித்து வியப்படைந்தாள்.

    பேன் சீப்பைக் காணோம்.

    சரியாப் பாரு. எல்லாம் அங்கேதான் இருக்கும். பெரிய பங்களாவோல்லியோ? தேடறது ரொம்பக் கஷ்டந்தான் என்று இடக்காகச் சொன்ன உஷா, "அது சரி, ஏண்டி உன் கண்ணு செவந்திருக்கு?’ என்று கேட்டாள்.

    ரதி என்னைக் கொரங்குன்னு சொல்லிட்டுப்போறாடி அக்கா என்ற ஞானத்தின் கண்கள் சட்டென்று நிறைந்தன. உஷா ஒன்றும் சொல்லாமல் சில விநாடிகள்வரை நின்றாள். கனிவு மிக்க அவள் பார்வை தங்கையின்மீது ஆதரவாய்ப் படிந்தது.

    அவ கிடக்காஇகர்வம் பிடிச்ச கழுதை. அதுக்கா அழுதே? அசடு என்றவாறு உஷா, அடுக்களையிலிருந்து அவளைப் பெயர் சொல்லி அழைத்த அம்மாவுக்கு, இதோ வந்துட்டேம்மா என்று பதில் குரல் கொடுத்தவாறு, அப்பால் நகர்ந்தாள்.

    பேன் சீப்பைத் தேடி அலுத்துப்போன ஞானம், பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் கடைசியில் வெறும் சீப்பாலேயே தலையை வாரிப் பின்னிக்கொள்ளத் தலைப்பட்டாள்.

    அப்போது தலைப் பின்னலுக்கு நாடா வைத்துக் கட்டிக்கொண்டே அங்கே வந்த கலா, சாப்பிட்டாச்சாடி? என்று ஞானத்தை விசாரித்தாள்.

    இன்னும் இல்லே.

    மணி என்ன, தெரியுமோல்லியோ? எட்டேமுக்கால். நீட்டி நெளிக்காதே, அப்புறம் தின்னதும் திங்காததுமாஇஇங்கொருகாலும் அங்கொரு காலுமா ஓடாதே அக்கம் பக்கம் கூடப் பார்க்காம.

    ஞானம் சீப்பிலிருந்து தலைமுடியை எடுத்துச் சுருட்டிச் சன்னலின் வழியே வீசி வெளியே போட்டவாறு அக்காவைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். கைப்பையை எடுத்துக்கொண்டே, எல்லாம் எனக்குத் தெரியும்… நேத்து ஒரு சைக்கிள்காரன் உன்னை இடித்துத் தள்ளிட்டானாமே? என்றாள் கலா.

    உனக்கெப்படித் தெரியும்?

    எதிராளாத்துச் சங்கரன் உன் பின்னாலேதானே வந்துண்டிருந்தானாம்? அவன் பார்த்தானாம். சொன்னான். ரோடுலேபார்த்துப் போடி என்ற கலா, நான் போயிட்டுவறேன் என்று ஒரு தருமக் கூப்பாடு போட்டுவிட்டு அவசரம் அவசரமாகப் படியிறங்கினாள்.

    நீயும் கொஞ்சம் நிதானமாகவே போ. என்னைச் சொல்லிவிட்டு நீ ஓட்டமும் நடையுமான்னா போறே? என்று ஞானம் சிரித்ததைக் கலா காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

    ஞானம் சீப்பை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு அடுக்களைக்குப் போனாள். அந்தச் சின்ன அடுக்களையின் ஓர் ஓரத்தில் மன்னி, ரமா - புதிதாய் வந்து சேர்ந்துள்ள நபருக்குத் தாய் - குழந்தையை வாயில் அந்த ஏதேதோ சொற்களால் எல்லாம் சமாதானப்படுத்தி அதன் அழுகையை நிறுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள். குழந்தை எதற்கும் மசியாமல் கத்திக்கொண்டிருந்தது.

    சாதம் போடறியாம்மா? என்றபடி தட்டுடன் உட்கார்ந்த ஞானத்தைத் திரும்பிப் பார்த்த காந்தா எல்லோரும் ஒருமிக்க உக்காந்தா, ஆச்சுன்னு ஒரு வேலை முழுசா ஆகுமோல்லியோ? ஒருத்தி எட்டுக்கே வந்து உக்காந்துடறா, வெந்ததையும் வேகாததையும் கலக்கிச் சாப்பிடறதுக்கு. அடுத்தவ எட்டரை. அதற்கு அடுத்தவ எட்டே முக்கால். இப்ப மணி என்னடி? என்று கேட்டவாறு காந்தா தட்டில் பரிமாறினாள்.

    எட்டு அம்பது…

    ஒரு நாளைப் போல இது மாதிரி என்னை இம்சைப்படுத்தறேளேடியம்மா? எல்லோரும் ஒரு சேர உக்காந்து சாப்பிட்டுட்டுப் போனா எனக்கு எவ்வளவு சுலபமாய் இருக்கும்?

    சரி. சரி. போடும்மா நாழியாச்சு.

    அள்ளி அள்ளிப் போட்டுக்கொண்டு ஞானம் ஐந்தே நிமிடங்களில் சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு எழுந்துவிட்டாள்.

    பேய்ட்ரேன் என்று ஞானம் குரல் கொடுத்துக் கொண்டு படி இறங்கியது சிறிது நேரத்துக்கெல்லாம் அடுக்களை வரையில் கேட்டது. அவளை அடுத்துத் தானும், "வாறேம்மா’ என்று கத்திவிட்டு இறங்கிய உஷாவுக்குச் சிரிப்பு தாங்கவில்லை.

    ஏய் , நில்லுடி, ஓடாதே. நானும் வந்துட்டேன். அது சரி. அதென்ன ‘பேய்ட்ரேன்’கறே? ‘போயிட்டு வறேன்’ன்னு சொல்லேன். ஒவ்வொரு தரமும் ‘பேய்ட்ரேனட, பேய்ட்ரேன்’னு சொல்றச்சேயெல்லாம் ஏதோ ஒரு பேய் ட்ரெய்ன்ல உக்காந்திருக்கிற காட்சி எங்கண்ணு முன்னாலெ வருது… என்ற உஷாவைப் பார்த்துச் சிரித்தபடி, ஞானம் எனக்கு அப்படித்தான் சொல்ல வரும்… என்றாள்.

    அப்படித்தான் வரும்னு உண்டா என்ன? திருத்திக்கிறது!

    ஞானம் பதில் சொல்லவில்லை.

    ‘இந்த உஷாவுக்கு வேற வேலை கிடையாது. எப்பப்பார்த்தாலும் யாரையாவது திருத்திண்டே இருக்கணும். அவ சுபாவத்துக்கு ஏத்த மாதிரிதான் வேலையும் கிடைச்சிருக்கு. டீச்சர் வேலை. பசங்களைத் திருத்தறது. அவா பேப்பரைத் திருத்தறது. இப்படி…’ என்று ஞானம் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

    இருவரும் பேசாமல் நடந்தனர். பேருந்து நிறுத்தம் வந்ததும், நின்றனர். எதிரில் இருந்த வீட்டிலிருந்து ‘மன்னவன் வந்தானடி’ என்கிற சினிமாப்பாட்டுக் காற்றில் மிதந்து வந்தது. அதனுடன் சேர்ந்து ஞானமும் பொய்க் குரலில் முனகினாள். பக்கத்தில் இருந்த ஆண் பெண்கள் சிலர் திருமபி அவளைப் பார்த்துவிட்டு ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டனர். அதைக் கவனிக்கு முன்பாகவே உஷா, அவளைக் கையில் நறுக்கென்று கிள்ளியபடி, என்னடி இது, ரோட்லெயெல்லாம் பாடிண்டுஇஅடக்க ஒடுக்கம் இல்லாமெ? என்று தங்கையைக் கண்டித்தாள்.

    ஞானம் சற்றே அசடு வழிந்தவளாய் வாயை மூடிக்கொண்டாள். ‘இவளுடைய அடக்க ஒடுக்கத்துக்கு என்ன குறைச்சல்?பாடற வாய் அப்படித்தானே முனகும்? நான் கூடச் சில சிமயங்கள்ளே ஹம் பண்ணிடறேன் - அக்கம் பக்கத்தை மறந்து போய்’ என்று உஷா நினைத்துக் கொண்டாள்.

    சற்றுப் பொறுத்து, அக்கா! நம்மாத்திலே ஒரு ரேடியோ வாங்கலாங்க்கா என்று சொன்ன ஞானத்தை உஷா திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் தெரிந்த கெஞ்சுதல் இவளை இளக்கியது.

    உஷா புன்சிரிப்புடன் வாங்கலாம் என்றாள்.

    எப்போ, அக்கா?

    கையிலே கொஞ்சம் பணம் சேரட்டும்…

    கைக்குழந்தை வேற ஆத்துக்கு வந்துடுத்து இனிமே எங்கே பணம் சேரப் போறது?

    பார்க்கலாம்.

    இந்த டிசம்பருக்கு முன்னாடி வாங்கலாங்க்கா.

    டிசம்பர் என்ன கணக்கு?

    டிசம்பர்லெதானே நிறையக் கச்சேரிகள்ளாம் வரும்?

    பார்க்கலாம்…

    போக்கா. போன வருஷம்கூட இதே மாதிரிதான் பார்க்கலாம், பார்க்கலாம்னே.

    சொன்னேந்தான். ஆனா என்னடி பண்றது, ஞானம்? எனக்கு மட்டும் பாட்டு கேக்கணும்னு இல்லியா? எப்படியோ மிச்சம் பிடிச்சு அம்மாவுக்குத் தெரியாமே அதுக்காகத்தான் முந்நூறு ரூவா வரைக்கும் சேர்த்து வெச்சிருந்தேன். கடைசியிலே அம்மா படுக்கையிலேவிழுந்தப்ப எல்லாமே செலவாயிடுத்து. ஏதாவது ஒரு தடங்கல் வந்துடறதே நமக்குன்னு? என்னத்தைப் பண்ணித் தொலைக்கிறது?

    …அக்கா, அதோ என்னோட பஸ் வந்துடுத்து, நான் வறேன் என்ற ஞானம் சில வினாடிகளில் வந்து நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டாள். ஞானத்தின் பின்புறத்தைப் பார்த்தவாறு நின்ற உஷாஇஅவள் பாவாடையின் கரை ஆங்காங்கு கிழிந்து நார் நாராய்த் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

    ‘பாவம், ஞானம், வாயைத் திறந்து எனக்கு இன்னொரு பாவாடை வேணும், எல்லாம் கிழிய ஆரம்பிச்சுடுத்துன்னு கேக்கலே. கேக்க மாட்டா. நாமாப் பார்த்து வாங்கிக் குடுத்தாத்தான் உண்டு. ஆனா, பாட்டுகேக்கற ஆசையாலே ரேடியோ வேணும், ரேடியோ வேணும்னுரெண்டு மூணு வருஷமாய் என்னை அரிச்சிண்டே இருக்கா… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளே எப்படியாவது - ஒரு டிரான்சிஸ்டராவது - இவளுக்கு வாங்கிக் குடுத்துடணும்… அதுக்கு முன்னால இன்னிக்கு ஒரு பாவாடைக்கு வேண்டிய துணி வாங்கிக் குடுக்கணும்…’

    அதற்குப் பின்னாலேயே வந்த பேருந்தில் உஷா ஏறிக் கொண்டாள். அக்காவின் வண்டி தங்கையினுடையதை முந்திக் கொண்டு கடந்தபோது, சாளரத்தோரமாகத் தலையை வளைத்து நீட்டி ஞானம் இவளுக்குக்கைகாட்டினாள். உஷா கையை ஆட்டாமல் புன்னகை மட்டும் செய்தாள். ஞானத்துக்குப் பின்னால் அவள் மீது வேண்டுமென்றே - அவளுக்கு அப்படித்தான் பட்டது - உரசிக் கொண்டு ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்ததை இவள் கவனித்து நரநரவென்று பல்லைக் கடித்தாள். ‘சனீஸ்வரப் பீடைகள், பொம்பளைகள் மேலே இடிக்கிறதுக்குன்னே வருதுகள்… இதுகள் அக்கா தங்கைகளோட பொறக்கல்லையா?. . . ’

    ‘அவன் இடிக்கிறது இவளுக்குத் தெரியல்லையா என்ன? இல்லே, அந்த அளவுக்கு இன்னும் உடம்புலே சூடு சொரணை வரல்லியா? இது பாட்டுக்கு துவஜஸ்தம்பம் மாதிரி நின்னுண்டிருக்கே?’ என்றும் தங்கைமீது மனத்தாங்கல் கொண்டாள்.

    ‘சாயந்தரம் ஆத்துக்கு வந்ததும்இவளைக் கேக்கணும். இந்த வயசிலே அடக்க ஒடுக்கம் வரல்லேன்னா, அப்புறம் என்னிக்கும் வராது. ஆச்சே, இவளுக்குப் பதினாறு வயசு ஆயிடுத்தே… நாள் என்னமா ஓடறது! அப்பா செத்துப் போய் ரெண்டு வருஷம்ஆயிடுத்தே… நேத்துத்தான் நடந்தது மாதிரி இருக்கு…’

    என்னம்மா இது? எங்கையோ பராக்குப் பார்த்துக்கிட்டு? கண்டக்டர் கத்தறேனே எங்கே போவணும். எங்கே போவணும்னு? காதில் விழல்லியா? -உஷா திடுக்கிட்டுக் கையில் தயாராக வைத்திருந்த காசை இடத்தின் பெயரைச் சொல்லியவாறு நீட்டினாள். அவள் முகம் சிவந்து விட்டது. நடத்துநர் முணுமுணுத்தபடி பயணச்சீட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டு நகரலானார்.

    அப்போது அவளுக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவர் அவள் மீது உரசியவாறு முன்னால் சென்றார். அந்த உரசல் தற்செயலாகவோ அல்லது தவிர்க்க முடியாத ஒன்றாகவோ இல்லை என்று அவளுக்குத் தெற்றெனத் தெரிந்தது. வண்டியில் கூட்டம் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவளை உரசிக்கொண்டு முன்னால் வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இடிக்காமல் போகும் கண்ணியம் இருந்திருந்தால், சிறிது ஒதுங்கினாற்போல் சென்றிருக்க முடியும். அல்லது, தற்செயலாக நேர்ந்த ஒன்றாக இருப்பின் உஷாவுக்கு எரிச்சல் வராது. அது பெண்களின் அசைக்க முடியாத உள்ளுணர்வு - ஆணின் உரசல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா, நெரிசலாலோ, அல்லது தற்செயலாக ஒரு விபத்து மாதிரியோ நேர்ந்ததா என்பதைச் சரியாக ஊகித்து உணர்வது - உஷா இப்படி எண்ணியபடி முன்னேகி விட்ட அந்த ஆண்பிள்ளையை முறைத்தாள்.

    அவன் திரும்பி அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபோது, அவள் உடம்பு எரிந்தது.

    அவள் எரித்து விடுவாள் போன்று அவனை முறைத்துக் கொண்டே நின்றாள். அவனும் பார்த்துக்கொண்டே இருந்தான். முகத்தில் பரவியிருந்த நமுட்டுச் சிரிப்பு மறையவில்லை என்பதோடு அவன் செய்த மற்றொரு செயல் அவளைத் தூக்கி வாரிப்போட்டு விட்டது. அவன் ஒரு கண்ணை சற்றே இடுக்கி இவளைப் பார்த்துக் கண்ணடித்தான். அவள் உடம்பு அப்படியே ஒடுங்கிப் போயிற்று, அவள் தன்னையும் அறியாமல் தனது முறைப்பை நிறுத்திவிட்டு வெளியே வேடிக்கை பார்ப்பவள் போல் நின்றாள்.

    ‘வெட்கங் கெட்ட இந்த ஜென்மங்களை முறைக்கலாமோ? நமக்குத்தான் அசிங்கம். பஸ்ஸில் இத்தனைப் பேர் இருக்கிறார்களே, யாராவது கவனித்திருப்பார்களா? அவன் நாசமாய்ப் போக, நாற்பத்தைந்து வயசு இருக்கும் போலிருக்கிறது. இளைஞர்கள் கூடியவரையில் கண்ணியமாகத்தான் இருக்கிறார்கள். இந்த வயசானதுகள்தான் இப்படி…!’

    அவன் வேண்டுமென்றேதான் தன்மீது ஒட்டி உராய்ந்தபடி சென்றான் என்பதாகத் தான் கணித்த கணிப்பு மிகவும் சரிதான் என்பது இப்போது அவளுக்குக் கண்கூடாய்ப் புரிந்தது. ‘இடிக்கிறதுதான் இடிக்கிறதுகளே. அடக்கம் ஒடுக்கம் இல்லாமல் கன்னாபின்னா வென்று டிரெஸ் பண்ணிக்கொண்டு வரும் பெண்கள் மேல் இடிக்கக் கூடாதோ? என் மாதிரி ஒழுங்காக உடையணிபவர்கள் மேலா இடிக்க வேண்டும் இதுகள்?’ என்று எண்ணி அவள் வெகுண்டாள்.

    அவளுக்குப் பின்னால்தான் அவனும் இறங்கினான். அவளுக்குச் சிறிது வியர்த்தது. கால்களை வீசி நடந்தாள். சிறிது தொலைவு வரையில் அவளுக்குப் பின்னாலேயே வந்த அவன் - அது தற்செயலாகக் கூட இருக்கக்கூடும்தான் - பின்னர் சந்து ஒன்றினுள் நுழைந்ததும் அவள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.

    தலைமை ஆசிரியையின் அறைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்தும் நேரமும் போட்டுவிட்டு அவள் தன் வகுப்பறைக்குப் போனாள். மணி ஒன்பது இருபத்தைந்து. மேசை இழுப்பறைக்குள் தன் கைப்பையை வைத்துவிட்டு அவள் பள்ளியின் நடுக்கூடத்தையடைந்தாள். அந்தக் கூடத்தில் ஏற்கெனவே சில ஆசிரியைகளும் பல மாணவிகளும் கூடியிருந்தார்கள். சரியாக ஒன்பதரை மணிக்குத் தலைமையாசிரியை வந்ததும் ‘கடவுள் வணக்கம்’ தொடங்கிற்று. பெண்கள் மொத்தமாகப் பாடினார்கள். வழக்கமான பாடல் வழக்கமான அபசுரங்கள். பல சுருதிகள். அவளும் பாட்டை முனகினாள்.

    ஞானத்தின் பள்ளியில்நடக்கும் பாட்டுப் போட்டிகளில் எல்லாம் ஞானமே முதல் பரிசைத் தட்டிக்கொண்டு வந்தாள் என்பது அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது. ‘அடுத்த வருஷம் எப்படியாவது ஒரு ரேடியோ வாங்கிடணும்!’

    சிற்றுண்டிப் பொட்டலத்தை அடுக்களையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டது அவளுக்குப் பதினொரு மணிக்கு ஞாபகம் வந்தது. அவளுக்குப் பிடித்த சிற்றுண்டி அடை. பக்கத்தில் ஓட்டல் எதற்காவது போக வேண்டும். குறைந்தது ஒரு ரூபாய் இல்லாமல் வயிற்றை நிரப்ப முடியாது. மாதக் கடைசியில் ஒரு ரூபாய் என்பது பெரிய தொகை… அவளுக்கு மிகவும் சோர்வாகவும் ஏமாற்றமாகவும் ஏன் வருத்தமாகவும் கூடத்தான் இருந்தது.

    சுமார் பன்னிரண்டு மணிக்குப் பள்ளியின் ஆயா அவள் வகுப்பறைக்கு வந்து அவளைத் தேடிக்கொண்டு ஓர் அம்மாள் வந்திருப்பதாகத் தெரிவித்தாள்.

    அவளைத் தேடிக்கொண்டு யாரும் பள்ளிக்கு வரும் வழக்கம் இல்லை. அப்படி வரக்கூடியவர்களும் இல்லை. எனவே யாராக இருக்கும் என்று ஊகிக்க முடியாத திகைப்புடனே அவள் எழுந்தாள்.

    யாருன்னு சொன்னாங்களா, ஆயா? என்று போகிற வழியிலேயே தன் ஆவலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டாள்.

    யாருன்னு தெரியல்லேம்மா. முன்னாடி ஹால்லே உக்காந்துக் கிட்டிருக்குது. நானும் யாருன்னு கேக்கலே…

    உஷா ஆவலுடன் விரைவாக நடந்தாள்.

    2

    கலா அலுவலகத்துக்குள் நுழைந்தபோது மணி 10. 05. ஐந்து நிமிடத் தாமதம் ஏற்பட்டு விட்டது. அவள் மேல் தப்பில்லை. வழக்கமான நேரத்துக்குத்தான் வீட்டை விட்டாள். வழக்கமான நேரத்துக்குப் பேருந்தும் வந்தது. வழக்கமான ஓட்டுநர் தான். வழக்கமான நடத்துநர்தான். இருப்பினும் படிக்கட்டுப் பயணிகள் சிலர் உள்ளே போகமாட்டோம் என்று முரண்டு பிடித்ததில் நடத்துநர், அவர்கள் உள்ளே போனாலன்றித் தம்மால் வண்டியை எடுக்க முடியாது என்று அறிவித்துவிட்டு ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ‘அறப்போர்’ செய்ததனால் அந்தக் கால தாமதம் விளைந்துவிட்டது. கடைசியில் பயணிகள் யாரும் உள்ளே தாங்களாகச் செல்லத்தான் இல்லை. ஆனால் காவல்துறையைச் சேர்ந்த சிலர் பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், பயணிகள் ஓரிருவர் ‘அவங்க அபராதம் கட்டப் போறாங்கன்னு தோணுது’ என்று சிரிக்கவும், தாங்களாகவே உள்ளே வந்துவிட்டனர். வண்டியும் கிளம்பிற்று. ஆனால் எதிர்பாராத இந்தத் தடங்கலால் ஐந்து நிமிடத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கலா எப்போதும் நேரத்துக்கு வருகிறவள். ஐந்து நிமிடங்கள் முந்தியாவது அலுவலகத்துக்கு வருவாளே ஒழிய, இப்படிக் காலந் தாழ்த்தி இந்த ஓர் ஆண்டுக் காலத்தில் அவள் வந்ததே கிடையாது. இதனால் அவள் கால்கள் பின்னிக்கொண்டு போயின.

    எதிர்ப்பட்ட எல்லாரும் தன்னையே உற்றுப் பார்ப்பது போலவும், சிலர் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொள்வது போலவும் அவளுக்குத் தோன்றிற்று. அவள் முகம் சிவந்தது. அவள் மிகவும் விரைவு காட்டி நடந்து தனது இருக்கையையடைந்து பெருமூச்சுடன் கைப்பையை மேசைமீது வைத்துவிட்டு அலுவலரின் அறைக்குப் போனாள்.

    பத்து மணிக்கு மேல் வருகிறவர்கள் அலுவலரின் அறைக்குப் போய் அவர் முன்னிலையில் தாமதப் பதிவு ஏட்டில் கையெழுத்திட்டு, வந்த நேரத்தையும் குறிப்பிட்டு வரவேண்டும். இது அவளுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. இருந்தாலும் போய்த்தானாக வேண்டும். பிரிவில் இருந்த எல்லோரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாருமே அடிக்கடி தாமதமாக வருகிறவர்கள். மாதத்துக்கு இரண்டு தாமத வருகைகள் தண்டனையின்றி அனுமதிக்கப்படும் என்பது விதி. எனவே அந்த இரண்டு தடவைகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு விடுகிறார்கள். கலா தாமதித்து வந்து மாட்டிக் கொள்ளுவதில்லையே என்று அவர்களுக்கெல்லாம் வயிற்றெரிச்சலான வயிற்றெரிச்சல். எனவே எல்லாரும் திருப்தியுடனும், மகிழ்ச்சியாகவும் அவளது சிறுத்துவிட்டிருந்த முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

    அவள் பேனாவைத் தயாராகத் திறந்து வைத்துக் கொண்டு அலுவலரின் அறையை நோக்கிப் போனாள். அவரது அறையின் தள்ளுகதவைச் சற்று ஓசைப்படுத்தி விட்டு, அவரது ‘கமின் ப்ளீஸ்’ காதில் விழுந்ததும் , அவள் சிறிதே தயங்கியவாறு நுழைந்தாள். அவள் நுழைந்த போது அவர் நாற்காலியின் முதுகின் மேல் நன்றாகச் சாய்ந்துகொண்டு ஓய்வாக உட்கார்ந்திருந்தார். முகத்தின் நெளிவுகள் அவர் எதைப் பற்றியோ மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று அவளை நினைக்க வைத்தது.

    குட் மார்னிங் , சார்…

    குட் மார்னிங்.

    லேட் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடணும்…

    இதோ இருக்கு. போடுங்க… நீங்க எந்த செக்ஷன்லே வேலை செய்யறீங்க?

    … அக்கவுண்ட்ஸ்லெ, சார்…

    என்ன பேரு?

    மிஸ் கலாவதி…

    நான் பேரு மட்டுந்தான் கேட்டேன் என்று அவர் சிரிக்கவும், எதற்காக அவர் சிரித்தார் என்பது உடனே புரியாததால், அவள் திருதிருவென்று விழித்தாள்.

    நல்ல வெயில்லே வந்திருக்கிங்க. அதான் ஒண்ணும் புரியமாட்டேங்கறது, இல்லை?. . . சரி, உங்களை பனிஷ் பண்ணனும்னு நினைக்கிறேன்…

    அவள் முகம் சிறுத்தது. அவள் ஒன்றும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அடிக்கடி லேட்டா வர்றவங்களை விட்டுடலாம். ஆனா இது மாதிரி அபூர்வமா லேட்டா வர்றவாளைச் சும்மா விடக்கூடாதுஉக்காருங்க… நீங்க எத்தனை வருஷமா இந்த ஆபீஸ்லெ இருக்கேள்?

    அவள் நின்று கொண்டே பதில் சொன்னாள்: ஒரு வருஷமாத்தான்.

    உக்காருங்க. ப்ளீஸ்… இந்த ஒரு வருஷத்துலே எத்தனை தரம் லேட்டாய் வந்திருக்கிங்க?

    இதுதான் முதல் தடவை. - கலாவின் குரல் இப்போது சிறிது தெம்பாக ஒலித்தது. வற்புறுத்தலின் பேரில் உட்கார்ந்த அவள் கை பேனாமூடியைத் திருகிக்கொண்டிருந்தது. கால்கள் சிறிது அதிர்ந்து கொண்டிருந்தன.

    வெரிகுட்… அப்ப உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு பனிஷ் மென்ட் குடுத்தே தீரணும்… என்ற அலுவலர் அழைப்பு மணியைத் தட்டினார்.

    ஏவலாள் வந்ததும் இரண்டு கப் காப்பி வாங்கிவருமாறு பணித்தார். வேணாம், சார் என்ற அவளது வலுவான மறுப்பை அவர் காதில் வாங்கியவராகவே தெரியவில்லை.

    ஏவலாள் பிளாஸ்கை எடுத்துக்கொண்டு போனதும் அவர் தம் கையிலிருந்த அலுவலகத் தாள்களைப் புரட்டத் தொடங்கினார். கலாவுக்கு எழுந்து போய்விட வேண்டும் போல் இருந்தது. காப்பி வேண்டாம் சார்.

    ஏன்? நம்ம கான்டீன் காப்பின்னா அவ்வளவு பயமா? பயப்பட வேண்டாம். நம்ம பியூன் வெளியிலேருந்துதான் வாங்கிண்டு வருவாரு.

    கலாவுக்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. உறுத்தியது. ‘கையெழுத்துப் போடப் போன பெண்ணை இன்னும் காணோமே என்று பிரிவில் ஏதேனும் பேசுவார்களோ’ என்று அவளுக்கு அச்சமாக இருந்தது. ஏற்கனவே அவளைக் கண்டால் அங்கே பெரும்பாலோர்க்கு ஆகாது.

    காப்பியை இரண்டு கோப்பைகளில் ஊற்றி மேசை மீது பணியாள் வைத்தான். அவர் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, டேக் இட் என்றார்.

    காப்பியைக் கையில் எடுத்துக்கொண்ட கலாவின் கைகள் கொஞ்சம் ஆடின. அவளது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டவர் போல் அவர் அவள் புறம் பாராமல் தாள்களைப் புரட்டி கொண்டே தமது காப்பியைப் பருகலானார். கலாவுக்கு அந்த அறையைவிட்டு ஓடிப்போனால் தேவலை என்றிருந்தது. எனவே, அதிகச் சூட்டில் காப்பி குடிக்கும் பழக்கம் இல்லாதிருந்தும், அதை அவசரம் அவசரமாகக் குடித்துவிட்டு, தாங்க் யூ சார் என்றபடி எழுந்தாள்.

    தலை நிமிர்ந்த அவர், என்னது? நான் இன்னும் கால் கப் கூடக் குடிக்கல்லே - குடிக்க முடியவில்லை; அவ்வளவு சூடு. அதை எப்படி ஒரே மூச்சில் குடிச்சேள்? சுடல்லையா?’ என்று தமது வியப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, நெருப்புக் கோழியா?" என்றார்.

    கலா பதில் சொல்லாமல் இநின்றாள். உண்மையில் நாக்கும், உதடுகளும் - ஏன்? வாய் முழுவதும் - ஜிவு ஜிவு வென்று எரிந்து கொண்டிருந்தன. அவள் முகத்தில் அசடு தட்டிற்று.

    அவளது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டவர் போன்றுஇஅவர் சரி யூ மே கோ… என்றார்.

    அவள் மறுபடியும் தாங்க்யூ சார் என்று சொல்லி விட்டு நடந்தாள். கதவு வரைக்கும் போன அவளை, மிஸ் கலா! என்று அழைத்த அவர், காப்பி கிடைக்கும்னு அடிக்கடி லேட்டாய் வராதீங்க!" என்றார்.

    கலாவுக்கு வெட்கம் தாங்கவில்லை. அவள் பதில்கூடச் சொல்லாமல் விழுந்தடித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். முகத்தில் வேர்வை அரும்பி இருந்தது. கையில் கைக்குட்டை எடுத்து வராததால் புடவைத் தலைப்பினாலே முகத்தை ஒற்றித் துடைத்துக் கொண்டாள். அப்படி வேர்த்துப் போனதற்குக் காரணம் அவள் கொதிக்கக் கொதிக்கக் குடித்த காப்பி மட்டுந்தானா? இல்லை, அலுவலர் தியாகராஜன் அவ்வளவு சகஜமாகவும், அதிகாரதோரணை காட்டாமலும் அவளுடன் பேசிய தோடல்லாமல், அவளுக்குக் காப்பியும் வரவழைத்துக் கொடுத்ததுதான்.

    அவரும் அந்த அலுவலகத்திற்குப் புதியவர்தான். வந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. அவள் வேலையில் சேர்ந்ததற்கு மறுநாள் அவர் பம்பாய்க் கிளை அலுவலகத்திலிருந்து வந்தார். சற்றுத் தொலைவிலிருந்து அவரைச் சில தடவைகள் அவள் பார்த்திருந்தாள்தான். இவ்வளவு நெருக்கத்தில் அவள் அவரைப் பார்த்தது இதுதான் முதல் தடவையாகும்.

    கையெழுத்துப் போட அலுவலரின் அறைக்குள் நுழைந்தவள் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறாள் என்று தன் பிரிவில் இருப்பவர்கள் தங்கள் மண்டைகளை உடைத்துக் கொள்ளாமல் - ஏன் தன் மண்டையை உருட்டாமலும் தான் - இருக்க வேண்டுமே என்று அவளுக்குக் கவலையாக இருந்தது. அதிலும் அந்த அலுவலர் இளைஞராக இருந்தது அவளது தடுமாற்றத்திற்கு வலிமை கூட்டியது.

    அவள் மிகுந்த முயற்சியின் பேரில் தமது முகத்தை உணர்ச்சியற்று வைத்துக் கொண்டவாறு இருக்கையில் அமர்ந்தாள்.

    மேனேஜர் என்ன சொன்னாரு? - கேட்டது நாகப்பன்.

    அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1