Ammavin Sothu
()
About this ebook
Read more from Jyothirllata Girija
Alaigalum Aazhangalum Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsGnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsPurushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Penkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsPorattam Rating: 0 out of 5 stars0 ratingsManikodi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsVanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Puratchi Siruvan Manickam Rating: 0 out of 5 stars0 ratingsNallathambi Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsPonnulagam Nokkip Pohirairgal Rating: 0 out of 5 stars0 ratingsSuvadikal Sonnathillai Rating: 0 out of 5 stars0 ratingsMathalangal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Pozhuthu Vidiyum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poiyin Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsMagalukkaga Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ammavin Sothu
Related ebooks
Vaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsNenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Appavin Arai Rating: 4 out of 5 stars4/5Pachaipudavaikkaari Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsThaan Than Sugam Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Nigazhntha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIthuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Neril Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Naane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannottathil... Rating: 0 out of 5 stars0 ratingsKadamai Kanniyam Kattupadu Rating: 0 out of 5 stars0 ratingsமம்மி-ரம்மி! Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsTime To Murder Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ammavin Sothu
0 ratings0 reviews
Book preview
Ammavin Sothu - Jyothirllata Girija
https://www.pustaka.co.in
அம்மாவின் சொத்து
Ammavin Sothu
Author:
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For more books
https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. உயிர்கள்
2. எலி வளையானாலும்...
3. கண்ணியம்
4. நான் ஒண்ணும் நளாயினி இல்லே
5. பெண்டிர்க்கு அழகு...
6. தண்டச்சோறு
7. புதிய சாதிகள்
8. யாருக்கும் தெரியாமல்...
9. அம்மாவின் சொத்து
10. நீ இரங்காயெனில்...
11. பாதுகாவலன்
12. அப்பாவுக்காக
13. மாற்றம் தேவை
14. அதே இரத்தம்
15. அரிப்பு
16. காலம்
17. புதுப்பெண்
18. யாதும் வீடே
19. பூ!
20. மேல் நாட்டு மோகம்
21. அந்த நாள் ஞாபகம் - அது வரலாமா?
22. அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!
23. அம்மா - அப்பாவுக்காக...
24. ‘ஆல் – இன் - ஒன்’ அலமேலு
25. உடம்பு
26. உடன் பிறவாத போதிலும்...
27. கண்ணிய ஏடுகள்
முன்னுரை
இச்சிறுகதைகள் யாவும் பல்வேறு இதழ்களில் வந்தவை. (கல்கி-2 போல்ட் இண்டியா-1 தேவி-2, தினமணி கதிர்-5, இதயம் பேசுகிறது-1, சிறுகதைக் களஞ்சியம்-2, அண்ணா-3. குங்குமம்-4. தமிழரசு-2. வாழும் தமிழ் உலகம்-1. தீபம்-1, செம்மலர்-1, பாக்கெட் நாவல்-1, ஜனரஞ்சனி-1) இவற்றை முதலில் வெளியிட்ட இதழாசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
‘சிறுகதைக் களஞ்சியத்’தின் பொறுப்பு ஆசிரியராக இருந்த அமரர் தாமரை மணாளன் அதன் முதல் இதழில் என் கதை வந்தே ஆகவேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுப் பெற்ற ‘நீ இரங்காயெனில்’ எனும் சிறுகதை இத்தொகுதியில் இடம்பெறுகிறது. சாப்பாட்டு இடைவேளையின் போது எங்கள் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து அமரர் குயிலி ராஜேஸ்வரியுடனும் என்னுடனும் பேசிக் கொண்டிருப்பார். நகைச்சுவை மிக்கவர். இவரது ‘நக்கல்’ நடை வேறு எவருக்குமே வாய்க்கப் பெறாத தனி நடையாராலும் பின்பற்ற முடியாத நடை!
சகோதரர் அமரர் தாமரை மணாளன் அவர்களுக்கு இத்தொகுதியைக் காணிக்கையாக்குகிறேன்.
சென்னை- 600 101
1. உயிர்கள்
டாக்டர் மனோகரி ஆயாசத்துடன் தன்னறைக்குச் சென்று கட்டிலில் மல்லாந்தாள், ஓய்வு ஒழிவற்ற வேலை, அறுவைச் சிகிச்சைகள், கருத்தடைச் சிகிச்சைகள், ஆலோசனைகள், பதினைந்து நாட்கள் தள்ளிப்போன கேஸ்கள், நாற்பது நாட்கள் தாண்டிப்போய் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் கேஸ்கள், உயிரைப் பணயம் வைத்து, மானத்தைக் காத்துக்கொள்ளத் துடித்து எத்தகைய ஆபத்தான சிகிச்சைக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கும் கைவிடப்பட்ட, ஏமாற்றப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, ஐந்தாறுக்கு மேல் பெற விரும்பாத பெண்கள்.
அடியம்மா!
காலம்தான் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது!
டாக்டர் மனோகரி சென்னையின் புகழ்மிக்க - பெண்ணுடற்கூற்று மருத்துவத்தில் எண்ணிறந்த பட்டங்கள் வாங்கிய - டாக்டர்களுள் ஒருத்தி. அவள் அம்மா காந்திமதிக்கு அவள் டாக்டர் என்பதில் பெருமை இருப்பினும், அவள் சிறப்புத்துறை அவளுக்குப் பிடிக்கவில்லை.
‘ஏண்டி, எதுக்கு இப்படிக் குழந்தைகளை அதுகள் பிறக்கிறதுக்கு முந்தியே கொலை பண்றே? இதெல்லாம் பாவம்டி’ என்று அடிக்கடி காந்திமதி அங்கலாய்ப்பதுண்டு.
இன்றுதான் செய்துள்ள கேஸ்களின் எண்ணிக்கையை அறிய நேர்ந்தால் அம்மாவின் மூச்சே நின்றுவிடும் என்று தனக்குள் எண்ணி அவள் சின்னதாய்ச் சிரித்துக் கொண்டாள். இன்று அம்மாவின் கூற்றுப்படி அவள் கொன்ற குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து!
காபி கொண்டு வரட்டுமா?
என்ற அம்மாவின் குரலைக் கேட்டு மனோகரி தனது சிந்தனையைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள்.
நானே வந்து குடிக்கிறேம்மா. நீ என்னத்துக்கு சிரமப்பட்றே? சமையலுக்கு ஆள் போடறேன்னாலும் கேக்கமாட்டேங்கறே!
என்று அலுத்தபடி அவள் எழுந்து நின்று கலைந்து கிடந்த தலையைச் சரிசெய்து கொண்டாள்.
அதான் கூடமாட ஒத்தாசை பண்றதுக்குச் சின்னப்பொண்ணு இருக்காளேடி? அதுவே கொள்ளையோ கொள்ளை. உடம்பில் பலம் இருக்கிற வரைக்கும் செய்யறேன். எனக்கு வேணும்னு தோண்றச்சே நானே உங்கிட்ட ஆள் வெச்சுடுன்னு சொல்லிடறேன். அவ்வளவு தானே?
என்று சிரித்தபடி காந்திமதி அடுக்களை நோக்கி நடந்தாள்.
மணி ஏழாச்சு. இத்தறுவாய்க்கு மேல காபி குடிச்சா அப்புறம் பசிக்காதேம்மா?
என்று கேட்டவண்ணம் தாயைத் தொடர்ந்து அவள் தானும் அடுக்களைக்குப் போய்ச் சுவரோரம் போடப்பட்டிருந்த முக்காலியில் உட்கார்ந்து நெடிய கொட்டாவி ஒன்றை உதிர்த்தாள். கொட்டாவி ஒன்றோடு நிற்காமல் இரண்டாக வந்தபோது காந்திமதி அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டு, பாரு. உடம்பில அலுப்பு இருந்தாத்தான் இப்படிக் கொட்டாவிக்கு மேல கொட்டாவியா வரும். என்னத்துக்கு உடம்பை வருத்திண்டு இப்படிச் சம்பாதிக்கணும்? சமூகமாவது, சேவையாவது? என்ன சேவை பண்றே பெரிசா? ஒரு நாளுக்கு அஞ்சாறு கொலை பண்றே
என்றாள்.
மகள் பதில் சொல்லாது அழிச்சாட்டியமாய் உட்கார்ந்து கொண்டிருக்கவே, ஒரு அரை தம்ளர் போலக் குடி. சுடச்சுடக் காப்பி குடிச்சா கொஞ்சம் சுறுசுறுப்பு வரும். அலுப்பும் பறந்து போயிடும். கொஞ்ச நேரம் படிச்சுட்டு வந்தீனா சுடச்சுட ரெண்டு பேரும் உக்காந்து சாப்பிடலாம்!
என்றாள்.
தொடக்கத்தில் எல்லாம் காந்திமதி தான் செய்து கொண்டிருந்த தொழிலை இவ்வாறு மட்டந்தட்டியும், சற்று மனத்தாங்கலுடனும் பேசும்போதெல்லாம் மனோகரிக்கு ஆத்திரம் நிறையவே வந்து கொண்டிருந்தது. அடிக்கடி இதே சொற்களை வெவ்வேறு ராகங்களில் கேட்டுக் கேட்டுக் காதுகள் புளித்துப் போய்விட்டதால் தாயின் கருத்துகளைப் பொருட்படுத்தாதிருக்குமளவுக்கும், அவற்றால் சற்றும் பாதிப்பு அடையாதிருக்குமளவுக்கும் அவள் பழக்கப்பட்டுப் போய்விட்டாள்.
இந்தா!
என்று காபித் தம்ளரையும் வட்டையையும் காந்திமதி அவளிடம் நீட்டினாள்.
அரை தம்ளரா இது? இந்தா நீயும் ஒரு வாய் குடி
என்று காபியில் பாதியைத் தான் எடுத்துக்கொண்டு மீதியைத் தாயிடம் கொடுத்தாள் மனோகரி. அம்மா சொன்னது மாதிரி சூடான காபி இதமாய்த் தொண்டைக்குள் ஒவ்வொரு வாயாக இறங்க இறங்க மனமே புத்துணர்ச்சி பெற்றுவிட்டது போலத்தான் ஆகிவிடுகிறது! என்னே காபியின் மகிமை!
என்னடி நீயே சிரிச்சுக்கறே?
வேற ஒண்ணுமில்லேம்மா. நாமெல்லாம் இந்தக் காபிக்கு எவ்வளவு அடிமையா இருக்கோம்னு நினைச்சு சிரிச்சேன். நீ சொன்னது மாதிரி காபியைக் குடிச்சதும் சுறுசுறுன்னுதான் ஆயிடறது!
என்ற மனோகரி காபித் தம்ளரைத் தொட்டி முற்றத்தில் போட்டுவிட்டு நகர முற்பட்டாள்.
உக்காரு, உங்கூடப் பேசணும்!
இந்த சொற்களும் வழக்கமானவைதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்று காந்திமதி கட்டளையிடுகிற தோரணையுடன் அவளைப் பார்த்து அதட்டலாய்ச் சொல்லுவதும், அவள் உட்காருவதும், உட்கார்ந்த பின்னர் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி அவள் செய்யும் வற்புறுத்தலை அசட்டையுடன் புறக்கணிப்பதும்... இந்த நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நடக்கப் போகிறது!
என்னம்மா பேசப் போறே? பழைய பல்லவிதானே?
என்றபடி மனோகரி உட்காராமல் நின்றவாறே தாயை முறைத்துப் பார்த்தாள்.
ஆமாண்டி. உனக்குக் கேலியாகத்தான் இருக்கும். இப்ப தெரியாது. அம்மா சொன்னாளேன்னு நாளைக்கு நினைச்சுப்பே... எத்தனை டாக்டர்களோட பழகறே? ஒருத்தனையுமா உனக்குப் பிடிக்கல்லே?
மனோகரி பதில் சொல்லாமல் சிரித்தாள்.
சிரிச்சுச் சிரிச்சு மழுப்பாதே. வயசு ஏறிண்டே போறது. நீ டாக்டர் வேற. முப்பது வயசுக்கு மேல ஆயாச்சு, எனக்கா உடம்பு தள்ளலே. உன்னாலயே எனக்கு ராத்திரி படுத்தா தூக்கம் வருவேனாங்கறது...
தூக்க மாத்திரை போட்டுக்கோ.
மாத்திரை குடுத்து அம்மாவைத் தூங்கப் பண்றதுக்குத்தான் உன்னை அரும்பாடுபட்டு டாக்டருக்குப் படிக்க வெச்சேனாக்கும்!
மனோகரி நகரத் தொடங்கினாள்.
மனோகரி, நில்லு... சும்மா கண்ணாமூச்சி ஆடாதேடி எங்கூட சீக்கிரமா ஒரு தீர்மானத்துக்கு வா. லவ்கிவ்னு ஏதானும்னா மனசுவிட்டுச் சொல்லிடு. அவன் எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லேடி, எந்த மதமா இருந்தாலும் கூடப் பரவாயில்லே. கல்யாணம்னு ஒண்ணு நீ பண்ணிண்டியானா அதுவே எனக்குப் போதும்...
இந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கும் அம்மாவின் அன்பை எண்ணி மனோகரிக்குக் கண்களில் கசிவு ஏற்பட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. கல்யாணம்னு பண்ணிண்டா இந்த அளவுக்குத் தொழில்ல சிரத்தையோட செயல்பட முடியாதும்மா. உனக்குத் தெரியாதா? சுயநலங்கள் வந்துடும். நேரம் கிடைக்காது. நிறையக் கேஸ்களை ஏத்துக்க முடியாம போயிடும்!
நிறையக் குழந்தைகளைக் கொல்ல முடியாமப் போயிடும்னு சொல்லு.
மனோகரி அதுகாறும் அடக்கி வைத்திருந்த எரிச்சல் பீறிட்டுக் கொண்டு புறப்பட்டது.
அம்மா. இதப்பாரு, கொல்றது கொல்றதுன்னு அடிக்கடி சொல்றே, இனிமே அதுமாதிரி சொல்லாதே, நான் எத்தனையோ பெரிய உயிர்களைக் காப்பாத்தறேன்கிறதை நினைச்சுப் பார்க்காம பேத்தறே. ஏதோ தவறு நேர்ந்து போயிட்றது. யார் தப்புங்கிறது பிரச்சினை இல்லே. அந்தத் தப்போட பொறுப்பு பொண்ணு மேலதானே விழறது? ஆம்பளை தப்பிச்சுண்டு போயிடறான். பொண்ணு மட்டும் பலியாகணுமா? சரி. அப்படி ஆகாம இருக்கிற அளவுக்கு சமூகம் முன்னேறி இருக்கா?
நீ என்னதான் விதண்டாவாதம் பண்ணினாலும் நீ செய்யறது கொலைதான். ஒரு முழு உயிரா வளர்ந்து, ஆணாவோ இல்லே பெண்ணாவோ பொறக்கக்கூடிய ஒரு பிண்டத்தை நீ அறுத்துப் போட்டுட்டு அது கொலை இல்லைன்னு சொன்னா நான் ஒத்துக்குவேனா?
மனோகரி அம்மாவுடன் நீளமாக அதுபற்றிப் பேசியே விடுவது என்று முடிவு செய்து முக்காலியின் மீது உட்கார்ந்து கொண்டாள்.
சரிம்மா. ஒரு பொண்ணு இருக்கா. அவளை எவனோ பலவந்தப்படுத்திக் கெடுத்துடறான்னு வெச்சுப்போம். அந்தப் பொண்ணு உண்டாயிட்றது. அதை அந்தப் பொண்ணு மனப்பூர்வமா ஏத்துண்டு பெறணுமா? சொல்லு, கற்பழிப்புல பிறக்கிற குழந்தையை நேசிக்க முடியுமாம்மா? கற்பழிப்புல உண்டானாலும் அதை நீ முழுசாப் பெத்துத்தான் ஆகணும்னு ஒரு பொண்ணைக் கட்டாயப்படுத்தறதுக்கு மத்தவாளுக்கு என்ன உரிமைம்மா இருக்கு?
காந்திமதியால் பதில் சொல்ல இயலாது போயிற்று.
என்னம்மா பேசாம நிக்கறே?
நீ எடுத்து நடத்தறதெல்லாம் கற்பழிப்புக் கேஸ்கள் மட்டுந்தானா?
இப்போது மனோகரிக்குக் கணம் போல் வாயடைத்துப் போயிற்று.
கூப்பிடு மணி அழுத்தப்பட்ட ஓசையும் அதைத் தொடர்ந்து சின்னப் பொண்ணு வாயிற்கதவைத் திறந்து விசாரித்ததும் காதுகளில் விழ அம்மாவின் கேள்வியைத் தற்காலிகமாய்த் தள்ளிப் போட்டு விட்டு மனோகரி எழுந்து கூடத்துக்குப் போனாள்.
யாரு வந்திருக்காங்க, சின்னப் பொண்ணு?
ஒரு அய்யாவும் அம்மாவும் வந்திருக்காங்க. கன்சல்ட்டேசன் நேரம் முடிஞ்சாச்சுன்னு சொன்னேன், போக மாட்டேங்குறாங்க. என்னமோ அர்ஜண்டாம்!
மனோகரி தன் ஆலோசனை அறையை அடைந்தபோது. அங்கே நின்றிருந்த ஓர் இளைஞனும் ஓர் இளம் பெண்ணும் அவளைப் பார்த்து வணக்கம் தெரிவித்தனர். இருவர் முகங்களிலும் மலர்ச்சி இல்லை என்பதையும், செய்த புன்னகைகள் செயற்கையாக இருந்தன என்பதையும் மனத்தில் வாங்கிக்கொண்ட மனோகரிக்கு அது எத்தகைய கேஸ் என்பது அவர்கள் சொல்லாமலே புரிந்து போயிற்று.
என்ன ப்ராப்ளம்? சொல்லுங்க
என்ற மனோகரி சின்னப் பொண்ணைப் பார்வையால் அங்கிருந்து விரட்டிவிட்டுக் கதவைச் சாத்தினாள்.
அந்த இளம்பெண் அழத் தொடங்கினாள். இளைஞன் தலைகுனிந்து நின்றான்.
என்ன ஆச்சு? ஆர் யூ மேரீட்?
நோ, டாக்டர்...
பெண் அழுது கொண்டிருக்க, இளைஞன்தான் மென்று விழுங்கினான்.
உக்காரும்மா.
அவள் நாற்காலியின் முன்னடியில் பட்டும் படாமலும் உட்கார்ந்து கண்களைத் துடைத்துக் கொள்ளலானாள்.
நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கல்லே?
ஆமா, டாக்டர்!
இளைஞனே இப்போதும் பதில் சொன்னான். மிகுந்த அவசரமும் பதற்றமும் காட்டி அவன் பதில் சொன்ன தினுசில். ‘நான் அயோக்கியனில்லே, டாக்டர். நிச்சயமா இவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன்’ என்கிற பொருள் வெளிப்பட்டதாய் மனோகரிக்குத் தோன்றியது.
அப்ப என்னத்துக்கு எங்கிட்ட வந்தீங்க? சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுக்க வேண்டியதுதானே? உடனே தாலியைக் கட்டிட்டாத் தீர்ந்தது பிரச்சினை... குழந்தை குறை மாசத்துல பிறந்துடுத்துன்னு பொய் சொல்லிச் சமாளிச்சுக்கலாமே? எதுக்கு இந்த அழிப்பு வேலை?
அதுல சில சிக்கல்கள் இருக்கு, டாக்டர்.
என்ன சிக்கல்?
என் தங்கை ஒருத்தி இருக்கா கல்யாணத்துக்கு. அவளுக்கு ஆகாம எங்க வீட்ல என் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டாங்க.
யாரு சம்மதிக்க மாட்டாங்க?
எங்கப்பாவும், அம்மாவும்.
இதுமாதிரி ஒரு தப்புக் காரியம் செஞ்சப்ப அந்த அப்பாவையும் அம்மாவையும் கேட்டுத்தான் செஞ்சீங்களா?
இளைஞன் தலையை மிகத் தாழ்வாய்த் தொங்கப் போட்டுக் கொண்டு விட்டான். பெண்ணோ வந்ததிலிருந்தே தலையை உயர்த்தாதிருந்தவள் மேலும் குனிந்து கொண்டு முகத்தையும் பொத்திக் கொண்டாள்.
சில நொடிகளுக்கு அவ்வறையில் திண்மையான அமைதி நிலவிற்று. அதை மனோகரிதான் கலைக்க வேண்டி இருந்தது.
சரி, சொல்லுங்க, இப்ப நான் என்ன செய்யணும்?
கலைச்சுடணும், டாக்டர்!
வேற எந்த டாக்டர்கிட்டயாவது போனீங்களா?
இளைஞன் சட்டெனத் தலையை உயர்த்தினான்.
ஆமா, டாக்டர். டாக்டர் வேதவல்லிகிட்ட போனோம். ஆனா அவங்க முடியாதுன்னுட்டாங்க. மேரீட் கப்பிளா இருந்தாத்தான் அபார்ஷன் பண்ணுவாங்களாம்...
எங்கிட்ட யாரு உங்களை அனுப்பினது?
அவங்கதான் டாக்டர். நீங்கதான் கேள்விகள் கேக்காம இந்த விஷயத்துல உதவி பண்றவங்கன்னு அவங்களே சொன்னாங்க.
மனோகரி கேள்விகள் கேட்கிற வழக்கமில்லாதவள்தான். இக்கட்டான நிலையில் தன் உதவியை நாடி வருகிறவர்களிடம் தேவையற்ற சொந்தத்தனமான வினாக்களை அவள் எழுப்பியதே கிடையாது. இன்று அம்மாவின் உபதேச மொழிகள் தன்னைப் பாதிக்கின்றனவோ என்றெண்ணி அவள் திகைப்படைந்தாள். ஒரு பெண் தான் விரும்பாவிட்டால் தனது கருவை அழித்துக்கொள்ளும் உரிமை பெற்றவள் என்பதே அவளது கருத்தாகும். இந்த விஷயத்தில் அவளது தன்னிச்சையில் தலையிட்டுக் கருத்துத் திணிப்புச் செய்யும் உரிமை யாருக்குமே இல்லை என்பது மனோகரியின் ஆணித்தரமான தீர்ப்பாகும்!
உங்க தங்கைக்குக் கல்யாணம் ஆனதும் கண்டிப்பா இவளைக் கல்யாணம் செய்துக்குவீங்கல்ல?
ப்ராமிஸா, டாக்டர்...
உங்க பேரென்ன?
என் பேரு சுப்பிரமணியன். இவ பேரு தேவசேனா.
பேர்ப்பொருத்தம் நல்லாருக்கு. ஆனா, இன்னொரு வள்ளியைத் தேடிக்கிட்டுப் போயிடாதீங்க!
இளைஞன் முகம் சிவந்து, பிலீவ் மி டாக்டர். ஒரு வீக் மோமெண்ட்ல இப்படி ஆயிடுத்து...
என்று படபடத்தான்.
சரி, நீங்க கொஞ்சம் வெளியே இருங்க...
என்று மனோகரி சுப்பிரமணியனை வெளியே அனுப்பி வைத்துவிட்டுத் தனது சோதனைகளையும் கேள்விகளையும் தொடங்கினாள்.
சற்றுப் பொறுத்து இளைஞனை உள்ளே வரவழைத்து, உங்க விலாசம் சொல்லுங்க, நீங்க எங்க வேலை பார்க்கிறீங்க?
என்று வினவினாள்.
தேவேந்திரன் அண்ட் ஞானேந்திரன் கம்பெனியில ஸ்டெனோவா இருக்கேன். இவளும் அதே ஆபீஸ்ல க்ளார்க்கா இருக்கா...
சரி, ஐந்நூறு ரூபா ஆகும்...
கொண்டு வந்திருக்கேன், டாக்டர்...
கொடுத்தான்.
நாளை காலை ஏழுக்கெல்லாம் வந்துடும்மா
என்ற மனோகரி சில யோசனைகளைச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தாள்...
உள்ளே திரும்பி வந்த மகளிடம், இன்னொரு கொலைக்கேசா?
என்று காந்திமதி எகத்தாளமாய் விசாரித்தாள், மனோகரி சேதியைச் சொன்னாள்.
இப்ப நான் மாட்டேன்னு அனுப்பிடறேன்னு வெச்சுக்கோ, அந்தப் பொண்ணு என்னத்தையானும் விஷத்தைத் தின்னு தற்கொலை பண்ணிக்கும். அதுமட்டும் தேவலையா? அது நான் பண்ணின கொலையாகாதா? இயக்கம் இல்லாத ஒரு கருவைக் கொல்றதைவிட அது மோசமில்லியாம்மா?
ஆமா, மோசந்தான். ஆனா, இதை உன்னைப்போல சில டாக்டர்கள் ஆதரிச்சா என்னவாகும்? ஊர் முழுக்கத் தப்புப் பண்றவா தொகை ஜாஸ்தியாகும். இல்லியா? ஒரு ஒழுக்கக்கேடு உண்டாகும். அதுமட்டும் சரியா?
அம்மா. இதப்பாரு, நீ புரிஞ்சிக்காம பேசறே. இப்பல்லாம் ஆண் பெண்கள் நிறைய அளவில் வெளியே வர ஆரம்பிச்சிருக்கா. கலந்து பழகற சந்தர்ப்பங்கள் ஏராளமா இருக்கு. அதனால தப்பு எப்பவானும் நேர்ந்துடறது. அதனால் ஒரு பொண்ணு கருத்தரிக்க நேர்ந்துட்டா. அதை என்ன செய்யணும்கிறது அவளுடைய சொந்த விவகாரம்கிறது மட்டுமே என்னுடைய அபிப்பிராயம்...
உன்னோட பேச என்னால ஆகாது... ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோடி, உயிர்களை அழிக்கிற உரிமை மனுஷாளுக்குக் கிடையாது. வேண்டாத உயிர்களை உண்டாக்கற உரிமையும் கிடையாது. உண்டாக்கினா பராமரிக்கணும், இல்லேன்னா உண்டாக்காமயே இருக்கணும். அவாதான் மனுஷா!... யோசிச்சுப் பார்த்தா, நீ சொல்றதுகூடச் சரியோன்னும் தோண்றது...
திடீரென்று திசைமாறிப்பேசும் தாயை மனோகரி வியந்து நோக்கினாள்.
என்னடி அப்படிப் பாக்கறே? நிஜமாத்தான் சொல்றேன். இப்ப உன் விஷயத்தையே எடுத்துக்கோ. நீ கருவில இருந்தப்போ உன்னை நான் அழிச்சிருக்கணுமோன்னு நினைக்கிறேன். அப்பவே நான் உன்னை அழிச்சிருந்தா நீ இத்தனை பேரை அழிக்க மாட்டியோல்லியோ? இந்தப் பாய்ண்ட்படி பார்த்தா நீ சொல்றது நியாயம்னு பட்றது!
மனோகரி விக்கித்துப் போய்த் தாயைப் பார்த்தபடி இருந்தாள்.
என் பாய்ண்ட்படி பார்த்தா, அதுவும் சரிதான்னு பட்றது. எப்படின்னு கேப்பியோ! நான் உன்னை அழிக்காம முழுசாப் பெத்ததுனாலதானேடி நீ இன்னிக்கு ஒரு பெரிய உசிரா வளர்ந்து, டாக்டராயி, இத்தனை பெரிய உயிர்களையும் காப்பத்தறே? அன்னிக்கே நான் உன்னை அழிச்சிருந்தா இது சாத்தியப்படுமா?
மனோகரிக்குத் தலைசுற்றத் தொடங்கியது...
1985
2. எலி வளையானாலும்...
குருநாதன் இடக்கையைப் புருவங்களுக்கு எதிராய்க் குடைபோல் விரித்துக் கண்களையும் சுருக்கிப் பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். அப்படியும் கதவைத் தட்டியது யார் என்பது சரியாகத் தெரியவில்லை. கதவைத் தட்டிவிட்டு, தட்டியது யார் என்பதை எளிதாக அவருக்குத் தெரியப்படுத்தும் எண்ணத்துடன் கதவை ஒட்டி அமைந்திருந்த சன்னல் பக்கம் தலையைக் காட்டிய நபரின் மங்கலான தோற்றம் தெரிந்ததே ஒழிய முகச்சாயல் தெளிவாய்த் தெரியவில்லை. எனவே குருநாதன் தாம் கையில் வைத்துக் கண்ணாடியின் உதவியுடன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு வாசற்பக்கம் சென்றார்.
கதவைத் தட்டிவிட்டுப் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தது செங்கல்வராயன்தான்.
வாப்பா, செங்கல்!
என்று அவனை வரவேற்ற அவர் கதவின் தாழ்ப்பாளை நீக்கினார். கதவைத் தள்ளிக்கொண்டு செங்கல்வராயன் உள்ளே நுழைந்தான்.
இந்தாங்க சார்!
அவன் நீட்டிய சிறு எவர்சில்வர் தூக்கைக் கையில் வாங்கிக் கொண்டே, என்னப்பா கொணாந்திருக்கே சாருக்கு?
என்று குருநாதன் தூக்கின் மூடியைத் திறந்தார். ஏலக்காய் மணத்துடனும் மேலாக மிதந்து கொண்டிருந்த முந்திரிப்பருப்புகளுடனும் வாசனை ஜமாய்த்த சேமியா பாயசத்தைக் கண்டதும் அவருக்கு நாவில் நீர் ஊறியது.
இப்பவே ஒரு தம்ளர்ல ஊத்தி சாப்பிடுங்க, சார். இளஞ்சூட்ல சாப்பிட்டா நல்லாருக்கும்
என்று கூறியபடி தம்மைப் பின்தொடர்ந்து உள்ளே வந்த செங்கல்வராயனை அவர் கண்கள் நன்றியுடன் நோக்கின.
எம்பிள்ளை எங்கூட இல்லாத குறையை நல்லாவே தீர்த்து வைக்கிறே
என்று வாய்விட்டுச் சிரித்த குருநாதன் ஒரு தம்ளரில் பாயசத்தை ஊற்றிப் பருகினார்.
என்னப்பா இது? ரெண்டு டம்ளருக்கு மேல இருக்கும் போலிருக்கே?
சும்மா சாப்பிடுங்க, சார்...
வாயைத் துடைச்சுக்கிட்டு வர்றேன். நீ உக்காரு
என்று சொல்லிவிட்டு அவர் கிணற்றடிக்குப் போய் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தார்.
பாயசம் பிரமாதம், செங்கல். உம்பொஞ்சாதிகிட்ட சொல்லு.
செங்கல்வராயன் சிரித்துவிட்டுப் பேசாதிருந்தான்.
இந்தக் காலத்துல உன்ன மாதிரி யாருப்பா இத்தனை விசுவாசத்தோட இருக்குறாங்க? பெத்த பிள்ளைங்களே அம்மா அப்பாவைக் கவனிச்சு சோறு போட மாட்டேங்குறாங்க
என்று குருநாதன் அவனை மெச்சினார்.
உங்க பையன்கிட்டேருந்து லெட்டர் வந்திச்சா, சார்?
இல்லேப்பா, இன்னிக்கு நாளைக்கு வரும்னு நினைக்கிறேன்.
நீங்க லெட்டர் எழுதிப் பத்து நாளாச்சுங்களே?
ஆபீஸ்ல அவனுக்கு எம்புட்டோ சோலி இருக்கும்.
மகனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னாரா, இல்லாவிட்டால் உண்மையாகவே அப்படித்தானா என்று யோசித்தவாறு அவன் அவரைக் கண்ணிமைக்காமல் பார்த்தான்.
சார், உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.
சொல்லுப்பா...
மெட்றாஸ்ல உங்களுக்கு ஒரு சொந்த வீடு இருக்கிறதா ஒரு முறை சொன்னீங்க.
ஆமா.
அதை விக்கிற மாதிரி ஏதாச்சும் எண்ணம் இருக்குதுங்களா?
குருநாதன் சில கணங்களுக்கு வாயே திறக்காமல் இருந்தது அவனுள் வியப்பை உண்டாக்கிற்று. அவர் பேச அவன் காத்திருந்த அந்த மிகக்குறுகிய இடைவெளியில் அவர் கண்களில் நீர் வரியிட்டதைத் தான் பார்த்தது தன் பிரமையா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுவதற்காக அவன் அவரை மேலும் உன்னிப்பாய்க் கவனித்தான். கண்களில் வரியிட்டிருந்த கண்ணீர் சிறு மணிகளாய்த் திரண்டு அவர் கன்னங்களில் உருண்டு விழுந்து சிதறியதைப் பார்த்ததும் தான் பார்த்தது உண்மையே என்று கண்டுகொண்டு செங்கல்வராயன் பதறிப் போனான்.
சார், சார். நான் தப்பிதமா எதுனாச்சும் கேட்டிருந்தா மன்னிச்சுக்குங்க. என்னோட சகலை மெட்றாஸ்ல பிசினெஸ் பண்ணிட்டுருக்காரு அவருக்காகத்தான் கேக்கறேன். நான் கேட்டது பிடிக்கலைன்னா விட்டுடுங்க சார். என் கேள்விக்கு நீங்க பதிலே சொல்ல வேணாம்.
கண்களைத் துடைத்துக்கொண்ட குருநாதன், அதொண்ணுமில்லேப்பா. அந்த வீடு இல்லே இப்ப. அதான் எனக்கே அழுகை வந்திடுச்சு
என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்குப் போயிருந்த போது மயிலாப்பூரில் தான் பார்த்த அந்தப்பெரிய வீட்டின் நினைவு வர, செங்கல்வராயன் அவரைத் திகைப்புடன் பார்த்தான்.
"என்னப்பா