Aasai Mugam Maranthu Pochey!
By Punithan
()
About this ebook
இரயில் விபத்தினால் தன் நினைவுகளை இறந்த, பெண்ணின் நினைவுகளை மீட்க டாக்டர் பிரதீப் என்ன முயற்சிகள் செய்தார்? அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? திருமணம் எதனால் தடைபட்டது? மாற்றம் ஒன்றே மாறாதது! அந்த மாற்றத்தை தேடி நினைவுகளை மீட்க போராடும் அம்னீஷியா நோயாளியின் நினைவுகளை மீட்க நாமும் உதவுவோம்...
Read more from Punithan
Nenjukulley Vai Rating: 0 out of 5 stars0 ratingsAtho! Avan Thaan! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pengalin Sneham Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumanaval Rating: 0 out of 5 stars0 ratingsIvar, Avaralla! Rating: 0 out of 5 stars0 ratingsKollathaan Ninaikirean Rating: 0 out of 5 stars0 ratingsKutty Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsPerukku Oru Manaivi! Rating: 0 out of 5 stars0 ratingsKai Kotti Siriyaaro! Rating: 0 out of 5 stars0 ratings27 Adi + Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aasai Mugam Maranthu Pochey!
Related ebooks
Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Putham Puthu Malai! Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Adichuvadugal Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thaanda Kolai Rating: 0 out of 5 stars0 ratingsOoradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Kanavu Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKarpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Anicha Malar Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKadhal! Kadhalariya Aaval! Rating: 0 out of 5 stars0 ratingsAimbathu Latcham Dosai! Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsThenmozhi Rating: 0 out of 5 stars0 ratingsIlanthai Mara Ilaigalai Ennukiravan Rating: 0 out of 5 stars0 ratingsNigazhntha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Nera Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPashana Lingam Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Thai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5Kanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsKakkaigalin Iravu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Aasai Mugam Maranthu Pochey!
0 ratings0 reviews
Book preview
Aasai Mugam Maranthu Pochey! - Punithan
https://www.pustaka.co.in
ஆசை முகம் மறந்து போச்சே!
Aasai Mugam Maranthu Pochey!
Author:
புனிதன்
Punithan
For more books
https://www.pustaka.co.in/home/author/punithan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
எப்படி மறந்து போகும்?
அம்னீஷியா அம்னீஷியா என்று ஒரு விசித்திரமான வியாதி. பழைய நினைவுகள் முழுசாக மறந்துபோவது பகுதியாக மறந்துபோவது. இதை அடிப்படையாய் வைத்து அத்தனை மொழிகளிலும் எத்தனையோ திரைப்படங்கள், நாவல்கள் வந்துவிட்டன.
எனக்கென்னவோ இது ஏதோ ஒரு மாதிரியான மருத்துவக் கற்பனை என்றுதான்படுமே தவிர, இப்படியும் நடக்க முடியும் என்று நம்பத் தோன்றியதில்லை.
எனக்கு நெருக்கமான டாக்டர் நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். சத்தியமாய்ச் சொல்கிறேன், அவரிடம் ஒரு சந்தேக விளக்கம் பெறத்தான் கேட்டேனே தவிர, கதைக்காகக் கேட்கவில்லை.
என் நாவல்களில் ஈடுபாடு கொண்டவர் நண்பர். தான் சொல்வதை வைத்துக் கதை எழுதப் போகிறேன் என்று அவர் தீவிரமாய் நம்பிவிட்டார்.
அப்புறம் கேட்பானேன்? இந்த அம்னீஷியாபற்றி அவர் அமர்க்களமாய் வகுப்பு எடுத்தார் பாருங்கள். மற்றவர்களுக்குப் போராய் இருக்கலாம். ஆனால், எனக்கு? அத்தனையும் தீனி. உதாரணங்களுக்காக அவர் விவரித்த நிகழ்ச்சிகள் எல்லாமே எனக்கு உரித்த வாழைப்பழங்கள் ஆயின.
அவற்றை அசைப்போட்டுக் கொண்டிருந்தபோது ஜோலார்பேட்டை, பெங்களூர் இடையே நிகழ்ந்த ஒரு மெயில் விபத்து பற்றிப் பத்திரிகையில் விஸ்தாரமாய் வெளிவந்திருந்தது. அத்தோடு அந்த விபத்திலிருந்து மீண்டு, அந்த நேரத்தில் நிகழ்ந்தவற்றை நேரில் கண்டு அனுபவித்த என் உறவுக்காரர் ஒருவர் சாங்கோபாங்கமாய் விவரித்தார்.
டாக்டரையும் உறவுக்காரரையும் முடிச்சுப்போட்டும் கூடவே நானும் கொஞ்சம் சேர்ந்து கொண்டேன். ‘ஆசை முகம் மறந்து போச்சோ!’ உருவாயிற்று.
கதை முத்தாய்ப்பாய் ஒரு ‘ட்விஸ்ட்’ வந்து விழுந்த போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாவலைப் படித்து முடிக்கும் போது அந்தச் சந்தோஷம் உங்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
சூட்டோடு சூடாகத் தினமலர் கதை மலரில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட என் மதிப்புக்குரிய இனியவர் ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி.
21-4-95
சென்னை -10
அன்பு,
புனிதன்
1
அந்த அர்த்த ராத்திரி வேளையில் திடீரென்று இடி இறங்கினாற் போன்ற பேரொலி.
ரயில்வே லைனை ஒட்டிய அந்தப் பிராந்தியமே தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு துள்ளியெழுந்தது.
தொடர்ந்து பெரிய நரிப்படை ஊளையிடுகிறதா? ஆயிரம் ஆயிரம் காக்கைகள் அடிபட்டுக் கரைகின்றனவா? அந்தப் பேரிரைச்சலுக்கு நடுவே துண்டு துண்டான வேதனைக் குரல்கள் எழுப்பும் மனிதக் குரல்கள். அங்கே, அதோ ரயில் பாதையை ஒட்டித்தான்.
அங்கே இங்கே என்று புற்றீசல் கூட்டமாய் ஊரே திரண்டது. மங்கிய நிலவொளி. ரயில் பாதையை ஒட்டிய அழுமூஞ்சித் தெரு விளக்குகளின் சோகை வெளிச்சம்.
ரயில் பாதையைவிட்டு விலகி முறுக்கிச் சரிந்து ரயிலும் அதையொட்டி மூன்று நான்கு கம்பார்ட்மெண்டுகளும் சின்னா பின்னப்பட்டுச் சிதைந்துபோய்...
அந்தப் பெட்டிகளின் மூலத்தை இனம் காட்டும் பலகைகள் வெற்றுச் சுள்ளிகள் போல் இறைந்து கிடக்கிறதென்றால்...
உள்ளே இருந்த பயணிகளின் நிலை?
எந்தப் பாதுகாப்புக்காக இன்ஜினையொட்டிய இல்ல பெட்டியைப் பெண்ணினத்துக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்? அய்யோ, அத்தனை ஜீவன்களும் கூழாய்ப் போய்விட்டார்களோ?
ஒரே ரத்தக் களறி ரணக் களறி. குருதிப் பெருக்கு.
எப்படி நெருங்குவது? யாரைக் காப்பாற்றுவது? எவரை இழுத்துப் போடுவது, எவரை விட்டு விடுவது?
கூட்டம் ஸ்தம்பித்துக் குழம்பித் தட்டித்தடுமாறிச் செயல்பட வகை தெரியாமல் அலைமோதிக் கொண்டு நின்றது.
மதுரை ரயிலடிக்கு இன்னும் பத்துக் கிலோ தொலைவுதான். அங்கேயே நகரத்து வாடை.
உள்ளூர் வெள்ளையும் சள்ளையுமான பெரிய தலைகள் சில தலைமையேற்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்தானே?
அதோ மேல் பக்கமாய் அலங்கோல நிலையில் மயங்கி விழுந்து கிடப்பவர்களைக் காப்பாற்றும் சாக்கில் கைக்குக் கிடைத்தவற்றை உருவும் கேடி ரங்கன்!
நீங்கள்ளாம் மனுஷங்களா? பாவிகளா! அரை ஸ்மரணையில், உடைமைகளைக் காப்பாற்றக் குரல் கொடுத்து அலறும் சொத்துக்காரர்கள் இன்றைக்குச் சொத்தைகள்!
இத்தனையிலும் மனிதாபிமான நலம் விரும்பிகளும் இல்லாமல் இல்லை.
‘மதுரை ஸ்டேஷனுக்கு ஃபோன் போடுங்கள்!’
‘அவங்களும் போலீஸைத்தான் கூப்பிடுவாங்க. நீங்களே அவங்களைக் கூப்பிடுங்க’
‘எம்.எல்.ஏ. நேத்துதான் வந்தார். அவரைக் கூப்பிட்டுச் சொல்லுங்கய்யா...’
‘ஐயா, கொஞ்சம் தண்ணி கொண்டாங்க. அங்கே பார், ஒரு பெரியவர் உயிர்த் தண்ணிக்குத் தவிக்கிறார்...’
தலைக்குத் தலை கட்டளைகள். உத்தரவுகளைச் செயல்படுத்தும் தொண்டர்கள் சொல்பம்.
முழுசாய்த் தெரிகிறார் என்று இழுத்துப் போட்ட ஒருவர் துண்டித்த காலோடு வெளிப்பட்ட கோரம்.
‘ஐயோ மகளே, கண்ணாளப் பொண்ணா வந்தவ இப்படி அடையாளம் கண்டுக்க முடியாமப் பூட்டியே...’
‘அம்மா... அம்மா...’ என்று தாயைத் தேடி அலையும் மழலைச் செல்வத்தின் நெஞ்சுருக்கும் காட்சி.
சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே புரிந்து கொள்ள நிராணியற்ற நிலையில் நடுவிலே குத்துக்கல்லாய் உட்கார்ந்திருக்கும் தலை நரைத்த முதியவர்! கொடுமை. எத்தனை பேரோடு வந்தாரோ! யார் யாரைப் பறிகொடுத்தாரோ!
உள்ளும் புறமுமாய் ஏறி இறங்கி முடிந்தவரை கரை சேர்க்கப் பார்த்தவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் பூசிக் கொண்டிருந்தார்கள்.
அதோ, காவல்படை ஜீப்பு, லாரிகள். தடதடவென்று படையெடுத்து வந்துவிட்டார்கள்!
அரசு ஆம்புலன்ஸ்கள், உதவிக்கு வெள்ளாடைச் சிப்பந்திகள், டாக்டர்கள்!
ஃப்ளட் லைட்டுகள் வெளிச்சம் பீச்சுகின்றன,
சேதாரப்பட்ட ரயில் பெட்டிகளில் அதிகப்படியாய்ச் சீரழிந்து கிடந்தது பெண்கள் பெட்டிதான்.
டாய்லெட்டை ஒட்டியிருந்த ஸீட்களில் இருந்தவர்கள் உருத்தெரியாமல் போயிருந்தார்கள்.
மொத்தம் ஒன்பது பேர் சீரியஸ் கண்டிஷனில் உடனடியாய்ச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள்.
டாக்டர் படையில் டி.எம். நியூராலஜியைத் தொட்ட நிலையில் இருந்த பிரதீப்புக்கு மட்டும்தான் ‘ஃபோகஸ்’ செய்யவேண்டியிருக்கிறது. காரணம் அவன்தான் கதாநாயகன்.
ஆஸ்பத்திரி சீஃப் நிர்வாகப் பொறுப்புத் தெரிந்த அனுபவசாலி. அவர் டாக்டர்களையும் ஒவ்வொரு பகுதியாய்ப் பிரித்து, அது சம்பந்தப்பட்ட எல்லாப் பொறுப்புக்களையும் அவரவரிடம் ஒப்படைத்திருந்தார்.
அதில் பிரதீப்புக்கும் அவன் வகுப்புத் தோழர்கள் இருவருக்குமாய் ஒதுக்கப்பட்டவர்கள் அந்த ஒன்பது பேர்.
மற்றப் பகுதிகளில் திரண்டவர்களையும் சேர்த்துக் கொணர்ந்து மருத்துவ விடுதியை நிரப்பியிருந்தன ஆம்புலன்ஸ் வண்டிகள்.
சமூகசேவைச் சங்கங்கள் மருத்துவ விடுதியின் மனித நேய விண்ணப்பங்களுக்குச் செவி சாய்த்து, நீண்ட வரிசையில் ரத்த தான இறக்குமதி செய்து கொண்டிருந்தன.
பிரதீப் அண்கோவின் பராமரிப்பில் விடப்பட்ட ஒன்பது பேரில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு எட்டுப் பேரை விழி திறக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஒன்பதாவது பெண்ணுக்கு மண்டையிலே பலத்த அடி, மிகக் கவனமாய் அவளுக்குக் கட்டுப்போட்டு விட்டான் பிரதீப்.
அவளுக்கு இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் எல்லாம் அபாய கட்டத்தைத் தாண்டி நம்பிக்கையூட்டுவதாய்த் தான் இருந்தது.
ரத்தப் பரிசோதனையில் ‘பி-பாசிடிவ்’ அவளுடையது. தேடிப் பிடித்துக் கொணர்ந்து அதே க்ரூப் ரத்தம் செலுத்த ஏற்பாடு செய்தான். இதோ அவள் விழி மலரப் போகிறாள் என்ற நம்பிக்கையில் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கள்ளம் கபடு இல்லாத குழந்தை முகம் அது. கொழுவிய கன்னம். நாணேற்றியது போன்ற புருவ வளைவு. அத்தனையும் அளவு பார்த்து வடித்துவைத்தாற் போன்ற அங்க அமைப்பு.
இவள் தனியாக வந்தாளா, வேறு துணையோடு வந்தாளா? எங்கிருந்து வந்தாள், எங்கே போகிறாள்? கல்லூரி மாணவியா, உத்தியோகம் பார்ப்பவளா? வீட்டுச் சமையல் கட்டுக்குள் அடங்கியிருப்பவளா? இல்லை...
அவனுடைய எண்ணப் போக்கு அவனுக்கே அவமானமாய் இருந்தது. அடிபட்ட நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கவேண்டிய டாக்டர் அவன். அவளுடைய உடல் நிலையைக் கண்காணிப்பதை விட்டுவிட்டு வேறு எதெதையோ எதற்காக ஆய்வு செய்கிறான்?
அவள் உடலில் மண்டையைத் தவிர வேறு எங்கேனும் ஏதேனும் காயம் பட்டிருக்கிறதா? அவளை ஒருமுறை ஏற இறங்க நோட்டம் விட்டான். அடக்கமான அலங்காரமாய், காட்டன் சில்க் புடவை உடம்பில் ஒட்டித் தவழ்ந்திருந்தது. உடம்பிலேயே துணி வைத்துத் தைத்தாற்போன்ற சோளி. அந்தப் புடவை நிறத்துக்குப் பாந்தமாக நேவி ப்ளூவில் ஒட்டிக்கொண்டிருந்தது...
ச்சே, மறுபடியும் ஏன் இந்த அதிகப்படி ரசனை?
மார்பின் குறுக்காக ஓடிய மெல்லிய கயிற்றுப் பட்டையின் முடிவில் ஒரு பர்ஸ் போன்ற கைப்பை. ஒருவிதக் குறுகுறுப்போடு அதை ஏந்திப் பார்த்தான். கே.கே. என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அண்மையில் ஒருமுறை மதுரையில் புதிதாக சூப்பர் ப்ளாஸா திறந்திருந்த சமயம். போத்தனூரில் இருந்து வந்த அவன் மாமா அத்தையுடன், ப்ரியாவுடன். அவளுக்கு புதுசுகளின் மேல் எப்போதுமே ஒரு மயக்கம். அவள் தேடிப் பிடித்து இதே மாதிரி ஒரு கைப்பையை வாங்கினாள். கடைக்காரர் அவள் இனிஷியலையும், அவள் பெயரையும் கேட்டார். புரிந்துகொண்டு அவளும் ப்ரியா சாம்பசிவம் என்றதும் அதே இடத்தில் இதே மாதிரிதான் பி.எஸ். என்ற எழுத்தைப் பொறித்துக் கொடுத்தார். பெரிய வித்தை இல்லை. பித்தளை எழுத்துக்களில் பின்புறம் இரண்டு கொக்கி நீட்டிக் கொண்டிருக்கிறது. அதைச் செருகி, கொக்கியை மடக்கிவிட்டால் தீர்ந்தது. அவள் பெயரும், அப்பா பெயரும் சேர்ந்து பி.எஸ்.
இங்கே கே.கே. இவள் பெயரும், இவள் அப்பா பெயரும். காஞ்சனா? ஊகூம் கொஞ்சம் மாடர்னாய் இருந்தால் தேவலை. காமினி... காதம் பரி.... வேண்டாம்!
என்ன டாக்டர், எங்க வேலையெல்லாம் நீங்களே பார்த்துடுவீங்க போலிருக்கு? என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
இன்ஸ்பெக்டர்! சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்.
பிரதீப் திரும்பியதும், காவல் அதிகாரியும் ஊடுருவிப் பார்த்தார். பிரதீப்புக்கும் அதே நிலைதான். இருவரும் சற்று நேரம் வேறு தொலைவில் பயணிப்பவர்களைப் போல் மவுனித்திருந்தனர். சொல்லிவைத்தாற் போல் இருவரும் ஒருவர் நெஞ்சுக்கு ஒருவர் குறிவைத்து விரல் நீட்ட, பிரதீப் விழிகளில் ஒளி சிந்தி, யூ நீ ரசூல் இல்லே?
என்றான்.
இல்லையா? இருக்கிறேண்டா இடியட். பிரதீப், உள்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு,
பாய்ந்து இறுக்கிக் கொண்டான் காவல் அதிகாரி ரசூல்.
இங்கேயா இருக்கே நீ?
என்று திணறினான் பிரதீப்.
ரயில்வே போலீஸ்ல இருக்கேன். ரெண்டு பேரும் மதுரையிலேயே இருக்கோம். சந்திச்சிக்கலை. என்ன அநியாயம் பார்த்தியா?
இந்த, ஆக்சிடெண்ட் எத்தனையோ பேரை யார் யார்கிட்டே இருந்தோ பிரிச்சிருக்கு. நம்மைச் சேர்த்து உச்சிட்டது பார்!
பிரதீப்பும், ரசூலும் சேலம் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தவர்கள். கல்லூரி நாட்களில் ரசூல் மகா முரடன் என்று பேர். அனாவசிய அதிகார ஆர்ப்பாட்டம் செய்யும் ஹிஸ்டரி புரொபசரைக் கண்டால் ஆகாது. அவரை அவன் திக்குமுக்காட வைத்ததை இப்போது நினைத்துக் கொண்டு சிரித்தான் அவன்.
என்னடா, என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கா உனக்கு? உள்ள தள்ளிப்பிடுவேன் படுவா
உருட்டி விழித்தான் ரசூல்.
இப்ப அந்த ஹிஸ்டரி புரொபசர் மாட்டினா நிஜம்மாவே உள்ள தள்ளினாலும் தள்ளுவே! டேய், காலேஜிலே உன் ஷூவிலே கொள்ளுப்பட்டாசைப் பட்டையா ஒட்டிட்டு வந்து அவர் பாடம் நடத்தறப்ப ஷூவைத் தேய்ச்சு... அது படபடன்னு வெடிக்கறப்ப அவர் திருதிருன்னு முழிக்க... நினைச்சிக்கிட்டேன்
சூழ்நிலை! சிரித்து மகிழ வேண்டிய இடமா இது! உயிருக்குப் போராடும் உடல்களின் அணிவகுப்புக்கு நடுவிலே உல்லாசமா? சிரிப்பா? எதிர்பாராத சந்திப்பின் குதூகலத்தில் ஒருகணம் சுற்றுப்புறத்தையே மறந்துவிட்ட தவறுக்காக ஒருவரிடம் ஒருவர் பார்வையாலேயே மன்னிப்புக் கேட்டுக்கொண்டு யதார்த்தத்துக்கு இறங்கினார்கள்.
நான் வர்றப்ப அந்தப் பேஷண்ட்கிட்ட என்னத்தையோ எடுத்து அப்படி வெறிச்சுப் பார்த்துட்டிருந்தியே, என்னது அது?
என்று கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டான் ரசூல்.
பிரதீப் திரும்பிச் சென்று அந்தப் பர்ஸ் கைப்பையை எடுத்து இனிஷியல் எழுத்துக்களைக் காட்டினான்.
இந்தப் பேஷண்ட்டைத் தவிர மற்ற எல்லார்கிட்டயும் உன்னால ஸ்டேட்மெண்ட் வாங்கிட முடியும். இன்னும் கண்ணைத் திறக்காம இருக்கிறது இதுமட்டும்தான். அதான் இதைப் பத்தி ஏதாவது தெரிஞ்சிக்க முடியுமான்னு பார்த்தேன்!
லெட் அஸ்ட்ரை,
அந்தக் கைப்பையைத் திறந்து பார்த்தான் ரசூல். உள்ளே இருப்பதைக் கொட்டினான்.
நூற்றுக்கும் குறைச்சலான நோட்டுக்களும் சில்லறையும். சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு டிக்கெட், ரயிலில் ஏறி, பிறகு வாங்கிய ரிஸர்வேஷன் கூப்பன். ஹேர்பின்கள் சில. லிப்ஸ்டிக் குமிழ் ஒன்று. சின்னஞ்சிறிய பவுடர் டப்பாவுக்குள் அடக்கமான சின்ன பஃப், ஸ்டிக்கர் பொட்டு அட்டை ஒன்று. அதோடு சரி’ புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள வேறு துப்புக் கிடைக்கவில்லை.
அந்த எழுத்துக்களை உன்னிப்பாய்க் கவனித்தவாறு மோவாய்த் தடவலில் யோசனையை முழுக விட்டான் ரசூல். முகத்தில் ஒரு திடீர் பளிச்.
வெயிட். அன்க்ளெய்ம்டு ப்ராப்பர்ட்டியெல்லாம் நம்ம கஸ்டடியிலதான் இருக்கு. அதிலே இந்த எழுத்தும் போட்ட ஏதாவது சூட்கேஸ் இருக்குமா பார்க்கலாம். பை த பை, பேஷண்ட் நிலைமை என்ன?
என்று விசாரித்தான்.
மண்டையிலே அடி, சொல்றதுக்கில்லை. கண் முழிச்சாலும்... ரசூல், எதுக்கும் நீ சொன்னமாதிரிச் செக் பண்ணிப் பார்த்து வேற ஏதாவது தடயம் இருக்கா பாரேன்!
பார்ப்பதாய் வாக்களித்துவிட்டு ரசூல் புறப்பட்டுச் சென்றான்.
ட்ரிப் இறங்கிக்கொண்டிருந்தது. எக்ஸ்பர்ட் டாக்டர்கள் வந்து சோதித்தார்கள்.
ஸ்கல்லிலே பெரிசா டாமேஜ் ஏதும் தெரியலை டாக்டர். மியர் ஷாக்லே ஸ்வூனாகியிருக்கும்...
தயங்கியவாறு கொக்கி போட்டான்.
டாக்டர் குணசேகரம் சர்ஜிகல் எக்ஸ்பர்ட். எகந்தாளமாய் அவனைப் பார்த்தார். தலைக் கட்டை அவிழ்க்கச் சொல்லி ஒருமுறை பரிசீலித்தார். பழையபடி கட்டி விடச் சொல்லி அவனிடம் சைகைகாட்டிவிட்டு நகர்ந்தார்.
அவர் எதுவுமே சொல்லாதது அவனுக்கு ஒரு படபடப்பை உற்பத்தி செய்தது.
பெரிய டாக்டர்கள் விசிட் முடிவதற்காகவே காத்திருந்தவர்கள் போல் அவனுடைய தோழர்கள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு வயிற்றுப்பாட்டையும் கவனித்துக்கொள்ள அவனையும் இழுத்தார்கள்.
நீங்க வந்தப்புறம் போறேன்,
என்றான் அவன்.
கட்டிலில் பதுமையாய்க் கிடந்த அந்தக் கே.கேயையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபோது ஒரு நமுட்டுச் சிரிப்பு அவர்கள் இதழ்களில் தொற்றிக்கொண்டது.
ஓ.கே. அது உன் பேஷண்ட்டாவே இருக்கட்டும். நாங்கவரோம்பா!
குறும்புக்கார ரவி மற்றவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.
2
அழுகைக் குரலும் ஆனந்தக் கூச்சலுமாய் மருத்துவ விடுதியே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
ஜெனரல் வார்டின் சாதாரண நோயாளிகளுக்கு வேறு வார்டுகளில் வராந்தாக்களில் தற்காலிக இடமாற்றம் நல்கிவிட்டு, அந்தப் பெரிய ஹாலை ரயில் விபத்துப் பேஷண்ட்டுகளுக்கு ஒதுக்கி இருந்தார்கள். விலாசம் தெரிந்த பேஷண்ட்டுகளுக்குப் போலீஸார் அனுப்பிய அவசரத் தந்திகேட்டு பெருப்பாலான உறவுகாரர்கள் வந்து மொய்த்த கலகலப்பு, மருத்துவ விடுதியை இரண்டு படுத்திக் கொண்டிருந்தது.
மண்டை அடிபட்டவர்கள் நியூராலஜி வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்கள். உள்ளபடி அந்தக் கே.கேயைப் பிரதீப்புக்கு ஒதுக்கியிருந்தார்கள். கிட்டத்தட்ட இருபத்து நாலுமணி நேரம் ஆப்ஸர்வேஷனிலே வைத்துக்கொண்டு இருந்தாயிற்று. சொந்த வேலைகளைக் கவனிக்க ஒருசில மணித் துளிகளைச் செலவிடும் போதும் அந்தக் குழந்தை முகக் கே.கேதான் அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். இந்த அளவுக்கு அவனை நிலைகுலையச் செய்த ஜீவனை அவன்