Chinna Kamala
()
About this ebook
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Read more from Ra. Ki. Rangarajan
Ore Vazhi Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Raathiri Varum Rating: 5 out of 5 stars5/5Thirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Eppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Twist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsPadagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5Jennifer Rating: 4 out of 5 stars4/5Ithu Ungalukkaga! Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Aavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mottu Rating: 0 out of 5 stars0 ratingsKai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Chinna Kamala
Related ebooks
Aahayathil Aarambam Rating: 4 out of 5 stars4/5Mattroru Naal Rating: 4 out of 5 stars4/5Karpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Kaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsNadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Uyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Kichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsKonal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsAugust Athirchi Rating: 4 out of 5 stars4/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Kalachakram Rating: 5 out of 5 stars5/5Pagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Irakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Athu Vanthu Nirkirathu..! Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ingey! Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsShshsh… Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Kai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Chinna Kamala
0 ratings0 reviews
Book preview
Chinna Kamala - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
சின்னக் கமலா
Chinna Kamala
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
நாலு கதவுகளில் ஒன்று மட்டும் திறந்து கிடந்தது. அதன் விளிம்பில் ஒரு சிட்டுக்குருவி உட்கார்ந்து ஆனந்தமாய்ச் சளசளத்தது.
அதுவும் ஓர் அழகுதான். அதுவும் ஒரு கவிதைதான். அதுவும் ஒரு சிற்பம்தான்.
புல்நுனிகளில் மினுமினுக்கும் விடிகாலைப் பனித் துளிகள், புகழ்பெற்ற சிற்பக் கலைஞரான பிரபுவின் பைஜாமா ஓரங்களை ஈரப்படுத்திக் கொண்டிருந்தன. அவர் கண நேரம் அப்படியே நின்று, ஷெட்டிலிருந்த 48 மாடல் போர்டு காரின் திறந்த கதவை ரசித்தார். சிற்பமாக வடிப்பதற்கேற்ற காட்சியல்லவா அது! கலைப் படைப்புக்குப் பழக்கப்பட்ட அவர் கைகள் துறுதுறுத்தன.
பிரபு ஒரு பெருமூச்சுடன் அந்தக் கதவைச் சாத்தினார். சிட்டுக்குருவி ஓட்டமாய் ஓடிவிட்டது! பனியோ அல்லது ராத்திரி போட்ட சிறு தூறலோ, காரின் ஸீட்டுக்கள் லேசாய் நனைந்திருந்தன. டிரைவர் இருந்திருந்தால் கதவுகளை நன்றாய்ச் சாத்தி, ஷெட்டையும் பூட்டி, சாவியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போயிருப்பான்.
அவனைப் போகச் சொல்லியாயிற்று. கணக்குத் தீர்த்து இரண்டு நாளாகிறது. இனிமேல் நீங்களே ஓட்டப் போகிறீர்களா சார்?
என்று திகைப்புடன் கேட்டான், வேலையிலிருந்து நிற்கும்படி சொன்னபோது. திகைப்பு, திகைப்பு. பல பேருக்குத் திகைப்புத்தான். ஷெட்டின் கதவுகளைச் சாத்தி விட்டு, முனு
என்று கூப்பிட வாயெடுத்தார். தோட்டக்காரனுக்கும் கணக்குத் தீர்த்தாயிற்று என்பது நினைவு வந்தவராகத் தாமே பூட்டைத் தேடியெடுத்துப் பூட்டினார். சாவியை ஜிப்பா பையில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
எழும்பூர் பாந்தியன் ரோடு இன்னும் முழுதும் விழித்துக் கொள்ளவில்லை. விழித்துக் கொண்டால் கூட அதன் ஓசை பிரபுவின் பழைய பங்களாக் காம்பௌண்டைத் தாண்டி உள்ளே வர இன்னும் நேரம் பிடிக்கும். முதல் பஸ்ஸோ இரண்டாவது பஸ்ஸோ இப்போதுதான் கடக்க ஆரம்பித்திருக்கிறது. டங்கென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் அடித்தான். ரயில்வே ஸ்டேஷனுக்கு, போலும்.
பங்களாவின் படிக்கட்டில் நின்றவர், இடது பக்கம் காடிகானாபோல் பரந்து போகும் தகரக் கொட்டகையைப் பார்த்தார். அது அவரது ஸ்டூடியோ சிற்பக்கலைக் கூடம். சிற்பத்தின் முதல் கட்டமான கம்பிகள். முண்டு முண்டான மட்டிக் கட்டிகள்... கலைக் கூடத்துக்குள் அரை குறையாய் நின்றுவிட்ட சிற்பங்கள் எத்தனையோ?
யாரோ வெராந்தா விளக்கைப் போட்டார்கள். சமையற்காரி பட்டம்மா, பிளாஸ்டிக் கூடையில் பால் புட்டிகளையும் கூப்பன் அட்டையையும் வைத்துக் கொண்டு கண்ணைத் தேய்த்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நடுங்கினாள்.
ஈசுவரி எழுந்துவிட்டாளா?
என்று பிரபு கேட்டார்.
இன்னும் இல்லை. அயர்ந்து தூங்குகிறார்கள். நீங்களும் எழுப்ப வேண்டாம். நான் வந்து காப்பி போட்டுவிட்டு எழுப்புகிறேன்
என்றாள் பட்டம்மா.
பிரபு தலையசைத்து விட்டு, அவள் புறப்பட்டுச் செல்வதையே பார்த்தவாறு நின்றிருந்தார். பால்புட்டிகள் ஒன்றோடொன்று இடித்துக் களக் களக்கென்று உரையாடும் ஓசை தேய்ந்தது. கிழவி கேட்டைச் சாத்திக் கொண்டு செல்வது தெரிந்தது. இன்னொரு சமயமாயிருந்தால், 'பாலுக்குப் புறப்பட்டவள்' என்ற தலைப்பின் கீழ், தளர்ந்து நிற்கும் கிழவியொருத்தியின் சிற்பம்தான் அவர் எண்ணத்தில் எழுந்திருக்கும். இப்போதோ, இவளையும் வேலையிலிருந்து நிறுத்தினால் முப்பது ரூபாயும் சாப்பாட்டுச் செலவும் மிச்சமாகுமே என்ற சிந்தனைதான் ஏற்பட்டது.
யாரோ ஆட்கள் திமுதிமுவென்று நுழைந்த மாதிரி தோட்டத்தில் பலபலவென்று வெளிச்சம் பரவியது. ஞாயிற்றின் கதிர்கள் பனிப் பொடிகளுடன் உறவாடித் தோட்டம் பூராவிலும் வர்ண ஜாலத்தை எழுப்பின.
பிரவு வெராந்தா விளக்கை அணைத்தார். தேங்காய்ப்பூத் துவாலையை மாலை போல் தோளில் போட்டுக்கொண்டு, ஸ்லிப்பரை மாட்டிக்கொண்டு குளியலறைக்குப் புறப்பட்டார். இரண்டடி வைத்ததும் அந்த ஸ்லிப்பர் பொத்பொத்தென்று ஓசைப்படுத்துவது தெரிந்தது. ஈசுவரி எழுந்து கொண்டு விடுவாள். வேண்டாம். கழற்றிப் போட்டுவிட்டு நடந்தார்.
குளியல் முதலியவற்றை முடித்துக் கொண்டு திரும்பிய போது, ஈசுவரியின் அறையில் பேச்சுக் குரல் கேட்டது. டாக்டர் சீனிவாசன் தான். டிஸ்பென்ஸரிக்குப் போகும் வழியில் இங்கே ஒரு குரல் கொடுக்காமல் செல்ல அவருக்கு மனம் வருவதில்லை.
நான் நன்றாகத்தான் தூங்கினேன். அவரைத் தூங்கச் சொல்லுங்கள். டாக்டர்,
என்று புகார் கூறிக் கொண்டிருந்தாள் ஈசுவரி. நான் சரியாய்த் தூங்குகிறேனோ இல்லையா என்று அரைமணிக்கொரு தரம் ராத்திரி பூரா வந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறார்.
ஈரத்துண்டைப் பிரித்து மார்பைப் போர்த்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார் பிரபு. நான் அரை மணிக்கொரு தரம் வந்து பார்ப்பது அவளுக்கு எப்படித் தெரியுமாம்? அதைக் கேளுங்கள். டாக்டர்!
டாக்டர் சீனிவாசன் சிரித்த வண்ணம், ஷி இஸ் கொய்ட் ஆல்ரைட்,
என்று தமது தோல் பையின் வார்களைச் செருகிக் கொண்டு புறப்பட்டவர், என்ன, யோசித்தீர்களா?
என்று ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்ததும் கேட்டார்.
ஸ்விட்ஜர்லந்து தானே?
ஆமாம். அதிகம் வேண்டாம். நாலைந்து மாதம் தங்கிவிட்டு வரட்டும். போதும்.
அதுதான் யோசனை செய்து கொண்டிருக்கிறேன்,
என்றார் பிரபு.
யோசனை என்ன? ஃபாரின் எக்ஸ்சேஞ்ஜ் பிரச்சினையா? உண்மையான மெடிகல் கேஸ்களுக்குக் கட்டாயம் கிடைக்கும். அதுவும் நீங்கள் யார், சாமானியப் பட்டவரா? இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர்களில் ஒருவரல்லவா? உங்களுக்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பார்கள் அன்னியச் செலாவணி?
பாரிஸில் இரண்டு வருஷம் முன்பு ஒரு லெக்சர் டூருக்காகக் கூப்பிட்டிருந்தார்கள். சௌகரியமில்லை என்று சொல்லி விட்டேன் அப்போது. இப்போது வரத் தயார் என்று எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்.
சீக்கிரமாகவே பாருங்கள்
புர்ரென்று ஸ்கூட்டர் போய்விட்டது.
வெராந்தாவில் குறுக்கும் நெடுக்கும் உலவிக் கொண்டிருந்த பிரபு, படபடவென்று அடுத்த சப்தத்தைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.
இன்னொரு பெருமூச்சு வெளிப்பட்டது.
ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து இறங்கிய மைக்கேல் ஆசீர்வாதம், குட்மார்னிங்
என்று முகம் நிறைந்த சிரிப்புடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளை வெராந்தாவில் இறக்கினார். வந்தால் கொண்டு வந்து காட்டச் சொன்னீர்களே, நேற்றுத்தான் கல்கத்தாவிலிருந்து வந்தது.
பெட்டிகளைப் பிரிக்கு முன்பே ஊகித்து விட்டார் பிரபு. மேனாட்டுப் புத்தகக் கம்பெனியொன்றின் பிரதிநிதியான மைக்கேல் ஆசீர்வாதம், விலையுயர்ந்த புத்தக ‘செட்'டுகளைத் தவணை முறையில் விற்பனை செய்யும் ஏஜெண்ட். பளபளவென்று அட்டையிட்டு, அதியற்புதமான படங்களும் கட்டுரைகளும் நிறைந்திருக்கும் புத்தகங்களை அவர் பிரித்துக் காட்டக் காட்ட, பிரபுவுக்கு உள்ளத்தில் ஏதோ ஒரு சங்கடம் ஏற்படலாயிற்று.
ஜியார்ஜோ வாஸரி கண்ட கலையுலகம்
- ப்ளாரென்ஸ் கலைக்கழக வெளியீடு.
பிரபு பல காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செட்.
மூவாயிரத்தைன்னூறு ரூபாய் ஆகிறது. நீங்கள் கையெழுத்துப் போட வேண்டிய பாரங்களெல்லாம் பிற்பகலுக்கு மேல் கொண்டு வரட்டுமா?
தீர்மானமாகத் தலையைத் திருப்பிக் கொண்டார் பிரபு. பிறகு பார்த்துக் கொள்ளலாம், மிஸ்டர் ஆசீர்வாதம்.
திகைப்புப் படர்ந்தது அந்த விற்பனை ஏஜெண்டின் முகத்தில். ஆயிரம் ரூபாய் கூடிவிட்டதால் சொல்கிறீர்களா? நான் முன்பு உங்களிடம் விலை சொன்னதற்கு பிறகு டிவேல்யுவேஷன் வந்து விட்டதே.
அதற்கில்லை. இப்போது நிலைமை சரியில்லை.
மைக்கேல் ஆசீர்வாதம் புத்தகங்களை அட்டைப் பெட்டிக்குள் வைத்து மூட்டை கட்டினார். ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் வைத்தார். காட் பிலெஸ் யூ
என்று சொல்லிவிட்டு, கையடக்கப் பதிப்பான ஒரு பைபிள் புத்தகத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் இது மட்டும் தவற மாட்டார்.
அம்மா கூப்பிடுகிறார்கள்,
என்று சமையற்காரி வந்து தெரிவித்தாள்.
தலைவாரிப் பொட்டிட்டுக் கொண்டு புடவையும் மாற்றிக் கொண்டிருந்தாள் ஈசுவரி. படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்திருந்தவள், கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையைக் கீழே வைத்துவிட்டு, 'எனக்காக நீங்கள் இப்படியெல்லாம் தியாகம் செய்வது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை' என்றாள்.
என்ன செய்துவிட்டேன்?
என்று பிரபு சிரித்தார்.
எத்தனை தடவை அவர்களுக்குப் போன் செய்து துளைத்துக் கொண்டிருந்தீர்கள், வந்துவிட்டதா வந்து விட்டதா என்று? இப்போது வாசற்படியில் கொண்டு வந்து இறக்கியதைத் திருப்பியனுப்பி விட்டீர்களே?
பிரபு கொஞ்சமும் ஒளிக்காமல், உன்னை ஸ்விட்ஜர்லந்துக்கு அழைத்துச் செல்வது ஒன்றுதான் தற்போதைக்கு என் கவலை,
என்றார்.
போதும். உங்கள் கவலையைக் கண்டு உலகத்தார் சிரிக்கிறார்கள்,
என்ற ஈசுவரி, 'இலஸ்ட்ரேடட் வீக்லி'யின் புத்தகங்களைப் புரட்டி, ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, படித்துப் பாருங்கள்,
என்றாள்.
அவர் மேலோடுதான் பார்த்தார். இன்றைய இந்தியச் சிற்பிகளைப் பற்றிய கட்டுரை அது. ஈசுவரியின் மெலிந்த விரலை நகர்த்திவிட்டு அந்தப் பாராவைப் படித்தார்.
... மனைவி நோய்ப் படுக்கையில் இருந்த பிறகு டாக்டர் பிரபு செயலற்றுப் போய்விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் பல வருடங்களுக்கு அவரிடம் புதுமையாக எதிர்பார்க்க முடியாது என்று தோன்றுகிறது...
கிடக்கிறார்கள் மடையர்கள்,
என்று அனுதாபத்துடன் சொல்லிவிட்டு, பத்திரிகையைப் பட்டென்று மூடிக் கீழே போட்டார் பிரபு. நான் காத்துக் கொண்டிருக்கிறேன் - ஒரு தெய்வக் குரலுக்காக. அவன் வந்ததும் -
நான் இருக்கும் வரையில் அது முடியாது.
அறைவேன்,
என்று கையை ஓங்கினார் பிரபு.
மெல்லத் தட்டுங்கள், போதும். இந்த ஈசுவரிக்கு விடுதலை கிடைத்து விடும்,
என்று சிரித்தாள் அவர் மனைவி.
பதினொரு மணி இருக்கும்.
ஈசுவரி அவ்வளவு சொன்னதற்காகவாவது ஸ்டூடியோவைத் திறந்து எட்டிப் பார்க்கலாமா? சாவிக் கொத்துடன் எழுந்தவர், டெலிபோன் அடிப்பதைக் கேட்டுத் திரும்ப அமர்ந்தார்.
மிஸ்டர் பிரபு இருக்கிறாரா?
என்று கேட்டது ஒரு பெண்ணின் குரல்.
நான்தான் பேசுகிறேன்.
ஒரு நிமிடம், செக்ரடேரியட்டிலிருந்து பேசுகிறோம், சார். டெபுடி காரியதரிசி உங்களுடன் பேச விரும்புகிறார்.
டக்டக்கென்று விசைகள் தட்டப்படும் ஓசைகள் தொடர்ந்தன. ஹலோ, மிஸ்டர் பிரபுவா? நமஸ்காரம், சார். நான் மேனன் பேசுகிறேன்.
வணக்கம்.
மேனன்? குள்ளமாய், சிவப்பாய், தங்கப் பல்லுடன் இருப்பாரே? முன்பு காமர்ஸ் இலாகாவில்...
டெபுடி காரியதரிசி கேட்டார்; உங்களோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது, சார். எப்போது சௌகரியப்படும் என்று சொன்னால் கார் அனுப்புகிறேன்.
என்ன விஷயம், மிஸ்டர் மேனன்?
நேரில் சொல்கிறேனே?
சாயந்தரம் ஐந்து மணி வாக்கில் வருகிறேன்.
நன்றி, சார். கார் அனுப்புகிறேன்.
பரவாயில்லை. என் வண்டியிலேயே வந்துவிடுகிறேன்,
என்று சொல்லிவிட்டு டெலிபோனை வைத்தார் பிரபு.
திடீரென்று அவர் உள்ளமும் உடலும் களைத்துப் போன மாதிரி இருந்தது. என்ன விஷயமாயிருக்கும் மேனன் அழைப்பு? தினந்தோறும் நூற்றெட்டுக் கமிட்டிகள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற வேலையற்ற நபர்களை அதிலே பிடித்துப் போடுவது வழக்கமாகிவிட்டது...
தேன்கூடு போல் சுறுசுறுவென்று இருந்தது செக்ரடேரியட். அலுவலகம் நேரம் முடிவடையும் சமயமாதலால் கார்களும் ஸ்கூட்டர்களும் சைக்கிள்களும் பல்வேறு ஓசைகளுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தன.
பியூன், பிறகு பி. ஏ., பிறகு உதவியாளர் ஆகியோர்களின் வழியாக மேனனின் அறையை அடைந்தார் பிரபு.
புகைத்துக் கொண்டிருந்த சுருட்டைச் சட்டென்று கிண்ணத்தின் மீது வைத்து விட்டு, வாருங்கள் சார், வாருங்கள்,
என்று கைகுவித்து, கைகுலுக்கி வரவேற்றார் பிரதம காரியதரிசி.
இருவருக்கும் அறிமுகமான சில பொது நண்பர்களைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசினதும் மேனன் மேஜையினடியிலிருந்து ஒரு பைலை எடுத்தார். பாருங்கள்,
என்றார்.
‘தொழில் மேதைக்குக் கடற்கரையில் நினைவுச் சின்னம்' என்று தலைப்பிட்ட செய்தியொன்று சிவப்புப் பென்ஸிலால் கட்டம் கட்டப்பட்டிருந்தது.
சட்டமன்றம் கேள்வி நேரத்தில் இன்று... உறுப்பினர் திரு... கேட்டதாவது:
பிரபல தொழில் மேதை காலஞ்சென்ற அப்பாத்துரைக்குச் சென்னை கடற்கரையில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்புவதாகத் தீர்மானிக்கப் பட்டு, வெறும் அஸ்திவாரக் கல்லுடனேயே நிற்கிறதே. அதை அரசாங்கம் ஓர் அவமானமாகக் கருதவில்லையா?
முதலமைச்சர்: மதிப்புக்குரிய உறுப்பினர் இதே கேள்வியை முந்தைய அரசாங்கத்திடம் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
இன்னோர் உறுப்பினரான திரு... குறுக்கிட்டு, பழைய விஷயங்களை ஆராயாமல், சின்னத்தைப் பூர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபடக் கூடாதா?
என்று கேட்டதற்கு, அரசாங்கம் அவ்விஷயத்தை யோசனை செய்து வருகிறது,
என்று முதல்வர் பதிலளித்தார்.
பைலை மூடிய மேனன், இது சம்பந்தமாக உங்களுடன் தாமே நேரில் பேச வேண்டுமென்று முதலமைச்சர் விரும்பினார். ஆனால் அவசரமாக டெல்லிக்குப் புறப்பட வேண்டியிருந்தது. உங்களிடம் தமது சார்பில் சொல்லும்படி என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,
என்றார்.
என்ன சொல்லச் சொன்னார்?
பல மர்மமான காரணங்களால் அந்த நினைவுச் சின்னம் நின்றுகொண்டே வருகிறது. இனிமேலும் தாமதிக்காமல் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்று அரசாங்கம் விரும்புகிறது. அந்தப் பொறுப்பை உங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டுமென்பது முதலமைச்சரின் விருப்பம்.
நானா!
ஆமாம். அந்த நினைவுச் சின்னம் கட்டிடமாக இருக்க வேண்டுமென்பதில்லை. மண்டபமாகவோ, சிலையாகவோ அல்லது உங்கள் கற்பனைப்படி எப்படி வேண்டுமானாலும் அமையலாம். நமது அரசாங்கத்தை நீங்கள் கௌரவிப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் கேள்விப்பட்டேன்...
என்னவென்று?
காலஞ்சென்ற அப்பாத்துரை உங்கள் நண்பரென்று... ஆகவே, உங்கள் நட்புக்கு அடையாளமாக...
நண்பரென்று சொல்வதற்கில்லை...
மிகப் பழைய நினைவுகளால் பிரபுவின் நெற்றியில் முடிச்சுக்கள் விழுந்தன. அதெல்லாம் முப்பது முப்பத்தைந்து வருடத்துக்கு முந்திய விஷயம். இரண்டு பேருக்கும் வாலிபப் பிராயம். பிரசிடென்ஸியில் சேர்ந்து படித்ததால் பழக்கம்...
நட்புக்காக இல்லா விட்டாலும் இரண்டு மூன்று வருடமாக நீங்கள் புதிய படைப்பு எதுவும் செய்து கலையரங்கத்துக்குத் தரவில்லை. அதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள், சார்
என்றார் மேனன்.
பளீரென்று பிரபுவின் மனத்துக்கு ஒரு மின்னலடித்த மாதிரி இருந்தது. ‘தெய்வக் குரல்' என்று ஈசுவரியிடம் சொல்லிக் கொண்டிருந்தேனே, அதுதான் காதில் விழுகிறதா?
அவர் முகத்தில் தென்படும் பாவனைகளை வேறு விதமாகப் பொருள் கொண்டார் மேனன். எலியட்ஸ் பீச்செல்லாம் தாண்டி, நகரத்தின் தெற்குக் கோடியில் தன்னந்தனியே நிற்கிறது அந்த அஸ்திவாரக் கல்லும், ஒரு சின்னப் பீடமும். ஒருவேளை அதைப்பற்றிப் பலவிதமாய்ப் பேசுகிறார்களென்பதால்...
என்ன பேசுகிறார்கள்?
தெரிந்து கொண்டே கேட்கிறீர்களா! அந்த வேலையை மேற்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் ஆபத்து ஏற்பட்டது என்பார்கள். டாக்டர் ராமகிருஷ்ணா விமான விபத்தில் இறந்து போனார். எஞ்ஜினியர் ஹமீதின் மகன் திடீரென்று காலமானான். ஆர்க்கிடெக்ட் விஷ்ணு மகேசுவரனின் சொத்து பத்தெல்லாம் போய், மூளைக் கலக்கம் ஏற்பட்டது... இப்படி... பலவிதமான பாட்டிக் கதைகள்...
ஈசுவரியின் உடல் நிலையை நினைத்தபோது பிரபுவின் தேகம் சில்லிட்டது. அதே சமயம் -
மிஸ்டர் மேனன், பச்சையாய்க் கேட்பதற்கு மன்னியுங்கள். இந்தப் பொறுப்பை மேற்கொள்வதால் எனக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்?
மேனன் அயர்ந்து போனார். விளையாடுகிறீர்களா, சார்? நீங்கள் பணம் காசு பதவிகளைப் பார்க்காதவர் என்பது மிகப் பிரசித்தமாயிற்றே?
இப்போது பார்க்க வேண்டிய நிலைமை என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை வரும் எனக்கு?
வேலை முடியும் வரை உங்களுக்குப் படக் கூடிய அன்றாடச் செலவுகளை அலவன்ஸ் மாதிரி கொடுத்து விடலாம். இதைத் தவிர, சுமார் நாற்பதாயிரம் வரை முடியுமென்று நினைக்கிறேன்.
பிரபு எழுந்து கொண்டு கைகுலுக்கினார். மிக்க நன்றி, மிஸ்டர் மேனன். நான் அந்த வேலையை ஒப்புக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் தயவு செய்து தெரிவித்து விடுங்கள்.
அறை வாசல் வரையில் வந்து அவரை வழியனுப்பினார் மேனன்.
பிரபு பத்து அடி நடந்திருக்கமாட்டார். பொத்தென்று அவர் கழுத்தில் ஒரு ரோஜா மாலை விழுந்தது. என் வாழ்த்துக்கள், சார். நீங்கள் ஒப்புக்கொண்டு வெளியே வருவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன்,
என்ற இளைஞனின் குரலும் கேட்டது.
ஆத்மநாதன்! ஆத்மா என்று அவரால் பிரியமாய் அழைக்கப்படும் இளைஞன்.
கலை - தொழில் கல்லூரியில் பிரபு முதல்வராக இருந்தபோது மூன்று வருடம் அவர் கீழே பயிற்சி பெற்ற மாணாக்கன். இப்போது வேறு பல பிஸினஸ்களில் இறங்கிவிட்டான். என்றாலும், பழைய அன்பையும் மதிப்பையும் மறவாது அடிக்கடி சந்தித்து விசாரித்துக் கொண்டிருப்பவன்.
ஆத்மா! என்ன இதெல்லாம்?
என்று பிரபு கேட்டுக் கொண்டிருந்த போதே, அங்கங்கே மறைவாய் நின்றிருந்த பத்துப் பன்னிரண்டு இளைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். லேசுபாசாய்க் காதில் விழுந்தது, சார். இந்த வேலையை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நாங்கள்தான் முதலமைச்சரிடம் டெபுடேஷன் போனோம். இன்று நீங்கள் இங்கே வரப்போகிறீர்கள் என்று தகவல் தெரிந்ததும் ஒரு பார்ட்டியும் ஏற்பாடு செய்து விட்டோம்,
என்றான் ஆத்மா. அவன் சற்றே தலையை அசைக்கும் போதெல்லாம் படியப் படிய வாரியிருந்த கேசத்தின் பளபளப்பான கருமையும், பற்களின் பிரகாசமான வெண்மையும் ஒன்றோடொன்று மோதி, அவனிடம் ஒரு தனிக்கவர்ச்சியை ஏற்படுத்தின.
என்ன ஆத்மா, அனாவசியமான கலாட்டாவெல்லாம் செய்துகொண்டு பார்ட்டி எதற்கு?
என்றார் பிரபு பொறுமையிழந்தவராக. ஸ்விட்ஜர்லந்து பயணம் நிச்சயம்தான் என்பதை வீட்டுக்குப் போய் ஈசுவரியிடம் சொல்ல அவர் மனம் பரபரத்தது.
நாங்கள் பத்தே பேர்தான். சும்மா லைட்டாய் ஒரு ஸ்வீட், காரம், ஐஸ்கிரீம். மறுக்கக்கூடாது, வாருங்கள்,
என்று எவ்வளவு மரியாதையாய் அவர் கரத்தைப் பிடித்து இழுக்க முடியுமோ அவ்வளவும் செய்து வற்புறுத்தினான் ஆத்மா.
நுங்கம்பாக்கத்திலிருந்த ஒரு சிறிய, ஆனால் நவீனமான ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.
ரூஃப் கார்டனில்தான் பார்ட்டி,
என்று அவரை மாடிக்கு அழைத்துச் சென்றான் ஆத்மா.
சில படிகள் ஏறும்போதே ஏதோ கூச்சல் கேட்டது. ஓர் இளம் பெண்ணின் குரல், ஒரு வெயிட்டரின் பதில், வேறு சில பெண்களின் குறுக்கீடுகள்.
அதோ வந்துவிட்டாரம்மா, அவரையே கேளுங்கள்,
என்று ஆத்மாவைச் சுட்டிக் காட்டிவிட்டு, செத்தேன் பிழைத்தேன் என்பது போல் ஒளிந்து கொண்டான் அந்த வெயிட்டர்.
பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய எடுப்பான தோற்றம். ரோஜாச் சிவப்பான கன்னத்தில் பிளந்த பனநுங்கைப் போன்ற தளதளப்பு. விழியை உயர்த்தியே எதிராளியை மண்டியிட வைக்கக்கூடிய அரச தோரணை. ஒளி வீசும் புடவை; மினுமினுக்கும் நீண்ட பவுன் சங்கிலி.
அவர்கள்தான் மடத்தனமான ஏற்பாடு செய்தார்களென்றால் நீங்கள் ஒப்புக் கொள்ளலாமா?
என்று சீறியபடி ஆத்மாவிடம் வந்தாள் அவள்.
உங்களுக்குத் தெரியாது. நான்தான் இந்த ரூஃப் கார்டனிலேயே பெரிய மடையன்!
என்றான் ஆத்மா. நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களென்பதை முன்கூட்டியே ஊகிக்கத் தெரியவில்லை பாருங்கள் எனக்கு!
ஆத்மாவின் நண்பர்கள் ஹாஹ்ஹா என்று சிரித்தார்கள்.
ஷட் அப்!
என்றாள் அவள். பக்கபலமாகச் சில தோழிகள் அவளுக்கு அரணமைத்தார்கள். இதோ இது, எங்கள் பார்ட்டியாம்! அதோ அது, உங்கள் பார்ட்டியாம்! ஒன்றரைச்சாண் மாடியில், ஒரே தேதி, ஒரே நேரத்தில் இரண்டு பார்ட்டி நடந்தால் எத்தனை குழப்பம்! நான் பேசுவதற்கு நீங்கள் கை தட்டுவீர்கள்... நீங்கள் பேசும் போது நான் கை தட்டவேண்டும்...
கைதட்டுகிற அளவுக்குப் பேச்சாளி இல்லை நான் முதுகில் தட்டாதிருந்தால் போதும்,
என்று சிரித்த ஆத்மா, சற்றுத் தள்ளி நின்ற பிரபுவை, இப்படி வாருங்கள் சார்,
என்று அருகில் அழைத்துக் கொண்டான். இவர்தான் புகழ்பெற்ற சிற்பியான மிஸ்டர் பிரபு. கலை - தொழில் கல்லூரியில் பிரின்ஸிபாலாக இருந்தவர். கடற்கரையில் அப்பாத்துரை நினைவுச் சின்னம் இருக்கிறதே, அதைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை இன்றுதான் அரசாங்கத்திடம் ஏற்றுக் கொண்டார். அதைப் பாராட்டுவதற்காகத்தான் எங்கள் விருந்து...
அந்தப் பெண்ணின் பார்வை, பேசும் பேச்சு, நின்ற தோரணை எல்லாமே மறு வினாடி மாறின. அவள் குரலில் ஒரு பயபக்தியும், முகத்தில் ஒரு திகிலும் ஏற்பட்டன.
ஓ... அப்படியா... என்னை மன்னியுங்கள்... நாங்கள் சும்மா பி. யூ. ஸியில் பிரிந்து போகிற மாணவிகள். எல்லோரும் சேர்ந்து ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தோம்... எங்களால் உங்களுக்குத் தொந்தரவு இருக்காது. கொய்ட்டாக நாங்கள் சாப்பிடுகிறோம். நீங்கள் உங்கள் பார்ட்டியை நடத்துங்கள்...
என்றாள்.
பிரபு மனநெகிழ்வுடன், இனிமையான பெண்,
என்று அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து விட்டுத் தன் இருக்கையை நோக்கி நடந்தார்.
ஒரு மணி நேரத்தில் பாராட்டு விருந்து நடைபெற்று முடிந்துவிட்டது.
பலருக்கு வீடு அக்கம்பக்கத்தில் இருந்தது. நடந்து போய்விட்டார்கள், மீதியிருந்த சிலரை ஆத்மா அழைத்துக் கொண்டு சென்றான். பிரபு மட்டும் தனியாகத் தன் காரில் ஏறிக் கொண்டார். ஹெட் லைட் போட்டார். சாவியைப் பொருத்திவிட்டு, 'சோக்’கை இழுத்தார். கிறுகிறுவென்று சத்தம் கொடுத்துவிட்டு எஞ்ஜின் ஓய்ந்தது. நாலைந்து முறை முயன்றும் பலனில்லை.
என் வண்டியில் வாருங்களேன், சார். காலையில் யாரையேனும் ஆளனுப்பிக் கவனிக்கச் சொல்லலாம்.
அந்தப் பெண் தான்.
ஓ, நீயா! ரொம்ப நன்றி. இருந்தாலும்... இரு, பார்க்கிறேன்,
இன்னும் இரண்டொரு முயற்சிகள் தோல்வியுற்றதும், கண்ணாடிகளை ஏற்றிவிட்டு இறங்கிக் கொண்டார் பிரபு. கதவைப் பூட்டினார். நான் டாக்ஸி அல்லது பஸ்ஸில் போய்க் கொள்கிறேன். உனக்கேனம்மா சிரமம்?
என்றபடி திரும்பிப் பார்த்தார்.
அருகில் அவள் இருக்கவில்லை. தொலைவில் நிறுத்தியிருந்த காரை எடுத்து வந்து கொண்டிருந்தாள். பிரபுவின் அருகில் நிறுத்தி, ஏறிக்கொள்ளுங்கள், சார்,
என்று கதவைத் திறந்தாள். எழும்பூர் பாந்தியன் ரோடு,
என்றார் பிரபு, கார் புறப்பட்டதும்.
தெரியுமே எனக்கு? பலமுறை அந்த வழியே வந்திருக்கிறேன்,
என்றவாறு லாகவமாகக் காரைச் செலுத்தினாள் அவள்.
தன் பக்கமுள்ள கதவில் முழங்கையை ஊன்றிக் கொண்டு சாய்ந்தாற் போல் அமர்ந்தபடி அவள் முகத்தை ஆராய்ந்தார் பிரபு. தெருவிளக்குகளின் வெளிச்சம் அவள் மீது விழுந்து விழுந்து மறைந்தது. ஹூம்! அந்தப் 'பெரிய' சிற்பியின் கைத்திறனோடு எவனாலும் போட்டியிட முடியாது...! அவளிடமிருந்து ஓர் இனிமையான நறுமணம் வந்து கொண்டிருந்தது. உன் பெயரைச் சொல்லவில்லையே...
என்றார் அவர். கமலா,
என்றாள் அவள்.
கமலா...
ஆழமான குரலில் இரண்டொரு முறை அதை உச்சரித்தார் பிரபு. எனக்குக் கூடக் கமலா என்று ஒரு பெண்...
இருக்கிறாளா?
இருந்திருக்க வேண்டும்.
ஏதோ ஒரு நினைவை இரக்கமற்று வெட்டித் தள்ளும் வேதனை அவர் முகத்தில் முத்திரையடித்தது. ஆனால் அவளைக் காட்டிலும் இரண்டொரு வயது நீ சின்னவளாயிருப்பாய் என்று தோன்றுகிறது. உன்னைச் சின்னக் கமலா என்று கூப்பிடட்டுமா?
எனக்கு ஆட்சேபமில்லை,
என்றாள் அவள். ஆனால் சிரிக்கவில்லை.
பிரபுவின் பங்களாவுக்குள் கார் நுழைந்தது. இறங்கி உள்ளே வா, சின்னக் கமலா. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் போனால் நான் சந்தோஷப்படுவேன்,
என்றார்.
நானும் அதையேதான் ஆசைப்பட்டேன்,
என்றாள் சின்னக் கமலா.
அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டார் பிரபு. சோபாக்களின் மீது பல புத்தகங்கள் இரைந்து கிடந்தன. அவற்றை ஒதுக்கி வைத்து, உட்கார்,
என்றார். அலமாரியிலிருந்து கண்ணாடி புட்டியை எடுத்து, பைன் ஆப்பிள் வில்லைகளில் ஒன்றை டம்ளரில் போட்டுத் தண்ணீர் ஊற்றினார். கலக்குவதற்காக ஸ்பூனைத் தேடிக் கொண்டிருக்கையில் -
உங்களிடம் ஒரு வேண்டுகோள் கேட்கலாமா, சார்?
என்றாள் அவள்.
அடேயப்பா! அப்படி என்ன!
என்று வேடிக்கையாகக் கேட்டவாறு நிமிர்ந்தவர், சின்னக் கமலாவின் முகத்தில் தெரிந்த உறுதியையும் கடுமையையும் கண்டு திடுக்கிட்டார்.
அவள் விழிகளை அசைக்காமல் சொன்னாள்: அந்த அப்பாத்துரை நினைவுச் சின்னத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம், சார். நீங்கள் செய்யக்கூடாது.
என்னம்மா அது?
என்று குழம்பினார் பிரபு. உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
ஆயிரம் இருக்கும். நீங்கள் வாக்களிக்க முடியுமா முடியாதா?
பார்த்தவுடனே உன் மீது எனக்குப் பிரியம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும், உன் கோரிக்கைக்கு நான் முடியாதென்று சொல்வதாகவே வைத்துக்கொள், அப்புறம்?
"அந்தத் தண்ணீரைக்