Arivukku Aayiram Vaasal
2/5
()
About this ebook
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நான் 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' இதழ் தவறாமல் வாங்கிக் கொண்டிருந்தேன். பைண்ட் செய்து பாதுகாத்து வந்த அந்த இதழ்களை ஒரு நாள் பார்த்தபோது, நல்ல சில துணுக்குகள் இருப்பதை ஏன் தமிழில் தரக் கூடாதென்று தோன்றியது. 'குங்குமம்' இதழுக்கு மொழி பெயர்த்து அனுப்ப, அவை பிரசுரமானதோடு, வாரா வாரம் தரலாமே என்று ஆர்வமாகக் கேட்டார்கள்.
'சும்மா கொஞ்ச நேரம்' என்ற தலைப்பில் துணுக்குகள் தயாரித்தேன். நூல் நிலையத்திற்குப் போய், பழைய தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி, வாழ்க்கை வரலாறு, கவிதை, நாட்டுப் பாடல், மருத்துவம் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன். கல்கத்தாவில் இருந்த சில நண்பர்கள் அங்கிருந்து ஆங்கிலப் பத்திரிகைகளை அனுப்பினார்கள். ஏறத்தாழ இரண்டு வருட காலம் வெளியான அந்தத் துணுக்குகள்தான் 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' என்ற தலைப்பில் இங்கே வந்துள்ளது.
இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆனால், ரா.கி. ரங்கராஜன் தொகுத்த 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' புத்தகத்தில் இந்த விஷயம் காணப்படுகிறது என்ற தகவலையும் அவர்கள் சொன்னால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
- ரா. கி. ரங்கராஜன்
Read more from Ra. Ki. Rangarajan
Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsOre Vazhi Rating: 5 out of 5 stars5/5Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsHouseful Rating: 5 out of 5 stars5/523 - m Padi Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Thooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Raasi Rating: 5 out of 5 stars5/5Mudhal Mottu Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Twist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5
Related to Arivukku Aayiram Vaasal
Related ebooks
Ulagam Ippadithan! Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsPullikal... Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsAsura Jathagam Rating: 5 out of 5 stars5/5Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsNaga Vanam Rating: 5 out of 5 stars5/5Ithu Raathiri Neram Rating: 0 out of 5 stars0 ratingsMamisap Padaippu Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi-7 Rating: 0 out of 5 stars0 ratingsVilai Uyarntha Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Indirabai Allathu Indirajala Kallan Rating: 0 out of 5 stars0 ratingsTasmac Echarikkai Rating: 0 out of 5 stars0 ratingsPathungi Vaa Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsSethupandhanam Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Aatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsKallukkul Pugundha Uyir Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaavalan Kaavaan Enin Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Vayathil Rating: 0 out of 5 stars0 ratingsSarvathigari Idi Amin Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsSuvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal Rating: 0 out of 5 stars0 ratingsThimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsApple Sathi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Arivukku Aayiram Vaasal
1 rating0 reviews
Book preview
Arivukku Aayiram Vaasal - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
அறிவுக்கு ஆயிரம் வாசல்
Arivukku Aayiram Vaasal
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நான் 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' இதழ் தவறாமல் வாங்கிக் கொண்டிருந்தேன். பைண்ட் செய்து பாதுகாத்து வந்த அந்த இதழ்களை ஒரு நாள் பார்த்தபோது, நல்ல சில துணுக்குகள் இருப்பதை ஏன் தமிழில் தரக் கூடாதென்று தோன்றியது. 'குங்குமம்' இதழுக்கு மொழி பெயர்த்து அனுப்ப, அவை பிரசுரமானதோடு, வாரா வாரம் தரலாமே என்று ஆர்வமாகக் கேட்டார்கள்.
'சும்மா கொஞ்ச நேரம்' என்ற தலைப்பில் துணுக்குகள் தயாரித்தேன். நூல் நிலையத்திற்குப் போய், பழைய தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி, வாழ்க்கை வரலாறு, கவிதை, நாட்டுப் பாடல், மருத்துவம் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன். கல்கத்தாவில் இருந்த சில நண்பர்கள் அங்கிருந்து ஆங்கிலப் பத்திரிகைகளை அனுப்பினார்கள். ஏறத்தாழ இரண்டு வருட காலம் வெளியான அந்தத் துணுக்குகள்தான் 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' என்ற தலைப்பில் இங்கே வந்துள்ளது.
இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆனால், ரா.கி. ரங்கராஜன் தொகுத்த 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' புத்தகத்தில் இந்த விஷயம் காணப்படுகிறது என்ற தகவலையும் அவர்கள் சொன்னால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
ரா. கி. ரங்கராஜன்
ஏழைகள் கஷ்டம் நீங்க...
இந்த நாட்டுத் தொழிலாளிகள் முன்னுக்கு வர வேண்டுமானால், ஏழைகளின் கஷ்டம் நீங்க வேண்டுமானால், நாட்டின் தரித்திரம் தொலைய வேண்டுமானால், முதலில் இந்த நாட்டின் பணக்காரர்களும், பெரும் பணம் சம்பாதித்திருக்கிற முதலாளிகளும், அதிகாரிகளும், அரசர்களும் யோக்கியர்களாக இருக்க வேண்டும்; அறிவாளிகளாக வேண்டும். இல்லாதவரை இவர்கள் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
-பெரியார்
***
அல்வா
'அல்வா' எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா - நீ தப்ப
முடியாதே – அல்வா
விருதுநகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.
-புதுமைப்பித்தன்
***
கொலைகாரியின் ரசனை
1762ஆம் ஆண்டு ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் சக்கரவர்த்தி கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு ஏற்பாடு செய்தவள், அவருடைய மனைவி மகாராணி காதரைன் என்பது வதந்தி. ஏனெனில், கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக, பதவி உயர்வு அளிக்கப்பட்டது!
காதரைனுக்குக் கலைப் பொருட்களில் மிகுந்த நாட்டம் உண்டு. லெனின்கிராடில் இருந்த அரண்மனையைக் கலைக் கூடமாக அமைக்கத் தீர்மானித்தாள். உலகெங்கும் தன் பிரதிநிதிகளை அனுப்பி, கலைப் பொருட்களையும், ஓவியங்களையும் எக்கச்சக்கமாய் விலை கொடுத்து வாங்கி, ஹெர்மிடேஜ் என்ற கலைக்கூடத்தில் வைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது.
சில வருடங்களுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி -
அங்கே 2500 அறைகள் உள்ளன. பதினாலாயிரம் ஓவியங்கள் உள்பட இருபத்து மூன்று லட்சம் கலைப் பொருட்கள் இருக்கின்றன. நீங்கள் சும்மா அந்த அறைகளின் வழியாக நடந்தாலே பதினைந்து மைல் நடந்து வருவீர்கள். ஒவ்வொரு அறையிலும் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஒரே ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நகர்ந்தால்கூட, மொத்தத்தையும் பார்க்க ஒரு வாரம் பிடிக்கும்.
(ஆதாரம்: ஜேம்ஸ் ஏ. மிச்னர் எழுதிய கட்டுரை)
***
நடந்தால் ராஜா
காலார நடந்தால் உடலுக்குச் சுறுசுறுப்பு ஏற்படுவது மட்டுமல்ல; மூளைக்கும் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. டாக்டர் சாமுவேல் ஜான்ஸன், தனது காரசாரமான கருத்துக்களை உலாச் செல்லும் போது தன் நண்பர் பாஸ்வெல்லிடம் சொல்ல அவர் அவைகளை எழுதினார். தலைசிறந்த கிரேக்கப் பேச்சாளரான டெமாஸ்தனிஸ், தன் சொற்பொழிவுகளை வாக்கிங் போகும் போதுதான் தயாரித்துக் கொள்வார். பிளேட்டோ, தோப்பு மரங்களின் நடுவே உலவிக் கொண்டே தன் சீடர்களுக்கு அறிவுரைகள் கூறுவார். அரிஸ்டாட்டிலுக்கு 'நடைவேதாந்தி' என்ற சிறப்புப் பெயர் உண்டு.
***
வணக்கத்துக்குரிய சிங்கம்
ஜெருசலத்தில் ஒரு மிருகக் காட்சிச் சாலை இருக்கிறது. பைபிளில் என்னென்ன விலங்குகளைப் பற்றிய குறிப்பு இருக்கிறதோ அந்த விலங்குகள் மட்டுமே அங்கே இருக்கின்றன. கூண்டுக்கு வெளியே அந்தக் குறிப்பிட்ட பைபிள் வாக்கியத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு தீர்க்க முடியாத புதிர். 'விடை இத்தனாம் பக்கம் பார்க்க' என்று போட்டிருக்காது. நீங்கள் முன்கூட்டியே அத்தனாம் பக்கத்தைப் பார்த்து விடையைத் தெரிந்து வைத்துக் கொண்டு பிறரை ஏமாற்ற முடியாது.
- கியர்கார்ட்
***
இதுவன்றோ பூ!
மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் 'யாலாங்-யாலாங்.' அதாவது, 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.
-பி.எஸ். மணி எழுதிய ‘வளம் தரும் மரங்கள்'
***
அன்றே சொல்லிய பல்லி
பல்லி ஒலித்தலைச் சகுனமாகக் கருதுவதனைச் சங்க காலந் தொட்டு இன்றுவரை தமிழ் மக்கள் வழக்கமாகக் கொள்வதனை இலக்கியங்கள் மற்றும் வாழ்வியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியத்தின்கண் பல்லியின் சொல்லை நன்னிமித்தமாகக் கொண்டதற்கான சான்றுகள் மிகுதியாக உண்டு.
-டாக்டர் க. காந்தி - 'தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்’
***
நம்பர்-2 என்றால் இளப்பமா?
நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம். என் கீழ் வேலை பார்த்து வந்த ஓர் இளைஞனிடம், நல்ல சம்பளமும் அந்தஸ்தும் உள்ள ஒரு வேலை இருக்கிறது. நீயே சுதந்திரமாக, நம்பர் ஒன்னாக இருக்கலாம். போகிறாயா?
என்று கேட்டேன்.
வேண்டாம் சார். நம்பர் 1-ஆக வேலை செய்ய என்னால் முடியாது. நம்பர் 2-ஆக வேலை செய்யப் பிறந்தவன் நான்
என்றான் அந்த இளைஞன்.
அந்த பதில் எனக்குத் திகைப்பாக இருந்த போதிலும், பிறகு யோசித்துப் பார்க்கையில், நம்பர்-2 நபர்களும் உலகத்துக்கு மிக முக்கியம் என்று கண்டுகொண்டேன். நம்பர்-2 மட்டுமல்ல, நம்பர்-3, நம்பர்-4, நம்பர்-5 எல்லாருமே முக்கியமானவர்கள் தங்கள் வேலையைத் திறம்படச் செய்யும் வரையில்.
-ஐஸனோவர்
***
குறுக்கே போனவரின் கதை
கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர், கற்றுக்கொள்ள வந்தவரிடம் சொன்னார்: அதோ அந்தக் கோவிலின் நாலு மாடவீதியையும் சுற்றிவிட்டு வாருங்கள். கவனமாக ஓட்டுங்கள். பிரேக் சரியாகப் போடுகிறீர்களா என்று பார்ப்பதற்காகத் திடீரென்று நான் குறுக்கே வந்து நின்றாலும் நிற்பேன்.
சரி
என்று சொல்லி, அந்தக் கற்றுக்குட்டிக்காரர் காரை ஓட்டிச் சென்றார். ஆனால் பயிற்சியாளர் வரவில்லை.
மறுநாளும் பயிற்சியாளரைக் காணோம். எங்கே அவர்?
என்று விசாரித்தார்.
ஆஸ்பத்திரியில் இருக்கிறார்,
என்று பதில் வந்தது.
அடடா! ஏன்?
உங்கள் கார் என்று நினைத்து வேறொரு காரின் முன்னே போய் நின்றுவிட்டார்.
உங்கள் கையில் இரண்டு ரொட்டித்துண்டு இருந்தால் ஒன்றை ஏழைக்குக் கொடுத்து அவன் பசியை ஆற்றுங்கள்; இன்னொன்றை விற்று ஒரு ரோஜாப்பூ வாங்கி உங்கள் ஆன்மாவின் பசியை ஆற்றிக் கொள்ளுங்கள்.
-பாரசீகப் பழமொழி
சத்தியம் ஒண்டியாக நின்று ஜெயிக்கும். பொய்க்குத்தான் அடியாட்கள் தேவை.
-எபிக்டெட்டஸ்
வெற்றிகரமான குடும்பத்தின் லட்சணம் இது: தந்தை, குழந்தைகளிடம் வெளிக்குக் கண்டிப்பாக இருப்பார். உள்ளுக்குள் மென்மையாக இருப்பார். தாய், வெளிக்கு மென்மையாக இருப்பார். உள்ளுக்குள் கண்டிப்பாக இருப்பார்.
-ஸிட்னி ஹாரிஸ்
***
அதுதான் அவருடைய முத்திரை
ஓர் அரசியல்வாதியின் மனைவிக்குப் பிரசவ நேரம். காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார். ஆனால் வழியிலேயே பிரசவம் நேர்ந்துவிட்டது. அப்போது ஒரு போலீஸ்காரர் சட்டென்று விரைந்து வந்து உதவி செய்தார். நர்ஸ் மாதிரி குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டார். குழந்தை அழாமல் இருந்ததால் பட்டென்று ஒரு தட்டுத் தட்டினார். குழந்தை அழுதது. அரசியல்வாதி உடனே கூவினார்: போலீஸ் அராஜகம்!
***
நாற்பது வருட வாக்குறுதி
இத்தாலி நாட்டு அறிஞரொருவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். ஒரு நாள் உலாவப் போனபோது ஒரு ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்பட்டது. ஏதோ விஷயமாக அந்த ஸ்டேஷன் மாஸ்டருடன் அவருக்குச் சண்டை ஏற்பட்டது.
உன்னைப் பற்றி எங்கள் ஊர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு எழுதப் போகிறேன்
என்று சொல்லி விட்டுத் திரும்பினார் அறிஞர்.
அவருடன் கூட இருந்தவர்கள், இந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டரைப் பற்றி உங்கள் ஊர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு எழுதப் போகிறேன் என்றீர்களே? என்ன எழுதுவீர்கள்?
என்று கேட்டார்கள்.
நாற்பது வருஷம் முன்பு எங்கள் ஊர் ஸ்டேஷன் மாஸ்டருடன் எனக்குச் சண்டை வந்தது. 'உன்னைக் காட்டிலும் முட்டாளான ஸ்டேஷன் மாஸ்டரை நான் பார்த்ததில்லை. பார்த்தால் உனக்கு எழுதுகிறேன்' என்று அவரிடம் அன்று சொன்னேன். அதுதான் விஷயம்,
என்று விளக்கினார் இத்தாலிய அறிஞர்.
-ரண்டால்ஃப் சர்ச்சில் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து.
***
திமிர்
அவனிடம்
பணம்
இவனிடம்
அதிகாரம்
என்னிடம்
எளிய தமிழ்
இதனால்
இமாலயத் திமிர்
-விக்ரமாதித்யன் (‘திரு உத்தரகோச மங்கை' தொகுப்பிலிருந்து)
கற்பிக்க முடியாத விஷயங்கள் மூன்று:
தாராள புத்தி; கவிதை; இனிய சாரீரம்.
-ஐரிஷ் பழமொழி
***
கழுத்தை அறுத்தவன் கதை
105 வருடங்களுக்கு முன்பு லண்டனில் இருந்த விலை மாதர்கள் நடுநடுங்கினார்கள். காரணம், திடீர் திடீரென்று கழுத்து அறுக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். 'ஜாக் தி ரிப்பர்' என்று அவனுக்குப் பெயர் சூட்டப்பட்டதே தவிர, அவன் யாரென்று போலீசாரால் கண்டுபிடிக்கப் படவேயில்லை.
ஒரு வருட காலம் நடைபெற்ற இந்தப் படுகொலைகள் திடீரென்று நின்றுவிட்டன. ஜாக் தி ரிப்பர் யார் என்பதைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் உண்மையில் அவன் யார் என்பது மர்மமாகவே இருந்தது.
இப்போது ஒரு டயரி கிடைத்திருக்கிறது. 62 பக்கங்கள் கொண்ட அந்த டயரி மூலம், ஜேம்ஸ் மேப்ரிக் என்பவன்தான் ஜாக் என்றும், விக்டோரியா காலத்தில் வாழ்ந்த ஒரு பிஸினஸ் மேன் என்பதும், அவனுக்குப் பல விலைமாதர்களுடன் சினேகம் இருந்ததாகவும், மனைவி ஃப்ளாரன்ஸைக் கொஞ்சமும் கவனிக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆகவே, அவள் ஒரு கள்ளக்காதலனுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்றும், அதுவே ஜான்ஸனின் ஆத்திரத்துக்குக் காரணம் என்றும் டயரியிலிருந்து தெரிகிறது. அந்த டயரியின் ஒவ்வொரு பக்கத்திலும் 'ஜாக்' என்றே கையெழுத்திட்டிருக்கிறான் ஜேம்ஸ்.
இறுதியில் அவன் கொலை செய்யப்பட்டான் - மனைவி ஃப்ளாரென்ஸினால்! அவள் அவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டாள். அதற்காக வழக்கு நடந்து அவளுக்கு 15 வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது.
ஆனால் அவள் கணவன் ஜேம்ஸ்தான் ஜாக் என்று அப்போது தெரியவில்லை.
***
அடுத்த முறை
பீவர்ப்ரூக் பிரபு பெரும் பெரும் லண்டன் பத்திரிகைகளுக்கு அதிபர். அவருடைய பத்திரிகையான லண்டன் டைம்ஸில் ஒரு பாராளுமன்ற மெம்பரைக் கண்டபடி திட்டி ஒரு கட்டுரை வெளிவந்தது.
சில நாட்கள் கழித்து, ஒரு ஓட்டல் பாத்ரூமில் அந்த எம்.பி.யை அவர் சந்திக்க நேரிட்டது. அந்தக் கட்டுரை வெளியானது ரொம்பத் தப்புதான். மன்னியுங்கள்
என்றார் பீவர்ப் ரூக்.
நல்லது. அடுத்த முறை பாத்ரூமில் என்னைத் திட்டுங்கள். பத்திரிகையில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்,
என்றார் எம்.பி.
வெளியேறும்போது கதவை மடேலென்று சாத்தாதீர்கள். நீங்களே மறுபடி உள்ளே போக வேண்டியிருக்கும்.
-பெஸ்ட்
***
கமலா தாஸும் கரப்பான் பூச்சியும்!
உலகத்தில் எங்கு பார்த்தாலும் சண்டையும் பூசலுமாய் இருப்பதால் வெகு கோபமாயும் ஆத்திரமாயும் இருக்கிறார் கமலா தாஸ்.
ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருப்பது:-
நான் மிகவும் மனம் வெறுத்துப் போய்விட்டேன். மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். தேவையில்லை. மனித குலம் அழிந்து போகட்டும். வேறொரு புதிய உயிர் வர்க்கம் வளருவதற்கு நாம் வழி செய்ய வேண்டும். அது கரப்பான் பூச்சி வர்க்கமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பூச்சி கொல்லி மருந்துகளை எதிர்த்து நிற்கக் கூடிய கரப்பான் பூச்சிகளாக இருக்க வேண்டும்.
***
கவனியுங்கள்!
காலையில் கண் விழிக்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்திருந்தீர்கள் என்பதைக் கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கும்போது அதே பக்கமாகப் படுத்தால் எளிதாகத் தூக்கம் வரும்.
-ஃபேமிலி வீக்லி
***
இடிக்கத் தயங்காத தொழிலதிபர்!
அமெரிக்கத் தொழிலதிபரான ஆண்ட்ரூ கார்னெகி, பழசைத் தூக்கியெறிந்து புதியதைக் கொண்டு வருவதில் கொஞ்சமும் தயக்கம் காட்ட மாட்டார்.
அவரிடம் வேலை பார்த்த சார்லி என்ற இஞ்சினியர் ஒரு குறிப்பிட்ட மில்லை இன்ன மாதிரி கட்டினால் ஒரு டன்னுக்கு அரை டாலர் செலவு மிச்சமாகும் என்று தெரிவித்தார்.
'சரி, கட்டுங்கள்' என்று கார்னெகி சொல்ல, இஞ்சினியரும் அப்படிக் கட்டி முடித்தார். கார்னெகி வந்து பார்த்தார். பிரமாதமான தொழிற்சாலை.
இஞ்சினியரின் முகத்தைப் பார்த்தார் கார்னெகி. இதுதான் மிக நன்றாய் வந்திருக்கிறதே! பின்னே ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?
என்று கேட்டார்.
இல்லை... வந்து... இதை வேறுவிதமாய்க் கட்டியிருந்தால் டன்னுக்கு ஒரு டாலர் மிச்சமாகும் என்று இப்போது தோன்றுகிறது.
அந்த மாதிரி கட்டேன்!
இதை இடித்துத் தள்ள வேண்டியிருக்கும்.
இடித்துத் தள்ளு
என்று ஆணையிட்டார் கார்னெகி. இரண்டு மாதத்தில் வேறொரு புது மில் எழும்பியது.
எவருடைய உள்ளம் பிறருக்கு உதவி செய்வதிலேயே நாட்டம் கொண்டதாக இருக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அது சின்ன உதவியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் மூலம் சமுதாயம் செழிப்படைகிறது.
-ஆல்பர்ட் ஷ்வைட்ஸர்
கொஞ்சம்கூட எதிர்பாராத ஒன்று நமக்கு நேர்கிறதென்றால் அது வயோதிகம்தான்.
-டிராட்ஸ்கி
***
விலை உயர்ந்த சவப் பெட்டி
கெய்ரோ நகரில் எகிப்திய வரலாற்றைக் காட்டும் மியூசியம் ஒன்று இருக்கிறது.
டட்டன்காமென் என்ற புராதன காலத்து மன்னனின் சவப் பெட்டியை அங்கே காணலாம். ஆறடி இரண்டங்குல நீளம். 2450 பவுண்டு எடை.
என்ன விசேஷம் என்கிறீர்களா?
முழுக்க முழுக்கத் தங்கத்திலே செய்யப்பட்ட சவப்பெட்டி இது. உலகத்திலேயே தங்கத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய பொருள் இதுதான்.
ரொம்ப மாடர்ன்
மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் நிறைந்த கண்காட்சிக்கு ஒருவர் போனார். ஏதாவது ஒரு படம் வாங்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. ஆனால் எந்தப் படத்துக்கும் பொருள் விளங்கவில்லை.
கடைசியில் ஒரு வெள்ளைப் பலகையின் நடுவில் கறுப்பாக ஒரு புள்ளி உள்ள சிறிய படம் அவரைக் கவர்ந்தது. இந்தப் படம் என்ன விலை?
என்று அங்கிருந்தவரைக் கேட்டார்.
அது படமல்ல. விளக்கு ஸ்விட்ச்
என்று பதில் கிடைத்தது.
***
இப்போதே...
சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும்போது திருப்தியாகச் சாப்பிட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டதா, இப்போதே மனைவியிடம், 'கமலா, இன்று உன் சமையல் பிரமாதம்' என்று சொல்லுங்கள்.
நேற்று ஆபீசில் நண்பருடன் சண்டை போட்டது தவறு என்று தோன்றுகிறதா, 'ஸாரி கோபால்' என்று இப்போதே சொல்லுங்கள்.
ஊரில் உறவினருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டீர்களா, 'சீக்கிரம் குணமடைவீர்கள், கவலை வேண்டாம்' என்று இப்போதே ஒரு கார்டு எழுதிப் போடுங்கள்.
நீங்கள் ஒப்படைத்த ஒரு வேலையை உங்கள் மகன் செய்து முடித்து விட்டானா, 'தாங்க்ஸ்டா ராஜா' என்று இப்போதே சொல்லுங்கள்.
இப்போதே, இப்போதே, இப்போதே.
-மார்கரெட் ப்ளே
***
திரு.வி.க.வுக்கு வேண்டுகோள்
இந்நூலை யான் யாக்கத் தொடங்கியதும் தொழிலாளர்கள் சிலர் என்னைச் சூழ்ந்து, 'நூலைப் புலவர்க்கென்று எழுதாதேயுங்கள். எங்களுக்கென்றும் எழுதுங்கள்' என்று விண்ணப்பஞ் செய்தனர். அவர்தம் விண்ணப்பத்தையும் வாங்கிக் கொண்டு எல்லார்க்கும் பயன்படு முறையில் நூலை யாத்துள்ளேன்.
-‘வாழ்க்கைக் குறிப்புக்கள்' திரு.வி.க.
***
தேவதைகள் என்றால் 'ஒன்று' கிடையாது
அமெரிக்காவில் ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒரு புதுக்கட்டிடம் கட்டத் தீர்மானித்தது. கட்டிடப் பிளான்களை வாடிக்கனுக்கு அனுப்பி, போப்பாண்டவரின் அனுமதியைக் கேட்டது.
போப்பாண்டவரிடமிருந்து பதில் வந்தது, 'இதில் வசிக்கப் போகிறவர்கள் மனிதர்களா, தேவதைகளா?' என்ற ஒரு குறிப்புடன்.
அதற்கு என்ன அர்த்தம் என்று பிளானை வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை பண்ணினார்கள். கடைசியில் புரிந்தது: அந்தக் கட்டிடத்தில் கழிப்பறைக்கே இடம் விடவில்லை.
***
என்ன மொழி இது?
மேலே இருப்பது குறள். தமிழ்-பிராமி எழுத்து. திரு வள்ளுவர் காலத்தில் இந்த எழுத்துத்தான் புழக்கத்தில் இருந்ததால், அவர் தமது திருக்குறளை இந்த எழுத்தில் எழுதினார். இங்குள்ள குறள் காமத்துப்பாலில் வருகிறது.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்
(ஆதாரம்: கிஃப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் எழுதிய 'கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறள்.')
***
நாயைக் கைது செய்து கூண்டிலேற்றுங்கள்!
உங்கள் வீட்டு நாய் தபால்காரரைக் கடித்ததா? அவர் போலீசில் புகார் செய்தால், நாயை அஜாக்கிரதையாக விட்டிருந்ததற்காக உங்களுக்கு அபராதம் போடுவார்கள்.
ஐந்நூறு வருடங்களுக்கு முன் அப்படியில்லை. நாயையே கைது செய்து, கூண்டிலேற்றி, விசாரணை செய்து மரண தண்டனை விதிப்பார்கள் இங்கல்ல, ஐரோப்பாவில்.
நாய் மட்டுமல்ல பன்றி, குதிரை, மாடு, கரடி - சில சமயங்களில் பூனை கூட 'கைது’ செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வந்தது.
இந்தக் 'குற்றவாளி’களின் சார்பில் வாதாடுவதற்காக வழக்கறிஞர்களும் இருந்தார்கள். பார்த்தலோமியோ செஸனீ என்பவர் பிரான்ஸில் இந்தத் துறையில் பெயரும் வருமானமும் கொண்ட வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.
***
அம்மாவைக் கொளுத்தப் போகும் நேரத்தில்...
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஜெர்மன் வான சாஸ்திரியான கெப்ளர். அந்த நாளில் எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட்ட சோதனைகள் அவருக்கும் ஏற்பட்டன. கிரகங்களைப் பற்றியும் சூரிய மண்டலத்தைப் பற்றியும் அவர் கண்டுபிடித்த உண்மைகள் மத விரோதமானவை என்று கூறி அவரைத் துரத்தித் துரத்தி அடித்தார்கள்.
ஒருமுறை ராத்திரியோடு ராத்திரியாக ஊரைவிட்டு ஊர் ஓடினார். மனைவியையும் ஆறு குழந்தைகளையும் மூடு வண்டியில் ஏற்றி மறைத்துக் கொண்டு, தான் பிரசுரிக்கவிருந்த புத்தகத்தின் காரீய அச்சுக்களையும் கூடவே எடுத்துக் கொண்டு ஓடினார்.
இன்னொரு முறை, ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்த அவருடைய அம்மாவின் மீது சூனியக்காரி என்று குற்றம் சாட்டப்பட்டது. அவரைக் கம்பத்தில் கட்டி வைத்து உயிரோடு கொளுத்தப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும் கெப்ளர் அந்தக் கிராமத்துக்கு ஓடினார். அவருடைய அன்னையைச் சங்கிலி