En Veetu Roja Un Veetu Jannalil
By Indhumathi
()
About this ebook
ஷைலஜா - சித்ரா கல்லூரியில் இணைப்பிரியாத தோழிகள். இவர்களுக்கிடையில் ஒரு கருத்து வேறுபாடு தோன்றி அது சவாலாக மாறுகிறது. அது என்ன சவால்? அந்த சவாலில் யார் வெற்றி பெறுகிறார்கள்? சவாலுக்கு பின் அவர்கள் நட்பு எப்படி இருக்கப் போகிறது? வாங்க வாசிக்கலாம்...
Read more from Indhumathi
Veenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Poongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsVeenaiyil Urangum Raagangal Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Mannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Indrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Illaiyaa Nithya? Rating: 0 out of 5 stars0 ratingsAshokavanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsAgni Natchathirangal Rating: 0 out of 5 stars0 ratingsVisham Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsEndru Puthithai Pirappome... Rating: 0 out of 5 stars0 ratingsMalargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsSai Saritha Leelamrutham Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsParakka Thayangum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThulluvatho Ilamai Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Veetu Roja Un Veetu Jannalil
Related ebooks
Megam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Thendral Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsNaalaya Aagayam Rating: 5 out of 5 stars5/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Indru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsAthe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsஅதே நிலா! அதே கலா! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthayo Rating: 0 out of 5 stars0 ratingsEndha Moongil Pullankuzhal? Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum... Rating: 4 out of 5 stars4/5Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Manadhil Meendum Mazhaikalam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Febuary - 30 Rating: 3 out of 5 stars3/5தூரத்துப் பொன்மான் Rating: 0 out of 5 stars0 ratingsThooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oridam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Oru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Re... Re... Rating: 5 out of 5 stars5/5Maranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Aadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5
Reviews for En Veetu Roja Un Veetu Jannalil
0 ratings0 reviews
Book preview
En Veetu Roja Un Veetu Jannalil - Indhumathi
https://www.pustaka.co.in
என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்
En Veetu Roja Un Veetu Jannalil
Author:
இந்துமதி
Indhumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/indhumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
டிசம்பர் மாதத்து வானம். லேசாகத் தூவுகிற மழை. சிலுசிலுவென்ற காற்று. கல்லூரிக்கு எதிரில் தெரிந்த கடல். வழியெங்கும் மண்தரை மறைத்து இறைந்து கிடந்த சரக்கொன்றைப் பூக்கள். மஞ்சள் பட்டில் சிவப்புப் பூக்கள் உதித்த மாதிரி இடையிடையே குல்மொஹர்கள். அற்புதமான காட்சியாகத் தெரிந்தது ஷைலஜாவிற்கு. மணிரத்தினத்தின் படத்தில் பார்க்கிற மாதிரி இருந்தது. பாரதிராஜாவின் கதாநாயகி ஆடுகிற மாதிரி ஸ்லோமோஷனில் ஓட வேண்டும் போலிருந்தது. பின்னால் வெள்ளை உடையில் தேவதைகளாகத் துணை நடிகைகள் துரத்திக் கொண்டுவர வேண்டும். தன் தனனம் தன்னம் பாட வேண்டும்…
அவளுக்கு அந்தக் கல்லூரியிலேயே பிடித்தமான விஷயம் சரக்கொன்றையும், குல்மொஹரும்தான். கல்லூரிக்குள் நுழைகிற பக்கத்து வழிப்பாதையில் கல்லூரிக் கட்டடம் வரை இறைந்து கிடக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கின உடனே எல்லோரும் நுழைகிற மாதிரி கல்லூரிக்குள் நுழைந்து விடமாட்டாள் அவள். அந்தப் பக்கத்து வழி கேட் அருகிலேயே சிறிதுநேரம் நிற்பாள். வழியெங்கும் பட்டு விரித்திருந்த சரக்கொன்றையைப் பார்ப்பாள். பின்னால் திரும்பி வானத்தை முத்தமிடுகிற கடலைப் பார்ப்பாள். அப்படியே பார்த்துக்கொண்டு அங்கேயே நிற்க வேண்டும் போலிருக்கும். நாள்முழுதும் நின்று கொண்டிருக்கத் தோன்றும். ஆனால் லெக்சரர்களும், புரொபசர்களும் விடமாட்டார்கள்.
என்ன ஷைலு… வகுப்புக்கு வரலை…?
என்று கேள்விகளாலேயே கொக்கி மாட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அப்படியே அவர்கள் விட்டாலும் அவளது தோழி சித்ரா விடமாட்டாள்.
ஏய் போறும்டி… எத்தனை நேரம்தான் இந்த மஞ்சளைப் பார்த்துக்கிட்டு நிற்பே… பி பிராக்டிகல் ஐ ஸே… நீ நிஜத்தைவிட்டு அடிக்கடி நழுவிப் போற… விலகிப் போற… இதுதான் உன்கிட்ட இருக்கிற மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்…
என்பாள். அதோடு நிற்கமாட்டாள். தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டும் போவாள்.
மிஸ் மாத்யூஸின் ‘ஸோனட்’டைக் கேட்டுக்கொண்டே இவள் உட்கார்ந்திருப்பாள். பார்வை இடதுபுற ஜன்னல் வழியாகத் திரும்பிக் கடலுக்குப் போகும். அல்லது குல்மொஹர், சரக்கொன்றையில் கிடக்கும். இவை இரண்டும் இல்லையென்றால் மனம் மதுசூதனனிடம் லயித்திருக்கும்.
‘மது… இப்போ என்ன செய்து கொண்டிருப்பான்…? நான் நினைக்கிற மாதிரி அவனும் என்னை நினைத்துக் கொண்டிருப்பான்? அல்லது கட்டட மேஸ்திரியிடம் விளக்கிக் கொண்டிருப்பான்…? இல்லாவிட்டால் புதிதான ஓர் கட்டடத்திற்கு வரைபடம் வரைந்து கொண்டிருப்பான்…?’
மது… அந்தப் பெயரில் இருக்கிற இனிமை அவனிடம் உண்டு. நல்ல எதிர்காலம் உண்டு. பெற்றோருக்கு ஒரே பையனாகப் பிறந்த அதிர்ஷ்டம் உண்டு. பணம் உண்டு.
இவள் மதுவைச் சந்தித்ததே அவன் கட்டடம் கட்டுகிற ஸைட் ஒன்றில்தான். இவளது வீட்டுத் தெருக்கோடியில் பிரபலமான அலுவலகம் ஒன்றின் ஆபீஸ் கட்டடம். பெரிய நான்கு மாடிக்கட்டடம். மதுதான் அதன் இன்ஜினீயர். இவள் கல்லூரிக்குக் கிளம்பும்முன் கட்டடத்தை மேற்பார்வை பார்க்க வருவான். அப்படியே இவளையும் பார்ப்பான். கிட்டத்தட்ட ஒரு மாதம் பார்த்த பின் இவளைப் பார்ப்பதற்கென்றே கட்டடத்திற்கு வர ஆரம்பித்தான்.
வெள்ளையாய், உயரமாய்ப் பளிச்சென்று கண்ணில் அடிக்கிற உருவமாய், அழகாய், முன் நெற்றியில் மயிர் புரள நின்று கொண்டிருந்தவன் மீது இவளது பார்வையும் படரலாயிற்று. பார்வை புன்சிரிப்பாக மாறி, பின்னர் மெல்ல விரிந்து, விகசித்துப் பேச்சாக வெளிவந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக உருவெடுத்து இப்போது கசிந்துருகத் துவங்கிற்று. அவளைப் பைத்தியமாக அடிக்கத் தொடங்கிற்று. நாள் முழுதும் மதுவின் நினைவில் அமிழலாயிற்று. பார்க்கும் இடத்திலெல்லாம் அவனைப்போல் ஒரு உருவம் தெரியலாயிற்று.
அவளைக் கடந்து ஒரு சிவப்பு மாருதி போய்விடக் கூடாது. போனால் நிற்பாள்.
என்ன ஷைலு?
சித்ரா கேட்பாள்.
இல்ல… அந்த ரெட் கலர் மாருதியில் போனது மது மாதிரி இல்ல…?
உனக்கென்ன பைத்தியமா, ஷைலு?
ஏன்டி…?
தெருவில் ஒரு ரெட் கலர் மாருதி போக விடமாட்டாய் போலிருக்கிறதே?
இல்ல சித்ரா… ரெட் கலர் மாருதியைப் பார்க்கிற போதெல்லாம் அவர் நினைவு வர்றது.
வர்றதா…? அப்படியானால் எங்கேயாவது போயிருந்ததா…?
எது?
நினைவு வர்றதுன்னு சொன்னாயே… எங்கேயாவது போயிருந்தால்தானே வர முடியும்… மறந்தால்தானே நினைக்க முடியும்…?
ஆமாண்டி… யு ஆர் ரைட்… இருபத்து நாலு மணி நேரமும் மது என் நினைவில் இருக்கிறப்போ புதுசாக எப்படி வர முடியும்…?
முட்டாள்…
என்று திட்டினாள் சித்ரா.
ஏன்டி…
யாரும் யாரையும் இருபத்து நான்கு மணி நேரமும் நினைச்சிட்டிருக்க முடியாது. அப்படி நினைச்சுக்கிட்டிருந்தால் மற்ற வேலைகளைச் செய்ய முடியாது…
என்ன சித்ரா அப்படிச் சொல்ற… அப்படியானால் நான் மதுவை நினைக்கலேன்னு சொல்றியா?
இல்ல… அப்படிச் சொல்லலை… நீ மதுவை நினைச்சுக்கிட்டிருக்கிறது எனக்குத் தெரியும். உன் மனசுல அவர் இருக்கிறது தெரியும். ஆனால் ஒரு நாள் பூராவும் ஒருத்தர் நினைவிலேயே இருக்கிறது கஷ்டம்னு சொல்லவரேன். சாத்தியமற்ற விஷயமன்றதைத் தெளிவுபடுத்தறேன்…
ஷைலஜாவிற்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது. நல்ல மடம், ஜடம் என்று திட்டிக்கொண்டாள்.
‘காதல்னா என்ன என்று தெரியுமா இவளுக்கு…? லீஸ்ட் பிட் ரொமாண்டிக் பர்ஸன். எதையும் நிஜமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த மரக்கட்டை ஜன்மம்… எப்படித்தான் எனக்குச் சினேகிதியாக வந்து வாய்த்ததோ… எப்படித்தான் ஆங்கில இலக்கியம் படிக்கிறதோ…? ஒரு கற்பனை வேண்டாம்… கவிதை நயம் வேண்டாம்… உணர்ச்சிவசப்படல் வேண்டாம்…? எதுவுமே இல்லாமல் வெறும் நிஜத்தை மட்டுமே நினைத்துக்கொண்டு…?’
எப்படி முடிகிறது இவளால்…? கற்பனை சுகம், கனவு சுகம். நிஜத்தைவிட்டு விலகுவது சுகம். சிறிதுநேரச் சுகம். சின்னச் சின்னச் சுகம். இந்தச் சின்னச் சின்னச் சுகங்களும், ஆசைகளும்தான் வெறும் வெள்ளையாகக் கிடக்கின்ற வாழ்க்கைக்கு வர்ணமேற்றுகின்றன. வானவில்லைக் காட்டி மறைக்கின்றன. சிறிது நேரமானாலும் வானவில் நிஜம்தானே… அழகுதானே… ரம்மியமானதுதானே… இந்த அழகு ரம்மியமற்று எப்படி இருக்க முடியும்? கற்பனையற்றிருக்க முடியும்?
சொன்னால் புரியாது. சித்ரா சண்டைக்கு வருவாள்.
கற்பனைவாதிகள் வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள்!
என்பாள்.
நிழலைத் துரத்திக்கொண்டு போகிற ஏமாளிகள்
என்பாள்.
அதனால் சித்ராவுடன் இந்தச் சண்டை போடுவதை விட்டுவிட்டாள் ஷைலஜா… எல்லாவற்றிலும் ஒத்துப்போகிற அவர்களால், ஒன்றாக இருக்கிற அவர்களால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப்போக முடிவதில்லை. சண்டை வருகிறது. முகம் சிணுங்குகிறது. வெறும் அபிப்பிராய பேதங்கள்தான். ஆனால் அதுகூட நல்ல நட்பில் கீறல் விழ வைக்கிறது என்பதால், இரண்டுபேருமே அதைப்பற்றிப் பேசுவதைக் கை விட்டிருந்தார்கள். நிழல், நிஜம் பற்றின விவாதத்தை ஒதுக்கி வைத்திருந்தார்கள்…
அப்போதும் கல்லூரி வாசலில் நின்று சரக்கொன்றையைப் பார்த்தபோது ஷைலஜாவிற்குச் சித்ராவின் ஞாபகம்தான் வந்தது. ‘இன்றைக்காவது கல்லூரிக்கு வருவாளா மாட்டாளா…?’ என்று தோன்றியது. மாமா பெண்ணிற்குக், கல்யாணம் என்று சித்ரா மதுரைக்குப் போயிருந்தாள். மூன்று நாட்களாகக் கல்லூரிக்கு வரவில்லை. அந்த மூன்று நாட்களும் இவள் தோழமை இன்றித் தவித்துப்போனாள். மதுவிடம் பேசினதையெல்லாம் சொல்ல ஆளின்றித் துவண்டு போனாள். இதற்கு மேலும் சித்ரா வராது போனால் தாங்க முடியாது என்று தோன்ற அவள் நின்று கொண்டிருந்தபோதே தோளின் மீது ஒரு கை விழுந்தது. ஸ்பரிசத்திலிருந்தே அவளுக்குப் புரிந்துவிட்டது.
ஹாய் சித்ரு…
என்று திரும்பினாள். வெள்ளையில் சிகப்புப் பூப் போட்ட சுடிதாரில் சித்ரா நின்று கொண்டிருந்தாள். தன்னைவிட உயரமாய், வெள்ளையாய், அழகாய்ச் சித்ராவைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. கூடவே மெலிதாய்க் கோடு மாதிரி ஒரு பொறாமையும் எட்டிப் பார்த்தது.
ஹாய்…
சொன்ன சித்ரா சிரித்தாள்.
என்னப்பா சிரிக்கிற…?
இல்ல… வழக்கப்படி பூவைப் பார்த்துண்டு நிற்க ஆரம்பிச்சுட்டியோன்னு நினைச்சேன். சிரிப்பு வந்தது…
உன் கண்ணுல இந்த மஞ்சள் பெட்ஷீட் படலையா…
என் கண்ணுக்கு பெட்ஷீட் எல்லாம் ராத்திரிதான் படும். குளிர்றபோதுதான் படும்…
ஜடம்… ஜடம்… சரியான ஜடம்…!
ஏம்ப்பா மடத்தை விட்டுட்ட…?
அடுத்த தரம் சொல்றேன்… ஆமாம்… எப்போ வந்த…?
இன்னிக்கிக் காலைல…
ஏன் எனக்கு போன் பண்ணல…
பண்ணினேன், நீ குளிச்சிட்டிருக்கிறதா சொன்னாங்க…
யாரு…?
உங்கம்மா…
என்கிட்ட சொல்லவே இல்லையே…?
மறந்திருப்பாங்க… விடு…
ஏம்பா திருப்பிப் பண்ணலை…?
நேரமில்லை… ஊருக்குக் கொண்டுபோன துணியெல்லாம் துவைச்சுப் போட்டுட்டு குளிச்சு, டிரஸ் பண்ணிக்கவே சரியாக இருந்தது. அதான் காலேஜ்ல பார்க்கப் போறோமேன்னு விட்டுட்டேன்…
எப்படித்தான் அப்படி விடறியோ… என்னால் முடியாதுப்பா… நானாக இருந்தால் துணி, குளியல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதல்ல உன்கிட்ட பேசிட்டுத்தான் மறுவேலை…
பொய் சொல்ற…
பொய்யா? எதுக்குப்பா…?
முதல்ல என்கிட்ட பேச மாட்ட…
ஏன்…?
முதல் கால் மதுவுக்கு, இரண்டாம் கால்தானே எனக்குப் போட்டிருப்ப…?
ஷைலஜா சிரிக்க, இருவரும் கல்லூரிக்குள் நடக்க ஆரம்பித்தனர். இருவரும் மஞ்சள் சரக்கொன்றை விரிப்பில் நடந்து போவது அழகாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் ஷைலஜா. பாலு மகேந்திராவின் காமிராவில் பார்க்கிற மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் தளபதி காமிராமேன் சிவன். அதுவுமில்லாவிட்டால் பி.ஸி. ஸ்ரீராம்.
அதைச் சொன்னபோது, சித்ரா மீண்டும் சிரித்தாள். சிரித்துக்கொண்டே கேட்டாள்.
ஆரம்பிச்சுட்டியா…? இந்த மாதிரி வானத்துல பறக்கிறதை, மேகத்துல மிதக்கிறதையெல்லாம் குறைச்சுக்கிட்டால் நல்லாயிருக்கும்…
நீயும் இந்த மாதிரி பேசறதைக் கைவிட்டால் எனக்கும் நல்லாயிருக்கும்.
சரி… மூணு நாளைக்கப்புறம் பார்க்கிறோம். சண்டை போட வேணாம். வேற ஏதாவது பேசுவோம். என்ன…?
சரி…
மது வந்தாரா…? பேசினாயா…?
ம்… அதைப் பற்றித்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்…
சொல்லு…
ஒரு நாளைக்கு மகாபலிபுரம் போகலாம்னு சொல்றார், மது. கெஸ்ட் ஹவுஸ் புக் பண்றாராம். வரச் சொல்லிக் கூப்பிடறார்…
பேசாதிருந்தாள் சித்ரா.
என்ன சித்ரா பேசாமல் இருக்கே…?
நீ மகாபலிபுரம் போக வேணாம், கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் தங்க வேணாம்னு தோணறது…
ஏன் சித்ரா…?
அந்த அளவு மதுவை நம்ப வேணாம்னு தோணறது…
எந்த அளவு மதுவை நம்ப வேணாம்னு சொல்ற…?
அவரை மட்டுமல்ல… எந்த ஆம்பிளையானாலும் நம்ப வேணாம்னுதான் சொல்லுவேன். எல்லா ஆம்பிளைகளும் இந்த விஷயத்துல ஒண்ணாகத்தான் இருப்பாங்க…
ஒண்ணுன்னா… எதைச் சொல்ற…?
தங்கள் தேவை எதுவோ அதை அடைந்தப்புறம் மனசு மாறிடுவாங்க… சில ஆண்கள் தேவைக்கு முன்னால் இன்னொரு அழகான பெண்ணைப் பார்த்தாவே மனசு மாறி அவள் பின்னால் போக ஆரம்பிச்சுடுவாங்க…
மது கூடவா?
இந்த விஷயத்துல உன் மது மட்டும் விதி விலக்கா என்ன…? அவரும் ஆம்பிளைதானே…? எல்லா ஆண்களும் சபல புத்திக்காரங்கதான்…
இல்லை… நிச்சயமாக என் மது அப்படி இல்லை…
குழந்தையைப் பார்க்கிற மாதிரி ஷைலஜாவைப் பார்த்துச் சிரித்தாள் சித்ரா.
என்ன சிரிக்கற…?
இன்னும் உலகம் புரியாமல் குழந்தையாகவே இருக்கியேன்னு சிரிக்கறேன்…
எனக்கு உலகம் புரியாது இருக்கலாம். ஆனால் மதுவைப் புரிஞ்சுண்டிருக்கிறேன்…
முட்டாள்…
ஏன் சித்ரா…?
மது ஆம்பிளை. ஆம்பிளைகளுக்கே ஸ்திர புத்தி கிடையாது. சலன புத்திக்காரங்கதான்…
இல்லை, மது அப்படி இல்லை, இருக்கவும் மாட்டார். ஒருபோதும் என்னைத்தவிர வேறு ஒரு பொண்ணை ஏறிட்டுப் பார்க்க மாட்டார்…
உன் அபிப்பிராயம் தப்புன்னு நிரூபிச்சுக் காட்டட்டுமா…? இந்தச் சலன புத்தி விஷயத்துல எல்லா ஆண்களும் ஒண்ணுதான்னு உன் மூளைக்கு எட்ட வைக்கட்டுமா…?
எப்படி…?
ஒரு சின்ன எக்ஸ்பிரிமெண்டாகச் செய்து பார்க்கலாமா…? நிஜமாக இல்லை… விளையாட்டாகவாவது உன் மதுவை என் பக்கம் திருப்பிக் காட்டட்டுமா…?
ஷைலஜா யோசித்தாள். சற்றுமுன் தானே பொறாமைப்பட்ட சித்ராவின் அழகு பயமுறுத்தியது.
என்ன பேசாமல் இருக்க…?
இல்ல சித்ரா… என் மது அப்படி இல்ல…
திருப்பித் திருப்பி அதையே சொல்லாத… அப்படி ஒரு நம்பிக்கை அசையாமல் இருக்குமானால் ஏன் தயங்கின…? ஏன் பேசாமல் இருந்த… அந்த ஒரு நிமிட மௌனம் உன் அவநம்பிக்கையைத் தானே காட்றது…
நோ… என் மதுவை நான் நம்பறேன், பரிபூரணமாக நம்பறேன்.
அந்த நம்பிக்கை தப்புன்னு நிரூபிச்சுக் காட்டறேன்னுதான் நான் சொல்றேன். ஜெயிக்கப் போறது நீயா, நானான்னு பார்த்துடலாமே… இந்தச் சாலன்ஜ்க்கு சரி சொல்லேன்…
அவள் மீண்டும் தயங்க, சித்ரா பேசினாள். உன் தயக்கத்தையே நான் என் வெற்றியாக எடுத்துக்கட்டுமா…?
நீ தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக் கொள்கிறாயா…?
நோ… ஐ’யம் ரெடி டு ஃபேஸ் தி சாலன்ஜ்… நான் ஜெயிச்சால் என்ன தருவ…?
உங்க வீட்ல சொல்லி மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணித்தரேன். ஓ.கே.?
ஓ.கே…
ஒருவேளை நான் ஜெயிச்சுட்டால் நீ என்ன எனக்குத் தருவாய்…?
ம்…?
என்று யோசித்த ஷைலஜா கண்களை மூடி மனம் விம்ம நெஞ்சில் ஓர் உறுதியை ஏற்படுத்திக்கொண்டு அழுத்தமான குரலில் சொன்னாள்.
அப்படி அவர் உன் பக்கம் திரும்பினார்னால் அவரை நீயே கல்யாணம் பண்ணிக்க…
அந்தப் பதிலில் அரண்டு போய்ப் பளீரென்று திரும்பி அவளைப் பார்த்தாள் சித்ரா…
2
ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறையச் சந்தேகங்கள் தோன்றின.
‘அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை நீயே கல்யாணம் பண்ணிக்க…’
‘இதற்கு என்ன அர்த்தம்…? கோபத்தில் வந்த பேச்சா…? இல்லாவிட்டால் வருத்தமா? எதற்காகக் கோபமும், வருத்தமும் படவேண்டும்? மது