Visiri Vaazhai
By Savi
()
About this ebook
Read more from Savi
Character Rating: 0 out of 5 stars0 ratingsMouna Pillaiyar Rating: 0 out of 5 stars0 ratingsWashingtonil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsOoraar Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsPazhaya Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsTheppo 76 Rating: 0 out of 5 stars0 ratingsCollege Road Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsApple Pasi Rating: 0 out of 5 stars0 ratingsKomaganin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsVadam Pidikka Vaanga Jappanukku Rating: 0 out of 5 stars0 ratingsNavakaali Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Selvan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Visiri Vaazhai
Related ebooks
Sabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Varaali Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal 2.0 Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsEllame Nee Sonnathu... Rating: 0 out of 5 stars0 ratingsAgni Kunju Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsMutham Yaarudaiyathu? Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Sandaikozhiye! Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vendam Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsNaathamenum Kovilile… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsVaansudar Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Nadanthathu Nadanthapadiye! Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Visiri Vaazhai
0 ratings0 reviews
Book preview
Visiri Vaazhai - Savi
https://www.pustaka.co.in
விசிறி வாழை
Visiri Vaazhai
Author:
சாவி
Savi
For more books
https://www.pustaka.co.in/home/author/savi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
முடிவுரை
முன்னுரை
இக்கதை ‘வாஷிங்டனில் திருமணத்’தைப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித்தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு.
இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
அந்த மாபெரும் இலக்கியங்களுடன் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதையின் முடிவில்தான் நேயர்கள் இதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்.
இந்தத் தொடரின் பின்னுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருக்கிறது. அது இக்கதையில் வரும் கதாபாத்திரங்களையோ, நிகழ்ச்சிகளையோ பற்றி அல்ல. அதை இப்போதே கூறி விட்டால் சுவாரசியம் கெட்டுவிடுமாகையால் இப்போது கூறாமல் கதையைத் தொடங்குகிறேன்.
சாவி
1
ராஜா…!
மாடியிலிருந்து ஒலித்தது அந்த அதிகாரக் குரல். கண்ணியமும் கம்பீரமும் மிக்க அந்தக் குரலுக்குரியவளின் பெயர் பார்வதி. குரலினின்று பார்வதியின் உருவத்தை - நிறத்தை - அழகை - வயதைக் கற்பனை செய்ய முயலுகிறோம். முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில், அந்தக் கன்னிப் பெண் - இல்லை, வயதான மங்கை - ஊஹூம், குமாரி பார்வதி, அதுவும் சரியில்லை - பின் எப்படித்தான் அழைப்பது? சாரதாமணிக் கல்லூரியின் தலைவி டாக்டர் குமாரி பார்வதி, அதுதான் சரி - இப்போது கீழே இறங்கி வரப் போகிறாள். அப்போது நேரிலேயே பார்த்து விடலாம்.
மேஜை மீது வைக்கப்பட்டுள்ள காப்பி ஆறுவதுகூடத் தெரியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள சில வரிகளில் மனத்தைச் செலுத்தி அவற்றையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளை அவ்வளவு தூரம் கவர்ந்துவிட்ட அந்தப் புத்தகம் வேறொன்றும் இல்லை. ‘பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்’ என்னும் நூல்தான்.
பார்வதி தற்செயலாகத் தலை நிமிர்ந்தபோது எதிரில் ஆறிக் கொண்டிருக்கும் காப்பியைக் கவனித்தாள். சாப்பிடுவதற்குப் பக்குவமாக இருந்த சூடு இப்போது அதில் இல்லை. ஆறிப் போயிருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட்படுத்தாமல் எடுத்துக் குடித்தாள். அவள் பார்வை பலகணியின் வழியாக ஊடுருவிச் சென்று சற்றுத் தூரத்தில் தெரிந்த சாரதாமணிக் கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் பதிந்தது. அந்த வெண்மையான தூய நிறக் கட்டடத்தைக் கண்டபோது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. எண்ணம் ஆறு மாதங்களுக்குப் பின் நோக்கிச் சென்று, அப்போது நிகழ்ந்த ஒரு காட்சியைச் சலனப் படமாக்கி, மனத் திரைக்குக் கொண்டு வந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்வதி - முதல் முறையாக அவரைச் சந்தித்தாள். அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, வார்த்தைகளைத் தராசிலே நிறுத்துப் போட்டுச் செலவழிக்கும் சிக்கனம், கலகலவென்ற குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு! - எல்லாம் நினைவில் தோன்ற நெஞ்சத்தை நிறைத்தன. அவள் தன்னுள் வியந்து கொண்டாள். ஒருமுறை அந்த ஹாஸ்டல் கட்டடத்தின் கம்பீரத்தைக் கண்ணுற்றாள். இருப்பது ஒரே நாள். நாளைக் காலைக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தாக வேண்டும். மாலையில் விழா ஒரே கோலாகலமாயிருக்கும். அவர் வந்து புதிய ஹாஸ்டல் கட்டடத்தைத் திறந்து வைப்பார். அழகாகப் பேசுவார். மாணவிகள் கை தட்டி ஆரவாரம் செய்வார்கள். கலை நிகழ்ச்சியின் குதூகலத்துடன் ஆண்டு விழா இனிது முடிவுறும். அப்புறம்…? மறுநாள் திங்கள் அன்று காலை வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் போது கலகலப்பெல்லாம் ஓய்ந்து, திருவிழாக் கோலம் கலைந்து பேரமைதி நிலவும். இந்தக் காட்சியையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.
ராஜா!
மீண்டும் குரல் கொடுத்தாள் பார்வதி. பதில் இல்லை. பதில் கொடுக்க வேண்டியவன் அங்கே இல்லை.
கீழே சாம்பிராணிப் புகை கம்மென்று மணம் வீசி அந்தப் பங்களா முழுவதும் நெளிந்து வளைந்து அடர்த்தியாக மண்டியது. அம்மம்மா! என்ன மணம்! அந்தத் தெய்வீக மணத்தை நுகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக ஊசல் ஆடிக் கொண்டிருந்தது.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதாமணி தேவியாரும் ஹால் சுவரின் இன்னொரு புறத்தை அலங்கரித்தார்கள்.
ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் சின்னங்கள்
என்று யாரோ எப்போதோ கூறியதாக ஞாபகம்.
ராஜா…!
வீணையின் ரீங்காரம் போல மூன்றாம் முறையாக ஒலித்தது அக்குரல்.
ராஜா இல்லை அம்மா…! விடியற்காலை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனவர்தான். இன்னும் வரவில்லை. என்.ஸி.ஸி. போலிருக்கிறது…
சமையல்காரி ஞானம் குரல் கொடுத்தாள்.
வாசல், ‘போர்ட்டிகோ’வுக்கு முன்னால் துடிப்பாக வளர்ந்து கொண்டிருந்த விசிறி வாழையின் இரண்டொரு இலைகள் அசைவதைத் தவிர, அந்தப் பங்களாவுக்குள் வேறு சலனமே இல்லை. காம்பவுண்ட் கேட்டருகில் தேய்ந்துபோன முக்காலியில் உட்கார்ந்திருந்தான் கூன் முதுகுப் பெருமாள். அவனுக்கு அந்தப் பங்களாவுக்கு உள்ளே, வெளியே நடக்கிற விவகாரம் எதுவுமே தெரியாது. காரணம், காது கொஞ்சம் மந்தம். முன்னெல்லாம், அதாவது அவனுடைய அறுபதாவது வயதில் இப்படி இல்லை. இப்போது ஒரே டமாரச் செவிடு பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் ஒன்றும், அல்லி அரசாணி மாலையும், வயது முதிர்ந்து காலத்தின் சுழலிலே தாக்குண்டு, பழுப்பேறி, ஏடுடைந்து தொட்டால் துகளாக உதிர்ந்து விடும் நிலையில் அவன் அறிவுத் தோழர்களாக அவனுடனேயே இருந்து கொண்டிருந்தன. பெருமாள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். அது சர்விஸில் ஏற்பட்ட பழக்கம்! நரம்புகள் தளர்ச்சியுற்று உடல் முழுவதும் சுருக்கங்கள் கண்டு, முதுகில் கூன் விழுந்த பிறகும் அவனை வெளியே அனுப்பிவிடப் பார்வதியின் இளகிய மனம் இடம் தரவில்லை.
கல்லூரியின் சேவகனாக ஐம்பது ஆண்டுக் காலம் தொண்டாற்றிய அந்தத் தொண்டுக் கிழவனை அநாதரவாக விட்டுவிட மனமின்றித் தன்னுடைய பங்களாக் காவலனாக அமர்த்திக் கொண்டாள்.
சாப்பாட்டு ஹாலில் ராஜாவுக்கும் பார்வதிக்கும் மணை போட்டு தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந்திருக்கும். இன்று கொஞ்சம் லேட், ராஜா வந்தால் சாப்பிட உட்கார வேண்டியதுதான். அது ஏனோ, பார்வதிக்கு ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது. பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனை நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனை ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்து கொண்டு உள்ளே சென்றான். காலையில் செய்த அவசரத்தில் அவனுக்கு உடல்களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பிராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது.
வீட்டுக்குள் நுழையும்போதே, அத்தை பசி…! பசி…! வா அத்தை!
என்று எக்காளமிட்டுக் கொண்டே சமையலறையை நோக்கி விரைந்தான். நொடிப்பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்து விட்டான்.
தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே! என்ன சமையல் இன்றைக்கு அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிற வரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்…! இடியட் பெருமாள் நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு… உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்…!
வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா.
சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக்கோஸும் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது.
அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டு வந்து போடு… பசி தாங்கவில்லை. அத்தையைக் காணோமே… அத்தே! அத்தே! நீ வரப் போகிறாயா. நான் சாப்பிடட்டுமா?
ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பரிமாறினாள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக் கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக்கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப்போய், பூ! பூ!
என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண்டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய், ஏண்டா ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லையா? உனக்காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவதற்குள் என்ன அவசரம் வந்துவிட்டது உனக்கு?
ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன்!
துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லை. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும் அவளுடைய எளிமையான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போய் இருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களை அலங்காரம் செய்துகொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியது இல்லை அவள்.
ஏண்டா கறியைச் சுடச்சுட விழுங்கி விட்டாயா? அவசரக்குடுக்கை ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்…
பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாசூக்காகக் கண்டித்தபடியே மணைமீது அமர்ந்தாள்.
அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை! அப்போது ருசியை இழந்து விடுவோம்
என்றான் ராஜா.
பார்வதிக்குச் சுருக் என்றது.
அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாதுதான்… ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல்கிறான்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கிறானா? அல்லது…
காலையில் மேஜை மீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போதுகூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்துவிட்டது கால தாமதத்தினால் நேர்ந்த இழப்புத்தானே?
ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிறோமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும் போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத்தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்பவர்களின் வாழ்க்கையைத் துருவினால், அவர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால், இந்த உண்மை நமக்குப் புலனாகாமல் போகாது. சிற்சில சமயங்களில் என்னை நான் மறந்து விடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதனால் என் வாழ்க்கையில் நான் பெற வேண்டிய இன்பத்தைப் பெறத் தவறிவிட்டேனா? காலம் கடந்து போய்விட்டதா?
பார்வதியின் சிந்தனையைக் கலைத்தான் ராஜா.
அத்தை! இந்தச் செவிட்டுப் பெருமாளை எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிறாயோ? காதுதான் கேட்கவில்லையென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கி விடுகிறானே!
பாவம்! அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்லை… அத்தோட காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்தவனைக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா…?
கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை?
நாளைக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா! உனக்கு இன்றும் நாளையும் லீவு தானே! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினீயர் படிப்பு படிப்பவனாயிற்றே! புதிய ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரியில் டெகரேஷன் வேலை நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு ‘டேஸ்ட்’ உண்டே…!
பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா அத்தை?
தாராளமாக வரலாம். அங்கே இப்போது கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர்களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய்! ரொம்ப வாயாடிப் பெண்கள்!
என்றாள் பார்வதி.
பாரதியா? யார் அத்தை அது? எஸ். பாரதி, பி.எஸ்ஸி. ஸெகண்ட் இயர் ஸ்டுடண்ட்தானே ‘ஸ்லிம்’மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணா?
அவளை உனக்கு எப்படித் தெரியும், ராஜா?
அத்தையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன.
ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறினோம். மாஸ்டர் அந்தப் பெண்ணுக்குத்தான் ‘பாயிண்ட்’ கொடுத்தார். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ‘லேடீஸ் ஃபஸ்ட்’ என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.
அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?
அத்தை கேட்டாள்.
ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வோமிந்த நாட்டிலே… இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்? என்பது கேள்வி. ‘பாரதி’ என்று நாங்கள் இருவரும் பதில் கூறினோம். ‘சபாஷ்’ என்று கூறிய மாஸ்டர், ‘உன் பெயர் என்னம்மா?’ என்று அந்தப் பெண்ணைக் கேட்டார். ‘பாரதி’ என்று நாணத்துடன் பதில் கூறினாள் அவள். அப்போதுதான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும்
என்று கூறினான் ராஜா.
வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும்கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருகிறது. இதற்காக ஆண்டு விழாவின் போது பரிசாகக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய வெள்ளிக் கோப்பைகூட வாங்கி வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல. கலை நிகழ்ச்சியில் குறத்தி டான்ஸ் ஆடப் போகிறாள் அவள்…
என்று கூறினாள் பார்வதி.
குறத்தி வடிவத்தில், குதூகலத்தின் எல்லையில் வாலிபத்தின் எக்களிப்போடு, ராஜாவின் மனக்கண் முன் தோன்றினாள் பாரதி.
ராஜா பால் பாயசத்தை உறிஞ்சிக் கொண்டே பாரதியின் அழகை அசை போடலானான்.
உங்கள் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் பாயசம் போடுகிறேன்
என்றாள் ஞானம்.
என்ன ஞானம்? இன்றைக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் போட்டிருக்கிறாய்?
என்று அப்போதுதான் விசாரித்தாள் பார்வதி.
இன்றைக்கு உங்களுக்குப் பிறந்த தினமாயிற்றே! அது உங்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது, எந்நேரமும் கல்லூரியைப் பற்றிய நினைவுதான்.
ஞானம் கூறினாள்.
நாற்பத்தாறு வயதா ஆகிவிட்டது எனக்கு? காலம் விளையாட்டாக ஓடி விட்டது. கல்லூரிக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம்தான். கல்லூரிக்கு நாளை ஐம்பதாவது ஆண்டு விழா. எனக்கு நாற்பத்தேழாவது பிறந்த நாள்.
தான் வேறு, கல்லூரி வேறு என்ற உணர்வே அவளிடம் கிடையாது.
இந்தக் கல்லூரியிலேயே படித்து, இங்கேயே லெக்சரராக வேலை பார்த்து, இப்போது அதன் தலைவியாகவும் ஆகிவிட்டேன். ‘ஹ்ம்ம்’ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு மனத்தில் தோன்றிய எண்ணத்தை மறைக்க முயன்றாள்.
அத்தை, உனக்கு அடிக்கடி பிறந்த நாள் வர வேண்டும்
என்று வாழ்த்திக் கொண்டே எழுந்தான் ராஜா.
ஏண்டா நான் சீக்கிரத்திலேயே கிழவியாகி விட வேண்டும் என்று வாழ்த்துகிறாயா?
என்று கேட்டாள் பார்வதி.
பாயசத்துடன் எழுந்து விட்டாயே, மோர் சாப்பிடவில்லையா ராஜா?
என்று கேட்டாள் ஞானம்.
ஹவுஸ் புல்!
என்று கூறிக் கொண்டே திருப்தியுடன் ஓர் ஏப்பம் விட்டான் ராஜா.
உனக்கு எப்போதும் இந்தச் சினிமாப் பேச்சுதான்… சரி, போய் காரை எடு. காலேஜுக்குப் புறப்படலாம்
என்று அத்தை கூறி முடிக்கும் முன்பே, ஓ.கே…!
என்று வாசலுக்குப் பாய்ந்து ஓடினான் ராஜா.
பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணாந்து பார்த்து வணங்கி விட்டுக் காரில் ஏறிக் கொண்டாள். கார் ‘போர்ட்டிகோ’வை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதையாக முக்காலியை விட்டு எழுந்து நின்றான்.
அத்தை! இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்…! கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!
என்றான் ராஜா.
உன் மாதிரி ‘ஹிட்ச்காக்’ படம் பார்க்கச் சொல்கிறாயா, அவனை?
ஹாரன் செய்தபடியே காரைக் கலாசாலைக் காம்பவுண்டுக்குள் செலுத்திப் பிரின்ஸிபால் அறைக்கு முன்னால் கொண்டு நிறுத்தினான் ராஜா. அந்த ஹாரன் சத்தம் கலாசாலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒலித்தபோது, ஆங்காங்கே அதுவரை ‘கசமுசா’வென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ‘கப்சிப்’பென்றாகிப் ‘பிரின்ஸிபால் வந்து விட்டார்’ என்ற எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்யத் தொடங்கினர்.
"ராஜா! புதிய ஹாஸ்டல் கட்டடத்தில்தான் மீட்டிங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறப் போகின்றன. எலெக்ட்ரீஷியனை வரச் சொல்லியிருக்கிறேன்.