Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agni Kunju
Agni Kunju
Agni Kunju
Ebook299 pages1 hour

Agni Kunju

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580125405859
Agni Kunju

Read more from Vaasanthi

Related to Agni Kunju

Related ebooks

Reviews for Agni Kunju

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agni Kunju - Vaasanthi

    http://www.pustaka.co.in

    அக்னிக் குஞ்சு

    Agni Kunju

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    ஜன்னல் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தபோது தோட்டமும், வீட்டின் முகப்பும், வாசல் வராந்தாவை ஒட்டிய மண் தரையும், அதில் குனிந்து வேலைக்கார ருக்மிணி கோலம் போடுவதும் தெரிந்தன.

    தினமும் காலை கண்விழித்ததும் பார்க்கும் இந்தக் காட்சிகளை ராதிகா இன்றும் அலுக்காமல் சுவாரஸ்யத்துடன் பார்த்தாள்.

    ருக்மிணியின் கையிலிருந்து மந்திரக்கோல் நகர்ந்தது போல மளமளவென்று ஈர மண் தரையில் பளிச்சென்று புள்ளிகள் விழுந்தன. வளைந்து வளைந்து கோடுகள் அவற்றைப் பின்னின. இதழ்களும் மலர்களுமாய் விரிந்தன.

    இத்தனைப் பெரிய கலைப் படைப்பைப் படைத்திருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாத அலட்சியத்துடன் ருக்மிணி நிமிர்ந்தாள். அரை வினாடி கூட கோலத்தை மறுபார்வை பார்க்காமல் கோலமாவு டப்பாவை எடுத்துக் கொண்டு உள்ளே விரைந்தாள்.

    சற்று நேரம் தோட்டத்தையும், நிர்மலமான வானத்தையும் பார்த்தபடி நின்றுவிட்டு ராதிகா முகம் கழுவச் சென்றாள்.

    அப்பா எழுந்து விட்டதற்கு அடையாளமாக ரேடியோவின் ஓசைக்கேட்டது. அப்பா வைக்கும் நிகழ்ச்சிகளில் சங்கீதத்தைவிட, செய்தி அறிக்கைகள்தான் அதிகம் இருக்கும். சங்கீத நிகழ்ச்சி ஆரம்பித்தால் படக்கென்று - வேறு யார் கேட்டுக் கொண்டிருந்தாலும் அணைத்து விட்டுப் போவார், தாட்சண்யம் பார்க்காமல்.

    இன்றைக்கு அதிசயமாக சங்கீதம் ஒலித்தது. இந்துஸ்தானி சங்கீதம். பர்வீன் சுல்தானாவின் குரல் ஆறு கட்டை சுருதியில் மால்கோஷ்ராக சஞ்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. ராதிகா தன்னையறியாமல் பல்லைத் துலக்கிக் கொண்டே ராகத்தை இழுத்தாள்.

    குரல் அனாயாசமாக இயல்பாக பிர்க்காக்களை உதிர்த்துக் கொண்டு இறக்கை முளைத்தாற் போல் பறந்தது.

    சற்று நேரம் அதைப் பறக்கவிட்டு அதில் மிதந்தபோது வியப்பேற்பட்டது. தளைகளை அறுத்துக் கொண்டு கிளம்புகிற மாதிரி இந்தக் குரல் பீறிட்டுக் கொண்டு எப்படிப் பொங்குகிறது!

    பயிற்சி இல்லை.

    சாதகம் இல்லை.

    ஊக்கமளிக்கும் சூழல் இல்லை.

    அவையெல்லாம் அவசியமில்லை என்பது போலல்லவா சுருதி பிசகாமல் பிசிறடிக்காமல் எழும்புகிறது!

    அவள் வாயைக் கொப்பளித்து முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்க்கும்போது கண்களில் நீர் கோத்து நின்றிருந்தது.

    அவள் அவசரமாகக் கண்ணை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் நிச்சயம் வரக்கூடாது. அது பலவீனத்தின் அறிகுறி.

    அழுதபிள்ளை நொண்டி!

    நான் சண்டியாகவாவது இருப்பேனே தவிர, நொண்டியாக இருக்க மாட்டேன்.

    குரல் இப்போது சண்டித்தனத்துடன் மால்கோஷை இழுத்தபடியே இருந்தது. அவள் அப்பாவின் அறையைத் தாண்டும்போது ரேடியோவை, அவர் பி.பி.சி.க்குத் திருப்பியிருந்தது தெரிந்தது. அவளுக்குச் சிரிப்பு வந்தது.

    அவள் ராகம் இழுத்தது அவருக்குக் கேட்டிருக்கும்!

    அவள் வீம்புடன் குரலைப் பெரிது பண்ணி, பிர்க்காக்களை உதிர்த்தபடி சாப்பாட்டு அறைக்குச் சென்றாள்.

    அப்பா அவளைத் தொடர்ந்து கையில் பேப்பருடன் வந்து காபிக்காக உட்கார்ந்தார்.

    என்ன பாட்டெல்லாம் அமர்க்களப்படறது? என்றார், அவளை ஓரக்காண்ணால் பார்த்தபடி.

    அவருக்கு நேர் எதிராக உட்காருவதற்கு முன், ஒரு சங்கதியை இழுத்துவிட்டு, அவரைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

    மழை சீசன்லே மழை வரும். வெயில் சீசன்லே வெயிலடிக்கும். சங்கீத சீசன்லே...!

    சமையலறையிலிருந்து காபியுடன் வெளிப்பட்ட சமையல்கார பார்வதி அம்மாளின் முகத்தில் சிரிப்புத் தெரிந்தது.

    அப்பா சிரிக்கவில்லை. அவருக்கு வெகு அபூவர்மாகத்தான் சிரிப்பு வரும். அதுவும் சங்கீத விஷயமென்றால் நிச்சயம் வராது!

    இது வெறும் சீசனல்தான்னா சரி என்றார், பேப்பரில் பார்வையைப் பதித்துக்கொண்டு.

    அவள் பதில் சொல்லாமல் குனிந்து காபியைக் குடித்தாள். பக பகவென்று ஒரு சீற்றம் அடிவயிற்றிலிருந்து கிளம்பிற்று. கொஞ்ச நாட்களாக இந்தச்சீற்றம் அதிகரித்து வருவதை அவள் உணர்ந்தாள். கதகதவென்று சதா மௌனமாக, எங்கோ நெஞ்சின் அடி ஆழத்தில் கனன்று கொண்டிருக்கும் அக்னியைப் போல, அது அவிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற தீவிரம் அவள் மனத்தில் உறுதியாகியிருந்தது.

    பார்வதி அம்மாள் நகர்ந்ததும் அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.

    சீஸனில் இல்லேன்னாலும் சில விஷயங்களை கண்டிஷன் பண்ண முடியாது. முக்கியமா இரத்தத்திலே கலந்து போன ஒண்ணை...!

    அவள் அவருடைய பதிலுக்குக் காத்திராமல் காபி டம்ளரை சமையலறைக்குள் சென்று வைத்துவிட்டு,

    இன்னிக்குத் தோசையா இட்லியா? என்றாள் பார்வதியிடம்.

    உப்புமா

    ரைட்டோ. நான் குளிச்சுட்டு வந்துடறேன். ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும். தயார் பண்ணி வெச்சுடுங்கோ என்று அவள் விரைந்தாள்.

    பேப்பரில் பார்வையில்லாமல் நேர் எதிரே இருந்த சுவரைப் பார்த்தபடி அப்பா யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவள் அதை கவனியாதவள் போல் சின்ன ஓட்டத்துடன் மாடிப்படிகளைக் கடந்து தன் அறைக்குச் சென்றாள். அப்பாவின் மனத்தைப் புண்படுத்துகிறோம் என்ற மெலிதான சஞ்சலத்துடன் ஷவருக்கடியில் நின்றபோது வருத்தமேற்பட்டது. அவரிடம் இந்த மாதிரி வேண்டுமென்றே பேசும்போது, அப்படிப் பேசுவதைத் தவிர, வேறு வழியில்லை என்கிற தீர்மானம் எழுகிறது.

    ஆனால் இந்தப் பேச்சிற்கெல்லாம் என்ன விளைவு இருக்கும், அல்லது பிரயோசனம் இருக்கும் என்று யோசிக்கும்போது, இனம் புரியாத ஒரு கலக்கம் ஏற்படுகிறது. இதனால் அப்பாவின் உறவும் போய் விட்டால்?

    அப்பாவுக்கு என் உறவும் ஏமாற்றமளித்து என்னையும் விலக்கி விடுவாரானால்...

    மாட்டார்! என்று அவள் அவசரமாகச் சொல்லிக் கொண்டாள். நான் அவருடன் இருப்பது அவருடைய ‘ஈகோ’வுக்குப் பெருமை-சமாதானம்.

    நான் விலகி விடுவேனோ என்கிற பயத்தில்தான், என் குரலுக்குக்கூட அணை கட்டப்பார்க்கிறார்!

    ஆனால் இந்த அணைக்கட்டிலே ஆபத்து என்று அவருக்குத் தெரியவில்லை. தடுக்கத் தடுக்க அதை உடைக்க ஒரு பிரவாகம் சீறிக்கொண்டு கிளம்பும் என்று உணரவில்லை.

    இந்த வேகமெல்லாம் சமீப காலமாகத்தான் அவளுள் புகுந்திருக்கிறது. இதுவரை பிரிக்கப்பாடாத ஒரு மூச்சிழை அகஸ்மாத்தாகப் பிரிக்கப்பட்டாற்போல.

    கண்ணாடியின் எதிரில் தலைசீவிக் கொள்ளும்போது அவளது பிம்பத்துக்குப் பின்னால் நிழற் படங்கள் தோன்றின.

    காலேஜில் இகனாமிக்ஸ் லெக்சரராக இப்பொழுது இருக்கும் கல்யாணி-வேறு ஊரிலிருந்து வந்திருப்பவள்- அப்பா அன்று ராதிகாவைக் காலேஜில் இறக்கிவிட்டுப் போனதை, மேல் படிக்கட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    குட் மார்னிங்! மேடம்! என்று அவளைத் தாண்டும்போது -

    குட்மார்னிங்! என்ற கல்யாணியின் முகத்தில் தீவிர யோசனை தெரிந்தது.

    உங்கப்பா பேரு ஜகன்னாதனா? என்றாள் தயக்கத்துடன்.

    ஆமாம் என்றாள் ராதிகா மலர்ச்சியுடன். உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?

    தெரியாது! என்றாள் கல்யாணி, அதே தூரப் பார்வையுடன். கேள்விப்பட்டிருக்கேன்.

    அவள் எதிர்பார்க்காமல் கல்யாணி கூடவே நடந்தாள்.

    உனக்குத் தம்பி தங்கைகள் எல்லாம் எத்தனைப் பேர்? என்று எதேச்சையாகக் கேட்பது போல் கேட்டாள்.

    யாருமில்லே! என்றாள் ராதிகா, லேசான புன்னகையுடன். எனக்கு அம்மா கிடையாது. எனக்கு ஒரு வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க!

    கல்யாணி ஒரு வினாடி நின்று அவளை வியப்புடன் பார்த்தது அவளுக்கு வினோதமாகத் தோன்றிற்று.

    பிறகு கல்யாணி தலையைக் குனிந்தபடி, ஓ ஐ ஆம் ஸாரி என்று நடையைத் தொடர்ந்து வேறு பக்கம் சென்றாள்.

    கல்யாணியின் கேள்விக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று, அன்று அவளுக்குத் தோன்றவில்லை.

    ‘அம்மா இல்லையா, பாவம்?’ என்று யார் கேட்டாலும் எந்தப் ‘பாவமான’ உணர்ச்சியும் இதுவரை ஏற்பட்டதில்லை.

    அம்மாவைப் பார்த்தே இராதபோது உணர்ச்சி எங்கிருந்து வரும்?

    வீட்டில் அப்பா ஒரு போட்டோவைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற மனத்தாங்கல் ஒன்றுதான் அவளுக்குள் சில சமயம் வெடிக்கும்.

    அவளுடைய போட்டோ இருந்தா என் துக்கம் அதிகரிக்கும் என்கிற எண்ணத்திலே எல்லாத்தையும் அழிச்சுட்டேன் என்கிற அப்பாவின் விளக்கம் சமனப்படுத்தும்.

    சமனப்படுத்திற்று சமீப காலம்வரை -

    அன்றைக்குப் பிக்னிக்கில் கல்யாணியின் எதேச்சையான வார்த்தைகள் அவள் காதில் விழுந்திருக்கா விட்டால், இன்னும் மனசுக்குள் ஓர் ஊமைத்தனம் இருந்திருக்கும்.

    அன்று பிக்னிக்கில் விஜி பாடினாள். மீரா பாடினாள்.

    திடீரென்று கல்யாணி ராதிகா, நீ பாடல்லியா? என்றாள்.

    நா பாட்டே கத்துக்கிட்டதில்லே, பாட்டு வராது! என்றாள் ராதிகா.

    எப்படி? என்று கல்யாணி புருவத்தை உயர்த்தினாள். நா நம்பமாட்டேன். பாத்ரூம் ஸிங்கர்கூட இல்லையா நீ?

    ஆ… அது உண்டுதான்!

    அப்பப் பாடு!

    பாடத் தயக்கமாக இருந்தது. ஆனால் மறுக்க முடியவில்லை.

    ஓர் இந்திப் பாட்டைப் பாடினாள். வானைப் பிளந்து கொண்டு ஒரு கரகோஷம் எழுந்தது.

    ஏய், இத்தனை நல்லா பாடறே! பாட்டு வராதுன்னு ஏமாத்தத்தானே பார்த்தே? என்று சாடினார்கள் சினேகிதிகள்.

    எனக்குத் தெரியவே தெரியாது; ராதிகா இவ்வளவு நல்லா பாடுவான்னு! என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ஹிஸ்டரி லெக்சரர் விமலா. எல்லாரும் கும்பல் கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும்போது, ராதிகா பின்னால் இருந்ததை கல்யாணி கவனிக்காமல், மெல்லிய குரலில் சொன்னாள்.

    அவ நல்லாப் பாடறது ஒண்ணும் அதியசமில்லே. அவ அம்மா ரொம்ப நல்லாப் பாடுவா, எ கிரேட் சிங்கர்! பிறகு குரலை வெகுவாகத் தாழ்த்தி பாவம் அவ வாழ்க்கைதான் ரொம்ப மோசமானது! என்ற வார்த்தைகள் ராதிகாவின் காதில் தெளிவில்லாமல் விழுந்தன.

    அன்றைக்கு முழுவதும் குழம்பிவிட்டு, மறுநாளைக்கு கல்யாணியைத் தேடிக்கொண்டு போனாள். நல்லவேளையாகக் கல்யாணி ஸ்டாஃப் ரூமில் தனியாக இருந்தாள்.

    மேடம், உங்களுக்கு என் அம்மாவைத் தெரியுமா? என்றாள் நேராக.

    கல்யாணியின் கண்களில் ஒரு தயக்கம் புகுந்து கொண்டது தெளிவாகத் தெரிந்தது.

    2

    ராதிகா, டிபன் ரெடி. வரியா?

    தலையை வாரக்கூட மறந்த நிலையில் பழைய நினைவோட்டத்தில் விரைந்தோடியிருந்த மனசைச் சட்டென்று ராதிகா இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.

    பரபரவென்று சீவிக்கொண்டே இதோ வரேன் மாமி என்று பதில் குரல் கொடுத்து, அவரச நிலையிலும் மறக்காமல் ஸல்வார் காமீஸுக்குப் பொருத்தமான காதணியையும் வளையலையும் மாற்றிக்கொண்டு, திமுதிமுவென்று மாடிப்படிகளில் இறங்கும்போது, வினோதமாக கல்யாணியின் தயக்கப் பார்வையும் கூடவே வந்தது.

    டைனிங் டேபிளுக்கு வந்து டிபனைச் சாப்பிட்டுக் கொண்டே பேப்பரை ஒரு நோட்டம் விடும்போது-கரிய வரிகளுக்கிடையேயும் ராஜீவ் காந்தியின் முகத்தின் நேர் மேலாகவும் அந்த நினைவு நகராமல் பிடிவாதத்துடன் நின்றது.

    அவள் கல்யாணியைப் பார்த்துக் கிட்டத்தட்ட யாசிக்கும் குரலில் ஆங்கிலத்தில் கேட்டாள்.

    எங்கம்மாவைப்பற்றி என்னிடம் பேச யாருமேயில்லை உங்களுக்கு என் அம்மாவைத் தெரியும்னு நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து எனக்கு அவங்களைப் பத்திச் சொல்லணும்.

    கல்யாணி சில வினாடிகள் பேசாமல் தரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

    எனக்குக் காந்திமதியோடத் தொடர்பு விட்டுப்போய் ரொம்ப வருஷமாயிட்டது என்றாள் மெல்லிய குரலில்,

    ஆனா அவங்களைத் தெரியுமில்லே?

    தெரியும். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சோம்.

    ராதிகா விருக்கென்று விரைந்து அவளெதிரில் முகமெல்லாம் மலர்ச்சியாக அமர்ந்தாள். தன்னையறியாமல் கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

    சொல்லுங்க, எங்கம்மா எப்படியிருப்பாங்க? ஒரு போட்டோக்கூட எங்க வீட்டிலே இல்லே. உங்ககிட்ட இருக்குமா?

    கல்யாணியின் முகத்தில் வியப்பா வெறுப்பா என்று புரியாத ஒரு பாவம் தெரிந்தது.

    உனக்குப் போட்டோவைக்கூட உங்கப்பா காட்ட இஷ்டப்படல்லியா?

    அப்பாவைப் பற்றி இவள் தவறாக நினைத்துவிடக் கூடாது என்கிற அவசரத்துடன் ராதிகா சொன்னாள்.

    போட்டோவைப் பார்த்தா மனசு அதிகமாக் கஷ்டப்படும்னு அப்பா எல்லாத்தையும் துக்கத்திலே அழிச்சுட்டாராம்!

    கல்யாணி சற்று நேரத்துக்கு பதில் சொல்லாமல் யோசனையுடன் மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தாள். அதரங்களில் எதற்கு அந்த இளக்காரப் புன்னகை என்று ராதிகாவிற்கு வியப்பாக இருந்தது.

    உங்கப்பா என்ன சொல்லியிருக்காங்க, உன் அம்மாவைப் பத்தி?

    இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் விழித்தாள்.

    உண்மையில் அப்பா எதுவுமே சொன்னதில்லை. எப்பொழுது கேட்டாலும் ஏதோ மழுப்பலாகவே சொல்லியிருப்பதாக இப்பொழுது, வகையாகத் தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதில் அவளுக்குப் புரிந்தது.

    ஒண்ணுமே சொன்னதில்லை. நானும் தொண தொணக்கறதை விட்டுட்டேன், அவங்களுடைய துக்கத்தை கிளறக்கூடாதுன்னு. ஆஃப்டர் ஆல் அப்பாதானே எனக்கு அம்மாவுமா கவனிச்சு வந்திருக்காங்க, அம்மா இல்லாத குறை தெரியாம?

    அவங்க மறுபடி கல்யாணம் பண்ணிக்கல்லே? -

    இல்லே. என்னை ஒரு தூரத்து உறவு அத்தை கவனிச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்க போன வருஷம் இறந்துட்டாங்க. வேற யாரும் இல்லாததாலே அப்பாவுக்கு என்மேலே ரொம்ப பிரேமை. சில விஷயங்களைப் பத்திப் பேசறது அவங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். அதனாலே நா பேசமாட்டேன்.

    கல்யாணி அவளை தீர்க்கமாகப் பார்த்தாள்.

    உங்கம்மா, அப்புறம் சங்கீதம், இந்த விஷயங்கள் தானே?

    ராதிகா மெல்லிய திகைப்புடன் அவளைப் பார்த்தாள், கல்யாணியின் முகத்தில் தெரியும் கடுமையைக் கண்டு, சுபாவமாக அவளது அதரங்களில் எப்பவும் தவழும் புன்னகை உறைந்து போயிற்று.

    ஆமாம் என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

    ஐ ஆம் நாட் ஸர்பரைஸ்ட் என்றாள் கல்யாணி அடிக்குரலில் கோபம் தொனிக்க.

    அப்பாவின் மேல் இவள் பாய்வது அனாவசியம் என்று ராதிகாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

    எங்கம்மாவைப் பத்திச் சொல்லுங்க. எங்கப்பாவைப் பத்தித்தான் எனக்குத் தெரியுமே?

    கல்யாணி பதிலுக்குச் சிரித்தாள், கேலி செய்வது போல.

    என்னத் தெரியும், உனக்கு உங்கப்பாவைப் பத்தி?

    மார்புக்குத் குறுக்காகக் கைகளை மடித்து, கண்களை முழுவதும் திறக்காத நிலையில் அவளைப் பார்த்து, கல்யாணி அப்படிக் கேட்கும்போது அடிவயிற்றை இனம் புரியாத ஒரு சங்கடம் கலக்கிற்று.

    ‘என்ன சொல்லப் போகிறாள் இவள், அப்பாவைப் பற்றி, இதுவரை உன்னத பீடத்தில் அவள் வைத்திருக்கும் அப்பாவைப் பற்றி?’

    ‘அம்மாவிடம் இவளுக்கிருந்த சினேகிதத்தைவிட, அப்பாவின் மேல் இவளுக்கிருக்கும் விரோதம் அதிகம் போல் இருக்கிறதே? எதற்கு இந்தக் கோபம்?’

    ‘இத்தனை வருஷம் கழித்தும் புதிய பலத்துடன் அது வெடிக்குமானால் அது எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும்? அப்பாவுக்கும் இவளுக்கும் ஏதேனும் உறவிருந்திருக்குமா? ஏமாற்றத்தில் பேசுகிறாளா?’

    கல்யாணியின் கேள்வி கிளப்பிவிட்ட கேள்விக் குமிழிகள் ஒன்றை ஒன்று மோதி மனசில் சிதறல்களாக விழுந்தன. அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டு, வீம்புடன் பதில் சொன்னாள்.

    அவர் ஒரு நல்ல அப்பான்னு தெரியும்.

    கல்யாணி திடீரென்று வெளிப்படையான சீற்றத்துடன் கேட்டாள்.

    ஒரு கணவனா ஓர் ஆண் எப்படி நடந்துக்கறான் என்கிறதிலேதான் அவனுடைய உண்மையான ரூபம் தெரியும்னு உனக்குத் தெரியாது. டூ யூ நோ வாட் கைண்ட் ஆஃப் எ ஹஸ்பெண்ட் ஹி வாஸ்?

    ராதிகா பதில் சொல்லத் தெரியாமல், நடுத்தெருவில் நிர்வாணமாக நிற்கும் அப்பாவை இப்பொழுது எப்படிக் காப்பது என்கிற குற்ற உணர்வுடன், தலை குனிந்தபடி சொன்னாள்.

    எனக்கெப்படித் தெரியும், அவரை நா அந்த ரோல்லே பார்க்கவே பார்க்காதபோது? சொல்லுங்க, எங்கம்மாவைக் கஷ்டப்படுத்தினாரா?

    கஷ்டமா? அவ வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டாரு!

    இவளுடைய இந்தப் பிரத்யட்ச ஆத்திரத்தைப் பார்க்கும் போது, இவள் கண்டிப்பாய் அம்மாவுக்கு வெகு ஆப்த தோழியாக இருந்திருக்க வேண்டும் என்று ராதிகாவுக்குப் புரிந்தது.

    அவள் தயக்கத்துடன் அவளுடைய கைகளைப் பற்றினாள்.

    எனக்கு இன்னும் புரியல்லே, நீங்க பேசறது. கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க. என்னுடைய அம்மாவோட உங்களுக்கு நெருக்கமான பழக்கம் உண்டா?

    கல்யாணி தூரப்பார்வை பார்த்தபடிச் சொன்னாள்.

    உயிர் சினேகிதிங்க, இரண்டு பேரும். சின்ன வயசிலேர்ந்து சேர்ந்தே படிச்சோம். ஒரே தெருவிலே, பக்கத்துப் பக்கத்து வீட்டிலே இருந்து கிட்டத்தட்ட ஒண்ணா வளர்ந்தோம்.

    எந்த ஊரிலே?

    "லக்னோவிலே. உங்கம்மாவுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே வேலை விஷயமாக தெற்கைவிட்டு, வடக்கே வந்தவங்க. என்னுடைய குடும்பம் மாதிரி.

    நானும் காந்தியும் எப்பவும்

    Enjoying the preview?
    Page 1 of 1