Ponniyin Selvanin Tamil Kanavu - Part 4
()
About this ebook
பல நிகழ்வுகளுக்கும், வரலாற்று நாயகர்களுக்கும், அவர்கள் தோன்றும், செய்யும் செயலுக்குச் சான்றுகள் கொடுத்துள்ளேன். ஏன் அப்படிப்பட்ட செயல்கள் நடக்கின்றன என்பது கற்பனையே! உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இராஜராஜருக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் தோன்றுகின்றன என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டால் ஈர்ப்ப்பு குறைந்துவிடும். அதற்காகவே, இந்தப் புதினம் ஒரு துப்பறியும் கதைபோலத் தொடரும்; தொடர்ந்து படிக்க உங்கள் ஆவலைத் தூண்டும் என்றே நம்புகிறேன்.
Read more from Kalki Kuzhumam
Vazhakku Mandrathukku Vandha Deivangal! Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilaiyattu Vittalan Rating: 0 out of 5 stars0 ratingsKalki Digital Deepavali Malar – 2022 Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanin Tamil Kanavu - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsUllum Puramum Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanin Tamil Kanavu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSanthamey Vadivaai... Sri Saratha Devi Rating: 0 out of 5 stars0 ratingsAbimanavalli Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanin Tamil Kanavu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKalachakkaram Rating: 0 out of 5 stars0 ratingsRavikula Thilagan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ponniyin Selvanin Tamil Kanavu - Part 4
Related ebooks
Mayiliragu Rating: 4 out of 5 stars4/5Parthiban Kanavu Anaithu Pagangal Rating: 5 out of 5 stars5/5Parthiban Kanavu - Part 1 Rating: 5 out of 5 stars5/5Ooty Varai Ularu..! Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsComedy Cocktail Rating: 0 out of 5 stars0 ratingsKolai Express Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Tagore Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsEliya Thiruppaavai Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsYaazh Nangai Rating: 0 out of 5 stars0 ratingsIshwara Allah Tere Naam Rating: 0 out of 5 stars0 ratingsChandra Pravaagam Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Nandhipurathu Naayagi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Vinnappa Kalivenba Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella... Rating: 3 out of 5 stars3/5Kumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Paravai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Varum Kanney Rating: 0 out of 5 stars0 ratingsPeraatha Pillai Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsOliyai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKalachakkaram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ponniyin Selvanin Tamil Kanavu - Part 4
0 ratings0 reviews
Book preview
Ponniyin Selvanin Tamil Kanavu - Part 4 - Kalki Kuzhumam
பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – பாகம் 4
ஒரு அரிசோனன்
ஓவியம்: தமிழ்
அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு
https://kalkionline.com/
C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.pnghttps://www.pustaka.co.in
பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – பாகம் 4
Ponniyin Selvanin Tamil Kanavu - Part 4
Author:
ஒரு அரிசோனன்
Illustrations:
தமிழ்
Source:
கல்கி களஞ்சியம் 2022
Publisher:
கல்கி குழுமம்
For more books
https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
பிற்சேர்க்கை - 1
பிற்சேர்க்கை – 2
அத்தியாயம் 1
கூத்தபிரான் நடராஜர் கோவில், தில்லை (சிதம்பரம்)¹
நள, மாசி 1 - ஜனவரி 30², 1137
தேவாரத்தைப் பாணர்களும் ஓதுவார்களும் இனிமையாக ஓதுவதைக் கண்களை மூடியவாறு ரசித்துக்கொண்டிருக்கிறார் சேக்கிழார்.
³ எவ்வளவு தடவைகள் கேட்டாலும் தெவிட்டாத இசைத்தேன் ஊற்று அல்லவா தேவாரம் என்பதை மனதில் நிறுத்தி பக்தி வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறார் அவர்.
தொண்டை நாட்டில் பிறந்திருந்தாலும், இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சர் ஆனவுடன் சோழநாட்டிற்கு வந்து விட்டார் அவர். இடது பாதத்தைத் தூக்கிப் பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தபிரானான நடராஜரை என்று முதன் முதலாகத் தில்லையில் தரிசனம் செய்தாரோ, அன்றிலிருந்தே தில்லை அம்பலவாணனின் அடிமையாகி இருக்கிறார் அவர். நடராஜரைப் பார்க்கப் பார்க்க மீண்டும் மீண்டும் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. கண்ணைத் திறந்தாலும், மூடினாலும் அவனது கருணை பொழியும் புன்னகை தவழும் முகம்தான் கருத்தில் வந்து நிற்கிறது. அதற்குப் பொருத்தமாக திருநாவுக்கரசர் பாடிச் சென்ற தேவாரம் அவர் காதில் ஒலிக்கிறது.
‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இம் மாநிலத்தே!’
ஆமாம். வில்லாய் வளைந்த அவனுடைய புருவங்களையும், கோவைப்பழ உதடுகளுக்கு இடையில் மலருகின்ற புன்சிரிப்பையும், விரிந்து பரந்த சடைகளையும், பவழமாகச் சிவந்திருக்கும் மேனியில் பாலைப் போன்று திகழுகின்ற வெண்மையான திருநீறு திகழும் பாங்கையும், ஆட்டக்கலையில் வல்ல, உலக அம்மையையே தோற்கடிக்க உயர்த்திய, தங்கத்திற்கு நிகரான திருவடிகளையும் காணக்கூடிய பேறு பெற்றால் - அதுவும் இத்தில்லை அம்பலத்தில் அவன் ஆடும் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு கிடைத்தால் - விரிந்து படர்ந்து எழுகடல்கள் சூழ்ந்த இந்த மாபெரும் பூமியில் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிய தவம் செய்ய வேண்டுமல்லவா! எப்படி அருமையாகப் பாடியிருக்கிறார், நாவிற்கே அரசரான அப்பர் பெருமான்! அரிது, அரிது, மானிடராய் பிறத்தல் அரிது என்று ஔவைப் பாட்டி சொல்லிச் சென்றபடி கிடைத்தற்கரிய மனிதப் பிறவியையும் எனக்குக் கொடுத்து, உன் காலடியில் காலம் கழிக்கும்படி செய்த உனது அருளே அருள்! பிறவிப் பெரும்பயனை எய்தி விட்டேன்!
என்று மனம் கசிந்து தில்லை அம்பலவாணனை வேண்டுகிறார்.
பூசைகள் நடந்து முடிகின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் தலையாய அந்தணர் ஒருவர் அவரிடம் தீபத்தட்டை நீட்டுகிறார். தீபத்தைக் கண்களில் பயபக்தியுடன் ஒற்றிக் கொள்கிறார். தாயைப் பிரிய மறுக்கும் கன்றைப்போல - காலைத் தூக்கி ஆடும் அவனது உருவத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே - பொன்னம்பலத்தை விட்டுக் கீழிறங்குகிறார் சேக்கிழார். அவரைப் பின் தொடர்கிறார்கள் மற்ற சோழப் பிரதானிகள்.
ஒருவர்பின் ஒருவராக அனைவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இருப்பினும் தன்னை இன்னும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நாற்பது வயதுள்ள அந்த அந்தணரைத் திரும்பிப் பார்க்கிறார் சேக்கிழார்.
Sekkizhar
என்ன ஓய், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரே! என்ன வேண்டும் உமக்கு? நான் தில்லைக்கு வந்ததிலிருந்து என் மீது அட்டையைப் போல ஒட்டிக்கொண்டு வருகிறீரே!
என்று அவரிடம் கேட்கிறார்.
எனக்கு என்ன வேண்டும், சேக்கிழார் பெருமானே? அம்பலவாணன் அருளால் எந்தவிதக் குறையும் எனக்கு இல்லை. இது நான் முன்பே தங்களிடம் பேசிய விஷயம்தான்!
என்று குழைகிறார் பாலசுப்பிரமணியர்.
நீர் நிறைய விஷயங்களை என்னிடம் பேசியிருக்கிறீர். அதில் இது என்ன விஷயம்?
திரிபுவனச் சக்ரவர்த்தியாரிடம் தமிழ்த் திருப்பணி ஆலோசகராகவும், திருமந்திர ஓலைநாயகமாகவும், பின்னர் கோப்பரகேசரியாரின் தலைமைத் தளபதியாகவும் எனது முப்பாட்டனார் பணியாற்றியது தங்களுக்கு தெரியாத விஷயமில்லை. எனது பாட்டனார் சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் குலோத்துங்க சோழர் காலத்தில் தமிழ்த் திருப்பணி ஆலோசகராகப் பணியாற்றினாலும், திருப்பணி நடக்கவே இல்லை...
ஆமாம். மற்றவர்கள் மாதிரி குலோத்துங்கருக்கு சோழ இளவரசுப்பட்டம் யாரும் கட்டவில்லை. உள்நாட்டுக் குழப்பம் விளைந்த காலத்தில் சோழ அரியணை ஏறிய அவர், தனது ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ளவே நிறைய ஆண்டுகள் போரிட்டு உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. அதற்கென்ன இப்பொழுது?
கேரளத்தில் இப்பொழுது மொழி வேறாக ஆகிவிட்டது. இங்கிருந்து சென்றால் அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை. நாம் பேசுவது அவர்களுக்குப் புரிவதில்லை. அங்காவது தமிழை நிலைநாட்டி இருக்கலாமே!
பாலசுப்பிரமணியரின் குரலில் ஆதங்கம் தொனிக்கிறது.
சேரர்களோடும், பாண்டியர்களோடும் போர் நடத்துவதே ஒரு தொழிலாகப் போய்விட்டது, அந்நாளில். கடைசியில் அவர்களைக் கப்பம் கட்டிவர ஒப்புக்கொள்ள வைத்ததே பெரும் பாடாகிப் போய்விட்டது. இந்நிலையில் சேரர்களிடம் நல்ல தமிழில் மக்களைப் பேச வைப்பதுதான் நீங்கள் எங்களுக்குச் செலுத்தும் கப்பம் என்று சொல்லும் நிலையிலா குலோத்துங்கர் இருந்தார்?
பதிலாகக் கேள்வி தொடுக்கிறார் சேக்கிழார்.
கலிங்கத்தின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருந்ததா?
கேள்விக்கு எதிர்க் கேள்வியை வீசுகிறார் பாலசுப்பிரமணியர்.
"வேங்கைநாட்டைக் காப்பாற்றக் கலிங்கர்களைக் கதிகலங்க அடிக்க வேண்டியிருந்ததே! எனது தொண்டைமண்டலப் பூபதியான கருணாகரத் தொண்டைமான் தனது வீரத்தை வெளிப்படுத்தி குலோத்துங்க சோழருக்குப் பேரையும் புகழையும் தேடிக் கொடுத்தாரே! அதனால்தானே கலிங்கத்துப் பரணியும் பாடப்பட்டது!⁴ சோழர்களின் புகழ் இப்பூவுலகெங்கும் பாடப்படப் போகிறது!" சேக்கிழாரின் குரலில் பெருமிதம் பெருகுகிறது.
சேக்கிழார் பெருமானே! தாங்கள் திரிபுவனச் சக்ரவர்த்தியாரின் இயற்பெயரான அருண்மொழி என்ற பெயரைக் கொண்டிருக்கிறீர்கள்! அவர் விரும்பியபடி, அந்தப் பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவுப்படி தமிழுக்காக ஏதாவது செய்யக் கூடாதா? நமது அரசருக்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டக் கூடாதா? நின்று போன தமிழ்ப் பணியைத் தொடரக்கூடாதா? இப்பொழுதுதான் நாட்டில் எந்தவிதமான போரும் நடக்கவில்லையே! கடைசிக் காலத்தில், கருநாட்டைப் போசளர்கள் கைவசப்படுத்தியும் போனால் போகட்டும் என்று அபயச் சோழரான முதலாம் குலோத்துங்கரே விட்டுவிட்டாரே! அவரது பெயரரான அநபாயச் சோழரும், குலோத்துங்கரின் பெயரைத் தாங்குபவருமான சோழ அரசரிடம் தாங்கள் எடுத்துச் சொல்லக்கூடாதா? தங்களது அறிவுத் திறனால் அவரைக் கவர்ந்திருக்கிறீர்கள். தங்கள்பால் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் அநபாயச் சோழர். தாங்கள் என்னை அவரிடம் கூட்டிச் சென்றால் நானும் அவரது முப்பாட்டனாருக்கும் முப்பாட்டனாரான திரிபுவனச் சக்ரவர்த்தியாரின் திருப்பணியை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளலாம் அல்லவா! இதைப் பற்றித்தானே நான் முன்பே தங்களிடம் பல தடவை பேசியிருக்கிறேன், விண்ணப்பித்திருக்கிறேன்!
பாலசுப்பிரமணியரின் குரல் தழைந்து இறைஞ்சுகிறது.
அவர் தோளை அன்புடன் தடவிக் கொடுக்கிறார் சேக்கிழார்.
"பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரே! நீர் பேசுவதைப் பார்த்தால் உமக்கு மட்டும்தான் தமிழ் மீது பற்று இருப்பதைப் போலவும், மற்ற யாருக்குமே இல்லை என்பது போலவும்தான் எனக்குப் படுகிறது. அம்மாதிரி நினைப்பு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளும்.
அநபாயரால் தமிழ் வளரத்தான் போகிறது. அவர் காலத்தில் சைவம் சிறக்கத்தான் போகிறது. அதற்கு வேண்டிய முயற்சியை நானும் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீர் கேட்காமல் இருந்தாலும் நாளை இங்கு வரப்போகும் அநபாயருக்கு உம்மை அறிமுகம் செய்து வைத்து, உம்மிடம் அவரது தமிழ் ஆர்வத்தை வளர்க்குமாறு சொல்லலாம் என்றுதான் இருக்கிறேன்!
Sivacharyar
அவரைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்த சேக்கிழார், நான் ஆறு மாதங்கள் புண்ணியத் தலங்களைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். அச்சமயத்தில் அவருக்கு தமிழில் ஆர்வம் வருமாறு தமிழ் நூல்களைப்பற்றி எடுத்துச் சொல்லும். உமக்குத் தெரிந்த தமிழ்க் கவிகளை அவரிடம் அழைத்துச்சென்று அவர்கள் தமிழின் இனிமையை அவருக்குப் புகட்டட்டும். நானும் மெல்ல மெல்ல அவருக்குத் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்துகிறேன். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணி தொடரும் என்று எதிர்பார்ப்போம்!
கனிந்த குரலில் அவர் சொன்னது பாலசுப்பிரமணியரின் மனதில் நிறைவை ஏற்படுத்துகிறது. சேக்கிழாரை நோக்கிக் கைகூப்புகிறார் அவர்.
கோவிலில் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் கைகூப்பக் கூடாது! அது போகட்டும், வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?
என்று நலம் விசாரிக்கிறார் சேக்கிழார்.
அம்பலவாணன் அருளால் அனைவரும் நலம்தான். இன்று இரவுப் பொழுது தாங்கள் எங்கள் வீட்டில் பசியாற வேண்டும். விடுதிச் சாப்பாட்டை விட, எனது மனைவியின் கைப்பாகம் நன்றாகவே இருக்கும்
என்று அழைக்கிறார் பாலசுப்பிரமணியர்.
அப்படியே ஆகட்டும். எனக்கும் வீட்டுச் சாப்பாட்டை உண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. என்னுடைய உதவியாளர்கள் நால்வர் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து அமுது படைத்துவிடச் சொல்லுங்கள்
என்று புன்னகைக்கிறார் சேக்கிழார்.
தங்களைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் என் இல்லத்தில் உணவு இருக்கும். பொழுது சாய்ந்ததும், நான் விடுதிக்கு வந்து தங்களையும், தங்கள் உதவியாளர்களையும் அழைத்துச் செல்கிறேன்
என்று மகிழ்வுடன் சொன்ன பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு, கிழக்கு ரத வீதியில் இருக்கும் விடுதிக்குத் தனது உதவியாளர்களுடன் செல்கிறார் சேக்கிழார்.
தனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் பாலசுப்பிரமணியர் மனதில் பிரம்மராயரின் பெயரர் சிவசுப்பிரமணியனின் மகனும் தனது தந்தையுமான சங்கரசுப்பிரமணிய சிவாச்சாரியார் சொன்ன விஷயங்கள் சிந்தனை அலைகளாய் எழுகின்றன.
குலோத்துங்கன் என்று பட்டப் பெயரைச் சூட்டிவிட்டு இராஜேந்திர நரேந்திரனையும், மற்றவர்களையும் தன் பெயரன் சிவசுப்பிரமணியனுடன் அனுப்பி விட்டுப் படுத்த பிரம்மராயர் மீளா உறக்கத்தில் ஆழ்ந்ததுகூட எவருக்கும் தெரியவில்லை. உணவு உண்டு விட்டு விடைபெற்றுக்கொண்டு சென்று விட்டார்கள். திரும்பி வந்து பார்த்த சிவசுப்பிரமணியனும் தனது பாட்டனார் உறங்குகிறார் என்று நினைத்து அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் குலோத்துங்கனுடனும், மற்றவர்களுடனும் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி விட்டார். காலையில் அவரை எழுப்ப முயன்ற சுப்பனுக்குத்தான் பிரம்மராயர் இவ்வுலகை விட்டு நீங்கி இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று தெரிந்தது.
ஊர்க்கட்டுப்பாடு காரணமாக சுப்பன்தான் அன்றே அவரது பூத உடலை எரியிட்டு, ஈமச்சடங்குகளைச் செய்தான். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஆள் அனுப்பி சிவசுப்பிரமணியனை மற்ற சடங்குகளைச் செய்ய வரவழைப்பதற்குள் நான்கைந்து நாட்கள் கழிந்துவிட்டன. பிரம்மராயரின் ஒரே மகனான மறையன் அருள்மொழி கருநாட்டிலேயே ஒரு கன்னடம் பேசும் பெண்ணை மணந்துகொண்டு,⁵ அங்கே தங்கி பிரம்மராயரின் காலத்திற்கு முன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டதால் அவ்வழித் தொடர்பும் அற்றுப் போய்விட்டது.
குலோத்துங்கன் கிட்டத்தட்ட இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளை தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்துவதிலேதான் செலவழித்தார். தமிழைப் பரப்புவதைத் தவிர, மற்றபடி பிரம்மராயர் சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். ஒரு தமிழனாக வாழ்ந்தார். வணிகம் தழைக்கவேண்டி, சுங்க வரியை நீக்கி, சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். பாண்டியர்களையே மதுரையிலிருந்து திறை செலுத்தி ஆட்சி செய்ய அனுமதித்தார்.
பிரம்மராயரின் திறமையில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாததால், அவரது பெயரரான சிவசுப்பிரமணியனுக்கு சோழ அரசில் இருந்துவந்த சிறிய செல்வாக்கு கூட அவரது மகனான சங்கரசுப்பிரமணியனுக்கு இல்லாது போய்விட்டது. ஆண்டுதோறும் நடப்பை மட்டும் திருப்பணிச் சுருளில் எழுதி வருவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது போய்விட்டது. ஆனால், அவரது குடும்பத்திற்கு மட்டும் அர மானியம் கிடைத்து வந்தது. தனக்குப் பொறுப்பு வந்தவுடன்தான் எப்படிப்பட்ட சிறந்த திருப்பணி தடைபட்டுப் போயிருக்கிறது என்று பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாருக்குத் தெரிந்தது.
தமிழ்த்திருப்பணியைப் பற்றி எப்படியாவது சோழ அரசரிடம் பேசி, அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவா பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அவருக்கு அந்த முயற்சி கைகூடி வரவே இல்லை. குலோத்துங்கசோழருக்குப் பின் அரியணை ஏறிய விக்கிரமசோழரைச் சந்திக்கப் பல தடவை முயற்சி செய்தார். ஒவ்வொரு தடவையும், விக்கிரமசோழருக்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை வந்து அந்த சந்திப்பைத் தடுத்து வந்தது. தவிரவும், வேங்கைநாட்டிலேயே வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த அவருக்கு, தமிழை வளர்ப்பதில் அவ்வளவு நாட்டம் இல்லாததும் அச்சந்திப்பு நிகழாததற்கு ஒரு முக்கியக் காரணம்.
அவருக்குப் பின் அரசுப் பொறுப்பேற்ற அநபாயச் சோழனான இரண்டாவது குலோத்துங்கனைச் சந்திக்கவும் சில ஆண்டுகளாக முயற்சி செய்து, அதிலும் வெற்றி பெறாமல்தான் இருந்து வந்தார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். ஒரு தடவை தில்லைக்கு வந்த சோழ அமைச்சர் சேக்கிழாரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவரிடம் இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி பற்றியும் எடுத்துரைத்து, பிரம்மராயர் விட்டுச்சென்ற தங்கச் சுருளையும் காட்டினார். அதைப் பார்த்து வியப்பும், மகிழ்ச்சியும், மதிப்பும் அடைந்தார் சேக்கிழார். அதிலிருந்து இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர்ந்தது.
***
[
¹. தமிழ்நாட்டிலிருக்கும் சிதம்பரத்தின் பண்டைய காலத்துப் பெயர் தில்லை. தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இன்றும் இலக்கியங்களில் தில்லை என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.
². ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் சுழற்சியாலும், அதன் அச்சின் சாய்வினாலும், இப்போது பொது ஆண்டு மாதங்களில் வரும் தேதிகளில் தமிழ் மாதத் தேதிகள் வரவில்லை. எனவே, அப்பொழுதிருந்திருக்கும் பொருத்தமான வாக்கியப் பஞ்சாங்கப்படி, கணினி மூலம் கணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுகள், மாதங்கள், தேதிகளுக்குத் தகுந்த பொது ஆண்டு மாதங்களும், தேதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன - நன்றி: www.drikpanchang.com http://www.drikpanchang.com
3. ‘அநபாயச் சோழன்’இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராகப் பணியாற்றிப் பன்னிரண்டாம் திருமுறையான, ‘திருத்தொண்டர் புராண’த்தையும் எழுதியவர் சேக்கிழார். அவரது இயற்பெயர் அருள்மொழி.]
[
⁴. முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வென்றதை கலிங்கத்துப் பரணி விவரிக்கிறது.]
[
⁵. இது கற்பனையே. இக்கூற்றுக்குச் சான்று எதுவுமில்லை.]
அத்தியாயம் 2
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் வீடு, தில்லை
நள, மாசி 1 - ஜனவரி 30, 1137
தைப்பூசம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கின்றன. எனவே, முருகப்பிரான் மீது பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறாள் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் மகள் அம்பிகா. அதைக் கேட்டபடி வீட்டுச் சுவரில் சாய்ந்தவண்ணம் அவரது மனைவி சரஸ்வதி கைகளை இலேசாகத் தட்டிப் பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாள். வாசலில் ஆள் வரும் ஓசை கேட்கவே, புடைவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு எழுந்திருக்கிறாள். தன் கணவருடன் ஐந்து பேர்கள் வருவதைக் கண்டதும், உட்புறக் கதவுக்குப் பின்புறம் நின்றுகொண்டு பார்க்கிறாள்.
வரவேண்டும், வரவேண்டும். தங்கள் வருகையால் இந்த ஏழையின் இல்லம் புனிதம் அடைந்தது!
என்று சேக்கிழாரையும், அவரது உதவியாளர்களையும் முகமலர்ந்து வரவேற்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.
அம்பிகா, அப்பாவுடன் வருகிறவர்களுக்கு கால் அலம்ப நீர் எடுத்துக் கொடு
என்று மகளிடம் மெதுவாகச் சொல்கிறாள் சரஸ்வதி. பாட்டை நிறுத்திவிட்டு உடனே வாயில் பக்கம் விரைகிறாள் அம்பிகா.
புன்னகை மலரும் முகத்துடன் திண்ணைக்குக் கீழே இருக்கும் அண்டாவிலிருந்து செம்பில் தண்ணீரை எடுத்துத் தந்தையிடம் நீட்டுகிறாள். செம்பிலிருக்கும் நீரைக்கொண்டு தன் காலைக் கழுவ முற்படும் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியைத் தடுத்து நிறுத்துகிறார் சேக்கிழார்.
ஓய் சிவாச்சாரியாரே! வேதியரான நீர் எமது காலைக் கழுவுவது முறையல்ல. நானே கழுவிக் கொள்கிறேன்
என்று அவரிடம் சொம்பை வாங்க முற்படுகிறார்.
அதைத் தடுத்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரி, தாங்கள் என் இல்லத்திற்கு வந்திருக்கிறீர்கள். என் கடமையைத் தாங்கள் தடுப்பது முறையல்ல!
என்று வாதிடுகிறார். அதற்கு சேக்கிழார் மறுக்கவே, வாக்குவாதம் வலுக்கிறது.
இதை கவனித்த அம்பிகா, ஐயா, நான் சிறியவள்தான். நான் உங்கள் அனைவரின் கால்களைக் கழுவுவது முறைமைதான்
என்று தந்தையிடமிருந்து சொம்பை வாங்கி சேக்கிழார் மற்றும் அவருடன் வந்த அனைவரின் கால்களையும் கழுவுகிறாள்.
நன்றாகப் பெண்ணை வளர்த்திருக்கிறீர் சிவாச்சாரியாரே!
என்ற சேக்கிழார், அம்மா பெண்ணே! நீ நல்ல மணாளனை மணந்து, அம்பலவாணன் அருளால் பதினாறும் பெற்று, நீண்ட நாள்கள் பெருவாழ்வு வாழ்வாய் அம்மா!
என்று வாழ்த்துகிறார்.
சேக்கிழார்
தங்கள் ஆசி, ஐயா!
என்று இனிய குரலில் வெட்கத்துடன் பதிலளிக்கிறாள் அம்பிகா. மற்றவர்களும் கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.
அம்பிகா, சேக்கிழார் பெருமானுக்கும் மற்றவர்களுக்கும் உட்காரப் பலகையை எடுத்துப் போடு
என்ற பாலசுப்பிரமணிய சிவாச்சாரி, அம்மாவைப் சாப்பாடு பரிமாற ஏற்பாடு செய்யச் சொல்லு
என்று உள்பக்கம் திரும்பி குரலை உயர்த்திச் சொல்கிறார்.
பெரியவர்கள் உட்கார்ந்தவுடனேயே பரிமாற ஆரம்பிக்கலாம் என்று சொல்லு அம்பிகா
என்று உள்ளே இருந்து பதில் வருகிறது.
அம்பிகா எடுத்துப் போட்ட பலகைகளில் அனைவரும் அமர்கின்றனர். பாலசுப்பிரமணிய சிவாச்சாரி மூலையில் சுற்றி வைத்திருக்கும் இலைக்கட்டைப் பிரித்து அனைவருக்கும் தலைவாழை இலைகளை மலர்த்தி வைக்கிறார். அம்பிகா வெள்ளிக் குவளைகளில் தண்ணீர் எடுத்து வைக்கிறாள். விருந்தோம்பல் முறைப்படி, பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் சேக்கிழாருக்கு எதிராகச் சுவர் அருகே கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறார். அவரது மனைவி உணவு பரிமாற ஆரம்பிக்கிறாள். அம்பிகா உதவி செய்கிறாள். சேக்கிழார் உணவை நன்கு விரும்பிச் சாப்பிடுகிறார் என்பதை அறிந்துகொண்டு அவர் போதும் போதும் என்று சொல்லியும், சரஸ்வதி திரும்பத் திரும்ப நன்றாக உபசரித்துப் பரிமாறுகிறாள்.
இதற்கு மேல் சாப்பிட்டால் வயிறு வெடித்து விடும் அம்மா. அந்த அளவுக்கு சாப்பிட்டு விட்டேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு இவ்வளவு நல்ல உணவு உண்டிருக்கிறேன்
என்று எழுந்து கொள்கிறார் சேக்கிழார். கை கழுவ நீர் எடுத்துக் கொடுக்கிறாள் அம்பிகா.
கைகளைக் கழுவிக்கொண்டு திண்ணையில் பாயில் அமர்ந்துகொண்ட சேக்கிழார், ஓய் சிவாச்சாரியாரே, நீர் சாப்பிட்டுவிட்டு வாரும். உம்முடன் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது. அதுவரை நாங்கள் சுகமாக வீசும் காற்றை வாங்கிக்கொண்டிருக்கிறோம்
என்று சொல்கிறார்.
வெற்றிலை பெட்டியை எடுத்து வைக்கிறாள் அம்பிகா.
நீயும் போய்ச் சாப்பிடம்மா
என்று அன்புடன் கூறுகிறார் சேக்கிழார்.
விரைவிலேயே உணவை உண்டுவிட்டு திண்ணைக்கு வருகிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.
ஓய் சிவாச்சாரியாரே, இப்படி அமரும்
என்று தன் பக்கத்தில் அவரை அமருமாறு பணிக்கிறார் சேக்கிழார். பணிவாக அவர் அருகில் அமர்ந்து கொள்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரி.
ஆறு மாதம் திருத்தலங்களைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று இன்று கோவிலில் உம்மிடம் சொன்னேன். ஆனால், அது நிறைவேறாது போல இருக்கிறது
என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார்.
ஏன் என்பது போலப் புருவத்தை உயர்த்துகிறார் சிவாச்சாரி.
அதைச் சொல்வதற்கு முன்னால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியை நீர் அறிந்துகொள்ள வேண்டும். வைணவ ஆச்சாரியாரான இராமானுஜரைப் பற்றித் தெரியுமல்லவா?
அவரைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன் சேக்கிழார் பெருமானே! அவர் வைணவத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாடெங்கும் பரப்பி வருவதாகவும், விசிட்டாத்துவைதம் என்ற ஒரு தத்துவத்தை முன்வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் அரங்கநாதனைப் போற்றிப் பணிந்து, அக்கோவிலைச் சிறப்புற நடத்திவருவதாகவும் சொல்கிறார்கள். மற்றபடி, அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறியேன் ஐயா!
சேக்கிழார் தன்னை ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று சிந்திக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
பிறந்தவுடன் இளையபெருமாள் என்று பெயரிடப்பட்டு, ஆதிசங்கரின் அத்துவைதப் பிரிவை அனுசரிக்கும் அந்தணராக அவர் வளர்க்கப்பட்டார். இருப்பினும், கல்வி கற்கும்பொழுது அத்துவைதத்தில் அவருக்கு நாட்டம் செல்லவில்லை. எனவே, வேறு பல ஆச்சாரியர்களிடம் உபதேசம் பெற்று வைணவராகப் பரிணமித்தார். இருப்பினும், அவரை நீர் அறிந்துகொண்டபடி வைணவத்தை நாடு முழுவதும் பரப்ப அவர் முயற்சி எடுத்துக்கொண்ட காரணம் பற்றித்தான் உமக்கு இப்பொழுது உரைக்கப் போகிறேன். அதற்குப் பிறகு நாம் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்.
இராமானுஜர் தன் வாழ்வையே ஒரு வேள்வியாக மாற்றிய நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்கிறார் சேக்கிழார்.
***
திருக்கோட்டியூர் திருமால் விண்ணகரம், பாண்டிநாடு
ஈஸ்வர, வைகாசி 5 - மே 4, 1097⁶
தொலைவில் திருக்கோட்டியூர் கோவில் கோபுரம் தெரிந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக அக்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். பாண்டிய மன்னரின் மெய்க்காப்பாளர்களும், ஒற்றர் படைத் தலைவர்களுமான, சரவணனும் அவன் தம்பி முத்துக்கருப்பனும், பொன்னமராவதியில் ஒரு அரசுப் பணியை முடித்துவிட்டு, மதுரைக்குத் திரும்பி வரும் வழியில் திருப்புத்தூரில் இருக்கும் தங்களது தமக்கையைப் பார்த்துவிட்டு, குதிரைகளின் மீது சவாரி செய்தவாறே வந்துகொண்டிருந்தார்கள்.
திருக்கோட்டியூர் கோவில் கோபுரம்
சாரிசாரியாகச் செல்லும் மக்கள் குதிரைகள் மீது வரும் வீரர்களைப் பார்த்ததும் ஒதுங்கி வழி விட்டார்கள். குதிரையை நிறுத்தி ஒருவனை விசாரித்தான் சரவணன்.
கூட்டமா எல்லோரும் எங்கே போயிட்டு இருக்கீங்க? திருவிழாக் காலமும் இல்லையே!
அதுங்களா ஐயா, சோழநாட்டுலேந்து பெரிய சாமியார் ஒருத்தர் திருக்கோட்டியூர் கோவிலுக்கு வந்துருக்காராம். எல்லோரும் சொருக்கத்துக்கு போறதுக்கு அவரு வழி சொல்லப் போறாராம்
என்று அந்த கிராமவாசி பதிலளித்தான்.
சொர்க்கத்துக்குப் போகறதுக்கு வழி சொல்லப் போறாரா? என்ன உளறுகிறாய்! சொர்க்கத்துக்கு போறதுக்கு வழி தெரியாம பெரிய பெரிய ஞானிகளெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. காட்டுலே போயி தவசுபண்ணினாக்கூட சொர்க்கம் கிடைக்கலேன்னு சொல்லிக்கறாங்க. அப்படிக் கஷ்டமான காரியத்தை உன்னையும் என்னையும் மாதிரி மட்டிங்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போறாரா?
அந்த கிராமத்தானைக் கேலி செய்தான் சரவணன்.
சொர்க்கம் கூட இல்லீங்க, அதுக்கும் மேலேயாம்
என்று இன்னொருவனின் குரல் பின்னால் இருந்து ஒலித்தது. என்னாது? சொர்க்கத்துக்கும் மேலேயா? அது என்னவாம்? நல்லா கதை விடறீங்கடா நீங்க!
என்று அட்டகாசமாகச் சிரித்தான் முத்துக்கருப்பன்.
அது என்ன நாக்கு மேலே பல்லைப் போட்டுச் சொல்லிப்புட்டீங்க தம்பி?
என்று ஒரு மூதாட்டி செல்லமான கண்டிப்புடன் கேட்டாள். பெரிய சாமியாருங்களை கன்னாபின்னான்னு சொல்லப்படாது. பெரிய பாவம் வந்து சேரும். சென்மம் சென்மமா என்ன பாவம் செஞ்சோமோ, இப்படி அல்லாடறோம். பெரிய சாமியார் ஒருத்தர் நல்ல வழி காட்டறேன்னு சொன்னா, அது என்னன்னு கேட்டுக்காம, அதைப் பரிகாசம் செய்யலாமா?
ஏய் கிழவி? என்ன நாக்கு நீளுது? நாங்க யாருன்னு தெரியுமா?
என்று அதட்டினான் முத்துக்கருப்பன்.
நீங்க யாரா இருந்தா என்ன தம்பி?
என்று பயப்படாமல் பதில் சொன்ன அந்த மூதாட்டி, எனக்கு அறுவது வயதுக்கு மேலே ஆயிப்போச்சு. என்னோட பேரப் பிள்ளைங்க கணக்காத்தான் இருக்கீங்க. பாட்டி தன் பேரப் பிள்ளைங்களுக்குச் சொல்லற மாதிரித்தான் சொல்லறேன். உங்க அம்மா அப்பா நல்ல வழியைச் சொன்னா இப்படித்தான் நாக்கு நீளுதுன்னு சொல்லுவீங்களா?
கோவிச்சுக்காதே பாட்டி. என் தம்பிக்குக் கொஞ்சம் அவசர புத்தி. மரியாதை இல்லாம பேசிப்புட்டான். அது போகட்டும். பெரிய பெரிய சாமியார்களும் காட்டுக்குப் போயி, தவசு செஞ்சும் கெடக்காத ஒண்ணு, நம்ம மாதிரி சாதாரணமான ஆளுகளுக்கு கிடைக்கும், அதுக்கு வழி சொல்லறேன் அப்பிடீன்னு ஒருத்தர் சொன்னா சிரிப்பு வராதா? அத்தோட நிறுத்திக்காமச் சொர்க்கத்துக்கும் மேலே ஒண்ணு இருக்கு, அங்கே போறதுக்கு வழி சொல்றேன் அப்படீங்கறாரே, அது எந்த இடமாம்?
என்று கேட்டான் சரவணன்.
ஏதோ வைகுண்டமாமே தம்பி, அங்கிட்டுப் போறதுக்குத்தான் வளி சொல்லப்போறாராம். மகாவிசுணுவும், மகாலச்சுமியும், இருக்காங்களாமே அங்கிட்டுத்தான்.
பாட்டி, நீ சொல்ற சாமியாருக்கு என்ன பேரு? எந்த எடத்துலே, எப்ப சொர்க்கத்துக்கு போறதுக்கு வழி காட்டறாராம்?
இன்னும் முத்துக்கருப்பனின் குரலில் குறும்பு போகவில்லை.
என் வாயிலே பெரியவங்க பேரு நொளையுமா தம்பி? அத்தை விடு. திருக்கோட்டியூர் கோயில் வாசல்லேதான் வளி சொல்லப்போறாராம்!
வரேன், நானும் ஒங்கூட வந்து அந்தக் கூத்தைப் பார்க்கறேன்!
முத்துக்கருப்பனுக்குத் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. மூதாட்டி பார்த்துவிடக்கூடாது என்று தலையைத் திருப்பிக் கொண்டான்.
வா ராசா… வா!
என்று முத்துக்கருப்பனை அன்புடன் அழைத்தாள் மூதாட்டி. பெரிய தம்பி, நீயும்தான் வாயேன். அந்த சாமியார் என்ன சொல்லறாருன்னு கேப்போமே! கூடவே ராசாவோட வேலைக்காரங்க வாராங்கன்னா எனக்கும் பெருமையா இருக்குமில்ல! கம்பங்கூழும், வெஞ்சினமும் சட்டியிலே கொண்டு வந்திருக்கேன். சாப்புடுறீங்களா?
இவ்வளவு அன்பா கேக்கறே பாட்டி, வேண்டாமுன்னு சொல்லுவோமா! அந்தச் சாமியாரு என்ன சொல்றாருன்னு கேட்டுட்டுத்தான் போறோமே
என்று குதிரையிலிருந்து இறங்கினான் சரவணன். அண்ணனைப் பின்பற்றி தம்பியும் கீழே இறங்கவே, மூதாட்டி பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி கூழ்ச் சட்டியைத் திறந்தாள்.
சரவணனும், முத்துக்கருப்பனும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் உணவையும் கிழவியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
தம்பிகளா, நீங்க எந்த ஊரு? அரமணையிலே சேவுகம் பண்ணற ஆளுங்க மாதிரி இருக்கீங்களே! இந்தப் பக்கம் என்ன விசயமா வந்தீங்க?
பாட்டி, நாங்க மதுரைப் பக்கம். நீங்க சொல்லற மாதிரி நாங்க அரண்மனையிலேதான் சேவுகம் செய்யறோம். திருப்புத்தூரிலே எங்க அக்காவைக் கொடுத்திருக்கு. அவளைப் பார்த்துட்டுதான் மதுரைக்குத் திரும்பிக்கிட்டிருக்கோம். இத்தனை கூட்டமாகப் போகுதே, என்ன விசயம்னு விசாரிச்சோம். அவ்வளவுதான்
என்று மூதாட்டிக்குப் பதில் சொன்னான் சரவணன்.
தாங்கள் பரம்பரை பரம்பரையாக பாண்டிய மன்னர்களின் மெய்காப்பாளர்கள் என்றோ, திருப்புவனத்தில் பாண்டிய மன்னரைத் தலைமறைவாக வைத்துக் காப்பாற்றிய சொக்கநாதனின் பேரர்கள் என்றோ சொல்லாது விட்டுவிட்டான்.
நான் நெனச்சேன். இவ்வளவு தடபுடலாக இருக்கீங்களே, அரமணையிலேதான் சேவுகம் செய்வீங்கன்னு நெனச்சது சரியாப் போச்சு. அதுசரி, நீங்க பாண்டிய ராசாவைப் பார்த்திருக்கீங்களா, அவருகிட்ட பேசி இருக்கீங்களா?
என்று ஆவலுடன் கேட்டாள் மூதாட்டி.
நாங்க நெறயத் தபா ராசாவைப் பார்த்திருக்கோம் பாட்டி. நல்லா, கம்பீரமா, முறுக்கி விட்ட மீசையோட இருப்பாரு. மதுரை அரண்மனையிலே இப்ப நம்ம பாண்டிய ராசா ஆட்சி பண்ணறது மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? ஆனா, நாங்க சேவுகங்கதானே பாட்டி! ராசா எங்ககிட்டயெல்லாம் பேசுவாரா? கும்புடற போது எங்களைப் பார்த்துச் சிரிப்பாரு. அந்த சிரிப்புக்காவே உசிரைக் கொடுக்கலாம் பாட்டி.
அவர்கள் இருவர்களின் தலையிலும் விரல்களை வைத்து திருஷ்டி கழித்தாள் மூதாட்டி. என் ராசாக்களா, பாண்டிய ராசாவைப் பார்த்திருக்கீங்க. அவர் உங்களைப் பார்த்து சிரிச்சிருக்காரு. இத்த விட என்னப்பா வேணும்? இன்னமும் அவரோட அரமணையிலே சேவுகம் செய்யப்போறீங்க. இந்தப் பாண்டிநாட்டிலே உங்களை விடக் கொடுத்து வச்சவங்க யாருப்பா இருக்காங்க! எம் புருசன்கூட பாண்டிய ராசாவுக்காக சண்டைபோட்டு உசிரைக் கொடுத்திருக்காரு. நான்தான் பாவி… ராசாக்களை ஒரு தடவைகூட பார்த்ததில்லே. தம்பிகளா, ராசாவை நல்லாப் பார்த்துக்கங்க. எனக்கு மனசு ரொம்ப நெறஞ்சு போயிருக்கு
என்று பொக்கை வாயைத் திறந்து மனதார அவர்களை வாழ்த்தினாள்.
அவளிடம் தாங்கள் பாண்டிய மன்னரின் மெய்காப்பாளர்கள் என்ற உண்மையைச் சொல்லி விடலாமா என்று தோன்றியது. அவர்கள் இருவருக்கும். ஆனால், அந்த உண்மை ரகசியமாகக் காக்கப்பட வேண்டியது என்பதால் வாயை மூடிக்கொண்டார்கள்.
முத்துக்கருப்பன் சிரித்துக்கொண்டே மூதாட்டியைக் கிண்டல் செய்தான். பாட்டி, நீ நெத்தி முழுக்க துண்ணூத்தை (திருநீற்றை) பட்டையாப் பூசியிருக்கே. நீ சிவபெருமான் இருக்கற கைலாசத்துக்குப் போகற வழியைத் தேடாம, மகாவிஸ்னு இருக்கற வைகுண்டத்துக்குப் போகப் பாக்கறியே! உன் நெத்தியிலே இருக்கற துண்ணூத்தைப் பார்த்துட்டு உள்ளே வராதேன்னு அங்க இருக்கறவங்க தடுத்துப்புட்டா என்ன பண்ணுவே?
சும்மா வம்புக்கு இளுக்காதே தம்பி. நம்ம சிவபெருமான் மகாவிசுணுவோட தங்கையைத்தானே கண்ணாலம் கட்டிக்கிட்டு இருக்காரு. தங்கை புருசனுக்கு வேண்டியவங்க இவுங்கன்னு உள்ளார விட்டுருவாங்க.
மதுரையிலே மீனாச்சி அம்மா கண்ணாலத்தை கள்ளளகர்தானே நடத்தி வைக்க ஓடிவந்து, வைகையிலே வெள்ளம் வந்து தடுத்துட்டதுனாலே, அவரு மதுரை வந்து சேர்றதுக்கு முன்னாடியே மதுரையிலே இருக்கற மகாவிசுணுவே கண்ணாலத்தை நடத்தி வச்சுட்டாருன்னு தெரிஞ்சுக்கிட்டு, ஏமாந்து போனாரு? வைகை ஆறு வரை வந்துட்டுத் திரும்பிப் போனாரு இல்லையா! ஒருவேளை அந்தக் கள்ளளகர் அதை மனசுலே வச்சுக்கிட்டு துண்ணூறு பூசறவங்களை உள்ளே விடாதீங்கன்னு அவரோட ஆளுங்ககிட்ட சொல்லிப்புட்டா என்ன செய்யப்போறே?
மூதாட்டியைக் கேலி செய்வது, இந்தத் தடவை சரவணனின் முறையாக இருந்தது.
சும்மாச் சும்மா என்னையக் குளப்பாதீங்க தம்பிகளா. மகாவிசுணு ரொம்பக் கோவிச்சுக்கிட்டா, நானும் நாமத்தைப் போட்டுக்கிட்டு, மகாவிசுணுவோட பேரைச் சொல்லிக்கிட்டு உள்ளார நுழைஞ்சுடறேன்
கடகடவென்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் மூதாட்டி.
அவள் சிரித்தாலும், இருவருக்கும் கன்னத்தில் அறைபட்டது