Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Mella...
Mella Mella...
Mella Mella...
Ebook458 pages4 hours

Mella Mella...

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 30, 2017
Mella Mella...

Read more from Sivasankari

Related to Mella Mella...

Related ebooks

Reviews for Mella Mella...

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Mella Mella author has dragged the reader into the characters and she herself has lived the characters

    Hats off to author for characters like Krishnan Hari Vedha and Akila

Book preview

Mella Mella... - Sivasankari

http://www.pustaka.co.in

மெள்ள மெள்ள...

Mella Mella…

Author:

சிவசங்கரி

Sivasankari

For more books

http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

நன்றியுரை

முகம் சுணுக்காமல் புன்சிரிப்போடு, நான் அணுகியபோதெல்லாம் தேவையான மருத்துவக் குறிப்புகளைத் தந்து உதவிய டாக்டர் வி. ராமச்சந்திரன் (Dr. V. Ramachandran, M.D., D.P.M.M.R.C. Psych (London) ) அவர்களுக்கும்,

டாக்டர் எல். ராஜாராம் (Dr. L. Rajaram, M.B.B.S.) அவர்களுக்கும்,

வானதி திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும்,

என் அன்பு கலந்த நன்றியை சந்தோஷத்தோடு தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

சிவசங்கரி.

1

அகிலா, இட்லிக்காக ஊறவைத்திருந்த புழுங்கலரிசி, உளுந்து பாத்திரங்களோடு, ஆட்டுக்கல்லுக்கு முன்னால் வந்து உட்கார்ந்தாள்.

அக்னிநட்சத்திரத்தின் ஜுவாலையைக் குறைப்பதற்காகவோ என்னவோ, கருணைகொண்ட மழைமேகங்கள் சற்றும் எதிர்பாராமல் டமடமவென்ற இடியுடன் அரைமணிக்குள் ஆர்ப்பாட்டமாகக் கொட்டிவிட்டுப்போயிருந்த தண்ணீர், அது நிமிஷம்வரை புழுதியும் செம்மண் பூச்சுமாய்க் கிடந்த தரையைச் சுத்தமாய் அலம்பிவிட்டிருந்தது. காற்றில் ஒரு குளுகுளுப்பு. தோட்டத்து மரம் செடி கொடிகளின் ஒவ்வொரு இலையும் பூவும் காயும், யாரோ வேலைமெனக் கெட்டவர்கள் உட்கார்ந்து பளிச்சென்று துடைத்து, நல்ல பச்சைநிறத்தைப் பெயின்ட் செய்திருந்த மாதிரி இருந்தது.

சற்றே தள்ளியிருந்த கிணற்றடி மேடையில், காகம் ஒன்று பறந்துவந்து உட்கார்ந்தது. மேடையின் சரிவான பகுதியில் தேங்கிக்கிடந்த மழைஜலத்தில் லேசாய் அமுங்கி, இரண்டு வாய்த் தண்ணீரைக் குடித்துச் சிறகுகளை ஆட்டி சிலிர்த்துக்கொண்ட பின்னர், உடலின் சூடு தணிந்த குஷியில் ஒருபக்கமாய் தலையைச் சாய்த்து ஒண்ணரைக் கண் பார்வை பார்த்து, காகாவென்று கத்தத் தொடங்கியது.

ஜாதி, நித்தியமல்லிகைப் புதர்களிலிருந்து. ஒன்றையொன்று துரத்தியவாறு இரண்டு அணில்கள் வெளிப்பட்டன. வாலைத் தூக்கிக்கொண்டு கிச்கிச்சென கத்தி விட்டு, காம்பவுண்டுச் சுவருக்கு அருகிலிருந்த கொய்யாமரத்தில் ஏறி, பழுத்த பழம் எங்கே இருக்கிறது என்பதை மோப்பத்தால் அறிய முற்படுவனபோல மூக்கின் நுனிகளை ஆட்டின.

அரிசியிலிருந்த கற்களை அரிந்து, இரண்டு தரம் களைந்துவிட்டு உரலில் போட்டாள் அகிலா. வாட்டமாய் உட்கார்ந்துகொண்டு, வலதுகையால் அரிசியைத் தள்ளிக்கொடுத்தவண்ணம், தோட்டத்தின் ஜீவராசிகளின் சந்தோஷத்தை, நடவடிக்கைகளை, ஒருவித இன்பத்துடன் கவனித்தவாறே அரைக்கத் தொடங்கினாள்.

விர்ரென்று எங்கிருந்தோ ஒரு வால்நீண்ட கருங்குருவி பறந்துவந்து, தென்னைமரத்தின் புதுப்பாளை மேல் அமர்ந்தது. இப்படியும் அப்படியும் இரண்டு தரம் பார்த்துவிட்டு, தென்னைமட்டைகளின் நடுவிலிருந்த நாரை - பன்னாடையின் நாரை - தன் சின்ன அலகால் உருவியெடுக்க முயன்றது. சில நிமிஷங்கள் மன்றாடின பிறகு, முழ நீளத்துக்குக் கிடைத்த அந்த நாரை எடுத்துக்கொண்டு எங்கோ பறந்துபோய்விட்டு, மறுபடியும் திரும்பி வந்து, மீண்டும் இன்னொரு நாரை எடுக்க முற்பட்டது.

கூட்டுக்கான உபகரணங்களை அக்குருவி சேர்க்கிறது என்பது அகிலாவுக்குப் புரிந்துபோனது.

எத்தனை சின்னக் குருவி! இது தன் முட்டைகளை இட ஒரு பத்திரமான இடம் வேண்டி, எத்தனை பொறுப்புடன் தன் கூட்டைக் கட்டுகிறது!

அவளுக்கு வலதுபக்கத்திலிருந்த தென்னைமரத்திலிருந்து குருவி இடது பக்கமாகப் பறந்து போனபோது, அகிலா ஏதோ நினைவுக்கு வந்தவளாய் தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள்.

சில வருஷங்களுக்கு முன் கதாகாலட்சேபம் ஒன்று கேட்கப் போயிருந்தாள். பெளராணிகர் பிரசித்தமானவர். எக்கச்சக்கமாய் அவர் சொற்பொழிவுக்குக் கூட்டம் வருவதால், எக்கச்சக்கமாய் பணம் சேர்த்துவிட்டார் என்பார்கள். அன்று அவர் சொன்னார்... நமது தேசத்தில் பழமையான வாக்குகள் சத்தியமானவை. அவை யெல்லாம் வெறும் பேச்சுக்காகச் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை அல்ல. பெரியவர்கள் சொல்கிற வார்த்தைகளை அலட்சியமாய் ஒதுக்கக்கூடாது. வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால், நடந்து போகும் ஆண்டிகூட நவரத்தின பல்லக்கு ஏறுவான் என்று சற்றுமுன் கதையில் சொன்னபோது, சபையிலிருக்கும் சின்னவயசுக்காரர்கள் முகத்தில் தோன்றிய சிரிப்பை நான் பார்க்க நேர்ந்ததால், இந்த விளக்கத்தைச் சொல்லவேண்டியவனாகிறேன். 'குருவி வலப்பக்கம் போனாலென்ன, இடப்பக்கம் போனாலென்ன? வால் நீளமாய் இருந்தா லென்ன, இல்லாமலே இருந்தாலென்ன? கறுப்பானால் என்ன, சிவப்பானால் என்ன? ஆண்டியாவது, பல்லக்கில் போவதாவது!' என்று மனசில் நையாண்டி பண்ணுகிற சில பேருக்குச் சொல்கிறேன்... நான் சொன்ன மாதிரி உங்களில் யாருக்காவது மேற்கண்ட குருவி வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் எதேச்சையாய் பறந்துபோன அனுபவம் இருந்து, உடனடியாக ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரவில்லையென்றால், என் சொத்தில் பாதியைத் தர நான் தயார்! இப்போதாவது நம் பெரியோர் வார்த்தைகள் சத்தியமானவை என்று நம்புவீர்களா? என்று அவர் அறைகூவல் விடுத்தபோது, சபையினர் அன்று அசந்துதான்போனார்கள்.

அந்த பெளராணிகர் வாக்குப்படி நடக்கவேண்டுமேயானால், அவர் தன் முழுச் சொத்தையும் கொடுப்பதுமல்லாமல், வாழ்நாள் பூராவும் சம்பாதிப்பதையும் தனக்கே கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தபோதுதான், அகிலாவுக்குச் சிரிப்பு எழுந்தது.

எத்தனை முறை அவள் கிணற்றடிக்கும், வாசல்புறத்துக்கும், தோட்டத்தின் அந்தப் பக்கத்துக்கும் போக முயல்கையில், வால் நீண்ட கருங்குருவி அவளை வலமிருந்து இடம் கடந்திருக்கும்? ஒருமுறை, இரண்டு? ம்ஹூம், இல்லை... எண்ணற்ற தடவைகள். முதல் தடவை குருவி வலமிருந்து இடமாகக் கடந்த போது, அகிலாவுக்கு சந்தோஷத்தின் காரணமாய் சில நிமிஷங்களுக்கு உடம்பு ஆடிப்போனது. பல்லக்கு வராவிட்டாலும், ஏதோ பெரியதொரு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று குதூகலித்தவள், முதல்முறை மட்டுமின்றி அதற்குப் பின் எத்தனை தடவை அந்தத் தினம் முழுவதும் காத்துப் பாத்துவிட்டு, பிறகு வழக்கமாய் இரவில் உண்ணும் மோர்சாதத்தை நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டு, கிழிசல் பாய் மேல் படுத்து உறங்கியிருக்கிறாள்!

சின்ன வயசில் ரொம்ப அசடாக இருந்திருக்கோமேயென்று எண்ணுகையில், அகிலாவின் புன்சிரிப்பு பெரிய சிரிப்பாகவே இப்போது மாறிப்போனது.

சிரிப்பு அடங்கினதும், மெல்ல கல்யாணி ராகத்தைத் தனக்கு மட்டுமே கேட்கும்படியாய் முனகத் தொடங்கினாள்.

அவளுக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு அதிகம். குரலும் நன்றாய் இனிமையாய் இருந்தது. ஆனால், கற்றுக்கொள்ளத்தான் வழியில்லை.

பள்ளியில் மூன்றாம் படிவம் வரை கட்டாயப் பாட்டு வகுப்பு உண்டு. மற்ற பெண்கள் அந்த வகுப்புக்கு வராமல் எப்படி டபாய்க்கலாமென்று திட்டம் போடுகையில், சங்கீதத்தில் தனக்கிருந்த ஆசையின் காரணமாய் அகிலா வகுப்புக்குப் பிரியமாய் போவாள். நாலாம் படிவத்திலிருந்து அதுவும் நின்று போயிற்று. வெளியே தனியார் நடத்தும் வகுப்புகளுக்குப் போய்க் கற்றுக்கொள்ள, வீட்டின் நிதி நிலைமை இடம்கொடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அகிலா, அவ்வப்போது வேதா மாமி வீட்டு ரேடியோவில் கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் மூலமே, தன் சங்கீதத் தேவையைத் திருப்தி செய்து கொள்வாள்.

குளிக்கும்போது, சமைக்கும்போது, இல்லை வேலைகள் ஒழிந்து கிணற்றடியில் அமர்ந்திருக்கும்போது, மனசில் உருவெடுக்கும் ராகங்களை, அரை குறை கேள்விஞானப் பாடல்களை முணுமுணுத்து சந்தோஷப்படுவதோடு சரி.

அரிசி அரைபட்டுவிட்டது. அதை வழித்து எடுத்துவிட்டு, உளுந்தைக் களையத் தொடங்கினாள்.

மலிவு என்று மட்டுமல்லாமல், விழுது நன்றாய்க் காணும் என்ற காரணத்துக்காகவும் கறுப்பு உளுந்தையே அவள் வீட்டில் வாங்குவது வழக்கம். நன்றாய் ஊறவைத்து, இரண்டு கைகளாலும் அழுந்தத் தேய்த்து, கொஞ்சம் அதிகமாகவே மன்றாட வேண்டும்.

உளுந்தைக் களைகையில், வேதா மாமி வீட்டுச் சாப்பாட்டு ஹால் கடிகாரம் மூன்றடிப்பது அகிலாவுக்குக் கேட்டது.

மணி மூன்றா?

பாடிக்கொண்டே தோட்டத்தையும், அணில், குருவியையும் பராக்குப் பார்த்ததில், நேரம் போனது தெரியவில்லையே!

அரிசியை அரைத்ததுபோல, நிதானமாய்ச் சுற்றாமல் வேகமாய் குழவியைத் தள்ளினாள் அகிலா.

நாளைக்கு அமாவாசை... அப்பாவுக்குப் பலகாரம்.

இன்றைக்குத் தேதி என்ன? இருபத்தியாறு.

இன்றோடு உளுந்து சரியாகிவிட்டது. இனி அப்பாவுக்கு சம்பளம் வந்த பிறகுதான் மறுபடி மளிகைக்கடைக்கு முன் போய் நிற்க முடியும். சரி, முதல் தேதிக்கு நாலு நாள்கள் இருக்கிறதே, உளுந்தை மிச்சம் பண்ணி வைக்கலா மென்றால், வேறென்ன டிபன் பண்ணுவது? உப்புமா கிண்டலாமென்றால், உடைத்த அரிசி இல்லை, ரவையும் இல்லை. வழக்கமாய் அப்பாவுக்குக் கிளறித் தரும் மோர்க்கூழையே நாளைக்கும் செய்து தர அகிலாவுக்கு மனமில்லை. அப்பாவுக்கு இட்லி என்றால் பிரியம். கொஞ்சம் ரசித்துச் சாப்பிடுவார்.

இதுவும் தவிர, அகிலா இன்று, மாசக் கடைசியில், இருக்கிற சாமான் பஞ்சத்தில் இட்லி தயாரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

நேற்று மாலை பள்ளியிலிருந்து திரும்பிவந்த ராமு, அவள் கடைசித் தம்பி, பன்னிரண்டு வயசுக் குழந்தை, கொல்லைக்கட்டில் காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவளிடம் வந்தான்.

ஸ்கூல்லேந்து வந்துட்டியா? டீ போட்டு வெச்சிருக்கேன்... போய் சமத்தா குடிடா, ராஜா... என்றாள்.

அக்காவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மெல்ல விசும்பினான் ராமு.

என்னடா?

என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் வீட்டுலயும், ஸ்கூல்லேந்து போனதும் தினுசுதினுசா டிபன் பண்ணிக்குடுத்து சாப்பிடச் சொல்றா... எனக்கு தினம் டீ மட்டும்தானா? பசிக்கறதுக்கா...

அகிலாவுக்கு வருத்தமாக இருந்தது. அவளால் என்ன பண்ணமுடியும்!

மோர்க்கூழு கிளறித் தரட்டுமா, ராமு?

வேண்டாமென்று தம்பி தலையை ஆட்டினான்.

வேண்டாங்க்கா... அந்த மோர்க்கூழைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போச்சு... அவன் பசியின் காரணமாய் விசித்துவிசித்து அழத் தொடங்கினான்.

சின்னப்பையனான தம்பியின் ஆசை எத்தனை நியாயமானது என்று அகிலாவுக்குப் புரியவே, தரையில் மண்டியிட்டு, அழும் பையனின் கண்களைத் துடைத்தாள்.

அழாதே, ராஜா... நாளைக்கு உனக்கும் நா நல்ல டிபன் பண்ணித் தரேன்... இப்போ ஒரு அப்பளம் சுட்டுத் தரட்டுமா? டீ குடிச்சுட்டு அப்பளத்தை வாங்கிண்டு விளையாடப் போ, ராமு... சமத்தில்லியா?

அக்காவின் வார்த்தைகளில் ராமுவுக்கு ஏக நம்பிக்கை. போய்விட்டான்.

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால் எப்படி?

இன்று இட்லிக்கு அரைத்த மாவிலிருந்து இரண்டு கரண்டி எடுத்து, கொஞ்சம் புளித்த மோரை விட்டு, ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்து போட்டு, ஊத்தப்பம் போல குண்டாய் வார்த்துக்கொடுத்தால், தம்பி பிரியமாய் சாப்பிடுவான் என்று அகிலா நினைத்ததால், இருக்கிறதோ இல்லையோ இன்று இட்லிக்குப் போட்டுவிட்டாள்.

காலை பள்ளிக்குப் புறப்படுமுன், உள்ளே வந்து அலுமினிய டிபன் பாக்சில் மோர்சாதத்தை எடுத்துக்கொண்டவன் புறப்படும்போதுகூட, அக்கா... சாயங்காலம் மறக்காதே! என்று நினைவுபடுத்திவிட்டுப் போயிருந்தான்.

மாவை அரைத்து முடித்து, உள்ளே போய் தோசைக்கல்லைப் போட்டால் சரியாக இருக்கும்.

குழவியை வேகமாய் ஓட்டினாள் அகிலா.

உள்ளே அம்மா இருமும் சப்தம் கேட்டது.

கொடகொடத்த குழவியை ஒருகணம் நிறுத்தி நிதானித்தாள் அகிலா.

வரவர அம்மாவின் உடம்பு, நாலு நாள்களுக்கு சேர்ந்தார்போல கொஞ்சம் நன்றாய் இருப்பதுகூடக் குறைந்துவிட்டது.

பாவம் அம்மா... அவளால் என்ன முடிகிறது! இரண்டடி எழுந்து நடந்து, அவள் காரியத்தைப் பார்த்துக்கொள்வதற்குள்ளேயே இரைப்பு கண்டு, நெஞ்சுக் குழியில் உட்கார்ந்திருக்கும் வயலின் 'ங்க்கொய்' என்று இழுக்கத் தொடங்கி விடுகிறது.

போன ஐந்தாம் வருஷம் வரைக்கும் இத்தனை மோசமாக இல்லை. 'எங்கப்பா எனக்கு வெச்சுட்டுப்போன சொத்து இந்த ஆஸ்துமா' என்று அடிக்கடி 'அட்டாக்' வரும்போது சொல்லிச் சிரித்துவிட்டு, குடும்ப பாரத்தைத் தாங்கி வந்தவளை, சொல்லாமல் கொள்ளாமல் வந்த டி.பி. செயலிழக்கவைத்தது. அதில் பிழைத்து எழுந்தவளை, இந்தத் தை மாசம் நிமோனியா ஜுரம் புரட்டியெடுத்ததி லிருந்து, நித்திய நோயாளியாகிப்போய்விட்டாளே!

அதுவும், டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்து மாத்திரைகளையெல்லாம் அப்படியே வாங்கிக்கொடுக்க முடியாதபடி, குடும்பத்தில் இதர செலவுகள் மண்டையைப் பிய்ப்பதால், அம்மாவின் வியாதி எந்த விதத்திலும் கட்டுப்படாமல் அடங்காப்பிடாரித்தனத்துடன், இரவில்லை பகலில்லை என்று அம்மாவை வாட்டியெடுக்கிறதே!

பாவம் அம்மா...

மாங்குமாங்கென்று விடியற்காலையில் எழுந்து குடும்பத்துக்காக இத்தனை சின்ன வயசில் ஓடாகத் தேயும் மகளைக் கண்டு அழத்தான் அகிலாவின் நோயாளி அம்மாவுக்கு முடியுமே தவிரவும், வேறென்ன செய்ய இயலும்!

இப்போது உளுந்தை அரைத்து எடுக்கப்போகும் இந்தச் சமயத்தில்கூட, உள்ளே அம்மா தீனமாய் தொடர்ந்து இருமுவது கேட்டு, வெந்நீர் வெச்சுத் தரட்டுமாம்மா? என்று குரல்கொடுத்தாள் அகிலா.

வேண்டாம்மா... நீ அரைச்சுட்டு எழுந்து வா... என்றாள் சாரதா பதிலுக்கு.

மாவை வழித்து உரலை அலம்பும்போது, வீட்டுக்கார வேதா மாமி பின்கட்டுக் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தில் வந்து நின்றாள்.

என்னடீ, பொண்ணே... இட்லியா, தோசையா?

இட்லிக்கு, மாமி... நாளைக்கு அமாவாசை இல்லியா? அப்பாவுக்குப் பலகாரத்துக்கு வேணுமே...

சாரதா எப்படியிருக்கா? நேத்து ஜுரம் இருந்துதே, இப்போ குறைஞ்சிருக்கா?

ஜுரம் தேவலை, மாமி... ஆனா, இந்த அரைமணி மழைக்கோ என்னமோ, இருமல் இழுப்புதான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு... பாவம்... படுத்துண்டே இருக்கா...

இருமலுக்கு காஃப் சிரப் இருக்கா?

அகிலா பதில் சொல்லவில்லை.

எனக்கு முன்ன இருமல் வந்தபோது வாங்கினது, அரைபாட்டில் அப்படியே இருக்கு... நானே உங்கம்மாவுக்குக் குடுக்கணும்னு இருந்தேன்... அப்பறமா வந்து வாங்கிக்கறியா?

சரியென்று சொல்லிவிட்டு, மாவுடன் உள்ளே வந்து மற்ற வேலைகளைக் கவனித்தாள் அகிலா.

வேதா மாமியை நினைக்கையில் அவள் மனசு உருகிப்போயிற்று.

எத்தனை நல்ல மனுஷி!

கிட்டத்தட்ட இருபது வருஷமாய் இந்த அவுட்ஹவுஸில்தான் மஹாதேவன், அகிலாவின் தகப்பன், தன் குடும்பத்தோடு இருக்கிறார். வீட்டுக்காரி என்ற ஹோதாவில் வேதா மாமியிடமிருந்து ஒரு வேண்டாத பேச்சு? ஏச்சு? ம்ஹூம், ஒன்றும் கிடையாது.

வேதம், சின்ன வயசில் விதவையானவள். கணவன் அவளுக்கு நிறைய சொத்தும், வாரிசாக ஒரு மகளையும் விட்டுச் சென்றிருந்ததால், யார் தயவுமின்றி நல்லமுறையில் வாழ்ந்துவருகிறாள். அந்தக் காலத்திலேயே, வேதத்தின் கணவர் கார் வைத்துக்கொண்டிருந்தவராம். கணவர் போன பிறகு காரை விற்றபோது, சென்னையில் வாத்தியாராய் வேலை ஏற்று, மனைவி மூன்று குழந்தைகளுடன் வந்த மஹாதேவன் கண்ணில், அந்தக் காலி ஷெட் பட்டது. ஷெட்டை ஒட்டி ஒரு சமையலறை, தொட்டிமுற்றமும், கிணற்றடியில் குளியலறை, பாத்ரூம் கட்டி, ஐம்பது ரூபாய்க்கு வேதம் வாடகைக்கு விட்டாள்.

வருஷம் இருபதாகிவிட்டது... இன்னும் வாடகை ஐம்பதுதான்.

நீங்க குடும்பஸ்தர்... உங்க வருமானம் குடும்பம் நடத்தத்தான் சரியா இருக்கும். மேக்கொண்டு உங்ககிட்ட இருவதோ முப்பதோ வாங்கி நா என்ன இன்னொரு பங்களாவா கட்டப்போறேன்? வேண்டாம்! என்று தீர்மானமாய், மஹாதேவன் வாடகைப் பேச்சை எடுத்தபோது மறுத்துவிட்டாள்.

சாரதா திடமாய் இருந்தவரையில், வேதா மாமிக்கு எந்த உபரிக் காரியத்திலும் வலதுகையாய் இருந்தாள். இப்போது, தன்னாலியன்ற அளவில் அதை இட்டுநிரப்புகிறாள் அகிலா.

வேதத்தின் ஒரே மகள் தங்கத்தின் கணவர் வெங்கடேஷ், ஆர்மியில் மேஜர். ஆறு மாசத்துக்கு ஒரு முறை என்று முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி அவர்களை ஊர் மாற்றினபோது, குழந்தைகள் படிப்பு கெட்டுப்போனதாலும், தனியாய் தான் இருப்பது கஷ்டமாய் இருப்பதாலும், பேரன்கள் சந்திரன், சுரேஷை கடந்த மூன்று வருஷங்களாய் தன்னோடு வேதம் வைத்துக்கொண்டிருக்கிறாள்.

அவர்களுக்கு வாரம் மூன்று நாள்களுக்கு சிரத்தையுடன் ட்யூஷன் சொல்லிக்கொடுப்பது, மஹாதேவன்தான்.

முதலில் ஒருநாள் வேதா மாமி ட்யூஷனுக்கான சம்பளம் கொடுக்க முன்வந்தபோது, வாய்வார்த்தையாக ஒன்றுமே பேசாமல் தலையை ஆட்டி, அந்தப் பணத்தை மறுத்துவிட்டார் மஹாதேவன்.

சாரதா மட்டும், மாமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். பெத்த பிள்ளையே எங்களை வேண்டாம்னு உதறிண்டு போயிட்டாலும், உங்களோட பிறந்த மாதிரி நீங்கதான் எங்க குடும்பத்துக்கு அரவணைப்பா, வழிகாட்டியா இருக்கேள்... உங்க பேரன்கள் எங்களுக்கு மட்டும் பாத்தியதை இல்லியா? அவாளுக்குப் படிப்பு சொல்லிக்குடுத்து இவர் காசு வாங்கிண்டா, அப்பறம் நாங்க மனுஷாதானா, வேதா மாமி? என்று மெல்லச் சொல்லி அழுதாள்.

ஆமாம்... மஹாதேவன் சாரதா தம்பதியின் மூத்த மகள் லலிதாவாலோ, இல்லை இரண்டாவது புத்திரன் ஸ்வாமிநாதனாலோ, அவர்கள் குடும்பத்திற்கு என்ன லாபம்?

லலிதாவையாவது தள்ளிவிடலாம்... பெண் ஜென்மம். அவள் புக்ககம், கணவன் ஒருமாதிரி...

ஆனால், ஸ்வாமியை அப்படி ஒதுக்க முடியுமா? அவன் தலையெடுத்து குடும்ப பாரத்தைத் தாங்கப்போகிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை ஒரே ஒரு நொடியில் தகர்த்துவிட்டு, சுயநலமே உருவாக இவர்களை விட்டு வெளியேறினானே... அவனைப் பிள்ளையாகப் பெற்றதில் மஹாதேவனுக்கு என்ன ஆதாயம்!

2

மஹாதேவனின் குடும்பம், அவர் வருவாய்க்குப் பெரிசுதான். 'இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம், மூன்றுக்குப் பின் எப்போதுமே வேண்டாம்' என்ற கோஷங்க ளெல்லாம் காதிலும் மனசிலும் விழாத காலம்... அதனால், தெரியாத்தனமாய் குடும்பத்தைப் பெருக்கிக்கொண்டுவிட்டார். முதலில் லலிதா, இரண்டாவது ஸ்வாமிநாதன், அடுத்து அகிலா பிறந்ததும், சரி இதோடு போதுமென்று இருந்தவரின் போதாத காலம், ஏழு வருஷ இடைவெளிக்குப் பின்னர் பவானி, அடுத்து ராமநாதன். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்போது தெரியாத கஷ்டம், அவர்களை வளர்க்கும்போதல்லவா புரிகிறது!

மஹாதேவன், ரொம்ப நல்லவர். மானி, நேர்மையானவர். மொத்தத்தில், குழந்தைகளை உருவாக்கும் வாத்தியாரின் வேலைக்கேற்ற குணவான். கருமமே கண்ணாய், தன் வேலையை சிரத்தையுடன் செய்பவர். குடும்பத்தில் செலவு அதிகமாகி, வரவு போதாமல் கையைக் கடிக்கும்போது, 'அசட்டுத்தனத்தால் குடும்பத்தைத் திட்டமிடாமல் போய்விட்டோமே!' என்று மனசில் நினைத்தாலும் நினைப்பாரே தவிரவும், 'போயும்போயும் வருமானமில்லாத வாத்தியார் உத்தியோ கத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டேனே!' என்று அதுநாள்வரை வருந்தினதில்லை.

'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்று தன் தொழிலில் அவருக்கு அளவுகடந்த பக்தியும் சிரத்தையும் உண்டு.

பள்ளியில் வைத்துக்கொள்ள அனுமதித்திருந்த மூன்று ட்யூஷன்களையும் சேர்த்து வீட்டுக்கு எடுத்துவந்துகொண்டிருந்த ஐநூறு ரூபாய் சொச்சத்தில், குடும்பத்தை ஓரளவுக்கு நிம்மதியுடன் நடத்திவந்தவருக்கு, மூத்த மகளின் கல்யாணத்துக்குப் பிறகே ஏழரைநாட்டுச் சனி பிடித்தது.

மஹாதேவன் சாரதா தம்பதியின் குழந்தைகளில் மூத்தது இரண்டுமே, அழகோடு சேர்த்தி. பாக்கி மூன்றும், பார்வைக்கு சாதாரணம்... ரொம்ப சாதாரணம்.

சாரதா, பிரமாத அழகியாக இல்லாவிட்டாலும், சிவந்த நிறத்துடன், ஒடிசலாக இருப்பாள். லலிதாவும் ஸ்வாமியும், அம்மாவின் நிறத்தையும், அப்பாவின் பெரிய கண்கள், தீர்க்கமான மூக்கு இவற்றையும் கொண்டு பிறந்திருந்தார்கள். அகிலா, பவானி, ராமு மூவருக்கும், அம்மாவின் நிறமும் இல்லை, சொல்லும்படியான முகலட்சணமும் இல்லை.

லலிதாவுக்கு, தான் கண்ணுக்கு நன்றாய் இருக்கிறோம் என்பது புரிந்ததால், தன்னை சிங்காரித்துக்கொள்வதிலேயே மிகுந்த அக்கறை காட்டினாள். புத்தி கண்ணாடிக்கு முன் நின்று அழகுபார்க்கத் தூண்டியதே தவிர, நான்காம் படிவத்தை அவள் தாண்ட உதவவில்லை. இரண்டு தரம் அதையே முற்றுகையிட்டவள், 'நா இனிமே ஸ்கூலுக்குப் போகலப்பா' என்று நின்றுவிட்டாள்.

படிப்பு சொல்லித்தரும் உபாத்தியாயருக்கு, தன் பெண் எஸ்.எஸ்.எல்.சியைக் கூடத் தாண்டாததில் ரொம்ப வருத்தம்.

சில வருஷங்கள் லலிதா வீட்டில் உட்கார்ந்து குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி முடித்த சமயத்தில், கல்யாண நேரம் அவளைத் தேடிவந்தது. மஹாதேவனின் ஒன்றுவிட்ட தமக்கையின் மகன் மணி, லலிதாவைப் பண்ணிக் கொள்ள ஆசையாக இருக்கிறதென்று சொல்லவே, அவளாகவே வலிய மஹாதேவனுக்கு லெட்டர் போட்டு தங்கள் ஊருக்கு வரவழைத்து, கல்யாணப் பேச்சை எடுத்தாள்.

என் பிள்ளைக்குப் பெரிய எடத்துலேந்தெல்லாம் பொண்ணு குடுக்கத் தயாரா இருக்கா... ஆனா, அவன் என்னமோ உன் பொண்ணைப் பண்ணிக்க றேங்கறான்... உன் பொண்ணுக்குக் குடுத்துவெச்சிருக்கணும்! என்ன சொல்றே, தேவூ? என்றாள் தமக்கை.

மஹாதேவன் என்ன சொல்லுவார்!

இருக்கும் இருப்பில், பெண்ணின் கல்யாணத்தைப்பற்றி யோசிக்கும் நிலையிலா அவர் இருந்தார்! வருகிற வருவாய், கைக்கும் வாய்க்கும் சரியாகப் போயிற்றே ஒழிய, பெண் கல்யாணத்துக்கென இரண்டு காசு அவர் சேர்த்துக்கூட வைக்கவில்லையே! இன்னும் நாலு வருஷம் போகட்டும், ஸ்வாமி தலையெடுத்த பிறகே பெண்ணின் கல்யாணத்தைப் பற்றின பேச்சு என்றுதானே இருந்தார்!

அவளையும் குழந்தையையும் கேட்டுட்டு வந்து சொல்றேன்... என்று பதில் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

மணி நல்ல பையன். இப்போதே எண்ணூறோ என்னவோ சம்பளமாம். சின்ன வயசு. வாழ்க்கையில் முன்னேறக்கூடியவன். எல்லாம் சரிதான்... ஆனால், பணத்துக்கு எங்கே போவது?

நானா வந்து வலிய கேக்கறேங்கறதுக்காக, சீர்செனத்தில குறை வெக்காதே, தேவூ... நாலு பேர் மெச்சும்படியான சீரோட என் மாட்டுப்பொண்ணு வரணும்... இப்பவே சொல்லிட்டேன், ஆமா! என்று கறாராய் அக்கா பேசினதை நினைத்தால், மஹாதேவனுக்கு பயமாகவே இருந்தது.

இரண்டு நாள்களுக்கு கணவனும் மனைவியுமாய் யோசித்தார்கள். அதிர்ஷ்டம் வலிய வரும்போது எட்டி உதைக்கக்கூடாது என்று சாரதாவுக்குத் தீர்மானமாய் தோன்றியதாலும், மகள் லலிதா கண்களில் ஆயிரமாயிரம் கனவுகளுடன் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்துவிட்டதாலும், மேற்கொண்டு பேசிவரச் சொல்லி கணவனைக் கிளப்பினாள்.

மஹாதேவன் பேச்சுக்களை முடித்துக்கொண்டு திரும்பி வந்தார்.

எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கும்னு தோணல, சாரதா... இருவது பவுனுக்கு நகை போடணுமாம், வைர மூக்குத்தியாம், கையில ரெண்டாயிரமாம்... வெள்ளிப்பாத்திரம், எவர்சில்வர்னு அவா பெரிய லிஸ்டே குடுத்திருக்கா... நமக்கு இவ்வளவு அகலக்கால் வெக்கத் தோதுப்படாது! என்றார் ஆற்றாமையுடன். சாரதா மலைத்துப்போனாள்.

லிஸ்டுப்படி பார்த்தால், இருபதாயிரத்தைத் தாண்டும் போலிருக்கிறதே! ஏ, அப்பா! அத்தனை பணத்தை எப்படிச் சமாளிக்கமுடியும்?

தவிர, இருக்கும் நாலு காசையும் மூத்த பெண்ணுக்கே செலவழித்து விட்டால், அடுத்து அகிலாவுக்கு? பவானிக்கு? யார் காலில் போய் விழமுடியும்? ம்ஹூம், இந்த இடம் நமக்குச் சரிப்படாதுதான்.

கல்யாணப்பேச்சு முறிந்துவிட்டது என்று தெரிந்ததும், இரண்டு நாள்களுக்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு அழுதுதீர்த்தாள் லலிதா.

ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்த அகிலாதான், பெற்றோரை குழப்பத்தி லிருந்து தெளிவுக்குக் கொண்டுவந்தாள் என்று சொல்லவேண்டும்.

விவரம் தெரிந்த நாளிலிருந்தே, நிதானம், சமயோஜிதம், அடக்கம், அதிக ஆசையில்லாமை என்றே அகிலா இருந்ததால், அவள் பேச்சுக்கு வீட்டில் என்றும் தனி மதிப்பு உண்டு.

மாலையில் கிணற்றடியில் அப்பா சந்தியாவந்தனம் செய்தபோது அருகில் சென்று உட்கார்ந்துகொண்டு, அவர் முடிக்கும்வரை வாளாவிருந்தாள் அகிலா.

பின், மெல்லப் பேசினாள்.

ரெண்டு நாளா அக்கா சாப்பிடவேயில்லப்பா... பாவம்... மணி அத்தான் மேல ரொம்ப ஆசை வெச்சிருக்காப்பா...

அவள் தலையெழுத்து என்பதுபோல நிமிர்ந்து பார்த்தார் மஹாதேவன்.

அத்தைகிட்ட இன்னொரு தடவை போய்ப் பேசினா, புரிஞ்சுப்பாளோன்னு எனக்குத் தோண்றது... அக்காவுக்கு நிறைய செலவழிச்சா, எனக்கும் பவானிக்கும் என்ன பண்றதுன்னு நீங்க அம்மாகிட்ட சொல்லிண்டிருந்ததக் கேட்டேன்... எனக்கு இப்போ என்ன அவசரம்ப்பா? எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சுட்டு, ஷார்ட்ஹாண்ட், டைப்பிங் கத்துண்டு, வேலைக்குக் கொஞ்ச நாளாவது போய் சம்பாதிச்சு, உங்களுக்கு உதவணும்னு எனக்கு ஆசையா இருக்குப்பா... அண்ணாவுக்கு பி.காம் முடிய இன்னும் ரெண்டு வருஷம்தானே? அப்பறம் அவன் சம்பாத்தியம் வேற சேந்துடும்... அதனால, இப்போ அக்கா கல்யாணத்தை நல்ல தினுசுல முடிச்சுடலாம்ப்பா... ப்ளீஸ்...

விவேகத்தோடு பதினைந்து வயசில் பேசும் அகிலாவைப் பார்த்தார் மஹாதேவன். அவருக்குப் பெருமையாக இருந்தது.

மீண்டும் மனைவியுடன் அகிலாவை வைத்துக்கொண்டே பேசியதன் பலனாய், மறுபடியும் அக்காவின் ஊருக்குப் போய் பேசிவிட்டு வந்தார். வைர மூக்குத்தியையும், கையில் இரண்டாயிரத்தையும், பையனின் தீர்மானமான முடிவுக்காக முணுமுணுத்துக்கொண்டே விட்டுவிட்டாள் அக்கா.

பள்ளியில் கடனுக்கு அப்ளிகேஷன் போட்டார் மஹாதேவன். பள்ளி நிர்வாகிகள் நல்லவர்கள். குறித்த காலத்துக்குள் கேட்ட தொகையைக் கொடுத்து விட்டார்கள். வேதா மாமி தெய்வம்போல பாக்கிப் பணத்தைக் கொடுத்தது மல்லாமல், கல்யாணத்தைத் தன் வீட்டிலேயே நடத்தவும் ஏற்பாடு பண்ணினாள். ஐந்து பவுனில் திருமாங்கல்யம், கொடி, ஆறு பவுனில் இரண்டு ஜதை வளையல்கள், மாப்பிள்ளைக்குத் தங்க மோதிரம் பண்ணி, துணிமணி, பாத்திர வகையறா எடுப்பதற்குள், மஹாதேவனின் விழிகள் பிதுங்கிப்போயின. சொச்ச கணக்கு நகைக்காக, நாள் கிழமைகளில் போட்டுக்கொண்டதுபோக தன் ஒரே பெரிய சொத்தாய் உள்ளே வைத்திருந்த எட்டுப் பவுன் இரட்டைவடச் சங்கிலியை மகளுக்குப் போட்டு, கல்யாணத்தை இட்டு நிரப்பினாள் சாரதா.

தன்னாலியன்றவரை எவ்வளவோ சிறப்பாக மஹாதேவன் திருமணத்தை நடத்தியும்கூட, அவர் அக்காவுக்கு அதிருப்தியே அதிகமாய் இருந்தது. வக்கீல் வீட்டுலேந்து, பொண்ணுக்கு வைரத்தோடு மூக்குத்தியோட சம்பந்தம் பேச வந்தா... ராமைய்யர் பொண்ணைப் பண்ணிண்டா, ஸ்கூட்டர் வாங்கித்தரேன்னா... இப்போ ஒண்ணுமில்ல! ம்... என்று கல்யாணத்தின்போது பல தடவை அவள் பெருமூச்சு விட்டதை, பலர் கேட்கவே செய்தார்கள். யார் போய் நின்று அவளிடம் பேச இயலும்! பார்க்கப்போனால், மஹாதேவன் குடும்பத்தின் நிலைமையைவிட அவர்களுடையது ரொம்ப உயர்ந்த இடமில்லை... மணியின் தந்தை மருந்துக்கடை ஒன்றில் கணக்கெழுதி சம்பாதித்தவர்தாம். மணி ஒரே பையன்... படித்து நல்ல வேலையில் சேர்ந்து, கை நிறைய சம்பளம் வாங்குவதுதான் அவர்கள் குடும்பத்தின் ப்ளஸ் பாயிண்ட்.

கல்யாணம் முடிந்த இரண்டாம் மாசமே, எவ்வளவு தூரம் தான் அகலக்கால் வைத்துவிட்டோமென்று புரிந்துகொண்டார் மஹாதேவன்.

பள்ளியில் கடனாகப் பெற்ற தொகையில் இன்ஸ்டால்மென்டைப் பிடித்துக் கொண்டு பாக்கி கொடுத்ததில், வேதா மாமியின் கடனைத் திருப்ப வேண்டும், குடும்பத்தை ஒப்பேற்ற வேண்டும் என்ற நிலை எழுந்தபோது, மஹாதேவன் தவித்துப்போனார்.

அரைவயிறு சாப்பிட்டாலும் சரி, வேதா மாமியின் கடனைத் திருப்புவது மட்டும் நிற்கக்கூடாது என்ற வைராக்கியம் எழ, மாசம் ஐம்பது ரூபாயை வாடகையுடன் சேர்த்து நூறாகக் கொடுக்கத் தொடங்கினார்.

ஆறு மாசம் தாண்டுவதற்குள், கடன் சுமையின் பளுவால் அவர் குன்றிப் போனார். காலையில் முக்கால், சாயங்காலம் முக்கால் லிட்டர் என்று வாங்கிவந்த பாலை, ஒரு நாளுக்கு மொத்தம் ஒரு லிட்டராகக் குறைத்தார். தேங்கா யெண்ணெய் போட்டுச்

Enjoying the preview?
Page 1 of 1