Puthiya Yugam Pirakattum!
5/5
()
About this ebook
Read more from Jyothirllata Girija
Purushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ithayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsGnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsPenkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsAlaigalum Aazhangalum Rating: 0 out of 5 stars0 ratings‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Marupadiyum Pozhuthu Vidiyum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poiyin Rating: 0 out of 5 stars0 ratingsHarium Sivanum Onnu Rating: 0 out of 5 stars0 ratingsPorattam Rating: 0 out of 5 stars0 ratingsKannamma Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Naalaiyum Ilangarkal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsThiruppumunai Rating: 0 out of 5 stars0 ratingsVanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Vasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsPonnulagam Nokkip Pohirairgal Rating: 0 out of 5 stars0 ratingsNallathambi Rating: 0 out of 5 stars0 ratingsMagalukkaga Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthiya Yugam Pirakattum!
Related ebooks
Arabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Ninaivugal Niraintha Vettridam Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Aanathikkam Rating: 5 out of 5 stars5/5Nalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Gangai Engey Pogiraal? Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyai Meeri Nindru Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsIvar, Avaralla! Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Sandhiya Rating: 5 out of 5 stars5/5Kadai Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsNerukkamana Idaiveli Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsAmmai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal Rating: 5 out of 5 stars5/5Karpu... Karpariya Aaval! Rating: 5 out of 5 stars5/5Amma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Pesi Pesi Kollathey!!! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Puthiya Yugam Pirakattum!
1 rating0 reviews
Book preview
Puthiya Yugam Pirakattum! - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
புதிய யுகம் பிறக்கட்டும்!
Puthiya Yugam Pirakattum!
Author :
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For other books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
புதிய யுகம் பிறக்கட்டும் !
1
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வருகிறது. சொல்லிக்கொள்ளக்கூடிய எண்ணங்கள், நிகழ்வுகள், சொல்லக்கூடாத எண்ணங்கள், நிகழ்வுகள் இவற்றையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தன்வரலாற்றின் வடிவிலோ அல்லது வேறு ஒருவர் சொல்லுவது போன்ற வடிவிலோ எழுதினால், அது நிச்சயமாக ஒரு சுவையான நெடுங்கதையாக அமையத்தான் செய்யும்.
இப்படி நினைத்துப் பார்த்தபோது என்னுடைய கதையையேதான் எழுதினால் என்ன என்கிற எண்ணம் வந்தது. நம் நாட்டில் தன்வரலாறு எழுதுவதற்கான முழுத்தகுதியும் படைத்திருந்த ஒரே மனிதர் மகாத்மா காந்திதான்! பொய்களைச் சொல்லியும், உண்மைகளை மறைத்தும் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ளாதவர். எனினும் இந்தக் கதையில் நான் பொய் எதையும் சொல்லப் போவதில்லை. பிறரைப் புண்படுத்தாமல் எந்தெந்த உண்மைகளைச் சொல்ல முடியுமோ அவற்றை மட்டுமே இதில் சொல்ல எண்ணம்.
பிறர் என்று நான் குறிப்பிடுவது என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களை மட்டுமன்று. மொத்தத்தில் தாங்கமுடியாத துன்பங்களைத் தாண்டி வந்தவள் என்கிற முறையில் நான் கூறப்போகும் சில உண்மைகள் அவை போன்ற துன்பங்களை இன்றளவும் பிறர்க்கு இழைத்துக் கொண்டிருக்கும் ஆண்-பெண்களையெல்லாம் புண்படுத்தக்கூடும்தான்! ஆனால் அதற்கு நான் என்ன செய்வதாம்?
சரி இந்தப் புலப்பத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். எனக்கு எண்பத்தெட்டு வயது ஆகி விட்டது. அதாவது, நான் பிறந்த ஆண்டு 1916 'அய்யே! அப்படியானால் இது ஒரு கிழவியின் கதை!' என்று யாரும் சுவாரசியம் இழக்க வேண்டாம். ஏனெனில், இப்போதைய கிழவியாகிய நான் ஒரு காலத்து இளமங்கை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நான் சொல்லச் சொல்ல இந்தக் கதையை எழுதப் போவதும் ஒர் இளமங்கைதான். தவிர, எனது கதை நான் பிறந்த பிறகு எனக்கு நினைவு தெரியத் தொடங்கியதுமே ஆரம்பித்துவிடுவதால், இந்தக் காலத்து வாசகர்கள் எதிர்பார்க்கும் காதல், காமம், கோபம், எதிர்பாராத திருப்பங்கள், சண்டைகள், துயரங்கள், போராட்டங்கள் எல்லாமே இந்தக் கதையில் உண்டு. எனவே, ஒரு கிழவியின் கதையில் என்ன இருக்கப்போகிறது என்று யாரும் என்னை ஓரங்கட்ட வேண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
பக்கத்து வீட்டுப் பெண் மாலதி, திருமணம் ஆனவள். ஒரு பெண்ணும், ஒர் ஆணுமாய் இரண்டே குழந்தைகள். பெண்தான் மூத்தவள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஆண் குழந்தை நான்காம் வகுப்பில் இருக்கிறான். இன்றைய எனது அந்தஸ்து, சமுதாய நிலை ஆகியவற்றின் தாக்கத்தால் சில தடவைகள் ஏதேதோ காரியங்களுக்காக அவள் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துப் பேசுவதுண்டு. அந்தச் சிறு பழக்கந்தான். ஏதோ ஒரு சமயம் ஒரு பெண்ணின் பிரச்சினை சம்பந்தமாய் அவள் அந்தப் பெண்ணுடன் என்னைப் பார்த்தபோது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. அந்தப் பெண்ணுக்குத் தன்னம்பிக்கை யூட்டுவதற்காக நான் சொன்னது. அதற்குப் பிறகும் இரண்டொரு நிகழ்வுகளின் பகிர்தலுக்குப் பிறகுதான் மாலதி, மேடம்! நீங்க ஏன் உங்க சுயசரிதையை எழுதக்கூடாது? அந்தக் காலத்திலேயே ரொம்ப தைரியமா நடந்திருக்கீங்க. நீங்க சொன்ன சில விஷயங்கள்லேருந்து உங்கம்மா உங்களை விடவும் துணிச்சல்காரங்கன்னு தோணுது. உங்க வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறதால இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்கள், பாடங்கள் தெரியவரும். துணிச்சல், தன்னம்பிக்கை இவையெல்லாமும் வரும். இந்தக் காலத்துப் பெண்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிற சுதந்திரங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் அந்தக் காலத்துப் பெண்கள் கொடுக்க நேர்ந்த விலைகள் பற்றியும் தெரியும். என்ன சொல்றீlங்க?
என்றாள்.
அந்தக் கணத்தில்தான் என் கதையை எழுதும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அதுகாறும் அப்படி ஒர் எண்ணம் எனக்கு வராதது பற்றிய வியப்பும் அடைந்தேன்.
சுயசரிதையை எழுதுற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள்ங்கிற எண்ணம் எனக்கு இல்லைன்னாலும், எங்கம்மாவுடைய வாழ்க்கை என்னுடையதைக் காட்டிலும் அதிகச் சோதனைகளும் சுவாரசியங்களும் நிறைஞ்சதுங்கிறதனால, என்னோட கதையை எழுதுற சாக்கில அவங்களைப் பத்தியும் நிறையவே சொல்லலாமேங்கிறதுனால, எழுதினா என்னன்னு நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கே தோண்றது. ஆனா அதுக்கு எனக்கு ஒரு ஆள் வேணும். ஒண்ணு, நான் சொல்லச் சொல்ல எழுதணும். இல்லேன்னா, நான் என் கதையை அப்பப்ப சொல்றதைக் கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சு சுவாரசியமா எழுதத் தெரிஞ்ச யாரோட உதவியாவது எனக்கு வேணும்.
நான் முடிப்பதற்குள் மாலதி குறுக்கிட்டாள்: உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், மேடம். ஏன்னா நானே எழுதுவேன். ஒரு காலத்துல நான் எழுத்தாளரா இருந்தவதான். கல்யாணத்துக்கு முந்தி சில கதைகள் எழுதியிருக்கேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சரிப்பட்டு வரல்லே. நிறுத்திட்டேன்.
என்ன! சரிப்பட்டு வரல்லியா? அப்படின்னா? … என்னம்மா பதில் சொல்லாம இருக்கே? உங்க வீட்டுக் காரருக்குப் பிடிக்கல்லியா?
மாலதி சிரித்தாள். சிரிப்பில் கசப்புத் தெறித்தது: அதேதான்! கரெக்டா ஊகிச்சுட்டேள். கல்யாணத்துக்கு அப்புறம் வரதட்சிணை எதிர்ப்புக் கதை ஒண்ணு எழுதி அது பத்திரிகையிலே வந்துடுத்து. அதுக்கு முன்னாடி நான் எழுதினது சாதாரணக் குடும்பக் கதைகள். ஆனா இந்தக் கதை எழுதினதும்தான் அவருக்குக் கடுமையான கோபம் வந்துடுத்து. ஏன்னா, அவரும் வரதட்சினை வாங்கினவர். இனிமே பேனாவைத் தொடு சொல்றேன். உன்கையையே அடுப்புக்குள்ள சொருகிடுவேன்! அப்படின்னாரு. அதான்!
அவர்தான் இப்ப இல்லியே உன்னைக் கட்டுப் படுத்துறதுக்கு? இப்ப எழுதலாமில்ல?
என்னமோ தெரியல்ல மேடம். அதுக்கு அப்புறம் எனக்கு ஆர்வமே இல்லாமப் போயிடுச்சு.. ஆனா உங்க கதையை எழுதற சாக்கிலே அதைப் புதுப்பிச்சுக்கலா மேன்னு ஒரு ஆசை இப்ப திடீர்னு வந்திருக்கு. அதான் கேட்டேன்.
சரி. முதல்ல உனக்குச் சுருக்கமா என் கதையை எழுதிக் குடுத்துடறேன். ஆனா அதைச் சுயசரிதையா எழுத வேண்டாம்மா. ஒரு நாவல் வடிவத்துல மாத்தி எழுதிடு. ஒரு நாவலுக்கு உண்டான அதிகம் பொய் கலக்காத சுவாரசியங்களைச் சேர்த்து எழுது. நீதான் எழுத்தாளராச்சே! உனக்குச் சொல்லித் தரணுமா?
கொஞ்ச நேர விவாதத்துக்குப் பிறகு தன்னிலையில் எழுதுவதை விடவும் படர்க்கையில் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்கிற முடிவுக்கு இருவரும் வந்தோம்.
இனி நீங்கள் படிக்கப்போவது அவள் எழுதிய கதையைத்தான்!
அது ஒரு பட்டிக்காடு, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. ஆனால் பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நானறிந்த வரையில் யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. அதனாலோ என்னவோ, அந்தச் சின்ன ஊரில் கோயில் இருந்ததே ஒழிய, பள்ளிக்கூடம் இல்லை. வெறும் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் இருந்தது. அதிலும் அக்கிரகாரத்துக் குழந்தைகள் மட்டுமே படித்தார்கள். குழந்தைகள் என்றால், ஆண் குழந்தைகள். ஐந்தாம் வகுப்புவரை அதில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டும். அந்த ஊர் மூன்று கல் தொலைவில் இருந்தது. பெண் குழந்தைகளுக்குப் படிப்புத் தேவையில்லை என்பதே எல்லாருடையவும் ஒருமித்த கருத்தாக இருந்தது.
அருமையும் ஆசையுமாய்த் துர்க்காவை வளர்த்து வந்தாலும், பத்மநாபனும் காவேரியும் பொதுவான இந்த விதிக்கு விலக்காக இல்லை. எனவே, பத்மநாபன் அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே படிப்புச் சொல்லிக் கொடுத்தார். படிப்பு என்றால், சரித்திரம், பூகோளம், ஆங்கிலம் என்றெல்லாம் இல்லை. தமிழ் எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும்தான். ஏதோ தபாலில் வரும் கடிதங்களைப் படிப்பதற்கும், பால்-தயிர்க் கணக்கு எழுதுவதற்கும் தெரிந்தால் போதும் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. இவ்வாறான விதிவிலக்குகள் கூட, பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களில் மட்டுமே இருந்தனர்.
துர்க்கா கணக்குப் போடுவதில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தமது பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கைப் போடத் தாம் எடுத்துக்கொண்ட நேரத்தில் பாதியைக்கூட துர்க்கா எடுத்துக்கொள்ளாதது பத்மநாபனை வியப்பில் ஆழ்த்தியது. துர்க்காவுக்கு ஏழு வயது ஆனபோது ஒருநாள் தன் மனைவியைக் கூவியழைத்த அவர், அடியே, காவேரி! நம்ம பொண்ணு கணக்குல மகா கெட்டிக்காரியா இருக்கா. படிக்கவெச்சா பெரிய கணக்கு மேதையா வருவான்னு தோண்றது. ஒரு கணக்காவது தப்பாப் போடணுமே! இவளைப் பக்கத்து ஊருக்கு அனுப்பிப் படிக்கவெச்சா என்ன?
என்றார், ஆர்வமாக.
துர்க்காவின் கெட்டிக்காரத்தனம் காவேரிக்கு உவகை யாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக ஊர் உலகத்தில் இல்லாத வழக்கமாக அவளால் துர்க்காவைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
என்னன்னா சொல்றேள்? படிக்க வைக்கிறதா! நன்னாருக்கு, போங்கோ. நம்ம ஜாதி வழக்கப்படி பெரிய வளாகிறதுக்கு முந்தி மூணு முடிச்சுப் போட்டுத் தள்ளி விடப் பாருங்கோ. அப்புறம் நாலுபேர் நாலுவிதமாப் பேசவா நம்மைப்பத்தி. என்னத்துக்குன்னா வீண் வம்பு!
என்றாள் காவேரி, கவலையுடன்.
அப்படின்னா சொல்றே? என்னடி காவேரி இது? எவ்வளவு கெட்டிக்காரியா இருக்கா, தெரியுமா? நீயோ படிக்காத தற்குறி. உங்கிட்டப் போய் இவளைப் பத்திப் பேசறதுல அர்த்தமே இல்லே. ஆனாலும் சொல்லாம இருக்க முடியல்லே. இவளோட அருமை நோக்குத் தெரியல்லே.
தெரியாம இல்லேன்னா. நீங்க சொல்றதும் பெருமைப் பட்டுக்குறதும் நேக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா பொண் கொழந்தையாச்சேன்னா? காலா காலத்துல கல்யாணத்தைப் பண்ணி அனுப்ப வேண்டியதுதானே நம்மளோட கடமை? இவளே பிள்ளைக் கொழந்தையா இருந்தா நான் ஒண்ணும் தடுக்கப் போறதில்லே.
நீ என்னடி தடுக்கிறது? அப்படியே தடுத்தாத்தான் என்ன? நான் கேட்டுடவா போறேன்? தவிரவும் இப்படி ஒரு ஆட்சேபணை உன் வாயிலிருந்து வரவாபோறது? பெருமையில அப்படியே பூரிச்சுப் போய் ஆசையாத் துரக்கி முத்தம் கொடுத்திருப்பே. பொண்ணாப் பொறந்து தொலைச்சுட்டாளே இவ!
அதேதான்னா! படிக்கவெச்சா நம்மளை இந்த ஊர்க்காரா உண்டு இல்லைன்னு ஆக்கிப்பிடுவா. சொப்பனத் துலகட அப்படி எல்லாம் நினைக்காதங்கோ. பெரியவளாகிறதுக்கு முந்தி கல்யாணம் பண்ண முடியல்லேன்னா வாயில வந்ததைப் பேசுற ஊர் இது. இப்ப மாதிரியே ஆத்துலயே உக்கார வெச்சு ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்கக் கத்துக் குடுங்கோ, போறும். நீங்கதான் மெட்றிகுலேஷன் வரைக்கும் படிச்சிருக்கேளேன்னா?
பட்டணத்துல யெல்லாம் இப்ப பொண் கொழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறா, காவேரி, நோக்குத் தெரியுமா? வடக்கே ஒரு பொண்ணு டாக்டருக்குப் படிக்கிறதுக்காக அமெரிக்காவுக்குப் போயிருக்காளாம். பேப்பர்ல எல்லாம்கூட வந்தது.
அவாள்ளாம் ரொம்ப ரொம்பப் பெரிய பணக்கா ராளாயிருப்பா. பணக்காரா என்ன செஞ்சாலும் யாரும் குத்தம் சொல்லமாட்டா. ஆனா நாம அந்த அளவுக்குப் பணக்காரா இல்லியே! அதனால அவளைப் படிக்க வைக்கிறதைப்பத்தின பேச்சையே மறந்துடுங்கோ... அதுசரி, வயக்காட்டுக்குப் போனேளே, நாத்தெல்லாம் நன்னா வந்திருக்கா?
ம்…. ம்..
என்ற பத்மநாபன் சிந்தனையில் ஆழ்ந்தார். காவேரி பேச்சை மாற்றியது சின்னதாய் அவருள் ஒரு சினத்தைக் கிளர்த்தியது. 'எவ்வளவு கெட்டிக்காரக் கொழந்தை துர்க்கா! அவளைப் படிக்க வைக்கப்படாதுங்கறாளே?. ஆனா, அவ சொல்றது. வாஸ்தவந்தான். பக்கத்து ஊருக்கு ஒரு நாளைப்போல நடந்துபோகணும். எங்கிட்ட என்ன வில்வண்டியா இருக்கு, கூட்டிண்டு போய்க் கொண்டு விட்றதுக்கும், திரும்ப அழைச்சிண்டு வர்றதுக்கும்? நான் கூட்டிண்டு போய்க் கொழந்தையை விட்டுட்டு சாயந்திரம் திருப்பிக் கூட்டிண்டு வரலாந்தான்னாலும், இவளுக்குத் துணையாப் படிக்கிறதுக்குப் பள்ளிக்கூடத்துல ஒரு பொண் கொழந்தையாவது இருக்க வேண்டாமா? அப்படி யாரு தன்னோட பொண் கொழந்தையைப் படிக்க வைக்கிறதுக்கு இந்த ஊர்ல தயாராயிருக்கப் போறா?அதனால காவேரி சொல்றாப்ல அதைப் பத்தி சொப்பனம்கூடக் காணக்கூடாதுதான்!" என்று எண்ணீயவாறு பத்மநாபன் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தபடி துர்க்காவை ஆசையுடன் நோக்கினார்.
அம்மா, கொழந்தே! நோக்குப் பள்ளிக்கூடத்துல சேரனும்னு ஆசை இருக்காம்மா?
கணக்குப் போட்றதுன்னா நேக்கு ரொம்ப அசையா இருக்குப்பா! நாளெல்லாம் கணக்குப் போட்டுண்டே இருக்கச் சொன்னாக்கூட, போட்டுண்டே இருப்பேம்பா
அவளது ஆர்வம் புரிய, அவர் சட்டென்று தனது பார்வையை அப்பால் நகர்த்திக்கொண்டார். அவர் எதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தவள் போன்று வைத்த விழிகளை வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த துர்க்கா, அவர் ஒன்றும் கூறாதிருக்கவே, அம்மாவின் பேச்சுத்தான் எடுபடப் போகிறது என்பதைப் புரிந்துகொண்டு முகம் சாம்பினாள்.
அப்பா !
என்னம்மா?
என்னைப் பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்கோப்பா !
அதெல்லாம் நடக்காத காரியம்மா, கொழந்தே, ஏதோ கடுதாசி வந்தா படிக்கிற அளவுக்கும், ஆத்துல கணக்கு வழக்கைப் பார்க்கிற அளவுக்கும்தாம்மா நோக்கு நான் சொல்லிக் குடுக்க முடியும். உங்கம்மா நீ படிக்கிறதைத் தடுக்கிறதா நினைக்காதேம்மா. அவ சொல்றது நூத்துக்கு நூறு சரிம்மா, கொழந்தே!
அப்போது வாசற்பக்கம் நிழல் தெரிய, பத்மநாபன் தலை உயர்த்திப் பார்த்தார். ரங்கநாத சாஸ்திரி வந்து கொண்டிருந்தார்.
வாங்கோ, வாங்கோ! உக்காருங்கோ!...
என்ன! பொண்ணுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கிறீராக்கும்! ஜமாயும்!
என்றவாறு துண்டால் தரையைத் தட்டிவிட்டு ரங்கநாத சாஸ்திரி உட்கார்ந்துகொண்டார்.
ஆமா. என்னதான் பொண் கொழந்தைதானேன்னாலும், ஆத்தை நிர்வாகம் பண்ற அளவுக்கானும் எழுத்து வாசனை இருக்கனுமோன்னோ?
ஆமாமா. நல்லதுதான்.
ஏதானும் விசேஷம் உண்டாங்காணும்? சும்மா வரமாட்டீரே?
சரியாச் சொன்னேள்! காரியமாத்தான் வந்திருக்கேன். அம்மா கொழந்தே! ஒரு கூஜாவிலே தீர்த்தமும் தம்ளரும் எடுத்துண்டு வா, பாப்போம்!
துர்க்காவை அவர் விரட்டினார் என்பது புரிந்ததும், என்ன விஷயத்துக்காக எனபது புரியாமல் பத்மநாபன் அவரை ஏறிட்டார்.
2
அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா? என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி,
ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா" என்று கூஜாவில் குளிர்ந்த நீரும் தம்ளரும் கொடுத்தனுப்பிய பிறகு, கதவிடுக்கு வழியே எட்டிப் பார்த்தாள் புன்னகையுடன்.
கூஜாவை எடுத்துப் போய்த் துர்க்கா வைத்ததுமே, நீ போய் உங்கம்மாக்கு அடுக்களையிலே ஏதாவது ஒத்தாசை பண்ணு, போ!
என்று பத்மநாபன் சொன்னது கேட்டதும் காவேரியின் முகத்துப் புன்னகை அகல மாயிற்று.
அடுக்களைக்கு வந்த துர்க்காவிடம், நீ இனிமே அம்மாக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணனும்டி, துர்க்கா. நாளைக்கு உன்னோட புக்காத்து மனுஷா, பொண்ணை வளத்திருக்கா பாரு, தடித்தாண்டவராயி மாதிரி அப்படின்னு என்னைப் பத்திப் பேசப்படாது. வா, வா. மூணு வாழைக்காயை எடுத்துத் தோல் சீவு, பாப்போம்!
என்ற அம்மாவைப் பார்த்துத் துர்க்காவுக்குச் சிரிப்பு வந்தது. 'ஏதோ எனக்குக் கல்யாணம் நிச்சியமே ஆயிட்டமாதிரி பேசறாளே இந்த அம்மா!
அருவாமணையை முதல்ல அலம்பிக்கோ.
சரிம்மா. அய்யோ!
என்னடி? விரல்ல கிரல்ல வெட்டிண்டுட்டியா?
ஆமாம்மா.
"மாமியாராத்துல போய் இப்படி விரலை வெட்டிண்டா என்ன சொல்லுவா, தெரியுமோல்லியோ? வேலையிலேர்ந்து தப்பிக்கிறதுக்காக விரலை வேணும்னே வெட்டிண்டுட்டேம்பாடி'
துர்க்காவை உட்காரப் பணித்துக் காயத்துக்கு மருந்து போட்டபின், காவேரி தானே காயைத் தோல் சீவலானாள். காய்களின் மீது ஒட்ட வைத்திருந்த ரிப்பனை இழுப்பது மாதிரி அம்மா பரபரவென்று தோலை நீள நீளமாய் நீக்கியது துர்க்காவை அயர்த்தியது.
சாம்பாருக்குப் போட்ற காயை நீள நீளமாத்தானே நறுக்கனும்?
பரவால்லே. சமத்துதான்!
அதான் சாம்பார் அடிக்கடி பண்றியே! இதுகூடத் தெரியாதாக்கும்!
அப்போது, காவேரி! மோர் ஒரு தம்ளர் எடுத்துண்டு வா
என்று பத்மநாபனின் குரல் இரைந்து ஒலிக்க, காவேரி சற்றுப் பொறுத்து மோரை எடுத்துக்கொண்டு போய், சாஸ்திரிகளுக்கு முன்னால் முக்காலியில் வைத்துவிட்டு, 'துர்க்காவுக்கு ஒரு நல்ல வரனாப் பாத்துச் சொல்லுங்களேன்!" என்றாள்.
மோரை எடுத்து வாய் வாயாகப் பருகி முடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்ட அவர், நான் வந்ததே அதுக்குத்தானேம்மா? வத்தலப்பாளையத்துல ஒரு நல்ல வரன் இருக்கு. பையன் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துல ஒம்பதாவது படிச்சிண்டிருக்கான். பதினஞ்சு வயசு ஆறது. பணக்காரக் குடும்பம். எக்கச்சக்கமான சொத்து, சுகம். பையன் வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாத குடும்பம். ஆனா, அவனென்னவோ மெட்ராசுக்குப் போய் பிசினஸ் பண்ணனும்கிற ஐடியாவில இருக்கானாம்.
பக்கத்து ஊராயிருக்கு. நல்ல சம்பந்தம்கறேள். அப்பப்ப கொழந்தையைப் போய்ப் பாத்துக்கலாம். ரொம்பச் செய்யணும்னு எதிர்பார்ப்பாளோ?
பின்னே? அந்தப் பையனுக்கு நீ, நான்னு ஏகப்போட்டி. ஆனா, என்னோட ப்ரிஃபரன்ஸ் நம்மாத்துக் குட்டிக்குத்தான் - அதாவது முக்கியத்துவம். நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். பத்மநாபன் அளவுக்கு இல்லே. ஏதோ ஒம்பதாவது வரையில படிச்சிருக்கேன். அதான் அப்பப்ப இங்கிலீஷ் வார்த்தை வந்துட்றது!
என்று கூறிவிட்டு, காவேரியைப் பார்த்து பெருமையாய்ச் சிரித்தார்.
பத்மநாபன் சிரித்துக்கொண்டார். ரங்கநாத சாஸ் திரிகள் தமக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ளுவதற்காக அவ்வப்போது அம்மொழிச் சொற்களை உதிர்ப்பார். சில நேரங்களில் முழு வாக்கியங்களையே அபத்தமான இலக்கணத்துடன் பேசிவிடுவார். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த வெள்ளைக்காரனின் மொழியில் பேசுவது கவுரவம் என்கிற எண்ணமுடையவர்.
ஜாதகம் பொருந்தணுமே?
ஜாதகம் பொருந்தாம நான் இங்க வந்திருப்பேனா?
மேட் டு ஈச் அதர்'னு இங்கிலீஷ்ல சொல்லுவா ளோல்லியோ? அந்த அளவுக்குப் பொருந்தியிருக்கு."
ஓ! மேட் ஃபார் ஈச் அதர் (Made for each other)ங்கிற அளவுக்குப் பொருந்தியிருக்குன்னா உடனே போய்ப் பாத்துட்டு வர வேண்டியதுதான்!
என்ற பத்மநாபன் 'ஃபார்' (for) என்பதற்குப் பதிலாய் 'டு' (to) எனச் சாஸ்திரிகள் செய்த தப்பான சொல்லை நாசூக்காய்த் திருத்தியபின், நீங்களே ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்லுங்களேன்
என்றார்.
நாளைக்கே போலாம் நீங்க காலம்பர ஒம்பது மணிக்கெல்லாம் போயிடுங்கோ. குட்டியோட ஜாதகத்தையும் எடுத்துண்டு போங்கோ. பொருந்தியிருக்குன்னு நான் சொன்னதாச் சொல்லுங்கோ, எம்மேல அவாளுக்கு ரொம்பவே ரெஸ்பெக்ட்! வத்தலப்பாளையம் அக்கிர காரம் தெரியுமோல்லியோ?
பேஷாத் தெரியும்
என்ற பத்மநாபன் இடுப்பிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
அப்ப நான் வரட்டுமா, பத்மநாபா? அம்மா, கொழந்தே! வறேன். இனிமே உன்னை நான் கொழந்தேன்னு கூப்பிடக்கூடாது. உன்னோட கொழந்தைக்குக் கல்யாணம் பண்ணப் போறே சீக்கிரமே !
காவேரிக்குச் சிரிப்பு வந்தது. ரங்கநாத சாஸ்திரிகள் தமது இடக்கையைத் தரையில் ஊன்றி, அப்பனே, ஷண்முகா, நமச்சிவாயம், அம்மா, காமாட்சி!
என்று முனகியபடி மெதுவாக எழுந்துகொண்டார்.
அவர் போனபிறகு பத்மநாபன் உள்ளே வந்தார்
"நாளைக்கே வத்தலப்பாளையம் போகனும், காவேரி பெரிய இடம்கிறார் சாஸ்திரிகள். என்ன கேப்பாளோ என்னமோ?
நல்ல இடம்கறப்ப, எப்படியாவது செஞ்சுட வேண் டியதுதான். என்னோட நகைகள் அம்பது பவுன் தேறும். கடனோ உடனோ வாங்கி நடத்த வேண்டியதுதான்.
ஜமாய்ச்சுடலாண்டி, காவேரி !
கையிலே எவ்வளவு ரொக்கம் வெச்சிண்டிருக்கேள்னா?
அதை யெல்லாம் பத்தி நோக்கென்னடி கவலை, காவேரி? எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ போய் உம் பொண்ணைக் கவனி. சமையல் பண்ணக் கத்துக்குடு. வாய்க்கு வழங்கச் சமைக்கிற பொண்டாட்டியைத்தான் புருஷாளுக்குப் பிடிக்கும்.
அதான் உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதா?
அப்படின்னு நான் சொன்னேனா?
அய்யோ! அப்படின்னா, நான் நன்னாச் சமைக் கல்லேன்றேளா?
பரவால்லே. புத்திசாலிதான். புரிஞ்சுக்கறியே!
அம்மா! அம்மா! கறி தீயறது. சீக்கிரம் வா. என்னால கிளற முடியல்லே. கை சுட்றது.
இதுதான் நன்னாச் சமைக்கிற லட்சணமாக்கும்!
என்று சிரித்த பத்மநாபனுக்குப் பதில் சொல்லாமல் காவேரி அடுக்களைக்கு விரைந்தாள்.
அப்போது வாசற்பக்கம் நிழலாடியது.
யாரு?
என்றார் பத்மநாபன்.
நாந்தேன். வள்ளி, சாமி.
பத்மநாபன் சட்டென்று எழுந்துகொண்டார். இதற்குள் சமையலறையிலிருந்து காவேரியும் எட்டிப் பார்த்தாள். வந்திருந்தது ஒரு பெண்பிள்ளை என்பது தெரிந்ததே ஒழிய இன்னாரென்று தெளிவாய்த் தெரிய வில்லை. எனவே அவள் வெளியே வந்தாள்.
மிக விரைந்த நடையில் இரேழியை யடைந்த பத்மநாபன், என்னம்மா இது? போன மாசந்தானே வந்து பணம் வாங்கிண்டு போனே? அடிக்கடி வந்தா எப்படிம்மா? இது நோக்கே நியாயமா யிருக்கா?
என்று அடிக்குரலில் அந்தப் பெண்பிள்ளையை அதட்டாத குறையாகப் பற்களைக் கடித்தவாறு வினவியவாறே பின்னால் திரும்பிப் பார்த்தார்.
இதற்குள் காவேரி அங்கு வந்துவிட்டாள்.
3
வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து 'இளித்த' அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. வள்ளியைக் காவேரி ஒர் எரிச்சலுடன் நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப் போய்விட்டிருந்தது.
என்ன, வள்ளி? எதுக்கு வந்தே?
என்ற காவேரியின் கேள்விக்கு, வேற எதுக்கும்மா நான் வருவேன்? அஞ்சு ரூவா குடுத்தீங்கன்னா சவுகரியமா யிருக்கும், எம் மவளுக்கு மேலுக்குச் சொகமில்லே. அதுக்குத்தான் வத்தலப்பாளையத்துலேருந்து இம்மாந் தொலவு வந்தேன்.
பத்மநாபனும் காவேரியும் உள்ளே சென்று குசுகுசு வென்று சற்றுநேரம் பேசினார்கள். பிறகு, பத்மநாபன் தமது இடுப்பிலிருந்து ஒர் ஐந்து ரூபாய்த் தாளை எடுத்ததைக் கவனித்த துர்க்கா வியப்படைந்தாள். யார் இந்த வள்ளி? எதுக்காக அடிக்கடி வந்து அப்பாட்டேருந்து பணம் வாங்கிண்டு போறா?
அம்மா! தாயீ! எங்க வீட்டுக்கு ஒரு நாளு வர்றியா?
என்று வள்ளி துர்க்காவைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்டாள்.
வள்ளி துர்க்காவிடம் ஏதோ பேசுவதைக் கவனித்த காவேரி, ஏய் ! துர்க்கா! வாடி இங்கே...
என்று மிரட்டாத குறையாக அழைத்தாள்.
உங்காத்துக்கெல்லாம் வந்தா எங்காத்துல திட்டுவா!
என்று சுருக்கமாய்ப் பதில் சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடினாள். கூடத்துக்கு வந்த அவள் ஊஞ்சலில் உட்கார்ந்தபோது காவேரியும் பத்மநாபனும் இரேழியை நோக்கி நடந்தனர்.
காவேரி நீட்டிய பணத்தைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்ட வள்ளி, நீங்க நல்லாருக்கணும், தாயீ! யாரோ செஞ்ச தப்புக்கு நீங்க இப்பிடிப் பலியாடு ஆனிங்க! எனக்குப் புரியுதும்மா. ஆனா எனக்கு உங்கள விட்டா வேற யாரும்மா இருக்காங்க? உடம்பும் மோசமாயிருச்சு. அப்புறமேப்பட்டு, இன்னொரு வெசயஞ்சாமி!
என்றவாறு பத்மநாபனை நோக்கியபின் சற்றே தயக்கம் காட்டினாள்.
சொல்லு.
போன வெசாளக் கெளமையன்னிக்கு எம்மவ வயசுக்கு வந்திரிச்சு. அதுக்கு ஒரு நல்ல துணிகூட இல்லே. கிளிஞ்ச சேலை ஏதாச்சும் குடுத்தீங்கன்னா, அது மானமாப் போத்திக்கும். நான் பெத்த மவ வயசுக்கு வந்துட்ட சந்தோசத்தைக் கொண்டாட முடியாத பாவியா இருக்குறேன்!
என்ற வள்ளி அழத் தொடங்கினாள்.
இத பாரு வள்ளி. இன்னைக்கு நல்ல நாளு. நல்ல நாளும் அதுவுமா ஆத்து வாசல்ல நின்னுண்டு அழாதே. இரு, வறேன்
என்ற காவேரி உள்ளே சென்றாள்.
பத்மநாபன் அவளைப் பின்தொடர்ந்தார். டிரங்குப் பெட்டியிலிருந்து ஒரு பழைய புடைவையை எடுத்துக் கொண்டு காவேரி வள்ளியிடம் போனாள்.
இந்தா. பதினெட்டு மொழப் பொடவை. ரெண்டாக் கிழிச்சு மேலாக்குப் போட்டுக்கலாம். கரையிலே ஒரே ஒரு இடத்துல சின்னக் கிழிசல் இருக்கு. தெச்சுண்டுடு. அடிக்கடி வந்து எங்க உசிரை வாங்கா தேடி, வள்ளி!
ரொம்ப சந்தோசந் தாயீ. எம்மவளுக்கு எப்பிடிக் கலியாணத்தை முடிப்பேனோ தெரியல்ல.
நோக்கென்னடி, வள்ளி? எவனாவது பரிசம் போட்டுட்டு உம் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான். எங்களாட்டமாவா, ஆயிரக் கணக்குல வரதட்சிணை கேட்டுப் பிடுங்குறதுக்கு? உம் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சியமானதும் வந்து சொல்லு. அய்யா பணம் தருவாரு.
சரிங்கம்மா. சாமிகிட்ட சொல்லிருங்க. பாப்பா! நான் போயாரேம்மா.
வள்ளி உள்ளே தலை திருப்பிக் குரல் கொடுத்தாள்.
சரி. போயிட்டு வாங்கோ.
உள்ளே ஊஞ்சலில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்த பத்மநாபன் தாம் முதுகு சொறிந்து கொண்டிருந்த விசிறிக் காம்பால் துர்க்காவின் தலையில் இலேசாக ஒரு போடு போட்டுவிட்டு, மிகச் சன்னமான குரலில், அவாளுக்கெல்லாம் என்னடி மரியாதை அசட்டுக் கழுதை! வாங்கோவாம், வாங்கோ!
என்று அழகு காட்டினார்.
நீங்கதானேப்பா நேத்திக்குச் சொன்னேள், பெரிய வாளை யெல்லாம் வா, போன்னு பேசப்படாதுன்னு?
சொன்னேந்தான். ஆனா, அதுக்குன்னு தராதரம் இல்லியா? குப்பை அள்ற சுப்பம்மா, வாசல் தெளிக்கிற வள்ளியம்மா இவாளையெல்லாமா வாங்கோ, போங் கோன்னு சொல்றது? மண்டுகமே!
துர்க்காவுக்கு ஏதோ புரிந்தது மாதிரியும் இருந்தது, எதுவுமே புரியாதது போலவும் இருந்தது. எனினும் மேற்கொண்டு அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நாளாகவே அவளுக்கு வள்ளியைப் பற்றி அறியும் அவா இருந்து வந்தது.
அப்பா !
என்ன?
… அந்த என்ன வின் தோரணையே அவளது வாயை அடைத்துவிட்டது.
என்னன்னு கேட்டேனோன்னோ?
ஒண்ணுமில்லேப்பா.
துர்க்கா கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டது வள்ளியைப் பற்றியது என்பதை அவரால் ஊகிக்க முடிந்ததால், அதை விரும்பாத நிலையில், அவர் மேற்கொண்டு அவளை எதுவும் கேட்கவில்லை.
வள்ளியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த காவேரி, என்னன்னா! இவளோட படுத்தல் வரவர ஜாஸ்தி யாயிண்டே இருக்கே? இதுக்கு ஏதானும் ஒரு வழி பண்ணுங்கோ. இவளோட வாயை எத்தனை நாளுக்கு நாம அடைச்சு வைக்க முடியும்? ஏற்கெனவே என்னத் தையானும் சொல்லிண்டு அலையறாளோ என்னமோ?
என்றாள்.
அதை யாருடி கண்டது; அவ வாய்க்கு நாம பூட்டுப் போட முடியுமா என்ன?
அது சரி. பொண்ணு பெரியவளாயிட்டது இவளுக்கு சந்தோஷ சமாச்சாரமாமே? கஷ்டம், கஷ்டம்! பொம்மனாட்டிகளுக்குள்ள சாபக்கேடு இல்லியோ அது? பொண்ணு பெரியவளாயிட்டா தாயார்க்காரி வயித்துல நெருப்பைன்னா கட்டிக்கணும்? இவளுக்கு சந்தோஷமாமே, சந்தோஷம்! அழகுதான்!
காலம் காலமா அப்படித்தானே சொல்லிண்டிருக்கோம்? அவ மட்டும் வேற மாதிரியாவா சொல்லுவா? கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டு வந்தான்னா கையில கொஞ்சம் பணம் குடுப்போம்.
நானும் சொன்னேன். என்ன இருந்தாலும் பாவம் தான். இப்பிடி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிருக்க வேண்டாம். அவளைச் சொல்லியும் குத்தமில்லே. நம் மாத்து மனுஷாளுக்கும் புத்தி இல்லே!
இவ்வாறு சொன்ன படியே காவேரி விருட்டென்று அங்கிருந்து அகன்றாள்.
இதையெல்லாம் கவனியாதவள் போல் கவனித்துக் கொண்டிருந்த துர்க்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் ஒரத்து விழிகளால் பத்மநாபனை ஏறிட்டாள். அவர் முகம் சிறுத்துவிட்டிருந்தது. துர்க்காவின் மனத்தில் வியப்பு ஏற்பட்டது. அம்மா அப்பாவைக் கடிந்து அவள் கேட்டதே இல்லை. அப்படி அவள் கடிந்தாலும், அவர் அதற்குப் பதிலடி தராமல் சும்மா இருந்தும் அவள் பார்த்ததில்லை!
வள்ளி வருகிற போதுகளில் மட்டுந்தான் அம்மாவின் கை ஓங்கி இருப்பதாகவும் அப்பா கொஞ்சம் குரல் தாழப் பேசுவதாகவும்கூட அவள் நினைத்தாள். வள்ளிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவும் கூட அவளுக்குத் தோன்றியது. பதினொரு வயதுதான் என்றாலும், வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்த துர்க்கா, அதை எப்படிக் கண்டுபிடிக்கிறது? என்றும்கூட அவ்வப்போது யோசித்ததுண்டு. 'அம்மா வையே கேட்டுப் பார்த்துவிட்டால்தான் என்ன? என்று இன்று நினைத்தாள். வள்ளி வரும்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் குசுகுசுவென்று பேசுவது நினைவுக்கு வந்ததும், தன் கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்காது என்று அவளுக்கு உள்ளுணர்வாய்ப் பட்டாலும், இன்று தலை வெடிக்கும் போல் ஆனதால் அப்படி ஒரு முடிவுக்கு அவள் வந்தாள்.
அடக்கமாட்டாத ஆவலுடன் ஊஞ்சலிலிருந்து இறங்கிய அவள் சமையற்கட்டை யடைந்து, அம்மா! சாம்பாருக்கு அரைச்சுத் தரட்டுமா, அம்மா?
என்றாள் கரிசனமாக,
வா, வா. பாவாடையை நன்னாத் துரக்கிச் சொரு கிண்டு பாங்கப் பணிய அம்மிக்கு முன்னால உக்காரு.
துர்க்கா அப்படியே செய்தாள். பிறகு குழவியை உருட்டி உருட்டி அம்மி மீதிருந்தவற்றை அரைக்கலானாள்.
வெறுமண உருட்டினா மசியாதுடி, மக்கு! நன்னா அழுத்தி அழுத்தி உருட்டணும். கைக்கு வலிக்குமோ, குழவிக்கு வலிக்குமோங்கிறாப்ல பந்து உருட்றாப்ல உருட்டாதே. என்ன? புரிஞ்சுதா?
சரிம்மா.
"ஆங்! அப்பிடித்தான். இன்னும் ரெண்டே மாசத்துல நீ பத்துப் பேருக்குச்