Karaintha Nilavu
By Cyndhujhaa
()
About this ebook
தன்னம்பிக்கையும் பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் தத்தம் வாழ்க்கையில் சொந்தக் குடும்பத்திலும், உறவு ஜனத்திடமும், அலுவலகம் போன்ற வெளி உலகிலும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிப்பது - தீர்வு காண்பது அல்ல - என்பதே பெருந்துயரமாக ஆகிவிடும் இன்றைய காலகட்டத்தின் தாட்சண்யமற்ற போக்கை 'கரைந்த நிலவு', 'காற்று மரம் ஆகாயம்' என்னும் இரு கதைகளும் விளக்க முயலுகின்றன. 'இரு ஆட்டுக்குட்டிகள்', 'தன்மானம்', 'இருபத்திரண்டு பஜ்ஜிகள்', 'அம்மு' ஆகியவை சிறாரின் பேதைமை நிறைந்த உலகையும் பெரியவர்களின் நடமாட்டத்தையும் பரிசீலிக்கின்றன. குழந்தைகள் மீதும் பெண்களின் மீதும் பெரும் பரிவுணர்ச்சியும் புரிந்து கொள்ளலும் தேவைப்படுகின்றன என்பதே இத்தொகுப்பின் அடிநாதமாக விளங்குகிறது.
Read more from Cyndhujhaa
Indira Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsEppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Rating: 0 out of 5 stars0 ratingsSagaram Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Yutham Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karaintha Nilavu
Related ebooks
Engey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Iraval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsVazhithunai Rating: 0 out of 5 stars0 ratingsNizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 0 out of 5 stars0 ratingsGopura Kalasangal Rating: 5 out of 5 stars5/5Sudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKai Maariya Poothu Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Vedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Sathuranga Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Oru Kaviriyai Pola... Rating: 0 out of 5 stars0 ratingsMogam Enbathu Ithuthano? Rating: 0 out of 5 stars0 ratingsVazha Ninaithaal Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Vasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karaintha Nilavu
0 ratings0 reviews
Book preview
Karaintha Nilavu - Cyndhujhaa
https://www.pustaka.co.in
கரைந்த நிலவு
Karaintha Nilavu
Author:
ஸிந்துஜா
Cyndhujhaa
For more books
https://www.pustaka.co.in/home/author/cyndhujhaa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கரைந்த நிலவு
காற்று, மரம், ஆகாயம்
அச்சம்
சிதிலம்
இரு ஆட்டுக் குட்டிகள்
தன்மானம்
சிநேகிதக் கத்தி
சிறிய மனிதரின் உலகம்
முழைஞ்சில்
டாக்டரும் எகனாமிஸ்ட்டும்
இருபத்திரண்டு பஜ்ஜி
அம்மு
கரைந்த நிலவு
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசேல் என்ற வயல்வெளி. காற்று தடவிக் கொடுக்க சந்தோஷத்தில் நெற்பயிர்கள் நடனமாடின. சற்று மேலே நடக்க, ஒரு சிற்றாறு வயலுக்கு ஊடே பொங்கிக் கொண்டு ஓடியது. அதற்கு அடுத்தாற்போல மனதைக் கொள்ளைகொள்ளும் - அவளுக்கு மிகவும் பிடித்தமான - ரோஜாப் பூக்கள் குதூகலமாய் சிரித்தன. எதற்காக இன்று இயற்கை அவளுக்குப் பிடித்த விதத்தில் தனது காட்சிகளை அள்ளி வீச முனைந்து விட்டது? இதோ இன்னும் சற்று நேரத்தில் லேசான கருநீல நிற வானில் அவளுக்குச் சிறுவயதில் பாடலாக ஊட்டப்பட்ட நில்லாமல் ஓடி வரும் வட்ட தோசை காட்சியளிக்கும் ரம்மியத்தை அவள் பார்க்க முடியும்...
சத்தம் கேட்டுப் பகவதி கனவிலிருந்து விழித்துக் கொண்டாள். அடுக்களையில் குழாய்க்குக் கீழே வைத்திருக்கும் குடத்தில் தண்ணீர் விழும் ஓசைதான் அது. அப்படியென்றால் மூன்று மணியாகி விட்டது என்று அர்த்தம். எழுந்து ஹாலில் எட்டிப்பார்த்தபோது கடிகாரம் அந்த மணியைத்தான் காண்பித்தது. ஹாலில் படுத்திருந்த அவள் கணவன் நமச்சிவாயம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அந்த வீட்டில் இருந்த ஒரு அறையில் அவளது பிள்ளை சண்முகமும் அவனுடைய மனைவி லட்சுமியும் படுத்திருந்தார்கள். இருவரும் ஒரே ஆபீசில் வேலை பார்த்துக் காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள். சன்னமான குறட்டை ஒலி அவர்களிடமிருந்து வந்தது. இன்னொரு சிறிய அறையில் அவளது பெண் ராகினி தூங்கிக்கொண்டு இருந்தாள். எல்லோரும் ஒரு கவலையுமில்லாமல் தூங்குகிறார்கள் என்று பகவதி நினைத்தாள். ஆனால் அவர்கள் அனைவரும் வெளியே வேலைக்குப் போகிறவர்கள் ஆச்சே! வீட்டோடு இருப்பவள் என்று ஒரு நாளைப் பார்த்தாற்போல அவள்தான் நடுநிசிப் பேயென இரவு எழுந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். குடிப்பதற்குக் காவிரி நீரை இரவுதான் காப்பரேஷன் காரன் திறந்து விடுகிறான். அவள் இருக்கும் வீடு அந்தக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியிலிருக்கிறது. ஒரு கூடமும் ஒரு அறையுமாகக் கட்டியிருந்தால் பாந்தமாகவும், புழங்குவதற்கு வசதியாகவும் இருந்திருக்கும். ஆனால் இரண்டு படுக்கையறை வீடு என்று சொன்னால் வாடகையை ஜாஸ்தி கேட்டு வாங்கலாம் என்கிற வீட்டுக்காரனின் கெட்டிக்காரத்தனத்தோடு யார் மாரடிக்க முடியும்?
தினமும் மூன்று மணிக்கு மேலேதான் மெதுவாக மலையேறி வருவது போல அடுப்பங்கரை உள் குழாயில் சன்னமாக நீர் வரும். சில நாள்கள் வேகமாக வந்தால் அவள் பித்தளைக் குடம், எவர்சில்வர் வாளி, மண் பானை என்று எல்லாவற்றையும் ஒரு மணி நேரத்தில் நிரப்பி வைத்து விடுவாள். ஆனால் அம்மாதிரி அதிர்ஷ்டம் மாதத்தில் நாலைந்து தடவைதான் அவளுக்குக் கிட்டும். மற்ற நாள்களில் மிக சன்னமாகவே வரும். அப்போது நீர் பிடிக்க ஒரு மணி, ஒன்றரை மணி ஏன், ரெண்டு மணி நேரம் கூட ஆகிவிடும். ‘இது என்னடி வயசானவன் ஒண்ணுக்குப் போற மாதிரி சொட்டுச் சொட்டா விழுந்துகிட்டு!’ என்று அவ்வப்போது சென்னையிலிருந்து பிள்ளை வீட்டில் வந்து தங்கி விட்டுப் போகும் அவள் மாமியார் சொல்லுவாள். ஆனால் பாவம் கிழவி, மருமகள் தனியாகத் தடுமாறுகிறாளே என்று அவளும் இங்கிருக்கையில்கூட எழுந்து நீர் பிடித்து வைப்பாள்.
அன்று பகவதி நீரைப் பிடித்து முடிக்கும் போது ஹால் கடிகாரம் ஐந்து தடவை அடித்தது. இன்று அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டு விட்டது. இப்போது தூங்கப் போக முடியாது என்று படுக்கையைச் சுற்றி வைத்தாள். கொஞ்ச நேரம் புரளலாம். ஆனால் அலுப்பு மயக்கத்தில் அவள் எழுந்திருக்க நேரமாகிவிட்டால் ஒரே ரகளையாகி விடும். தினமும் ஐந்தரை மணிக்கு எழுந்திருந்து வேலைகளை ஆரம்பித்து விடுவாள். இதில் சுணக்கம் ஏற்பட்டால் அவ்வளவுதான். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வேலையும் தடைப்பட்டு ஒரே கூச்சலும் களேபரமும்தான். ஒவ்வொருவரிடமிருந்தும் சத்தமும் முணுமுணுப்புமாகக் கசகசப்பு எழுந்து விடும்.
பகவதி ஒலி எழுப்பாமல் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். தெருவைப் பார்த்து இருந்த பால்கனியில் முந்தின மாலை அவள் கணவன் பிரித்துப் போட்டிருந்த சாய்வு நாற்காலி இருந்தது. பகவதி அதில் போய் உட்கார்ந்து கொண்டாள். லேசான குளிரும் பனியுமாகக் காற்று வந்து அவள் உடலைத் தழுவிற்று. இன்னும் இருள் விலகி வெளிச்சம் வர ஆரம்பிக்கவில்லை. தெரு விளக்கின் மஞ்சள் ஒளி தெருவைப் பெருக்கிக் கொண்டிருந்தது. எதிர் வீடுகள், பக்கத்து வீடுகளிலிருந்து கிளம்பி வந்த மௌனம் அவளுக்குள் ஏக்கத்தை எழுப்பிற்று. திருமணத்துக்கு முன்பு அவள் விடிகாலைப் பொழுதை மிகவும் அரிதாகத்தான் பார்த்திருந்தாள்.
‘மணி எட்டாகப் போகுது, இன்னும் என்ன பொம்பளைப் புள்ளைக்கு தூக்கம் வேண்டிக் கிடக்கு?’ என்றுதான் அவள் அம்மாவின் சுப்பிரபாதம் அவளைத் தினமும் எழுப்பும். ‘கொஞ்ச நேரந்தான் பாவம் அது தூங்கட்டுமே’ என்று அப்பா வக்காலத்து வாங்கிக் கொண்டு வரும்போது, அம்மாவின் எரிச்சல் ‘ஒரே பொண்ணுன்னு எடங்குடுத்து அவளைக் கெடுத்து வச்சிருக்கீங்க’ என்று அவர் மீது பாய்ந்து விடும்.
இருபத்தி ஆறு வருசப் பழையதை எடுத்து வைத்துக்கொண்டு இப்போது ஏன் மன்றாடுகிறாய் என்று மனது அலுத்துக் கொண்டது. இன்னும் ஒரு மாதத்தில் பகவதியே பாட்டியாகி விடுவாள். லட்சுமிக்கு அடுத்த மாத நடுவில் டாக்டரம்மா டயம் கொடுத்திருக்கிறாள். இப்போது வீட்டில் உள்ள உருப்படிகள் ஐந்திலிருந்து ஆறாகிவிடும். குழந்தை பிறந்த பின் வீட்டோடு ஆள் வைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று லட்சுமி ஒரு நாள் சொன்னாள். வீட்டோடு ஆள் வைத்து செலவழிப்பது கொஞ்சம் எக்கச்சக்கம்தான். வருகிறவளுக்குப் படுக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். மூன்று வேளை சாப்பாடு போட வேண்டும். அப்புறம் சம்பளம் என்று தனியே தர வேண்டும். பார்க்கலாம். அந்த நேரத்து சூழ்நிலையும், மனப்பாங்கும் எப்படியிருக்குமோ? ஆனால் கடைசியில் பகவதிதான் வரப்போகும் பேரனையோ பேத்தியையோ சீராட்டிப் பாராட்ட வேண்டியிருக்கும்.
வானில் ஒரு விமானம் செல்லும் ஒலி கேட்டது பகவதி நிமிர்ந்து பார்த்தாள். சிவப்பும், மஞ்சளும் பச்சையுமாக மினுங்கிக் கொண்டு சென்ற பறவை. இந்த வீட்டிலிருந்து கண்ணுக்குத் தெரியும் விமானம் அங்கிருந்து பார்க்கும் போது இந்த வீட்டை அடையாளம் காண்பிக்காதது ஏன் என்று ஆச்சரியத்துடன் நினைத்தாள். வான் இள நரை பூசிக் கொண்டு வந்தது. கீழே ஸ்கூட்டிகளில் பால்காரப் பையன்கள் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு போகிற சப்தம் ஐந்தரையாகிவிட்டது என்று தெரிவித்தது. பகவதி எழுந்து உள்ளே சென்று பல் தேய்த்து முகங் கழுவி நெற்றியில் குங்குமம் தீற்றிக்கொண்டு பூஜை அறைக்குள் வந்தாள். விளக்கேற்றி விட்டுப் பால் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து படிகளில் இறங்கினாள். ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு என்று பழைய காலத்துக் கட்டிடம். லிப்ட் வசதி வைக்கவில்லை. அதிகாலையில் சுறுசுறுப்பாக இருக்கும் போது ஏறி இறங்குவது கஷ்டமாயிருப்பதில்லை. ஆனால் மத்தியானமோ, சாயங்காலமோ கடைத் தெருவுக்குப் போய் பலசரக்கு சாமான்கள், கறிகாய் எல்லாம் வாங்கிக் கொண்டு வரும்போது கனக்கும் பைகளுடன் மாடி ஏறுவதற்குள்தான் தாவு தீர்ந்து விடுகிறது.
மெயின் ரோடில் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் பால் கடை இருந்தது.
அவள் அங்கே சென்றபோது சிறிய கூட்டம் நின்றது. வழக்கம் போல ஒரு இளம் மூஞ்சி கூட அந்தக் கூட்டத்தில் காணப்படவில்லை. சாயந்திரம் இந்த இடத்தில் வந்து பார்க்க வேண்டும். பக்கத்தில் உள்ள தியேட்டரின் முன்பு கூச்சலும் நெருக்கமுமாகப் பயல்களும் பெண்களும் முண்டியடித்துக் கொண்டு நிற்கும் காட்சி! பகவதி, பால் கடைக்கு மேல் இருந்த கட்டிடத்தில் சிறிய ஓட்டல் நடத்திக் கொண்டிருந்த அஜந்தா மெஸ் அய்யர் சிறிய கூட்டத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளைப் பார்த்ததும் அவர் புன்னகை செய்தார். ஓட்டலிலிருந்து காலை உணவுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் ஒலி கேட்டது. அவரும் தினமும் நாலரை நாலே முக்காலுக்கு வந்து விடுவதாக அவளிடம் ஒரு தடவை சொல்லியிருக்கிறார். ‘அவர் வீட்டுப் பகவதி அவர்’ என்று அவள் அப்போது நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர் மகன்கள், பெண்கள் என்று வீட்டில் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஆனால் ஓட்டலைக் கட்டி மேய்க்க வேண்டியது என்னவோ அவர்தான் என்று எல்லோரும் தீர்மானித்து விட்டார்கள்.
பகவதி பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத்திரும்பினாள். அவள் உள்ளே நுழைந்தபோது நமச்சிவாயம் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டிருந்தான்.
எதுக்கு இன்னிக்கு இவ்வளவு வெரசா எழுந்தாச்சு? காலைக் கையை அசச்சிகிட்டு படுக்கைல கா மணி அர மணி கூத்தடிக்கலியா?
என்று சிரித்தாள் பகவதி.
இல்ல. இன்னிக்கி சீக்கிரம் ஆபீசுக்குப் போகணும்
என்றான் அவன்.
எத்தனை மணிக்கு?
ஏழு மணிக்கு.
அவ்வளவு சீக்கிரமாவா? நேத்தி ராத்திரியே சொல்லியிருந்தா நான் அப்பவே அடுப்பை மூட்டியிருப்பேன்ல?
என்றாள் பகவதி. பேசிக்கொண்டே ஒரு அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்தாள். குளிச்சிட்டு வாங்க. காப்பியக் குடிச்சிட்டுக் கெளம்ப சரியாயிருக்கும்.
டிபனும் பண்ணிரு
என்றான் நமச்சிவாயம்.
இன்னிக்குதான் இட்டிலிக்கு மாவு ஆட்டலாம்னு இருக்கேன். நீங்க பாத்ரூம் போயி அங்க நியூஸ் பேப்பரை வச்சு மணிக்கணக்குல உக்காந்திட்டு அப்புறம் குளிச்சி கடவுள்கிட்ட கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் நின்னுட்டு வரதுக்குள்ளறையே ஏழு ஆயிரும். உங்க ஆபீசுலேயே டிபனையும் சாப்பிட்டுக்குங்க. இங்க நானு அரக்கப் பறக்க வேலை பாக்கணுமா? அதுவும் உப்புமாதான் கிண்டிக் குடுக்க முடியும்.
உப்புமா அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்து அதைச் சொன்னாள் பகவதி. ஆனால் அவன் பண்ணிரு. அங்க போனாலும் அவன் புளிச்ச இட்டிலியும் நேத்து செஞ்ச சாம்பாரும் தேங்காபோடாம ஒரு தேங்காச் சட்டினியும் கொண்டு வந்து குடுப்பான்
என்றான்.
பல் தேய்த்து விட்டு அவன் வந்ததும், காப்பியைக் கலந்து கொடுத்தாள். அவளும் ஒரு வாய் விட்டுக் கொண்டாள்.
நான் சந்துருவ அப்புறமா அனுப்புறேன். அவங்கிட்ட லஞ்சையும் பண்ணிக் குடுத்துரு
என்றான் நமச்சிவாயம். சந்துரு அவனது ஆபீசில் பியூன்.
அவன் நீங்க போன அரைமணில இங்க வந்து நிப்பான். ரெண்டு மணிக்கு நீங்க சாப்பிடறதுக்கு அவன் இங்க பத்து மணிக்கே வந்து நிக்கணுமா?
இல்ல, இல்ல. அவனை லேட்டா கிளம்பிப் போடான்னு சொல்லி அனுப்புறேன்
என்றான் நமச்சிவாயம்.
"இன்னிக்கி சீக்கிரம் ஆபீஸ் போணும்னு சொன்னப்ப, சரி டிபன், லஞ்சு எல்லாம் நீங்களே ஆபீசுல பாத்துகிட்டா, இந்த அடுப்பாங்கரையைக் கட்டிகிட்டு ஒரு நா அழ வேணாமேன்னு பாத்தேன். அவுங்க