Usha Subramanian Kurunovelgal
()
About this ebook
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள் இவை. கைபேசி, கணினி, தொலைக்காட்சி, இன்டர்நெட், கூகிள், அலெக்ஸா, ரோபோ போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் புழக்கத்திற்கு வராத காலம் அது.
திவ்யா ஒரு குழந்தையின் தாய். கணவனற்ற விதவை. தன்னைவிட வயதில் இளைய ஒருவனை மணப்பது அல்லது சேர்ந்து வாழ நினைப்பது இன்னும் நம் சமூக ஏற்பில் இல்லை. காலம் மாறும். கணிப்புகளும் மாறும். பல கருத்துகள் அடங்கிய குருநாவல் இதோ உங்கள் கையில்...
Read more from Usha Subramanian
Kaalamellam Kaathirupen Rating: 0 out of 5 stars0 ratingsMogam Enbathu Ithuthano? Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Oru Seethaidhan Rating: 4 out of 5 stars4/5Vazhkkai Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsAngey Sila Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Usha Subramanian Kadhaigal Part - 4 Rating: 5 out of 5 stars5/5
Related to Usha Subramanian Kurunovelgal
Related ebooks
Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsIruttukku Idamillai Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Analai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Yaathreegan Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Udan Rating: 0 out of 5 stars0 ratingsNan Ramaseshan Vanthirukkiren Rating: 5 out of 5 stars5/5Suttaman Rating: 5 out of 5 stars5/5Ithu Thaanda Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Oru Muraithan Varum Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Potta Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsSenganthal Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Kaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPoiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Usha Subramanian Kurunovelgal
0 ratings0 reviews
Book preview
Usha Subramanian Kurunovelgal - Usha Subramanian
https://www.pustaka.co.in
உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்
Usha Subramanian Kurunovelgal
Author:
உஷா சுப்பிரமணியன்
Usha Subramanian
For more books
https://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
என்னுரை
அந்தக் குழந்தை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
பின்னுரை
காக்கைச் சிறகினிலே
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
முடிவுரை
வானத்து வேலிகள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
திவ்யா
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
முன்னுரை
அநேகமாக என்னிடம் வந்து ‘சிறுகதை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும்!’ என்று கேட்டுக்கொண்ட எழுத்தாளப் பெண்மணிகள் எல்லாருமே ‘எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!’ என்று சொல்லிக்கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷா சுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல.
ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. ‘அவர் நன்றாக எழுதுவார்’ என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை ‘விகடனி’ல் அறிமுகம் செய்து வைத்தேன். முதல் சிறுகதையே மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்துகொண்டேன் அவர் முறைப்படி ‘ஜர்னலிஸம்’ படித்துப் பட்டம் பெற்றவர் என்று!
உஷாவின் எழுத்துகளில் ஒரு தனியான துணிச்சல் இருக்கும். கருத்துகளைத் தைரியமாக எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டார். புதுமைப் பெண்ணாக வாழவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு நிறைய உண்டு. அது அவருடைய பேச்சிலும் வெளிப்படும். எழுத்திலும் ‘பளிச்’சென்று இருக்கும்! ‘மனிதன் தீவல்ல’ என்ற அவருடைய குறுநாவலின் ‘தீம்’ அப்படிப்பட்டது. ஆனால் அதை வெகு நயமாக, அருமையாக எழுதி இருந்தார். அதை நான் பல தடவைகள் படித்திருக்கிறேன். படம் எடுக்க வேண்டும் என்று உரிமைகளைக்கூட வாங்கி வைத்திருக்கிறேன்.
‘இதயம் பேசுகிறது’ இதழில் அவர் தொடர்கதை எழுதி இருக்கிறார். ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற தலைப்பில் அவர் ஓர் உண்மைக் கதையை ரொம்ப உருக்கமாக எழுதி இருக்கிறார். அவருடைய எழுத்தில் ஒரு தனித்தன்மை உண்டு. கதையானாலும், கட்டுரையானாலும், போட்டியானாலும் அது தெரியும்.
வெகு விரைவில் தமிழ் எழுத்துலகில் முன்னேறித் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டவர் உஷா சுப்ரமணியன். அவரை அறிமுகப்படுத்தியதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
இது, ‘மணியன் மாத இதழ்’ நாவலுக்கும் பொருந்தும்.
(மணியன்)
என்னுரை
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள் இவை. கைபேசி, கணினி, தொலைக்காட்சி, இன்டர்நெட், கூகிள், அலெக்ஸா, ரோபோ போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் புழக்கத்திற்கு வராத காலம் அது.
நான் எழுதிய காலத்தில் நிறைய விமர்சனத்துக்கு உள்ளான இக்கதைகளை இப்போது படிக்கும் போது, எனக்கு அவை குடும்ப அமைப்பைக் கெடுப்பதாகத் தோன்றவில்லை. கணிப்புகளும் எதிர்மறையானதாகத் தோன்றவில்லை. வாசகர்களாகிய உங்கள் கருத்துதான் அவசியம்.
Child Abuse எனும் வார்த்தையே புழக்கத்திற்கு வராதபோது எழுதப்பட்ட கதை ‘அந்தக் குழந்தை’, தெய்வமாக மதிக்கப்படும் தாய் தந்தையரைக் கேவலப்படுத்தியதாக என் மீது குற்றம் சொல்லப்பட்டது. இன்று POSCO சட்டம் என் பார்வை தவறல்ல என உணர்த்துகிறது.
தமிழிலிருந்து ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்ப்பான முதல் நாவல் ‘காக்கைச் சிறகினிலே’ சாதி, மதம், உயர்வு, தாழ்வு அத்தனையும் தாண்டிய அன்பே ‘வானத்து வேலி’களின் கரு. அன்றே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
திவ்யா ஒரு குழந்தையின் தாய். கணவனற்ற விதவை. தன்னைவிட வயதில் இளைய ஒருவனை மணப்பது அல்லது சேர்ந்து வாழ நினைப்பது இன்னும் நம் சமூக ஏற்பில் இல்லை. காலம் மாறும். கணிப்புகளும் மாறும்.
உஷா சுப்ரமணியன்
20.01.2022
சென்னை
அந்தக் குழந்தை
1
டாக்டர் சேகர் ஸ்டெதஸ்கோப்பைக் கழுத்திலிருந்து கழட்டித் தோளில் மாட்டிக்கொண்டு, கோல்ட்ரிம் கண்ணாடியை அவிழ்த்து, முகத்தைக் கர்சீப்பால் துடைத்துக் கொண்டார். அயரவைக்கும் நாள். காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்ததிலிருந்து ஒரு நிமிட ஓய்வு கிடைக்கவில்லை. காலை ஏழுமணிக்கு நளினி கொடுத்த ஆம்லெட்டையும், காபியையும் சாப்பிட்டது. நடுவில் அவ்வப்போது காபி அருந்தியதுடன் சரி, வேலை மும்முரத்தில் பசி என்ற உணர்வே மறந்துவிடுகிறது. பசி மட்டும் தானா?
ஸ்டெதஸ்கோப்பைக் கழட்டிய உடனேயே காத்திருந்தது போல் வயிறு குரல் கொடுத்தது. நளினியிடம், கட்டாயம் ஆறுமணிக்கு வந்துவிடுகிறேன்
என்று சொன்னது ஞாபகம் வந்தது.
நிமிர்ந்து அறைச்சுவரில் மாட்டியிருந்த க்வார்ட்ஸ் க்ளாக்கில் மணி பார்த்தார். 5-45... மோசமில்லை. வீட்டை அடையப் பத்து நிமிடம்தான் ஆகும். குளித்து உடை மாற்றிக் கொண்டு நளினியுடன் நாடகத்துக்குச் செல்லச் சரியாயிருக்கும்.
உண்மையில், நாள் முழுதும் உழைத்த அவர் உடம்பு ஓய்வுக்குக் கெஞ்சியது. நளினி பார்க்க விரும்பும் ஆங்கில நாடகத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை. அமெரிக்காவில் அவர் காணாத டென்னஸி வில்லியம்ஸ் நாடகமில்லை. ஆனால் அதே நாடகத்தை இந்தியர்கள் மேல்நாட்டு உடை அணிந்து, இந்திய ஆங்கிலத்தில் பேசி நடிக்கும்போது அவரால் ரசிக்க முடிவதில்லை. இதை ஒருமுறை நளினியிடம் கூறியபோது அவள், ரசனை என்பது நாமாக வளர்த்துக்கொள்வது. உங்களைப் போல் அமெரிக்காவுக்கு ஒரு ரசனை, இந்தியாவுக்கு ஒரு ரசனை என்று என்னால் தெருக்கூத்து பார்க்க முடியாது
என்றாள் ‘சுருக்’கென்று.
பல விஷயங்களை நளினியிடம் மனதாரப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எட்டுவயதில் ஒளித்துச் சேர்த்து வைத்த அரையணாவில் ரகசியமாக வாங்கித் தின்ற கமர்கட்டைப் பற்றி மகிழ்ச்சி நினைவுடன் சொன்னால், அவள் அவரைப் பார்க்கும் பார்வையில் ஒரு பரிதாபமும் அலட்சியமும் இருக்கும்.
சமீபத்தில் மிக அதிகமாகத் தெரிய ஆரம்பித்துள்ள இந்த இடைவெளிக்குக் காரணம், அவர் தொழில்தான் என்று கூடத் தோன்றுகிறது அவருக்கு. இத்தனை வயதுக்கு மேல் தொழிலை மாற்றமுடியாது. இந்த மருத்துவத் தொழில் அவர் வாழ்க்கையாகவே மாறிவிட்டது. நிராத் சவுத்ரி எங்கோ ஒரு இடத்தில் எழுதுகிறார், ‘இந்தியர்களுக்கு ‘Living-’ற்கும் ‘Live-lihood’ற்கும் வித்தியாசமே புரிவதில்லை. ஒன்று வாழ்க்கை, மற்றொன்று வாழ்வதற்காகச் செய்யும் தொழில்...’
சேகர் நினைத்தார். ‘நான்கூட நிராத் சவுத்ரி போல் ஈஸிசேரில் அமர்ந்து தத்துவம் பேசி, எழுதினால் இந்த வித்தியாசம் புரியும். ஆனால் இருபத்திநாலு மணி நேரமும் பிறர் நலனுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மருத்துவருக்கு இது சாத்யமா? லைவ்லிஹுட்டேதான் ‘லைஃபாக’ மாற வேண்டியிருக்கிறது? இதையெல்லாம் சொல்லி நளினிக்குப் புரிய வைக்க முடியாது. அதனால்தான் அவளை சில விஷயங்களிலாவது சந்தோஷப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்.
லிப்டில் இறங்கி, கார் பார்க்கை நோக்கி நடக்கும் போது இந்த செப்டம்பர் மாலைப்பொழுது இனிமையாக இருந்தது. காலையில் நிறுத்திச் சென்றிருந்த காரின் மேல், குல்முஹர் பூக்கள் இதழ்களாக விழுந்து கிடந்தது ஒரு இனம் தெரியாத பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரி எக்ஸ்டென்ஷனை இவ்விடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்மேன் கூறிய போது, வரிசையாக நிற்கும் இந்த நிழல்தரும் குல்முஹர் மரங்களையும், அருகில் கம்பளமாய்ப் பரவிக்கிடக்கும் பச்சைப் புல்வெளியையும் அழிக்கக்கூடாது என தான் வாதிட்டது வீணல்ல என்று தோன்றியது.
சாவியைக் காரில் பொருத்தித் திருப்பும்போதுதான் அந்த உரத்த பேச்சும், கெஞ்சலும், மறுப்பும் அவர் காதில் விழுந்தது.
கார்பார்க்கின் மறுபுறமிருந்த ரிஸப்ஷன் டெஸ்கிலிருந்துதான் அந்தச் சத்தம். ஒரு நிமிடம் காரைத் திறப்பதை நிறுத்திப் பேச்சைக் கேட்டார் டாக்டர் சேகர்.
அதெல்லாம் முடியாது... நோ... நோ... டேக் ஹெர் பேக்...
ட்யூட்டி நர்ஸின் உரத்த குரலைத் தொடர்ந்து தாழ்ந்த குரலில் யாரோ கெஞ்சுவது கேட்டது. மொதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போப்பா... இங்கே வந்து என்னா தொந்தரவு?
டாக்டர் சேகருக்குக் கோபம் சுருசுரு என்று ஏறியது. நாலே எட்டில் ஓட்டமாக நடந்து ரிஸப்ஷனுக்குச் சென்றார்...
வாட் ஈஸ் தி மேட்டர் ஸிஸ்டர்?
ஓ... டாக்டர்... ந்யூஸன்ஸ்... போலீஸ் கேஸ்...
நர்ஸ் கூறுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கெஞ்சிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.
பெரிய இடத்துக் கார் டிரைவர் என்பது சீருடையிலிருந்தே தெரிந்தது. அவன் தோளில் ஒரு குழந்தை, கண்மூடித் துவண்டு கிடந்தது.
டாக்டரய்யா, நீங்கதான் சொல்லுங்க. இந்தக் கொழந்த நினைப்பில்லாம நடுரோட்டிலே விழுந்து கெடந்தது. எவனாவது லாரியை ஸ்பீடா அடிச்சிட்டுப் போறவன், ஏத்திடப் போறானேன்னு வண்டியை நிறுத்திப் பார்த்தேன். நானும் ஆறு பசங்களப் பெத்து வச்சிருக்கேன். ரோடு ஓரத்திலே இழுத்துப் போட்டுட்டுப் போக மனசு கேக்கவில்லை. ஒருமணியா ஒவ்வொரு டாக்டர் வீடா வழியெல்லாம் தூக்கிட்டு அலையறேன் யார் பெத்த புள்ளையோ... ஒரு டாக்டராவது ‘தொடமாட்டேன்’ போலீஸ் கேஸுங்கராங்க. பெரிய ஆஸ்பத்ரியா இருக்கேன்னு இங்கே தூக்கியாந்தா...
அந்த டிரைவரின் குரலில் பதற்றம், அவசரம், ஆயாசம்...
ஸிஸ்டர் குறுக்கிட்டாள். டாக்டர், போலீஸ் கேசுங்களை ஜி.எச்சுக்குத்தான் அனுப்பணும். நமக்கு பேஜாராப்பூடும். இந்தாளு கொழந்தை மேல வண்டி ஏத்திட்டுப் பொய் பேசுது...
டாக்டர் சேகர் ஸிஸ்டரை நிமிர்த்து கண்டிப்புடன் பார்த்தார். அவள் ‘சட்டென’ அடங்கினாள்.
அய்யோ அக்குருமமா இருக்குதே... நானா வண்டியை ஏத்தினேன்? நடுத்தெருவிலே மயக்கமாக் கெடந்திச்சு இந்தப் பாப்பா... டாக்டர் ஸார். என் இருபத்திரெண்டு வருஷ சர்வீஸ்ல ஒரு ஆக்ஸிடென்ட் கிடையாது. போலீஸ் கேஸ் கிடையாது. இந்தம்மா பேச்சைக் கேட்காதீங்க ஸார், எப்படியாவது அந்தக் கொழந்தையைப் பொழைக்க வச்சுடுங்க...
ஸிஸ்டர்... குழந்தையை 3-பிக்கு எடுத்துப்போங்க... நீங்க என்கூட வாங்க... பார்ம்ஸ்ஃபில் பண்ணணும்...
டாக்டர்... நான் ஏத்தலை...
அதை நான் பார்த்து முடிவு செய்துக்கறேன்...
டாக்டர்... ஐயா, ஃப்ளைட்டுக்கு பேங்களூர் போகணும். கார் டயத்துக்குப் போகாவிட்டால் கஷ்டமாயிடும். நான் எண்ணூரில் பாக்டரியிலேயிருந்து வந்துக்கிட்டிருந்தப்ப கொஞ்ச தூரத்திலே அதிகம் கூட்டமில்லாத இடத்திலே இது கிடந்திச்சு. கார்ல தூக்கிப் போட்டுக்கிட்டு வந்தேன்...
டாக்டர் தானே ஒரு ஃபார்மை எடுத்தார்... பெயர்...
டிரைவர் விழித்தார்.
வயது...
தெரிலையே....
ஸெக்ஸ்...
தானே ‘பீமேல்’ என்று எழுதிக்கொண்டார்.
டாக்டர். ஐயாவுக்கு ‘ப்ளைட்’டுக்கு நேரமாவறது. கோபக்காரரு. டயத்துக்குப் போவாட்டா சீட்டுக் கிழிச்சிடுவார்...
டிரைவர் கெஞ்சினான்.
டாக்டர் சேகர் அவனைத் தீர்க்கமாக நிமிர்ந்து பார்த்தார். அவனிடம் ஒரு சத்தியம் தெரிந்தது.
டிரைவர், நீ போயி உங்க அய்யாவைப் பிளேனில் ஏத்திட்டு நேரே இங்க வரணும், போலீஸ்கிட்ட உண்மையைச் சொல்லணும். நான் உனக்கு நியாயமான ரிப்போர்ட் தருவேன்...
என்னை ஒண்ணும் செய்யமாட்டாங்களே, டாக்டர்...?
மாட்டாங்க.
டாக்டர் ஒங்களைத்தான் நம்பியிருக்கேன்... நா தப்புத் தண்டா செய்யற ஆளில்லை. புள்ளை குட்டிக்காரன்... மனசு கேக்கலை...
ஓ.கே... ஓகே... எட்டுமணிக்கு நான் உனக்கு இங்கே காத்திருப்பேன், பயப்படாம வா...
அந்த டிரைவர் முகத்தில் கிலியுடன் நகர்ந்தான். பத்தடி சென்றவன் திரும்பி, டாக்டர், கொழந்தை பொழச்சிடுமில்லை!
என்று கேட்டான்.
ஐ ஹோப் ஸோ...
டாக்டர் சேகர் அந்த டிரைவரிடம் அவன் பெயர், கார் நம்பர். முதலாளி பெயர் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் அவன் கட்டாயம் திரும்பி வருவான் என்று அவருக்குத் தெரியும். நேர்மையின் தரிசனத்தை எப்போதும் அவர் உள்ளுணர்வு புரிந்து கொள்ளும். போலீஸுக்குப் போன் செய்தார்.
2
அந்தக் குழந்தை மேஜையில் கிடத்தப்பட்டிருந்தது. ஸிஸ்டர் ஸிஸிலியா, டாக்டர் பார்க்கும் வகையில் விளக்கைத் திருப்பி அட்ஜஸ்ட் செய்தாள். சேகர் குனிந்து குழந்தையைப் பார்த்தார்.
கறுப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எண்ணெய்ப் பசையின்றி செம்பட்டையாக மாறி இருந்த சுருண்ட முடி முகத்தில் ‘அவுட்லைன்’ வரைந்திருந்தது. மாநிற முகம் வெளிறிக் கிடந்தது. தலை ஒரு பக்கம் சிறிது சரிய, உதட்டு ஓரங்கள் பிரிய, கண் பாதி இறந்து கிடந்தது. முகத்தில் ஒரு அதிர்ச்சி அப்படியே உறைந்திருந்தது. திடீரெனத் தாக்கப்பட்டிருக்கிறாள்.
எதனால்? உடம்பை மெல்ல ஆராய்ந்தார். எங்கும் ஒரு சின்ன அடியோ, சிராய்ப்போ கூட இல்லை. வற்றிய உடம்பு... வயது ஏழு அல்லது எட்டிருக்கலாம். அல்லது ஒன்றிரண்டு மேலே கூட இருக்கலாம். வயிறு ஒட்டி இருந்தது.
கை, கால்களில் சதைப்பிடிப்பில்லை.
டாக்டர் சேகரின் பழகிய க்ளினிகல் மூளையும், கைகளும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் வேகமாகச் செயல்பட்டன.
கண்களைப் பிரித்தார். கறுப்பாக விழிகள் வெறுமையாகப் பார்த்தன. கண்மணிகள் ‘டைலேட்’ ஆகி இருந்த போதிலும் அவை ஒரே அளவில் இருந்தன. காதிலிருந்து சற்று மேலாக ஒரு அடி... கட்டாயம் ஒருபுறம் சரிந்து விழுந்தபோது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், எலும்பு முறிவின் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் எலும்பு முறிவு இருக்கலாம். ஸிஸ்டர், தையல் போடணும்...
ஐ வில் டேக் கேர்...
இல்லை. நான் போடறேன்...
ஸிஸ்டர், டாக்டரை நிமிர்ந்து விசித்திரமாகப் பார்த்தாள்.
டாக்டர் தையல் போடக் குனிந்தபோது... ஓ... டாக்டர், பேன், பேன்...
அவள் குரலில் அருவருப்பு.
முடியை முழுவதும் அகற்றி எடுத்துக்கொண்டு வாங்க, தையல் போட்டவுடன் எக்ஸ்ரேக்கு ஏற்பாடு செய்யுங்க... அப்புறம், டாக்டர் ஸ்ரீநிவாஸை உடனே வரச்சொல்லுங்க.
யூ மீன் தி ப்ரெயின் ஸ்பெஷலிஸ்ட்... காலைல வருவாரே.
நோ, நான் இப்பவே வரச்சொன்னேன்னு போன் செய்யுங்க.
இன்று டாக்டருக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விக் குறியுடன் ஸிஸ்டர் இஷ்டமில்லாமல் நகர்ந்தாள். ஒரு அழுக்குப் படிந்த தெருக்குழந்தை. அதை இங்கே சேர்த்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, வெறுமே முதலுதவி அளித்து போலீஸிடம் ஒப்படைத்து விடலாம். அதை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து, ஏதோ குடியே முழுகிப்போனதுபோல் இந்த நேரத்தில் அவசரமாக ஸ்பெஷலிஸ்டை அழைத்து... ஹி ஈஸ் கெட்டிங் க்ரேஸி...
என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஸிஸ்டர், குழந்தையைத் தயார் செய்யத் தள்ளிக்கொண்டு போனபின், டாக்டர் சேகர் சிந்தனையில் ஆழ்ந்தார். சில முகங்களுக்கு ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கும். இந்தப் பெண் கண்கூடத் திறக்கவில்லை. உடம்பு முகமெல்லாம் அழுக்கு, அத்தனையையும் மீறித் தன்னை ஏதோ ஒன்று ஆகர்ஷிப்பதை அவரால் உணர முடிந்தது. கவர்ச்சி, ஆகர்ஷிப்பு போன்ற வார்த்தைகள் இந்த உணர்வைச் சரியாக விவரிக்க முடியாது. ஏதோ ஒரு உந்துதல், விசை, நெருக்கம்... விளக்கம் கூற முடியாத பல விஷயங்களில் ஒன்று.
ஸிஸ்டர் குழந்தையை மறுபடியும் தள்ளிக்கொண்டு வந்தாள். இப்போது குழந்தை முகத்தில் கருப்பு அவுட்லைன் இல்லை. இப்போது அந்த முகம் பழுப்பு மெழுகால் செய்தது போலிருந்தது. அதன் பரிதாபம் அவர் வயிற்றைச் ‘சிலீர்’ எனத் தாக்கியது. தினம், தினம் ஆயிரம் பரிதாபங்களை கதறல்களை பயங்கரங்களைச் சந்திக்கும் தனக்கு ஏன் இந்த உணர்வு?
ஊசி குத்தியதோ, தையல் போட்டதோ அவளிடத்தில் எந்தவித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. டாக்டர் குழந்தையுடைய வாய், தொண்டையைப் பரிசோதித்தார். எல்லாம் நார்மல்.
இப்போது, மெல்ல ஒருபுறமாக ஒருக்களித்துப் படுக்க வைத்து முதுகுத் தண்டில் ஊசியை ஏற்றி மூளைத் திரவத்தை சிரஞ்சில் குத்தி, ட்யூபில் எடுத்தார்.
ட்யூபின் நிறம் பழுப்பு கலந்த ரோஸாகியது.
ப்ரெயின் டாமேஜ்...
சேகரின் வாய் முணுமுணுத்தது. ஸிஸ்டர் ட்யூபை மூடிப் பரிசோதனைச்சாலைக்குத் தயார் செய்தாள்.
இந்தக் குழந்தை பிழைக்குமா? பிழைக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. பிழைத்தாலும் மூளை பாதிக்கப்பட்ட தாக்கத்தால், கால் இழுக்காமல், பேச்சுப் போகாமல் கை, சிந்தனை சக்தி பழுதடையாமல் வாழ முடியுமா? சந்தேகம்தான். முடியாது என்றே சொல்லலாம்.
டாக்டர் சேகர் கட்டிலிலிருந்த கேஸ்-ஷீட்டை எடுத்துத் தானே ‘அபாயம்’ என எழுதினார். ஸிஸ்டர், இன்று இரவு மட்டும் இவளை ‘ஸ்பெஷல் கேசில்’ வைக்க முடியுமா?
இன்று இரவா...? கட்டாயம் முடியாது டாக்டர். நாலு ஹார்ட் பேஷன்ட்ஸ் மானிடரில் இருக்கிறார்கள். ஸ்டாஃப் ஷார்டேஜ் வேறு...
டாக்டர் சேகருக்கு ஸிஸ்டர் ஸிஸிலியாவைத் தெரியும். அவள் கோபம், கண்டிப்பு அத்தனைக்கும் அடியில் அவள் விரும்பினால் எதையும் செய்வாள் எனத் தெரியும்.
ப்ளீஸ் ஸிஸ்டர்...
ஓகே... டாக்டர்... எக்ஸ்ரேக்கு எடுத்துப் போகட்டுமா?
ஆமாம்... டாக்டர் ஸ்ரீநிவாஸ் வந்தால் என்னைக் கூப்பிடுங்க. நான் ரிஸப்ஷனில், அல்லது என் அறையில் இருப்பேன். போலீஸ் காத்திருப்பார்கள்...
யூ ஆர் இன் ட்ரபிள் டாக்டர்...
ஸிஸ்டர் ஸிஸிலியா சிரித்தாள்.
எப்போதுதான் இல்லை... தேங்க்ஸ் ஸிஸ்டர்.
பயந்து நின்றிருந்த டிரைவரை அழைத்தார் தன் அறைக்கு. இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார்... மயக்கமாக ஒரு குழந்தை நடுரோட்டில் விழுந்து கிடந்ததைக் காரில் எடுத்து வந்து அட்மிட் செய்திருக்கிறார் இந்த டிரைவர். குழந்தை வேகமாக வந்து தடுக்கிக் கீழே விழுந்து நினைவிழந்திருக்க வேண்டும். காரில் அடிபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. குழந்தை யாருடையது என்று தெரியவில்லை. இவர் ஏற்கனவே போலீசுக்குச் சொல்லியிருக்க வேண்டும், என்றதும் பயந்திருக்கிறார். நான் இவருடைய நல்லெண்ணத்துக்கு நன்றி கூற விரும்புகிறேன்...
டாக்டரின் சாத்வீகம் இன்ஸ்பெக்டரிடமும் ஒரு கண்ணியமான போக்கைத் தோற்றுவித்தது. குழந்தை விழுந்திருந்த இடம், அழைத்துவந்த நேரம் முதலியவை கேட்டு எழுதிக்கொண்டார்.
இன்ஸ்பெக்டர், அத்த ‘லொகாலிடியி’ல் குழந்தையின் பேரன்ட்ஸை ‘லொகேட்’ செய்து அவங்களுக்குத் தெரிவிக்கிறது ரொம்ப அவசியம்.
அப்கோர்ஸ்... அது ரொம்பச் சுலபம்... டிரைவர் ஸார். கேஸ் நடக்கிறபோது உங்களைக் கூப்பிடுவோம். இப்போ ஸ்டேஷனுக்கு வந்து ஒரு எப்.ஐ.ஆர்லே கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க...
இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.
நினைவு வந்ததும் தெரிவியுங்க. குழந்தை வாக்குமூலமும் எடுத்திடலாம்.
நினைவு வருமா என்ற கேள்விக்கு டாக்டரிடம் பதிலில்லை. கட்டாயம் இன்ஸ்பெக்டர்...
இன்ஸ்பெக்டர் விடைபெற்றார்.
நாளைக்கு ட்யூட்டிக்குப் போறபோது குழந்தைக்கு எப்படியிருக்குன்னு பாக்கறேங்க... எதலாம்னா இந்த மாரியாத்தா துன்னூறை நெத்திலை இட்டுடுங்க...
டிரைவர் இலையில் சுருட்டிய பிரசாதத்தை நீட்டினான்.
‘நம்பிக்கை... அதற்கு ஒரு ஆதாரம் தேவையில்லை. விஞ்ஞானமோ, பக்தியோ அத்தனைக்கும் அடிப்படை அதுதான்... பிழைப்பாள் என்ற நம்பிக்கையில் தானே நானே மூளை நிபுணரை வரச்சொல்லியிருக்கிறேன்.’
ஸிஸ்டர் ஸிஸிலியாவின் சுறுசுறுப்பு. வெகுவேகமாக, டாக்டரின் ‘மூடை’ உணர்ந்தவளாக, அனைவரையும் அவசரப்படுத்தி... டாக்டர், அடி மண்டையோட்டில் எலும்பு முறிவு... ஹெமரேஜ்...
ரிஸல்ட்டுடன் வந்துவிட்டாள்.
டாக்டர் ஸ்ரீநிவாஸ் உதட்டைப் பிதுக்கினார். ஆபரேஷன் செய்யும் நிலையில் இல்லை. ரத்த அழுத்தம் மிக மிகக் குறைவு. ஊட்டமுள்ள குழந்தையானால் மண்டையைத் திறந்தாவது பார்க்கலாம்... இவளுக்கு தற்சமயம் எதுவும் செய்ய முடியாது. பார்க்கலாம்... சேகர்... இரண்டு நாளைக்கு அப்ஸர்வ் செய்யலாம்...
ஸிஸ்டர், இன்டென்ஸிவ் கேர்...
ஆமாம் டாக்டர், நான் பார்த்துக் கொள்கிறேன்.
ராத்திரி அவசரமானால் கூப்பிடத் தயங்காதீங்க.
நைட் ட்யூட்டி டாக்டர் வந்தாகிவிட்டது...
பரவாயில்லை, என்னையும் கூப்பிடுங்க...
ஸிஸ்டர் ஸிஸிலியா அவரைக் குறும்பாகப் பார்த்தாள்... டாக்டர். ஆர் யூ இன் லவ் வித் திஸ் சைல்ட்...?
டாக்டர் சிரித்தார். ஐ ஆம் இன் லவ் வித் மை ஸெல்ப்... தோல்வியை நான் ஏற்க விரும்பவில்லை...
குட்நைட் டாக்டர்...
குட்நைட் ஸிஸ்டர்...
தன்னுடைய ‘ஈகோ’ திருப்திக்காகவா அவர் இந்தக் குழந்தை பிழைக்க வேண்டும் என விரும்புகிறார்? கட்டாயம் இல்லை. இந்தக் குழந்தைக்கு சாகும் வயதில்லை... கட்டாயம் சாகும் முகமில்லை. மேஜையில் நினைவிழந்து இருந்த முகத்தில் உதடு மட்டும் சிரித்தாற்போல் இருந்ததே... என்ன பொருள்...? அட மூட டாக்டரே! உன் படிப்பு, அறிவு, திறமை, அத்தனைக்கும் மேல் ஆட்டிப்படைக்க அல்லது அடியோடு நிறுத்த வேறு ஒரு சக்தி எங்கோ இயங்குகிறது. என்ன இறுமாப்பு உனக்கு என்று பொருளோ?
உன் அத்தனை விஞ்ஞான அறிவையும் வைத்துக் கொண்டு நான் பிழைப்பேனா என்று நிச்சயமாகச் சொல் என்று கெக்கலி காட்டுகிறதா?
இருட்டில் கார்மேல் கிடந்த குல்முஹர் பூக்கள் இன்னும் ஆரஞ்சு நிறத்தை இழக்காமல், இருட்டுடன் சேர்ந்து அரக்காக மாறி இருந்தன.
‘இக்னிஷனை’ ஆன் செய்ததும், டிஜிடல் க்ளாக் 9-40 என்று மணிகாட்ட, மைகாட்... ஐ ஆம் சாரி... ஐ ஆம் சாரி நளினி...
என்று ஸ்டீயரிங்கில் கவிழ்ந்து திகைத்து நின்றார் டாக்டர் சேகர்.
மறுவினாடி சுதாரித்துக்கொண்டு, பெருமூச்சுடன் கியரைப் போட்டுக் காரைக் கிளப்பினார்.
வாழ்க்கையும், தொழிலும் எப்போதும் வேறு வேறாக இருக்க முடியாது. கட்டாயம் அவருக்கு முடியாது.
3
மௌனம் அழகானது. இயற்கையுடன், உணர்வுகளுடன், ஆத்ம பலத்துடன் நெருக்கம் அளிப்பது. அதே மௌனம் சமயங்களில் பயம், தனிமை, துக்கத்தையும் அளிக்கிறது என்று அவருக்குத் தோன்றியது.
இருளில் மூடிய கேட்டு. வாசல் விளக்குகூடப் போடாமல் அந்தகாரத்தில் ஆழ்ந்திருந்த வீடு. இவை டாக்டர் சேகரின் மனத்தில் ஒரு பயங்கரத் தனிமை உணர்வை உண்டாக்கியது. ஹார்னை அழுத்தினால் அவுட்ஹவுஸிலுள்ள வாட்ச்மேன் கன்னியப்பன் வந்து கதவைத் திறப்பான். ஆனால் அதற்குக்கூட சக்தியில்லாமல் அவர் மனமும், உள்ளமும் துவண்டது. ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பும் போது மனத்தில் இருந்த திருப்தி இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை.
மறுசாவியைப் போட்டு வாயிற்கதவைத் திறந்தபோது வரவேற்பறை வெறுமையாய் இருந்தது. பழுப்பு நிறத் தரை நீள படுதாக்களும், அதில் குறுக்காக இருந்த கறுப்புக் கோடுகளும் வாயைத் திறந்து அவரை விழுங்க வரும் நாகப்பாம்பாகத் தோன்றியது.
ஹாலுஸினேஷன்
... பிரமையில் ஆழுமளவு மனம்