Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandupidiyungal
Kandupidiyungal
Kandupidiyungal
Ebook285 pages3 hours

Kandupidiyungal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100904462
Kandupidiyungal

Read more from Pattukottai Prabakar

Related to Kandupidiyungal

Related ebooks

Reviews for Kandupidiyungal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandupidiyungal - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கண்டுபிடியுங்கள்

    Kandupidiyungal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கண்டுபிடியுங்கள்

    தயவுசெய்து...

    டேக் நம்பர் – 2

    சந்திரன் சாட்சியாக

    புதிய குதிரை-7-710

    மதிப்புக்குரிய ரகசியம்

    ... ஆகையால் இறந்தாள்

    மிஸ் வந்தனாவின் வாக்குமூலம்

    நடுவில் ஒரு நங்கை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    இந்தத் தொகுப்பில் மொத்தம் 9 குறுபடம் நாவல்கள். அத்தனையும் துப்பறியும் கதைகள். பல இதழ்களில் வெளிவந்தவை. தலைப்புக் கதையான 'கண்டுபிடியுங்கள்' பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    இந்தக் குறுநாவல் குமுதம் இதழில் எழுதியது. அப்போது குமுதத்தின் ஆசிரியராக திரு.சுஜாதா பொறுப்பேற்றிருந்தார். குமுதத்தின் உள்ளடக்கம், வடிவமைப்பு என்று எல்லாவற்றிலும் பல சுவாரசியமான மாற்றங்களை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இதழிலும் ஒரு குறுநாவல் இலவச இணைப்பாகத் தர யோசனை செய்தார். முதல் இணைப்பில் என்னை எழுதச் சொன்னபோது எழுதிய கதை இது.

    நான் சுஜாதாவின் தீவிர ரசிகர்களில் ஒருவன். நான் மட்டுமில்லை, அநேகமாக எல்லா வகை எழுத்தாளர்களும் சுஜாதாவின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பார்கள். ஒரு முறை சுஜாதா மயிலாடுதுறையில் ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். நான் ஒரு சில கதைகள் எழுதி வளர்ந்து வந்த நேரம். அவரைச் சந்தித்துப் பேச ஆசை. நானும், நண்பர் வசந்த் (இயக்குநர்), எழுத்தாளர் சாருப்ரபா சுந்தர் மூவரும் கும்பகோணத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்தோம். மயிலாடுதுறை சென்று சுஜாதாவின் பேச்சைக் கேட்கத் திட்டமிட்டுப் புறப்பட்டோம். வழியில் வசந்த் தன் சூட்கேசைத் தொலைத்தார். அதை ஒரு பேருந்தை துரத்திச் சென்று மீட்டெடுத்து பயணம் தொடர்ந்து, மயிலாடுதுறை வந்த போது அந்த விழா முடிந்து குரூப்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கியதோடு சரி, அதிகம் பேச முடியவில்லை. புறப்பட்டுச் சென்று விட்டார்.

    பிறகு நான் சென்னை வந்த பிறகு, பல சந்திப்புகள். குறைவாக, ஆனால் சிந்தனையைத் தூண்டும் விதமாகப் பேசுவார். எதைப் பற்றியும் பேசலாம். எதைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொள்வார். தலைக் கனம் என்பதே துளியும் கிடையாது. எதிர்கால மாற்றங்கள் பற்றி நிறையப் பேசுவார். பத்து வருடங்கள் முன்பே ஒரு முறை பேசும் போது எதிர்காலத்தில் சிறுகதைகள், தொடர் கதைகள் மதிப்பிழந்து போகும் என்றார். சென்ற ஆண்டு எனது சிறுகதைத் தொகுப்பொன்றுக்கு அவர் முன்னுரை எழுதித் தந்தார். அது தொடர்பாக அவரைச் சந்தித்த போது எனது மகளுடன் சென்றிருந்தேன். அவள் எலக்ட்ரானிக் மீடியா முடித்து விஷுவல் எஃபெக்ட்ஸில் டிப்ளமா செய்திருந்தாள். அவளுடன் அவளின் சப்ஜெக்ட் குறித்து ஆழமாக அவரால் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி வரை அலச முடிந்த போது எனக்கு ஆச்சர்யம் அதிகரித்தது. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி மட்டும்தான் இவரால் எழுத முடியாது என்று நினைத்தேன். இப்போது அந்த மரணத்தை அனுபவித்து விட்டார். ஆனால் அந்த அனுபவத்தை அவருடைய துள்ளல் நடையில் படிக்க நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.

    இந்தப் புத்தகத்தின் முன்னுரையை எனது மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் இந்தத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்.

    *****

    கண்டுபிடியுங்கள்

    (முதல் நாவல்)

    1

    யாரோ சுட்டுவிட்டதைப் போல சிவப்பு ரகளையாய் மேற்கு வானம். மரங்களில் கட்டிடங்களில் அங்கங்கே மஞ்சள் தடவிவிட்டிருந்தது வெளிச்சம். சிக்னலுக்குச் சிக்னல் காத்திருந்த வாகனங்களில் ஆட்டோக்கள் மட்டும் கோரஸாக அம்மி கொத்தின. சென்னை நகரம் இரவு நேர யோக்யத்தனங்களுக்கும், அயோக்யத்தனங்களுக்கும் தயாராகிக் கொண்டிருந்தது.

    அது நீல நிற டொயாட்டோ. சரிவில் உருளும் கோலிக்குண்டு போல் வழுக்கிக் கொண்டு வந்து அந்த 'யுவா காம்ப்ளெக்ஸ்' என்று இப்போதே நியான் விரயம் செய்து கொண்டிருந்த எட்டு மாடிக் கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் இடம் தேடி ஊர்ந்தது. நின்றது.

    டிரைவர் அவசரமாக இறங்கிப் பின்புறக் கதவைத் திறந்து விட்டதும், இறங்கினார் சுகன்தாஸ்.

    'சொட்டு நீலம் டோய்!' பாடத்தூண்டும் வெள்ளையோடு வெள்ளை ஸஃபாரி சூட். தங்கச் செயின் கோத்த கண்ணாடி. முந்தாநாள் காலைக்கப்புறம் ஷேவ் செய்யப்படாததில் முளை விட்ட ரோமங்கள் இணைந்து தாடையில் லேசாக நிழல் போர்த்தியிருக்க... ஹேர் டை அவரின் ஐம்பது வயதைப் பிடிவாதமாகப் பின்னோக்கி இழுத்துப் பிடித்திருந்தது.

    சின்ன ப்ரீஃப்கேசுடன் கட்டிடத்தின் லிஃப்ட்டை நோக்கி நடந்த சுகன்தாஸ் முகத்தைத் தமிழகத்தின் ஒரு முடுக்குக் கிராமத்தில் கூடப் பார்த்திருக்கிறார்கள்.

    அவர் நடிகரில்லை. அரசியலில் துண்டு போட்ட ஆசாமியில்லை. வியாபாரி. தங்க வியாபாரி. உஸ்மான் ரோட்டில் இருநூறு சிப்பந்திகள் வேலை பார்க்கும் சுகன்தாஸ் ஜுவல்லரியின் அதிபர் என்பதோடு நின்றிருந்தால் எல்லாத் திசைகளிலும் பரவியிருக்க மாட்டார்.

    சுகன்தாஸுக்குப் பொது வாழ்வில் அப்படியோர் ஈடுபாடு. எல்லா விழாக்களிலும் அவர் இருப்பார்.

    அந்தச் சுகன்தாஸுக்கு ஒரே ஒரு மகள். ஜ்வாலா. செல்ல புத்ரி. கல்லூரி மாணவி. எல்லாக் கதைகளிலும் போல் ஜ்வாலா அழகான பெண், கவர்ச்சியான உடலமைப்பில் பிரம்மாவிடம் போனஸ் சலுகை பெற்று வந்தவள் என்பது பிரதி சனிக்கிழமை இரவுகளில் நட்சத்திர ஹோட்டல்களில் அவளோடு இணைந்து டிஸ்கோ ஆடும் அல்லது உதறும் அவளின் பாய் நண்பர்களின் கூட்டுக் கருத்து.

    இந்தத் தை மாத நவமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை மாலை ஐந்தே முக்காலுக்கு, விசனப்பட்ட முகத்துடன் சுகன்தாஸ் அந்தக் கட்டிடத்தின் லிஃப்ட்டில் பயணம் செய்து ஏழாவது மாடியில் வெளிப்பட்டு 'யுவர்ஸ் டிடெக்டிவ் ஏஜன்சி' என்று பளபளக்கும் பித்தளை எழுத்துக்களைப் பார்த்து விட்டு, கண்ணாடிக் கதவைத் தள்ளி அந்த அலுவலகத்துக்குள் நுழைகிறார் என்றால், அதற்குக் காரணம் அவர் மகள் ஜ்வாலாதான்.

    அந்தச் செவ்வக ஹாலில் தரையில் கார்ப்பெட் போட்டு, சுவரில் வால் பேப்பர் ஒட்டி, கொட்டுகிற தத்ரூப அருவி போஸ்ட்டரை விசாலமாக ஒட்டி அதற்கொரு தனி விளக்குப் போட்டு, ஒரே மாதிரியான நான்கு மேஜைகள் போட்டு, அழுக்கே இல்லாமல் வாசனையாக இருந்தது அந்த ஆபீஸ்.

    இரண்டு மேஜைகள் காலியாக இருக்க, மற்ற இரண்டில் ஒருவன் குனிந்த தலை நிமிராமல் கால்குலேட்டரில் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, மற்றதில் ஒரு பெண் தன் நீள நகங்களைப் பார்த்தபடி, பாப் தலையசைய, பெப்சோடெண்ட் விளம்பரமாகச் சிரித்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள்.

    அவள் முன்னால் சென்று சுகன்தாஸ் நிற்க, அவள் அடுத்த ஜென்மத்தில் தான் ரிசீவரை வைப்பாள் போலிருக்கவே, கால்குலேட்டர் ஆசாமியின் லெட்ஜர் நடுவில் தகதகக்கும் தன் விசிட்டிங் இலையைப் (அதைக் கார்டு என்று சொல்ல இயலாது) போட்டார்.

    அவன் பெயர் படித்து விட்டு, உடனே எழுந்து கொண்டு, வாங்க சார், நீங்கதானே போன்ல பேசினீங்க? அஸ்வின் குமார் சார் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கார். அந்த ரூம். என்று கை காட்டி விட்டு உடன் இன்ட்டர்காமின் பட்டன் அழுத்தி அறைக்குள்ளும் செய்தி சொன்னான்.

    சுகன்தாஸ் நடந்து, அஸ்வின் குமாரின் பெயரைத் தாங்கிய கதவில் மரியாதைத் தட்டல் செய்து விட்டு தள்ளித் திறக்க, உடனே குளிரால் அணைக்கப்பட்டார்.

    மணிரத்ன ரசனையோடு கொஞ்சூண்டு வெளிச்சம் சரியாக மேஜைக்கு மட்டும் சாய்வுக் கோணத்தில் அமைத்துக் கொண்டு, கடலகல மேஜைக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த அஸ்வின் குமார், அவரோடு கை குலுக்க எழுந்து கொஞ்சம் எம்பவும் வேண்டியிருந்தது.

    அஸ்வின் குமார் இளைஞன். நாகரீகன். ஜீன்ஸ், டி.ஷர்ட், கண்களும், மீசையும் மின்னின. மென்ஜூப்ளி சென்ட்டின் வாசனை மேஜையைக் குறுக்கத்தில் கடந்து சுகன்தாஸுக்கு இதம் தந்தது.

    தயவுசெய்து நாற்காலியை எடுத்துக் கொள்ளச் சொன்ன பிறகு, உதட்டில் வைத்து பல் படாமல் கடித்துக் கொண்டிருந்த பேனாவை அதன் அலங்கார இருக்கையில் செருகிவிட்டு, உங்களுக்கு எந்த வகையில் நான் உதவி செய்ய முடியும் மிஸ்டர் சுகன்தாஸ்? என்றான் ஒத்தடம் கொடுக்கின்ற ஆங்கிலத்தில்.

    தமிழ்ல பேசலாமா?

    ஓ! ஷ்யூர், என்று தோள்களைக் குலுக்கினான்.

    சுகன்தாஸ் தன் ஃப்ரீப்கேஸை மடியில் வைத்து, க்ளிக்-க்ளிக் சத்தமில்லாமல் திறந்து ஒரு கலர் ஃபோட்டோ எடுத்துக் கண்ணாடி மேஜையில் வைத்து அவன் பக்கம் தள்ள, அது வழுக்கிக் கொண்டு வந்து அவன் விரல் பட்டு மல்லாந்தது.

    இவதான் ஜ்வாலா! என்னோட ஒரே பொண்ணு. இவளைப் பத்தின எல்லா விவரங்களும் இதில் எழுதியிருக்கேன். மற்றொரு காகிதம் எடுத்து வைத்தார்.

    அஸ்வின் குமார் ஜ்வாலாவில் இருந்தான். புகைப்படத்திலேயே இளமையின் ஜ்வாலைகள் தெரிந்தன. தெரித்தன. அவள் கண்ணசைத்தால், கை கட்டி அடிமையாக லட்சம் பேர் தயாராக இருப்பார்கள் என்று தோன்றியது.

    ஜ்வாலாவை நான் கண்காணிக்கணுமா? என்றான் அஸ்வின்.

    இல்லை. கண்டுபிடிக்கணும். என்றார்.

    வ்வாட்? என்றான்.

    ஜ்வாலாவை முந்தாநாள் சாயங்காலத்திலேர்ந்து காணலை.

    போலீஸ்ல...

    இல்லை. நான் போலீஸ்கிட்ட போகலை.

    ஏன்?

    நான் ஒரு வி.ஐ.பி. என்னதான் நான் ரெக்வெஸ்ட் பண்ணிக்கிட்டாலும் எப்படியும் பத்திரிகைகளுக்குச் செய்தி கசிஞ்சிடும். அவங்க கற்பனையையும் சேர்த்துக் கைக்கு வந்தபடி என் பொண்ணைப் பத்தி எழுதிடுவாங்க. கல்யாணமாக வேண்டிய பொண்ணு. நேத்தும், இன்னைக்கும் என்னோட சொந்த முயற்சில பலவிதமாத் தேடிப் பார்த்துட்டேன். அவள் கிடைக்கலை. அதனாலதான் உங்களுக்கு ஃபோன் செஞ்சேன். நீங்க ரகசியமாத் துப்பறிஞ்சி என் மகளைக் கண்டுபிடிச்சித் தரணும். எனக்குப் பயமா இருக்கு சார்.

    சுகன்தாஸ் ஒரு தடவை மூக்கை உறிஞ்சிவிட்டுத் தன் கைக்குட்டையை எடுத்துக் கண்ணாடி கழற்றி கண்களை ஒற்றிக் கொண்டார்.

    ஒன் மினிட் சார். என்ற அஸ்வின் குமார் இன்ட்டர்காமில் நிவேதா, உள்ளே வா, என்றழைக்க, விநாடிகளில் அந்தப் பெண் உள்ளே வந்து மற்றொரு நாற்காலியில் தன் ஸ்கர்ட்டை ஒருங்கிணைத்து அமர்ந்து நோட்புக்கும், பென்ஸிலும் எடுத்துக் கொண்டாள். உதடுகளை லிப்ஸ்டிக்கால் அழுத்தமாக அடிக்கோடிட்டிருந்தாள்.

    சார், இப்போ சில அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. கடைசியா ஜ்வாலாவை நீங்க எப்போ பார்த்தீங்க?

    முந்தா நாள் காலைல அவ காலேஜுக்குப் புறப்பட்டு போனப்போ பார்த்ததுதான்.

    காலேஜ்லேர்ந்து எத்தனை மணிக்கு வழக்கமாத் திரும்பி வருவா?

    ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவா.

    காணோம்னு எப்படி உணர்ந்தீங்க?

    முந்தா நாள் ஜுவல்லரியை மூடிட்டு ஒம்போது மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ ஜ்வாலா இன்னும் வரலைன்னு வேலைக்காரங்க சொன்னாங்க.

    அவர் சொல்லச் சொல்ல நிவேதா ஷார்ட்ஹேண்ட்டில் எழுதிக் கொள்ள, அஸ்வின் குமார் பேப்பர் வெய்ட்டை ஓசையில்லாமல் உருட்டியபடி மேற்கொண்டு கேட்டான்.

    உங்க வீட்ல யார், யார் இருக்காங்க?

    நானும், ஜ்வாலாவும்தான்.

    வேலைக்காரங்க எத்தனை பேர்?

    வீட்டுக்குப் பின்னாடி க்வார்ட்டர்ஸ்ல தங்கி வேலை பார்க்கறவங்க மூணு பேர். சமையல்காரன், வேலைக்காரன், தோட்டக்காரன். வந்துட்டுப் போறவங்க ரெண்டு பேர். கூர்க்கா, டிரைவர், அவ்வளவுதான்.

    ஜ்வாலா காலேஜுக்கு எப்படிப் போவா?

    காலைல என் கார்ல ட்ராப் பண்ணிட்டு நான் கடைக்குப் போவேன். ஈவினிங் கார் சும்மா இருந்தா அனுப்பி வைப்பேன். வேலையாயிருந்தா அவ ஆட்டோல திரும்பிடுவா. முந்தா நாள் ஈவினிங் எனக்கொரு ஃபங்ஷன் இருந்ததால் அவளை ஆட்டோல வரச் சொல்லியிருந்தேன்.

    ஜ்வாலாவோட ஃபிரண்ட்ஸை எல்லாம் விசாரிச்சீங்களா?

    விசாரிச்சுட்டேன். அவ காலேஜுக்கு வந்திருந்ததாச் சொல்றாங்க. ஈவினிங் காலேஜ் முடிஞ்சதும் அவ எதில் போனா, எங்கே போனான்னு யாருக்கும் தெரியலை. வேற எங்கேயும் போறதா அவ யார்கிட்டேயும் சொல்லலைன்றாங்க.

    சரி, இன்னைக்கு வரைக்கும் ஜ்வாலா சம்பந்தமா உங்களை யாரும் போன்லயோ, இல்லை வேற விதமாவோ காண்ட்டாக்ட் பண்ணலையா?

    புரியுது சார். ஜ்வாலாவை யாராச்சும் கடத்திட்டுப் போயிருக்கலாம்னு நினைக்கிறீங்களா? எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு. ஆனா அவள் காணாமப் போய் நாற்பத்தெட்டு மணி நேரமாச்சு. இதுவரைக்கும் அப்படி எவனும் ஃபோன் செய்யலையே... அப்படி எவனாச்சும் ஃபோன் செஞ்சி, 'பத்து லட்சம் தா, பதினைஞ்சி லட்சம் தா’ன்னு மிரட்டியிருந்தா, சத்தியமா நான் உங்ககிட்டே வந்திருக்க மாட்டேன். எனக்கு ஜ்வாலாதான் முக்கியம். பணத்தை மூஞ்சில வீசியெறிஞ்சிட்டு அவளை மீட்டிருப்பேன். எந்தத் தகவலும் இல்லாம இருக்கறதுதான் எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கு.

    அப்போ ஜ்வாலா தன்னிஷ்டப்படி, சுதந்திரமாத் தானே விரும்பிதான் எங்கேயோ போயிருக்கலாம்னு ஒரு முடிவுக்கு வரலாமா சார்?

    ரெண்டு நாளா எனக்குத் தகவலே சொல்லாம் அப்படி எங்கே போவா? இந்த மாதிரியெல்லாம் அவ நடந்துக்கிட்டதில்லை.

    கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமச் சொல்லுங்க. உங்க பொண்ணுக்கு லவ் அஃபேர் எதுவும் உண்டா?

    நோ. நிச்சயமாக் கிடையாது.

    இருக்க வாய்ப்பில்லைன்னு அபிப்பிராயமாச் சொல்லுங்க. இருக்கவே முடியாதுன்னு நிச்சயமாத் தீர்மானம் பண்ணாதீங்க. எந்தப் பொண்ணும் தன் அப்பாகிட்டே பர்மிஷன் கேட்டுட்டு லவ் பண்றதில்லை.

    அஸ்வின் குமாரின் இந்த ஊகத்தை அவர் ரசிக்கவில்லை என்பதை அவர் கையில் கசங்கிய கைக் குட்டை அறிவித்தது.

    ஓக்கே. நான் உங்க வீட்டுக்கு வர்றேன். ஜ்வாலாவோட ரூமைப் பார்க்கணும். ஜ்வாலா இப்படித் திடீர்னு காணாமப் போனதுக்கு எங்கே ஏதாவது க்ளூ கிடைக்கலாம். எதுக்கும் உங்க டெலிபோன்ல டேப் இணைச்சு வைக்கிறோம். அப்புறம்... ஜ்வாலாவோட ஃப்ரெண்ட்ஸ் அட்ரஸ் எல்லாம் எனக்கு வேணும்.

    தர்றேன். எங்க வீட்டுக்கு எப்போ வர்றீங்க?

    நீங்க புறப்படுங்கள். அரை மணி நேரத்தில் நான் வர்றேன்.

    எழுந்து கொண்ட சுகன்தாஸ், அஸ்வின் குமார்! எத்தனை செலவானாலும் பரவால்லை. அவளைக் கண்டுபிடிச்சிக் கொடுத்துடுங்க. ப்ளீஸ்... என்றார். கைக்குட்டை கண்களைத் தடவித் திரும்பியது. சம்பிரதாயமாக மீண்டும் அவனைக் கைகுலுக்கி விலகினார் சுகன்தாஸ்.

    பென்ஸிலின் டான்ஸை நிறுத்தினாள் நிவேதா.

    நிவேதா, சுகன்தாஸ் கொஞ்சம் கஷ்டப்பட்டு அழற மாதிரித் தெரியலை? என்றான் அஸ்வின்குமார்.

    ஆமாம். ஆனா சில பேருக்கு எத்தனை சோகத்திலேயும் கண்ணீர் வராது பாஸ்.

    புன்னகைத்துக் கொண்ட அஸ்வின் குமார், ஒலித்த டெலிபோனை எடுத்துப் பேசி விட்டு வைத்து, ரெண்ட் அனுப்பலையா இன்னும்? இப்படியா ஓனர் ஞாபகப்படுத்தற மாதிரி வெச்சிக்கிறது? என்றான்.

    போஸ்ட் - டேட்டட் செக் கொடுக்கக் கூடாதுன்னு நீங்கதான் சொல்லி வெச்சிருக்கீங்க பாஸ். போன வாரம் முழுக்க பேங்க் பாலன்ஸ் டைட்டா இருந்திச்சு. சென் குப்தா செக் நேத்து க்ளியராய்டுச்சு. இன்னைக்கு செக் போட்டு அனுப்பிடறேன் சார்.

    கூடவே ஸாரின்னு ஒரு வரி எழுதிடு நிவேதா. அப்புறம்... சுகன்தாஸ் மேட்டரைப் பொறுத்தவரைக்கும் நான் சொல்ற சில விஷயங்களைச் செஞ்சி வெச்சிடு. நோட் பண்ணிக்கோ. முதல்ல சுகன்தாஸுக்கு ஜ்வாலா சொந்த மகள்தானான்னு தெரியணும். அவ காலேஜ்ல படிக்கிறது உண்மையா? இந்த ஃபோட்டோல இருக்கிறதுதான் ஜ்வாலாவா? - இந்த அடிப்படையான தகவல்களை எல்லாம் க்ளியர் செஞ்சிடு.

    சரி பாஸ்.

    அப்புறம்... இந்த ரெண்டு நாள்ல சிட்டில 'இளம் பெண் கொலை’ன்னு ஏதாச்சும் ரிப்போர்ட்டிங் ஆகியிருக்கான்னு பாரு. சிட்டில் உள்ள எல்லா ஹாஸ்பிடல்ஸ்லயும் மயக்கமான நிலையில பொண்ணு யாராச்சும் அட்மிட் செய்யப்பட்டாங்களான்னு விசாரி. டிராஃபிக் டிபார்ட்மெண்ட்லயும் ஆக்ஸிடெண்ட்ஸ் கேஸ் பத்தி விசாரி. இந்தத் தகவல் எல்லாம் சேகரிச்சு வை. நான் சுகன்தாஸ் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடறேன்.

    டெலிபோனுடன் இணைக்கிற வசதியுள்ள டேப் ரெக்கார்டரை பீரோவிலிருந்து எடுத்துக் கொண்டு தனது சுசூகி சமுராயில் புறப்பட்டான் அஸ்வின்குமார்.

    ***

    2

    சுகன்தாஸின் பங்களாவைத் தூரத்திலிருந்து பார்த்த விநாடியிலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. கிட்டே வந்து பார்த்தபோது, பங்களாவை ஒட்டடை அடிக்கத் துவங்கினால் வேலை முடிய இரண்டு மாதங்களாகும் போலிருந்தது.

    தமிழ் தெரிந்த கூர்க்கா, சொல்லி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பெயரை மட்டும் கேட்டுக் கொண்டு கேட்டைத் திறந்து விட்டான்.

    பைக்கைப் போர்ட்டிகோவில் டொயாட்டோ காரின் அருகில் நிறுத்தி, அணைத்து இறங்கினான் அஸ்வின்குமார்.

    விசிலடித்தபடி காரைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் உடனே விசிலை நிறுத்தி, நாக்கைக் கடித்துக் கொண்டான். அதே விசில் அவன் கல்நாயக் பார்த்து விட்டான் அல்லது அந்த உலகப் புகழ் பெற்ற பாடலைக் கேட்டிருக்கிறான் என்று செய்திகள் சொல்லின.

    சார் உள்ளே இருக்காரா? என்று இவன் கேட்ட பிறகுதான் இவனைப் பார்ப்பது போலப் பார்த்து, இருக்கார். என்றான். துடைக்கவில்லை என்றால் நடு நெற்றியில் சுடப்படுவாய் என்று உத்தரவிடப்பட்டவன் போல உடனடி விநாடியில் துடைக்கத் துவங்கி விட்டான்.

    அஸ்வின் குமார் அவனருகில் வந்து, தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட்டா நீ? என்றான்

    Enjoying the preview?
    Page 1 of 1