Nesathunai
By Thilagavathi
5/5
()
About this ebook
Read more from Thilagavathi
Anbulla Pilaathuvukku Rating: 0 out of 5 stars0 ratingsControl Kobam Rating: 0 out of 5 stars0 ratingsSoppana Boomiyil Rating: 5 out of 5 stars5/5Kalanthorum Aram Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Mudivedu Rating: 5 out of 5 stars5/5Thamizhkodiyin Kaathal Rating: 5 out of 5 stars5/5
Related to Nesathunai
Related ebooks
Maanjolai Manmathan Rating: 5 out of 5 stars5/5Oru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Nalliravu Natpudan... Rating: 4 out of 5 stars4/5Anthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Nalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் தென்றல் வீசுமா? Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsSandikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Poi Vaa Nathiyalaiye Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsLockdown Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thana? Ivan Thana? Rating: 0 out of 5 stars0 ratingsNillu Nivedha! Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Velicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Kanavu Urvalangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nesathunai
1 rating0 reviews
Book preview
Nesathunai - Thilagavathi
24
1
உலகத்தின் நினைப்பே இல்லாமல் தன் விளையாட்டுப் பொருட்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்த கார்த்திக் சட்டென்று குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.
சௌந்திர வடிவு! கார்த்திக்கின் பெரியம்மா.
ஏற்கெனவே சொன்னதையே வலியுறுத்துபவள் போல அவள் திரும்பவும் சொன்னாள்:
ஏழு வயசாவுதுன்னுதான் பேரு எதுனா சொன்னா வெளங்குதா பாரு
வடிவு, கார்த்திக்கின் கையிலிருந்த பிளாஸ்டிக் ஹெலிகாப்டரைப் பிடுங்கிக் கீழே வைத்தாள்.
சொன்னது காதுல வுழுந்திச்சா... இல்லியா? உங்கப்பா கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்...
கார்த்திக், வடிவை நிமிர்ந்து பார்த்தான். ம்... சித்தப்பாவுக்கு அப்புறம் அத்தைக்கு எல்லாம் ஊர்லே நடந்துச்சே... வாழைமரம்லாம் கட்டி பாட்டெல்லாம் வச்சிருந்தாங்களே... நந்து கூட மோட்டார் பைக் பொம்மையை உடைச்சிட்டு அழுதானே, அந்த மாதிரி கல்யாணமா... ஹைய்யா... ஜாலியா இருக்கும். நெறய்ய பேரு வருவாங்க... காசு தருவாங்க... எதுனா வாங்கலாம்...
கார்த்திக், தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்திருந்த பிளாஸ்டிக் வில்லைகளை ஒன்றுடன் ஒன்றைப் பொருத்திக் கட்டிடம் கட்டும் முயற்சியில் இறங்கினான்.
மக்குப் பயலே... ஜாலி என்னடா ஜாலி... உங்கப்பா எவளோ ஒருத்தியைக் கட்டிகிட்டு வந்தா அதனாலே உனக்குக் கஷ்டம்தான் வரும்...
வடிவு, கார்த்திக்கைச் சுற்றியிருந்த பொம்மைகளை நகர்த்தி வைத்துவிட்டு அவன் அருகே உட்கார்ந்து கொண்டாள்.
துறுதுறுவென இங்கும் அங்குமாக ஓடித்திரியும் முயல் குட்டி சட்டென்று நின்று காதுகள் குத்திடப் பார்ப்பது போல பிளாஸ்டிக் வில்லைகளை ஒன்றுடன் ஒன்றாகப் பொருத்திக்கொண்டிருந்த கார்த்திக் அதை அப்படியே நிறுத்திவிட்டுத் தன் பெரியம்மா சொல்வதைக் கவனித்தான். கருநாவல் பழமாக மின்னும் கருவிழிகள் வெண்பளிங்கு விழிப்பரப்பில் பெரிதாகப் புரண்டு குழப்பமும் ஆச்சரியமும் கலந்த அவனுடைய மன உணர்வுகளைப் பிரதிபலித்தன.
யாரையும் ஒரே பார்வையில் கவர்ந்து விடக்கூடிய முகக் களை கார்த்திக்குக்கு வாய்த்திருந்தது. அதற்குக் காரணம் பஞ்சின் தன்மையும் பூவின் மென்மையும் காட்டும் அவனுடைய பூரித்த கன்னங்களா? சுழலும் கருவண்டாகப் புரளும் அவனுடைய கருவிழிகளா? நெற்றி வரை சரிந்து புரளும் தலை கொள்ளாத முடியா? கன்னக் குழிவா? சிரித்த பாவனையாக விரியும் செவ்விதழ்களா? செதுக்கிய மோவாயா? பூசினாற்போல அமைந்த உடல் கட்டா? உடம்பு முழுக்கப் பொங்கி வழியும் குறும்பும் துறுதுறுப்பும் கலந்த குழந்தைத்தனமா? அல்லது இது எல்லாமே சேர்ந்த கலவையோ என எதோ ஒன்று அவனை கவனிக்கத்தக்க சிறுவனாக ஆக்கி வைத்திருந்தது.
வடிவு சொன்ன விஷயத்தைப்பற்றிக் கார்த்திக் ஒரு நிமிஷம் யோசித்தான். அப்பா, கல்யாணம் செய்துகொண்டால் அவனுக்கு எதற்கு கஷ்டம் வர வேண்டும்? வடிவின் பேச்சில் கார்த்திக்குக்கு நம்பிக்கையில்லை. அவனுக்குப் பொதுவாக வடிவைப் பற்றி பெரிய மரியாதையோ அன்போ இல்லை. அதற்கான காரணங்களும் இருந்தன. அவனுடைய தோழர்களுள் யாரிடமும் இல்லாத அவனுடைய பெருமைக்குரிய நீளத்துப்பாக்கியை கால்தவறி மிதித்து அவள் ஒரு தடவை உடைத்துவிட்டிருந்தாள். அவனுடைய விளையாட்டுத் தோழர்கள் தோழிகள் அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை, அவள், பையா என்று வேறு குறிப்பிடுவாள். கார்த்திக், தான் அவ்வாறு அழைக்கப்படுவதை மிகவும் வெறுத்தான். அவன் இப்போது மூன்றாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அதனால் அவன் சிறு பையனாக நடத்தப்படக் கூடாது என்பதையும் அவள் எப்படிப் புரிந்து கொள்ளாமல் இருந்தாள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. போதாக் குறைக்கு அவனுடைய அப்பா அவனுக்கு வாங்கிக் கொடுத்து இருந்த மோனாபொலியை விளையாட சரியான துணை அவனுக்குக் கிடைக்காமல் போயிருந்த ஒரு தருணத்தில் கார்த்திக் அவளை விளையாடத் துணைக்கு அழைத்தான். முதலாவதாக அவள் அவனுடன் விளையாட ஆர்வத்துடன் முன் வரவில்லை இரண்டாவதாக, அவன் எதிர்பார்த்தபடி அவளால் அந்த விளையாட்டைப் புரிந்து கொண்டு விளையாடவும் முடியவில்லை.
இவைதவிர அவன் வடிவை ஒரு பொருட்டாகக் கருதாததற்கு வேறு பல காரணங்களும் இருந்தன. இருந்தாலும் பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவனுடைய அப்பாவும், அவனுடைய வகுப்பு ஆசிரியையும் பலமுறைகள் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்ததால் அவன், வடிவிடம் மிகுந்த மரியாதையுடனே நடந்துகொண்டாக வேண்டியிருந்தது.
ஆகவே கார்த்திக், தன் பெரியம்மாவைப் பற்றிய தன் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லாமல், கஷ்டமா? அப்பா கல்யாணம் பண்ணிகிட்டா எனக்கு அதுல என்ன கஷ்டம்
என்று தனக்குத்தானே பேசிக்கொள்பவனைப் போலக் கேட்டான்.
வடிவு, அவனை வாரியெடுத்துத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டாள். அவளுடைய திடீர்ப் பரிவில் திகைத்துப் போன கார்த்திக்குக்கு அவள் விழிகளில் நீர் மின்னிப் பளபளப்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு அவனுடைய பாதத்தை வடிவு அழுத்திப்பிடித்திருந்த விதத்தில் கீழே கிடந்த பிளாஸ்டிக் வில்லை ஒன்று எசகுபிசகாக அவன் குதிகாலை உறுத்தியது.
உங்கப்பாவைக் கட்டிகிட்டு வர்றவ உன்னைக் கொடுமைப்படுத்துவா...
கொடுமைப்படுத்தறதா... அப்படின்னா...
"அப்படின்னா... உனக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லுவா...’’
அப்படின்னா, என்னைத் தினந்தினமும் ஸ்கூலுக்குப் போ போன்னு சொல்லுவாங்களா...? தினமும் வூட்ல படிபடின்னு சொல்லுவாங்களா...?
வடிவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கார்த்திக் அவளுடைய மடியிலிருந்து நழுவிக்கொண்டு கீழே இறங்கினான். அவளுடைய முகத்தையே பார்த்தபடி பதிலுக்காகக் காத்திருந்தான்.
ம்... அது மட்டுமில்ல...
வடிவு இழுத்தாற் போலத் தயங்கினாள்.
அப்ப... என்னோட பொம்மை, கார், துப்பாக்கி, ஹெலிகாப்டர் எல்லாத்தையும் அவங்களே எடுத்துக்குவாங்களா?
கார்த்திக்கின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவனுடைய தோழன் சுதாகரின் வீட்டில் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. கார்த்திக்கைப் போல எல்லா தினங்களிலும் விளையாட முடியாதபடி சுதாகரின் அம்மா சுதாகருடைய விளையாட்டுச் சாமான்களைப் பெரிய மரப்பெட்டிக்குள் போட்டுப் பூட்டி விடுவாள். அவனுக்குச் சேர்ந்தாற்போல விடுமுறை வரும் சமயங்களில் மட்டும்தான் அந்தப் பெட்டியைத் திறந்து பொம்மைகளை எடுத்து அவனை விளையாட அனுமதிப்பாள். கார்த்திக்குக்கு இது தெரியும். "இந்த அம்மாக்களே மோசம்! அதென்ன கணக்கு அது. பள்ளிக்கூடத்து விடுமுறையிருக்கும் போது மட்டும் விளையாடுவது? விளையாடுபவனுக்குத் தோணும் போது தானே விளையாட முடியும்?’’ என்று ஒரு எண்ணம் கார்த்திக்கின் மனதில் குறுக்கே ஒரு கணம் ஓடியது.
ம்... உனக்கு எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. ஆனா, உங்கப்பா கல்யாணம் பண்ணிகிட்டா உனக்கு ரொம்பக் கொடுமையெல்லாம் நடக்கும். நீ அதைப் புரிஞ்சிகிட்டு ஜாக்கிரதையா நடந்துக்கணும். எவளோ ஒருத்தியைக் கட்டிகிட்டு வந்து அவளைப் போய் உனக்கு அம்மாவாக்கிடணும்னு உங்க அப்பாவும் பாட்டியும் நெனைக்கிறாங்களே... இதுவே ஒரு கொடுமைதானே...
கார்த்திக்குக்கு எதுவோ புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.
அவனுக்கு அவனுடைய அம்மாவைத் தெரியும். சந்தன மாலையும் ஜரிகை மாலையும் போட்ட பெரிய புகைப்படத்துக்குள் எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். இரவு நேரங்களில் அந்த போட்டோவின் உச்சியில் வண்ணவண்ணமாக கண்சிமிட்டும் மின்விளக்குகள் இருந்தன. அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும். அவளுடைய படத்தின் மேல் மின்னும் விளக்குகளையும் பிடிக்கும். அவள் ஒரு சாலை விபத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போயிருந்தாள். அவள் பெயர் நளினி. அப்பா, அந்தப் படத்துக்கு முன்னால் தினமும் ஊதுபத்தி வைப்பார். சரம்சரமாக மல்லிகைப் பூவையாவது, பெரிய பூ மாலைகளையாவது அடிக்கடி போடுவார். அந்த மாதிரி சமயங்களில் அறை முழுவதும் மணக்கும். கார்த்திக்குக்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவன், அப்பாவுடன் வெளியே போகும் போதெல்லாம் எந்தப் பூக்காரி எதிர்ப்பட்டாலும், அப்பா... அப்பா... பூ வாங்குப்பா, அம்மாவுக்குப் போடலாம்
என்று கேட்பான். பூ மாலைகள் விற்கிற கடைகள் கண்ணில் பட்டாலும் போதும் அப்படித்தான் மாலை வாங்காமல் வர மாட்டான்.
அவனுடைய அந்தக் கோரிக்கைக்கு அவனுடைய அப்பா வடிவேலு ஒரு நாளும் மறுப்புச் சொன்னதில்லை. ஆனால், ஒவ்வொரு தடவை அவன் அப்படிக் கேட்க்கும்போதும் வடிவேலுவின் கண்கள் நிறைந்து தளும்பும்.
ஏம்ப்பா... அம்மாவுக்குப் பூப் போட்டா நல்லாத்தானேப்பா இருக்குது. அதுக்குப்போய் ஏம்ப்பா அழுவறே
என்று கூட அவன் இரண்டொரு தடவைகள் கேட்டிருக்கிறான். வடிவேலு கண்களைத் துடைத்துக் கொள்வான்.
நளினி இறந்த பின்னால் அந்த வீட்டில் வடிவேலுவும் நளினியின் தம்பி வெங்கடேசனும், கார்த்திக்கும் மட்டுமே இருந்தார்கள்.
ஏன் மாமா... அம்மாவுக்கு பூ வாங்கறப்பவெல்லாம் அப்பா அழுவுது
என்று கார்த்திக் வெங்கடேசனிடமும் கேட்டிருக்கிறான். வெங்கடேசனும் பதில் எதுவும் சொல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பதைக் கண்ட கார்த்திக் இப்போதெல்லாம் அவனிடமும் கூட அந்தக் கேள்வியைக் கேட்பதை விட்டு விட்டான்.
வடிவேலு திருமணம் செய்து கொண்டால் அதன் மூலம் அவனுக்கு ஒரு அம்மா வருவாள். கார்த்திக்குக்கு அது பிடித்துத்தான் இருந்தது. ஏனென்றால் அவனுடைய தோழர்கள் கூட்டத்தில் அவன் ஒருவனுக்குத்தான் அம்மா இல்லை.
மேலும் அவனுடைய தோழர்கள் அடிக்கடி தங்கள் அம்மாமார்களைப் பற்றிப் பேசியபோது கார்த்திக் மட்டும் பேச்சற்றவனாக அமைதி காக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் அம்மாக்கள் அடிப்பதும், கண்டிப்பதும், திட்டுவதும் போன்ற பயங்கரமான செயல்களையே செய்தார்கள் என்றாலும் ஒரு அம்மா இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று அவனுக்குப் பட்டது.
நீண்ட யோசனைக்குப் பிறகு, அம்மா என்று ஒருத்தரு இருந்தால் நல்லாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன் பெரியம்மா
என்றான் கார்த்திக்.
வடிவுக்கு எரிச்சல் பொங்கியது. நீ சொல்றது சரிதான். ஆனா ஒருத்தருக்கு ஒரு அம்மாதான் இருக்க முடியும். சும்மா சும்மா வர்ற அம்மாவாலே தொந்தரவு தான், தெரிஞ்சுக்க...
கார்த்திக், உதடுகள் இறுக, மறுபடி யோசிக்கலானான். பெரியம்மா சொல்வதும் சரி என்றே அவனுக்குப் பட்டது. அப்படியானால் அவனுக்குத் தொந்தரவு தருவது மாதிரியான ஒரு செயலை அப்பா எதற்காகச் செய்கிறார்?
இன்று இரவு அப்பா வருகிற வரை கண்விழித்துக் காத்திருந்து அவரிடம் இதைப்பற்றி கேட்டுவிட வேண்டும் என்று தனக்குள்ளாக முடிவு செய்து கொண்டான் காத்திக். வடிவேலுவின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தான்.
2
காலையில் கார்த்திக் கண் விழித்தபோது ஜன்னல் கண்ணாடிகளின் மேல் சூரியன் ஒளி பூசியிருந்தான். கழுத்தை மூடியிருந்த நீளப் போர்வையை இடுப்புவரை கார்த்திக் தழைத்து விட்டுக்கொண்டான். கழுத்து மடிப்புகளில் வேர்வை கசகசத்தது. தலையை மட்டும் உயர்த்திக் கழுத்தை வலதுபுறமாக வளைத்து சுவரில் மாட்டியிருந்த அவனுடைய அம்மா நளினியின் பெரிய புகைப்படத்தைப் பார்த்தான். ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது. புத்தம் புதிய மல்லிகைச்சரம் இரட்டை மடிப்புகளாகப் படத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. புழுக்கமும் இளவெயிலின் வெளிச்சமும் மலர்களின் மணமும் ஊதுவத்தியின் சந்தனவாசனையும் காலைச் சூழலுக்கு இனிமை சேர்த்தன. கார்த்திக், கண்களை மூடி மூக்கைச் சுருக்கி, மலர்த்தி, மணம் சுமந்த அறையின் புழுக்கத்தை உறிஞ்சுபவன் போல பாவனை செய்தான். கண்களை அப்படியே மூடியபடி, அப்பா, அப்பா
என்று குரல் கொடுத்தான்.
முதல்நாள் மாலை அவனுடைய பெரியம்மா செளந்திரவடிவு அவனிடம் பேசிய விஷயங்களோ, இரவு எந்நேரமானாலும் அதைப் பற்றி அப்பாவிடம் விவரமாகக் கேட்டாக வேண்டும் என்று தான் செய்துகொண்ட தீர்மானமோ அவனுக்கு இப்போது மறந்தே போய் விட்டிருந்தது. மாறாக, எப்போதும் போல காலையில் எழுந்ததும் பள்ளிக்கூடம் போவதைப்பற்றியும் வீட்டுப்பாடம் எழுதாததைப் பற்றியும் பயமும் கவலையும் அவனைப் பிடித்து ஆட்டத்தொடங்கின.
என்ன... கார்த்திக் குட்டிக்கு... என்ன வேணுமாம் என் செல்லக் கன்னுக்குட்டிக்கு என்ன வேணுமாம்
என்றபடி கார்த்திக்கின் அருகில் வந்து உட்கார்ந்தான் வடிவேலு. அப்போதுதான் குளித்திருந்ததால் அவனுடைய உடலிலிருந்து கிளம்பிய குளியல் சோப்பின் மணம், லேசான பவுடர் மணத்துடனும், ஹேர் ஆயில் மணத்துடனும், நெற்றிக்கு இட்டுக் கொண்டிருந்த பழனி விபூதியின் மணத்துடனும், கலந்து ஒரு புதுவித மணத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கார்த்திக், தலையணையிலிருந்து வடிவேலுவின் மடியை நோக்கிப் பாய்ந்தான். கன்றுக்குட்டி தாய் மடியை முட்டி மோதுவது போல வடிவேலுவின் அடிவயிற்றிலும் மார்பிலும் தோளிலும் தலையினால் முட்டி மோதி விட்டு மடியில் தலையைப் புதைத்துக் கொண்டான்.
இன்னிக்கு ஸ்கூல் உண்டாப்பா?
மடியிலிருந்து தலையை உயர்த்தாமலே ஒரு கன்னத்தை வடிவேலுவின் தொடையில் பதித்தவாறு வலது கண்ணை மட்டும் உயர்த்தி வடிவேலுவின் முகத்தைப் பார்த்தான் கார்த்திக்.
அந்த ஒரு பார்வை வடிவேலுவின் இதயத்துக்குள் ஆயிரமாயிரம் மலர்களைப் புஷ்பிக்கச் செய்தது என்பதை வடிவேலுவின் இதழ்களில் விளைந்த புன்னகை அடையாளம் காட்டியது. மகனின் கன்னங்களை நோகாமல் நிமிண்டி முத்தமிட்டபடி, இல்லப்பா, இன்னிக்கு ஸ்கூல் இல்ல.
பிடியிலிருந்து விடுபட்ட ஸ்பிரிங் நிமிர்வது போல படீரென்று எழுந்து உட்கார்ந்தான் கார்த்திக்.
ஹைய்யா
என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினான். பிறகு, நெற்றி சுருங்க வடிவேலுவைப் பார்த்து, நிஜமா ஸ்கூல் இல்லியாப்பா. ஏன்
என்று சந்தேகப்படுபவன் போலவும், வடிவேலு சொல்வதை உறுதி செய்துகொள்பவனைப் போலவும் கேட்டான்.
வடிவேலுவுக்கு சிரிப்பு வந்தது.
இன்னிக்கு இந்தியாவும் வெஸ்ட் இன்டீசும் கிரிக்கெட் ஆடறாங்க. அதனால லீவு...
ஓ... ஹோ...
என்று சகலமும் புரிந்த பாவனையில் குரலை இழுத்தான் கார்த்திக். அடுத்த கணம், வெஸ்ட் இன்டிஸ்...
என்று உரக்க இரண்டு தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். வெஸ்ட் இண்டீஸ்னா என்னப்பா?
ம்... அது ஒரு நாடு...
"நாடுன்னா...’’
நாடுன்னா நாடுதான். இந்தியா மாதிரி... இந்தியா எப்படி நம்ப நாடோ அது மாதிரி வெஸ்ட் இண்டீஸ் அவங்க நாடு.
இந்தியா எப்படிப்பா நம்ப நாடாச்சி...
அதுவா... அது வந்து... நாம்ப இங்கதானே பொறந்துருக்கோம். அதனால...
அப்ப, நந்து, பெரியம்மா, கல்பனா டீச்சர், பாக்கம் பாட்டி எல்லோருக்கும் இந்தியாதான் சொந்த நாடு. அப்படித்தானேப்பா?
ஆமா...
அப்ப, அந்த வெஸ்ட் இண்டீஸ் டீம் காரங்கள்ளாம் இங்க பொறந்திருந்தா இந்தியா அவங்க நாடு, அப்படித் தானே...?
ஆமா, அப்படித்தான்.
அதேமாதிரி இந்தியா டீம்காரங்க அங்க பொறந்திருந்தா அவங்க வெஸ்ட் இன்டீசாயிட்டிருப்பாங்க, இல்லப்பா...?
வடிவேலு பதில் சொல்லவில்லை. ஏற்கெனவே சொன்ன பதிலே போதும் என்பது போலப் பேசாதிருந்தான்.
அப்பா... ஏம்ப்பா இந்த வெஸ்ட் இண்டீஸ் தினமும் தினமும் இங்கு வந்து வெளையாட மாட்டேங்கறாங்க...
"விடிஞ்சது போ. அப்பப்ப கிரிக்கெட் ஆடி அதுக்காக லீவு விட்டு, கமெண்டரி கேக்கறேன்னு ஒவ்வொருத்தனும் பைத்தியக்காரனுங்களாட்டம் காதுமேலயே ரேடியோவை ஒட்டி வச்சிக்கிட்டுத் திரியறதும், சோறுதண்ணி