Lakshmi Ramananin Short Stories
()
About this ebook
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.
விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.
இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.
கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.
இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Read more from Lakshmi Ramanan
Anaiya Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsVanathile Pootha Vanna Nila Rating: 5 out of 5 stars5/5Merke Veesum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSakunthala Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsGanga Nathi Theerathile Rating: 0 out of 5 stars0 ratingsMarainthirukkum Marmam Rating: 0 out of 5 stars0 ratingsAathma Samarpanam Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Yutham Rating: 0 out of 5 stars0 ratingsTherinthu Kollalame! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Endrendrum Neethane…. Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Alaigal... Rating: 0 out of 5 stars0 ratingsMeera Pallikoodam Pogiraal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Menmaiyanavai Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therintha Manam Rating: 0 out of 5 stars0 ratingsAnusha Appadithan! Rating: 0 out of 5 stars0 ratingsThendral Thappa Mudiyathu Rating: 0 out of 5 stars0 ratingsSittukuruvi Rating: 0 out of 5 stars0 ratingsVaazhviyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsBrahmopadesham Rating: 0 out of 5 stars0 ratingsEzhamal Vandha Varam Rating: 5 out of 5 stars5/5Meendum Samyukthai Rating: 0 out of 5 stars0 ratingsMella Thiranthathu Vazhi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Lakshmi Ramananin Short Stories
Related ebooks
Mudhal Kaadhal Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Rating: 5 out of 5 stars5/5Nee Rating: 5 out of 5 stars5/5Engiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsChinnamma Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsEn Veettu Pookkal Rating: 5 out of 5 stars5/5Meendum Arambikkalam Rating: 5 out of 5 stars5/5Piragu Kaadhal Sei Rating: 0 out of 5 stars0 ratingsNee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Vayathu 17 Rating: 3 out of 5 stars3/5Puthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVillan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsOviyam Rating: 5 out of 5 stars5/5Thalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratingsAamam / Illai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsIndiargal Kaadhalikkirargal! Rating: 5 out of 5 stars5/5Vetri Allathu Vetri Rating: 0 out of 5 stars0 ratingsAdam Yeval Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Vetri Kodu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Lakshmi Ramananin Short Stories
0 ratings0 reviews
Book preview
Lakshmi Ramananin Short Stories - Lakshmi Ramanan
http://www.pustaka.co.in
லக்ஷ்மி ரமணனின் சிறுகதைகள்
Lakshmi Ramananin Short Stories
Author:
லக்ஷ்மி ரமணன்
Lakshmi Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
படகுகள்
ஜெய்ப்பூர் பிள்ளையார்
அம்மா ஒரு பஞ்சாங்கம்
தியாகு, ஒழுங்கா இருக்கியா?
பாசமே. பிரச்சினையானால்...
ஸீத்ரூ புடவை
தப்ப முடியாதவர்கள்
ஒரு மரணத்தின் விலை
பெண்ணும் பிள்ளையும்
பர்சாத்தியில் ஒரு பிரம்மச்சாரி
உதட்டளவில்...
லயிப்பு
வித்யாவஸ்தை!
பிறப்பு
பயம்
சப்தஸ்வரங்கள்
பெண்ணும் தெய்வமும்
ராம் லீலா
ஹேமா, உன்னை மாற்ற முடியாது!
ஏழாவது முகம்
பிரும்மோபதேசம்
பார்ட்டி
உலகம் பெரிது!
மரம்
பிறந்த மண்
சுமை
ஒரு குற்றவாளியின் மனம் நீதிமன்றமாகிறது!
ஓர் இரவு முடிகிறது
எதிரொலியான சில சப்தங்கள்
இவள் இன்றைய மங்கை
சுதந்திரப் பறவை
ஒரு பெண் தெய்வமாகிறாள்!
உறவைத் தேடி...
ஆசை
கிளிஞ்சல்
சாதனை
மல்லிகைச் சரம்
நீரஜா சொன்னது நிஜந்தானா?
கிழக்கும் மேற்கும்
பிறந்த வீட்டுப் பாசம்
அது ஒரு காதல் காலம்
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை!
தாய்
ராஜேஷ், பெண் பார்க்கிறான்!
இமேஜ்
படகுகள்
அறைக் கதவை யாரோ தட்டினார்கள்.
கோன்?
கம்பளிப் போர்வைக்குள்ளிருந்து முனகலாக வெளிவந்தது அரைத் தூக்கத்திலிருந்த ஆனந்தின் குரல்.
சாய லாயா ஹீம் ஷாப்!
சர்வரின் குரல்தான்.
ஆனந்த் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எட்டு முப்பத்தைந்து.
குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பளியை உதறிவிட்டு எழுந்து கதவைத் திறந்தான்.
"நமஸ்தே ஷாப்?' ட்ரேயை மேஜைமீது வைத்துவிட்டு,
கரம்பாணி வேணுமா?
என்றான் அவன்.
பத்து மணிக்குக் கொண்டு வா போதும்.
ப்ரேக் பாஸ்ட்.
ஸாடே நெள.
அச்சா.
'உன் பெயர் என்ன?"
பஹதூர் ஷாப்.
பெரிது பெரிதான பல்வரிசை அவனுக்கு, சிரித்தபொழுது மூக்கும் கண்களும் காணாமற் போயின.
தேநீர்க் கோப்பையைக் கையில் ஏந்தி ருசித்தவாறு முன் வராண்டாவில் நின்று கொண்டு இயற்கையின் எழிலை ரசித்தவாறு நின்றான் ஆனந்த்.
உயர்ந்து நின்ற மலைச் சிகரங்கள். அவற்றின் மடியில் ஆங்காங்கு தெரிந்த வீடுகள். கைக்கெட்டும் தூரத்தில் உலவிய மேகங்கள்.
'நைனி' ஏரியில் மிதந்து கொண்டிருந்த படகுகளை அவன் நின்றிருந்த இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது. சிறிதும் பெரிதுமாக அதில் பல ரகங்கள்.
சூரியனைக் கண்டே இரண்டு நாட்களாகி விட்டன. இன்னும் சிறிது நேரத்தில் மழை வரப்போகிறதற்கான அறிகுறிகள் தோன்றிப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
தற்செயலாகக் குனிந்தபொழுது கீழே தோட்டத்தில் நாற்காலிகளில் வயதான ஒரு பெரியவரும், இளமங்கை ஒருத்தியும் அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.
பெரியவர் வீக்லியினால் முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டிருந்தார். நரைத்துப் போன தலை. அவள் கையில் ஷிட்னி ஷெல்டன். இருபத்தைந்து வயது இருக்குமா? அவள் அவனுடைய கதாநாயகிமாதிரி வனப்பான தோற்றத்துடன் இருந்தாள்.
அவன் ஓர் எழுத்தாளன். தில்லி செகரட்டேரியட்டின் மேஜைக்கருகில் கழித்த ஒரு நாளின் பொழுதைத் தவிர. மற்ற நேரத்தைக் கழிக்க எழுத்தின் துணையை நாடுபவன் அவன்.
தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். நாற்காலியில் நெளிந்தவள் சுற்றிலும் பார்த்தாள்,
ஆனந்த் சட்டென்று பின் வாங்கி அறைக்குள் புகுந்து கொண்டான். கோப்பையில் அவன் டீ, குடிப்பதற்கு முன்னரே ஆறி விட்டிருந்தது. ஜக்கிலிருந்து இன்னும் கொஞ்சம் ஊற்றி அதை நிரப்பிக் கொண்டான்.
மேஜை மீது முதல் நாள், அவன் வெகுநேரம் கண்விழித்து நள்ளிரவு வரை எழுதிக் கொண்டிருந்த காகிதக் கத்தைச் சிதறிக் கிடந்தது. அதில் அவன் கதாநாயகி சுபாஷிணி வீட்டைவிட்டு வெளியேறப் பெட்டியுடன் தயாராக நின்று கொண்டிருந்தாள். மேலே எழுதாமல் அவன் தூங்கிவிட்டதால் கதையும் அத்துடன் நின்று போயிருந்தது.
அறைவாசலில் நிழல் தட்டிற்று. பகதூர் காலி கோப்பைகளை எடுத்துப் போக வந்தான்.
கீழே தோட்டத்தில் யார் புதிதாக உட்கார்ந்திருக்கிறார்கள். நேற்றுப் பார்க்கவில்லையே
என்று விசாரித்தான் ஆனந்த்.
அவன் அசட்டுச் சிரிப்புடன், கோன்… லட்கீ? எனக்கே தெரியாது. பாப் பேட்டி (அப்பா பெண்) போல் இருக்கு. நேற்று இரவு வந்தார்கள். உங்கள் மதராஸிதான்
என்றான்.
மதராஸி என்றதும் ஆனந்துக்குச் சுறுசுறுப்பு பிறந்தது. யாராக இருந்தாலும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
ஜல்தி, கரம் பானி கொண்டு வா, நான் குளிக்க வேண்டும்.
ஆனந்த் குளித்துக் காலை உணவை முடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தபொழுது வெளியே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தோட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்களைக் காணோம். நாற்காலிகளும் மறைந்து விட்டிருந்தன.
"பேட்லக். இன்னும் கொஞ்சம் முன்னால் வந்திருக்க வேண்டும்.
ஹோட்டல் ரிசப்ஷனில் போய் அவன் அன்றைய செய்தித் தாள் வந்துவிட்டதா என்று விசாரித்தான்.
மலை அடிவாரத்தில் உள்ள காத்கோதாமிலிருந்து நைனிதால் வரும் வழியெல்லாம் ஒரே மழை என்றும், முதல் நாள் பேப்பரே இன்னும் வந்து சேரவில்லை என்றும் மானேஜர் கையை விரித்தார்.
எதிரில் ரூம் லிஸ்ட் போர்டு தொங்கியது. நாசூக்காகப் பார்வையிட்டான். கீழ் வரிசை அறை எண்களில் ஒன்பதாம் நம்பருக்கு அடியில் ராவ் ஆர். கே. என்று எழுதப்பட்டிருந்தது.
நம்பர் ஒன்பது எங்கே இருக்கிறது? ஹோட்டலையே ஒரு முறை வலம் வந்து தேடினான் அவன். முன்வராண்டா பக்கவாட்டில் வளையுமிடத்திலிருந்தது அந்த அறை. கதவு மூடியிருந்தது.
லேசாகத் தட்டித் திறக்கச் சொல்லித் தன்னை அறிமுகம் செய்து கொள்ளக் கூச்சமாக இருந்தது அவனுக்கு. மழையைப் பொருட்படுத்தாமல் வெளியே இறங்கி ஏரியை நோக்கி நடந்தான்.
தனக்கு இத்தனை தூரம் மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பதைக் கண்டு அவனுக்கே வியப்பாக இருந்தது. இரண்டு நாட்களாக அவன் அந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான். அங்கிருந்த மற்ற இருபத்தினான்கு அறைகளில் யார் இருந்தார்கள் என்பதை விசாரித்து அறிந்து கொள்ள அவன் அலட்டிக் கொள்ளவில்லை. இன்று ஒன்பதாம் நம்பரில் மதராஸி இருக்கிறார் என்றதுமே அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறான்.
'ராவ்' என்றால் எந்த ஊர்க்காரர்? மைசூரா, ஆந்திராவா, இல்லை மராட்டியா? ஏரிக்கரையில் வந்து நின்று கொண்டான். அதில் பவனி வந்த படகுகளை உற்றுப் பார்த்தவண்ணம் நின்றான்.
பக்கவாட்டில் குதிரைச் சவாரிக்காகக் காத்து நிற்கும் சிறுவர்களின் கூட்டம், அவர்களைச் சுற்றி மொய்க்கும் ஐஸ்க்ரீம், வேர்க்கடலை வியாபாரிகள்.
ஒரு பாக்கெட் வறுத்த வேர்க்கடலையை வாங்கிக் கொண்டு மழைக்காகக் கட்டப்பட்டிருந்த தடுப்பில் வந்து நின்று கொண்டான். ஏற்கனவே கூட்டம் நிறைந்து வழிந்த அது அடைசலாக இருந்தது.
திடீரென்று தமிழ்க்குரல் கேட்டது.
எல்லாம் உன்னாலே வந்தது. இங்கே வந்தது தப்பா போச்சு. மழை சனியன் தலைகாட்ட முடியலே வெளியிலே.
திரும்பிப் பார்த்தான்.
அந்தக் கிழவரும் இளம் பெண்ணும்தான்!
ஆனந்தின் முகம் சட்டென்று மலர்ந்தது.
"நமஸ்காரம். நீங்க மிஸ்டர் ராவ்தானே, நான் ஆனந்த். நீங்க தங்கி இருக்கிற அதே சவாய் ஹோட்டல்லே மாடியிலே இருக்கேன். இன்னிக்கு காலையிலே ஹோட்டல் லானிலே உங்களைப் பார்த்தேன். பெயரை ரிஸப்ஷனில் இருந்த போர்டில் பார்த்தேன். '
அவன் மகிழ்ச்சியுடன் வார்த்தைகளை அவிழ்த்துக் கொட்டினான்.
ஈஸிட். கிளாட்டு மீட் யூ.
அவர் குரலில் கொஞ்சம்கூட சந்தோஷம் இருக்கவில்லை!
அந்தப் பெண்ணை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவள் பக்கம் திரும்பினான் ஆனந்த். அவள் அவன் பார்வையைத் தவிர்க்க விரும்புகிறவளைப் போல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படி அவள் கவனத்தைக் கவருவது?
இமைப் பொழுதில் யோசனை தோன்றிற்று. கையிலிருந்த பொட்டலத்தை அவள் முகத்துக்கு எதிரில் உயர்த்தி நீட்டி, சாப்பிடுகிறீர்களா?
என்றான் அவன்.
நோ, தாங்க்ஸ்.
அவள் முகம் லேசாகச் சிவந்தது. அவள் கிழவரைப் பார்த்த பார்வையில் பயம் கலந்திருந்தது.
அவன் அன்று காலையில் கீழே உட்கார்ந்திருந்தபோது பார்த்ததைவிட அருகில் இன்னும் அழகாக இருந்தாள். கண்களில் அந்த மருட்சி... பயம். எதற்காக?
கிழவர் ஆனந்தை முறைத்துப் பார்த்தார்.
அவன் அதைப் பொருட்படுத்தாமல், என் பெயர் ஆனந்த். நீங்கள்?
என்றான்.
பதில் சொன்னாலொழிய விடமாட்டேன் என்கிற பிடிவாதம் அவன் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும்.
சர்மிஷ்டா
அவள் தயக்கத்துடன் கிழவரைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.
அடேடே... நான் நினைத்தமாதிரிப் பெயராகவே சொல்லுகிறீர்கள்
அவள் அவனுடன் பேச ஆசைப்பட்டவள் போலவும் இருந்தது. கிழவரின் புலிப் பார்வைக்குப் பயந்து தயங்குகிறாளோ?
வருகிறீர்களா போட்டிங் போகலாம். ஹில் ஸ்டேஷன்னா இப்படித்தான் மழை தூறிண்டே இருக்கும். அதை எல்லாம் மைண்ட் பண்ணக் கூடாது. அப்புறம் எதையுமே ரசிக்க முடியாது.
கையைப் பிடித்து இழுக்காத குறையாகப் பெரியவரைப் படகு வரை அழைத்துப் போய் அதில் அவரை ஏறவும் வைத்து விட்டான் அவன். சர்மிஷ்டாவும் ஏறி உட்கார்ந்தாள். அவன் கட்டணத்தைச் செலுத்தி சீட்டு வாங்கி வந்த பின்பிரயாணம் துவங்கியது.
ஏரியை வளைத்து வட்டமிட்டுக் கொண்டது போன்ற மலைத் தொடர்கள். ஆங்காங்கு வகிடுகளாகப் பிரியும் பாதைகள் 'ஆஹா என்ன அழகு!" இயற்கையை வாய்விட்டே ரசித்தான் அவன்.
ஆமாம். இமயமலை ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு அழகு காஷ்மீரில்.
முதல் முறையாக உற்சாகத்துடன் பேசமுற்பட்ட சர்மிஷ்டாவைக் கிழம் சாடியது.
இது இமயமலை இல்லை. குமாவ் ஹில்ஸ். தெரியாத விஷயங்களைப்பற்றிப் பேசாமல் இரு, தத்துப் பித்தென்று உளறி உன் அறியாமையை வெளிப்படுத்திக் கொள்ளாதே.
ஆங்கிலத்தில் ராவ் பொரிந்தார். அவள் முகம் வாடி மெளனியாகி விட்டாள். திரும்பும் வரை வாயையே திறக்கவில்லை.
படகுப் பிரயாணம் முடிந்து மூவரும் ஹோட்டலுக்குத் திரும்பினார்கள். சர்மிஷ்டா அப்போது அறைக்குள் அடைந்து கொண்டவள் தான். அதன்பின் அவன் கண்களில் படவே இல்லை.
மாலை நேரத்தில் ராவ் மட்டும் வெளியே வராந்தாவில் உலவிக் கொண்டிருந்தார். மழை விட்டபாடில்லை.
எங்கே உங்கள் மகளைக் காணவில்லை?
ஆனந்த் கேட்டான்.
யார்...? ஓ சர்மிஷ்டாவா? அவளுக்கு உடம்பு சரியில்லை.
அடேடே! மழையில் இன்று காலையில் நனைந்தது ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கு. மருந்து ஏதாவது?
ஷீ ஹாஸ் டேகன். தாங்க்ஸ்.
நாடகத்தில் பாதி வசனத்துக்கு நடுவில் திரை இழுத்துவிட்டமாதிரி அவர் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.
சரியான...
கிழவரைத் திட்ட வார்த்தை கிடைக்காமல் திண்டாடிவிட்டுத் தன் அறைக்குப் போய்ச் சேர்ந்தான் ஆனந்த்.
பொழுது விடிந்ததும் விடியாததுமாகப் பகதூர் வந்து எழுப்பினான். ஷார்... ஷார்...
'ச்... என்னடா?" ஆனந்த் அலுப்புடன் கதவைத் திறந்தான்.
அந்த நெள நம்பர் லட்சியும், ஷாப்பும் ஊருக்குப் போகிறாங்க. உங்க தோஷ்டாச்சேன்னு சொன்னேன்.
அப்படியா?
ஆனந்த் மனதில் படர்ந்த புரியாத வெறுமையுடன் வராந்தா சுவரின்மீது சாய்ந்து நின்று கீழே வெறித்துப் பார்த்தான்.
ஒரு நிமிஷம்.
பின்னாலிருந்து மென்மைக் குரல். அவன் அறைக்குள் சர்மிஷ்டா நின்றிருந்ததைக் கண்டதும் ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது.
நீங்கள் பிரபல எழுத்தாளர் ஆனந்தா?
ஆ... ஆமாம்.
பகதூர் சொன்னான். நாங்கள் கிளம்புகிறோம்.
கேள்விப்பட்டேன். இத்தனை சீக்கிரமாகவா? நேற்றுதானே வந்தீர்கள்?
நேற்று மாலை பெரியவரிடம் என்னைக் குறிப்பிட்டு 'உங்கள் பெண் எங்கே?' என்று கேட்டீர்களா?
ஆமாம் ஏன்... அதிலென்ன தப்பு?
அங்கேதான் தப்பே ஆரம்பம்!
'புரியவில்லை."
அந்தத் தப்பை நீங்கள் மட்டுமல்ல, உலகமே செய்கிறது. உலகத்துக்குப் புரிய வைப்பது என் வேலையில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆனால், உங்களுக்கு அது புரிய வேண்டும் என்று ஏனோ என் மனம் நினைக்கிறது. நான் அவர் மகளில்லை. மனைவியும் இல்லை. மனைவி மாதிரி என்று வேண்டுமானால் சொல்லுங்கள், பச்சையாகச் சொன்னால் நான் அவர் மிஸ்ட்ரஸ்... கீப்.
சர்மிஷ்டாவின் கண்களில் மளுக் என்று நீர் பொங்கியது.
வாட்?
அவள் வார்த்தை அவனை இடியாய்த் தாக்கியிருக்க வேண்டும்.
என் மேல் இரக்கமோ, பரிதாபமோ உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்று நான் இதைச் சொல்ல வரவில்லை. என்மீது உங்கள் இதயத்தின் மூலையில் பொறியாய் அன்பு தோன்றி அதனால் பெரிய எதிர்பார்ப்பு எதையும் நீங்கள் வளர்த்துக் கொண்டு விட்டு பின்னால் ஏமாற்றமடையக் கூடாதே என்று முதலே உண்மையைச் சொல்ல வந்தேன்.
….
சந்தேகம் அவரைக் கொல்வது இருக்கட்டும். அதனால் அவர் என்னை வதைக்கிறார். நேற்று நான் உங்களுடன் பேசியதற்குத் தண்டனை.
சர்மிஷ்டா நீட்டிய கைகளில் கூரிய நகத்தின் பூறல்கள்.
அட மிருகமே சே!
ஆனந்தின் உதடுகள் கோபத்தில் துடித்தன.
'அவர் மனைவி உயிருடன்தான் இருக்கிறாள். படுத்த படுக்கை. என்னை அவர் கட்டுப்படுத்த மனைவி என்கிற உரிமை கிடையாது. தாலி என்கிற வேலியும் கிடையாது. ஆனால், அவருக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று எத்தனை உறுதி சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறார். கூலிப் படகுகள் சொந்தமாக முடியாது என்கிறார். சொந்த மனைவிகள் எத்தனை பேர் கணவனுக்குத் துரோகம் செய்வதில்லை. எந்த ரூலுக்கும் எக்ஸெப் ஷன்கள் உண்டு. அது அவருக்குப் புரியமாட்டேன் என்கிறது."
'ப்ரூட்... பாஸ்டர்ட்"
அவரைத் திட்டாதீர்கள். இல்லாத கொடுமையினால் என் போன்றவர்கள் சிலர் வழி தவறினாலும் தின்னுகிற உப்புக்குத் துரோகம் நினைக்க மாட்டோம். கூலிப் படகுகளானாலும் அவை தண்ணீரை விட்டுத் தரைக்கு இறங்கி ஓடி வந்து விடுவதில்லை. சாகிறவரை அவற்றின் வாழ்க்கை தண்ணீருடன்தான் சம்பந்தப் பட்டிருக்கிறது.
கிழவர், சர்மிஷ்டா
என்று தொண்டைக் கிழிய அலறுவது கேட்டது.
நான் கிளம்புகிறேன் பை.. பை.
அவள் புன்னகைக்க முயன்றுவிட்டு அவசரமாக வெளியேறினாள். ஆனந்த் எதிரே நிமிர்ந்து பார்த்தான். ஏரியில் படகுகள் மிதந்து கொண்டிருந்தன.
தலை எழுத்தினால் படகுகளாகிவிட்ட காரணத்தால் தண்ணீரை விட்டு வெளியே வரமுடியாமல் மிதந்த படகுகளோ அவை?
*****
ஜெய்ப்பூர் பிள்ளையார்
காலையில் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்கு வந்து அமர்ந்தபோது செல்லத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. சந்தனப் பொட்டுடன், கம்பீரமாக ஒளிவிடும் ஸ்படிகப் பிள்ளையாரைக் காணவில்லை.
எங்கே போயிருக்கும்? ஒருவேளை எலி ஏதாவது இழுத்துப் போய்விட்டதோ? இல்லை, அவள்தான் கவனப் பிசகாக நிர்மால்ய புஷ்பங்களை அகற்றித் திரட்டி எறிந்த குப்பையுடன் தவறுதலாகப் போய் விட்டதோ? ஆனால், தினமும் அவள் நன்றாகப் பார்த்துவிட்டுத்தானே கொண்டு போய்க் கொட்டுவாள்?
'ஆண்டவா, இது என்ன சோதனை?' என்று மனத்துள் நினைத்துக் கொண்டவளாய் செல்லம் குப்பைத் தொட்டியை அணுகினாள்.
பிள்ளையார் கிடைக்கவில்லை.
மனம் வேறு சிந்தனைகளில் லயிக்க மறுத்தது அன்று. வெள்ளிக்கிழமை அன்றைக்கென்று பிள்ளையார் காணாமல் போய்விட்டதே!
ஒருவேளை அவள் பேரன் மணி விளையாட எடுத்துக் கொண்டு விட்டானோ? மணி சில சமயங்களில் விளையாடுவதற்குப் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு ஓடி விடுவதுண்டு. கேட்கலாம் என்றாலோ பள்ளிக்குச் சென்று விட்டிருந்தான். மாலையில்தான் வருவான்.
என்ன தேடுகிறீர்கள் அம்மா.
நாட்டுப் பெண் வனிதா பரிவுடன் கேட்டாள்.
கண்களில் மல்கிய நீரை ரகசியமாக மறைத்துக் கொண்டு, ஒன்றுமில்லை
என்று தலையசைத்துவிட்டு மறுபடியும் தேட முயன்றாள்.
விளையாட்டுச் சாமான்கள் கூடையையும் கிளறிப் பார்த்தாயிற்று. இல்லை. செல்லத்துக்கு அந்தப் பிள்ளையார் காணாமற் போனது தங்கள் குடும்பத்துக்கு வரவிருக்கும் பெரிய ஆபத்துக்கு முன்னோடி என்று தோன்றியது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு செல்லத்தின் பெரிய பெண் ராஜத்தின் கணவனை ஜெய்ப்பூருக்கு மாற்றினார்கள். தன்னுடன் வந்து சில தினங்கள் அவசியம் தங்கிப் போக வேண்டும் என்று ராஜமும் மாப்பிள்ளையும் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்கள்.
ராஜத்துக்கு அடுத்தபடி சேகர் பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். அதை அடுத்து ரமா கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
அந்த ஆண்டு விடுமுறையின்போது எல்லோருமாக ஜெய்ப்பூர் போனார்கள். ஊர் சுற்றிப் பார்த்து ஒரு மாதம் இருந்து விட்டுத் திரும்புகையில் மற்ற அன்பளிப்புகளுடன் ராஜம் ஆசையாகத் தன் தாய்க்கு ஸ்படிகப் பிள்ளையார் விக்கிரகம் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தாள். ஓர் அங்குல உயரமும், முக்கால் அங்குல அகலமுமாக ஸ்படிகப் பிள்ளையார் சிறிய மூர்த்தியாக இருந்தாலும், விசுவரூபமெடுத்துச் செல்லத்தின் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டார்.
ஊர் திரும்பியதும் முதல் காரியமாக அவள் அதைப் பூஜையில் வைத்து விட்டாள். வீட்டுக்கு அந்த ஸ்படிகப் பிள்ளையார் வந்த வேளை நல்ல நேரமாக அமைந்தது.
சேகருக்குத் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை கிடைத்தது. எடுத்த எடுப்பில் ஆயிரம் ரூபாய் சம்பளம். ரமாவுக்குப் பெங்களூரில் நல்ல இடத்தில் கல்யாணமாயிற்று. சேகருக்குப் பெரிய இடத்துச் சம்பந்தம் வந்தது. வனிதாவின் தந்தை தில்லி உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார். திருமணமான ஓராண்டுக்குள்ளாகவே மணியும் பிறந்தான்.
அடுக்கடுக்காக இத்தனை நல்ல காரியங்கள் நிகழ்ந்த போதிலும் இடையில் கவலைப்படும்படியாக ஓரிரு சம்பவங்களும் நடக்காமல் இல்லை.
செல்லத்தின் கணவர் சர்மா டைபாய்டு வந்து படுத்த படுக் கையாகிவிட்டார். கூடவே இரத்த அழுத்தமும் அதிகமாகிச் சிரமப் பட்டார். அவர் நல்லபடியாகி பிழைத்து எழுந்ததும் பிள்ளையாரின் மகிமைதான் என்று அவள் நினைத்தாள். இத்தனை மகத்துவம் வாய்ந்த விக்கிரகம் காணவில்லை என்றால், அவள் பதறிப் போனதில் வியப்பில்லை.
சர்மா வாக் போய்விட்டுத் திரும்பிய போது செல்லம் இன்னும் அதைத் தேடிக் கொண்டிருந்தாள். பார்த்துவிட்டு, என்ன விஷயம்?
என்றார் அவர்.
ஸ்படிகப் பிள்ளையாரைக் காணோம்.
அவ்வளவுதானா?
எத்தனை சுலபமாகச் சொல்லிட்டீங்க. இத்தனை வருஷமா பூஜை பண்ணிண்டு வர விக்கிரகம் நம் குழந்தைகளுக்கு மேல் வைக்கிறதைவிட அது மேலே அதிகப் பாசம் வெச்சுட்டேன்.
குழந்தைகள் பிரிஞ்சு போயிடறமாதிரி அதுவும் போயிட்டதா நெனைச்சிக்க.
நீங்க என்ன சொல்றீங்க?
உங்கிட்டேயிருந்து எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது. நான்தான் என் பாஸ் இருக்கிறாரே அவர் அம்மாவுக்கு அதை எடுத்துண்டு போய் பிரசெண்ட் பண்ணிட்டேன். எப்போ ஒரு தடவை வாய் தவறி, ராஜம் ஸ்படிகப் பிள்ளையார் வாங்கித் தந்ததை அவகிட்டே சொல்லிட்டேன். அப்புறம் ஆபீஸ் விஷயமாய் ஃபைலை எடுத்துண்டு பாஸ் வீட்டுக்குப் போன போதெல்லாம் தனக்கும் ஜெய்ப்பூரிலேருந்து ஒரு ஸ்படிகப் பிள்ளையார் வரவழைச்சுத் தரும்படி அவள் நச்சரிச்சிண்டிருந்தார். ராஜத்துக்கு எழுதினேன். அவள் ஸ்படிக விக்கிரகம் இப்போதெல்லாம் கிடைக்கிறதே இல்லைன்னு பதில் எழுதிட்டா. சரி, நம்மகிட்டே இருக்கிறதையே ஜெய்ப்பூரிலேருந்து வரவழைச்சதாச் சொல்லிக் குடுத்தா என்னன்னு தோணித்து. மேலதிகாரிகளோட குடும்பத்தாரைத் திருப்தி பண்ணி வச்சிக்கிறவன்தான் எதிர்காலத்துலே முன்னேற முடியும்.
செல்லத்துக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
உங்க எதிர்காலமா? இன்னும் மூணு வருஷம் நீங்க வேலையிலே இருந்தா அதுவே அதிகம். வயசாயிடுத்து வீட்டுக்குப் போன்னு அனுப்பி வெச்சுடப் போறான். அதுக்காக ஆகி வந்த ஒரு விக்கிரகத்தை, பூஜையிலேருந்து எடுத்து அப்படித் தூக்கிக் கொடுப்பாளா?
போடி பைத்தியம்... அப்படி என்ன சொர்ண விக்கிரகமா? கல் பிள்ளையார்தானே! அதைக் குடுத்ததற்கு என்னவோ பிள்ளையைத் தூக்கிக் கொடுத்துட்டமாதிரி அலட்டிக்கிறியே.
அது கல்லா...
துக்கம் செல்லத்தின் தொண்டையை அடைத்தது.
தனக்கும் அந்த விக்கிரகத்துக்குமிடையேயிருந்த பந்தத்தை அவளால் வார்த்தைகளில் விளக்கிச் சொல்ல முடியவில்லை.
நீங்கள் பண்ணினது நல்லதுக்கில்லை. யாருக்கு என்ன ஆபத்து வரப் போகிறதோ...
என்று பொருமினாள்.
அன்று முழுவதும் அவள் சாப்பிடவும் இல்லை. தொடர்ந்து பல இரவுகள் தூங்கவுமில்லை.
ஒரு மாதம் ஓடிப் போயிற்று.
சில தினங்களாகவே சர்மாவின் ஆபீசில் வதந்திகள்.
கம்பெனியின் செலவினங்களைக் கட்டுப்படுத்த, ஆள் குறைப்பு நடத்தப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புக் கொடுக்க, ஐம்பது வயதுக்கு மேல் இருந்த ஸ்டாஃப்பைச் சேர்ந்தவர்களை எடுத்துவிடப் போவதாக வேறு சொல்லிக் கொண்டார்கள்.
சர்மாவின் காதிலும் இது விழாமல் இல்லை.
செல்லத்தின் மனதைக் கஷ்டப்படுத்திப் பிள்ளையாரைத் தூக்கிக் கொடுத்தது தவறோ?
அவள் எதிர்பார்த்த ஆபத்து அவர் வேலைக்கே வரப் போகிறதோ? என்றெல்லாம் எண்ணி அவர் சங்கடப்பட்டார். ஒரு நாள் மேலதிகாரி கூப்பிட்டனுப்பியபோது சர்மாவுக்கு வியர்த்து விட்டது. அவரை வேலையை விட்டு நீக்கப் போவதாகச் சொல்லத் தான் அவர் அழைக்கப்படுகிறார். வேலை போய்விட்டால் அவர் என்ன செய்வார்? அந்த வயதில் அவருக்கு வேறு யார் வேலை கொடுப்பார்கள்? விஷயம் தெரிந்தால் செல்லம் என்ன சொல்லப் போகிறாள். நிச்சயம் பிள்ளையாரைக் கொடுத்ததன் பலன்தான் அது என்று அவரைச் சாடப் போகிறாள் அவள். அவர் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான விடையல்லவா ஏற்பட்டுவிட்டது. ஒரு சிறிய தப்புக்கு அவருக்கு இத்தனை பெரிய தண்டனையா?
கலங்கிய மனத்துடன் தடுமாறியவண்ணம் அவர் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்.
அவரைக் கண்டதுமே, மிஸ்டர் சர்மா, நான் சொல்லப் போவதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது
என்று பீடிகை போட்டார் ஆபீசர். சர்மாவுக்குப் படபடப்பாக இருந்தது. பயத்தில் நா வறண்டது.
சொல்லுங்கள் சார்.
தனக்கே தன் குரல் கேட்கவில்லையே என்று சர்மா நினைத்துக் கொண்டார்.
சில நாட்களாகவே எனக்குப் போதாத காலம். என் பிள்ளை ராஜீவ் ஸ்கூட்டர் விபத்தில் மாட்டிக் கொண்டு கால் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாக இருக்கிறான். என் பெண் ரொம்ப நன்றாகப் படிக்கிறவள், கணக்கில் கோட்டைவிட்டுப் பெயிலாகி விட்டாள். இப்போது என் அம்மாவுக்கு உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். டயாபடிக் கோமாவில் இருக்கிறாள். நினைவு போய் விட்டு மறுபடி திரும்புகிறது. திரும்பவும் போய்விடுகிறது. இன்றோடு மூணு நாளாச்சு. அவள் ஏதோ அரற்றிக் கொண்டே இருந்ததை உன்னிப்பாகக் கவனித்தேன். அப்புறம்தான் புரிந்தது. சில சாமான்கள், இடங்கள், சிலருக்கு ராசி இல்லை. வெறும் சென்டிமென்ட்தான். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அம்மா வயதானவள். அவள் மனம் புண்படக் கூடாதுன்னு என் மனைவியும் சொல்லுகிறாள். நீங்கள் கொடுத்த ஸ்படிகப் பிள்ளையார் வந்த வேளை தனக்கு ராசி இல்லை என்று அம்மா நினைக்கிறாள். அது எங்கள் குடும்பத்துக்கு ஆகி வரவில்லை. திருப்பிக் கொடுத்து விடணும்னு அவள் அரற்றுகிறாள். அன்பளிப்பாகக் கொடுத்த பொருள் திருப்பப்படும் போது ஒருவர் மனசு எத்தனை வேதனையடையும்னு எனக்குத் தெரியும். என்ன செய்யட்டும், இதைத் தவிர்க்க முடியவில்லை. ஐ ஆம் ரியலி ஸாரி. நீங்க மைன்ட் பண்ணாதீங்க மிஸ்டர் சர்மா.
அப்பாடா... இவ்வளவுதானா!
சர்மா நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டார்.
பரவாயில்லை அதனால் என்ன சார். கொடுங்க.
அவர் திருப்பிக் கொடுத்த விக்கிரகத்தைக் கையில் வாங்கிக் கொண்டு விடைபெற்ற சர்மா, தன் மேஜையை அடையும்போது மெல்ல உள்ளங்கையைப் பிரித்துப் பார்த்தார். அதில் பளபளத்த ஸ்படிகப் பிள்ளையாரைப் பார்க்க முடியாமல் அவர் கண்கள் கலங்கின.
*****
அம்மா ஒரு பஞ்சாங்கம்
மாடிப்படிகளிலிருந்து வேகமாக இறங்கி வந்த ஜான்னவி என்கிற ஜானி நடுக்கூடத்தில் அம்மாவைக் கண்டதும், ஹாய் மம்மி
என்று விட்டு ஒரு கணம் தயங்கி நின்றாள். விஷயத்தை இவளிடம் தெரிவிக்கலாமா என்று அவள் மனதில் பளிச்சிட்ட எண்ணம் தன் தாயின் தோற்றத்தைக்கண்ட மறு நிமிடமே மறைந்து போயிற்று.
தழைய உடுத்திய மடிசார் புடவை நெற்றியில் ரூபாயளவுக்குப் பெரிய பொட்டு. அலட்சியமாக முடியப்பட்ட கூந்தல். கழுத்தில் ஏதோ நகைக் கடை விளம்பரம் போல் அரை டஜன் சங்கிலிகள். ஒல்லியும் இல்லை பருமனும் இல்லை என்ற வாகான உடல் அமைப்பு. அவள் எளிமையாகவும் நாகரீகமாகவும் உடை அணிந்தால் எத்தனை அழகாக இருப்பாள் என்பதை ஜானி கற்பனை செய்து பார்த்தாள்.
இப்படிப் பழமையில் ஊறிப் போனவளிடம் தன் காதல் விவகாரத்தை எப்படிச் சொல்லுவது? அதை அவள் எப்படி வரவேற்பாள்? பூஜை அறையிலிருந்து ஊதுவத்தியின் மணம் காற்றில் கலந்து வந்தது.
அம்மா விளக்கேற்றிப் பூஜையில் உட்கார்ந்திருப்பாள். இனி குறைந்தது அரை மணிநேரம் அவளுடன் யாரும் பேச முடியாது.
ஜான்னவி காரில் ஏறி உட்கார்ந்து அதைக் கிளப்பினாள்.
அவள் மனம் மட்டும் அம்மாவைச் சுற்றி வட்டமிட்டது. அம்மா எதற்கு அத்தனை பூஜை செய்கிறாள்? அப்பாவின் அலட்சியப் போக்கினால் மனமுடைந்து அப்படி அவள் கடவுளிடம் தஞ்சமடைய நினைக்கிறாளோ? அவள் பழமையையே அப்படிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அப்பா ஒன்றும் அவளை வற்புறுத்துகிறவராகத் தெரிய வில்லையே. ஜானியின் கல்லூரித் தோழிகளின் தாய்மார்கள் பலரை அவள் சந்தித்திருக்கிறாள்.
அவர்களுடன் தன் தாயை நிறுத்திப் பார்த்த பொழுது அமெரிக்க டாலர் நோட்டுகளுக்கு நடுவில் சமுத்திரகுப்தர் காலத்து நாணயத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது அவளுக்கு.
நாலு வார்த்தைகள் சேர்ந்தாற் போல் ஆங்கிலம் பேச அம்மாவுக்குத் தெரியுமோ? சௌந்தர்ய லஹரியும், சுந்தர காண்டமும் விழுந்து விழுந்து பாராயணம் செய்கிற நேரத்தில் ஒழுங்காக இங்கிலீஷாவது பேசக் கற்றுக் கொண்டிருக்கலாம் அவள் தாய்.
அவள் தந்தையோ அதற்கு நேர் எதிரிடை, வீட்டில் பூஜை அறை எந்தப் பக்கம் இருக்கிறது என்றுகூட அவருக்குத் தெரியாது.
விஸ்கியும், ஜின்னும் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. சிகார் புகையையே மூச்சாக விடுபவர் அவர்.
தன் மனைவி தனக்கேற்ற முறையில் இல்லை என்ற குறை அவருக்கு நிச்சயம் இருக்கும். 'என் மனைவி ஒரு பஞ்சாங்கம்' என்று அவள் காதுபடவே அவர் தன் சிநேகிதர்களிடம் சொல்லுவதை ஜானி கேட்டிருக்கிறாள். அவர் மனதை உணர்ந்த மனைவியாக அம்மாவால் ஏன் இருக்க முடியவில்லை? அவள் தந்தையையும் அவர் ஆபீசில் வேலை பார்த்த ஓரிரு பெண்களையும் இணைத்து அவள் கேட்க நேரிட்ட வதந்திகளுக்கும் அம்மாதான் காரணமோ?
அவரது ஏமாற்றங்களையும் தாபங்களையும் அம்மா ஏன் புரிந்து கொள்ளவே இல்லை?
ஜானி
என்று உரத்த குரலில் பின்னாலிருந்து யாரோ அழைப்பதை உணர்ந்து காரை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
வினோத் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தான்.
'ஹாய்." புன்முறுவலுடன் அவள் முன் சீட்டின் கதவைத் திறந்துவிட அவன் ஏறி அமர்ந்தவன் அவள் முகவாட்டத்தைக் கவனிக்கத் தவறவில்லை.
வாட் ஜானி? எனிதிங் ராங் வித் யூ?
அவன் சற்று நெருங்கி வந்து அவள் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான்.
ஏதாவது ரெஸ்ட்ராண்டுக்குப் போய்க் காப்பி சாப்பிடலாமா? ரொம்ப டல்லாக இருக்கு
என்றாள் அவள்.
ஷ்யூர். திருப்பு. உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என் வீட்டுக்குப் போகலாம். உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.
வினோத் அவளை ஆவலுடன் பார்த்தான். ஜானி அரை மனதுடன் ஒப்புக் கொண்டாள்.
அவன் தாய் எப்படி இருப்பாள்? தன்னை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ளுவாளா? அந்தத் திடீர் சந்திப்பை அவள் எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ இல்லையாதலால் தயக்கமாக இருந்தது.
டிஃபென்ஸ் காலனியில் வினோத்தின் வீடு இருந்தது. வீட்டின் அழகிய முன் அமைப்பையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு, சொந்த வீடா வினோத்?
என்றாள் அவள்.
நாங்கள் ஜானியின் அப்பாமாதிரி கம்பெனியில் டைரக்டர்களா சொந்த வீடு கட்ட?
ஓ... வினோத், இந்தக் காம்ப்ளெக்ஸை முதலில் உன் மனதிலிருந்து எடு. அந்தஸ்தைச் சுட்டிக் காட்டும் விதத்தில் யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது.
"ஸாரி ஜானி... நான் வேடிக்கையாகத்தான் அதைச் சொன்னேன். '
வினோத்தின் தாய் அவர்களை வரவேற்றாள். ஜானி வட இந்திய வழக்கபடி அவள் கால்களைத் தொட்டு வணங்கினாள். வினோத்தின் முக மலர்ச்சியிலிருந்தே ஜானி யாரென்பதைப் புரிந்து கொண்டு விட்ட தாய், அட அசட்டு மகனே... வீட்டுக்கு வரப் போகிற மருமகளை இப்படித்தான் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து நிற்பார்களா? கொடுப்பதற்கு இனிப்புகூட இல்லையே
என்று பரபரத்தவளாய் ஜானிக்கு ஆசி கூறித் தலையை அன்புடன் வருடிவிட்டு, பேசிக் கொண்டிருங்கள். இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்
என்று உள்ளே போனாள்.
இதே இடத்தில் அவளுக்குப் பதில் வினோத் நின்று தன் தாயை வணங்கினால் என்ன நடக்கும் என்று ஜானி ஒருகணம் கற்பனை செய்து பார்த்தாள்.
முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு வினோத்தை வெறுப்புடன் பார்க்கும் தாய் அம்புஜத்தின் முகம் அவள் கண்முன் தோன்றி மறைந்தது.
அப்பா நாகரீகமானவர். ஒன்றும் சொல்ல மாட்டார்.
அம்மாவைச் சமாளிப்பதுதான் அவளுக்குப் பிரச்சினையாக இருக்கப் போகிறது.
அம்மாவின் ஒப்புதல் இன்றியே அவள் திருமணம் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது என்ன செய்வது? - வினோத்தின் தங்கை வினிதா ஆபீஸிலிருந்து வந்தவள் சட்டென்று ஜானியைப் புரிந்து கொண்டு, ஹாய் மன்னி
' என்று புன்னகைத்தாள்.
'ஹலோ வினி..."
என்ன அண்ணா இது... இப்படி முன்னறிவிப்பில்லாமல் மன்னியை அழைத்து வந்து எல்லோருக்கும் ஓர் இனிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறே. குட் சாய்ஸ், கன்கிராட்ஸ்.
தாங்க்யூ வினி...
வினோத் ஜானியை ஆர்வத்துடன் பார்த்துச் சிரித்தான்.
அவள் வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.
என்ன அன்பான குடும்பம் இது? தன் வீட்டில் மட்டும் இப்படிப்பட்ட பாசத்தின் நெருக்கத்தை அவள் ஏன் உணரவில்லை? ஒருவேளை அந்தஸ்து உயர்கையில் அன்பும் பாசமும் இருக்கிற இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டு, மனித உறவுகளிலேயே ஒரு செயற்கைத் தன்மை வந்து விடுமோ?
அன்று வீடு திரும்பிய பின்னும் அவள் மனம் அதைப் பற்றியே யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு வெள்ளிக்கிழமையன்று ஜானி தன் தோழியின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு இரவு எட்டு மணிக்குத் திரும்பி வந்தாள்.
அவள் தந்தை நாதன் வரவேற்பறையிலேயே சிகாரைப் புகைத்துக் கொண்டு கையில் பிரித்து வைத்த புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தார். எதிரே இருந்த கண்ணாடி டம்ளருக்குள் விஸ்கியில் மிதந்த ஐஸ் தன்னைக் கரைத்து அதனுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டிருந்தது.
ஜானியைப் பார்த்ததும் நாதன், ஹாய் ஜானி! யாரோ வினோத் என்கிறவன் உன்னை போனில் கூப்பிட்டான்
என்றார். அவள் அவர் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
இதையே தகுந்த சந்தர்ப்பமாக நினைத்து வினோதைப்பற்றி அவரிடம் சொல்லிவிட்டால் என்ன?
'டாடி! வினோத் எம். ஏ. கடைசி வருடம் படிக்கிறான். அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ். எழுதப் போகிறான். உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறான். நான் உங்கள் சௌகரியத்தைக் கேட்டுச் சொல்லுவதாகச் சொன்னேன்." ஜானி துணிச்சலான பெண்தான் என்றாலும், அப்போது ஏனோ குரல் எழும்ப மறுத்தது.
புத்தகத்தைப் புரட்டியவாறு அலட்சியமான குரலில் நாதன் கேட்டார்.
"ஏன் எதுக்குப்