Kaliyan Mathavu
By Junior Tej
()
About this ebook
மயானத்திற்குச் செல்லப் பொதுப் பாதையில்லாத கிராமம் அந்தனூர். பலப்பலப் சவால்களையும், சட்டச் சிக்கல்களையும், போராட்டங்களையும் சந்தித்து, தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், பொதுக் குளம், பொதுக் களம், ப்ரொக்யூர் மெண்ட் அலுவலகம், எனப் பல்வேறு நலத்திட்டங்களை நிறுவிதோடு மயானத்துக்குப் பொதுப்பாதை அமைத்த பின், அனைத்தையும் பதிவு அலுவலகத்தில், முறைப்படி பதிவு செய்து, சமுதாயத்துக்கு பூமி தானம் செய்கிறார் ஏழை விவசாயக்கூலி கலியன்.
தானம் செய்த அடுத்த கனம் இறைவனடி சேர்கிறார், புதுப்பாதையில் முதல் பிரேதமாய் கலியனே செல்கிறார்.
ஏழைக் கூலியாய்ப் பிறந்தாலும், உயர்ந்த உள்ளம் கொண்ட அவர், பூதானம் செய்துத் தியாகியாய் உயர்கிறார். பூமிதான விழாவில் கலந்துகொண்ட ,மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில், அரசு மரியாதையுடன் சிதை ஏறிய, ஒரு மாமனிதன் கலியனின் கதை.
Read more from Junior Tej
Junior Tej Page - 5 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 4 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 3 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 1 Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaliyan Mathavu
Related ebooks
Oru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsNermai Oru Kuttrama? Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Idukki Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Jodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsCherryblossomum Innum Sila Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pugaiyin Kallarai Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Enna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsRanga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsIniyavale... Rating: 0 out of 5 stars0 ratingsPetha Manam Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Yasothaiyin Kannan Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Ponveedhi Rating: 0 out of 5 stars0 ratingsArivippu Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsAval Mugam Kaana Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaliyan Mathavu
0 ratings0 reviews
Book preview
Kaliyan Mathavu - Junior Tej
https://www.pustaka.co.in
கலியன் மதவு
Kaliyan Mathavu
Author:
ஜூனியர் தேஜ்
Junior Tej
For more books
https://www.pustaka.co.in/home/author/junior-tej
பொருளடக்கம்
அறிமுகவுரை
அணிந்துரை
வாழ்த்துரை
வாழ்த்துரை
வாழ்த்துரை
வாழ்த்துரை
என்னுரை
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் – 23
அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25
அத்தியாயம் – 26
அத்தியாயம் – 27
அத்தியாயம் – 28
பெற்றோர்க்குச் சமர்ப்பணம்
A ஜானகி V அருணாசலம் (தேஜ்)
அறிமுகவுரை
திருமதி சி அஸ்வினி அவர்கள்
சீனியர் எடிட்டர், ஆனந்த விகடன்
(கலியன் மதவு நாவலை வாரம் தவறாமல் பதிவேற்றியவர்)
எழுத்தாளர் திரு ஜுனியர் தேஜ் சாரின் கலியன் மதவு சமூக நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அணுஅணுவாக ரசித்து விகடன் தளத்தில் பதிவிட்ட முதல் வாசகி நான் தான் என்பதை பெருமையோடு இங்கே கூறிக் கொள்கிறேன். கலியன் மதவு இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். ஜூனியர் தேஜ் சாரிடம் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரவேண்டும் என்பதே இந்த குட்டி ரசிகையின் அவா!
என்றும் அன்புடன்
S. அஸ்வினி, சென்னை
அணிந்துரை
திரு சின்னஞ்சிறு கோபு அவர்கள் - மூத்த எழுத்தாளர் - சிகாகோ
எழுத்தாளர் திரு ஜூனியர் தேஜ் அவர்களின் ‘கலியன் மதவு’ என்ற இந்தச் சமூக நாவலை விகடன் இணைய இதழில், தொடர்கதையாக வெளிவந்தபோதே அதை நான் படித்து, வியந்து, அசந்துப் போனேன்.
அந்த அருமையான நாவல் இப்போது புத்தகமாக வெளிவந்திருப்பது மிக மிக மகிழ்ச்சியைத் தருகிறது.
கிட்டத்திட்ட. நானூறு பக்கங்களில் 28 அத்தியாயங்களுடன், ஏராளமான புகைப்படங்களுடனும், புகைப்படம் கலந்த ஓவியங்களுடனும், வெளிவந்திருக்கும் இந்த சமூக நாவல் படிப்பவர்களின் மனதைக் கொள்ளைக்கொள்ளும் அற்புதமாக அமைந்திருக்கிறது.
இந்த எழுத்தாளரே ஒரு சிறந்த ஓவியராகவும் இருப்பதால் இந்த நாவல் மனதில் கொண்டுவரும் காட்சிகளை கண் முன்னேயும் கொண்டு வந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் யாருடைய ஓவியங்கள் போலவும் இல்லாமல், வித்தியாசமாகவும் அதே நேரத்தில் உயர்ந்தத் தரத்தில் உயிரோட்டமாகவும் இருக்கிறது.
இந்தச் சமூக நாவலைச் சாதாரணமாக எடைப்போட்டுவிட முடியாது. இது ஒன்றிரண்டு வரியில் விமர்சித்து விடக்கூடிய சாதாரண நாவலும் அல்ல. இந்த நாவல் மிகப் பல கனபரிமானங்களைக் கொண்ட, வீச்சு அதிகமுள்ள நாவல்... சொல்லப்போனால் இது ஒரு கிராமத்து மக்களின் ஒருகாலக்கட்ட. வரலாற்று ஆவணம் போல மிளிர்கிறது.
மிக நுணுக்கமான எழுத்து. கிராமத்து மணம் அப்படியே இந்த நாவலில் இருக்கிறது. வயல்வெளிகள், விவசாயம், விவசாயம் சார்ந்த காளவா போன்ற தொழில்கள், தெருக்கள், வீடுகள், மாடு கன்றுகள், சிறுவர்களின் விளையாட்டுகள், அவரவர்களின் மன உணர்வுகள், குணாதிசயங்கள், செயல்கள் என்று இந்த எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்கள் அப்படியே நம் மனதுக்கு கொண்டுவந்து விடுகிறார்.
ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்களும், உற்றுநோக்கி உணரும் ஆற்றலும் இல்லாமல் இப்படியெல்லாம் எழுத முடியாது. இப்படி ஒரு கிராமத்தின் அழகியலை, ஒரு காலக்கட்டத்தை அப்படியேக் கொண்டுவருவதில், மிகப்பெரிய இலக்கிய ஜாம்பாவன்களுக்கு இணையாக இவரும் உயர்ந்து நிற்கிறார்.
அகிலாண்டத்துக் கிழவியில் ஆரம்பித்து தொப்ளன், ஏழுமலை, சின்னப்பொண்ணு, கலியன், மாதய்யா, குந்தலாம்பாள், துரைராமன், சுப்பாமணி, மோகனா, ரஞ்சனி, டாக்டர் அருணகிரி என்று பல்வேறுபட்ட மனிதர்கள், பல்வேறுபட்ட சம்பவங்கள் எல்லாமே நம் கண்முன்னே நடப்பது போல, நாமும் அவர்களுடன் அந்த கிராமத்தில் வாழ்வதைப்போன்ற உணர்வை தருகிறது. மாதய்யாவையும், அவரது குடும்பத்தையும் அவரது அந்த அந்தனூர் கிராமத்தையும் சுற்றி வரும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பியுங்கள். படித்து முடிக்கும்போது நீங்களும் அந்தனூர் வந்து அந்தக் கலியன் மதவில் என்னைப் போல உட்கார்ந்திருப்பீர்கள் என்பது மட்டும் உறுதி.
அட்டைப்படமோ, படங்களோ, அறிமுகவுரையோ, அணிந்துரையோ, வாழ்த்துரையோ ஆசிரியர் பெயரோ … எதுவுமே இல்லாமல், முதல் அத்தியாயம் முதல் 28ம் அத்தியாயம் வரை பிரிண்ட் செய்து போட்டுவிட்டால்போதும். ஒருவர் எடுத்துப் படிக்கத் துவங்கிவிட்டால். கடைசீ வரியில்தான் கொண்டுபோய் நிறுத்துவார்கள். இது வெறும் புகழ் வார்த்தைகள் மட்டுமல்ல. சத்தியமான உண்மை.
என்றென்றும் அன்புடன் சின்னஞ்சிறு கோபு, சிகாகோ
வாழ்த்துரை
திரு ஹரிகோபி அவர்கள் – எழுத்தாளர் – புது டெல்லி
‘கலியன் மதவு’ என்ற சமூக-நாவலைப் படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்கள் பல்வேறு துறைகளிலும், களங்களிலும் அவருக்குள்ள நுண்ணறிவை கதை முழுவதும் விதைத்திருக்கிறார். ஒரே சமயத்தில் மூன்று நான்கு நாவல்களை படித்த திருப்தி.
வட்டார வழக்கிலேயேக் கதாபாத்திரங்களைப் பேச வைத்திருப்பதும், வாசகனைச் சம்பவ இடத்துக்கே அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது. படித்து முடித்தபின்னும், அந்தக் கிராமச் சூழ்நிலையிலிருந்து வெளியே வர வெகு நேரமாகிறது, இது கதாசிரியரின் வெற்றி. கிராமிய நடையிலேயே கதையை நகர்த்துவது படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.
கதையின் நடையையும், சம்பவங்களின் சீரானக் கட்டமைப்பையும் பார்க்கும்போது ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பை அனுபவித்துப் படிக்கும் சுகம் ஏற்படுகிறது. அக்கிரகாரத்தின் பழக்க வழக்கங்களை மீண்டும் படிக்கும்போது பழைய கால நினைவுகள் கண்முன்னே வந்து போகின்றன.
கிராமப் பழக்க வழக்கங்கள், கால்நடைகளை அரவணைப்போடு குடும்ப உறுப்பினராக எண்ணும் மனநிலை, வயலில் வேலைபார்ப்பவர்களை உடன்பிறந்தவர்களாக நினைக்கும் அணுகுமுறை இவை எல்லாம் ஆழ்மனதில் பதியும் வண்ணம் கதாசிரியர் திரு ஜூனியர் தேஜ் அவர்கள் அழகாகக் கூறியுள்ளார்.
மாதய்யாவின் அந்திம நிமிடங்கள் மனதைக் கனக்க வைத்தது. ஒரு சகாப்தம் ஆடி அடங்கிய வேதனை. கிராம மக்களின் நண்பனாய், மகனாய், சகோதரனாய், தந்தையாய், உறவினனாய் வாழ்வாங்கு வாழ்ந்த மனித நேயம் மிக்க மகாத்மாவாய் எல்லோர் மனங்களிலும் நிறைந்து மறைந்த மாமனிதராய் இருந்த மாதய்யா இன்று இறைவனுக்கு வேண்டியவராய் ஐக்கியமாகிவிட்ட தருணம். மற்ற எல்லாரையும் விட மாதய்யாவின் நிழலாய் இருந்த கலியனுக்கு இது ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.
குந்தலாம்பாவின் மூத்த சகோதரி புஷ்பாவிற்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை எண்ணிக் குமுறுவதும், அத்தகைய நிலை தனக்கு வரக்கூடாது என்று தீர்க்கமாக எதிர்ப்பதும், பெண்ணினத்திற்கு முன்மாதிரியாயும், வருங்காலப் பெண்களின் வழிகாட்டியாகவும் நிற்பதாக காட்டியிருப்பது கதாசிரியர் திரு ஜூனியர் தேஜ் அவர்களின் புரட்சிச் சிந்தனையைக் காட்டுகிறது.
பணம் படைத்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும், ஏழைகள் பொதுநலம் பேணுபவர்களாகவும் இருப்பதால்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள் என்கிற மறுக்க முடியாத உளவியல் கருத்தை ஆணித்தரமாக கலியன் பாத்திரம் மூலமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் கதாசிரியர்.
ஆசிரியரை சிறந்த நாவலாசிரயராக அடையாளம் காட்டக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நல்ல சமூக நாவல் இதுவாக இருக்கும். சித்திரங்களைத் தானே வரைந்தும், போதிய நிழற்படங்களையும் உள்ளடக்கி ஒரு வண்ணமயமான, உணர்வுபூர்வமான, காலத்தை வெல்லும் சமூக நாவலைப் படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.
ஆர். ஹரிகோபி, புது டெல்லி
வாழ்த்துரை
திரு மகேஷ்வரன் அவர்கள் – முன்னணி நாவலாசிரியர் – திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.
‘காரியவாதமாய்ப் பழகும் மனிதர்களிடம் சகமனிதன் ஒட்டுவதில்லை. பாசமாய்ப் பழகும் மனிதர்களோடு விலகாமல் பலமாய் ஒட்டிக்கொண்டுவிடுகிறது மனித மனசு.’ – கலியன் மதவு 22 வது அத்யாயத்தில் வரும் இந்த வாசகம் எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களின் உள்ளத்தைக் காட்டுகிறது.
பாரதி சொல்வது போல உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்தான் வாங்கினில் ஒளி உண்டாகும். மூத்த எழுத்தாளர் திரு ஜூனியர் தேஜ் அவர்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகமானார்கள். தொலைபேசியில்தான் அவருடன் பேசியிருக்கிறேன். பேசும்போது, குரலிலேயே அப்படி ஒரு பாசம் தொனிக்கும். முன்பின் பார்த்திராத என்னிடம், ஜென்மம் ஜென்மமாய் பழகியது போல, ஒரு தந்தையின் பாசத்தோடுப் பழகுவார். மிகவும் இனிமையான மனிதர்.
அவரின் ‘கலியன் மதவு’ என்றச் சமூக-நாவல் சமீபத்தில்தான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. படிக்கத் தொடங்கினேன். கீழே வைக்க மனமே இல்லை, வேறொரு உலகத்திற்குள் சென்று விட்டதை போன்ற ஒரு உணர்வு.
வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஒரு அற்புதமான படைப்பு. அனைவரும் படிக்க...பாதுகாக்க வேண்டிய...ஒரு படைப்பு. இன்னும் சொல்லப்போனால் விருதுக்குரிய படைப்பு...
இப்படி ஒரு எழுத்து நடை... எதார்த்தமான நடை... அற்புதமான நடை உணர்வுபூர்வமான நடை... உன்னதமான நடையை... நம் மண்ணின் உறவுகளை ரத்தமும் சதையுமாய் உணர்த்தும் நடையை நான் ரசித்து ரசித்து வாசித்து வியந்தேன்.
. இந்த நாவல் வாசித்த பிறகு எனக்குள் அக்கிரகாரத்தின் பழக்க வழக்கங்கள் மீண்டும் புத்துயிர்த்துக் கண்களுக்குள் விரிந்தன... அந்தக் காலத்திற்கும் அந்தச் சூழ்நிலைக்கும் என்னை அழைத்துச் சென்றது. அந்தனூர் மண்ணின் இயற்கை வளத்தோடு, அந்த மனிதர்களோடு நிறை வாழ்வு வாழ்ந்ததாய் உணர முடிந்தது. அந்த உணர்வுகள் என் ஆன்மாவோடு ஒன்றிக் கலந்துவிட்டன.
இந்த நாவல் முழு புத்தகமாக வர வேண்டும் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படி ஒரு வாய்ப்பைத் தரும் புஸ்தகா நிறுவனத்தார்க்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூத்த எழுத்தாளரான இவர் இன்னும் இன்னும் நிறைய நாவல்களை படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வாழ்த்த வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன். தொடரட்டும் அவரது இலக்கிய பணி
அன்புடன்
மகேஷ்வரன் நாவலாசிரியர்
வாழ்த்துரை
திரு ஆர்னிகா நாசர் அவர்கள் – மூத்த எழுத்தாளர் – கோவை
‘Brivity is the soul of wit’ என்பார்கள். திரு ஜூனியர் தேஜ் எழுதிய சமூக- நாவலின் நச்’ என்ற ‘கலியன் மதவு’ என்ற வித்தியாசமானத் தலைப்பே, நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. ஒப்பாரியில் தொடங்கி, ஒப்பாரியில் நிறைவு பெறும் தனித்துவமான உத்தி சிறப்பினும் சிறப்பு.
வாசகன் மனதைக் கொள்ளைக் கொள்கிற, அ.வரதராஜன் என்கிற ஜூனியர் தேஜ் அவர்களின், கிராமீய வட்டார மொழிப் பிரவாகத்தில் ‘பாரதிராஜா அவர்களின் "டச்’ உணரமுடிகிறது.
அகிலாண்டத்துக் கிழவி, தொப்ளான், ஏழுமலை, சின்னப்பொண்ணு, கலியன், மாதய்யா, குந்தலாம்பாள், துரைராமன், சுப்பாமணி, மோகனா, ரஞ்சனி, டாக்டர் அருணகிரி, இஞ்சினியர் திருநா போன்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் முதல் வாசிப்பிலேயே நெருக்கமாகி வாசகனின் இதயத்தில் பச்சைக் குத்தப்பட்டுவிடுகிறார்கள்.
பாத்திரங்களின் செயல்பாடுகள் இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்பதையெல்லாம் கற்பனைச் செய்துக் கொண்டேத் தொடர்ந்து (எடுத்ததைக் கீழே வைக்காமல்) நாவல் முழுவதையுமே ஒரே அமர்வில், படித்து முடிக்கவைத்துவிடும் ரசவாதம்தான் இந்த நாவலின் தனிச்சிறப்பு.
நான் தினமலர் வாரமலருக்கு ஏகப்பட்டத் தகவல்களோடுக் கூடிய முதல் தொடர் எழுதிய போது, திரு அந்துமணி அவர்கள் என்னிடம், திரு நாசர் அவர்களே...! சில ஆரம்பக் கால எழுத்தாளர்கள் தாங்கள் சேகரித்தத் தகவல்கள் அனைத்தையும் கதைக்குள் கொட்டி, டாக்குமெண்டரி ஆக்கிவிடுவார்கள. ஆனால், நீங்கள் கதை ஓட்டத்தைப் பாதிக்காத அளவுக்குத் தகவல்களை கதையில் சேர்த்துள்ளீர்கள். Keep it up* - என்று பாராட்டினார். மேலும்,
நீ சேகரித்தவற்றில்,.கதையில் சேர்க்கப்பட்டதுப் போக, மற்ற தகவல்கள் எல்லாம் உனக்கு அறிவுக் கொள்முதல்தானே...?" என்றும் வினா எழுப்பினார்.
எழுத்தாளர் தேஜ் அவர்கள் கதை நெடுக பல்வேறு தகவல்களைக் குவித்துள்ளபோதிலும், அது கதையின் ஓட்டத்தை எந்த இடத்திலும் பாதித்துக் கட்டுரைத் தன்மையைத் தரவில்லை என்பதைக் கண்டு வியந்ததோடு. திரு அந்துமணி அவர்களின் வார்த்தைகளை மீள்பார்வையும் செய்தேன்.
ஒப்பாரியில் இத்தனை வகைகள் உண்டு என்பதை இக்கதைப் படித்தப் பிறகுதான் அறிந்துகொண்டேன்...அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி மனதை தைக்கிறது.
நான் ஜூனியர் தேஜ் என்ற பெயரைக் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நான்கு வரிகளில் நகைச்சுவை, நாற்பது வரிகளில் துணுக்குகள் என ஏராளமாக எழுதிக்கொண்டிருந்தவர்தான் அவர்.
‘ஜூனியர் தேஜ் பேஜ்’ என்று தொடர்ந்து எட்டு பக்கங்கள் (ஒரு புக்லெட் போல) இவருடைய துணுக்குகளையும், நகைச்சுவைச் சிரிப்பையும் சாவி இதழ்களில் பார்த்துள்ளேன்.
நாளாவட்டத்தில், சிறிது சிறிதாக தன் எழுத்தாளுமையை உயர்த்திக்கொண்டு, நானூறு வார்த்தைகளில் சிறுகதைகள், நாலாயிரம் வார்த்தைகளில் நெடுங்கதைகள் எனப் படிப்படியாக உயர்ந்து, எழுபத்து ஐந்தாயிரம் வார்த்தைகளில் ‘கலியன் மதவு’ என்கிற 28 அத்தியாயங்கள் கொண்டச் சமூக நாவல் எழுதியுள்ளதைக் காணும்போது உண்மையிலேயே மிக மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
காண்டேகர் என்ற எழுத்துலக ஜாம்பவான் போல, ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஆங்கில இலக்கியத்தில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களையும், கவிதைகளையும் கதையோடு பொருத்தியிருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆங்கில இலக்கியத்தை மிகவும் நுணுகிப் படித்திருந்தால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும். அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
ஓவியங்களையும், புகைப்படங்களையும் தேவையான இடங்களில் இணைத்து எழுத்தின் வீர்யத்தைப், பன்மடங்கு உயர்த்திக்காட்டப், பிரபல ஓவியர்களின் சாயலின்றித், தனித்துவமானப் (style) பாணியில், புகைப்படங்கள், ஓவியமும் கலந்த புகைப்படங்கள், அவர் தந்தை மற்றும் மகன் வரைந்த ஓவியங்களையெல்லாம் ஃபோட்டோ ஷாப் செய்து ஆங்காங்கே கதையோட்டத்துடன் இணைத்திருப்பது மேலும் நாவலின் சுவையைக் கூட்டி மெருகேற்றுகிறது.
ஜோக், துணுக்கு, கவிதை என்று எழுதப் புகுந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள், அத்துடன் நின்று விடாமல், ஜூனியர் தேஜ் அவர்களை முன் மாதிரியாகக் எடுத்துக் கொண்டு, நாவல் எழுதும் அளவுக்குத் தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும்.என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,
நண்பர் ஜூனியர் தேஜ் அவர்கள் தொடர்ந்து நிறைய படைப்புகள் படைத்து எழுத்துலகில் மேலே மேலே உயர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆர்னிகா நாசர்
வாழ்த்துரை
திரு நத்தம் சுரேஷ் பாபு – எழுத்தாளர். நத்தம்
கதாசிரியர் ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதியுள்ள கலியன் மதவு சமூக-நாவலைத் தொடர்கதையாக வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தபோது எல்லா நாவல்களையும் போல, எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாமல் அலட்சியமாகத்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால், முதல் அத்தியாயத்திலேயே நம்மை எல்லாம் கதை நடக்கும் அந்தனூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று, கதாபாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புக்களுடன் ஒன்றிப்போகச்செய்துச் சபாஷ் பெற்றுவிடுகிறார் கதாசிரியர்... அதன் பிறகு ஒவ்வொரு அத்தியாயத்தையும் கவனமுடன் வாசிக்க வேண்டிய அவசியத்திற்கு வாசகனை இழுத்துச்சென்றுவிடுகிறது இந்த நாவல்.
கைத் தேர்ந்தச் சிற்பி, சிலையை, அங்குலம் அங்குலமாக, மிகக் கவனமாகச் செதுக்கிச் சிலைக்கு உயிரூட்டுவதைப்போல, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளையும், வாக்கியங்களையும், மிக மிக லாகவமாகக் கையாண்டு, வாசிப்போரைப் பிரமிக்க வைத்துள்ளார் என்பதை இந்த நாவலை வாசிப்போர் கட்டாயமாக உணர முடியும்.
காவிரிக் கரையோர இயற்கையெழில் கொஞ்சும் கிராமம் அந்தனூர், நிலச்சுவான்தார் மாதய்யா, அவரது மனைவி குந்தலாம்பாள், அவர்களது மகன் துரைராமன்,... இப்படிப் பல கதைமாந்தர்கள் இந்தநாவல் முழுவதும் விரவி இருப்பினும், நம் எல்லோர் மனதிலும் நீங்காமல் நிற்பது விவசாயக் கூலி கலியன்தான்.
மாதய்யா, கலியனுடனும் பழகும் முறை, பதிலுக்குக் கலியனின் எஜமான விசுவாசம், தியாக உணர்வு எல்லாம் வெகு அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
கதையின் முதன்மை பாத்திரமான கலியனை முன்னிருத்தி ‘கலியன் மதவு’ என்று நாவலுக்கு பெயர்சூட்டி விவசாயக் கூலி கலியனின் பெயரை வரலாற்றில் இடம்பெறச்செய்திருக்கிறார் நாவலாசிரியர் என்றே சொல்ல வேண்டும். ‘ஒரு சிறந்த வகைமாதிரியை (specimen) உருவாக்குவதே சிறந்த நாவலின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று அலெக்ஸி டால்ஸ்டாய் என்ற இலக்கியத் திறனாய்வாளர் கூறுவதைப் போல. ‘கலியன்’ என்ற ஒரு வகைமாதிரியை (specimen) உருவாக்கியுள்ளார் கதாசிரியர்.
தி ஜானகிராமன் அவர்களின் மோகமுள் யமுனா, ஜெயகாந்தன் அவர்களின் கங்கா இந்த வரிசையில் கலியன் மதவு ‘கலியன்’ பாத்திரமும் இலக்கியத்தில் நீக்கா இடம் பெற்றுவிடுகிறது.
கதையின் பின்னணி கிராமம் என்பதால், நாற்று விடுதல், நாற்றுப்-பறி, நடவு, களைப்-பறி, அறுவடை, கட்டடித்தல், தூற்றுதல் வைக்கோல் போர் போடுதல் என அனைத்துச் செயல்பாடுகளையும் துல்லியமாகக் கதாசிரியர் வர்ணிப்பது நம்மை நூறு விழுக்காடுக் கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது...
அது மட்டுமா? கிராமத்தில் பத்துநாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் கோவில் திருவிழா நிகழ்வுகளை வாசிக்கும்போது, நாமே அந்தத் திருவிழாவில் கலந்துகொண்டிருத்தல் போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறார் ஆசிரியர்.
நிலச்சுவான்தார்கள், கூலிகளைச் சுரண்டுபவர்கள், தீண்டாமை பேசுபவர்கள் என்றப் பழையக் கருத்துக்களையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடுகிறது, மாதய்யா மற்றும் அவர் மனைவி குந்தலாம்பாளின் முற்போக்குச் சிந்தனைகளும் செயல்பாடுகளும். இதுவே இந்த நாவலின் உயிர்நாடியாகவும் இருப்பதுக் குறிப்பிடத்தக்கது.
மாதய்யா காலமானபின் அவரது மனைவி குந்தலாம்பாள் துணிவோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கும் பேரிடியாக வெடித்துச் சிதறுகிறது.
தந்தையை மதிக்காது பட்டினம் போய்ப் பிழைக்கும் துரைராமன் மாதய்யாவின் மறைவுக்குப் பின் கிராமத்திற்கு வந்து நிலபுலன்களை விற்றுவிடப் பார்ப்பதும். அதற்கு இடம் கொடாமல் துணிச்சலாக செயல்படும் குந்தலாம்பாளின் துணிவு பெண்ணீயத்திற்கு ஒரு வகைமாதிரியாய் மிளிர்கிறது.
மாதய்யாவின் கடைசீ விருப்பத்தைப் பூர்த்திச் செய்யக் கலியனோடு இணைந்து மேற்கொள்ளும் குந்தலாம்பாளின் செயல்பாடுகள் அனைத்தும் பெண்ணீயத்தின் பெருமையைப் பறைசாற்றும் உத்திகளாக அமைந்துள்ளன...
மாதய்யா, திட்டம் தீட்டித் தந்தபடி, துரைராமனிடமிருந்து கோவில் சப்பாக் காணியைத் தன் பெயருக்கு வாங்கிய கலியன், மாதய்யாவின் இறுதி ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக மயானத்திற்குப் பாதை அமைத்தது மட்டுமல்லாமல், ஊர்ப் பொதுவில் களம், குளம், நெல் கொள்முதல் நிலையம் என அமைத்து அனைத்தையும் ஊருக்கே தானமாக எழுதிக் கொடுத்துவிட்டு. தன் முதலாளியம்மாள் இறந்த அதே சமயம், தானும் இறப்பது கலியனின் தியாகத்தின் சிறப்பை உணர்த்துகிறது.
இந்தநாவலில் கிராமத்து விவசாயப்பணிகள் காவிரி ஆறு, ஜல்லிக்கட்டு, தீமிதி திருவிழாக்கள் இறுதியாத்திரை... என, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக விவரிப்பது, ஆசிரியரின் உற்றுநோக்கி, உள்வாங்கும் திறனை பறைச்சாற்றுகிறது.
மேல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களை, மேற்கோளிட்டு எழுதியிருப்பதும் வெகு சிறப்பு. இவரின் தனித்துவமான ஓவியங்கள் நாவலின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கலியன் மதவு ஓர் சமுகநாவல் மட்டுமல்ல! ஓர் வரலாற்றுநாவலாகவும் மிளிர்கிறது. இதுபோல் இன்னும் பல நாவல்கள் எழுதி நாவல் உலகில் புகழ்பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
என்னுரை
20.09.1998 கல்கி வார இதழில் வெளியான நாவல் போட்டி விளம்பரத்தைப பார்த்த அடுத்த கனம், கலியன் மதவு நாவல் எழுதத் தொடங்கித் தொடர்ந்தேன்... கடைசி தேதி மார்ச் 15 1999.
நான்கு மாதங்கள் அவகாசம் இருந்ததால், என் தந்தை தேஜ் அவர்களின் வழிகாட்டலுடன், 26 அத்தியாயங்களுக்கு ப்ளூ ப்ரிண்ட் போட்டு, எழுதினேன்.
கையெழுத்தில் 300 பக்கங்களில் நாவல் முடிந்துவிட்டது. பல நாட்கள் பல நேரங்களில், பல்வேறு சூழல்களில், மனநிலைகளில், எழுதியதாலும், பேனாவில் அவ்வப்போது மசி மாற்றிய நேரத்தில் பட்டையாகவும், மசி தீரும்போது மங்கலாகவும், பேனா முள்ளைக் கழுவித் துடைத்தபின் எழுதிய இடங்கள் மிக மிக மங்கலாகவும், இப்படிச் சீரற்று இருந்தன எழுத்துக்கள்.
வெறொரு படி எழுதச் சோம்பேறித்தனம். ‘டைப்-ரைட்டிங் செய்து அனுப்பினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது. தட்டச்சுச் செய்யத் தெரியும் என்பதால், நானே டைப் அடித்தேன்.
கையெழுத்தில் 300 பக்கம் இருந்த நாவல் டைப்பிங்கில் 90 பக்கங்களாகச் சுருங்கிவிட்டது. மனசு விட்டுப்போய்விட்டது.ஒரு ஸ்கெட்ச் போட்டுவிட்டாய். இனி டெவலப் பண்ண வேண்டியதுதான். 90 பக்கங்களை 260 பக்கங்களாக மாற்று...
என்று என் தந்தை தேஜ் கூறினார்.
அத்தியாயத்திற்குப் 10 பக்கம் என எடுத்து வைத்துக் கொண்டு எப்போது எந்த அத்தியாயத்திற்கு எழுத மூடு வருகிறதோ அடித்து 260 பக்கங்களையும் டைப் செய்து 26 அத்யாயங்களையும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன். என் தந்தை தேஜ் அவர்கள் நாவல் நன்றாக வந்துள்ளது என்று சொன்னார். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.
என் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, என்னை இப்படியொரு நாவல் எழுதவைத்த என் தந்தை தேஜ் அவர்களுக்கும் என் தாய் ஜானகி அவர்களுக்கும் இந்த நாவலைக் காணிக்கையாக்குகிறேன்.
சீர்காழியில் ‘தாஜ்’ என்ற தரமான ஒரு எழுத்தாளர் இருந்தார். சிறந்தப் படிப்பாளி. சிறந்த இலக்கியவாதி.
அவர் என் நாவலைப் படித்துவிட்டுச் சிலத் திருத்தங்களைச் செய்யச் சொன்னார். செய்தேன்.
எனக்கு பல்வகையிலும் இலக்கிய நாட்டத்தை ஏற்படுத்திய அமரர் திரு தாஜ் அவர்களை இன்று நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
கல்கியிலும் மேலும் ஒரு மாதங்கள் கூடுதல் அவகாசம் அளித்து அறிவிப்பு வரவே, மீண்டும் மீண்டும் படித்துப் படித்து எடிட் செய்து, எடிட் செய்த பக்கங்களை மீண்டும் டைப் செய்தேன்.
ஒரு வழியாக 21.04.1999 அன்று கூரியரில் அந்தக் நாவலை அனுப்பினேன். நாவல் போட்டியில் கதை என்று வந்துவிட்டது.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எனது இனிய நண்பர். எங்கள் பள்ளிக்கு அவரைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்து வந்திருக்கிறேன்.
திரு பிரபஞ்சன் அவர்களிடம் கலியன் மதவு நாவலைத் தந்து கருத்துச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னையில் அவரைச் சந்தித்தேன்.
நாவல் முழுதும் படித்ததோடு மட்டுமல்லாமல், பென்சிலால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள நிறை-குறைகளை, மார்ஜினல் நோட் எழுதியிருந்தார்.
அதோடு, கீதோபதேசம் போல அழுத்தமாக அவர் சொன்னக் கருத்துக்களை மனதில் வாங்கினேன். பிஸியான எழுத்தாளராக இருந்தபோதிலும் என்னை வழிநடத்திய அமரர் திரு பிரபஞ்சன் அவர்களை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
கதைக் களம், வர்ணணைகள், பாத்திரங்கள் எல்லாம் சிறப்பாக வந்துள்ளன. மனித உணர்வுகளை அழுத்தமாகப் பேச முயற்சி செய்தால் நாவல் வெற்றி பெறும்.
- என்று வாழ்த்தி, புத்தகம் போலத் தைத்த அந்த 260 பக்க பண்டிலை என்னிடம் தந்தார்.
ரயிலில் ஊர் திரும்பும்போதுப் படித்துக்கொண்டே வந்தேன். நடு நிசி 12.45 மணிக்கு ரயிலிலேயே வைத்துவிட்டு இறங்கிவிட்டேன். இன்றளவும் ஒரு பொக்கிஷத்தை இழந்த வருத்த உணர்வு எனக்குள் இருக்கிறது.
அதற்குப் பிறகு நாவல் எழுத முயற்சி எதுவும் செய்யவே இல்லை. 20 வருடங்கள் கடந்தன.
ஆஸ்பெஸ்டாஸ் கூறையாக இருந்த, என் வீடு மாடி வீடாக உயர்ந்தது. இரண்டாவது மாடியில் 15x10 அளவில் நூலகம் அமைத்தேன்.
அனைத்து பீரோக்களையும் புத்தகங்களையும் புது நூலகத்துக்கு, இடம் மாற்றும்போதுதான் புத்தகக் குவியலில், காலண்டர் பேப்பர்களை டிம்மி பேப்பர் அளவுக்குக் கிழித்து அதன் பின்னால் டைப் செய்து தைத்து வைத்தக் கார்பன் காப்பி கலியன் மதவு கிடைத்தது.
எடுத்துப் படித்துப் பார்த்தேன். 20 ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சன் சொன்னது எந்த இடத்தில் என்ன சொன்னார் என்பதெல்லாம் புரிந்தது. உருவம் உள்ளடக்கம் அனைத்திலும் நிறைய்ய மாற்றங்கள் செய்து, ஆனந்த விகடனுக்கு முதல் நான்கு அத்தியாயங்களை அனுப்பி வைத்தேன்.
அப்போது சீனியர் எடிட்டராக இருந்த திருமதி அஸ்வினி அவர்கள் தொலைப் பேசியில் "அழைத்து, உங்கள் நாவல் தேர்வுக்குழுவினரால் பிரசுரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்காக விகடன் ஒரு பக்கம் ஒதுக்குகிறது. மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் எப்பொழுதிலிருந்து தொடங்கலாம்...?" என்று கேட்டபோது, சந்தோஷம் தாங்கவில்லை.
ஆனந்தவிகடன் என்பது மிகப் பெரிய பேனர் என்பதால் மிகக் கவனமாக எழுதினேன். 28 வாரங்கள் தொடராக வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்த ஆனந்த விகடன் நிறுவனத்துக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்திலோ, மொழியிலோ, உருவத்திலோ, உள்ளடக்கத்திலோ, கட்டமைப்பிலோ, ஓவியத்திலோ, புகைப்படத்திலோ, மாற்றங்கள் தேவை எனக் கருதினால், சீனியர் எடிட்டர் திருமதி அஸ்வினி அவர்கள், உடனே தொலைப் பேசியில் அழைப்பார்.
இதை இப்படிச் சொல்லலாமே...! இதற்குப் பதிலாக இப்படிச் சொல்லலாமே...! இந்தப் படத்தை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்குமே…!
- என்றெல்லாம் நேர்மைறையாக, ஒரு மகள், தந்தையிடம் பழகுவதைப் போல உரிமையாகச் சொல்லிச் செய்யவைத்துநாவலுக்கு மேலும் அழகு சேர்த்ததோடு, என் எழுதும் வேகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்தினார்கள். ‘சூப்பர் ஹிட்’ நாவல் என்று அவள் விகடனில் பிரசுரம் செய்து ஊக்கம் தந்தார்கள். அதோடு, திரு நத்தம் சுரேஷ் பாபு அவர்கள் உட்பட நிறைய வாசகர்கள் நிறைய வாசகர்கள், ஒவ்வொரு அத்தியாயம் படித்தவுடன், கைப் பேசி மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்தினார்கள். எழுத்தாளர்களின் ஆதாரமான வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியறிதலை தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
எழுத்தாளர்கள் திரு சின்னஞ்சிறு கோபு மற்றும் திரு ஹரிகோபி இருவரும், தொடராக விகடனில் வந்தபோதே,ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் விமரிசனம் எழுதினார்கள். நாவல் முடிந்தபிறகு, முழுதும் படித்துவிட்டு, அத்தியாயம் வாரியாக விரிவான விமரிசனமும் அளித்துள்ளார்கள். அதை எனது ப்ளாக்ஸ்பாட்டில் https://junior-tej.blogspot.com/ தனியாக வெளியிட்டிருக்கிறேன்.
தவிர, புகழ் பெற்ற நாவலாசிரியர்களான திரு ஆர்னிகா நாசர், திரு மகேஷ்வரன் இருவரும் கலியன் மதவு நாவலை முழுதும் படித்துவிட்டு, சமீபத்தில்தான் என்னுடன் அறிமுகமானார்கள்.
அந்த வகையில் முழு நாவலையும் படித்த நான்கு எழுதாளர்கள் இந்த நூல் வெளியீடு குறித்து மகிழ்ந்து, திருமிகு சின்னஞ்சிறு கோபு சார் அவர்கள் அணிந்துரையும், மற்ற மூன்று எழுத்தாளர்களும் வாழ்த்துரையும் வழங்கி கௌரவித்துள்ளார்கள் என்பது சிறப்பினும் சிறப்பு. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.
பிரபலத் தமிழ் இந்து நாளிதழின் கார்டூனிஸ்ட் திரு வெங்கி என்கிற வெங்கடேசன் அவர்கள் என் இனிய நண்பர். நான் மதகில் அமர்ந்தவாறு எடுத்தப் புகைப்படம்தான் பலராலும் பார்க்கப்பட்டப் படம் மென்பதால் அதையே முகப்பு அட்டையாக உருமாற்றினேன்.
நான் திரு வெங்கி அவர்களிடம்தான் Photo shop கற்றுக் கொள்கிறேன் என்றாலும் இன்னும் முழுதுமாக அந்தக் கலை எனக்குள் செல்லவில்லை என்பதால், என் அருகே அமர்ந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தபடியே, Finishing Work செய்து முன் அட்டை தயார் செய்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குரு ஸ்தானத்தில் இருக்கும் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் புகழ் பெற்ற, புஸ்தகா நிறுவனம் இந்தக் ‘கலியன் மதவு’ நாவலைப் புத்தகவடிவில் கொணர்ந்து, எனக்கும் என் எழுத்துக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதை நினைத்துப் பெருமையும், பேருவகையும் கொள்கிறேன். நான் பெற்றப் பேறாகக் போற்றுகிறேன். புஸ்தகா ராஜேஷ் மற்றும் புஸ்தகா நிறுவனத்துக்கு என் கோடானுகோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
கலியன் மதவு என்ற என் சமூக நாவல் மூலம் அறிமுகமான அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்றென்றும் அன்புடன்
ஜூனியர் தேஜ் - சீர்காழி
அத்தியாயம் – 1
‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு...!
கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு...!
சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு...!
ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ...?
வைகரையின் ரம்யமான அமைதியைக் கீறிக் கிழித்துக்கொண்டுப் பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி.
ஒப்பாரி ஓசையில் திடுக்கிட்டு விழித்த அக்கம்பக்கத்து ஜனங்களெல்லாம், ‘செத்தது யாராயிருக்கும்...?’ என்று ஊகித்தபடியே ஓடுவதும், நடப்பதும் ஓடி ஓடி நடப்பதுமாகப் பரபரத்தார்கள்.
‘கிளவி ஒப்பாரிப் பாடுதே...?’
‘நோவு-நொடீலப் படுத்தக் கிளங்கட்டைங்கக்கூடத் தெருவுல யாருமேயில்லியே...?’
‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்...?’
‘திடீர்னு யாரு மண்டையப் போட்டிருப்பாக...?’
செத்தது யார் என்று இரண்டாவது ஒப்பாரியில் தெளிவாகப் பாடிவிட்டாள் கிழவி.
சப்பாணியா செத்துட்டாரு...? நேத்துக் கூட நல்லா இருந்தாரே...?
அட...! நேத்து அந்தீல தெருவுல நின்னு மவனாண்ட ஏதோ சொல்லிக்கிணு நின்னாருங்கிறேன்...!
என்ன ஆயிருக்கும்ணே அவுருக்கு...?
நோவு நொடீனு ஒரு வேளைச் சுணங்கிப் படுத்தவரில்லியே அவுரு... அவருக்கு என்னவாயிருக்கும்...?
வயசானாலும் சப்பாணி, நல்லா ஆரோக்கியத்தோடக் கல்லுக்குண்டாட்டம் விகுவாத்தானே இருந்தாரு...!
கால் விந்தி விந்தி நடக்கும் தொப்ளானை, அந்த வட்டாரத்தில் ‘சப்பாணி’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.
***
பிலாக்கணக் கூட்டாளிகள் சுறுசுறுப்பாகத் தத்தம் குடிசைகளிலிருந்துப் புறப்பட்டு, ஓட்டமும் நடையுமாக, இழவு வீட்டுக்கு விரைந்தார்கள்.
யார் வீட்டில் தலை சாய்ந்தாலும் அகிலாண்டக் கிழவிக்குத் தான் முதலில் தெரிவிப்பார்கள். கிழவி வந்து, சந்தேகத்துக்கு மீண்டுமொறு முறை நாடி பார்த்து சாவு தீர்மானித்துவிட்டு, தரையில் துணி விரித்து, பிரேதம் கிடத்தி, மூடவேண்டிய துவாரங்களை மூடவேண்டிய முறையில் மூடி, கை, கால்களைச் சேர்த்துக் கட்டியபின், விளக்கேற்றி, ஊதுபத்தி கொளுத்தி வாழைக்கட்டையில் நட்டு - ஜோடனையெல்லாம் முடித்துவிட்டுத்தான் உரத்தக் குரலில் நடு வீதியில் நின்று முதல் ஒப்பாரியை உரத்துப் பாடுவாள்.
***
முதல் ஒப்பாரி எல்லோருக்கும் பொதுவானதுதான். செத்த நபர் யாரென்று இரண்டாவது ஒப்பாரியில் பூடகமாகத் தெரியப்படுத்துவாள் கிழவி. காது கேட்கும் தூரத்தில் பிலாக்கணக் கூட்டாளிகள் இருந்துவிட்டால் வாங்கிப்போட்டு மாரடிக்க மூன்றாவது ஒப்பாரிக்குள் வந்துவிடவேண்டும். இருந்துகொண்டே அலட்சியப்படுத்தினால் தொலைத்துக் கட்டிவிடுவாள் கிழவி. அகிலாண்டத்தின் கோபம் பொல்லாதது.
அப்படித்தான், அம்மாவாசைக் கிழவன் இறந்தபோது, சம்முடியக்கா, அலட்சியமாக, பிரேதம் எடுக்கும் நேரத்தில் மாரடித்துக்கொண்டு ஓடிவந்தாள். துஷ்டிக்கு வந்த உறவுக் கூட்டம், ஊர்க் கூட்டத்துக்கு மத்தியிலேயே, சம்முடியக்காளை அகிலாண்டக் கிழவி விட்டப் பாட்டு, கேட்ட நாராசமான கேள்விகள், அப்பிய அவமானங்கள்... அப்பப்பா கிழவியின் கோபம் ரொம்பப் பொல்லாததுதான். சம்முடியக்கா, நெடுஞ்சாண்கிடையாக பூமியில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின்தான் சமாதானமானாள் கிழவி.
பிலாக்கணக் கூட்டாளிகளான செவிலி, அன்னம்மா, குப்பாத்தா, பொன்னுத்தாயி, சரோசா, மாரியாயி, மரகதம், காத்தாயி எல்லோரும் வந்தாயிற்று.
***
அயிலாண்டக் கிழவிக்கு ஓங்குத் தாங்கான இரட்டை-நாடிச் சரீரம். தேங்காய்ச் சிரட்டை மாதிரி மொரப்பாக, பம்மிப்-பம்மிச் செம்பட்டையாய், எண்ணைப் பிசுக்குக் காணாதத் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து, ஒரு சுற்றுச் சுற்றி, கோடாலி முடிச்சாய்ச் செருகியிருப்பாள். சதுர முகம். புடலங்காய்க்குக் கல் கட்டி விட்டாற்போல் காதில் தொங்கும் தோடுகள். அறுந்துவிழத் தயாராக இருப்பதுபோல் தோடுக்கு மேல் நீளவசத்தில் தெரியும் காது ஓட்டை. நீளமான, கரடு முரடான மூக்கில் கிடக்கும் பெரிய சைஸ் பேசரி. இந்த வயதிலும் மூக்குக் கண்ணாடிப் போட்டுக்கொள்ளாமல் பெரிய எழுத்து விக்கரமாதித்தன் கதை படிக்கும் பிரகாசமான சின்னக் கண்கள். கடும் கோடையில் வெடித்த வயல் வெடிப்புப் போலப் பரவிய முகச்சுருக்கங்கள்.
நார்மடிச் சேலையை இழுத்துக் கட்டிய கம்பீரம். இழுத்துச் செருகாவிட்டாலும் அவள் உயரத்திற்குப் புடவை, கணுக்காலோடு நின்றுவிடும். அந்தப் புடவைக்குச் சற்றும் பொருத்தமில்லாத சாயம்போன வண்ணத்தில் தொளதொளவென ரவிக்கை.
முகத்தில் நிரந்தரமாகத் தங்கிக்கிடக்கும் சிடுசிடுப்பு. வெற்றிலைக் காவியேறியப் பல்வரிசை. அந்த முகத்துக்கும், கடுமைக்கும், பொருத்தமே இல்லாத கணீர் வெண்கலக் குரல். பிசிரில்லாமல் ஒலிக்கும் ஒப்பாரி. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக ஒப்பாரி பாடுகிற அனுபவத்தால் கிடைத்த ஆளுமை...
அகிலாண்டக்கிழவி ஒப்பாரி பாடுவதற்காகவே செத்துப்போக வேண்டும் என்று தோன்றும் அதை கேட்பவர்களுக்கு. அப்படி ஒரு அபாரத் திறமை அவளிடம்.
நவரச ஒப்பாரியா...! நவரத்தின ஒப்பாரியா...! எமலோக ஒப்பாரியா...! வாழ்க்கை ஒப்பாரியா...! காந்தாமணி ஒப்பாரியா...! மோகனாங்கி ஒப்பாரியா...!. தெய்வலோக ஒப்பாரியா...! – அனைத்து வகை ஒப்பாரியிலும் தேர்ந்த புலமை அவளுக்கு.
தந்தை மகனுக்குப் பாடுவதா...! மகன் தந்தைக்குப் பாடுவதா...! தாய் மகனுக்கா...! மகன் தாய்க்கா...! யார் யாருக்கு, எதை, எங்கு, எப்போது, எப்படிப் பாடவேண்டும் என்ற வரையறையும், ஏன்...? - என்ற தெளிவும் உண்டு அவளிடம்.
புதிது புதிதாகக் கற்பனைச் செய்து இட்டுக்கட்டியும் பாடுவாள் கிழவி. இறந்தவரின் சிறப்பை அவள் இட்டுக் கட்டிப் பாடுவதைக் கேட்டால் நாமும் ஒரு முறை செத்தால் தேவலை என்று தோன்றும் எவருக்கும். குரலில் ஏற்ற இறக்கத்தோடு ஒப்பாரிக்கென இருக்கும் விதிகளை மீறாமல் இறந்தவரின் சிறப்புகளைப் பாடும்போது எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கும்.
தினம் தினம் சாதகம் செய்யும் சங்கீத வித்வான்கூடச் சமயத்தில் எங்கேனும் சுருதிப் பிசகிவிடக்கூடும். ஆனால் எப்போதாவதுதான் பாடினாலும் ஒரு சின்னப் பிசிரோ, பிசகலோ இருந்ததில்லை. அப்படி ஒரு நறுவிசு. அப்படி ஒரு திட்டம்.
ஒப்பாரிக் கூட்டாளிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குந்தினர். குப்பாத்தா பிரேதத்தின் தலைமாட்டில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள்.தனக்குப் பிறகு வாரிசாகக் குப்பாத்தாவைத் தான் ஒப்பாரித் தலைவியாய் நியமித்திருக்கிறாள் அகிலாண்டக்கிழவி.
கூட்டாளிகளை ஒரு முறைத் தீர்க்கமாய்ப் பார்த்தாள் கிழவி; அடுத்த ஒப்பாரிக்கு அச்சாரம் போட்டாள்.
***
குடிசைக்கு வெளியே, இறந்த தொப்ளானின் ஒரே மகன் கலியன் ‘சேருமோடை’யில், தலையில் கை வைத்தபடிக் குத்துக்காலிட்டுக் குந்தியிருந்தான்.
கட்டைக் குட்டையான உருவம். அப்பனைப் போலவே உடம்புக்குப் பொருத்தமில்லாதப் பெரியத் தலை. சோகையால் உப்பலான முகம். உடம்பெல்லாம் சாம்பல் பூசினாற்போலச் சோகை வெளுப்பு. தாடையில் குத்திட்டு நிற்கும் முடி..., வணங்காமுடியாய்த் துருத்தி நிற்கும் செம்பட்டைத் தலைமுடி.
இடுப்பில் கட்டிய நீர்க் காவியேறிய, ஏகப்பட்டக் கறைகளைத் தாங்கிய நாலு முழ வேட்டி. அதற்குப் பொருத்தமாய்க் கழுத்தில் மாலையாய்த் தொங்கும் காசித்துண்டு.
கலியனுக்கு அடுத்த மாதம்தான் முப்பது வயது முடியப்போகிறது, என்றாலும் நாற்பதைத் தாண்டித் தெரியும் முதிர்ச்சி.
செய்தி கேள்விப்பட்டதும் உடனடியாக வந்தத் தலையாரி தாளமுத்து, தலை குனிந்தபடிக் குந்தியிருந்த கலியனின் தலைமேல் ஆதரவாகக் கை வைத்து, கலியா...!
-என்றதும் திரியில் தீ வைத்ததும் ‘விர்...’ரென மேலெழும் ராக்கெட்-வானம் போலக் கலியன் ‘விருட்’டென எழுந்தான். கேவிக் கேவி அழுதான்.
கலியா... நேத்துக் கூட...!
என்று தொடங்கியத் தலையாரியின் கைகளை இறுகப் பற்றியபடிக் கதறினான்.
அழுகைக்கு நடுவே, ‘ராத்திரிக்குப் படுக்கும்போது, வெள்ளன எளுப்புடா, காளவா பிரிக்கப் போவணும்னாரு...! கருக்கல்ல ‘யப்பா... யப்பா...’ன்னேன்... எழுவலையே...!
மேலேப் பேசமுடியாமல் அழுதான் கலியன்.
***
‘தலையாரி எப்போ கிளம்புவாரு. நாம எப்போ போவலாம்...?’ என்ற நினைப்பில், எட்ட நின்றிருந்தவர்கள், தலையாரியையும், கலியனையும் மாறி மாறிப் பார்வையால் துளைத்தனர்.
எப்படி, அகிலாண்டக்கிழவி முதன்முதலில் ஒப்பாரிப் பாடிய பிறகே மற்றவர்கள் வரவேண்டும் என்று முறை இருக்கிறதோ, அதுபோலத்தான் இதுவும். முதலில் தலையாரி வந்து துக்கம் கேட்டுப் போன பிறகுதான் மற்றவர்கள் வந்து விசாரிக்கவேண்டும். இது எழுதப்படாதச் சட்டமாக இருந்தாலும், இன்று வரை யாரும் மீறியதில்லை. இதுபோலச் சாங்கியமாய் மதிக்கப்படுகிற சம்பிரதாயங்கள் கிராமங்களில் நிறைய உண்டு.
அளுவாத கலியா, மனசு தேத்திக்க, அடுத்தாப்ல காரியங்களுக்குப் பணங்-காசு எதுனா...?
சற்றே நீட்டி நிறுத்தினார் தலையாரி.
காசு பணத்துக்கு ஏதும் குறை வைக்கலை எங்கப்பன். பானை நிறையப் பணம் கிடக்குது. ‘மொரை’யெல்லாம் கிளவி சொல்லும்..." - கலியன் அரற்றினான்.
குனிந்து குடிசைக்குள் போனதும், கையாள், நெகிழிப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தச் சாட்டை மாலையை, தலையாரி வாங்கியபோது, அன்னம்மா ஒப்பாரி பாடினாள்.
தலையாரி திரும்பிச் சென்றதும், அக்கம் பக்கத்து ஜனங்கள், கலியனைத் துக்கம் விசாரிப்பதும், உள்ளே சென்று திரும்புவதுமாய் இருந்தார்கள்.
***
பிரேதத்தின் தலைமாட்டில் எரிந்த அரிக்கேன் விளக்கு ‘கபக்... கபக்...’ என்று எகிறிக் குதிக்க, அதை வாயால் ஊதி அவித்தாள் கிழவி. தொடர்ந்து, சீமெண்ணெய்ப்புட்டி எங்கேடாக் கலியா...?
என்றாள்.
அடுப்படீல கெடக்கு... எடுத்தாரட்டா...?
நீ வேணாம். ஏய் அமூஸு...! அடுப்படீல கெடக்கற சீமெண்ணயக் கொண்டாந்து ஊத்துடீ...!
– என்று சொல்லிக்கொண்டே, தரையில் கையூன்றி எழுந்து, கைப்பிடித் துணியால் மூக்கைப் பிழிந்துக்கொண்டே, குடிசைக்கு வெளியே வந்தாள் கிழவி.
***
"ஆம்பளயாளுவ எல்லாம் பல்லு வௌக்கிப், பசியாறி வந்துரலாம்... ‘பளார்...’னு விடியப் பந்த போட்டாவணும். ஏகப்பட்ட வேலைக் கெடக்கு..." - ஆங்காங்கே நின்று கொண்டும், சம்மணம் போட்டும், கால் நீட்டியபடியும், குத்துக்காலிட்டும் குந்தியிருந்தவர்களை நோக்கிப் பொத்தாம் பொதுவில் சொன்னாள் கிழவி.
எலே காத்தவராயா...! கைப்பாரையைக் கொண்டாந்து, பந்தலுக்கு ஊனு.குளி நோண்டுடாலே...!
என்றாள்.
செரி ஆத்தா...!
என்று சொன்னபடியே கடப்பாரை எடுத்துவர ஓடினான் அவன்.
நெற்றிப்பொட்டில் வலது கையைக் கவிழ்த்து மறைத்தபடி, எட்டப் பார்த்தாள் கிழவி - எவடீ அவ...! பொன்னம்மாவா...! மருமவ எப்படி இருக்கு...?. நாளைக்கு அந்திக்குள்ற பிரசவமாயிரும். கவலைப்படாதே...! நீ என்னாத்துக்குடீ எளவு வீட்டாண்ட வந்து நிக்கிறியாம்... போடீ வூட்டப் பாக்க... போக்கத்தவளே...!
– என்று உரிமையாகக் கடிந்து கொண்டாள்.
எதனாச்சும் ஒதவி வேணும்னா கேளு ஆத்தா செய்யுறேன்.
வேணுந்தேன்...! உனக்கே, புள்ளத்தாச்சி மருமவ இப்பவோ-அப்பவோனு இருக்காளேன்னு யோசிக்கறேன்...
அதுக்கும் இதுக்கும் என்னாத்தா...! எதுனா தேவைன்னாச் சொல்லு, செய்யிறேன். சமயத்துக்குச் ஒதவிச் செய்யத்தானே அக்கம்பக்கம்...!
செரி...! ஒண்ணு செய்யி. சுக்கு-மல்லித் தட்டிப்போட்டு ஒரு கலயத்துல சூடாக் காச்சிக் கொண்டா. மாரடிச்ச நெஞ்சுக்கு எதமா ஊத்திக்கிடறோம்...! ஏண்டீ பொன்னம்மா...? ஒன் மவனைப் பத்தி, எங்க இருக்கான்... ஏது செய்யிறான்னு சேதி எதுனாத் தெரிஞ்சிச்சாடீ...!
...
- பொன்னம்மா மௌனமாயிருந்தாள்.
அது எங்கன குடிபோதைல வுளுந்து கிடக்குதோ...? எல்லாம் நீ வாங்கிக்கிட்டு வந்த வரம்... கிரகச்சாரம்தான் போ...! போ...!
***
எலே கலியா...! நீ சின்னக் கொளந்தயில்லே...! அவனவன் எரியற வூட்டுல என்னத்தை புடுங்கலாம்னு நிப்பானுவ. நான் குத்துக்கல்லாட்டம் நின்னு, அததுக்கு உள்ளதைச் சொல்லுதேன். என்னைக் கலக்காம நீ ஏதும் செஞ்சிராதே...!
கிழவி சொல்லிக்கொண்டிருந்ததைக் காத்தவராயன் கவனமாகக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தான். கிழவி கண்ணோடு-கண் பார்த்துவிட, அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் அவன்.
வுளுந்தவன் சிரிச்சானாம் வெக்கத்துக்கு அஞ்சி...! - ஒட்டுக் கேக்காம கவனமா வேலையப்பாருடாச் சோமாரி...!
- காத்தவராயனை வசைப் பாடிக் கொண்டிருந்தபோதுதான் ஆத்தா...! சுக்குத்தண்ணி...!
என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.
எலே காத்தவராயா...! அந்தச் சுக்குத் தண்ணியக் கொண்டுபோயி ‘மாரடி வாயிக்கு’க் குடு...! மொதல்ல ஒரு லோட்டா நீ ஊத்திக்க...!
- என்றதும் கடப்பாறையை தரையில் குத்தி ஊன்றிவிட்டு எழுந்து வந்தான்.
அந்த நேரத்துக்குச் சூடானச் சுக்குத் தண்ணீர் இதமாக இருந்தது.
***
எட்டு மணிக்கெல்லாம், மொத்தத் தெருவும் பரபரப்பாகிவிட்டது.
தெருவில் ஒரு துஷ்டியென்றால், எவரும் வேலைக்குப் போகக்கூடாதென்றத் தெருக் கட்டுப்பாட்டால், தெருவாசிகளெல்லாம் இழவு-வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டும், நின்றபடியும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.
வெற்றிலை, சீவல், புகையிலை, சுண்ணாம்பு டப்பா, பொறி கடலை, அன்றைய நாளிதழ்கள் - எல்லாம் வாங்கி வந்து முறையாக வைத்துவிட்டான் நாகராசு.
பாடைக்கு வேண்டிய மூங்கில், பச்சைமட்டை, வாழைக்கன்று, பந்தல்கயிறு, - எல்லாவற்றையும் கொண்டு சேர்த்தான் சுடலை.
எலே, வள்ளுவரக் காணலயேடா...? தாரைத் தம்பட்டத்தக் காணலியேடா...? அளைக்கப் போனது யாரு...?
அகிலாண்டக்கிழவி, பொதுவாகத் தொடுத்தாள் கேள்வி.
போ...வாரோம்...னு சொன்னான் ஆத்தா... ‘தப்பு’ தம்புசாமி...!
என்றான் மாணிக்கம்.
இருந்து கையோட அளைச்சி வராலாமில்ல...! நீ அவுசரமா இங்கே வந்து எந்தப் பாடைல போவப்போறே...?
- என்று கடிந்து கொண்டிருக்கும்போதே, தெரு முனையில், தாரை, தம்பட்டம், கொம்பு, உறுமிமேளம்... எல்லாம் வந்துகொண்டிருந்தன. அவர்களோடு போதை ரெங்கனும் வந்தான்.
***
அகிலாண்டக் கிழவிக்கு, ரங்கனைக் கண்டதும் வயிறு பற்றியெரிந்தது. ‘இன்னிக்கோ... நாளைக்கோ பிரசவமாவுற நிலைமைல பொண்டாட்டி இருக்கா. இப்பிடிச் சீரழியறானே இந்த ரெங்கன்...! பொன்னம்மாவுக்கு இப்படி ஒரு மவனா...!’ - என்று நினைத்த கிழவியின் கண்கள் பனித்தன.
கலியன் வீட்டுக்கு முன், நடு வீதியில், புகைந்துகொண்டிருந்த நெருப்பில் கூளத்தைப் போட்டுக் கொளுத்தி, எகிறவிட்டு, தம்பட்டம், உறுமிமேளமெல்லாம் காய்ச்சிப் பதப்படுத்தினார்கள்.
ட்...ரான்...ட்...ரா...ன்...
... ணக்கு... ணக்கு...
...ப்ரும்... ப்ரும்...
" என்றெல்லாம் உரசியும், தட்டியும், சுண்டியும், பதம் பார்த்துப் பார்த்து, சரியான ‘விகு’ கிடைக்கும் வரை காய்ச்சினார்கள்.
***
தாரையின் கதறல், சாவுச் சங்கின் கூவல், கொம்பின் பிளிரல், தப்பின் தட்டல், எல்லாம் கலந்து ஒலிக்கத் தொடங்கிய அந்த ஓசைக்குத் தக்கபடி, போதை-ரங்கன், விகாரமாக முகம் சுருக்கியபடி, கோணல்மாணலாக, ‘தய்யாத் தக்கடியென...’ ஆட்டம்போட்டான்.
சின்னஞ் சிறுசுகளுக்கும், குஞ்சுக் குளுவான்களுக்கும் ரங்கனின் ஆட்டம் வேடிக்கையாக இருந்தது. - ‘நற...நற...வெனப் பல்லைக் கடித்தாள் அகிலாண்டக் கிழவி.
***
இந்த நேரத்தில்தான் பொன்னம்மாவின் புருஷன் ஆத்தா... ஆத்தா.
- என எட்ட நின்று அழைத்தான். -அவன் அழைப்பில் அவசரமிருந்தது.
மருமவளுக்கு பிரசவவலி எடுத்துடுச்சு ஆத்தா...!
- குரலில் பதற்றமிருந்தது.
"பதட்டப்படாதே...! அஞ்சு நிமிசத்துல