Antha Yamunai Karaiyoram
()
About this ebook
‘அந்த யமுனைக் கரையோரம்’ என்ற இந்த நூலில் மொகலாய பேரரசர் அக்பரின் இறுதிக் காலம் முதல் பேரரசர் ஷாஜகானின் இறுதிக் காலம் வரை நாவலாக எழுதப்பட்டுள்ளது. இந்நாவலில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. நாவலுக்கு சுவைகூட்டுவதற்காக, வரலாற்றுச் சம்பவங்களோடு சில புனைவுகளையும் கலந்து எழுதியுள்ளேன்.
Related to Antha Yamunai Karaiyoram
Related ebooks
Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsKarna Parambarai Rating: 5 out of 5 stars5/5Paanaikkul Pona Yaanai! Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsKalavazhi Narpathu Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsPhone Off Pannittu Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsMahaangal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanthan Varuvaan Rating: 0 out of 5 stars0 ratingsArputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam! Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Sankara Rating: 5 out of 5 stars5/5Rasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsThi.Ja. Noottrandu 50 Sirukathaigal - Oru Paarvai! Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Analai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Paandimaadevi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsThamasha Varigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsSree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsIshwara Allah Tere Naam Rating: 0 out of 5 stars0 ratingsMaguda Vairam Rating: 0 out of 5 stars0 ratingsPancha Narayana Kottam Rating: 5 out of 5 stars5/5Sirappuyar Seevagasinthamani Rating: 0 out of 5 stars0 ratingsGauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsMadhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Nathi Rating: 0 out of 5 stars0 ratingsRamayanam Ayodhya Kandam – Kambar – Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Antha Yamunai Karaiyoram
0 ratings0 reviews
Book preview
Antha Yamunai Karaiyoram - Thanjai Vasanthalakshmi
https://www.pustaka.co.in
அந்த யமுனைக் கரையோரம்
(வரலாற்று நாவல்)
Antha Yamunai Karaiyoram
Author:
தஞ்சை வசந்தலெட்சுமி
Thanjai Vasanthalakshmi
For more books
https://www.pustaka.co.in/home/author/thanjai-vasanthalakshmi
பொருளடக்கம்
என்னுரை
நூலாசிரியர் பற்றி
(முதற் பதிப்பின் பதிப்பக உரை)
யானைச் சண்டை
அக்பரின் இறப்பு
குஸ்ரூ தப்பிச் செல்லல்
குஸ்ரூவின் புரட்சி
குஸ்ரூவை குருடாக்குதல்
குரு அர்ஜுன்சிங் கொலை
நிழலரசி நூர்ஜஹான்
நூர்ஜஹானின் ஆட்டம்
மேவார் போர்
குஸ்ரூவின் கொலை
சிம்மாசனப் போட்டி
ஷாரியார் கைது
ஹாஜகான் பேரரசராதல்
போர்ச்சுக்கீசியர்களை அடக்குதல்
அவள் பறந்து போனாளே
காதல் சின்னம்
ஔரங்கசீப்
தாராவின் பொறாமை
இரும்பிலே ஒரு இதயம்
தாரா தற்காலிக அரசராதல்
ஔரங்கசீப் அதிரடி
என்னுரை
இது எனது மூன்றாவது நூலாகும்.
இந்தியா பல மதங்களின் தாயகம். சைவம், வைணவம், சமணம், புத்தம், சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவம் எனப் பல மதங்கள் இந்தியாவில் வேர்விட்டு வளர்ந்துள்ளன. அதில் காபூல் பிரதேசத்திலிருந்த வந்த மொகலாயர்கள் கி.பி.1526 முதல் கி.பி. 1857 வரை கிட்டத்தட்ட முந்நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளனர்.
பேரரசர் பாபர் தொடங்கி வைத்த மொகலாய சாம்ராஜ்ஜியம் பேரரசர் ஔரங்கசீப் காலம்வரை கட்டிக்காக்கப்பட்டு கட்டுக்கோப்பான ஆட்சி நிலவியது எனலாம். அதற்குப்பின் வந்த மொகலாய அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்த காரணத்தால் தங்களது ஆட்சிப் பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் தாரைவார்க்கும்படி நேரிட்டுவிட்டது.
நான் ஒரு வரலாற்றுப் பாட ஆசிரியை என்பதனால் மொகலாய வரலாற்றினைத் துல்லியமாக படித்த போது, சில சம்பவங்கள் என் மனதினில் ஆழப் பதிந்துவிட்டன.
ஆட்சியும் அதிகாரமும் தனக்கும் தனக்குப்பின் தன்னுடைய வாரிசுகளுக்கும் மட்டுமே இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் மனதிலும் புரையோடிப் போன சிந்தனைதான்.
ஆனால். மொகலாய ஆட்சியாளர்கள் ஒருபடி மேலே நின்றனர். ஆட்சி, அதிகாரம் இவை இரண்டும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என முடிவு செய்தனர். தனது சிம்மாசனத்திற்குப் போட்டியாக பெற்ற மகனே வந்தாலும் அடுத்து சிரச்சேதம்தான்.
உடன் பிறந்த சகோதரர்களையும் மொகலாய மன்னர்கள் விட்டு வைக்கவில்லை. மொகலாயர் ஆட்சியில் கலைகள் செழித்து வளர்ந்தாலும் சிம்மாசனத்திறகான பற்பல துரோகங்களும் வன்மங்களும் நிறைந்ததுதான் மொகலாயர் ஆட்சி.
‘அந்த யமுனைக் கரையோரம்’ என்ற இந்த நூலில் மொகலாய பேரரசர் அக்பரின் இறுதிக் காலம் முதல் பேரரசர் ஷாஜகானின் இறுதிக் காலம் வரை நாவலாக எழுதப்பட்டுள்ளது.
இந்நாவலில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. நாவலுக்கு சுவைகூட்டுவதற்காக, வரலாற்றுச் சம்பவங்களோடு சில புனைவுகளையும் கலந்து எழுதியுள்ளேன்.
இதில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தும், மொகலாய வரலாற்று நூல்கள் சிலவற்றில் நான் படித்ததே. மேலும் கூகுள் மற்றும் விக்கிபீடியா முதலியவற்றின் உதவியோடு பல தரவுகளை அறிந்து கொண்டு இந்நாவலைப் படைத்துள்ளேன்.
‘அந்த யமுனைக் கரையோரம்’ என்ற நாவலைப் படியுங்கள். அந்த யமுனை நதியில் நீராடியதைப் போன்ற புத்துணர்வு பெறுவீர்கள். வாசித்து முடித்தபின் உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சி.க. வசந்த லெட்சுமி தஞ்சாவூர்
அலைபேசி: 8825495680
சில குறிப்புகள்
நூலாசிரியர் பற்றி
வசந்த லெட்சுமி
தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டவர்.
பெற்றோர் எஸ். கல்யாணசுந்தரம்-எஸ்.கே. கல்யாணியம்மாள்.
வரலாற்று பாடத்தில் M.A., BEd., & Mphil பட்டம் பெற்றவர்.
33 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.
இது இவரது மூன்றாவது நூல்.
இவரது படைப்புகள் பிரபல வார, மாத இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகளும், குறுநாவல்களும் பல அமைப்புகள் மற்றும் பத்திரிகைகள் நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன.
இவரது படைப்புகள் அனைத்தும் ஆழ்ந்த சொற்களின்றி எளிமையான சொற்களால் படைக்கப்படுவதே இவரது பலமாகும்.
(முதற் பதிப்பின் பதிப்பக உரை)
புதிய தடம் பதிக்கப் புறப்பட்ட...
புதிய தடம் பதிக்கப் புறப்பட்ட புதிய வரலாற்றுப் புனைவு எழுத்தாளர் தஞ்சை வசந்த லெட்சுமியின் அந்த யமுனைக் கரையோரம் நாவல் மொகலாய சாம்ராஜ்ஜியம் வலுவுடன் இருந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறது.
பேரரசர்கள் எப்படிப் பேரரசர்களானார்கள் என்ற பின்புலம் பற்றிப் பேசுகின்றது. பேரரசர்களின் குடும்பம், நட்பு, காதல் போன்ற தளங்களுக்கும் அவர்களின் அரச விவகாரங்களுக்கும் இடையிலான ஊடாடலைப் பேசுகிறது.
அரசு, பேரரசு பற்றிப் பேசினால் அரசியல் பேச வேண்டும் என்பதல்லாமல் வரலாற்றை பார்வையாளர் நிலையில் இருந்து வரலாறாக மட்டும் பதிவு செய்திருக்கிறார் தஞ்சை வசந்த லெட்சுமி.
வழக்கமான வரலாற்று நாவல்களின் கதாநாயகச் சார்பு எழுத்தாக அல்லாமல் அனைத்துப் பாத்திரங்களுக்கும் சமமரியாதை தரும் எழுத்து நடை தஞ்சை வசந்த லெட்சுமியினுடையது.
வரலாற்று நிகழ்வுகளை திகட்டாத அளவுடன் புனைவு கலந்து நாவலாக உருவாக்கியுள்ளார். அவருடைய முதல் வரலாற்றுப் புனைவு நாவலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்
கதவு கதிப்பகம்
அத்தியாயம் 1
யானைச் சண்டை
அரண்மனையின் அந்த பரந்து விரிந்த மைதானத்தில், வீரதீர சாகசப் போட்டிகள் மிக மிக ஆர்ப்பாட்டமாய் நடந்து கொண்டிருந்தன. மக்களின் ஆரவார ஒலிகளுக்கு இடையே, வீரர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டி, மிகவும் ஆக்ரோஷமாய் போராடிக் கொண்டிருந்தனர். உப்பரிகையில் அமர்ந்தப்படி போட்டிகளை இரசித்துக் கொண்டிருந்த பேரரசர் அக்பர் பாதுஷா, இடையிடையே தன் கரங்களைத் தட்டி வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அவரது அருகினில் இளவரசர் சலீம், பேரன்கள் குஸ்ரூ, மற்றும் குர்ரம் (ஷாஜகான்) அமர்ந்திருந்தனர். அனைவரின் விழிகளிலும் மிகுந்த ஆர்வமும், பரபரப்பும் மாறி மாறி தாண்டவமாடிக் கொண்டிருக்க, அக்பர் சக்கரவர்த்தி திடீரென தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். உடன் அந்த மைதானத்தில் மிகுந்த பரபரப்பும், இரகசிய பேச்சுகளும் ஏராளமாய் எழுந்து, பின் மெல்ல அடங்கியது.
ஏதாவது அவசர அறிவிப்பு இருந்தாலொழிய சக்கரவர்த்தி எழுந்து நிற்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அங்கிருந்த அனைவரின் விழிகளும், போட்டிகளை புறந்தள்ளிவிட்டு, சக்கரவர்த்தியின் மீது நிலைத்து நின்றது. ஊசி விழுந்தால்கூட ‘நங்’கென கேட்கும் அளவுக்கு ஆழ்ந்த நிசப்தம் நிலவ, சக்கரவர்த்தியே அந்த மௌனத்தை கலைத்தார். மெல்ல தன் தொண்டையினை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
போட்டிகளை இரசித்துக் கொண்டிருக்கும் மகா ஜனங்களே. இதுவரை நமது வீரர்களின் வீர தீரங்களைத்தானே இரசித்தீர்கள். இதோ இன்று ஒரு புதுமையான போட்டியினையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் அமைய உள்ளது.
ஓங்கிய குரலில் பேசிக் கொண்டிருந்த சக்கரவர்த்தி, தன் உரையினை சற்றே நிறுத்த, கூட்டத்தில் கனத்த அமைதி நிலவியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்து நிகழ உள்ள போட்டியை அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் அதிகரித்தது. அதன் விளைவாய் அரசரின் அறிவிப்பினை கூர்ந்து நோக்கத் தொடங்கினர்.
இதுவரை இந்த மைதானத்தில், நம் நாட்டு மக்கள் வளர்த்துவரும், யானைகளின் சண்டகளைத்தானே கண்டுகளித்துள்ளீர்கள?
ஆம்... ஆம்
என்ற கோஷம் கூட்டத்திலிருந்து அவரின் வினாவிற்கு விடையாய் ஏககாலத்தில் ஒலித்தது.
சக்கரவர்த்தி தன் இரு கரங்களையும் மேலே உயர்த்தி மக்களை அமைதி காக்கும்படி சைகை செய்தார். அடுத்த நொடியே விண்ணை முட்டிக் கொண்டிருந்த கோஷம் சட்டென அடங்கத் தொடங்கியது.
இன்று, உங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் நம் அரண்மனையைச் சேர்ந்த இராஜ யானைகள் இந்த மைதானத்தில் தங்களின் வீரத்தை நிலைநாட்ட உள்ளன. அனைவரும் கண்டுகளிக்கலாம்.
அக்பர் சக்கரவர்த்தி திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவாரென பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அரச யானைகள் போட்டிகளில் பங்கேற்றதில்லை. இது புதிய அறிவிப்பு. அவரின் இத்தகைய எதிர்பாராத அறிவிப்பால், மைதானத்தில் சலசலவென பேச்சுக் குரல்கள் எழுந்துக் கொண்டிருந்தன.
அக்பர் சக்கரவர்த்தி வாழ்க!
வென கோஷங்களும் விண்ணை பிளந்துக் கொண்டிருந்தன.
தந்தையே...! இதுவரை அரச யானைகள் போட்டிகளில் பங்கேற்றது இல்லையே...? தங்களின் இந்த அறிவிப்பு மிகுந்த வியப்பாகவே உள்ளது...!
மொகலாய இளவரசர் சலீம் (ஜஹாங்கீர்) தனது விழிகளில் ஏகப்பட்ட அதிர்வுகளைத் தாங்கி தனது தந்தையிடம் மெல்ல வினவினார். ஆனால் மொகலாய சக்கரவர்த்தி தனது மகனுக்கு பதிலேதும் உரைக்காது மௌனம் காத்தார். அவரது இதழ்கடையோரம் மெல்லிய மந்திர புன்னகை ஒன்று தோன்றி, மறுநொடியே மறைந்து கொண்டிருந்தது.
தாத்தா...! இராஜ யானைகள் என்றால் யாருடைய யானைகள்...?
பதினேழு வயதே நிரம்பிய சலீமின் புதல்வன் ‘குஸ்ரூ’ தனது தாத்தாவிடம் ஆர்வமாய் வினவ, மொகலாய சக்கரவர்த்தி மென்மையான புன்முறுவல் ஒன்றை பேரனுக்கும் வெளியிட்டார். உடன் மைதானத்தில் குழுமியிருந்த மக்களைப் பார்த்து பேசத் தொடங்கினார்.
மகா ஜனங்களே...! என்னுடைய புதல்வன் சலீமின் யானையும், எனது பேரன் குஸ்ரூவின் யானையும், நேருக்கு நேர் மோதி சண்டையிட உள்ளன. அனைவரும் கண்டு இரசியுங்கள்.
பேரரசர் அக்பரின் உரையினைக் கேட்ட மொத்த கூட்டமும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றது. பின் சுதாரித்து பலத்த கரக்கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்யத் தொடங்கியது.
தந்தையின் அறிவிப்பினைக் கேட்ட இளவரசர் சலீமின் மனதில் மிகப்பெரிய குழப்பம் சூழ ஆரம்பித்தது. இது வெறும் யானைகளுக்கான போட்டியல்ல. தனது தந்தை வேறு ஏதோ திட்டத்துடனேயே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பதை அவரின் மனம் சில நொடிகளிலேயே புரிந்து கொண்டது. மிகுந்த எரிச்சலுடன் அவர் தன் தந்தையை நோக்கினார்.
யார் அங்கே...?
அக்பர் பாதுஷா தனது கரங்களைத் தட்டி அழைத்தார்.
மறுநிமிடமே மெய்க்காவல் படையினர் இருவர் மிக விரைந்து வந்து அவர் முன் பணிந்து வணங்கி நின்றனர்.
யானைக் கொட்டடிக்கு உடனே விரைந்து செல்லுங்கள். இளவரசர் சலீமின் யானையினையும், பேரன் குஸ்ரூவின் யானையினையும் போட்டி நடைபெறும் இடத்திற்கு விரைந்து அழைத்து வாருங்கள்
பாதுஷாவின் கட்டளைக்குப் பணிந்த மொகலாய வீரர்கள் இருவரும் யானைகளை அழைத்துவர, யானை கொட்டடியை நோக்கி விரைந்தனர்.
என் தந்தையின் யானையோடு, எனது யானை மோதப் போகின்றதா...? மிக்க மகிழ்ச்சி தாத்தா. பலே...! பலே...! நல்ல போட்டிதான். நான் இதனை மிகுந்த ஆவலுடன் வரவேற்கின்றேன்
குஸ்ரூ விழிகள் பளபளக்க, மனம் கொள்ளா பூரிப்புடன் எக்காளமிட, அக்பர் பாதுஷா அர்த்தமுள்ள இரகசிய புன்னகையொன்றை பேரன் மீது வீசத் தொடங்கினார்.
பாதுஷாவின் இரகசிய புன்னகையை பேரன் குஸ்ரூ உணர்வதற்குள், அவரது மகன் சலீம் கண் இமைக்கும் நேரத்திற்குள் உணர்ந்து கொண்டார். தனது தந்தை மொகலாய சக்கரவர்த்தியின் திட்டம் அவருக்கு அப்பட்டமாகவே புரிந்து போனது.
சிறிது நாட்களாகவே அக்பர் பாதுஷாவிற்கு தன் பேரன் குஸ்ரூ மீது அளப்பரிய பாசமும், நேசமும் பொங்கிக் கொண்டிருப்பதை சலீம் உணர்ந்துதான் இருந்தார். குஸ்ரூவை இந்த பரந்து விரிந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசாக நியமிக்க சக்கரவர்த்தி ஏற்பாடுகள் செய்து வருகிறாரென, இரகசியத் தகவல்கள் சலீமின் செவிகளை எட்டிய வண்ணம்தான் இருந்தன.
குஸ்ரூ தனது சொந்த மகன் தான் என்றாலும், இந்த மாபெரும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தை தனது மகனுக்கு தாரைவார்த்திட சலீமின் மனம் துளியும் விரும்பவில்லை.
சலீம் தனது பதினாறாவது வயதிலேயே, மது, மாது போதைகளுக்கு அடிமையாகி அந்தப்புரமே கதியென கிடப்பவர். அவரின் முப்பது வயதுக்குள் பத்தொன்பது மனைவிகள். இராஜ்ஜியத்தைப் பற்றி துளியளவு அக்கறையும் இன்றி இராஜ சுகபோகங்களில் திளைத்துக் கொண்டிருந்தார் அவர்.
சலீமின் முதல் மனைவி மன்பாவதீபாய்க்கு பிறந்தவர்தான் குஸ்ரூ. குஸ்ரூ இளம் வயதிலேயே, கல்வியில் சிறந்தவராகவும், பற்பல கலைகளை கற்றுத் தேர்ந்தவராகவும், மிகுந்த ஒழுக்க சீலராகவும் விளங்கினார். மேலும் அக்பர் சக்கரவர்த்தியோடு இணைந்து, இராஜாங்க விஷயங்களில் அதீத நாட்டம் உடையவராகவும் உருவாகிக் கொண்டிருந்தார்.
மொகலாய சக்கரவர்த்தி அக்பருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. தனக்குப் பின் தன் மகன் சலீமைவிட, பேரன் குஸ்ரூவிற்கே இந்த மாபெரும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தினை ஆள்வதற்கு உரிய அனைத்து தகுதிகளும் இருப்பதாக பேரரசர் அக்பர் வெகுவாகவே எண்ணத் தொடங்கினார். மொகலாய பேரரசின் அடுத்த வாரிசாக குஸ்ரூவை அறிவிக்க தகுந்த காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் பாதுஷா.
பேரரசர் பாபரால் அரும்பாடுபட்டு எழுப்பப்பட்ட மொகலாய பேரரசை, அக்பர் மென்மேலும் விரிவுபடுத்தி, உலகளவில் ஒருவலிமை வாய்ந்த அரசாக உருவாக்கி வைத்திருந்தார். இத்தகைய பெருமை மிகுந்த பேரரசை தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்க, அக்பர் விரும்பியதில் தவறேதும் இல்லைதான்.
அக்பரின் எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறியிருந்தால், நூர்ஜஹான் என்ற நிழல் அரசி, மொகலாய வரலாற்றின் பக்கங்களிலிருந்து காணாமல் போயிருக்கக்கூடும். ஷாஜகானின் காதலும், அதன் நினைவாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் உலக அழகியலான பளிங்குக்கல் தாஜ்மஹாலும், நமக்கு கிட்டாமலேயே போயிருக்கலாம். ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டுமென்பது காலத்தின் நியதியோ...?
திடீரென மைதானத்தில் பலத்த ஆரவாரம் எழ ஆரம்பித்தது. மிகப்பெரிய புழுதிப் படலங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இராஜ யானைகள் இரண்டும், மிகப்பெரிய கரியமலைக் குன்றுகள் நகர்ந்து வருவது போல் ஆவேசமாய் அழைத்துவரப்பட்டு மைதானத்தின் மத்தியில் நிறுத்தப்பட்டன.
தந்தை சலீமும், மகன் குஸ்ரூவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மதங்கள் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர். அதில் வன்மமும், குரோதமும், சொல்லொண்ணா ஆவேசமும் அடங்கியிருந்தன.
ம்...! போட்டி ஆரம்பிக்கலாம்.
அக்பர் பாதுஷா அறிவிக்க, யானைகளில் முதுகில் வீற்றிருந்த பாகன்கள் அவைகளின் வாலினை முறுக்கியும், நெற்றிப்பொட்டில் ஈட்டிகளால் தாக்கியும், செவிகளில் மந்திரங்கள் ஓதியும் யானைகளுக்கு சினத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வலியினை பொறுக்க முடியாத களிறுகள் உன்மத்தம் அடைந்தன. தனது துதிக்கையை உயர்த்தி ஆங்காரமாய் பிளிற ஆரம்பித்தன.
தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்கும் உத்வேகத்தோடு அவைகள் ஒன்றோடு ஒன்று ஆவேசமாய் மோத ஆரம்பித்தன. யானைகளின் முதுகினில் அமர்ந்திருந்தவர்கள் சட்டெனக் கீழே இறங்கி ஓடத் தொடங்கினர்.
போட்டி துவங்கியதில் இருந்தே குஸ்ரூவின் யானை வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க, இளவரசர் சலீமின் முகம் பொலிவிழந்து கொண்டிருந்தது. குஸ்ரூவின் வதனத்திலோ மகிழ்ச்சியின் ரேகைகள் படர்ந்து கொண்டிருந்தன. அவரது ஆதரவாளர்கள் வெற்றி முழக்கங்களை வெளியிடத் தொடங்கினர்.
எதிர்பாராத ஒரு தருணத்தில் சலீமின் யானை, பலம் கொண்ட மட்டும் குஸ்ரூவின் யானையினை தாக்கியது. வலியினை தாங்க இயலாத குஸ்ரூவின் யானை தள்ளாடியபடியே கீழே விழுந்துவிட்டது.
இளவரசர் சலீம் தன் கரங்களை படபடவென தட்டிக் கொண்டு, வெற்றி எக்காளமிட்டவாறே தனது யானையை நோக்கி அவசரமாய் ஓடினார்.
ஒரு நொடிப் பொழுதில் வெற்றிக் கனி மாறியதை ஜீரணிக்க இயலாத குஸ்ரூவின் முகம் அவமானத்தால் சிவக்கத் தொடங்கியது. ஆத்திரம் கண்ணை மறைக்க தன் இடையில் செருகியிருந்த வாளை சரேலென உருவினார் குஸ்ரூ. தன் தந்தையை நோக்கி வாளுடன் அவசரமாய் ஓடினார். கண் இமைக்கும் பொழுதில் சலீமின் கழுத்தினில் ஆக்ரோஷமாய் வாளையும் வைத்துவிட்டார்.
யானைகளின் மோதலை வைத்து எக்காளமிட வேண்டாம் தந்தையே...! தாங்கள் ஒரு உண்மையான மொகலாய இளவரசன் என்றால், என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள். நானா... நீங்களாவென ஒரு கை பார்த்துவிடுவோம்.
தந்தை சலீமை யுத்தத்திற்கு அறைக்கூவி அழைத்தார் மகன்.
தான் பெற்ற மகனே, தன் கழுத்தினில் உடைவாளை வைத்து, யுத்தத்திற்கு அழைப்பானென சலீமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்து நின்றவர், மறுநொடியே