Madhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel
()
About this ebook
மதுரை தேனி மாவட்டத்தில் பிறந்த நான் கலெக்டர் ஆக ஆசைப்பட்டு இந்திய மருத்துவ கழகத்தின் சமூக ஆராய்ச்சியாளராக சென்னையில் பணி புரிந்தேன். ஓய்வு பெற்ற பின் எழுத்தாளர் அவதாரம் எடுத்து 30 நாவல்களை 5 ஆண்டுகளில் எழுதியுள்ளேன்.
சோழர் காலப் பொக்கிஷங்களில் அலைகடல் நடுவே பலகலம் செலுத்தி கடாரம், சாவகம், இலங்கை போன்ற கீழ்திசை நாடுகளை வென்ற கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் அணுக்கி நக்கன் பரவை நங்கையின் சிவப் பணி பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது. தன் அணுக்கியின் பெயர் வரலாற்றில் நிலை பெற வேண்டும் என்ற ஆசையில் தன் காதலின் சின்னமாக ராஜேந்திர சோழன் அவள் பெயரில் பரவைபுரம் என்ற ஊரையும் பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர் என்ற கோயிலையும் நிர்மாணித்தது நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
Read more from Mohana Suhadev
Azhagey! Unnai Aarathikirean! Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanin Pennmanigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Madhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel
Related ebooks
Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanudan Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsManipallavam Rating: 4 out of 5 stars4/5Paandimaadevi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Rangarattinam Rating: 5 out of 5 stars5/5Vandhiyathevan Vaal Rating: 4 out of 5 stars4/5Marava Mannin Meetpar Punithar Arulanandar Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi - Chapter 21 Rating: 4 out of 5 stars4/5Thailand Rating: 0 out of 5 stars0 ratingsPanch Dwaraka Rating: 0 out of 5 stars0 ratingsParanthakan Magal Rating: 5 out of 5 stars5/5Meendum Samyukthai Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nayagi Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsThanjavurum, Sankaranum, Kaviriyum Rating: 5 out of 5 stars5/5T. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Uruvaagiral Rating: 0 out of 5 stars0 ratingsRani Mangammal Rating: 0 out of 5 stars0 ratingsKongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsAnaiya Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 5 Rating: 5 out of 5 stars5/5Ithu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanum Naanum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Madhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel
0 ratings0 reviews
Book preview
Madhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel - Mohana Suhadev
https://www.pustaka.co.in
மதுர காவியம் - ராஜேந்திர சோழனின் வரலாற்று நாவல்
Madhura Kaaviyam - Rajendra Chozhanin Varalaattru Novel
Author:
மோகனா சுகதேவ்
Mohana Suhadev
For more books
https://www.pustaka.co.in/home/author/mohana-suhadev
பொருளடக்கம்
முதல் பாகம் – மதுராந்தகன்
1. ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
2. பங்குனி உத்திரத் திருவிழா!
3. ஆடல் காணீரோ?
4. மந்திராலோசனை
5. நடந்தாய் வாழி காவேரி!
6. காதல் தூது
7. இளவரசனின் திருமணப் பேச்சு
8. பழிக்குப் பழி
9. மதுராந்தகன் விருப்பம்
10. பரவையின் காதல்
11. அந்தஸ்து பேதம்
12. குந்தவையின் காதல்
13. சிற்றன்னையின் பாசம்
14. திருமுறை கண்ட சோழன்
15. அரச திருமணங்கள்
16. சோழர்களின் கப்பற் படை
17. தென்னாட்டு திக்விஜயம்
18. காந்தளூர்ச் சாலை கலமறுத்தல்
19. வேங்கிப் போர்
20. சாவா மூவா பேராடுகள்
21. பட்டாபிஷேக ஆலோசனை
22. பனையபுரத்தில் பரவையின் புரட்சி
23. வீரமல்லனின் நகைத் திருட்டு
24. தஞ்சை பெருவுடையார் கோயில்
25. சிவபாத சேகரன்
26. பட்டாபிஷேக விழா
27. சாளுக்கியப் படையெடுப்பு
28. ராஜேந்திரரின் வெற்றிகள்
இரண்டாம் பாகம் - கங்கை கொண்ட சோழன்
29. காட்டுக்குள் வஞ்சகர்கள்
30. ஸ்ரீ ராஜராஜ விஜயம்
31. ஆல மரம் வீழ்ந்தது
32. பரவையின் சாமர்த்தியம்
33. ஈழப் படையெடுப்பு
34. பாண்டியர் மணிமுடி
35. ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
36. செங்கதிர் மாலை
37. பஞ்சவன் மாதேவீஸ்வரம்
38. புதிய தலைநகரம்
39. ஜெயசிம்மனின் வஞ்சகம்
40. ரத்தினாவதியின் சதி
41. மேலை சாளுக்கிய படையெடுப்பு
42. வேங்கியில் உயிர் பலி
43. பழிக்குப் பழி
44. திருமண ஏற்பாடுகள்
45. இந்திர தத்தன்
46. கங்கை படையெடுப்பு
47. கஜினி முகமது படையெடுப்புகள்
48. வேங்கி பட்டாபிஷேக விழா
49. கங்கை கொண்ட சோழபுரம்
50. கங்கை கொண்ட சோழீஸ்வரர்
மூன்றாம் பாகம் - கடாரம் கொண்டான்
51. மாதங்கியின் அரங்கேற்றம்
52. சூர்யவர்மன்
53. சோழ நாட்டுப் பயணம்
54. பிரிந்தவர் கூடினால்...
55. காதலர்கள் சந்திப்பு
56. பரவையின் சிவத் தொண்டு
57. கடார படையெடுப்பு
58. போர் எப்பொழுது?
59. காதல் பிரிவு
60. மாடமாலிங்கம்
61. கடற்போர்
62. கடார வெற்றி
63. பரவை நங்கையின் திருப்பணி
64. கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்
65. ஆழித் தேரோட்டம்
66. பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்
67. ராஜேந்திரரின் ஆலயத் திருப்பணிகள்
68. பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட சோழன்
69. முடிந்த சகாப்தம்
70. அமரக் காதலர்கள்
ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி
மேற்கோள்கள்
முதல் பாகம் – மதுராந்தகன்
முன்னுரை
நான் சரித்திர நாவல்களின் ரசிகை. கடந்த வருடம் சரித்திர நாவல்கள் எழுதும் ஆர்வத்தால் ராஜராஜன் சபதம்
, நான்மாடக் கூடல் நாயகி
என்ற 2 நாவல்களை எழுதினேன். அடுத்து என்ன என்று சிந்தனை எழுந்தது. ராஜராஜனும் ராஜேந்திரனும் நமது வரலாற்று நாயகர்களில் முதன்மையானவர்கள். ஏராளமான சரித்திர நாவல்கள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கின்றன. நானும் ராஜேந்திர சோழனை எழுத முனைந்த சமயம் மற்றவர்கள் இதுவரை தொடாத அவனின் வாழ்க்கைப் பக்கத்தை எழுத நினைத்தேன்.
அப்பொழுது சக்தி விகடன் ஆசிரியர் திரு. தெய்வநாயகம் அவர்களால் திரு. கோமகன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. திரு. கோமகன் கங்கை கொண்ட சோழபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சூரியனின் கருந்துளைப் போல ராஜராஜனின் புகழ் ஒளியில் மங்கியிருந்த ராஜேந்திர சோழனின் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட பாடுபட்டவர். அவர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000வது வருட விழாவை 2014 ல் மிகவும் சிறப்பாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஏற்பாடு செய்தார். அவரிடம் ராஜேந்திர சோழனைக் குறித்த விபரங்களைப் பேசிய பொழுது நக்கன் பரவை நங்கையைக் குறிப்பிட்டு அவள் ராஜேந்திரரின் வாழ்வில் ஏற்படுத்தியத் தாக்கத்தை விவரித்தார்.
நான் இதுவரை கேள்விப்படாத இந்தத் தகவலைக் கேட்டு எனக்குள் ஒரு பரவசம்; ஆஹா! இந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு அழகான சரித்திரக் கதையை எழுதலாமே என்ற ஆவல் எனக்குள் கிளர்ந்து எழுந்தது. கடல் கடந்த பிரதேசங்களையும் தன் ஆதீக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஒரு சக்கரவர்த்தியைக் கட்டுப்படுத்தும் திறமை திருவாரூர் கோயில் தளிச்சேரி பெண் பரவைக்கு எப்படி வந்தது? அவளுக்காக ஒரு கோயிலையே கட்டுமளவு ராஜேந்திரரை தன் அன்பினால் பரவை எப்படி வசப்படுத்தினாள்? அவள் வரலாறை என்னால் முடிந்த மட்டும் திரட்டினேன்.
திரு. கோமகன் அவர்கள் அறிவுறுத்தியபடி திருவாரூர் கோயிலுக்கும், பரவைபுரத்துக்கும் பயணப்பட்டேன். கோயில் கல்வெட்டுக்களைத் தடவிப் பார்த்து ராஜேந்திரர், பரவையை மானசீகமாக வணங்கி நின்றேன். வழிகாட்டிய திரு. கோமகன் அவர்களுக்கும் மனமார நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
ராஜேந்திரரே இந்த நாவலின் நாயகனாக இருந்தாலும், அவரின் வாழ்க்கையே விரிவாக விவரிக்கப்பட்டாலும், ராஜேந்திரரின் ஆன்மாவாக, அடிநாதமாக பரவையே இருக்கிறாள். நாவலின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும், படையெடுப்புகளும் சரித்திரம் பதிவு செய்தவையே. கூகுள் தேடல்கள் சில நிரப்பப்படாத பக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தன. சில சிறிய கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மட்டுமே எனது கற்பனை.
சரித்திரப் பிரியர்களுக்கு இந்த நாவல் நல்ல விருந்து படைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மிக்க நன்றி!
மோகனா சுகதேவ்
14/07/23.
1. ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
பல கலைகளைப் படைத்தது தமிழ்நாடு; இந்த நாட்டிலே மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்தது; அதைப் போல திருவாரூர் கலையை வளர்த்தது. சோழர்களுக்குத் தில்லைக்கு அடுத்தபடி திருவாரூர் மீதும் இங்கு குடிகொண்டிருக்கும் பெருமானின் மீதும்தான் பற்று.
சோழ மண்டலம் என்றாலே பசி தீரும் என்பார்கள். சோழ நாடு சோறு தரும் நாடு; ஈழம், மலையாளம் ஏதுமில்லை ஈடு
என்பது பழமொழி. திருவாரூர் சோழர்களின் பழமையான ஊர் மற்றும் அவர்களின் மன்னர்கள் முடிசூடிக் கொண்ட மையங்களில் ஒன்றாகும். திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள்.
தன் கன்றைக் கொன்றான்
என்று முறையிட்ட பசுவுக்காகத் தன் மகன் மேல் தேரை ஓட்டித் தமிழனின் நீதி நெறியை உலகறியச் செய்த மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர் திருவாரூர். தமிழரின் நீதி, தமிழரின் கலை, தமிழரின் சிற்பத் தொழில், தமிழரின் சங்கீதம், தமிழரின் பக்தி, தமிழரின் தாய்மொழிப் பற்று எல்லாவற்றையும் ஒருங்கே அடக்கிக் கொண்டு ஊரெங்கும் பன்னீர் மணக்க, சந்தனம் மணக்க, கலை மணக்க விளங்கியது திருவாரூர்.
நாம் இப்போது திருவாரூர் நோக்கிச் செல்லும் சாலைக்குச் செல்லலாம். அன்று சூரியன் தன் பொற்கிரணங்களைப் பரப்பிக் கொண்டு தகதகவென்று தேஜோமயமாக உதித்து வானில் தன் பவனியை முடித்துக் கொள்ளும் நிலையில் இருந்தான். அது ஒரு வசந்த காலம்! குளிர் நிறைந்த பனிக்காலம் விடைபெற்ற பின்பு மக்கள் மகிழும் வண்ணம் தென்றல் என்ற தேரில் ஏறிக் கொண்டு வசந்த காலம் வந்து விட்டது.
வசந்த காலம் பூமாதேவியின் வனப்பு மிக்க பருவ காலம் அன்றோ? அவள் சந்தோஷத்தில் பொங்கிப் பூரித்தாள். இயற்கை தேவி உடல் சிலிர்த்தாள். அதனால் இலைகள் உதிர்ந்து மொட்டையாக நின்ற மரங்கள் முழுதும் மொட்டுக்கள் அரும்பிப் பூத்து வெடித்தன. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் தங்கநிறத் தளிர்கள் அழகாய் தென்றல் காற்றில் அசைந்தாடி வாருங்கள், வாருங்கள்!
என்று அனைவரையும் வரவேற்றன.
காவிரி ஆற்றின் வளமான வண்டல் பகுதியை உள்ளடக்கியப் பகுதியாக இருந்ததால் திருவாரூர் பொன் விளையும் பூமியாக இருந்தது. வழி எங்கும் புது நடவு நட்ட வயல்களுக்கு மரகதப் பச்சை வண்ணம் தீட்டியிருந்தாள் இயற்கை அன்னை. பசுமையில்தான் என்ன அழகு? பரந்தாமனே பச்சை மாமலை போல மேனியைக் கொண்டவன்தானே!
நதியில் பளிங்கு போன்ற நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. நதிகளும், ஓடைகளும், தடாகங்களும் நீர் நிறைந்து அவற்றின் மேற்பரப்பில் தாமரை, அல்லி மலர்களுடன் பூத்துக் குலுங்கின. தென்னை மரங்களும், புன்னை மரங்களும் பசுமையுடன் கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்தன. சரக் கொன்றை மரங்களில் பொன் வர்ணப் பூங்கொத்துக்கள் சரம் சரமாக தொங்குவதைக் காண இரண்டு கண்கள் போதா; கண்கோடி வேண்டும்.
சோழ நாட்டு மக்கள் வயல்களில் விளைந்த நெல்லை அறுவடை செய்து விற்றுப் பணமாக்கியிருந்ததால் அகமும், முகமும் மலர்ந்திருந்தார்கள். விவசாய வேலைக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்துவிட்டு, நகரங்களிலும், நாட்டுப் புறங்களிலும் ஆலயங்களில் வசந்தோற்சவங்கள் நடத்த ஆயத்தமானார்கள். திருவாரூர் மக்களும் தியாகேசன் ஆலய பங்குனி உத்தர திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
காலை வெயிலில் பூமாதேவி மஞ்சள் தேய்த்துக் குளித்ததைப் போல தங்கமயமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் ஊரை நோக்கிப் பல குதிரைகளும், பல்லக்குகளும் சென்று கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் தலையில் கட்டிய முண்டாசு பாதி முகத்தை மறைத்திருக்க, ராஜகளையுடன் ஒரு வாலிபனும் இருந்தான்.
அந்தப் பாதையில் தனியாக ஒரு வெண்புரவியில் பயணித்த அந்த வாலிபன் நல்ல பலமான உடல்கட்டுடன் ஒரு சாதாரண போர்வீரனின் உடையில் இருந்தாலும், அவன் முகத்தில் இருந்த பிரகாசமும், கண்களின் தீட்சண்யமும் பார்ப்பவர்களை வசீகரிக்கத் தவறவில்லை.
சாலையில் நடந்த இளம்பெண்கள் அவனது கட்டுடலையும், முகப் பொலிவையும் பார்த்து ரகசியமாக தங்களுக்குள் ரசிக்கத் தவறவில்லை. ஆனால் அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாலையின் இருபக்கங்களிலும் தென்பட்ட இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டும், அவ்வப்போது சாலைகளில் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டும் சென்றான்.
கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், திருவிழாக் கோலாகலங்களைக் கண்டு களிக்கவும் வெளியூர்களிலிருந்து வரும் ஜனங்கள் அந்த சாலையில் கூட்டம் கூட்டமாக திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
ஊர் எல்லையை அடைந்தவுடன் சாலையில் வந்த பலரும் குதிரையின் மேலிருந்தும், பல்லக்கிலிருந்து கீழிறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். எல்லோரும் நடந்து செல்வதைப் பார்த்த அந்த வாலிபனுக்கு ஏன் எல்லோரும் இறங்கி நடக்கிறார்கள் என்பது புரியவில்லை.
சரி, நாமும் நடந்தே செல்வோம்
என்று குதிரையின் மேலிருந்து இறங்கினான். கையில் பிடித்திருந்த கடிவாளத்தை அதன் முதுகில் போட்டு அதனை தட்டிக் கொடுத்தான்.
அஸ்வத்தாமா! நாம் இருவரும் நடந்தே போவோம். சரியா?
அந்தக் கருநீலக் குதிரை அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதைப் போல, தலையை லேசாக ஆட்டி விட்டு, அவனையொட்டி தளர்நடை நடந்தது.
வாலிபன் சற்று முன்னால் நடந்த ஒரு நடுத்தர வயதுக்காரரை நெருங்கி எல்லோரும் நடப்பதற்கான காரணம் அறிய விழைந்தான்.
ஏன் இப்படி எல்லோரும் இறங்கி நடக்கிறோம்? என்ன காரணம்?
அந்த நடுத்தர வயதுக்காரர் அவனைக் கண்டவுடன் அவன் வெளியூர்க்காரன் என்பதால் அவனுக்கு விஷயம் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். ஒரு புன்னகையுடன் அவனுக்கு பதில் அளித்தார்.
தம்பி! எல்லாம் ஒரு மரியாதைக்காகத்தான். கடவுள் நடந்த பூமியின் மீது நாம் குதிரையில் சென்றால் மரியாதையாக இருக்குமா?
பின்பு அந்தப் பெரியவர் அந்தக் கதையை சொல்லி காரணத்தை விளக்கினார்.
"இந்த ஊரில் கடவுள் தன் பக்தனுக்காக தெருத் தெருவாக நடந்தார். ஒரு பக்தனுக்காக கடவுள் என்னவெல்லாம் செய்வார் என்பதை இந்தக் கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஊரை ஆண்டுவரும் ராஜாவின் பெயர் தியாகராஜா. இவரின் ஆஸ்தானக் கவிஞரோ சுந்தர மூர்த்தி நாயனார். இசையால் ஈசனை வழிபட்டு, அவனுக்கு நண்பனாக இருந்து, அவனைத் தன் வேலைக்காரனாக ஆக்கிக் கொண்டு, தொண்டருக்கெல்லாம் தொண்டன் சிவபெருமான் என்றப் பெருமையை இறைவனுக்கு அளித்தவர்.
இந்த திருவாரூரில்தான் வன்தொண்டன் என்று அழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்தார். அவர் இங்கு வாழ்ந்து பின்பு வெள்ளை யானை மேலேறி கைலாசம் போய் சேர்ந்து இப்போது இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
இங்கே சுந்தரமூர்த்தி நாயனார் தன் மனைவி பரவை நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சமயம் ஒரு முறை திருவொற்றியூர் சென்றார். அங்கே அழகில் சிறந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டு மோகித்து அவரை இரண்டாவது முறையாக மணம் புரிந்து கொண்டார்.
அந்த செய்தியை அறிந்த பரவை நாச்சியார் சுந்தரர் மேல் கோபம் கொண்டு அவர் திருவாரூர் திரும்பி வந்த சமயம் அவருடன் ஒன்று கூடி வாழ மறுத்தார். சுந்தரர் சிவபெருமானின் நண்பர் அல்லவா? அதனால் தன் பக்தனின் துயர் தாங்காது சுந்தரருக்காகக் கடவுள் சென்று அவளிடம் பேசினார். அப்போதுதான் இந்தத் தெருக்களில் நடந்தார்."
கதையை சொல்லி முடித்தவர் பெருமையாக சொன்னார்.
தம்பி! நாங்கள் திருவாரூர்க்காரர்கள் தெரியுமா?
அதென்ன திருவாரூர் அவ்வளவு உசத்தியா? ஏதோ தஞ்சையில் வசிப்பவர் போல, அதுவும் அரண்மனையை ஒட்டியுள்ள வீட்டில் வசிப்பவர் போல ஜம்பம் பேசுகிறீர்?
வாலிபன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. திருவாரூரை இந்தச் சின்னப் பயல் மட்டம் தட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கலாமா என்று சினமுடன் சண்டை பிடித்தார்.
உம் தஞ்சாவூரில் என்ன வாழுகிறது? அங்கே தேவாரப் பாடல் கொண்ட ஒரு கோயிலாவது உள்ளதா? இங்கே தடுக்கி விழுந்தால் தேவாரப் பாடல் பெற்ற சன்னதியில்தான் விழ வேண்டும். திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம். அது மட்டுமில்லை. சுந்தரர் எங்களைப் பற்றி என்ன பாடியிருக்கிறார் தெரியுமா?
அவர் பேசியப் பொழுது அந்த வாலிபனுக்கு தன் சிறிய வயதில் படித்த தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
என்று தொடங்கும் திருத்தொண்டர் புராணம் நினைவுக்கு வந்தது.
தம்பி! எங்களைத்தான் சுந்தரர்
திருவாரூரில் பிறந்த எல்லாருக்கும் அடியேன்" என்று பாடியிருக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் பாடி வைக்கவில்லையென்றால் திருத்தொண்டர்புராணம் இருக்காது. மனுநீதிச்சோழன் இல்லையென்றால் நீதி இருக்காது. எங்க தியாகராஜர் கோயிலைப் பார்த்து ராஜராஜசோழன் கட்டவில்லையென்றால் தஞ்சாவூர் பெரியகோயில் வந்திருக்காது.
தம்பி! இந்த ஊர் மண்ணில் சுந்தரர் நடந்தார்; நாவுக்கரசர் பெருமான் தன் திருவடியைத் தரையில் வைக்க அஞ்சி நடந்தார்; சம்பந்தரின் சிறுபாதமும் இந்த ஊர் புழுதியில் பட்டது. கலிக்காமரும், சேரமான் பெருமாளும் இறைவனுக்கு சேவை செய்ய ஓடி வந்ததும் இங்கேதான். இவ்வளவு புகழ் வாய்ந்த எங்கள் ஆரூர் பக்கத்தில் கூட தஞ்சை வர முடியாது. தெரியுமா?"
ஓ! அப்படியா? திருவாரூர் பெருமை தெரியாமல் உளறி விட்டேன். உங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா! ஆனால் இன்று நிறைய பேர் கோயிலை நோக்கிப் போய் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? ஏதேனும் கோயில் விசேஷமா?
அந்த மனிதர் வாலிபனை ஒருதடவை ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வை இவனுக்கு எந்த விஷயமும் தெரியாமல் எதற்காக திருவாரூர் வருகிறான்?
என்ற கேள்வி தொக்கி நின்றது.
"தம்பி! உனக்கு திருவாரூர் குறித்து எதுவும் தெரியலைன்னு நினைக்கிறேன். இப்போ திருவாரூரிலே பங்குனி உத்திரத் திருவிழா நடந்துகிட்டு இருக்கு. இந்தக் கோயில்லே ஆழித் தேர் மிகவும் பிரசித்தி. மக்கள் கடல்லே உருண்டு வர்ற பெரியத் தேர்கிறதாலே ஆழித் தேர்னு சொல்றாங்க.
ஒவ்வொரு வருஷமும் பங்குனி உத்திரத் திருவிழாவோட கடைசி நாள் ஆழித்தேரோட்டம் நடக்கும். ஆழித் தேரோட்ட விழாவை இதுக்கு முன்னாலே திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் முன்னாலே நின்னு நடத்தியிருக்காங்க. அதை சுந்தரரும் பார்த்துப் பரவசப்பட்டு போயி இருக்காரு.
இந்த ஆழித் தேர் மற்ற ஊர் தேர்கள் மாதிரி எண்பட்டை, அறுகோணம், வட்ட வடிமைப்பா இல்லாம பட்டை வடிவ அமைப்பா இருக்கும். மொத்தம் 20 பட்டைகளோட 4 அடுக்குகளா பார்க்க பிரம்மாண்டமா இருக்கும். முன் பக்கத்திலே கம்பீரமா 4 மர குதிரைகளோட நாலு மாட வீதிகளையும் ஆடி அசைந்தாடி தேர் சுற்றி வர்றதைப் பார்க்க கண் கொள்ளா காட்சியா இருக்கும். தியாகராஜர் உலா வரப்போ அரூரா! தியாகேசா
ன்னு மொத்தக் கூட்டமும் சிலிர்த்துப் போயி பரவசமாகும்.
தேர் நிலைக்கு வந்தப்புறம் தியாகராஜர் கோயில் மண்டபத்தில் தலைக்கோலி நக்கன் பரவை நங்கையின் நடன நிகழ்ச்சி நடக்கும். நீயும் பரவை நங்கையின் நாட்டியத்தை தவற விடாம பார். அப்போதான் அவள் எப்படி ஜனங்களை தன்னோட கலைத் திறமையாலே மயக்கி வச்சிருக்கான்னு உனக்குப் புரியும்."
அந்தப் பெரியவர் நீளமாக பேசி முடித்து விட்டு வேகமாக நடையை எட்டிப் போட்டு சற்று முன்னால் போய்க் கொண்டிருந்த தன் கூட்டத்தார்களுடன் கலந்து கொண்டார். அந்த வாலிபன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் திருவாரூர் வருவதற்கான முக்கியக் காரணமே அந்த நக்கன் பரவை நங்கைதானே? அவளை, அவளுடைய அழகை, நாட்டியத் திறமையைக் கேள்விப்பட்டுத்தானே யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் அவன் திருவாரூர் வந்திருக்கிறான்? அவன் திருவாரூர் அருமை, பெருமைகளை அறியவில்லையென்றாலும் அந்த நடனமணியின் புகழ் பழையாறை வரை பரவியிருக்கிறதே! அதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளத்தானே அவன் திடீரென்று கிளம்பி தேசாந்திரியாக வந்து விட்டான்! இன்று தியாகராஜரை தரிசித்து விட்டு, நக்கன் பரவை நங்கையின் நடனத்தையும் பார்த்து விடும் தீர்மானத்துடன் அந்த சுந்தர வாலிபன் தியாகேசன் ஆலயத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
2. பங்குனி உத்திரத் திருவிழா!
ராஜகேசரி ராஜராஜ சோழ தேவர் தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டியப் பின்பு அதுவே பெரிய கோயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆனால் அதற்கு முன்பு பெரிய கோயில் என்றால் அது திருவாரூர் தியாகராஜப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலைத்தான் குறிக்கும். இக்கோயில் சைவ சமயத்தின் தலைமையிடம். பஞ்சபூதங்களில் பூமிக்குரிய கோயிலாகும்.
இக்கோயிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள், 100 க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள்கோயில்கள் என்று இன்றைக்கு பிரம்மாண்டமாக விளங்கும் திருவாரூர் கோயில் சோழர் காலத்திலும் பெரிய கோயிலாகத்தான் இருந்தது. கோயில் ஐந்து வேலி; குளம் ஐந்து வேலி; செங்கழுநீர் வாவி ஐந்து வேலி; அத்தனை தேர்களிலும் உயர்ந்தது திருவாரூர் தேர்.
மூலவருக்கோ எண்ணிலடங்கா பெயர்கள்; வன்மீக நாதர், புற்றிடங் கொண்டார், தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப் பெருமான், தியாகப் பெருமான், ஆடரவக் கிண்கிணிக் காலழகர், செங்கழுநீரழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி... இன்னும் பல. அதைப் போல அம்மனும் அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என்று வினவுகிறார். அப்பர் பெருமானின் பதிகம் மூலம் நாம் இந்தக் கோயிலின் தொன்மையை அறியலாம்.
கோயில் மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூம்பொழில் சோலைகளும், நிழல் தரும் சாலைகளுமாக விளங்கிய மாண்பு மிக்க திருவாரூர் அன்று கூடிய மனிதர்களின் கூட்டத்தால் திணறிக் கொண்டிருந்தது. காலை முதலே வெளியூர்களிலிருந்து கிராமத்து மக்கள் குழந்தை குட்டிகளுடன் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், குதிரைகளிலும் வந்து இறங்கினர். இளம் காளையரும், இள நங்கையரும் ஒன்று சேர்ந்து அள்ளிச் செருகிய கொண்டை ஆட, காலில் அணிந்த தண்டைகள் தாளம் போட கும்மியடித்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
தெருக்கள்தோறும் குலை தள்ளிய வாழை மரங்களைக் கட்டியிருந்தார்கள். வீதிகள்தோறும் மாவிலைத் தோரணங்களும், தென்னம் பாளைகளுமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பெண்டிரின் கைவண்ணம் அற்புதமான மாக்கோலங்களாக தெருக்களில் மலர்ந்திருந்தன.
ஆடுவோர், பாடுவோர், சிலம்பம் விளையாடுவோர், கும்மியடித்து குதூகலமாக சிரித்து மகிழ்வோர் என்று மக்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். வாண வேடிக்கைகளால் ஆகாயம் வண்ண வண்ண நெருப்பு மலர்களை சொரிந்தன.
நேரம் ஆக ஆக, கூட்டம் தாங்க முடியவில்லை. எத்திசையில் நோக்கினாலும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே தலைகள்தான்! இந்தப் பூவுலகத்து மனிதர்கள் அனைவரும் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன? மரத்தடிகளிலும், மண்டபங்களிலும், கமலாலயப் படித்துறைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் எதையோ எதிர்பார்த்தவண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் தியாகராஜர் அஜபா நடனத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க, ஆரூரா! தியாகேசா!
என்ற குரல்கள் விண்ணை முட்ட ஒலித்தன.
வேதாரண்யம் விளக்கழகு; திருவாரூர் தேரழகு; திருவிடைமருதூர் தெருவழகு
என்ற வழக்குப்படி ஆழித் தேரில் தியாகராஜர் கம்பீரமாக கமலாம்பாள், முருகன், சண்டீஸ்வரர் பின்னால் தொடர்ந்து வர திருவாரூர் தெருக்களில் பவனி வந்தார்.
எக்காளம் ஊதுபவர்கள் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நின்று ஊத, பின்னால் தாளமிடுபவர்களும், அவர்களுக்குப் பின்னால் தவில், நாதஸ்வரம் வாசிப்பவர்களும், மத்தளம் வாசிப்பவர்களும் வாசித்தபடி சென்றனர். மேள வாத்தியங்களுக்குப் பின்னால் தேவரடியார் உலா வரும் இறைவனைப் பார்த்தவாறே ஆடிச் சென்றனர். அவர்களின் நடுவே தலைக்கோலி நக்கன் பரவை நங்கை நட்சத்திரங்கள் நடுவே பவனி வரும் பால் நிலா போல முகம் முழுக்கப் புன்னகையுடன், வீதிவிடங்கன் மேல் காதலும், பக்தியும் பெருக பதிகம் பாடிக் கொண்டு வந்தாள்... கூட்டம் அவளைப் பார்க்க முண்டியடித்து முன்னேறிய பொழுது காவலர்கள் ஒழுங்குப்படுத்தினார்கள்.
தேர் முக்கியமான நான்கு வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்தவுடன் மக்கள் அன்னதானச் சத்திரங்களிலும், கையுடன் கட்டிக் கொண்டு வந்த கூட்டாஞ் சோறு மூட்டைகளையும் பிரித்து பசியாறினர். ஒரு மண்டபத் தூணில் ஓய்வாக சாய்ந்து சிரம பரிகாரம் செய்த வாலிபனையும் அழைத்து அவர்கள் தங்கள் உணவைத் தந்து உபசரித்தார்கள்.
அப்போது அந்தக் கோயில் மண்டபத்தில் அன்று மாலை நடக்கப் போகும் பரவை நங்கையின் நாட்டியத்தைக் குறித்து மக்கள் ஆசையுடன் பேசிக் கொள்வதை வாலிபன் கவனித்தான். நக்கன் பரவை நங்கையின் நாட்டியத்தைக் காண வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
திருவாரூரில் வசிக்கும் பரத நாட்டியத்தைப் பயின்ற தளிச்சேரி பெண்கள் சிவநெறி தழுவி, சீலம் குறையாது, செம்மை வழி மாறாது தங்கள் கலையை நாடெங்கும் பரப்பினார்கள். தொன்றுதொட்டு ஆடல் பாடல்களில் அரும்பணி புரிந்த ஒரு குடும்பத்தில் உதித்த பரவை நங்கைக்கு திருவாரூர் திருத்தொண்டரான சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியான பரவையின் பெயரையே தன் மகளுக்கும் சூட்டி மகிழ்ந்தாள் பரவையின் தாய் சங்கமித்திரை.
சங்கமித்திரை பரவையைக் கண் போல போற்றி வளர்த்தாள். அவளுக்கு தகுத்த நட்டுவனார் மூலம் பரதநாட்டியம் பயிற்றுவித்தாள்.
சின்னப் பருவத்திலேயே பரவை தன்னை மறந்து ஆடத் தொடங்கினாள். அவளுடைய இளம் கால்களிலே லயமும், கைகளிலே நயமும் இருப்பதைக் கண்டு வியந்தாள் சங்கமித்திரை. அவள் முகத்தில் தெரிந்த நவரசங்களையும் கவனித்த அவள் தன் பெண் பிற்காலத்தில் சிறந்த நடனமணியாக வருவாள் என்பதை அறிந்து கொண்டாள். தன் உயிரையே அவளிடத்தில் வைத்து அன்புடன் பரவையை வளர்த்தாள் சங்கமித்திரை.
பரவை பருவம் அடைந்தபின்பு திருவாரூர் தியாகேசனைக் கண்டு காதலில் கசிந்துருகி அவனே தனது மணாளன் என்று நங்கை தலைப்பட்டாள் தலைவன் தாளே! சிறு வயதிலிருந்தே நாட்டியத்திலும், திருவாரூர் தியாகேசன் மேலும் நாட்டம் கொண்டு தன் வாழ்க்கையை சிவபெருமானுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்து விட்டாள். தியாகராஜனைத் தொழுவது, அவருக்குத் திருத்தொண்டு செய்வது ஆகிய இரண்டையும் தன் வாழ்நாள் முழுவதும் செய்ய உறுதி பூண்டாள்.
திருவாரூர் மக்கள் பரவையின் அன்பையும், ஈசன்பால் அவள் கொண்ட பக்தியையும் அறிந்து அவளைக் கொண்டாடி வந்தார்கள். நகர மக்கள் பரவையின் நாட்டியம் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். பரவையின் அழகும், நடனமும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். கள்வெறி கொள்ளச் செய்யும்.
அன்று மண்டபத்தைச் சுற்றி கூட்டம் தாங்க முடியவில்லை. நம் வாலிபன் பரவையின் நடனத்தை அருகில் பார்க்க வசதியாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே உட்கார்ந்துக் கொண்டான்.
அரைவட்டவடிமாயிருந்த மேடையில் ஒரு பக்கம் இசைக் கருவிகளை இயக்கும் கலைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். கொட்டி, மத்தளம், ஒடுக்கை, சகடை, கரடிகை, உவச்சப் பறை போன்ற தோல் கருவிகளைத் தட்டுபவர்களும், வங்கியம், பாடலியம், குழல் போன்ற துளைக் கருவிகளை இசைப்பவர்களும், வீணை போன்ற நரம்புக் கருவிகளை மீட்பவர்களும் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு தேவதைப் போல தூய வெண்பட்டாடை உடுத்தி, கண்களுக்கு மையிட்டு, நெற்றியில் திலகமிட்டு, பொன் மேனியில் புன்னகை துலங்க நக்கன் பரவை நங்கை கோயில் மண்டபத்தில் நாட்டியமாட வந்து நின்றாள். சுந்தரமுகமும் சந்திரபிம்பமோ என்று எல்லோரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
நாட்டியம் ஆரம்பமாகி விட்டது. அன்று பரவை நங்கை, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சரித்திரத்தை தன் நாட்டியத்தின் கருப் பொருளாக எடுத்துக் கொண்டாள். மத்தளம் முழங்க, வீணையும், குழலும் ஒலிக்க அவளின் நடனம் ஆரம்பமாகியது.
"கரையுங் கடலும் மலையுங் காலையும்
மாலையும் எல்லாம்
உரையில் விரலி வருவான் ஒருவன்
உருத்திர லோகன்"
என்ற சுந்தரர் தேவாரத்தை ஒருவர் பாட, நடனம் ஆரம்பமாயிற்று.
மற்றுமொரு சுந்தரர் பாடலுக்கு பரவை ஆடியப் பொழுது அவள் முகத்தில் தோன்றிய பக்திப் பரவசம், குதூகலம் பார்ப்பவரைக் காந்தம் போலக் கவர்ந்து இழுத்தது.
"ஆடுமின் அன்புடையீர்
அடிக்காட்பட்ட தூளி கொண்டு
குடுமின் தொண்டர் உள்ளீர்
உமரோடு எமர் சூழ வந்து
வாடுமின் வாழ்க்கை தன்னை
வருந்தாமல் திருந்தச் சென்று
பாடுமின் பத்தர் உள்ளீர்
பழமண்ணிப் படிக்கரையே"
சிவபெருமானுடைய திருவடிகளில் அன்புடையவர்களே! அத்திருவடிகளுக்கு ஆளான தொண்டர்களுடைய பாததுளியில் முழுகுங்கள்
என்று பரவசத்துடன் கூத்தாடியப் பொழுது கூட்டமும் அவளுடன் சேர்ந்து கூத்தாடியது.
பரவை நங்கையின் அங்கமெல்லாம் அழகு சொட்டியது. தங்கம் போன்ற மேனி தத்திக் குதித்தது. எங்குப் பார்த்தாலும் பரவையே தெரிந்தாள். அந்தக் கைகளிலேதான் என்ன லயம்? என்ன நயம்? எத்தனை அபிநயம்?
பரவை மின்னல் போன்ற வேகத்தில், கால்கள் பூமியில் படுவது தெரியாமல் கரகரவென்று சுழன்றாள். அவள் கண்ணைப் பார்த்தவர்கள் கண்ணையே பார்த்தார்கள். ஜல்ஜல் என்று சதங்கைக் குலுங்கும் காலைப் பார்த்தவர்கள் காலையே பார்த்தார்கள். பரவை சுழன்று சுழன்று நடனம் ஆடியப் பொழுது வாலிபனின் உள்ளமும் கழன்று அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டது.
பரவை சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குரல் கொடுத்து அழைத்துப் பாடல் பெற்ற மழபாடி சிவனைக் குறித்துப் பாடிய பாடலுக்கு ஆடினாள்.
"பொன்னார் மேனியனே!
புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர்க்கொன்றை அணிந்தவனே!"
திருநாவலூரில் பிறந்த நம்பியாரூரன் மன்னன் மகனாக வளர்ந்து ஆயகலைகள் அறுபத்துநான்கையும் கற்று திருமணப் பருவம் அடைந்தார். அப்போது சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து அவரைத் தனது அடிமை என்றுக் கூறி தன்னுடன் திருவெண்ணை நல்லூருக்கு அழைத்துச் சென்றார். தன்னைத் தடுத்தாட்கொண்டது சிவபெருமானே என்பதை அறிந்த சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!
என்றுத் தொடங்கி சிவன் மேல் பல பதிகங்கள் பாடினார்.
"பித்தாபிறை சூடிபெரு
மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே."
பின்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பரவை நாச்சியாரும் காதலில் விழுந்து அவர்களின் திருமணம் நடந்ததை பரவை நங்கை ஆடிக் காட்டினாள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் அழகானவர்; பரவை நாச்சியாரும் அப்படித்தான்; ஆடல், பாடலில் வல்லவள். இருவர் மனமும் ஒன்றையொன்று விரும்பியது. தியாகராஜர் உத்தரவால் இருவருக்கும் திருமணம் நடந்தது.
"கண்ணோடு கண் இணை கவ்வி
ஒன்றை ஒன்று
உண்ணாவும் நிலைபெறாது
உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும்
நோக்கினாள்"
என்று பின்னாளில் கவிச் சக்கரவர்த்தி எழுதிய பாடலுக்கான காட்சியை பரவை நங்கை அழகாக தன் முக அபிநயத்தால் படம் பிடித்துக் காட்டினாள். கூட்டம் முழுதும் அமைதியுடன் அவள் ஆட்டத்தை ரசித்தது.
சுந்தரர் பரவைக் காதலை நாட்டியத்தில் வெளிப்படுத்தும்போது நக்கன் பரவை நங்கையின் முகமும், கரங்களும், உடல் முழுமையும் அதன் அடையாளமாக இயங்கியதைக் கண்டு வாலிபன் அந்த நடன மங்கையின் திறமையில் தன்னை இழந்தான். நடனக் கலைக்காகவே அவள் பிறவி எடுத்திருப்பதாக நினைத்தான். அவள் கண்கள் தன் மேல் ஆயிரம் காமன் கணைகளை எய்தது போல உணர்ந்தான்.
3. ஆடல் காணீரோ?
திருவாரூர் கோயிலில் பரவை நங்கை சுந்தர மூர்த்தி சுவாமிகளின் சரித்திரத்தை தன் நாட்டியத்தில் ஆடிக் காட்ட, அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நம் வாலிபன் அவளின் ஆடல் திறமையில் மட்டுமல்ல; அவளின் பாதாதிகேச அழகிலும் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான்.
பரவை இப்போது தன் நாட்டியத்தை தொடர்ந்து ஆடினாள். அவளின் தலையலங்காரம் மிகவு நேர்த்தியாக இருந்தது. அவளின் நேர் வகிட்டின் மீது அணிந்திருந்த தொய்யகம் நெற்றியில் பிறை போல நின்று முகத்துக்கு அழகூட்டியது. வகிட்டின் இருபக்கங்களிலும் சிவப்பு ஒளி வீசிய ரத்தின பட்டமும், சூரிய பிரபை, சந்திர பிரபையும் அவள் கூந்தலின் கருமையை நன்றாய் எடுத்துக் காட்டின. காதில் அணிந்திருந்த மகர குண்டலம் அவள் ஆடும்போதெல்லாம் அதுவும் சேர்ந்து நடனமாடியது.
கழுத்தில் பொன்னில் பதிக்கப்பட்ட முத்து வடமும், நீண்ட முத்து மாலையும் அணிந்திருந்தாள். கைகளில் தோள் வளை, கடக வளை, கை வளை, பரியகம், மோதிரம் ஆகிய ஆபரணங்களை அணிந்திருந்தாள். அவள் தன் கைகளில் விதவிதமாய் முத்திரைகள் பதித்த பொழுதும், அபிநயித்த பொழுதும் அவை அழகாக ஒளிர்ந்தன.
இடையே இல்லையோ என்ற ஐயத்தை அவளின் ஒட்டியாணம் நீக்கியது. ஆடலின் வேகத்துக்கு ஏற்ப அவள் அணிந்திருந்த தண்டைகள் ஜல், ஜல்
என்று ஒலித்து நாட்டியத்தின் தீவிரத்தை உணர்த்தியது. உடலின் அனைத்து பாகங்களிலும் முத்துக்களும், நவமணிகளும் ஒளிர்ந்தாலும் அவளின் செம்பவள இதழ்கள், காவிரியின் நீர் குடித்து வளர்ந்த கொழுந்து வெற்றிலையை மென்று சிவந்து எல்லாவற்றையும் தோற்று ஓடச் செய்தது.
ஒருசமயம் சுந்தரர் திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) ஈசனைத் தொழுது நின்ற பொழுது ஆரூரில் நடக்கும் பங்குனித் திருவிழா அவரின் நினைவுக்கு வந்தது.
பரவை! நாம் பங்குனித் திருவிழாவுக்கு திருவாரூர் செல்ல வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்
தன் மனைவியிடம் சுந்தரர் சொன்னவுடன் பரவைக்கு வீட்டுத் தலைவியாக தன் கடமைகள் ஞாபகம் வந்தன.
சுவாமி! திருவிழாவுக்கு நம் இல்லத்துக்கு வரும் அடியார்களுக்கு அமுது படைக்க வேண்டுமே? நம்மிடம் அரிசி, பருப்பு வாங்க குந்துமணி தங்கம் கூட இல்லையே?
பரவை முறையிட்டதும் சுந்தரர் சிந்தனை செய்தார்.
ஆமாம்! செலவுக்கு பொன் எதுவும் இல்லையே! எப்போதும் நாம் ஈசனிடம்தானே கேட்போம். அவனைத்தான் இப்பொழுதும் கேட்க வேண்டும்.
ஈசனைத் துதித்தவுடன் ஈசன் பன்னிராண்டாயிரம் பொன்களை எடுத்து சுந்தரரிடம் தந்தார். அதை வாங்கிய சுந்தரருக்கு இவ்வளவு பொன்னையும் தூக்கிக் கொண்டு எப்படி தல யாத்திரை செய்வது என்ற சந்தேகம் வந்தது. அதனால் ஈசனைப் பார்த்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்.
தோழரே! நான் இனிமேல்தான் சிதம்பரம் போன்ற பல சிவத்தலங்கலுக்கு செல்ல வேண்டும். இந்தப் பொன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு என்னால் அலைய முடியாது. அதனால் இந்த மூட்டையை இங்கேயிருக்கும் மணிமுத்தாறு நதியில் போட்டுவிட்டு நான் திருவாரூர் திரும்பியவுடன் கமலாலயம் குளத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். சரியா?
அப்படியே செய்யுங்கள் தோழரே!
என்று ஈசனும் அந்த ஏற்பாட்டுக்கு இணங்கினார். ஆனால் சுந்தரர் ஈசனை முழுமையாக நம்பத் தயாராயில்லை.
நான் உங்களை நம்ப மாட்டேன். நீர் மாயையில் வல்லவர். என்னை நீர் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது? திருவாரூரில் இதே பொன்னைத்தான் நீங்கள் தருவீர்கள் என்று நான் எப்படி நம்புவது? இந்தப் பொன் மூட்டையிலிருந்து நான்கு பொற்காசுகளை என் முந்தியில் முடிந்துக் கொள்கிறேன். கமலாலயத்தில் நீங்கள் தரும் பொன்னுடன் இதை ஒப்பிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும். சரியா?
கூட்டத்தில் ஊசி விழுந்தாலும் கேட்குமளவு ஒரே நிசப்தம்! திறந்த வாய் மூடாமல் கூட்டம் பரவை நங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தது. சுந்தரர் சிவபெருமானுக்குக் கட்டளையிடுகிறாரே! மேலே என்ன நடக்கிறது என்று ஆவலுடன் கவனித்தது.
இப்போது பரவை சிவபெருமானாக மாறி சுந்தரரிடம் பேசினாள்.
என் தோழரின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? அப்படியே செய்யுங்கள்
ஈசனும் சம்மதித்தவுடன் சுந்தரர் பொன்னை மணிமுத்தாறு நதியில் போட்டு விட்டார். பின்பு அவர் விரும்பியத் தலங்களைத் தரிசித்து விட்டு திருவாரூர் இல்லத்துக்குத் திரும்பினார்.
அங்கே தன் மனைவியை அழைத்தார்.
பரவை! நீ அடியார்களை பூஜிக்க பொன் கேட்டாய் அல்லவா? என்னுடன் வா! தருகிறேன்.
பரவை நாச்சியாரை அழைத்துக் கொண்டு சுந்தரர் கமலாலய குளத்துக்கு வந்தார். தண்ணீரில் இறங்கி பொன்னைத் தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை.
மணிமுத்தாறு நதியில் போட்ட பொன் இங்கே எப்படி வரும்? ஆற்றில் போட்டுவிட்டுக் குளத்தில் தேடினால் எப்படிக் கிடைக்கும்? இறைவனைப் பித்தன் என்று திட்டி நீங்களும் பித்தன் ஆகி விட்டீர்களா?
பரவை சுந்தரரை எள்ளி நகையாடினாள். கூட்டமும் அவளுடன் சேர்ந்து சுந்தரரின் செயலைக் கண்டு நகைத்தது.
சுந்தரர் அதனால் வெகுண்டு ஈசன் மீது பொன் செய்த மேனியீர்
என்ற பதிகத்தைப் பாடினார். பரவை தன்னை எள்ளி நகையாடும்படி செய்யலாமா என்று இறைவனிடம் முறையிட்டார்.
"பொன்செய்த மேனியேர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீரமுது குன்றமர்ந்தீர்
மின் செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே."
என்ன ஆச்சரியம்! பொன் மூட்டை சுந்தரருக்கு கிடைத்து விட்டது. கூட்டம் சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்தது. சுந்தரரின் பதிகம் கிடைத்த மகிழ்ச்சியில் சிவனும் அவர் கைக்குக் கிடைக்கச் செய்தார். ஆனால் அதை சுந்தரர் தான் பத்திரமாக வைத்திருந்த மச்சம்
பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றுக் குறைந்திருந்தது. மீண்டும் சுந்தரர் பொன் போன்ற பதிகம் பாட, பொன்னின் தரமும் உயர்ந்து தன் தகுதியை அடைந்தது.
இப்படி சுந்தரரின் வரலாற்றை தான் ஒருத்தியே சுந்தரர், பரவை நாச்சியார் என்று இருவராகவும் அழகாக அபிநயித்து ஆடினாள் பரவை. தன் கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் சுந்தரர், பரவை நாச்சியார் ஆகியோரின் மனோபாவங்களை அற்புதமாகக் கொண்டு வந்தாள்.
நாட்டியத்தின் இறுதி பகுதியாக தன் வாழ்நாள் முழுதும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் பொருள்படும் பாடலைப் பாடி ஆடினாள்.
"உம்கையிற் பிள்ளை உனக்கே
அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொல் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு
ஒன்று உரைப்போம் கேள்;
எம்கொங்கை நின் அன்பர் அல்லால்
வேறு தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல்பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன்"
கரங்களும், பாதங்களும், இடையும், விழிகளும் பாடலின் பொருளை உணர்த்த விரைந்து இயங்கின. அவள் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் பொருள் உணர்த்தின. பரவை தன்னையும், உலகையும் மறந்து ஆடி ஒரு முத்தாய்ப்பு வைத்து நிறுத்திக் கைகூப்பி நிற்கவே, கூடியிருந்த ஜனங்களின் கரகோஷம் வானையே பிளந்தது.
சோழ அரசில் தேவரடியார் என்றும், பதியிலார் என்றும், தளிச்சேரி பெண்டுகள் என்றும் அழைக்கப்பட்ட நடனமணிகள் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார்கள். அவர்கள் கோயில் பணிகளைக் குறைவறச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள். தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு 400 தேவரடியார்கள் பல ஊர்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு குடியேற்றம் பெற்றிருந்தார்கள். தேவரடியார்களுக்கு கோயிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலி நிலம் நிவந்தம் கொடுக்கப்பட்டது.
இப்பெண்கள் பெயர்களுக்கு முன்னால் நக்கன்
(சிவன்), எடுத்த பாதம், நக்கன் ராசராச கேசரி, நக்கன் சோழகுல சுந்தரி என்பது போன்ற பட்டப் பெயர்களை போட்டுக் கொண்டார்கள்.
பரவை நங்கையின் நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அதைக் கண்டு ஆனந்தம் அடைந்த ஜனத் திரள், ஒரு மாய உலகத்திலிருந்து முழித்துக் கொண்டதைப் போல விழித்துக் கொண்டு அவரவர் இருப்பிடங்களுக்குப் புறப்பட்டார்கள்.வெளியூர்களிலிருந்து நகரத்துக்கு வந்தவர்கள் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் தங்கினர். நம் வாலிபனும் தான் சஞ்சரித்துக் கொண்டிருந்த கனவு உலகத்திலிருந்து விழித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
அவன் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் எங்கே போவது என்ற தயக்கம் பிறந்தது. அதனால் தான் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் கலைந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதே சமயம் தன்னையே இரண்டு கண்கள் மறைவிடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை.
சற்று நேரத்தில் நக்கன் பரவை நங்கை, அவள் தாய் சங்கமித்திரை, இன்னொரு சேடிப் பெண் என்று மூவர் கோயிலுக்கு வெளியே வந்து ஒரு பல்லக்கில் ஏறிச் செல்வதைக் கண்டான். உடனே அவன் உடலில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.
வேகமாக எழுந்து கோயிலுக்கு வெளியே வந்து சற்று தூரத்தில் மரத்தில் கட்டி வைத்திருந்த தன் குதிரையை அவிழ்த்து மேலே ஏறிக் கொண்டான். அஸ்வத்தாமா அவன் அவசரத்தைப் புரிந்துக் கொண்டதைப் போல தன் உடலை சிலிர்த்துக் கொண்டு பாயத் தொடங்கியது. அவன் சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த பல்லக்கை பின்பற்றத் தொடங்கினான். ஆபத்தும் அவனைப் பின்தொடர்ந்தது.
நகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜோதியாகப் பிரகாசித்தன. கடை வீதியானதால் வருவோரும், போவோருமாக ஏகக் கூட்டமாக இருந்தது. முன்பே கலகலப்பாகவும், மக்கள் வருகை அதிகமாகவும் இருக்கும் கடைத் தெருவில் இன்று நெருக்கடி அதிகமாயிருந்தது.
அது நகரின் பிரதான வீதியானதால் ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. புஷ்பக் கடைகள் ஒருபக்கம், பழக் கடைகள் ஒரு பக்கம், பட்சணக் கடைகள் ஒரு பக்கம், தானியக் கடைகள் ஒரு பக்கம், முத்து, ரத்தின வியாபாரிகளின் கடைகள் ஒரு பக்கம், பெண்களின் அலங்காரப் பொருட்கள் இன்னொரு பக்கம் என்று கடை வீதி ஜேஜே
என்று இருந்தது.
ஆங்காங்கே கல்தூண்களின் மேல் விசாலமான அகல்விளக்குகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்ததால் இருள் கவிந்திருந்த நேரத்திலும் முன்னால் சென்று கொண்டிருந்த பல்லக்கு வாலிபனின் பார்வையிலிருந்து தப்பவில்லை. தன் கண் பார்வையை விட்டு பல்லக்கு நீங்கி விடாமல் வாலிபன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவன் தன் குதிரையை அவசரப்படுத்தாமல் நிதானமாகவே போதிய இடைவெளி விட்டு பல்லக்கைப் பின்பற்றிச் சென்றான். அவனைப் பின்பற்றியவர்களும் சந்தேகம் வராத முறையில் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் தளிச்சேரிப் பெண்களின் குடியிருப்புக்கு முன்னதாக இருந்த ஒரு மாளிகையின் முன்பு பல்லக்கு நின்றது. முதலில் செடிப் பெண் இறங்க, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பரவையின் தாய் மித்திரை இறங்கினாள். கடைசியாக ஒரு அழகிய மயில் தன் தோகையை விரித்துக் கொண்டு ஒயிலாக இறங்குவதைப் போல பரவை பல்லக்கிலிருந்து இறங்கினாள்.
வாலிபன் தன் குதிரையை சற்று தூரத்திலேயே வீதி ஓரத்தில் நிறுத்தி விட்டதால் அவனை அவர்கள் யாரும் பார்க்கவில்லை. மூவரும் மாளிகைக்குள் நுழைந்தவுடன் வாலிபனும் தன் குதிரையைத் திருப்பிக் கொண்டு வந்த வழியே திரும்பலானான்.
/திரும்பிய அடுத்த நொடி! ஆ
என்ற அலறலோடு குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டு மண்ணில் விழுந்தான். என்ன நடந்தது என்று ஒரு நிமிடம் அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு பூமியில்