Thiraikadalodi
()
About this ebook
திரைப்பட உலக என்சைக்ளோபீடியா என்று சொல்லக்கூடிய "கலைமாமணி" ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் திரையுலக அனுபவங்களைப் பற்றிய தொகுப்பே இந்நூலாகும்.
Read more from S. Chandra Mouli
Naan Nagesh Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Punnagai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thiraikadalodi
Related ebooks
Inimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsKathanayakigalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsThiraiyulagam Kandu Varum Thiruppangal Rating: 0 out of 5 stars0 ratingsIvargal Paarvaiyil Cinnathirai Rating: 0 out of 5 stars0 ratingsErandu Per Vaanathai Parkirargal Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Ulukkiya 75 Thiraipadangal Rating: 0 out of 5 stars0 ratingsClap Ready Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsAavana Padangal - Oru Arimugam Rating: 0 out of 5 stars0 ratingsHalwa Rating: 0 out of 5 stars0 ratingsAasai Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Poiyum Sivappu Unmaiyum! Rating: 4 out of 5 stars4/5Satyajit Ray - Vaazhvum Vazhiyum Rating: 0 out of 5 stars0 ratingsCinema Sangathi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Sanditha Prabalangal Rating: 0 out of 5 stars0 ratingsJayabharathi Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNadigai Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsCriminal University Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsVilagiya Thirai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka Neramillai Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsAV.M. Thantha SP.M. Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Uravadu... Rating: 5 out of 5 stars5/5Chennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsKavignargalin Kaalachuvadu! Rating: 0 out of 5 stars0 ratingsPani Iravil Pullveliyil Rating: 3 out of 5 stars3/5Anniya Mannil Sivantha Mann Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thiraikadalodi
0 ratings0 reviews
Book preview
Thiraikadalodi - S. Chandra Mouli
https://www.pustaka.co.in
திரைக்கடலோடி
Thiraikadalodi
Author:
எஸ். மதுரகவி
S. Chandra Mouli
For more books
https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சிவாஜிக்கு எகித்திய விருது
2. ஃபிலிம் சேம்பர் கொடுத்த வாய்ப்பு
3. பம்மல் சம்மந்த முதலியார் கொடுத்த ஷாக்
4. பாக்ஸ் கேமராவில் டபுள் ரோல்
5. ஸ்டார் நைட் அனுபவங்கள்
6. எம்.ஜி.ஆர். அணிவித்த மோதிரம்
7. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன்
8. நாடோடி மன்னன் நினைவுகள்
9. ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்’ ஆனேன்
10. ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு கிளைமாக்ஸ்
11. எம்.ஜி.ஆர். கொடுத்த டென்ஷன்
12. எம்.ஆர். ராதாவின் மேடை சலசலப்புகள்
13. முப்பதாயிரம் ரூபாய் நடிகர்
14. பானுமதியின் மௌனவிரதப் பிரச்னை
15. ஏ.வி.எம்மின் சென்டிமென்ட்
16. நஷ்டம் ஏற்படுத்திய பொருட்காட்சி
17. பிரம்மாண்ட தயாரிப்பாளர் வாசன்
18. நந்தனார்: பாடல், போட்டி, பரிசு
19. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
20. ஜென்டில்மேன் எஸ். பாலசந்தர்
21. தத்தி தத்தி நடந்து வந்த பொம்மை
22. ஃப்ளோராவும், பாலசந்தரும், கல்யாணராமனும்
23. தை நாகேஷா? தாய் நாகேஷா?
24. சுவரை இடித்துவிட்டு ஷூட்டிங்
25. நெகிழ வைத்த சீர்காழி
26. பாகவதர் என்ற புதிர்
27. காந்திஜிக்கு பாகவதரின் அஞ்சலி
28. பந்தா இல்லாத எஸ்.பி.பி.
29. பரபரப்பூட்டிய ஜெயலலிதா
30. ரஜினி - லதா திருமணம்
31. ரஜினியின் நூறாவது படம்
32. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட்
33. பெயரால் ஏற்பட்ட குழப்பம்
34. ஜெயலலிதாவுக்கு நன்றி!!
வணக்கம்.
ஆனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் நடமாடும் திரைப்பட உலக என்சைக்கிளோபீடியா என்றால் சற்றும் மிகை இல்லை. தொண்ணூறு வயதுவரை வாழ்ந்து மறைந்த இவர், தன் வாழ்நாள் முழுவதும் தேனீ போல சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்.
திரைப்பட உலகம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் திரட்டித் தொகுத்து வைத்திருக்கும் பொக்கிஷமாக விளங்கினார்.
சினிமா உலகம் பற்றி யாருக்கு, என்ன தகவல் தேவை என்றாலும் உடனே அவர்களின் கை விரல்கள் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் வீட்டு டெலிபோன் எண்ணை சுழற்றும். பத்திரிகை அலுவலகத்தில் பழைய சினிமா ஸ்டில் தேவையா? உடனே ஆசிரியர் சொல்லுவார்: ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு போன் செஞ்சு கேளு!
அவ்வளவு ஏன்? ஆனந்தனுக்குப் போன்செய்து, தேவி தியேட்டரில் எத்தனை மணிக்கு சார் மேட்னி ஷோ? தசாவதாரம் படம் ரிலீஸ் எப்போ சார்?
என்றெல்லாம் கேட்கும் ரசிகர்களும் உண்டு.
எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ்த் திரைப்பட உலக வரலாற்றை முழுமையாகத் தொகுத்து இவர் வெளியிட்டிருக்கும் சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு
என்ற சுமார் 750 பக்க நூல் தமிழ்த் திரை உலகத்தினருக்கு மட்டுமில்லாமல், சினிமா ரசிகர்களுக்குக்கூட ஒரு அரிய பொக்கிஷம்.
இவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது அளித்து கௌரவித்துள்ளது. இதுதவிர இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளும், பட்டங்களும் நிறைய உண்டு. அவற்றுள் விஜய் டி.வி. வழங்கிய சாதனையாளர் விருதும் அடக்கம்.
சுமார் எழுபது வருடங்களாக திரையுலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஃபிலிம் நியூஸ் ஆனந்தனிடம் நட்பு பாராட்டி, பழகிய நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலருண்டு. அவர்களுடனான தனது சுவாரசியமான அனுபவங்களை திரைக்கடலோடி
என்ற தொடரின் வாயிலாக, அமுதசுரபி மாத இதழின் மூலமாக, 2008ஆம் ஆண்டில் தொடங்கி, சுமார் மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து எழுதும் வாய்ப்பினை அளித்தார் அமுதசுரபி இதழின் ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன். இந்நேரத்தில் அவருக்கு என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்ட அந்தத் தொடரின் புத்தக வடிவம் இது.
ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நிதி உதவி அளித்து, அவரது பொக்கிஷமான அரிய தொகுப்புகளைப் பெற்றுக் கொண்டது தமிழ்நாடு அரசு. ஆனால், அவை, அவசியப்பட்டோர்க்கு பயன்படும் வகையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிய வருகிறது.
தன்னுடைய அனுபவங்களை அமுதசுரபி வாயிலாக பதிவு செய்ய மிகுந்த ஆர்வத்துடன் முழுமையான ஒத்துழைப்பு நல்கிய திரு. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், 2016 மார்ச் மாதம் 21ஆம் தேதி மறைந்தார்.
அவருடைய அரிய பணியைப் போற்றும் வகையிலும், அவருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவரது அனுபவங்களின் தொகுப்பினைப் புத்தகமாக வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
எஸ். சந்திரமௌலி.
9840160441
26 நவம்பர் 2022
சென்னை.
1. சிவாஜிக்கு எகித்திய விருது
1959ஆம் ஆண்டு, பி.ஆர். பந்துலு தயாரித்து, இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியாகி, 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ். வரலட்சுமி ஆகியோர் நடித்த அந்த படத்துக்கு கதை, வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இசையமைத்தவர் பழம்பெரும் இசையமைப்பாளரான ஜி. ராமனாத ஐயர்.
முதலில் சிவாஜியின் நாடகக் குழுவினரால் மேடையில் நடிக்கப்பட்டு, பெரும் வரவேற்பினைப் பெற்ற நாடகம்தான் பின்னர் சினிமாவாக எடுக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இங்கே படம் பிடிக்கப்பட்டது. லண்டனில் டெக்னிகலரில் பிரிண்ட் போடப்பட்டு, வெளியானது.
தமிழகமெங்கும் பெரும் வரவேற்பினைப் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சிவாஜி, பத்மினி மற்றும் இயக்குனர் பந்துலுவுடன் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சித்ரா கிருஷ்ணசாமி என்ற பத்திரிகையாளரும் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்குச் சென்றிருந்தார்கள். திரைப்பட விழாவின் நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் நாசர் அழைக்கப்பட்டிருந்தார்.
நிறைவு விழாவில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் மிஸ்டர். சிவாஜி கணேசன், இந்தியா என்று அறிவிக்கப்பட்டபோது, அரங்கத்தில் இருந்தபோதிலும் சிவாஜி அதை கவனிக்கவில்லை. பத்மினிதான் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, சிவாஜியிடம் விஷயத்தைச் சொன்னார்.
அடுத்து, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக இசை அமைப்பாளர் ஜி. ராமநாத ஐயருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராமநாத ஐயர் திரைப்பட விழாவுக்குச் செல்லவில்லை.
இந்தியாவுக்கே கௌரவம் சேர்க்கும் வகையில் விருது வாங்கிக்கொண்டு சிவாஜியும் மற்றவர்களும் மும்பை வந்து இறங்கினார்கள். சென்னை பத்திரிகைகள் அனைத்திலும் சிவாஜிக்கு சிறந்த நடிப்புக்கான விருது கிடைத்துள்ள செய்தி வெளியானது.
எனக்கு இனம்புரியாத சந்தோஷம். காரணம் சிவாஜியை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவன் நான். விஷயம் தெரிந்ததும், உடனே சிவாஜியின் தம்பி ஷண்முகத்துக்கு டெலிபோன் செய்து, எகிப்திலிருந்து திரும்பும் சிவாஜியும் மற்றவர்களும் மும்பையில் எந்த ஓட்டலில் தங்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். சிறந்த நடிகருக்கான விருது பெற்றதற்காக சிவாஜிக்கு அந்த ஓட்டலின் முகவரிக்கே ஒரு வாழ்த்து தந்தி அனுப்பி வைத்தேன்.
அந்தத் தந்தியில், எனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் நிற்காமல், சென்னை வந்தவுடன், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நாங்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம் என்றும் அதில் அவர் கலந்து கொண்டு எங்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். சிவாஜியும் மற்றவர்களும் எப்போது சென்னை வருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
சென்னை திரும்பிய சிவாஜியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றேன். ஏராளமான திரையுலகப் பிரமுகர்களும், ரசிகர்களும் திரண்டிருந்தார்கள். ‘முக்கியமானவர்கள் எல்லாம் முதலில் சந்திக்கட்டும்; நாம் அதுவரை காத்திருக்கலாம்’ என்று நினைத்து ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.
சிவாஜி அங்கே வந்ததும் ஒரே பரபரப்பு. அந்த நெரிசலிலும், சிவாஜி என்னை கவனித்துவிட்டார். டைப்ரைட்டர் அடிப்பது போல விரல்களை அசைத்து, கண்களால் பேசினார். அதாவது, நீங்கள் மும்பைக்கு அனுப்பிய தந்தி எனக்குக் கிடைத்தது, மிக்க சந்தோஷம்
என்று எனக்கு அபிநயம் மூலமாகவே தெரிவித்துவிட்டார், நடிகர் திலகம் சிவாஜி. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
சிவாஜிக்கு மறுபடியும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்தத் திட்டமிட்டிருந்த பாராட்டு விழாவுக்கு அவரது சம்மதத்தைக் கேட்டேன். உடனடியாக சம்மதித்தார்.
சுமார் நூறுபேர்கள் கலந்துகொள்ளுவார்கள் என கணக்கிட்டு பாராட்டு விழாவுக்கு ஏற்றதொரு இடம் பார்க்க ஆரம்பித்தேன். பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பாராட்டு விழா என்றாலும், விழா நடத்தும் அளவுக்கு சங்கத்துக்கு நிதி வசதி இல்லை. நானும் அதைப் பொருட்படுத்தவில்லை. சிவாஜிமீது கொண்ட மரியாதை மற்றும் நட்பு காரணமாக அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்.
விழாவுக்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். எந்த ஓட்டலிலும் விழா நடத்த ஹால் கிடைக்கவில்லை. சிவாஜியிடம் பாராட்டு விழாவுக்கு சம்மதம் வாங்கிவிட்ட சூழ்நிலையில் விழாவை நடத்த இடம் கிடைக்கவில்லையே என்று எனக்கு ஒரே கவலையாகிவிட்டது.
மறுபடியும் சிவாஜியை சந்தித்தேன். இடப்பிரச்னை குறித்து எடுத்துச் சொல்லி, சுமார் இருநூறுபேர் அமரும் அளவுக்கு தாராளமாக இடம் கொண்ட எங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே விழாவை நடத்திவிடலாமா? என்று கேட்டேன். அவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒப்புதல் அளித்தார்.
இயக்குனர் பி.ஆர். பந்துலுவும் விழாவில் கலந்துகொள்ள சம்மதித்தார். அதன்படி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, வினியோகிக்கப்பட்டன. ஊரில் இல்லாத காரணத்தால் இசையமைப்பாளர் ஜி. ராமநாத ஐயர் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
எங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே சிவாஜிக்கு பாராட்டு விழா நடந்தது. எனது சகோதரர் மைக், லைட் ஏற்பாடு செய்து கொடுத்தார். தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள், சங்கத்தில் உறுப்பினரல்லாத சினிமா பத்திரிகையாளர்கள், இதர பத்திரிகைகளின் நிருபர்கள் என்று பலரும் விழாவில் கலந்துகொண்டார்கள். எங்கள் வீட்டு மொட்டை மாடி நிரம்பி வழிந்தது.
அந்த நிகழ்ச்சி ஒரு பாராட்டு விழாவாக மட்டும் அமையவில்லை. சிவாஜி மனம் திறந்து பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது சிவாஜி தி.மு.கவில் இருந்தார். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் பீம்சிங்மீது சிவாஜி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர். ஒரு நாள் பீம்சிங், திருப்பதிக்குப் போகிறேன்; நீயும் வருகிறாயா?
என்று கேட்க, சிவாஜிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. கோவிலுக்குச் செல்வது தி.மு.கவின் பகுத்தறிவுக் கொள்கைக்கு முரண்பாடானது ஆயிற்றே? ஆனாலும், பீம்சிங்கே கூப்பிடுகிற போது, மறுப்பது சரியல்ல என்று நினைத்தார் சிவாஜி. எனவே, அவருடன் திருப்பதிக்குச் சென்று வந்தார்.
அது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு. கழகத்தைச் சேர்ந்த ஒருவர் சிவாஜி திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிடலாமா?
என்று கேள்வி எழுப்பி, சிவாஜியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அது சிவாஜியை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது.
நாங்கள் நடத்திய விழாவில் இது குறித்து தன்னுடைய மன வருத்தத்தையும், வேதனையையும் சிவாஜி மனம் திறந்து எங்களுடன் பகிர்ந்து கொண்டார். பிற்காலத்தில் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும், அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்கியதும் சரித்திரம்.
இந்த விழாவுக்குப்பிறகு சிவாஜிக்கும், எனக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானது.
இந்த நேரத்தில் சிவாஜியை முதன்முதலாக என்னுடைய கேமராவில் படம் எடுத்தபோது எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியமான அனுபவம் நினைவுக்கு வருகிறது.
1950களின் ஆரம்பத்தில் மூவாயிரம் ரூபாய் விலையில் புத்தம் புதிய ரோலி·ப்ளெக்ஸ் கேமரா (ஜெர்மன் தயாரிப்பு) வாங்கினேன். அந்தக் கேமராவில் சிவாஜியை முதன்முதலாக படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது.
சென்னையில் நியூடோன் ஸ்டுடியோவில் ராஜா ராணி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கே கேமராவுடன் சென்ற போது, ஒரு ஓரமாக வயசான ஒருவர் ஈசி சேரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அவர் சிவாஜி என்று தெரிந்துகொண்டேன்.
எனது புதிய கேமராவில் அவரை போட்டோ எடுக்க விரும்பினேன். ஆனால் அவர் அதற்கு அனுமதி தருவாரா? என்ற தயக்கம். அவரை நெருங்கிச் சென்று உங்களை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?
என்று தமிழில் கேட்டேன்.
சிவாஜி என்னை நேருக்கு நேர் பார்த்து, Of course you can take
என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தார். எனக்கு இனிய அதிர்ச்சி!
2. ஃபிலிம் சேம்பர் கொடுத்த வாய்ப்பு
ஆண்டுதோறும், மொத்தம் எத்தனை தமிழ்ப் படங்கள் வெளிவந்தன? எத்தனை படங்கள் தணிக்கை செய்யப்பட்டும் வெளிவரவில்லை? 25 வாரம் ஓடிய படங்கள் எவை, 100 நாட்கள் ஓடிய படங்கள் என்னென்ன, 50 நாட்கள் ஓடிய படங்கள் எவை போன்ற விபரங்கள், அதிக படங்களில் நடித்த நடிக, நடிகையர் யார்? திரையுலகத் திருமணங்கள், மரணங்கள், சாதனைகள், விருதுகள், விழாக்கள் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட இதர முக்கிய தகவல்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு சிறு கையேடாக வெளியிடுவது என்னுடைய பழக்கம். அந்த கையேட்டில் இடம்பெறும் தகவல்களை பல பத்திரிகைகளும் வெளியிடுவார்கள். வாசகர்களும் ஆர்வமாகப் படிப்பார்கள்.
இப்படி திரைப்பட உலகம் பற்றிய கையேட்டினை நான் கடந்த 1954ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா?
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழி திரைப்பட உலகங்களுக்கும் பொதுவான ஒரு அமைப்பு. இதனை ஃபிலிம் சேம்பர்
என்று அழைப்பார்கள். தென்னிந்திய மொழிப் பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வினியோகஸ்தர்களும், திரைப்பட அரங்கு உரிமையாளர்களும் ஃபிலிம் சேம்பரில் உறுப்பினர்கள். தயாரிப்பாளர்கள், தாங்கள் தயாரிக்கும் படத்தின் பெயரை ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்வது மரபு. ஆனால் அந்தப் படத்தின் பூஜை நடந்து, படப்பிடிப்பு ஆரம்பித்ததா? படம் எந்த அளவில் இருக்கிறது? எப்போது ரிலீஸ்? போன்ற தகவல்கள் எல்லாம் சேம்பரது கவனத்துக்கு வராமலேயே இருந்தது.
ஃபிலிம் சேம்பர், அதன் உறுப்பினர்களுக்காக ஒரு தனிச்சுற்றுப் பத்திரிகை நடத்தி வருகிறது. சேம்பரின் மேனேஜராக இருந்த ஏரங்கி ராமா ராவ் என்பவர் அந்த பத்திரிக்கைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, நடத்தி வந்தார். அவர்