Elimaiyin Yenthal!
()
About this ebook
தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து சிறந்த தோழர் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகனாகிய கே. ஜீவபாரதி, தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது இந்த நூலின் சிறப்பாகும். இதுபோன்ற அரிதான ஒப்புமை வேறு எந்த நூலுக்கும் வாய்த்திருக்காது.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் இந்தச் சமூகத்திற்குத் தேவையான கட்டுரைகளாகும்; வளரும் சந்ததிக்குச் சொல்லித்தர வேண்டிய செய்திகளாகும்.
Read more from K. Jeevabharathy
Tiruppur Kumaran Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsVelu Natchiyar Rating: 0 out of 5 stars0 ratingsLenin Rating: 0 out of 5 stars0 ratingsMalargalukkaga Malarnthavai! Rating: 0 out of 5 stars0 ratingsVazhum Varalaru Rating: 0 out of 5 stars0 ratings
Related to Elimaiyin Yenthal!
Related ebooks
Puthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Vadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Urangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsJJ Sila Kuripugal Rating: 0 out of 5 stars0 ratingsKilambitangaya… Kilambitanga… Rating: 0 out of 5 stars0 ratingsIvargal Paarvaiyil Cinnathirai Rating: 0 out of 5 stars0 ratingsKathugal Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Endru Thaniyum Intha Suthanthira Thaagam? Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsArivulaga Methai Anna Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsNeelavan Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Petti Rating: 0 out of 5 stars0 ratingsKarna Parambarai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Elimaiyin Yenthal!
0 ratings0 reviews
Book preview
Elimaiyin Yenthal! - K. Jeevabharathy
https://www.pustaka.co.in
எளிமையின் ஏந்தல்!
(தோழர் ஆர். நல்லகண்ணுவின் கட்டுரைகள்)
Elimaiyin Yenthal!
(Thozhar R. Nallakannuvin Katturaigal)
Author:
கே. ஜீவபாரதி
K. Jeevabharathy
For more books
https://www.pustaka.co.in/home/author/k-jeevabharathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
அணிந்துரை
இந்த நூலின் தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி என் மகன். நான் பெறாது பெற்ற மைந்தன். கவிதை, ஆய்வு, புதினம், நாடகம், நேர்காணல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், தொகுப்பு என இதுவரை 101 நூல்கள் எழுதியிருக்கும் கே.ஜீவபாரதியின் இந்த நூல் 102வது நூலாகும்.
இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தபின் கம்யூனிஸ்ட் கட்சியை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்து, கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகளைப் போட்டனர். அப்படிப் போடப்பட்ட நெல்லை சதி வழக்கில் சிறை வாழ்ந்தவர் தோழர் ஆர். நல்லகண்ணு. அப்போது அவரோடு சிறை வாழ்ந்தவர்களில் நானும் தோழர் நல்லகண்ணு மட்டும்தான் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
தியாகி பூதலபுரம் ஆர். வேலுச்சாமித் தேவர் மறைந்த போது ‘ஜனசக்தி’ பத்திரிகையில் அவரைப் பற்றி தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரையும், பூதலபுரம் கிராமத்தில் ஆர். வேலுச்சாமித் தேவருக்குக் கட்டப்பட்ட மணிமண்டபத்தைத் திறந்துவைத்து தோழர் ஆர். நல்லகண்ணு பேசியதும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தக் கட்டுரைகளைப் படித்து முடித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டன. அந்தக்கால நினைவுகள் என்னுள் அணிவகுத்தன.
தோழர் ஆர். வேலுச்சாமித் தேவர் நெல்லை மாவட்டத்தில் விவசாய இயக்கங்களைக்கட்டி வளர்த்தவர். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டு இயக்கத்தைக் காத்தவர்.
என்னுடைய நண்பர் ஆர். வேலுச்சாமித் தேவர் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு காவல் துறையினரின் தாக்குதல்களையும் சிறை வாழ்க்கையையும் சந்தித்தவர். அதன்பின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஏழை எளிய மக்களின் நலன்களுக்காகப் போராடி, காவல் துறையின் தாக்குதல்களையும் சிறை வாழ்க்கையையும் அனுபவித்தவர்.
1950 காலகட்டத்தில் கிராமங்களுக்குக் கால்நடையாகச் சென்று விவசாய இயக்கங்களைக்கட்டி வளர்த்ததுடன், விவசாயிகளுக்கு எட்டையபுரம் ஜமீன் செய்த கொடுமைகளையும், வரிவசூலில் காட்டிய கெடுபிடிகளையும் வன்மையாக எதிர்த்துப் போராடியவர் வேலுச்சாமித் தேவர். எட்டையபுரம் ஜமீன்தார் எட்டப்பனுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வேலுச்சாமித் தேவர் வாழ்வே போராட்ட வாழ்க்கையாகும்.
நெல்லை கம்யூனிஸ்ட் சதி வழக்கின் பேரால் மதுரை மத்திய சிறையில் வேலுச்சாமித் தேவர், ஆர். நல்லகண்ணு, நான் உட்பட 95 பேர் இருந்தோம். கொடிய அடக்குமுறைகளுக்கும்; புழுக்கள் நிறைந்த சோளக்களிக்கும் மத்தியில் மதுரை மத்திய சிறையை ஒரு பல்கலைக்கழகமாக நாங்கள் மாற்றினோம்.
தோழர் அழகுமுத்து, சிவானந்த், பட்டாணி நாடார் போன்ற தோழர்களுக்கு நான் தமிழ் கற்றுக்கொடுத்தேன். ஆங்கில வகுப்புகளும், இந்தி வகுப்புகளும், அரசியல் வகுப்புகளும் சிறைக்குள் நடந்தன. விவசாய வர்க்கம் பற்றி ஆர். வேலுச்சாமித் தேவர் வகுப்பு எடுப்பார். தோழர் ஐ. மாயாண்டி பாரதி பொருள் முதல்வாதம் பற்றி மிக எளிமையாகப் பாடம் நடத்தி அனைவருக்கும் புரியவைத்தார். மற்றும் துறை வல்லுனர்கள் அந்தந்தப் பாடங்களை நடத்துவர். சிறையில் அவ்வளவு வசதியா? என்று கேள்வி எழுப்பிவிடாதீர்கள். துன்பத்தையும் இன்பமாக்குபவர்கள் கம்யூனிஸ்டுகள். சிறை அதிகாரிகளைச் சந்தித்து நேரத்தை நெறிப்படுத்தினோம். தோழர் ப. மாணிக்கம் சிறை அதிகாரிகளைக் கண்டு பேசி வகுப்பு நடத்த அனுமதி பெற்றார்.
தியாகி பூதலபுரம் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகன்தான் இந்த நூலின் தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி. ஆம்! என்னோடு சிறைவாழ்ந்த தோழர் ஆர். நல்லகண்ணுவின் கட்டுரைகளைத் தொகுத்தது என்னோடு சிறைவாழ்ந்த தோழர் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகன். இந்த அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்கு!
தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து சிறந்த தோழர் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகனாகிய கே. ஜீவபாரதி, தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது இந்த நூலின் சிறப்பாகும். இதுபோன்ற அரிதான ஒப்புமை வேறு எந்த நூலுக்கும் வாய்த்திருக்காது.
இந்த நூலில் தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய தூக்கு மேடை பாலு பற்றிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. அந்தக் கட்டுரையும் என்னைக் கலங்கடித்துவிட்டது. ஏனெனில் தூக்கு மேடை பாலுவும் எனக்கு அறிமுகமானவர்தான்.
அதுபற்றி:
மதுரை மத்திய சிறை நூலகத்திலிருந்து நூல்களை வாங்கிப்படிப்பது பாலுவின் வழக்கம். 1948ல் நான் இளைஞனாக இருந்த போது எழுதிய ‘மோசம்போன மோதிரம் முதலிய சிறுகதைகள்’ என்ற நூலை சிறை நூலகத்திலிருந்து வாங்கி பாலு படித்துக்கொண்டிருந்த போது அவரைப் பேட்டி காண்பதற்காக தோழர் ப.மாணிக்கம் சென்றிருக்கிறார். அப்போது, பாலு! என்ன புத்தகம் படிக்கிறீர்கள்?
என்று தோழர் ப. மாணிக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு பாலு, ஆர். எஸ். ஜேக்கப் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலில் பக்தி ரசம் சொட்டுகிறது. அத்துடன் ஏழை எளிய மக்களைப்பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்
என்று சொல்லியிருக்கிறார்.
உடன் தோழர் ப. மாணிக்கம், அந்தத் தோழர் நம்மோடு சிறையில் ரிமாண்ட் பிளாக்கில்தான் இருக்கிறார்
என்று சொல்ல, ஆச்சரியத்துடன் பாலு, அப்படியா? உடனே அவரை வரச்சொல்லுங்கள்... அவரை நான் பார்க்க வேண்டும்
என்று சொல்லியிருக்கிறார்.
தோழர் ப. மாணிக்கம் சிறை மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்று ‘கண்டம் செல்’லில் இருந்த தோழர் பாலுவைச் சந்திக்க என்னை அழைத்துச்சென்றார். இது நடந்தது தோழர் பாலுவைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள். என்னைப் பார்த்தவுடன் சிறைக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு சிங்கம் போல் பாலு கர்ஜித்தார்: தோழர் ஜேக்கப்! உங்களுக்கு அறுபது வயதிற்கு மேல் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால் நீங்கள் மிகவும் இளைஞராக இருக்கிறீர்கள். உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். உங்கள் கதைகள் யாவும் பக்தி ரசம் சொட்டச் சொட்ட இருந்தாலும், பாவப்பட்ட மக்களைப்பற்றி பிரம்மாண்டமாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். இனி நீங்கள் ஏழை - எளிய - தொழிலாளி - விவசாயி பற்றி அதிகமாக எழுதுங்கள். உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. ரசிய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி போன்று மாபெரும் படைப்பாளியாக நீங்கள் வரமுடியும். நிறைய எழுதுங்கள்... உங்களை நான் வாழ்த்துகிறேன்
என்று கூறினார்.
அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் என்னுள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இப்படி இரண்டு முறை பாலு எனக்கு பேட்டி தந்தார். மறுநாள் காலையில் அவர் தூக்கில் தொங்கப்போகிறார். ஆனால் மரணபயமின்றி எங்களிடம் பாலு பேசியது ஜீவகீதமாகும். இதுபற்றிய விரிவான செய்தி அன்றைய ‘ஜனசக்தி’ இதழில் வெளிவந்திருக்கிறது.
அதேபோன்று ‘நெருப்பில் பூத்த கம்யூனிஸ்ட் இயக்கம்’ என்ற தலைப்பில் தோழர் ஆர்.நல்லகண்ணு எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல தோழர்களும், ‘தோழர்கள் ஒளித்து வைத்திருந்த கேரளத்து அழகி’ என்ற கட்டுரையில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிடும் தோழர் கே. பாலதண்டாயுதமும் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கும் எனக்கும் நடந்த நிகழ்வுகளை இங்கே விவரித்தால் அதுவே தனி நூலாகிவிடும்.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் இந்தச் சமூகத்திற்குத் தேவையான கட்டுரைகளாகும்; வளரும் சந்ததிக்குச் சொல்லித்தர வேண்டிய செய்திகளாகும்.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளை எழுதிய தோழர் ஆர். நல்லகண்ணு நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து இந்த தேசத்திற்கும் தேசமக்களுக்கும் பணியாற்றுவதுடன்; இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும். இந்த நூலைத் தொகுத்திருக்கும் என் மகன் ஜீவபாரதி இன்னும் எழுதிக் குவிக்கவேண்டும். இதுவே என் பேரவா!
வாழ்க தோழர் நல்லகண்ணு; வளர்க ஜீவபாரதி!
அருட்கலைஞர் ஆர்.எஸ். ஜேக்கப்
22ஆம் தெரு
ஜெயா நினைவகம்
சாந்தி நகர்
பாளையங்கோட்டை – 627 002
செல்பேசி: 9942017512
உள்ளே புகுமுன்...
டிசம்பர் 26 தோழர் ஆர். நல்லகண்ணு பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு ஒரு நூல்கொண்டு வரவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தின் விளைவாக வெளிவருவதுதான் இந்த நூல்.
‘ஜனசக்தி’, பல்வேறு மலர்கள், ‘மேன்மை’ மாத இதழ் ஆகியவற்றில் ஆர். நல்லகண்ணு எழுதிய என் பார்வைக்குக்கிட்டிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
‘அரிஜனங்களுக்கு எதிராக நிலப்பிரபு - போலீஸ் வெறியாட்டம்' என்ற கட்டுரையின் இறுதியைத் தோழர் நல்லகண்ணு, தங்கள் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு சீக்கனாங்குப்பம் அரிஜனங்கள் இப்போதுதான் ஆளாகியிருக்கிறார்கள் என்ற போதிலும், தங்களைக் காலியென்றும், கூலியென்றும் கேலி செய்யும் கூட்டத்திற்கு எதிராகக் காத்து மாறி அடிக்கப் போவதும் உண்மை; அவர்கள் ஓட்டம் எடுக்கப்போவதும் உண்மை என்று எடுத்துக்காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை
என்று முடிக்கிறார்.
இந்தக் கட்டுரை ‘ஜனசக்தி’யில் 18.12.1977 அன்று வெளிவந்திருக்கிறது. இந்தக் கட்டுரை வெளிவந்து சுமார் 40 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சக்திகளின் தாக்குதல் குறைந்தபாடில்லை. இதற்கொரு முடிவு வரும்வரை இந்த தேசத்திற்கு விடிவில்லை.
1985ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 60ஆம் ஆண்டு நிறைவு - தஞ்சை மாவட்ட சிறப்பு மலரில் தோழர் ஆர். நல்லகண்ணு ‘காவிரி நீர்ப் பிரச்சினை’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை தோழர் ஆர். நல்லகண்ணு எழுதி சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் காவிரிப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. கர்நாடக அரசு காவிரியில் நீரைத் திறந்துவிட மறுத்துவருவதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை தலைமுறைக்குத்தான் காவிரி பிரச்சினை தொடரும் என்று தெரியவில்லை!
8.4.2009 அன்று ‘ஜனசக்தி’யில் ‘ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற கட்டுரையைத் தோழர் நல்லகண்ணு எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் அணுகுமுறை தொடர்ந்து எப்படி இருந்துவந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
31.3.2011 அன்று ‘தினமணி’யில் ‘கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்’ என்ற தலைப்பில் தோழர் ஆர்.நல்லகண்ணு எழுதிய கட்டுரை இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. அந்தக் கட்டுரையை தோழர் நல்லகண்ணு, இலங்கை அரசு, ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால் நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாமாகுமா? எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத் தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும்
என்று முடிக்கிறார். இன்றும் கச்சத்தீவு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை!
இதுபோன்று தமிழ்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி, அதற்குரிய தீர்வையும் சொல்லியிருப்பது தோழர் ஆர். நல்லகண்ணுவின் கட்டுரைகளின் தனித்துவமாகும். இந்த அரிதான கட்டுரைகளைத் தொகுத்து தமிழர்களின் கவனத்திற்குக்கொண்டு செல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
தோழர்கள் ஆர். நல்லகண்ணு, ஆர்.எஸ். ஜேக்கப், மு. மணி ஆகியோருக்கு என் நன்றி என்றும் உண்டு.
என்றும் அன்புடன்
கே. ஜீவபாரதி
பி1, டர்ன்புல்ஸ் சாலை
3வது குறுக்குத்தெரு
நந்தனம், சென்னை - 600 035
செல்: 9445419088
உள்ளே...
1. சங்கத்தின் முடிவை நிறைவேற்றுவோம்!
2. போராடும் மக்களுக்குப் போதனையா?
3. அரிஜனங்களுக்கு எதிராக நிலப்பிரபு - போலீஸ் வெறியாட்டம்
4. வேலையில்லாத் திண்டாட்டமும் நவீன காலனியாதிக்கமும்
5. அடித்தட்டு மக்களை அணி திரட்டுவோம்!
6. விவசாயிகள் இயக்கத்தைக் கட்டி வளர்த்த தியாகி
7. காவிரிநீர்ப் பிரச்சினை
8. வைரவிழாக் காணும் சங்கம்!
9. பாரதியும் விவசாயிகளும்
10. இனாம் ஒழிப்புக்கு வாதாடிய வழக்கறிஞர்
11. நெல்லை - தூத்துக்குடி மாவட்ட சாதிக் கலவரம்
12. கம்யூனிஸ்டு இயக்கத்தில் முஸ்லிம்கள்
13. பொங்கல் திருநாளில் புதுவாழ்வு மலரட்டும்!
14. பாஷ்யமும் படமும்
15. மாண்புமிகு முதல்வருக்கு...!
16. நெருப்பில் புத்த கம்யூனிஸ்ட் இயக்கம்
17. தோழர்கள் ஒளித்து வைத்திருந்த கேரளத்து அழகி
18. மே தின நினைவு
19. எண்பது வயதிலும் எழுத்துப் பணி!
20. தூக்கு மேடைக்கு ராஜநடை போட்ட பாலு
21. அரசியல் பண்பாடே கிடையாதா?
22. தோழர் எம். வி. சுந்தரம்
23. நான் அறிந்த தோழர் பி.ஆர்.
24. மறக்கமுடியாத நிகழ்வு
25. தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில்...
26. இன்னொரு சுதந்திரப் போராட்டம்!
27. அனைவரையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும்
28. ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
29. எளிமையின் ஏந்தல்!
30. இன்னும் ஏன் மௌனம்...?
31. தீண்டாமை ஒழிப்பும் வர்க்கப் போராட்டமும்
32. ஆதிப் பழங்குடி மக்கள் மீது அராஜகத் தாக்குதல்!
33. யாருக்காக... இது யாருக்காக...?
34. தமிழறிஞர் நூற்றாண்டு
35. கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!
36. அடக்குமுறை கால நினைவுகள் அழிவதில்லை!
37. நெஞ்சுரம் கொண்ட போராளி
38. பாரதியும் சாதிகளும்
39. தோழர் பாண்டியனின் ஆளுமை
40. மாபெரும் தலைவருக்கு நூற்றாண்டு
41. மறக்க முடியாத மாமனிதர்
42. கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்
43. ஆடு மேய்த்ததற்காக அவமானப்படாதவர்!
44. இன்றைய தலைமுறைக்கு வரலாற்றுப் பதிவு தேவை
45. மனித உணர்வு
46. வறுமையின் வேதனை!
47. உழைப்பால் உயர்ந்த தமிழர்!
48. அசரீரியாக ஒலித்துக் கொண்டிருக்கும் மூதாட்டியின் சொல்!
1
சங்கத்தின் முடிவை நிறைவேற்றுவோம்!
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் அக். 13, 14 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. தோழர் எலமந்த ரெட்டி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் தோழர் கொடியன் எம்.பி., செப்டம்பர் 14ல் நடைபெற்ற இயக்கத்தைப்பற்றி விளக்கிக் கூறினார். துணைத் தலைவர் தோழர் சி. ராஜேஸ்வரராவ் ஜனதா கட்சியின் விவசாயக் கொள்கைகளை விபரமாக எடுத்துரைத்தார்.
அரிசனப் பாதுகாப்பு இயக்கத்தை நாடெங்கும் நடத்துவதென்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவெடுத்தது. இந்த இயக்கத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி நிலப்பிரபுக்களின் தாக்குதலை எதிர்த்துக் கண்டனக் குரலை எழுப்பியுள்ளோம்.
பீகார் மாநிலம் பாட்னா நகரத்தில் மனித சமுத்திரமே திரண்டதாம். அலை அலையாகப் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் நகரில் வலம் வந்தார்கள். முதன் முறையாக - பாட்னா நகரில் படித்தவர்களும், நடுத்தர மக்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்தார்களாம்.
பஞ்சாப் மாநிலத்தில் செங்கொடிப் பயணம்
(Red flag March) என்று சொல்லப்படுகிறது. செங்கொடி தாங்கி, ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து, தொண்டர்கள் ஆயிரம் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஆந்திராவில் கருத்தரங்கும், மாநாடுகளும் நடந்தன. தலைநகரான ஐதராபாத்தில் ஊர்வலமாகச்சென்று அமைச்சரிடம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 80 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கோரிக்கை விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. மொத்தம் லட்சம் பேர் கலந்திருக்கிறார்கள்.
மத்தியப்பிரதேசத்தில் ஜனதா கட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டதென்ற தெம்பில் நிலப்பிரபுக்களும், கொள்ளைக் கூட்டத் தலைவர்களும், வனத்துறைக் குத்தகை இடைத் தரகர்களும் தாழ்த்தப்பட்டவர்களையும், ஆதிவாசிகளையும் நரவேட்டையாடி வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்குள் 21 ஆதிவாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி ஊழியரும், ஆதிவாசிகளின் தலைவருமான தோழர் அரிதாஸ் என்பவரின் மூக்கை நிலப்பிரபுக்களின் அடியாட்கள் அரிந்துவிட்டனர், நஞ்சைத் தாங்கிய நீலகண்டனான சிவபெருமானைப்போல, அரியப்பட்ட மூக்குடன் தோழர் அரிதாஸ் மேலும் ஆக்ரோசத்தோடு ஆதிவாசிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
முந்தைய அரசு ஆதிவாசிகளுக்குக் கொடுத்திருந்த புறம்போக்குத் தரிசு நிலங்களை கொள்ளைக் கூட்டத் தலைவர்களான நிலப்பிரபுக்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கொத்தடிமை ஒழிப்பு, உச்சவரம்புச் சட்டம் போன்ற சட்டங்களை அமுல் நடத்த வேண்டாமென்று அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.
மத்தியப்பிரதேச சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரக் கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் ஆதிவாசிப் பெண்களை மனித மிருகங்கள் கற்பழித்து வருகிறார்கள். ஒரு விதவைப் பெண்ணை நெருப்பில் தூக்கிப் போட்டுப் பொசுக்கி விட்டார்கள். இந்த ஏழை அபலைகளின் கதியை மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் கைலாஷ் ஜோஷியிடம் முறையிட்டார்கள்.
பெண்களைக் கற்பழிப்பது மனித சுபாவம். இதையெல்லாம் சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
என்று சொன்னாராம்! கைலாஷ் ஜோஷி ஜனசங்கத்தைச் சேர்ந்தவர். ஜனதா கட்சியின் சாலச் சிறந்த ‘மனித சுதந்திரத்தின்’ கொள்கைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறாரென்று தெரிகிறது.
மத்தியப்பிரதேச முதலமைச்சரைப் போலவே மத்திய உள்துறை அமைச்சரும், ஜனதா கட்சியின் இரும்பு மனிதருமான சரண்சிங்கும் அரிசனங்களைச் சுட்டுக்கொன்ற பெல்ச்சி சம்பவத்தைப்பற்றி பரம்பரைக் குற்றவாளிகள் இருவரின் மோதல்
என்றும், மனிதப் பிறவியின் பலகீனங்களால் ஏற்பட்ட தென்றும் (Cause of the failure in the Human Material) பிற்போக்கு வேதாந்தம் பேசியிருக்கிறார். ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பது பழமொழி. அதைப்போல, ஆதிக்க வர்க்கத்துக்கு ஆபத்துவந்தால் அப்போது தெரியும்.
சரண்சிங்கின் சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் அரிசனங்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை எதிர்த்து 36 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
கேரளம், வங்காளம் மற்றும் எல்லா மாநிலங்களிலும் பரவலாக நடந்திருக்கிறது.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், மாணவர் இளைஞர் பெருமன்றங்கள், விவசாயிகள் சங்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகள் அரிசனங்களின் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
1. ஜனவரி 2ல் நடைபெறவிருக்கும் தேசிய அறப்போருக்கு (சத்தியாக்கிரகம்) விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் தயாரிப்பில் இறங்க வேண்டுமென்றும் பணித்துள்ளது. புத்தாண்டில் துவங்கும் புனிதப் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கு குறையாமல் அறப்போர் வீரர்களை அணி திரட்ட வேண்டுமென்று கிளைகளுக்கு அறைகூவல்விட்டுள்ளது.
2. அரிஜனங்களும், ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களும், பின்தங்கிய மக்களும் தாக்கப்படும் நேரத்திலும், நிலப்பிரபுக்களால் உரிமைகள் பறிக்கப்படும்போதும் உடனே தலையிட்டு தர்ணா, சத்யாக்கிரகம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் மூலமும் வெற்றி காணும்வரை விடாது போராடவேண்டும்.
குறிப்பிட்ட பிரச்சினையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், அதில் ஊன்றி நின்று உறுதியாகப் போராடவேண்டும்.
3. அமுலில் இருக்கும் ஊதியம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இடத்திற்கேற்ப நிலைமையைப் புரிந்துகொண்டு கூலி உயர்வுக்குப் போராடவேண்டும்.
4. மாநிலக் குழு, மாவட்ட குழுக்களைக் கூட்டித் திட்டமிட வேண்டும். நாடு முழுதும் 200 வி.தொ.ச. மாவட்டக் குழுக்களையாவது கூட்டித் தீர்மானிக்க வேண்டும்.
5. கிராமங்களில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் தலையிட்டுப் பணியாற்ற வேண்டும். உறுதியான வர்க்க அமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு 15 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்தாக வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கும் ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கும் நாடு முழுதும் பணியாற்றி வரும் ஒரே அமைப்பு (பாரதீய கேத்மஸ்தூர் யூனியன்) அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமேயாகும். இச்சங்கம் தனிச்சிறப்போடு செயலாற்ற கிராமங்கள் தோறும் அமைப்புகளை உருவாக்கவேண்டும். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் முடிவுகளைத் தமிழகத்திலும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்போம்!
‘ஜனசக்தி’ – 30.10.1977
2
போராடும் மக்களுக்குப் போதனையா?
நாட்டில் புது விழிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பாங்கு சிப்பந்திகள்வரை சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் துவங்கியிருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம்வேண்டும், மத்திய - மாநில அரசு ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டாம், ஒரே நகரில் வாழும் ஊழியர்கள் அனைவருக்கும் வாங்கும் பொருள்களின் விலையில் வித்தியாசமில்லாதபோது, ஊதியத்தில் மட்டும் ஏன் வித்தியாசம் இருக்கவேண்டும் என்ற கேள்வியும் நியாயமானதே.
போராடும் உழைப்பாளர்களின் கோரிக்கைகளின் தன்மையை ஆராய்ந்து தீர்வுகாண்பது ஆட்சியாளர்களின் கடமை. தேர்தலுக்கு நிற்கும்போது, வாக்குறுதிகளை அள்ளிவீசி, வாக்குகளைப்பெற்று, ஆட்சிபீடம் ஏறியதும், புதிய அதிகாரத் தத்துவங்களைப் போதிக்கத் தலைப்படுவது, மக்களை ஏமாற்றுவதாகும்.
இப்பேர்ப்பட்ட பேர்வழிகளைப் பற்றி கனவில் கூட நினைக்கக்கூடாது என்று