Kaatrinile Varum Geetham
By V. Ramanan
()
About this ebook
உலகமறிந்த இசையரசியின் வாழ்க்கை கதையை எழுதுங்களேன் என்று கவிதா பதிப்பக உரிமையாளர் திரு. சேது சொக்கலிங்கம் கேட்டபோது சற்று யோசித்து சிலநாட்களில் சொல்லுகிறேன் எனச்சொன்னேன்.
என்னை எழுதச்சொன்னதற்கு எளிய நிலையில் துவங்கிச் சிகரம் தொட்ட சாதனையாளர் பேராசிரியர் பாலா (கிரேட் லேக் யுனிவர்சிட்டி) “வெற்றி வெளியே இல்லை” என்ற நான் எழுதிக் கவிதா வெளியிட்ட வாழ்க்கை கதையின் வெற்றி காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் படித்தது, கேட்டது எல்லாம் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இசையோடு பிறந்து இசையால் வளர்ந்த ஒரு சிறந்த இசைக்கலைஞராக மட்டுமே அறிந்திருந்த எம்.எஸ் என்ற பெண்மணியின் வெற்றிகரமான பன்முகப் பரிமாணங்கள் பிரமிப்பூட்டும் விஷயமாகயிருந்தது. மிகச்சிறிய வயதிலேயே தன் குல மரபுகளை உடைத்துத் துணிவுடன்தான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அறிவு, ஆற்றல், அர்ப்பணிப்பு ஆன்மிகம் எனப் பல்வேறு ஆளுமைகள் மிளிரும் விஷயங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த வாழ்க்கைபயணத்தை வளரும் தலைமுறையினருக்காகப் பதிவு செய்யவேண்டியதின் அவசியத்தை உணர்ந்து அந்த நல்வாய்ப்பு கிடைத்ததற்காகச் சந்தோஷப்பட்டேன்.
ஒரு புகழ்பெற்ற ஆளுமையின் வாழக்கைக்கதையை அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் எழுதுவது சற்றுச் சவாலானது.படித்த தகவல்களைத் தாண்டி விபரங்கள், தகவல்கள் சேகரிக்கப் பலருடன் பேச வேண்டியிருந்தது. அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பொக்கிஷமாக இருக்கிறது, மறக்காமல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர் இசையை வியந்து போற்றியவர்களை விட இசையே அறியாத பலருக்கும் கூட அவர் ஆதர்சமாக இருப்பது ஆச்சரியம்.
அவை அனைத்தையும் எழுதிவிடவும் முடியாது ஒதுக்கிவிடவும் முடியாது. அதனால் சேகரித்த தகவல்களை அவர் குடும்பத்தினருடனும் மிக நெருங்கிப் பழகியவர்களுடனும் மூத்த பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு உறுதிசெய்து கொண்டவைகளை இசையரசியின் இந்த வாழ்க்கைக் கதையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.
Read more from V. Ramanan
Gangai Karai Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsNetaji Marma Maranam Rating: 0 out of 5 stars0 ratingsKarunai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Buddharai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Kodu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaatrinile Varum Geetham
Related ebooks
Uravai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsMuganool Kavithaigal Rating: 5 out of 5 stars5/5Thiraippada Paadalgalodu Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Kural Rating: 0 out of 5 stars0 ratingsSethu Banthanam Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thediya Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsKavignargalin Kaalachuvadu! Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Potta Thaavani Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsNeram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsAriyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsPrabalamanavargalin Vetri Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRaagangalum Thiraipada Paadalgalum Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Veenai Rating: 3 out of 5 stars3/5Ninaivin Aazhiyil Alaiyum Kayalkal Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsMugavari Thantha Paadal Rating: 0 out of 5 stars0 ratingsNesam Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsIraiyarul Petra Penn Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsSenthamizh Sevvisai Valarththa Semmalgal Rating: 0 out of 5 stars0 ratingsSooriya Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsIthu Magalir Kalluri Aankalukku Anumathiyillai... Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Varudum Vizhuthu... Rating: 0 out of 5 stars0 ratingsThadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsNeeravar Kenmai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaatrinile Varum Geetham
0 ratings0 reviews
Book preview
Kaatrinile Varum Geetham - V. Ramanan
http://www.pustaka.co.in
காற்றினிலே வரும் கீதம்
இசையரசியின் வாழ்க்கைப் பயணம்
Kaatrinile Varum Geetham
Author :
ரமணன்
V. Ramanan
For more books
https://www.pustaka.co.in/home/author/v-ramanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. மல்லிகை தேசத்தில் மலர்ந்த தாமரை
2. நாதமென்னும் கோவிலான வீடு
3. நல்ல குருவை அடைய ஆசீர்வதிக்கப்பட்ட பெண்
4. சுழலும் தட்டு எழுப்பிய சூறாவளி
5. யார் இந்த அழகான பெண்?
6. சிவனிடமிருந்து வந்த அழைப்பு
7. புரட்சிக்காரரின் புதிய பாதை
8. மேற்கே போகும் ரயிலில் மலர்ந்த காதல்
9. தங்கக் கூண்டிலிருந்து தப்பித்த கிளி
10. தேடி வந்த திரை உலகம்
11. ஆசிர்வதிக்கப்பட்ட அந்த நிமிடங்கள்
12. எம்.எஸ். எடுத்த மீரா அவதாரம்
13. எங்கும் நிறைந்த எம்.எஸ்ஸின் இசை
14. மாபெரும் சபையில் விழுந்த மாலை
15. என்றென்றும் மாணவி எம்.எஸ்.
16. இசை பட வாழ்ந்த இனியவர்கள்
17. எம்.எஸ்ஸை ஈர்த்த காந்தம்
18. வீடு தேடி வந்த விருது
19. மீராவின் இரண்டு தம்பூராக்கள்
20. குறையொன்றுமில்லை
என்று சொல்லியவரின் குறை
21. வாடிய தாமரை
நினைவலைகள்…
வானுலகிலும் இசையாய்… - ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்
அந்த நாளும் வந்திடாதோ - கௌரி ராம்நாராயணன்
இறைவன் தந்த வரம் - நல்லி குப்புசாமி
இசையே உயிர்மூச்சாக - சீதா ரவி
இந்த ஜென்மம் போதாது - சிவசங்கரி
எம்.எஸ். பாடிப் பறந்த நீலக்குயில் - பாரதி பாஸ்கர்
வராமலேயே போன அந்த நேரம் - ஏ. நடராஜன்
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்… விஜய் சிவா
அவர் ஆசியால் நான் பறந்துகொண்டே இருக்கிறேன் - விக்கு வினாயகராம்
இசையின் இமயம் - நித்யஸ்ரீ மகாதேவன்
அந்தக் காலங்கள் பொற்காலங்கள் - சிக்கல் மாலா
பசுமையான பதிவுகள் - ஹெச்எம்வி ரகு
மறக்க முடியாத தருணங்கள்! - கலைமாமணி யோகா
கிழக்கும் மேற்கும்! - மணியன் செல்வன்
உதவிய புத்தகங்கள்
"இசையரசியின் தெய்வீக குரலை
நேசிக்கும் அன்பு மருமகன்
ஸ்ரீராமுக்கும் அன்பு மகள் ஜனனிக்கும்"
முன்னுரை
பயணங்கள் எப்போதுமே வசீகரமானவை. மேற்கொள்பவர்களுக்குச் சந்தோஷங்களையும், புதிய அனுபவங்களையும் தரக்கூடியது. ஆனால் அதைவிட ஆச்சரியங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துவது சிலரின் வாழ்க்கைப் பயணங்கள்.
உலகமறிந்த இசையரசியின் வாழ்க்கை கதையை எழுதுங்களேன் என்று திரு. சேது சொக்கலிங்கம் கேட்டபோது சற்று யோசித்து சிலநாட்களில் சொல்லுகிறேன் எனச் சொன்னேன்.
என்னை எழுதச் சொன்னதற்கு எளிய நிலையில் துவங்கிச் சிகரம் தொட்ட சாதனையாளர் பேராசிரியர் பாலா (கிரேட் லேக் யுனிவர்சிட்டி) வெற்றி வெளியே இல்லை
என்ற நான் எழுதிக் கவிதா வெளியிட்ட வாழ்க்கை கதையின் வெற்றி காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் படித்தது, கேட்டது எல்லாம் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இசையோடு பிறந்து இசையால் வளர்ந்த ஒரு சிறந்த இசைக்கலைஞராக மட்டுமே அறிந்திருந்த எம்.எஸ் என்ற பெண்மணியின் வெற்றிகரமான பன்முகப் பரிமாணங்கள் பிரமிப்பூட்டும் விஷயமாகயிருந்தது. மிகச்சிறிய வயதிலேயே தன் குல மரபுகளை உடைத்துத் துணிவுடன்தான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அறிவு, ஆற்றல், அர்ப்பணிப்பு ஆன்மிகம் எனப் பல்வேறு ஆளுமைகள் மிளிரும் விஷயங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த வாழ்க்கை பயணத்தை வளரும் தலைமுறையினருக்காகப் பதிவு செய்யவேண்டியதின் அவசியத்தை உணர்ந்து அந்த நல்வாய்ப்பு கிடைத்ததற்காகச் சந்தோஷப்பட்டேன்.
ஒரு புகழ்பெற்ற ஆளுமையின் வாழ்க்கைக் கதையை அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் எழுதுவது சற்றுச் சவாலானது. படித்த தகவல்களைத் தாண்டி விபரங்கள், தகவல்கள் சேகரிக்கப் பலருடன் பேச வேண்டியிருந்தது. அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பொக்கிஷமாக இருக்கிறது, மறக்காமல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர் இசையை வியந்து போற்றியவர்களை விட இசையே அறியாத பலருக்கும் கூட அவர் ஆதர்சமாக இருப்பது ஆச்சரியம். அவை அனைத்தையும் எழுதிவிடவும் முடியாது ஒதுக்கிவிடவும் முடியாது. அதனால் சேகரித்த தகவல்களை அவர் குடும்பத்தினருடனும் மிக நெருங்கிப் பழகியவர்களுடனும் மூத்த பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு உறுதிசெய்து கொண்டவைகளை இசையரசியின் இந்த வாழ்க்கைக் கதையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.
அன்பே உருவான எம்.எஸ் அம்மாவைப் பற்றிப் பேசப் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஓவியர்கள் என்று ஒவ்வொருவரையும் எம்.எஸ். அவர்களின் ஏதோ ஒரு முகம் கவர்ந்திருக்கிறது. அதை அவர்கள் இந்த வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்தப் படைப்பை உருவாக்க உதவிய பலரில் மிக முக்கியமானவர் திருமதி. கௌரி ராம்நாராயணன். இவருடன் நடத்திய நீண்ட உரையாடல்களும், அவரது புத்தகங்களும், பெரிதும் உதவின. அச்சுப் புத்தகத்தைத் தொடர்ந்து பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்போது இதை மின்நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.
ரமணன்
ramananvsv@gmail.com
www.ramananvsv.blogspot.in
A picture containing text, outdoor, building, white Description automatically generated1. மல்லிகை தேசத்தில் மலர்ந்த தாமரை
அந்தப் பொன்மாலைப்பொழுதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள், நல்ல இசையை அனுபவித்துக்கேட்கும் மதுரை நகரின் இரசிகர்கள். அதிகபட்சம் 50 பேர் இருப்பார்கள். மாதந்தோறும் பௌர்ணமிநாளில் வடக்கு வெளி வீதியிலிருக்கும் சேதுபதி பள்ளியின் கட்டடங்களுக்கிடையே உள்ள திறந்தவெளியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்குத் தவறாது வரும் இசையின் பரிமாணங்களை நன்கு அறிந்திருக்கும் ரசிகர்கள் அவர்கள். 1920களில் மதுரை நகரில் சபாக்கள், இசைநிகழ்ச்சி நடத்த தனியிடங்கள் எதுவும் கிடையாது. இராமநாத மன்னர் சேதுபதி மதுரை நகருக்கு நன்கொடையாக அளித்த பள்ளியின் கட்டடத்தில்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்றைய நிகழ்ச்சியை வழங்கப் போகும் வீணைக் கலைஞர் மேடைக்கு வந்தாகி விட்டது. அவர் கண்களை மூடி பிரார்த்தனையில் இருக்கிறார். அருகில் 6 வயது பெண்குழந்தை. பக்கவாத்தியங்கள், மைக் எதுவும் கிடையாது. கர்நாடகச் சாஸ்திரிய சங்கீதத்தில் வாய்ப்பாட்டு மட்டுமே மிகப்பிரபலமாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அதில் ஆண் பாடகர்கள் அதிகம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தனர். வயலின், வீணை போன்ற இசைக்கருவிகளின் இசையில் சில கலைஞர்களே இருந்ததாலும், அவர்களால் 3 மணிநேரம் முழுக் கச்சேரி செய்ய முடியாது எனக் கருதப்பட்டதாலும் அவை செல்வாக்கு பெறவில்லை. இந்த நிலையை மாற்றி வீணை இசையையும் வாய்ப்பாட்டு போல முழு கச்சேரி வடிவில் செய்யும் முயற்சியைத் தொடங்கிய சண்முக வடிவுதான் அன்றைய நிகழ்ச்சியை வழங்கப்போகும் கலைஞர்.
மிகச் சிறுவயதிலேயே வீணை வாசிக்கத் தன் அன்னையிடமே கற்றுத் தேர்ந்தவர். தன்னுடைய தனித் திறமையினால் மெல்ல வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலைஞர் அன்றைய மாகாண கவர்னர் லார்ட் பெட்லாண்ட் மதுரை வந்தபோது அவர் முன் கச்சேரி செய்து தங்கப்பதக்கக் கௌரவம் பெற்றவர்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தன் இசையில் ஏதாவது சில சோதனைகளைச் செய்து பார்த்து, அதைத் தொடர்ந்து மெருகேற்றுவது அவர் வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஒரே சாயலில் தொனிக்கும், பைரவி, முகாரி, நாயகி தர்பார் போன்ற ராகங்களை அடுத்தடுத்துத் தன் நளினமான விரல்களால் மீட்டி, ஆனால் துல்லியமாக ராகங்களின் வேறுபாடுகளைக் காட்டினார். இதை வாய்ப்பாட்டில் செய்வது ஓரளவு எளிது. ஆனால் வீணையில் செய்வது மிகக் கடினம். அரை வினாடிக்கும் குறைவான விரல் அழுத்தத்தில் விளம்பர காலத்தில் வீணையின் தந்திகளை மாறி மாறிப் பேசச் செய்யும் வித்தை அது. அதை மிக லாகவமாக அன்று செய்தார். தெய்வநாதம் அந்தப் பள்ளியின் சின்ன மைதானத்தையும் ஓட்டுக் கூரையிடப்பட்டிருந்த வகுப்பறைகளையும் நிரப்பியது. ரசிகர்கள் மெய் மறந்திருக்கிறார்கள்.
கண்ணை மூடிக்கொண்டு தியாகையரின் பிரகலாதபக்தி விஜய கீர்த்தனைகளில் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறார். தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பாரிஜாதம் முதலிய மலர்கள் கொண்டு ஹரியை அர்ச்சனை செய்யாத கரங்கள் எதற்கு? பரமனின் அழகைக் காணாத கண்கள் எதற்கு? என்ற வரிகளைக் கொண்ட அந்தப் பாடலை சண்முகவடிவின் வீணையின் தந்திகள் துல்லியமாகச் சொல்லுகின்றன. முடியும்போது ரசிகர்கள் கைதட்டலில் கண்திறந்த சண்முக வடிவு திடுக்கிடுகிறார். காரணம் அருகிலிருந்த குழந்தையைக் காணவில்லை.
அது அவருடைய குழந்தை. அவர் எங்கு போனாலும், கோவிலோ, கச்சேரியோ விருந்தினர் வீடோ எங்குப் போனாலும் கூட்டிச்செல்லும் குழந்தை. அம்மாவுக்கு எந்தத் தொந்தரவும் தராமல் சமர்த்தாக இருக்கும் குழந்தை. உதவியாளரை அனுப்பித் தேடியதில் அந்தக் குழந்தை பள்ளியின் மைதானத்தில் மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது. அதன் கவுனிலிருந்த மண்ணைத்தட்டி கைகளைத் துடைத்து மேடைக்குக் கொண்டுவரப்பட்ட அந்தப்பெண்ணை, அருகில் இருத்திக்கொண்ட அம்மா சண்முக வடிவு,
குஞ்சம்மா ஒரு பாட்டு பாடு
என்கிறார்.
இயல்பாகவே எந்தவிதக் கூச்சமும் பயமும் இல்லாத அந்தக் குழந்தை தன் தேனொழுகும் குரலில் ஆனந்தஜா
என்று இந்துஸ்தானி மெட்டில் அமைந்த மாராட்டி பாடலைப் பாடினாள். அது அவள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.
6 வயது குழந்தையின் தெளிவான இனியகுரலும் ஸ்பஷ்டமான உச்சரிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, பலத்த கைதட்டல்.
இன்னொரு பாட்டு
என அம்மா சொன்னவுடன் மற்றொரு சின்ன இந்துஸ்தானிப் பாடலைப் பாடுகிறாள். உச்சஸ்தாயி ஸ்வரங்களைக் கொண்ட அந்த வரிகள் மிக அனாயாசமாக அந்தக் குழந்தையிடமிருந்து வருகிறது. சட்டென்று முடிந்த அந்தப் பாடலுக்குப்பின்,
வேறு பெரிய பாட்டுப் பாடு
என்கிறார் அம்மா.
போறும் அம்மா, நான் வீடுகட்டி முடிக்கவேண்டும். நாளைக்குப் பாடுகிறேனே
என்கிறது அந்தக் குழந்தை. கூட்டத்தினரும் அன்னையும் சிரிக்கிறார்கள். குழந்தை இறங்கிப் போய்த் தன் விளையாட்டைக் கவனமாகத் தொடர்கிறது.
அந்தக் குழந்தைதான் தன் தெய்வீகமான குரலால் இசை உலகின் அரசியாக வாழ்ந்த திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி.
A group of people standing outside a building Description automatically generated with medium confidenceவிளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுண்டு. இந்த இசைப்பயிர் முளையாக எழுமுன்னரே இது செழுமையான பயிர் என்பது அன்று தெரிந்துவிட்டது.
ஒரு கலைஞனின் முதல் நிகழ்ச்சி என்பது அவரது வாழ்க்கையில் மிகமிக முக்கியமான நிகழ்வு. அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்காக நிறையப் பயிற்சிகள் முயற்சிகள் எல்லாம் எடுத்து, பின்னர் நல்லநாளும் வேளையும் குறித்து, குருவைப் பணிந்து ஆசி பெற்றபின்னர் நிகழும் ஒரு பெருமைமிக்கத் தருணம். ஆனால், பலர் மானசீக குருவாக மதிக்கும் எம்.எஸ். அவர்களிடம் அவரது அரங்கேற்றம் பற்றிக் கேட்டால் இந்த நிகழ்ச்சியைத்தான் சொல்லுவார். பாரதியார் பணியாற்றிய, பல தேசபக்தர்களை உருவாக்கிய மதுரை சேதுபதி பள்ளிக்கு மற்றொரு பெருமை இசை அரசி எம்.எஸ்ஸின் அரங்கேற்றம் நிகழ்ந்த இடம் அது என்பது.
வீடு திரும்பிய பின் சண்முக வடிவு அந்தக் குழந்தையின் பாடலைப் பற்றிச் சிந்திக்கலானார். அதுவரை குழந்தை குஞ்சம்மா வளரும்போது தன்னைப்போல ஒரு வீணைக் கலைஞராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தார். அன்று அந்தக் குழந்தையின் இனிய குரலில் அவர் கவனித்த விஷயம் பிசகாத சுருதி. இசையின் அடிப்படை எதையும் கற்றுக்கொடுக்காதபோது எப்படி இந்தக் குழந்தைக்கு அது புரிந்திருக்கிறது என்ற ஆச்சரியம்; சந்தோஷம். மேலும் பாடச் சொன்னவுடன் அந்த மராத்திய பாடலை பாடுவாள் என அவர் எதிர்பார்க்கவில்லை.
அந்தப் பாடல் அவர் வீட்டில் பாடும் பாடல் இல்லை. தினமும் தெருவில் போகும் ஒரு வடஇந்திய சாமியார் கையில் ஒரு சின்னத் தம்பூருடன் அந்தப் பாடலை பாடிக்கொண்டு போவதையும், சில நாள் வீட்டின் முன் நின்று சற்றுநேரம் அந்தப் பாடலை முழுவதும் பாடுவதையும் குழந்தை குஞ்சம்மா அதைக் கேட்பதையும் கவனித்திருக்கிறார். அந்தப் பாடலை அப்படியே அதே ராகம், பாவத்தில், அதே சுருதியில் அன்று பாடியிருந்தாள். தங்கள் பரம்பரையினரைப் போல ஒரு வாத்தியத்தை வாசிக்காமல் இந்தப் பெண்ணை நல்ல பாடகியாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு ஒரு நல்ல ஆசிரியரை உடனே தேட வேண்டும் என்று எண்ணினார். சிறந்த வயலின் கலைஞரான தன் தாய் அக்கம்மா தனக்குப் பாட்டு வேண்டாம் என முடிவுசெய்து வீணை வாசிக்க கற்பித்துப் பழக்கியது போலத் தாமும் அந்தத் தவறை சுப்புலட்சுமிக்குச் செய்துவிடக் கூடாது என எண்ணினார்.
எல்லாக் குழந்தைகளைப் போல ஏன் பள்ளிக்கூடம் அனுப்பாமல் இப்படிச் சங்கீதத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தார்? என்பதைப் புரிந்துகொள்ள அவரின் குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
இசை தெய்வீகமானது. இறை வழிபாட்டில் அதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடம் நமது கோவில்கள். இந்தியாவில் உள்ள எந்தக் கோவிலிலும் இன்றும் வழிபாட்டின் ஓர் அங்கமாக இசை இருப்பதைக் காணலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் காலத்தில் கோவில்களின் வழிபாட்டில் ஆகம பூஜைகளைத் தவிர இசை, நடனம், வாத்தியம் வாசிப்பது போன்றவை இருந்ததையும், அவர்கள் மன்னரின் அரசாங்கத்தால் மானியங்கள் அளிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டார்கள் என்கிறது வரலாறு. ஏழாம் நூற்றாண்டிலேயே இசை, நடனப்பணிகளை வழிபாடாகச் செய்வதற்கென்றே தனியாகப் பெண்கள் கோவில்களில் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தென்னிந்திய கோவில் கலாச்சாரத்தில் கோவில்களுக்கு நடனம், இசை, போன்றவற்றில் தேர்ந்த இளம் பெண்களைக் கோவிலுக்கு நேர்ந்து கொள்ளும் வழக்கம் தொடர்ந்தது. இந்தக் கலைஞர்கள் இறைவனுக்கு உரியவர்கள் என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டது. தினசரிப் பூஜை மற்ற அனுஷ்டானங்கள் போல கோவில் பிரகாரங்களில் சுவாமி ஊர்வலம் வரும்போது விழா நாட்களிலும் இவர்கள் ஆண்டவனுக்காக தாங்கள் கற்றுத்தேர்ந்த கலையை ஆண்டவன் முன்னால் ஆடல் பாடல் வாத்திய வாசிப்பை அர்ப்பணிப்புடன் செய்வார்கள். இவர்கள் கோவில் நிர்வாகத்திலும், பங்களிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்கள். அதனால் மானியமாக அளிக்கப்பட்ட நிலங்கள், கோவில் அருகில் கோவில்களால் அளிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் உரிமையையும் பெற்றிருந்தார்கள். கலையின் வெளிப்பாடும் பக்தியும் இணைந்த பணி இவர்களுடையது. தமிழகக் கோவில்களில் நடனம், ‘சின்ன மேளம்’ என்றும் அந்தக் குடும்பத்தின் ஆண்கள் வாசிக்கும் நாதஸ்வரம் ‘பெரிய மேளம்’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நடனக் கலைஞர்கள் தெலுங்கில் கலாவந்துலு (கலைவாணர்கள்) விலாசினி, நர்த்தகி, சுவாமினி எனப்பிற தென்இந்திய மொழிகளில் அழைக்கப்பட்டனர். எல்லாப் பெயர்களும் சொல்லும் ஒரே பொருள் ‘இவர்கள் இறைவனுக்கு உரியவர்கள்’
பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த மரபில் இவற்றைச் செய்வதற்கென்றே தனிக்குழுக்கள் நிறுவப்பட்டு அவர்கள் ஒரு தனி இனப்பிரிவாக வளர்ந்திருக்கிறார்கள். பின்னாளில் இசை வேளாளர் என்ற பிரிவாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்தப் பிரிவினருக்கு அன்றைய பெயர் தேவதாசிகள் அல்லது தேவரடியாளர்கள்.
காலப்போக்கில் ஆண்டவனின் வழிபாட்டுக்காக ஆடியவர்கள் அரசர்களின் உல்லாசத்திற்காகவும் அரண்மனையிலும் ஆட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அரசன் ஆண்டவனின் பிரதிநிதியாக பார்க்கப்பட்ட காலம் அது. ஆனால் வெறும் கேளிக்கை ஆட்டக்காரர்களாக இல்லாமல் அதை ஒரு புனிதமான கலையாக மதித்து அதன் நுட்பங்களை உணர்ந்து கற்றவர்கள் இவர்கள். ஆட முடியாத அல்லது விரும்பாத பெண்கள், வாய்ப்பாட்டு, வாத்திய இசை போன்றவற்றில் தேர்ந்து சிறந்து விளங்கினார்கள்.
இதன் மேன்மை தெரியாமல் இது சிதைந்து கீழான தொழிலை செய்பவர்களின் குறியீடாகிப் போனது நமது துரதிர்ஷ்டம் என்கிறார் இந்தப் பிரிவினரைப் பற்றியும் அவர்களுக்குச் சமூகத்திலிருந்த மதிப்புகள் பற்றியும் ஆராய்ந்து எழுதியிருக்கும் திருமதி. லஷ்மி விசுவநாதன்.
இந்த மரபில் வந்தவர்தான் இசையரசி. இவருடைய பாட்டியின் தாயே அன்றைய வைஸ்ராய் ட்ஃப்பரி அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் ஆடியிருப்பதாக ஒரு குறிப்புச் சொல்லுகிறது. அவருடைய மகள் அக்கம்மா நடனக் கலைஞராக ஆகாமல் பாட்டு கற்று, அதன்பின்னர் ஒரு வயலின் கலைஞராகப் பரிமளித்தவர். இவரை அக்கால வழக்கப்படி பராமரித்து வந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்ற விஞ்ஞானச் சாத்திரம் அறிந்த அறிஞர், பெரும் இசை ரசிகர். இவர்களுடைய ஒரே பெண் சண்முக வடிவு.
அம்மாவைப் போலவே இசையின் பெருமைகள் சொல்லி வளர்க்கப்பட்டவர். அப்போது தஞ்சைக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் மதுரைதான் கலைகளையும் கலைஞர்களையும் வரவேற்கும் நகரமாக இருந்தது. வீணையில் 7 வயதிலிருந்து 14 வயதுவரை பயிற்சி பெற்ற சண்முக வடிவு தன் 15 வயதில் மதுரையில் முதல் தனிக் கச்சேரி செய்கிறார். நகரம் முழுவதும் பேசப்பட்ட அந்தக் கச்சேரிக்குப் பின்னர், தொடர்ந்த அழைப்புகளினால் மதுரையில் தொடர்ந்து வசிப்பது என்பது முடிவாகிறது. திருமணங்கள் அந்தக் காலகட்டத்தில் இசை நிகழ்ச்சி இல்லாமல் நடைபெறாது, அதனால் தொடர்ந்து வாய்ப்புகளும் இசை பிரமுகர்களின் தொடர்புகளும் கிடைத்தன, இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வக்கீல் பி.எஸ். சுப்பிரமணிய அய்யர் அவர்களில் ஒருவர்.
தொடர்ந்த உதவிகளும் ஆதரவும் நெருக்கமான உறவாயிற்று. ஏற்கெனவே திருமணமானவரான அவர் சண்முக வடிவின் பாதுகாவலர் ஆனார். அந்தக் காலகட்டத்தில் சமூகம் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம் இது. மணம்செய்துகொண்டு ஒரு குடும்பம். இது போல தொடர்புகளினால் மற்றொரு குடும்பம்.
சண்முக வடிவு தேவதாசி என்பதால் திருமணம் செய்துகொண்டு இரண்டாம் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லையே தவிர, சுப்ரமணி அய்யர் சண்முக வடிவை தனது மற்றொரு மனைவியாகவே கௌரவித்திருக்கிறார், இவர்களுடைய மகள்தான் குஞ்சம்மா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி,
மலர்ந்த மறுநாளே வாடிப் பொலிவிழந்துபோகும் மதுரை மல்லிகை இன்று இந்தியாவின் பல நகரங்களுக்கு அன்றே கிடைப்பதற்காக விமானத்தில் பறக்கிறது. தாமரைப்பூ மெல்ல நிமிர்ந்து மொட்டாகி முழுமைபெற்றுக் காலம் கனியக் காத்திருந்து நாளொரு வண்ணமாக வளர்ந்து மலர்ந்து மலராகி ஆண்டவனின் சன்னதியை அடைகிறது.
மதுரை மல்லிகைப் பூக்களின் தேசம். அங்குப் பிறந்த ஒரு தாமரை இந்த இசை அரசி என்பதைப் பல பரிமாணங்களில் மிளிர்ந்த அவரது வாழ்க்கை சொல்லுகிறது.
A picture containing white, stack Description automatically generated2. நாதமென்னும் கோவிலான வீடு
நகரின் நடுவே கம்பீரமாக நிற்கும் நான்கு பெரிய கோபுர வாசல்களுடன் சதுர வடிவில் அன்னை மீனாட்சியின் கோவில். அதன் மதில்களின் உள்ளேயே சன்னதியைச் சுற்றி நான்கு புறமும் தமிழ் மாதமான ஆடி
யின் பெயரிட்ட வீதிகள். அந்த வீதிகளுக்கு இணையாகக் கோவிலின் நான்கு புறங்களிலும் ஆவணி, சித்திரை, மாசி மாதங்களின் பெயரில் அகன்ற வீதிகள். கோவிலின் அருகிலிருக்கும் வீதிகளுக்கு இணையாக நான்கு புறமும் செல்லும் வீதிகளின் அகலம் படிப்படியாக அதிகமாக இருக்கும். மிக அகலமான மாசி வீதிகளில் தேரோடும். அதன் ஒரு முனையில் சதுர வடிவில் அமைக்கப்பட்ட திருக்குளம். அதன் நடுவே நீரில் மிதக்கிறதோ எனத் தோன்றும் வசந்த மண்டபம், மறுமுனையில் சதுர வடிவில் திருமலை நாயக்கமன்னரின் மாளிகை என எல்லாமே சதுர வடிவில் கனக்கச்சிதமாகப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்ட அழகான நகரம் மதுரை. நகரின் வெளியே வைகை நதி. தமிழகத்தின் நீண்ட சரித்திரத்தின் பல காட்சிகளைச் சொல்லும் மதுரை நகர், பண்டைய தமிழரின் நகர் அமைப்பு கலைக்குச் சான்றாக நிற்கும் நிலையான சாட்சி. ஒரு வழிபாட்டுத் தலம் அல்லது மன்னரின் மாளிகையைச் சுற்றிச் சதுர வடிவில் ஒரு நகரை நிர்மாணிப்பது என்பதை லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நகரங்கள் பின்னாளில் பின்பற்றியிருக்கின்றன. ஆனால் அவர்களுகெல்லாம் முன்னரே மதுரை உருவாகியிருக்கிறது. மகேசனுக்கும் அன்னைக்கு எழுப்பப்பட்ட கோவிலை சுற்றியமைக்கப்பட்ட நாலு அடுக்கு வீதிகளில் வசிக்க வேண்டியவர்கள், இருக்க வேண்டிய நிறுவனங்கள் செய்ய வேண்டிய தொழில்கள் கூடத் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. கோவிலில் ஊழியம் செய்பவர்களுக்கு மிக