Indre, Inge, Ippozhuthe
By S.A.P
5/5
()
About this ebook
Read more from S.A.P
Nee Rating: 5 out of 5 stars5/5Enakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Unnaiye Rathi Endru... Rating: 0 out of 5 stars0 ratingsNagarangal Moondru Sorgam Ondru Rating: 5 out of 5 stars5/5Indriravu Rating: 5 out of 5 stars5/5Thirumanam Kuzhanthayal Nichayakkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsMalarkindra Paruvathil Rating: 0 out of 5 stars0 ratingsOviyam Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theevinile Rating: 0 out of 5 stars0 ratingsBramhachari Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Rating: 5 out of 5 stars5/5Kettathu Yaarale Rating: 5 out of 5 stars5/5Pirantha Naal Rating: 0 out of 5 stars0 ratingsChinnamma Rating: 5 out of 5 stars5/5Sollathey! Rating: 5 out of 5 stars5/5
Related to Indre, Inge, Ippozhuthe
Related ebooks
Manasukkul Naan Unnai… Rating: 5 out of 5 stars5/5Unnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsOviyam Rating: 5 out of 5 stars5/5Aahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsYerkanave Sonnapadi Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsYaamam Rating: 4 out of 5 stars4/5Aruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pournami Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsThalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5Jenmam Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolai Ariya Aaval Rating: 4 out of 5 stars4/5Thuduppillatha Padagugal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratings‘Mar’kizhi Maatham Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Adam Yeval Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malare... Rajakumari Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAnantha Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsThaigal Serattum Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Sooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indre, Inge, Ippozhuthe
1 rating0 reviews
Book preview
Indre, Inge, Ippozhuthe - S.A.P
http://www.pustaka.co.in
இன்றே, இங்கே, இப்பொழுதே!
Indre, Inge, Ippozhuthe!
Author:
எஸ். ஏ. பி.
S.A.P
For more books
http://www.pustaka.co.in/home/author//s-a-p
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
சீட்டு?
என்று கையை நீட்டினாள் அந்த உயரமான பெண்.
சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தேன். அது காலியாக இருந்தது. கண்ட காகிதங்களை அதில் திணித்துக்கொள்வது அநாகரிகம் என்று கருதும் வாலிபன் நான் இருந்தாலும், பெயரை மட்டுமாவது ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு வந்திருக்கலாம்.
அவள் உள்ளே போனாள். அவளிடம் வேலைக்காரியின் அடக்கமும் இல்லை. குடும்பத்தினருள் ஒருத்தி என்ற தோரணையும் இல்லை. அவள் கொண்டுவந்த தாள் தூய வெள்ளையாகவும் வழவழப்பாகவும் இருந்தது. பேனாவால்- அதுவும் அவள் எடுத்து வந்ததுதான் - 'ரா. பாலசுந்தரம், பள்ளிக்கூட ஆசிரியர்,' என்று எழுதினேன்.
இரண்டையும் கொடுக்க நிமிர்ந்தபோது அவள் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
சுருக்கென்று என் நெஞ்சைக் கடித்தது கோபம். அவள் எதைப்பார்த்து அப்படிச் சிரிக்கிறாள்? 'பெயர்ச் சீட்டைப் பகட்டாக அச்சடித்து வைத்துக்கொள்ளப் பள்ளிக்கூட வாத்தியாருக்கு வக்கு ஏது?' என்று சுட்டிக்காட்டுகிறாளா? அல்லது மைக் கறையோ, சுண்ணாம்புக் கட்டியின் அடையாளமோ கன்னத்தில் படிந்து என்னைக் கோமாளியாக்கி விட்டிருக்கிறதா?
பெற்றுக்கொண்ட சீட்டை அவள் உரக்க வாசித்தாள். காரணம் அடுத்த வினாடி புரிந்தது. பணிப் பெண்ணானாலும் படிக்கத் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ள அவள் வாசிக்கவில்லை. பள்ளிக்கூட ஆசிரியரும் பிழைபட எழுதுவதுண்டு என்பதை எடுத்துக்காட்டவே அப்படிச் செய்திருக்கிறாள்.
காகிதத்தை அவளிடமிருந்து அவசரமாகப் பறித்து, 'பள்ளக்கூட' என்று இருந்ததைப் 'பள்ளிக்கூட' என்று திருத்தி, இரண்டு முறை சரிபார்த்து விட்டுக் கொடுத்த போது எனக்கு அவமானமும், ஆத்திரமும் ஏற்பட்டன. அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு தொலைந்து விட்டாள்.
அறையைச் சுற்றி மெள்ளக் கண்ணோட்டம் விட்டேன். சுவர்களிலும், மேஜைகள் மீதும் அலங்காரம் என்ற பெயரில் கலைக்கொலை நடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் உண்டாயிற்று. காலண்டர் படமொன்று - பசுவினிடம் பெண்ணொருத்தி பால் கறக்கும் காட்சி - சட்டம் போட்டுப் பெரிதாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இனாமாகக் கிடைக்கும் காலண்டர் படங்கள் ஏழை பாழைகளுக்கென்றே ஏற்பட்டவை லட்சாதிபதியாக இருப்பவர், ஒரு சித்திரக் கண்காட்சிக்குப் போய் ஐம்பதோ நூறோ கொடுத்து அசல் ஓவியம் ஒன்றை வாங்கி வரக்கூடாதோ? கலை விஷயத்தில் காசுள்ளவர்களுக்குமா தரித்திர புத்தி! அப்புறம், எங்கே பார்த்தாலும் சரி, புகைப்பட மயம். சிறிது; பெரிது; வர்ணம் தீட்டியது. அதுவும் எத்தகைய புகைப்படங்கள்! பனி படர்ந்த மலைக் காட்சியா? கிராமத்துப் பெண்கள் நாற்று நடும் காட்சியா? நாய்க்குட்டியின் வாலைக் குழந்தை பிடித்திழுக்கும் நகைச்சுவைப் படமா? கிடையாது. வீட்டு எஜமானரின் படம், அவருடைய அப்பாவின் படம். அப்பாவுக்கு அப்பாவின் படம்-ஒவ்வொன்றிலும் மூன்று பிரதிகள். எல்லோர் முகத்திலும், காமிராவுக்கென்றே ஏற்பட்ட அந்த அசட்டுக் களை. அதோ அந்த மூலையில்....
உள்ளேயிருந்து விரைந்து வந்தார் ஒரு நடுத்தர வயதினர் வீட்டுக்கு அதிபரான அருணாசலம் அவர் தான் என்று அடையாளம் கண்டு கொண்டவன், எழுந்து நின்று கை கூப்பினேன்.
வாட்டசாட்டமான அந்த உடலின் வளப்பத்தை இறுகப் பிடித்த சில்க் ஜிப்பா எடுத்துக் காட்டிற்று. நாற்பது வயதுக்குள் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டோம் என்ற திருப்தியின் முத்திரை அவர் முகத்தில் படிந்திருந்தது.
அவர் என்னை அங்கே எதிர் பார்க்கவில்லை போலும், மேலும் கீழுமாக நோக்கிவிட்டு, 'நீங்கள்.. யார் தெரியவில்லையே?' என்றார்.
தொண்டையைக் கனைத்துக்கொண்டேன். அதற்குள் என்னை அறிமுகம் செய்துவைக்கும் பொறுப்பைத் தானே மேற்கொண்டாள், அப்போது அங்கு தோன்றிய அந்தப் பணிப்பெண். 'உங்களைத் தேடிக்கொண்டு மாடிக்குப் போனேன். நீங்கள் கீழே வந்து விட்டீர்கள் போலிருக்கிறது. இவர் தான் வாத்தியார்,' என்று நான் எழுதிக் கொடுத்த சீட்டை நீட்டினாள்.
சீட்டைப் பார்க்காமலே, 'சரியான சமயத்தில் வந்தீர்கள். இன்னும் ஐந்து நிமிஷம் ஆகியிருந்ததோ என்னைச் சந்தித்திருக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, கவர்னர் மாளிகையில் சாயந்தரம் ஒரு பெரிய விருந்து. அங்கேதான் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும், பத்து நிமிஷம் அவகாசம் இருக்கிறது. பைரவியில் ஒரு கிருதி வாசியுங்கள்,
கேட்போம். வேணி! அந்த வீணையை எடுத்துவாம்மா, என்று மடமடவென்று பேசினார் அவர்.
பைரவியா! வீணையா! இதற்குள் வேணி வாத்தியத்தைக் கொண்டுவந்தே விட்டாள். குழப்பத்தில் ஆழ்ந்தவனாய் அதை வாங்கிக்கொண்டேன்.
மேல் துண்டை மடிப்புக் கலையாமல் கோட் ஸ்டாண்டில் மாட்டிவிட்டுக் காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்த அருணாசலம், எனது சங்கடத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
'உங்களுக்குந் தெரியுமோ என்னவோ, நான் மூன்று சபாக்களிலே ஆயுள் அங்கத்தினராக இருக்கிறேன். இசை உலகில் என்னைத் தெரியாதவர்களே கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எனக்கு வீணை என்றால் உயிர். ஆனால் வர வர, ஊர் வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டுவிட்டேனா, கச்சேரிகளுக்குப் போகிறதற்கே நேரமிருப்பதில்லை. அடடே, சோபாவிலே உட்கார்ந்து கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? தாராளமாகக் கீழே உட்கார்ந்து கொள்ளுங்களேன்,' என்று அவரும் எழுந்து கம்பளத்தின் மீது அமர்ந்தார்.
'வந்து... எனக்கு... வந்து, வீணை வாசித்துப் பழக்கமில்லை.' என்று ஒரு வழியாகச் சொல்லி முடித்தேனோ இல்லையோ, அவர் விழித்தார்.
விஷயம் புரியாத மனிதர்! நான் வீணை வாத்தியார் என்று எப்போது சொன்னேனாம் அவரிடம்?
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, விளக்கினேன். 'தயவு செய்து அந்தச் சீட்டைக் கொஞ்சம் பாருங்களேன். என் பெயர் பாலசுந்தரம். பள்ளிக்கூட ஆசிரியர். வீணை வித்துவான் அல்ல.’ நகரசபை அங்கத்தினர் ஸ்ரீனிவாசவரதன் இருக்கிறார் அல்லவா? அவரிடம், 'என் பையனுக்குப் பிரைவேட் டியூஷன் வைக்க வேண்டும். ஒரு நல்ல வாத்தியாராகப் பார்த்துச் சிபாரிசு செய்யுங்கள், என்று நீங்கள் கேட்டீர்களாம் அவர் தான் என்னை அனுப்பினார். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு...'
அவருடைய குழப்பம் எல்லாம் இருந்தவிடம் தெரியாமல் போய்விட்டது. கடகடவென்று நகைத்தபடி வேணி கொடுத்த சீட்டைப் பார்த்தார். என் தவறு தான் இன்றைக்கு வீணை வித்வான் ஒருவரையும் வரச்சொல்லி இருந்தேன். நீங்கள் தான் அவராக்கும் என்று...
வாத்தியத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட வேணி, 'மத்தியான்னமே ஓர் ஆள் வந்து சொல்லிவிட்டுப் போனான். வீணை வாத்தியார் ஊரில் இல்லையாம். வந்தவுடன் அனுப்புவதாகச் சொன்னார்களாம்.'
'பார்த்தீர்களா? எல்லாம் இந்த வேணியினுடைய அஜாக்கிரதைதான்!' என்று குறை கூறினார் அருணாசலம். 'விஷயத்தை முன்னாடியே சொல்லித் தொலைத்திருந்தால் இந்தக் குழப்பத்துக்கே இடமில்லை, பாருங்கள். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, வீட்டு விஷயங்களைக் கவனிக்கக்கூட எனக்கு அவகாசமிருப்பதில்லை. 'அவள்' போனாள், எனக்குக் கை ஒடிந்த மாதிரி ஆகிவிட்டது. வேணி, பையனைக் கூப்பிடு.'
என்னுடைய வருங்கால சீடன் எனக்குப் பேட்டி தர இசைவதற்குள் பத்து நிமிடம் ஆகிவிட்டது. சுத்தப் போக்கிரியாக இருப்பான் போலும். ஒவ்வொரு நாளும் இப்படித் தாமதம் செய்தானானால் என்ன பண்ணுவது? போகப் போக நமது ‘கைவரிசை'யைக் காட்ட வேண்டி நேருமோ என்னவோ என்று சிந்தித்தபடி, அருணாசலத்தின் சளசளப்பை இந்தக் காதில் வாங்கி அந்தக்காதில் விட்டுக் கொண்டிருந்தபோது அவருடைய பிள்ளையை வேணி அழைத்து வந்தாள்.
அழைத்து வந்தாள் என்பதைக் காட்டிலும் இழுத்து வந்தாள் என்று கூறவேண்டும். சீடனைப் பார்ப்பதில் எனக்கிருந்த ஆவல், குருவைக் காண்பதில் அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மெய்க்காப்பாளி போல் வேணி பின்னால் நின்றிராவிட்டால், அவன் வந்த வழியே வெகு துரிதமாகப் பின் வாங்கியிருப்பான்.
'டேய் பையா! வாத்தியாருக்கு வணக்கம் சொல்லு,' என்று உத்தரவிட்டார் தந்தை.
சிறுவனுடைய தோற்றம் பரிதாபமாக இருந்தது. தந்தைக்கு நேர் விரோதம் வற்றலான உடம்பு, இரண்டு பெரிய கண்களில் அச்சம் தேங்கிக் கிடந்தது பணக்கார வீட்டுக் குழந்தைக்கு இருக்க வேண்டிய சுட்டித்தனமோ, சதைப் பிடிப்போ காணோம். வயது பத்து இருக்கலாம் என்பதை முகம் எடுத்துக்காட்டிற்று. அதற்குள்ள வளர்ச்சி இல்லை.
குரலில் பிரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'தம்பி, உன் பெயர் என்ன?' என்று அவன் தோள் மீது கை வைத்தேன். உடம்பு நடுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
'சொல்லேண்டா,' என்று ஊக்கினார் அருணாசலம்.
பையன் ஏதோ முணுமுணுத்தான்.
'அவன் பெயர் கோவிந்தன்,' என்று விளக்கினாள்' வக்காலத்து வாங்கிக் கொண்ட வேணி.
'என்ன வகுப்பில் படிக்கிறாய்?'
தன் விழிகளை என் முகத்திலிருந்து அகற்ற கோவிந்தனுக்குத் திராணியில்லை. அவன் உதடுகள் லேசாக அசைந்தன.
'முதல் பாரத்திலோ இரண்டாம் பாரத்திலோ படிக்கிறான் போலிருக்கிறது ஏன் வேணி?'
வேணி, 'முதலாவது பாரம்,' என்றாள்.
'புதிது இல்லையா, பையன் கொஞ்சம் பயப்படுகிறான். பழகப் பழகச் சரியாய்ப் போய்விடும்,' என்று சிரித்தேன்.
சோபாவை விட்டு எழுந்த அருணாசலம், கோட் ஸ்டாண்டிலிருந்து அங்கவஸ்திரத்தை எடுத்து மாட்டிக் கொண்டே, 'அப்படியானால், நீங்கள் என்றைக்கு டியூஷனை ஆரம்பிக்கிறீர்கள்?' என்று வினவினார்.
'ஆரம்பிக்க வேண்டியது தான்,' என்று இழுத்தேன் நான். சம்பள விஷயத்தைப் பற்றி மனிதர் கமுக்கமாயிருக்கிறாரே!
வேணி கோவிந்தனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
'வாரத்துக்கு ஆறு நாள் சொல்லிக் கொடுக்க வேண்டும். புரிந்ததோ? அருணாசலம் வீட்டுக் குழந்தைக்கு ட்யூஷன் என்றால் நூறு வாத்தியார்கள் வாசலில் வந்து நிற்பார்கள். ஸ்ரீனிவாசவரதன் சிபாரிசு இருக்கிறதே என்பதனால் தான் உங்களை ஏற்பாடு செய்கிறேன். அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள். சரிதானா? எனக்கு நேரமாகிறது. நான் புறப்படட்டுமா!' என்றார்.
அதற்கு மேலும் நான் எப்படி மௌனமாக இருக்க முடியும்?
'சம்பள விஷயம்....'
அவர் முகம் மாறுதலுற்றது. 'சம்பளத்துக்கென்ன? பத்து ரூபாய் போட்டுத் தருகிறேன்,' என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
தெருவில் இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்திருப்பேன்.
அருணாசலத்தின் கஞ்சத்தனத்தை நினைத்து என் மனம் பொருமிக்கொண்டிருந்தது. மறுநாள் காலையில் போய், 'நீரும் உம் பிரைவேட் டியூஷனும்!' என்று அவர் முகத்திலடித்தாற்போல் பேசிவிட்டுவரத் தீர்மானித்தேன்.
எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று கிரீச்சென்று திரும்பி நடைபாதை அருகே வந்து நின்றது.
'ஏய் பாலசுந்தரம்!' மரியாதை இல்லாமல் அழைத்தவன், வண்டியிலிருந்த மகாலிங்கம் தான். எப்போதும் போலவே ஒடிசலாகக் கறுப்பாகத்தான் இருந்தது அவன் தோற்றம். குரலும் எப்போதும் போலவே கிணற்றுக்குள் இருந்துதான் கிளம்பி வந்தது. ஆனால் மொத்தத்தில் முன்னைக் காட்டிலும் செழுமையாகக் காணப்பட்டான்.
'வீட்டுக்குத்தானே போகிறாய்? வா, நான் கொண்டு போய் விடுகிறேன்.'
நான் அவனைக் கடைசியாகப் பார்த்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கலாம். அவனுக்கும் எனக்கும் அவ்வளவாக ஒத்துக்கொண்டதில்லை. இருந்தாலும் வண்டியில் ஏறிக்கொண்டேன்.
அவன் தன் கதையைச் சென்னான். அவன் எங்கள் பள்ளிக்கூடத்திலிருந்து விலகிய மறுநாளே, வேறொன்றில் வேலை கிடைத்துவிட்ட தாம். பி. ஏ. பி. டி. தேறி இப்பொழுது மேல் வகுப்புக்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறானாம். நல்ல எதிர்காலம் இருக்கிறதாம். இன்னும் சில வருடங்களில் அவன் தலைமை ஆசிரியரானால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.
அவன் பெருமை அடித்துக்கொண்டதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவன் அத்தோடு நின்றானா?
என் தோள் மீது கை வைத்து. 'நீ இப்போது என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?' என்றான்.
'ஆசிரியராகத்தான் இருக்கிறேன், ஏன்?'
'அதே அழுமூஞ்சிப் பள்ளிச்கூடத்திலா?'
வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தேன். பிறகு. 'இப்போது ஒரு டியூஷனுக்குத்தான் போய்விட்டு வருகிறேன்,' என்றேன், என் அந்தஸ்தை உயர்த்திக்காட்ட.
அவன் விழுந்து விழுந்து சிரித்தான். ஓங்கி அறையலாம் போலிருந்தது.
'ஹாஸ்யத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளேன். நானும் கொஞ்சம் சிரிக்கிறேன்,' என்றேன், காரமாக.
அவன் சற்று மௌனமாக இருந்தான். பிறகு, கிண்டலாக, 'நீ பேசின பேச்சு என்ன! இருக்கிற இருப்பு, என்ன!' என்றான்.
'எனக்கு ஒரு குறைச்சலும் இல்லை. உன் அனுதாபமும் தேவை இல்லை,' என்று சீறினேன்.
என்னை அறியாமலே பழைய ஞாபகங்கள் எழுந்தன. அவனும் நானும் ஒரு சமயம் நேருஜியின் கூட்டத்துக்குப் போயிருந்தோம். கண் கொள்ளா ஜனத்திரள். எனக்கு. உடம்பு சிலிர்த்தது. சொற்பொழிவைக் கவனிக்கவே இல்லை. 'இன்னும் சில வருடம் போகட்டும். என் பேச்சைக் கேட்க இதைவிடப் பெரிய கூட்டம் கூடப் போகிறது,' என்று மார்தட்டினேன் எந்தப் பெரிய கம்பெனி ஒன்றின் விளம்பரத்தை எந்தப் பத்திரிகையில் காண நேர்ந்தாலும், 'ஒரு நாள் இதற்கு நான் மானேஜிங் டைரக்டர் ஆகப்போகிறேனா இல்லையாபார்' என்று சவால்விடுவேன். அப்புறம் ஒரு நாள்-எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - பெருநோயால் பிணியுற்றவர்களுக்குக் காந்திஜியும் புத்தரும் எப்படிச் சேவை செய்தார்கள் என்பதைப் பற்றி இருவரும் படித்தோம். உடனே நான், 'இந்த அற்ப ஆசியர் உத்தியோகத்தை அந்த ஹெட் மாஸ்டர் முகத்தில் விசிறி எறிந்துவிட்டு, சித்தி போடுகிற வேகாத சோற்றை அவள் தலையிலேயே கொட்டிவிட்டு, பெருநோய் வியாதியஸ்தர்களுக்குத் தொண்டு செய்வதில் வாழ்க்கை முழுவதையும் கழிக்கப் போகிறேன்,' என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். 'நீ கட்டிய கோட்டைகள் எல்லாம் என்ன ஆயின?' என்று மகாலிங்கம் இடித்துக் காட்டுவதைப் போலிருந்தது.
என் நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன. இன்னும் கொஞ்ச நேரம் நான் வண்டியிலேயே உட்கார்ந்திருந்தால் அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்திருக்குமோ!
‘டிரைவர், வண்டியை நிறுத்து. நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன், ' என்றேன், கடுமையாக.
வண்டியின் வேகம் குறைந்தது.
என் கையைப் பிடித்துக்கொண்டு, 'ஏன் இறங்குகிறாய்?' என்றான் மகாலிங்கம். அவன் குரலில் அனுதாபம் இல்லை. என் மனத்தை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டான். தன் நிலையையும் என் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவனுக்குப் பிரமாத உற்சாகம்.
'வண்டி நிற்கப் போகிறதா, குதித்து விடட்டுமா?'
'வேண்டாம். வேண்டாம். அப்புறம் போலீஸ் கேஸில் மாட்டி வைத்து விடாதே! டிரைவர், அப்படி ஓரமாக நிறுத்து. இவன் எப்போதுமே ஒரு மாதிரியான ஆசாமிதான்.'
நான் இறங்கித் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.
தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்பா பேச்சை ஆரம்பித்தார். அது அவர் வழக்கம். மற்ற நேரத்தில் என்னோடு பேச மாட்டார். முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், கூட்டையோ கறியையோ தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டு, கேள்வி கேட்பார்.
இது எனக்குப் பிடிப்பதில்லை. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது என்ற கொள்கை மட்டும் காரணமல்ல. நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் தன் பாட்டுக்குச் சாதத்தை உருட்டி வாயில் போட்டுக் கொண்டிருப்பார். பலன் - நாம் இரண்டு கவளம் விழுங்குவதற்குள் அவர் தேவையான தகவல்களையும் தெரிந்து கொண்டு சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு கிணற்றடிக்கு சென்றுவிடுவார்.
'என்ன ஆயிற்று' என்று சாம்பார் சாதத்தைப் பிசைந்து கொண்டே அவர் கேட்டபோது நான் பதில் சொல்லவில்லை.
இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும், 'அருணாசலம் வீட்டுக்குப் போயிருந்தாயா?' என்றார்.
'உம்.'
'என்ன சொன்னார்?'
'கறி போடு, சித்தி,' என்றேன்.
பாத்திரத்தில் கறி இருந்தது. ஆனால் வேண்டுமென்றே கரண்டியால் இரு முறை சுரண்டிக் கொஞ்சத்தை எடுத்து இலையில் போட்டாள் சித்தி. பேச்சில் மட்டும் வெகு தாராளம்தான். எதிரில் இனிக்க இனிக்கப் பேசுவாள். உள்ளுக்குள் அத்தனையும் விஷம்.
'மகா கருமி போலிருக்கிறது.' என்றேன்.
'எல்லாவற்றையும் தான் வழித்துப்போட்டுவிட்டேனே' இருந்தால் வைக்கமாட்டேனா?' என்று வேடம் போட்டாள் சித்தி.
குற்றமுள்ள நெஞ்சு அல்லவா?
'அந்த அருணாசலத்தைச் சொன்னேன். உன்னை இல்லை,' என்றேன்.
அவள் முகத்தில் அசடு வழிந்தது.
மாவடு ஊறுகாயை ருசித்தபடி, 'ஏன்? எவ்வளவு தருவாராம்?' என்றார் அப்பா.
'மாதம் பிறந்தால் சலவை நோட்டாய் ஒரு பத்து ரூபாயைத் தூக்கித் தந்துவிடுவாராம். பதிலுக்கு நான் வாரத்துக்கு ஆறு நாள் போய்ப் பட்டத்து இளவரசனுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டுமாம்.'
அப்பா எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.
'பஸ் சார்ஜுக்கே நான்கு ரூபாய்க்கு மேல் ஆகிவிடும்' என்றேன், தொடர்ந்து.
அவர் எழுந்து போய்விட்டார்.
சாதத்துக்கு மோர் ஊற்றிய சித்தி, 'வர வர நீ சரியாகவே சாப்பிடுவதில்லை, பாலு. உடம்பு துரும்பாக இளைத்துவிட்டது,' என்று குழைந்தாள்.
பிறகு, 'டியூஷனுக்கு ஒப்புக்கொண்டு வந்து விட்டாயோ இல்லையோ? ஆரம்பத்தில் பத்து ரூபாயாக இருந்தாலென்ன? போகப் போகக் கூட்டித் தருவார். இன்னும் கொஞ்சம் மோர் விடட்டுமா?' என்றாள்.
அவள் உபசாரம் எனக்கு ருசிக்கவில்லை. பஸ் சார்ஜ் போனாலும் கூட ஆறு ரூபாய் மிஞ்சும். அதில் நான்கையாவது அப்பாவிடம் கொடுக்கமாட்டேனா என்ற ஆசை அவளுக்கு.
அப்பா அரசாங்க அலுவலகத்தில் வேலையாக இருந்தார் நூற்றைம்பது ரூபாய் சம்பளம். அதுவும் இன்னும் எத்தனை வருடத்துக்கு? இரண்டோ, மூன்றோ. அப்புறம் ஓய்வு என்ற பெயரில் கௌரவமான வெளியேற்றம்.
இரண்டு பெண்கள் வேறு கல்யாணத்துக்கு நின்றார்கள்.
கை கழுவிவிட்டு வந்தேன். பள்ளிக்கூட வேலை எனக்காகக் காத்திருந்தது. கால் வருடப் பரீட்சையின் விடைத் தாள்களைத்திருத்த வேண்டும். பதினொரு பன்னிரண்டு மணிக்கு முன்னால் தூங்கினாற் போலத் தான்.
காகிதக்கட்டை எடுக்க அறைக்குள் நுழைந்தேன்.
‘இப்போதுதான் முடிந்தது அண்ணா,' என்று பேனாவை மூடிவைத்துவிட்டுச் சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தாள் சாந்தி.
அவள் நீட்டிய தாளை வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தேன். நான் எழுதி வைத்திருந்த சரியான விடைகளை ஒப்பிட்டுப் பார்த்து, எல்லா விடைத் தாள்களையும் திருத்தி வைத்திருந்தாள். மற்றொரு காகிதத்தில் வரிசையாகக் கோடிட்டு மார்க்குகளை மாணவர்களின் பெயர்களுக்கு நேரே பதிந்திருந்தாள்.
அவள் எஸ். எஸ். எல்.சி. தேறியவள். மனச்சாட்சியின் திருப்திக்காக, மார்க் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தை மேலெழுந்த வாரியாக நான் பார்த்துவிட்டால் போதும். மற்றப்படிக்கு எல்லாம் சரியாகவே இருக்கும்.
'உன் சமர்த்து யாருக்கு வரும், சாந்தி?' என்றேன் செல்லமாக. 'அதை மதிக்கத் தெரிந்த ஒரு முழு மடையனாகப் பிடித்துக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறேன், போ!'
'அப்படியானால் ஒரு பள்ளிக்கூட வாத்தியாராகவே பாருங்கள், அண்ணா! என்று நகைத்துக்கொண்டே சாப்பிடச் சென்றாள் சாந்தி.’
சாந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவள் அக்கா பிரேமா இருக்கிறாளே அவள் விஷயம் வேறு. இருவருமே சித்தியின் பெண்கள் தான். சாந்தியுடன் இருக்கும் போது. அவளும் நானும் ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பது நாங்கள் பழகும் விதத்திலிருந்தே தெரியும். ஆனால் பிரேமாவைப் பார்க்கும்போது, எங்கள் இருவருக்கும் தந்தை ஒருவரானாலும் தாய் வெவ்வெறு என்ற ஞாபகம் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கும் இப்போது பிரேமா இங்கே இல்லை. அவளுடைய மாமா வீட்டுக்கு - திருச்சிக்கு - சென்றிருந்தாள்.
மறுநாள் காலை. எனது மறுப்பைத் தெரிவிக்க அருணாசலத்தின் வீட்டுக்குப் புறப்பட்டேன். போகாமலே இருந்து விட்டால் என்ன என்றுகூட ஒரு யோசனை உதித்தது. மனிதர் அதிலிருந்தே தெரிந்து கொள்ளட்டுமே? பஸ் செலவும் மிச்சம். ஆனால் ஸ்ரீனிவாசவரதனுக்கு அதனால் இழுக்கு நேர்ந்து விடப்போகிறதே என்பது தான் என் கவலை.
ஸ்ரீனிவாசவரதன் எங்கள் தொகுதியின் நகரசபைப் பிரதிநிதி. வக்கீல். சிபாரிசுக் கடிதங்களை மானாவாரியாக வீசிவிடமாட்டார். அப்பாவும் அவரும் ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே குளத்தில் நீந்தி விளையாடியவர்களாம். பழைய சினேகத்தை உத்தேசித்துச்