Kaadhalenum Theevinile
By S.A.P
()
About this ebook
ஒருத்தரின் காதலியை இன்னொருத்தர் காதலிப்பது பண்பாடல்ல. ஆனால் வசந்தனின் பாதையை நானும் காதலித்தேன். ராதையின் தங்கை அந்த இரட்டைச் சடை யசோதா மட்டும் துடுக்கும், வாயாடித்தனமுமாக இல்லாதிருந்தால் அந்தச் சுட்டியிடமும் விண்ணப்பித்திருப்பேன் - வெங்கு மாமாவின் துணையோடு.
நாவலின் நடை அழகு - ஊறுகாய்க்கு ஊற்றிய வினிகர். வருடங்கள் பல ஆனாலும் சலிப்பு இல்லாமல் வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அத்தியாயம், அத்தியாயமாகக் காத்திருந்து படித்த நாற்பத்தைந்து அத்தியாயங்களை ஒரே மூச்சில் ஒரே இரவில் மீண்டும் படித்து அதே இன்பத்தை அடைந்து தெவிட்டவில்லையே என்று ஆச்சரியப்பட்டிருப்பேனா?
ஓரொரு அத்தியாயமும் அச்சு யந்திரத்தில் ஓடத் தொடங்கிய பிறகும் கூட, நடுநிசியில் ஆசிரியரின் பங்களாக் கதவைத் தட்டும் மிஷின் புரூஃபில் அவர் புகுந்து விளையாடாதிருக்க வேண்டுமே என்று கம்பாசிட்டர்களும் மிஷின் மென்னும், உதவி ஆசிரியர்களும் ஒரு குட்டிப் பிரார்த்தனை நடத்துவோம்.
கைக் கம்போஸிங் காலம் அது. கம்பாசிட்டர்களின் மேலும், தன் மேலும் ஈவு இரக்கமில்லாமல், விடிய விடிய எழுதி, விடிய விடியக் கம்போஸ் செய்த காலிகளை, பக்கங்களை ஆசிரியர் மீண்டும், எழுதியும், அடித்தும் திருத்தியும் - ரொம்பத்தான் படுத்தி எடுத்திருக்கிறார்.
நாவலைப் படிக்கும்போது உங்களுக்கும் தெரிய வரும்.
Read more from S.A.P
Nee Rating: 5 out of 5 stars5/5Unnaiye Rathi Endru... Rating: 0 out of 5 stars0 ratingsNagarangal Moondru Sorgam Ondru Rating: 5 out of 5 stars5/5Enakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Chinnamma Rating: 5 out of 5 stars5/5Indre, Inge, Ippozhuthe Rating: 5 out of 5 stars5/5Moondravathu Rating: 5 out of 5 stars5/5Sollathey! Rating: 5 out of 5 stars5/5Kettathu Yaarale Rating: 5 out of 5 stars5/5Indriravu Rating: 5 out of 5 stars5/5Pirantha Naal Rating: 0 out of 5 stars0 ratingsMalarkindra Paruvathil Rating: 0 out of 5 stars0 ratingsBramhachari Rating: 0 out of 5 stars0 ratingsOviyam Rating: 5 out of 5 stars5/5Thirumanam Kuzhanthayal Nichayakkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhalenum Theevinile
Related ebooks
Sabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Ghost Rating: 0 out of 5 stars0 ratingsAadhavan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsSollathey! Rating: 5 out of 5 stars5/5Raajiyin Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEditor S. A. P. Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsDevasundari Rating: 1 out of 5 stars1/5Kanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsPallisaamyin Thuppu Rating: 0 out of 5 stars0 ratingsVichuvukku Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsTheevugal Rating: 0 out of 5 stars0 ratingsJustice Jaganathan Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Cinema Rating: 0 out of 5 stars0 ratingsC.I.D Chandru Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhalenum Theevinile
0 ratings0 reviews
Book preview
Kaadhalenum Theevinile - S.A.P
http://www.pustaka.co.in
காதலெனும் தீவினிலே
Kaadhalenum Theevinile
Author:
எஸ். ஏ. பி.
S.A.P
For more books
http://www.pustaka.co.in/home/author//s-a-p
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
முன்னுரை
குதிரைப் பந்தய மைதானத்தில் ஆரம்பித்து, நம் மனத்தையும், சிந்தனையையும் ஒருசேர வேகமாக இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ள நாவல் திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் எழுதிய ‘காதலெனும் தீவினிலே’. அந்த நாவலை என்னிடம் கொடுத்து ஒரு முன்னுரை கேட்டபோது - அதுவும் குறுகிய கால அவகாசத்தில் கேட்டபோது, நான் சற்று, திகைத்துப் போனேன்; ‘நமக்கிருக்கும் பணிச் சுமைகளுக்கிடையில் இது சாத்தியம்தானா?’ என்று.
ஆனால் நாவலைப் படிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு மற்ற எதுவுமே நினைவிற்கு வரவில்லை. அந்த அளவிற்கு என்னை ஈர்த்துக் கொண்டது இந்த நாவல்.
ஐம்பதுகளில் ‘குமுதம்’ வார இதழில் தொடராக வந்த திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் இரண்டாவது நாவல்தான் ‘காதலெனும் தீவினிலே’. எண்ணிக்கையில் இரண்டாவதாக இருந்தாலும் தரத்திலும், முதிர்ச்சியிலும் முதன்மையானதாகத் திகழ்கிறது.
ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஆரம்பிப்பதாலோ என்னவோ ஆரம்பமே வேகம்தான்.
‘எல்லா குதிரைகளுக்கும் முன்னால் ‘நைட் லேடி’ வந்து கொண்டிருக்கிறது. அதை ‘மோதி’யும், ‘மீனாகுமாரி’யும் துரத்துகின்றன...’
அதன்மீது பணம் கட்டிய ஒரு செல்வந்தர் மகிழ்ச்சி அடைந்த நிலையில், ஒலிபெருக்கியில்:
நீ முந்தி, நான் முந்தி என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. ‘மீனாகுமாரி‘யும், ‘மோதி‘யும்... ‘நைட் லேடி’ பின்தங்கி விட்டது
. என்று ஒலித்தது.
இப்படி ஒவ்வொரு குதிரையாக மாறிமாறி முந்திக் கொள்வதாக ஒலிபெருக்கியில் அறிவித்தபோது அவைகளின் மீது பணம் கட்டியவர்களின் முகங்களிலும் வேகமான மாறுதல்கள். படிக்கும் எனக்குள்ளும் பரபரப்பு அந்த வேகமும் பரபரப்பும் நாவலிலும் பிரதிபலிக்கிறது.
இந்த மைதானத்தில்தான் இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அறிமுகப்படுத்தப்படும் விதத்திலேயே கதாபாத்திரங்களின் பண்புநலன்களை நமக்குச் சொல்லிவிடுவதில் சமர்த்தர் திரு. எஸ்.ஏ.பி. என்பது பளிச்சிடுகிறது.
வஸந்தன், ராதை, யசோதை, செல்வம் ஆகியோருக்கும் தருகின்ற அதே அளவு முக்கியத்துவத்தை ஏனைய கதாபாத்திரங்களுக்கும் தந்திருப்பதால் ஆசிரியரின் சமநோக்கு புரிகிறது. சிறிய கல்லைக்கூட இழிவுபடுத்தாமல், ‘மலைப்பிஞ்சு’ என்று சொல்லியிருப்பதில் ஆசிரியின் சொல்நயமும் பளிச்சிடுகிறது.
முதல் வகுப்பு முடிந்துவிட்ட செய்தியைக் கிணிகிணியென்று கல்லூரியெங்கும் ஒலிபரப்பிற்று மின்சார மணி.
‘60 நிமிஷம் ஓயாது தொணதொணத்துக் கொண்டிருந்த பொருளாதார - சரித்திரப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம், ஆகவே, பத்தொன்பதாம் நூற்றாண்டானது மனிதர்களைத் தேவைக்கு மேல் உற்பத்தி செய்தது. இருபதாம் நூற்றாண்டோ...
என்று ஆரம்பித்தவர், வாக்கியத்தை அந்தரத்தில் நிறுத்திவிட்டு வெளியேறிவிட்டார்.’
இந்த இடத்தில் நகைச்சுவை இழையோடினாலும், ‘யாரும் குறித்த நேரத்திற்கு மேல் வேலை செய்ய விரும்பாதவர்களாக இருக்கிறார்களே. இந்தக் குறை என்று தீரும்’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
ராதை - வஸந்தன் காதலுக்கிடையில் குறுக்கிடுகிறாள் ராதையின் சகோதரி அகிலாண்டம். இந்நிலையில் கடற்கரையில் தனிமையாக சந்தித்துக் கொண்ட ராதையும் - வஸந்தனும் உரையாடுகின்றனர்.
தன்னை மணப்பதனால், தன் வறுமையினால் ராதையும் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று சொல்லிய வஸந்தனிடம்,
மன்னிக்க வேண்டும். நீங்கள் அமைதியாக அலசி ஆராய்ந்து பேசிய ஒவ்வொரு சொல்லையும் கேட்கக் கேட்க, கலப்படமற்ற கோழைத்தனத்துக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாதென்று எனக்குப் பட்டது
என்று ராதை சொல்லும் இடத்தில் காதல் ஒருவனைக் கைப்பிடிப்பவளின் மன உறுதி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது புரிகிறது.
கொண்ட காதலில் ராதையின் மன உறுதி பல இடங்களில் பரிமளிக்கிறது.
சந்தர்ப்பவசத்தால் முதன் முதலாகக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்ட வஸந்தன், ராதையின் வீட்டிற்கு வந்து அலங்கோலப்படுத்திய போது, அகிலாண்டம் அவனை வெளியேற்ற முனைய, அதுகண்ட ராதை, தானும் வெளியேறுவதாகக் கூற, அகிலாண்டம் அவளை ‘மானங்கெட்டவளே’ என்று சொல்கிறாள். அதற்கு ராதை -
நான் அல்ல. மனத்தில் அவர் உருவத்தைச் செதுக்கிக் கொண்டு விட்டு, உண்ணும்போதும், உலாவும்போதும், உறங்கும் போதும் அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, அவரை எப்போது சந்திப்போம் என்ன பேசுவோம் எப்படி அளவளாவுவோம் என்று கற்பனை செய்துவிட்டு, மனிதருக்கு இயற்கையாக ஏற்படும் ஒரு சபலத்துக்கு அவர் பலியாகிவிட்டார் என்பதை அறிந்தததும் நான் திடீரென்று அவரை நிராகரித்து விடுவேனானால், அப்போதுதான் நான் மானங்கெட்டவள் ஆவேன்
என்று கூறும்போது, மானம் என்ற சொல்லுக்கே மணம் சேர்க்கிறாள்.
பின்னர் குடிபோதையிலிருந்து மீண்ட வஸந்தன்,
ராதை, மன்னிக்க முடியாத குற்றத்தை நான் செய்துவிட்டேன். வாழ்க்கையின் தலைவாசலை மிதிக்கும் ஓர் இளைஞன், மனிதனை மிருகமாக்கும் குடிப்பழக்கத்தில் விழுவது மன்னிக்கக்கூடிய குற்றமா
என்றெல்லாம் பேசும் இடத்தில், தவறு செய்ததை உணரும் மனிதன் எந்த அளவிற்கு வேதனைப்படுவான் என்பதை உணர முடிகிறது.
அவன் தன்னைக் குற்றவாளி என்று கூறியபோதிலும், வஸந்தன் பசித்தவன் சாப்பிடும்போதும், பசிக்காதவன் பட்டினி கிடக்கும் போதும் வியாதி வருவதில்லை. மாறாக, பசித்தவன் பட்டினி கிடந்தாலோ, பசிக்காதவன் விருந்துண்டாலோதான் உடம்பு கெடுகிறது. இல்லையா? குற்றம் மன்னிக்கக் கூடியதா இல்லையா என்பதை எப்படி நிர்ணயிப்பது? குற்றத்தை மட்டும் ஆராய்வது தவறு. குற்றம் நேரவேண்டிய காரணம், சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் ஆராயவேண்டும்...
என்று ராதை வாதிடும் இடத்தில் குற்றம் புரிந்தவர்களிடத்திலும் கூட திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் இரக்கம் நிறைந்த இதயத்தைப் பார்க்க முடியகிறது.
ராதையின் தமக்கை அகிலாண்டம் எந்த அளவிற்கு எல்லா விஷயங்களிலும் கணக்காக இருப்பாள் என்பதைச் சொல்லவந்த ஆசிரியர், தமது கருத்தை, அகிலாண்டத்தின் இளைய தங்கையான யசோதை மூலம் இப்படிக் கூறுகிறார்.
மாமா! நமக்கெல்லாம் நெஞ்சு படக்கு, படக்கு என்று அடிக்கிறது அல்லவா? அக்காவுக்கு மட்டும் கணக்கு, கணக்கு என்றுதான் அடித்துக் கொள்ளும்
இதுபோன்ற மெல்லிய நகைச்சுவை இழையோடும் உரையாடல்கள் இந்நாவல் முழுக்க இழையோடி இனிமை சேர்க்கின்றன.
ராதை - வஸந்தன் ஆகிய இருவரும் இணைந்து சென்ற ‘காதலெனும் வீதியினிலே’ தான் எத்தனையெத்தனை சம்பவங்கள்? அத்தனையிலும் ஒன்றுகூட தேவையற்ற ஒன்றாக இயலாமல் அனைத்தும் அவற்றின் இயல்பிலேயே செல்லும் விதத்தில் இந்நாவல் அமைந்துள்ளது திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் தனித்திறன்.
அவரது தனித்திறன் சம்பவங்களைக் கோத்து நேர்த்தியான முறையில் இந்நாவலை அமைத்ததில் மட்டுமல்லாது, பாத்திரப்படைப்புகளிலும் பளிச்சிடுகிறது.
நேர்மையே வடிவான வஸந்தன்;
அன்பின் திரட்சியாய் ராதை;
குறும்புத்தனம் கொண்ட யசோதை;
அந்தஸ்தே பெரிதென எண்ணும்
ராதை-யசோதையின் தமக்கை அகிலாண்டம்;
அகிலாண்டத்தினுள் அடக்கமாகிப்போன
அவளது கணவர் வெங்குமாமா;
கொண்ட கொள்கையில் உறுதியான
வஸந்தனின் தமையன் சத்தியன்;
சத்தியத்தின் பிரதியாக மீனா-கோபி;
நட்பின் இலக்கணமாய் செல்வம்;
நட்பே அறியாத ஊதாரி-நயவஞ்சக நடராஜ்;
அவனுக்கு நேர்மாறாகக் கருமியாக
காசே பெரிதாக வாழும் அண்ணன் காசிலிங்கம்;
மற்றும் நடராஜின் தாய்; காசிலிங்கத்தின்
கணக்கப்பிள்ளை; கணக்கப்பிள்ளையின்
மகள் சீதா; இவர்களுடன்
ஹபிபுல்லா; கோவிந்தன்
என்ற அளவில் குறைவான பாத்திரப் படைப்புகளே இருப்பதும் நாவலின் நிறைவுக்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்வதென்றால், திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் காதலும், குற்றமும் (கிரைம்) இணைந்த-டூ-இன்-ஒன் போன்ற இந்நாவலைப் படித்ததும் எனக்கேற்பட்ட ஆதங்கம்,
இவ்வளவு திறமைகள் கொண்ட திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் ‘அடிக்கடி எழுதாமல் அபூர்வமாக எழுதுகிறாரே’ என்பதுதான்.
திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் இனி அபூர்வமாக எழுதாமல், அடிக்கடி எழுத வேண்டும்; அபூர்வமானதாக எழுதவேண்டும் என்பதே என் விருப்பம்.
- மணியன்
அணிந்துரை
நல்ல நாவல் ஒன்று எழுதுவதும் வெற்றிகரமாக ஒரு சர்க்கஸ் நடத்துவதும் வேறு வேறு தொழிலல்ல. சிரமப்பட்டு, இவ்வளவு பெரிய பட்டாளத்தை வைத்துக்கொண்டு இந்த சர்க்கஸை நடத்த வேண்டுமா? கட்டுப்படி ஆகுமா? நம்மில் பலரும் சிந்திப்பதுண்டு.
எல்லாத்துறையிலும் சாதனை வெறியாளர்கள் உண்டு. இலக்கியத் துறையில் ‘காதலெனும் தீவினிலே’யின் படைப்பு, அத்தகைய சாதனை ஆர்வத்தில் உருவான அபூர்வமான வடிவம். எந்த வரியும், சின்னச் சம்பவமும் கூடப் பிரக்ஞையின்றிப் பேனாவால் இழுக்கப்பட்டடவை அல்ல. காரண காரியத்தோடு, நகர்த்தப்பட்ட செஸ் மூவ்கள். மறதியா? பிசிறா? அப்படியென்றால்?
செல்வத்தின் கார் முகப்பில் உள்ள சிறுபொம்மையை ஒருத்தர் வருடும் சின்னச் செயலாகட்டும், தும்பிகள் பறப்பதாகட்டும், க்ஷவரக்கத்தியால் ஒருத்தர் கழுத்தறுபட்டுக் கொலை ஆவதாகட்டும், காதல் உள்ளங்களின் மென்மையும் போராட்டமும் செயல்படும் விதமாகட்டும் - நட்புக்கும் காதலுக்கும் எத்தனை வகை சோதனைகள். கனிவுகளும், வீரங்களும் விதவிதமான பரீட்சைகள் எழுதித் தேற வேண்டியிருக்கின்றன.
ஒருத்தரின் காதலியை இன்னொருத்தர் காதலிப்பது பண்பாடல்ல. ஆனால் வசந்தனின் பாதையை நானும் காதலித்தேன். ராதையின் தங்கை அந்த இரட்டைச் சடை யசோதா மட்டும் துடுக்கும், வாயாடித்தனமுமாக இல்லாதிருந்தால் அந்தச் சுட்டியிடமும் விண்ணப்பித்திருப்பேன் - வெங்கு மாமாவின் துணையோடு.
நாவலின் நடை அழகு - ஊறுகாய்க்கு ஊற்றிய வினிகர். வருடங்கள் பல ஆனாலும் சலிப்பு இல்லாமல் வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அத்தியாயம், அத்தியாயமாகக் காத்திருந்து படித்த நாற்பத்தைந்து அத்தியாயங்களை ஒரே மூச்சில் ஒரே இரவில் மீண்டும் படித்து அதே இன்பத்தை அடைந்து தெவிட்டவில்லையே என்று ஆச்சரியப்பட்டிருப்பேனா?
தன் இலக்கிய நடைக்குத் தானே சவால் விட்டுக்கொண்டு, ஓரொரு சம்பவத்தையும், ஏன் வாக்கியத்தையும் பாடுபட்டுக் கோத்திருக்கிறார் என்பது குமுதத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதால் எனக்குத் தெரியும்.
ஓரொரு அத்தியாயமும் அச்சு யந்திரத்தில் ஓடத் தொடங்கிய பிறகும் கூட, நடுநிசியில் ஆசிரியரின் பங்களாக் கதவைத் தட்டும் மிஷின் புரூஃபில் அவர் புகுந்து விளையாடாதிருக்க வேண்டுமே என்று கம்பாசிட்டர்களும் மிஷின் மென்னும், உதவி ஆசிரியர்களும் ஒரு குட்டிப் பிரார்த்தனை நடத்துவோம்.
கைக் கம்போஸிங் காலம் அது. கம்பாசிட்டர்களின் மேலும், தன் மேலும் ஈவு இரக்கமில்லாமல், விடிய விடிய எழுதி, விடிய விடியக் கம்போஸ் செய்த காலிகளை, பக்கங்களை ஆசிரியர் மீண்டும், எழுதியும், அடித்தும் திருத்தியும் - ரொம்பத்தான் படுத்தி எடுத்திருக்கிறார்.
நாவலைப் படிக்கும்போது உங்களுக்கும் தெரிய வரும்.
- ஜ.ரா. சுந்தரேசன்
நன்றி! நன்றி!
இந்த நாவலைத் திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து என்னைப் பெருமைப்படுத்தியவர் அவரல்லவா? அதைவிடப் பெரிய காரியம் -
கிடைத்ததற்கரிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வசந்தமான சூழ்நிலையில் நான் இல்லை என்பதையும், உண்மைக் காரணம் வெளியே தெரிந்தால் அசட்டுப்பட்டம் கட்டிவிடுவார்கள் என்று உள்ளுக்குள் அஞ்சுவதையும் புரிந்து கொண்டு, ஏதோ ஸென்ட்டிமென்ட்டான சமாசாரம்
என்று முலாம் பூசி என்னைக் காப்பாற்றியதுடன், சிறிதும் மனத்தாங்கலோ காழ்ப்போ கொள்ளாமல் கடைசிவரை மாறாமல் அன்பு காட்டிய பெருந்தகை அவர்.
இரண்டாமவர், எனக்கு மிகவும் வேண்டப்பட்டவரும், அச்சமயம் எமனுடன் போராடும் அளவுக்கு நோய் வாய்ப்பட்டிருந்தவரும், ஒன்றை விட்டுக் கொடுத்தால் தான் இன்னொன்றை மீட்க முடியும்
என்ற தத்துவத்தை நான் பயன்படுத்திப் பலன் காண உதவியாக இருந்தவரும், தன் உயிருக்கு அடுத்தபடியாக என்பால் நேசம் வைத்திருந்தவருமான பெரிய கருப்பண்ணன் அவர்கள். (பின்னர் சுமார் 40 ஆண்டுகாலம் வாழ்ந்து என்னுடன் குமுதத்தில் பணியாற்றி, ‘பிரார்த்தனை பலிக்கும்’ என்பதற்குக் கண்கண்ட சாட்சியாக விளங்கியவர்.)
அதிர்ஷ்டவசமாக, சிறந்த அணிந்துரை இந்தப் புத்தகத்திற்கு அமைந்திருக்கிறது.
நெடும் பயணங்களால் இந்த நீள்உலகின் பரிமாணங்களையும், வித்தியாசமான கதைகளால் காதல் இலக்கியத்தின் அகல நீளத்தையும், பல வகைப்பட்ட அனுபவங்களால் வாழ்க்கையின் விஸ்தீரணத்தையும் அளந்துள்ள ஒரு படைப்பாளியிடம் பாராட்டுப் பெறுவது இலேசான காரியமா என்ன? திரு. மணியன் அவர்களுக்கும் -
ஒரு கையால் நகைச்சுவை மூலம் நமக்குக் கிச்சுக் கிச்சுமூட்டிக் கொண்டே மறு கையால் நுட்பமான இலக்கியத் தராசு பிடிக்கவும் தெரிந்து வைத்திருக்கும் எனது ஆன்மிக சகோதரருமான ஜ.ரா.சு.வுக்கும் நன்றி.
- எஸ்.ஏ.பி.
1
ஆ!
என்ற அலாதி ஓசை ஆயிரம் குரல்வளைகளிலிருந்து ஒரே சமயத்தில் பீறிட்டெழுந்து, குதிரைப் பந்தயம் ஆரம்பமாகிவிட்டதை அறிவித்தது.
ஜனத்திரள் மீது பட்டுத் திரைபோல் படிந்தது அமைதி.
ஆனால், அந்த அமைதிப் போர்வைக்கு அடியில், ஒவ்வொரு நெஞ்சுக் கூட்டுக்கு நடுவிலும், ஆசை படபடத்துக் கொண்டிருந்தது.
போலி அமைதியைக் கிழித்து, உள்ளக் கொந்தளிப்பை ஊக்கிற்று ஒலிபரப்பியின் குரல்: எல்லாக் குதிரைகளுக்கும் முன்னால் ‘நைட் லேடி’ வந்து கொண்டிருக்கிறது... அதை ‘மோதி’யும், ‘மீனா குமாரி’யும் துரத்துகின்றன...
சென்னை ரேஸ் கிளப் ‘அங்கத்தினர் பகுதியில் அட்டணைக் கால் போட்டு அமர்ந்திருந்த கனவான், தமது ‘பைனாகுலர்’ஸைக் கண்களில் பொருத்திக் கொண்டார். ‘நைட்லேடி‘தான் நிச்சயம் ஜெயிக்கப் போகிறது என்று அவருக்கு ரகசிய ‘டிப்ஸ்’ வந்திருந்தது. அவரது கம்பெனித் தொழிலாளர்களின் சம்பளத்துக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரம் ரூபாயை அப்படியே ‘நைட் லேடி’யில் கட்டிவிட்டார். அது அவரைக் கைவிட்டு விட்டால்...
கமான், ‘நைட் லேடி’, கமான்!...
ஒலிபரப்பி தொடர்ந்தது: நீ முந்தி, நான் முந்தி என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன, ‘மீனாகுமாரி’யும் ‘மோதி’யும்... ‘நைட் லேடி’ பின்தங்கி விட்டது...
மோதி மீது நம்பிக்கை வைத்திருந்த பள்ளிக்கூட வாத்தியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அந்தப் பாழாய்ப்போன ‘மீனா குமாரி’ மேல் அவருக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அந்தச் சனியனுக்குக் கால் கீல் ஒடிந்து கீழே விழுந்ததானால், ‘மோதி’ ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது. அப்புறம், முந்தின ரேஸுக்காக மார்வாடியிடம் ஈடு வைத்திருந்த சங்கிலியையும் வளையல் ஜோடியையும் மனைவிக்கு மீட்டுக் கொடுப்பதோடு, இந்த வாரத்திலாவது பட்டினி கிடக்காமல் சாப்பிடலாம்.
...கமான் ‘மோதி’, கமான்...
விடைக்கும் நாசிகளை மேலும் விரித்துக் கொண்டு, பந்தயக் குதிரைகள் பாய்ந்தோடி வந்தன, "மீனா குமாரி’யும் ‘மோதி‘யும் சோர்வடைந்து விட்டன... மின்னல் மாதிரிப் படுவேகமாகப் பின்னாலிருந்து வருகிறது ‘குட்மார்னிங்’...
பொடி டப்பியில் விரல் வைத்திருந்த கிழவரின் கழுத்துச் சுருக்கங்களில் வியர்வை கசிந்தது. அன்றைய தினத்தைப் பொறுத்த வரையில் அவர் வாழ்வும் தாழ்வும் ‘குட்மார்னிங்’ கையில் (அல்லது காலில்) இருந்தன. அகர வரிசை எழுத்து எதிலாவது ஆரம்பமாகும் பெயருடைய குதிரைகளில் மட்டுமே அவர் பணம் கட்டுவது வழக்கம். அவர் பிள்ளை, வக்கீல் குமாஸ்தா வர்க்கத்துக்கே ஒரு திருஷ்டி பரிகாரம். சொற்ப வருமானம், பிரம்மாண்டமான குடும்பம். கல்யாணத்துக்கு நிற்கும் பெண்களின் எண்ணிக்கை மூன்று. ஆனால் வாரம் தப்பினாலும் கிழவரின் கிண்டி விஜயம் தப்பாது. ‘குட்மார்னிங்’ ஜெயித்தால், பிள்ளைக்குத் தெரியாமல் அவன் கோட்டுப் பையிலிருந்து கிளப்பி வந்த சில்லறையைத் திரும்ப வைத்து விடலாம்.
...கமான், ‘குட்மார்னிங்’ கமான்...
முன்னால் வந்து கொண்டிருந்த ‘குட்மார்னிங்’கின் வேகம் குறைந்து விட்டது. மற்றக் குதிரைகள் எட்டிப் பிடித்து விட்டன. இந்த ரேஸை ஜெயிக்க ‘ரெட்லைட்’டுக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கும் போல் தோன்றுகிறது...
வறுமையின் புகைப்படம் போல் காட்சியளித்த அந்தப் பழக் கூடைக்காரி ஒருமுறை எச்சில் துப்பிவிட்டு, பக்கத்திலிருந்த ஆசாமியை, ஏன் ஸாமி, பந்தியம் முடிஞ்சு போச்சா? இன்னா நெம்பரு கெலிச்சுது சாமி?
என்று கேட்டாள். இன்னும் ஐந்து பேரோடு கூட்டாக அவள் ஏழாவது நம்பரில், அதாவது ‘ரெட்லைட்’டில் டிக்கட் வாங்கியிருந்தாள். அவள் போன்ற ஏழைகள் மீது கருணை வைத்து, குறைந்த கட்டண வகுப்பு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ரேஸ் கிளப்பினர்.
... கமான், ‘ரெட் லைட்’, கமான்!...
பந்தயத்தின் கடைசிக் கட்டம். எல்லாவற்றையும் கடந்து கொண்டு வருகிறது லிட்டில் ஜானி
என்றது ஒலி பெருக்கி,
ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருந்த ஐந்தாறு ஹைஸ்கூல் பையன்களின் வாயெல்லாம் பல்லாக இருந்தது. ‘லிட்டில் ஜானி’ ஜெயித்தால், அடுத்த கிரிக்கட் டெஸ்ட்டிற்கு ஆளுக்கொரு ஸீஸன் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பள்ளிக்கூடச் சம்பளப் பணத்தைத் தாரை வார்த்து விட்டதன் பயனாக, பாட்டியிடம் சொல்லி முதுகுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
... கமான், ‘லிட்டில் ஜானி’, கமான்!...
கடைசியில், ஜட்கா வண்டி இழுக்கக்கூட லாயக்கில்லை என்று ‘விஷயம் தெரிந்தவர்’களால் பகிஷ்கரிக்கப்பட்ட ‘டோபீஸ்டாங்க்கி’ வெற்றிக் கம்பத்தண்டை தன் வெள்ளி மூக்கை நீட்டிவிட்டது.
தோற்ற டிக்கட்டுகள் கிழித்தெறியப்பட்டன. பெஞ்சுகளின் மீது டிக்கட்டுகள், புல்மீது டிக்கட்டுகள், தரைமீது டிக்கட்டுகள். சிதறிய கனவுகளின் சின்னங்கள்.
மாணவர்களின் கண்கள் கலங்கின.
இன்னா அதிஸ்ட்டம் ஸாமி, நம்ம அதிஸ்டம்!
என்று சலித்துக் கொண்டபடி, தன் உமிழ்நீரால் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு, வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவினாள் கூடைக்காரி.
கிழவர் பொடியை உறிஞ்சி ஒரு தும்மல் போட்டுவிட்டு, தமது கட்டமிட்ட அழுக்குக் கைக்குட்டையால் நாசியைச் சுத்தம் செய்தார்.
எனக்கு அப்போதே தெரியும் சார், ‘டோபீஸ் டாங்க்கி’யை ஜெயிக்க மெட்ராஸிலேயே குதிரை கிடையாதென்று!
என்று சமாதானம் செய்து கொண்டார் பள்ளிக்கூட வாத்தியார்.
கம்பெனி முதலாளி, ஒரு தட்டையான வெள்ளி சிகரெட் கேஸைத் திறந்து, மெதுவாக ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.
ஜெயித்தவர், தோற்றவர் எல்லோர் மனத்திலும் மேலோங்கியிருந்த கேள்வி: அடுத்த ரேஸில் எந்தக் குதிரை ஜெயிக்கும்?
ஞாயிற்றுக் கிழமை மத்தியானம். சென்னையிலிருந்து கிண்டியை நோக்கிச் சாரி சாரியாகப் போய்க் கொண்டிருந்தன கார்கள். அவற்றுள் ஒன்றில் இரு வாலிபர்கள் அமர்ந்திருந்தனர்.
வஸந்தனிடம் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டினான் செல்வம். வஸந்தன், நான் சொன்னதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறதல்லவா? மறந்துவிட மாட்டாயே?
வஸ்ந்தன் புன்னகை செய்தான். என் ஞாபக சக்தியில் உனக்கேன் அவ்வளவு சந்தேகம், செல்வம்?
என்று கேட்டபடி, நோட்டுகளை மடித்துக் கோட்டின் உட்புறப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
ரேஸ் கோர்ஸுக்கு நீ வருவது இதுதானே முதல் தடவை. வேடிக்கை பார்க்கும் பரபரப்பில் மறந்துவிடக் கூடும் அல்லவா?... ஆறாவது ரேஸ் வரும்வரை, உன்னை நான் உட்கார வைக்கும் இடத்திலேயே நீ உட்கார்ந்திருக்க வேண்டும். ஐந்தாவது ரேஸ் முடிந்ததும், கீழே இறங்கிப் போய் - நான் காட்டுவேன் ஒரு கௌன்ட்டர் அங்கே ரூபாயைக் கொடுத்து...
ரூபாயைக் கொடுத்து, ‘நம்பர் த்ரீ, ட்வென்ட்டி வின்ஸ்,’ என்று கேட்பேன். அங்கே இருக்கிற அம்மாள் தருகிற இருபது டிக்கட்டுகளையும் வாங்கிக் கொண்டு என் பழைய இடத்துக்கு வந்து, இடித்த புளிமாதிரி உட்கார்ந்து கொள்வேன். ‘பவானி’ ஜெயித்ததும், கிடைக்கிற பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஜம்மென்று டாக்ஸியில் வந்து உன் பங்களாவில் இறங்குவேன். என்ன சரியாக ஒப்பித்து விட்டேனா?
செல்வம் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து, நூற்றுக்கு நூறு மார்க்! பி.ஏ. மாணவனா, கொக்கா?
என்றான்.
அவர்கள் கிண்டியை அடைந்தனர். வஸந்தன் பிரமித்துப் போனான். அடேயப்பா! எத்தனை கார்கள், எத்தனை கார்கள்!
செல்வம் அவனை ரேஸ் கோர்ஸுக்குள் அழைத்துச் சென்று, பணம் கட்டும் டோட், பாடக், புக்கீஸ் ரிங், இன்னும் மற்ற இடங்கள் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினான்.
பிறகு வஸந்தனை நல்ல இடமாகப் பார்த்து உட்கார வைத்து விட்டு, நான் வரட்டுமா?
என்றான்.
ஒரு சந்தேகம்,
என்று இழுத்தான் வஸந்தன். நம் குதிரைக்கு ஜெயம் கிட்டினால் டாக்ஸியில் வந்துவிடுவேன். அரோகரா ஆகிவிட்டால்...?
இருக்கவே இருக்கு எலெக்டிரிக் டிரெயின்!
அது தெரியும். சில்லறைக்கு எங்கே போவது? டிக்கட் கொடுத்த அம்மாள் கைமாற்றுத் தருவாளா?
மன்னித்துக் கொள், மறந்து விட்டேன்,
என்று தன் தடித்த மணிப் பர்ஸிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்தான் செல்வம்.
சேச்சே, இவ்வளவு எதற்கு? நானும் ரேஸ் ஆடப் போகிறேனா என்ன?
ஆடினால்தான் என்னவாம்?... வஸந்தன், அதுவும் நல்ல யோசனைதான். பிடி, சொல்கிறேன். நீயும் ஒரு டிக்கட் வாங்கிக் கொள்.
வஸந்தன் மசியவில்லை. இந்த ரேஸ் வியாபாரம் எல்லாம் உன்னைப் போன்ற காட்ரெஜ் அலமாரிகளுக்கும் ஆஜாக்ஸ் பெட்டகங்களுக்கும்தான் லாயக்கு! நானோ, சட்டைக் கிழிசல் தெரியக் கூடாதென்று கோட் அணியும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். எலெக்டிரிக் டிரெயின் டிக்கட்டுக்கு ஈயக் காசு கொடு, போதும்.
செல்வம் பர்ஸை மூடினான்.
அப்படியானால் ஒன்று செய்கிறேன். வீட்டில் போய் இறங்கிக் கொண்டு காரைத் திருப்பி அனுப்புகிறேன். அதில் வந்துவிடு.
ஷார்க் ஸ்கின் ஸூட் வெய்யிலில் மின்ன, தங்கச் சங்கிலி பூட்டிய ரோலக்ஸ் கைக்கெடியாரம் வெளியே தெரியும்படி ஒரு முறை அனாவசியமாக மணி பார்த்துச் சொல்லும் செல்வத்தின் முதுகைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவனுக்கும் தனக்கும் இருக்கும் நட்பின் விசித்திரத்தை எண்ணி வஸந்தன் தனக்குள்ளே வியந்து கொண்டான். செல்வம் பெரிய பணக்கரரன். அவன் மாளிகையிலே அடுப்புப் பற்ற வைப்பதற்குக் கரன்ஸி நோட்டை உபயோகித்தால் கூட அவன் தந்தை அவனுக்கு விட்டுச் சென்றிருந்த ஆஸ்தி கரைய மூன்று தலைமுறை ஆகும்! வஸந்தன் வீட்டுச் சமையலிலோ, உப்புக் கல்லைக்கூட எண்ணித்தான் போட வேண்டும். இல்லாவிட்டால் கட்டுப்படியாகாது! அவனுடைய காலேஜ் பீஸ் கட்டுவதற்கு அவன் அண்ணா சத்தியம் படும் பாட்டைப் பார்க்கும்போது வஸந்தனுக்கே சில சமயம் சகிக்காது. ஷேக்ஸ்பியரையும் ஸென் அண்ட் தாஸையும் பக்கிங்ஹாம் கால்வாயில் தூக்கி எறிந்து விட்டு, வண்டி இழுத்தாவது நாலு காசு சம்பாதித்து அண்ணாவையும் அவனது இரண்டு தாயற்ற குழந்தைகளையும் காப்பாற்ற உதவலாம் என்று தோன்றும். அப்போதெல்லாம் நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானப்படுத்துவார் சத்தியம். ஆனால் உயிரே போவதாக இருந்தாலும் வஸந்தன் செல்வத்திடம் காலணாக்கூடக் கேட்க மாட்டான்.
செல்வத்துக்கு, நிச்சயமாகப் பலிக்கக்கூடிய டிப்ஸ் அடிக்கடி வருவதுண்டு. அதை நம்பி ஏதாவது ஒரு ரேஸில் மட்டும் ஆடினானானால் அவனுக்கு நல்ல மிச்சம் கிடைக்கும். அவனோ, தனக்குத் தோன்றியபடி கன்னாபின்னாவென்று ஆடி, கிடைத்ததைத் தொலைப்பதோடு மேலும் சில ஆயிரங்களை அழித்து விடுவான். கடைசியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. ரேஸ் கோர்ஸுக்குப் போனால்தானே மனம் கலைந்துவிடப் போகிறது? தான் போவதில்லை. போனாலும் பூரா ரேஸுக்கும் இருப்பதில்லை. யாராவது நம்பகமான ஆளை குதிரைப் பந்தயத்தின் ஆனா ஆவன்னாகூடத் தெரியாத நபரை-கிண்டிக்குத் தன் சார்பாக அனுப்புவது. இத்தனாவது ரேஸில் இத்தனாவது நம்பரின் மேல் இவ்வளவு ரூபாய் கட்டு,
என்று சொல்லி அனுப்புவது. அந்தக் குதிரை ஜெயித்தால், கிடைக்கும் பணம் வள்ளிசாகக் கிடைக்கும். தோற்றால் அதோடு போய்விடும்; மேற்கொண்டு நஷ்டம் வராது. இந்த எண்ணத்தோடுதான் செல்வம் வஸந்தனைக் கிண்டிக்கு அழைத்து வந்து, என்னென்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் கூறிவிட்டுத் திரும்பிப் போயிருந்தான்.
முதலாவது ரேஸ் ஆரம்பமாயிற்று. செல்வம் கொடுத்துச் சென்றிருந்த ‘பைனாகுலர்ஸ்’ மூலமாகக் குதிரைகளின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த வஸந்தன் கவனத்தை, பைனாகுலர்ஸை இப்படிக் கொடுங்கள்,
என்ற பெண் குரல் கலைத்தது.
அவ்வளவு அதிகாரத்தோடு அவனைக் கேட்பவள் யார்? வஸந்தன் பைனாகுலர்ஸைக் கண்களிலிருந்து எடுத்தான். அதற்குள் அது கைமாறிப் போய்விட்டது!
முன்னாலிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஓர் ஒல்லியான மூக்குக் கண்ணாடி தரித்த மங்கை அந்தக் கருவியை வஸந்தனிடமிருந்து சர்வ சுதந்திரத்துடன் பறித்து வெகு சுவாரஸ்யமாக உபயோகிப்பதைக் கண்டதும் அவனுக்கு ஒரு சந்தேகம் உதித்தது. ஒரு வேளை அந்தப் பெண்ணின் பைனாகுலர்ஸைத்தான் அவன் நினைவுப் பிசகாக இந்நேரம் எடுத்து வைத்திருந்தானோ?
அவன் சந்தேகத்தைப் போக்கியது, கண்ணாடிக்காரியின் வலது பக்கத்தில் இருந்த யுவதியின் மதுரமான் குரல்.
உனக்குக் கொஞ்சம்கூட மரியாதை தெரிவதில்லை, யசோதை! அவர் கையிலிருந்து அப்படியா வெடுக்கென்று பறிப்பது?
யசோதையைக் கண்டித்தபடி, பின் வரிசையிலிருந்த வஸந்தனை அவள் மருட்சியோடு நோக்கினாள். அவன் இதயம் ஒரு வினாடி நின்று பிறகே ஓடிற்று. எவ்வளவு கரிய பெரிய விழிகள்!
அதற்குள் மற்றொரு ஸ்திரீயின் குரல், உன் தங்கையிடம் அவராகக் கொடுத்தால்கூட நீ வேண்டாம் என்பாய் போலிருக்கிறதே? உனக்கென்ன வந்தது? சும்மா இரு!
என்றது. யசோதையின் இடது புறத்தில், அகலக் கரையிட்ட ஜரிகைப் புடவையாலும், டாலடிக்கும் வைர நகைகளாலும் மூடப்பட்ட ஒரு பருத்த தேகத்திலிருந்து அக்குரல் வந்ததென்று வஸந்தனால் ஊகிக்க முடிந்தது.
இல்லை அக்கா
, என்று சமாதானம் கூறினாள் கண்ணழகி. அவர் வித்தியாசமாக நினைத்துக் கொண்டு விடப்போகிறாரே என்பதற்காகத்தான் சொன்னேன்.
அவர்கள் மூவரும் சகோதரிகள் என்பதை வஸந்தன் புரிந்து கொண்டான். மூத்தவள் வஸந்தன் பக்கம் திரும்பினாள். ஏன் தம்பி, அந்தப் பூதக்கண்ணாடியை வாங்கித் தந்து விடட்டுமா?
சேச்சே. சும்மா பார்க்கட்டும்,
என்றான் வஸந்தன்.
தாங்க்ஸ்,
என்றாள் அவன் உள்ளத்தைக் கவர்ந்தவள். அவள் அதரங்கள், சிறிதாகவும் சிவப்பாகவும் காணப்பட்டன.
இதற்குள் ரேஸ் முடிந்து விட்டது. எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், பைனாகுலர்ஸை வஸந்தன் கையிலிருந்து பறித்தது முதல் ரேஸ் முடியும் வரை குதிரைகள் மீதே கண்ணாயிருந்த யசோதை, இப்போது அவனிடம் அதைத் திருப்பிக் கொடுத்தாள். ரொம்ப மட்டரகமான பைனாகுலர்ஸ் போல் இருக்கிறது. சரியாகவே தெரியவில்லை
என்றபடி, பிறகு, எலிவால் போல முதுகில் தொங்கிக் கொண்டிருந்த இரட்டைப் பின்னலை மூன்னால் இழுத்து விட்டுக் கொண்டு, மன்னித்துக் கொள்ளுங்கள். மட்டு மரியாதை லொட்டு லொசுக்கு என்று இவள் திருப்பித் திருப்பிச் சொல்லித்தான் எனக்கிருந்த கொஞ்ச நஞ்சம் ‘மேனர்ஸும்’ ஓடிப்போய் விட்டது
என்று தன் சின்ன அக்காவைக் குற்றம் சாட்டினாள்.
வஸந்தனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறீர்களே?
என்றான்.
வினையாகவும் பேசுவேன் சில சமயங்களில்!
என்று சுட்டு விரலைக் காட்டி எச்சரித்தாள் யசோதை.
சம்பாஷணை வளர்ந்தது. அது முற்றுப் பெறாமல் இருப்பதற்குத் தன்னாலான யுக்திகளை எல்லாம் வஸந்தன் கையாண்டான் என்று சொல்லத் தேவையில்லை.
ஆறாவது ரேஸும் வந்தது. ‘பவானி’யில் பணம் கட்ட வஸந்தன் எழுந்தான்.
அக்கா இதுதான் கடைசி ரேஸ். இருபது ரூபாய் கொடு! எங்களுக்குப் பிடித்த குதிரையில் ஆளுக்கொரு டிக்கட் வாங்கி வருகிறோம்!
என்று மூத்த தமக்கையிடம் மனுப் போட்டாள் யசோதை.
அக்காக்காரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. போங்கள், போங்கள், பிழைப்புக் கெட்ட பெண்களா! இங்கே வேடிக்கை பார்க்க வந்தோமா, சூதாட வந்தோமா?
என்று தங்கைமாரைக் கடிந்து கொள்வதோடு நிற்காமல்,. ஏன் தம்பி, நீங்களே சொல்லுங்கள்!
என்று வஸந்தனுக்குத் தாக்கீதும் விட்டுவிட்டாள்.
டிக்கட் வாங்கப் போகும் இடத்திலாவது, ‘சின்ன அக்கா’வோடு தனித்திருக்க ஒரு நிமிஷம் - அல்லது நிமிஷத்தில் ஒரு பகுதி கிடைக்கப் போகிறது என்று யசோதையின் யோசனையை மனத்திற்குள் ஆவலோடு வரவேற்ற வஸந்தன், இப்போது ஏமாற்றத்தோடு மென்று விழுங்கியபடி, ஆமாமா. நீங்கள் சொல்லுவது சரிதான். சூதாட்டத்திற்கும் சிறு வயதினருக்கும் சரிப்படாது,
என்றான்.
யசோதை அவன்மீது சிறுத்தை போல் பாய்ந்தாள். ஊருக்கு உபதேசம் வேறு செய்யத் தெரியுமா உங்களுக்கு? ‘பவானி’ மீது பணம் கட்டப் போவதாகச் சற்று முன்புதானே சொன்னீர்கள் நீங்கள் மட்டும் சிறு வயதினர் இல்லாமல் பல் விழுந்த பாட்டனோ?
நான் ஆடப்போவது என் சினேகிதன் ஒருவன் சார்பில், எனக்காக அல்ல.
பொய்!
என்றாள் யசோதை.
இல்லை, நிஜம்.
என்றான் வஸந்தன்.
வாயை மூடு, யசோதை! நீங்கள் போய்விட்டு வாருங்கள் தம்பி,
என்றாள் பெரிய அக்கா. யசோதை வஸந்தனை முறைத்துப் பார்த்தாள். அவன் குறுக்கிட்டிராவிட்டால் எப்படியும் அக்காவைக் காக்காய் பிடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம் என்பது அவள் எண்ணம்.
வஸந்தன் கீழே இறங்கிச் சென்று டிக்கட்டுகள் வாங்கி வந்தான்.
எந்தக் குதிரையில் எவ்வளவு கட்டியிருக்கிறீர்கள்?
என்று வினவினாள் பெரிய அக்கா.
மூன்றாம் நம்பரில் இருநூறு ரூபாய்,
என்றான் அவன்.
அடேயப்பா! இருநூறு ரூபாயா?
என்று மூக்கில் விரல் வைத்தாள் அவள்.
யசோதை பல்லைக் கடித்தாள். ஹும்... 3-ஆம் நம்பர் எங்கே ஜெயிக்கப் போகிறது? கல்யாண ஊர்வலமாக்கும் என்று நினைத்து அது ஆடி அசைந்து கொண்டு எல்லாவற்றுக்கும் கடைசியில் வராவிட்டால் என்னைக் கேளுங்கள்
இந்த முறை வஸந்தனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது, உங்கள் ஆசீர்வாதத்துக்கு மிக்க நன்றி
என்று சொல்ல வாயெடுத்தான். அதற்குள், 3-ஆம் நெம்பர்தான் நிச்சயம் ஜெயிக்கப் போகிறது! பார்த்துக் கொண்டேயிரு,
என்றது வெல்வெட்டுக் குரல். ‘அவள்’ அவன் சார்பில் பேசினாள்!
ரேஸ் ஆரம்பித்தது.
ஒலிபரப்பி விமரிசனம் செய்தது.
ஜனங்கள் ஏதேதோ முணுமுணுத்தார்கள்.
வஸந்தனின் நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது.
குதிரைகள் நெருங்கி விட்டன.
அவன் எழுந்து நின்றான். மற்றவர்களைப்போல் சத்தம் போடாவிட்டாலும் அவன் தொண்டை வறண்டது.
‘அவள்’ இருப்புக் கொள்ளாமல் கைக்குட்டையைத் திருகினாள்.
கமான், 4, 5, 6, 7, 8!
என்று கூச்சலிட்டாள் யசோதை. 3 வெற்றி பெறாதவரை அவளுக்கு ஆனந்தம்தான்.
செல்வம் துரதிர்ஷ்டசாலி. ‘பவானி’ ஏழாவதாகவோ, எட்டாவதாகவோ வந்தது. 4-ஆம் நம்பர் ஜெயித்து விட்டது.
அனுதாபப்படுபவள் போல் வாயைக் குவித்துக் கொண்டு, ஐயோ பாவம்! முகம் அப்படியே செத்துப்போய் விட்டதே! கொஞ்சம் விசிறட்டுமா?
என்று கேலி செய்தாள் யசோதை, தன் ஆத்திரம் தீர.
200 ரூபாய் இப்படி அநியாயமாய்ப் போய்விட்டதோ!
என்று அங்கலாய்த்தாள் பெரிய அக்கா.
எல்லா ரேஸ்களும் முடிந்து விட்டதால் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. பெரிய அக்காவின் அங்கலாய்ப்பைக் கேட்ட ஒருவர் மரியாதையாக, எத்தனாவது நம்பரில் கட்டினீர்கள் அம்மா?
என்று விசாரித்தார்.
இருபது பத்து ரூபாய் நோட்டை அந்தப் பாழும் 3-ஆம் நம்பர் ஒரே முட்டாக வாரிக் கொண்டு போய்விட்டது ஐயா!
அந்த மனிதர் புருவங்களை உயர்த்தினார். அடேடே! நீங்கள் கிண்டிக்குப் புதிது போல் இருக்கிறது! எழுந்திருங்கள், எழுந்திருங்கள்! 3-ஆம் நம்பருக்கும் 4-ஆம் நம்பருக்கும் ஒருவரேதான் சொந்தக்காரர். இரண்டும் இந்த ரேஸில் ‘பிராக்கட்’டாக ஓடின. ஆகவே இரண்டில் எது ஜெயித்தாலும் பணம் உண்டு.
சிலையாய் நின்றிருந்த வஸந்தன், மின்சார அதிர்ச்சி பெற்றவன் போல் துள்ளினான். அவன் கண்கள் ‘அவள்’ நயனங்களை நாடின.
அடுத்த கணம் பேமென்ட்ஸ் கௌன்ட்டரை நோக்கி ஓடினான் வஸந்தன்.
எண்ணாயிரம் ரூபாய் சொச்சத்துக்குச் செக் வாங்கிக் கொண்டு அவன் திரும்பியபோது, பெரிய அக்காவின் கண்களில் அவன் ஒரு பெரிய மனிதனாக வளர்ந்து விட்டான். அவனுக்காக ஒரு பிரம்மாண்டமான ‘காடில்லாக்’ கார் வெளியே காத்திருப்பதை அவள் கண்டதுமே, ஒரு குட்டிக் காரில் தன்னைத் துருத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் உடைய அவளுக்கு அவன் மேலுள்ள மதிப்பு மேலும் உயர்ந்தது.
இதுவும் ஒரு ஜெயமா? ஆண்மையில்லாத ஜெயம்!
என்று உதட்டைப் பிதுக்கிய போதிலும், தன் சந்தோஷத்தை யசோதையால் வஸந்தனிடமிருந்து மறைக்க முடியவில்லை. உங்கள் சினேகிதருக்கு என்னுடைய கங்கிராசுலேஷன்ஸைத் தெரிவியுங்கள்
என்றாள் அவள், கண்ணைச் சிமிட்டியபடி. ஒரு சினேகிதன் சார்பில் ஆடுவதாக அவன் சொன்னதைக் கலப்பற்ற பொய்யாகவே அவள் கருதினாள்.
டிக்கட்டுகளுக்குப் பணம் வாங்கச் சென்ற போது பைனாகுலர்ஸை பெஞ்சு மேலேயே மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். யாசோதையின் சின்ன அக்கா அதை எடுத்து வைத்திருந்தாள். யசோதை அதை வஸந்தனிடம் திருப்பிக் கொடுத்தபடி, போய் வருகிறோம்,. மிஸ்டர் செல்வம்,
என்றாள்.
வஸந்தன் சிரித்தான். அது இரவல் பைனாகுலர்ஸ். அதன் மேல் எழுதியிருப்பது என் பெயரல்ல. என்னை வஸந்தன் என்று அழைப்பார்கள்,
என்றான். தங்கள் பெயர்
என் பெயர் யசோதை. பெரிய அக்கா பெயர் அகிலாண்டம். சின்ன அக்கா பெயர் மிஸஸ் கிருஷ்ணன்.
யசோதை அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
வஸந்தன் முகம் வெளுத்தது, மிஸஸ் கிருஷ்ணனா!
நாங்கள் வரட்டுமா, தம்பி?
என்றாள் அகிலாண்டம்.
மிஸஸ் கிருஷ்ணன் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
கார் நகர்ந்தது. தலையை வெளியே நீட்டிய யசோதை, மிஸஸ் கிருஷ்ணன் - அதாவது, ராதை!
என்று சிரித்தாள்.
சிறிது நேரம் கழித்து, செல்வத்தின் மாளிகைக்குள் வஸந்தனின் கார் திரும்புவது அகிலாண்டத்தின் கண்களில் பட்டது. அவள் மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.
ராதைக்கு நடராஜ் எப்படியோ, அந்த மாதிரி யசோதைக்கு வஸந்தன் நல்ல ஜோடிதான்.
2
வராந்தாவில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த சமையற்காரி மீனாட்சி, காரைக் கண்டதும் எழுந்து நின்றாள்.
ஏண்டி, வாசலில் உட்கார்ந்து கொண்டுதான் காய்கறி நறுக்குவதா?
என்றாள் அகிலாண்டம், காரிலிருந்து இறங்கியபடி.
வீட்டிலே ஒருத்தரும் இல்லையே, யாராவது வந்தா பதில் சொல்லணுமே என்கிறதுக்காக...
என்று அவள் முடிப்பதற்குள், ஏன், ஐயா எங்கே?
என்று குறுக்கிட்டாள் அவள் எஜமானி.
வெளியே போயிருக்காங்க.
என்ன! ‘கிண்டியிலிருந்து நாங்கள் திரும்புகிற வரைக்கும் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று படித்துப் படித்துச் சொன்னபோது, சரி சரி என்று பெருமாள் மாடு மாதிரித் தலையை ஆட்டிவிட்டு, எங்கே தொலைந்து போனார்? இப்போது தான் போனாரா, வெகு நேரம் ஆகிவிட்டதா?
சமையற்காரி ஒரு கணம் யோசித்தாள். நீங்க அந்தண்டை போனீங்களா இல்லையா, அப்போ...
அவர் இந்தண்டை போய் விட்டாராக்கும்? வரட்டும், சொல்கிறேன்.
அவளது வைரங்களைப் போல் கண்களும் மின்னின - கோபத்தால்,
ராதையும் அவள் தங்கையும் குடுகுடுவென்று படிகளில் ஏறினர். அவர்கள் அறை மாடியில் இருந்தது.
யசோதை, கிண்டிக்குப் புறப்படுகிற அவசரத்தில், நூல் புடவையைக் களைந்து கட்டில்மீது சுருட்டிப் போட்டுவிட்டு, ஜார்ஜெட் சேலையை அணிந்து கொண்டு ஓடிவிட்டாள். அந்தக் கசங்கிய புடவையை மறுபடியும் கட்டிக் கொள்ள வேண்டுமே என்பதை நனைக்க அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
அதற்குள் ராதை உடை மாற்றிக் கொண்டு, தன் புடவை, ரவிக்கயை அழகாக மடித்து ஸ்டாண்டில் போட்டு, நகைகளைக் கழற்றி அதன் பெட்டியில் வைத்துவிட்டு, டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிமுன் நின்று தன் கேசத்தை ஒழுங்கு செய்து கொண்டாள். யசோதையும் உடைமாற்றிக் கொண்டதும், இருவரும் கீழே இறங்கி வந்தனர். அகிலாண்டம் தன் கணவரின் குணத்தைப் பற்றிய விமரிசனத்தை iஇன்னும் முடிக்கவில்லை.
யசோதை தன் அக்காளின் கணவருக்காகப் பரிந்து பேசினாள். எத்தனை நேரத்துக்குத்தான் அவர் கொட்டு கொட்டென்று தனியே வீட்டில் உட்கார்ந்திருக்க முடியும், அக்கா? நீதான் அவர் நம்மோடு ரேஸ் கோர்ஸுக்கு வர வேண்டாம் என்று தடுத்து விட்டாய்.
வீட்டைப் பார்த்துக் கொள்ள யாராவது இருக்க வேண்டுமல்லவா? எல்லோரும் கூண்டோடு கிளம்பி விட்டால் என்ன ஆவது?
என்ன ஆகும்? நீயே பாரேன். அவரும் இல்லை, நாமும் இல்லை. வீட்டை யார் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்?
அதிசயமாக இருக்கிறதே நீ சொல்வது! வீட்டைத் தூக்கிக் கொண்டு போகா விட்டாலும், அதிலிருக்கும் சாமான்களைத் தூக்கிக்கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவதாம்? இந்த மீனாட்சிதான் இருக்கிறாள். ஒருவரும் இல்லாத சமயம் பார்த்து இரண்டு ஜரிகைப் புடவையைத் திருடிக் கொண்டு போய்விட்டாள் என்று வைத்துக்கொள். இவ்வளவு பெரிய பட்டணத்தில் இவளை எங்கே என்று தேடிப் பிடிப்பது?
மீனாட்சி இடுப்பில் கைவைத்தபடி தன் எஜமானியின் முன்னால் வந்து நின்றாள். இந்தா பாருங்கம்மா! பிடிக்கலைன்னா சம்பளத்தைக் கையில் கொடுத்து வெளியே போகச் சொல்லிடுங்க. திரும்பிக் கூடப் பார்க்காமல் போயிடுறேன். ஏன் அனாவசியமாத் திருட்டுப் பட்டம் கட்டுறீங்க? உங்க வீட்டிலே இதுவரைக்கும் எத்தனை ஜரிகைப் புடவை திருடி இருக்கேன்? விரல்விட்டு எண்ணுங்க, பார்ப்போம்!
சபாஷ் மீனாட்சி! எவ்வளவு ஆவேசமான பிரசங்கம்!
என்று கரகோஷம் செய்தாள் யசோதை.
ஒரு பேச்சுக்குச் சொன்னேன், மீனாட்சி. நீ போய் வேலையைப் பார்,
என்று சமையற்காரியைச் சமாதானம் செய்யத்தான் நினைத்தாள் அகிலாண்டம். ஆனால் யசோதையின் ஆர்ப்பாட்டம் அவள் ஆத்திரத்தைக் கிளறி விட்டுவிட்டது. மீனாட்சியின் பேச்சு ஒரு சவால் மாதிரித் தொனித்தது. ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா? போனால் போகிறது என்று விட்டு வைத்தால் கொழுப்பு ஏறிவிட்டதோ? நீ செய்திருக்கிற திருட்டை எல்லாம் எண்ணுவதற்கு என் பத்து விரல் போதாதடி, மீனாட்சி, பத்து விரல் போதாது. உன்னுடைய விரலையும் சேர்த்து எண்ண வேண்டி இருக்கும்! புதன்கிழமை காலையில், ஏழு ரூபாய்க்கு வெண்ணெய் வாங்கிவிட்டு, ஏழேகால் ரூபாய் என்று கணக்குச் சொன்னாயே, அது முதலாவது திருட்டு! போன வாரம், உன் பெரியம்மா வீட்டுக்குப் போகும் போது, அரைப் படி அரிசியை மடியில் மறைத்து வைத்துக் கொண்டு போனாயே, அது இரண்டாவது திருட்டு! அப்புறம், அன்றைக்கொரு நாள் ராதைக்காக என்னிடமிருந்து வாங்கிப் போன ஹேர் ஆயிலில் கொஞ்சம் ஊற்றி யாரும் பார்க்காத போது தலையில் தடவிக் கொண்டாயே? நான்கூட என்ன வாசனை என்று கேட்டதற்குத் திருட்டு முழி முழித்துக் கொண்டு, ‘வாசனையா? என்ன வாசனை? எனக்கொன்றும் தெரியவில்லையே!’ என்று சாதித்தாயே? அது மூன்றாவது திருட்டு...
இப்படியாக அகிலாண்டம் எட்டாவது திருட்டுக்கு வரு முன்பு, ஹோவென்று அழுதபடி, அநியாயமா என் மேலே பழி போடுறிங்களே அம்மா, இது உங்களுக்கு அடுக்குமா! நானும் எத்தனையோ வீட்டிலே வேலை செஞ்சிருக்கேன். இந்த மாதிரி அக்கிரமம் பார்த்ததில்லை!
என்று பொரிந்து தள்ளி விட்டு, அதே மூச்சில் தன் உத்தியோகத்தையும் ராஜிநாமா செய்துவிட்டாள் சமையற்காரி.
சமையற்காரியின் கணக்கைத் தீர்ப்பதற்காக அகிலாண்டம் உள்ளே போன போது, என்ன யசோதா, இது? உன் கலாட்டாவால் பாவம், மீனாட்சி வேலையை விட்டுப் போகும்படி நேர்ந்து விட்டதே!
என்றாள் ராதை, தங்கையிடம்.
யசோதையின் முகம் மலர்ந்தது. எல்லாம் நல்லதுக்குத்தான், ராதை. இந்த மீனாட்சியின் சமையல் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிப்பதில்லை. நாமெல்லாம் அவளிடம் மிகவும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவா, எதிலும் ஒரு பிடி உப்பை ‘எக்ஸ்டிரா’வாகவே கொட்டி வைப்பாள். எப்போதடா அவள் சீட்டுக் கிழிய வழி செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. உபயோகித்துக் கொண்டேன்! ஏன், உனக்குக்கூட அவள் சமையல் பிடிப்பதில்லையே?
எனக்கும் பிடிக்காதுதான். இருந்தாலும், நம் வீட்டில் இவ்வளவு நாள் வேலை பார்த்தாள் அல்லவா? அவளை இப்படித் திடீரென்று போகச் சொல்வது சரியா?
மூலையிலிருந்த கிராமபோனுக்குச் சாவி கொடுத்துக் கொண்டே யசோதை, அவள் கிடக்கிறாள், வா. எந்த ரெகார்ட் வைக்கட்டும்?
என்று யோசனை கேட்டாள்.
அப்போது வாசல் பக்கம் ஒரு தலை எட்டிப் பார்த்து விட்டுச் சரேலென்று மறைந்ததை ராதை கவனித்தாள்.
யாரது?
பதிலில்லை.
என்ன ராதே?
என்றாள் யசோதை. இசைத்தட்டை எடுத்தவாறு.
யாரோ எட்டிப் பார்த்த மாதிரி இருந்தது... யாரது?
விடுவிடென்று கதவண்டை சென்ற யசோதை, ராதையின் பக்கம் திரும்பி, மகிழ்ச்சி பொங்க, இங்கு வா,
என்று சமிக்ஞை செய்தாள்.
ராதைக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்போடு வாசலுக்கு வந்தவள், மாமா!
என்றாள்.
உஸ்ஸ்!
என்று எச்சரித்தார் மாமா.
அகிலாண்டத்தின் கணவர் அவர்களுக்கு மாமா முறை வேண்டும். வேங்கடாசலம் என்பது அவர் இயற்பெயர். ராதையும் யசோதையும் அவரை ‘வெங்கு மாமா’ என்று அழைப்பது வழக்கம்.
அவருக்கு 40 வயது இருக்கும். வாய் இருக்குமிடம் தெரியாதபடி பெரிய மீசை வளர்த்திருந்தார். ஆயினும், அக்கா எங்கே? உள்ளே இருக்கிறாளா? என்னைக் காணாததும் சத்தம் கித்தம் போட்டாளா?
என்று மைத்துனிமாரை விசாரித்தபோது அவர் முகத்தில் மிரட்சியே காணப்பட்டது.
அரை மணி நேரமாக இங்கு பூகம்பமே நடந்து கொண்டிருக்கிறது, வெங்கு மாமா இப்போதுதான் மெதுவாகத் தலையை நீட்டி ‘அக்கா சத்தம் கித்தம் போட்டாளா?’ என்கிறார். சரியான டோஸ் கிடைக்கப் போகிறது உங்களுக்கு, வாருங்கள்!
என்று பயமுறுத்தினாள் யசோதை.
எங்கே போயிருந்தீர்கள் மாமா? ஏன் இவ்வளவு நேரம்?
என்று வினவினாள் ராதை.
ராதே! ராதே
என்று அகிலாண்டம் கூப்பிடுவது கேட்டது.
நான் ஐந்து நிமிஷம் கழித்து வருகிறேன். நீங்கள் உள்ளுக்குப் போங்கள்!
என்று அவசரப்படுத்தினார் வெங்கு மாமா.
வாய்க்குள்ளேயே ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு, ராதைக்கு வழி காட்டிய யசோதை, ஏன் அக்கா கூப்பிட்டாய்?
என்றாள் கொஞ்சலாக.
அகிலாண்டம், நீ ஒன்றும் என்னுடன் பேசத் தேவையில்லை!
என்று சோபாவில் உட்கார்ந்தாள். சோபா முனகிற்று.
பார் அக்கா, உன் கோபத்தைத் தாளமாட்டாமல் சோபா ஸ்பிரிங்கூடக் ‘கிறீச்’ என்கிறது!
அகிலாண்டம், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். ராதே, மாமாவை என்ன இன்னும் காணோம்? மணி ஏழு ஆகப்போகிறதே!
என்றாள்.
ராதை வாயைத் திறப்பதற்குள், வர்ணம் உதிர்ந்த ஒரு தகர ‘டிரங்க்’கோடும், அழுக்கேறிய ஜமுக்காளம், தலையணையோடும் பிரசன்னமானாள் மாஜி சமையற்காரி.
பெட்டியைத் தடாலென்று கீழே போட்டு அதைத் திறந்தபடி, அம்மா, நல்லாப் பார்த்துக்குங்க. இந்தப் புடவை, நான் வேலைக்கு வந்தப்போ கட்டியிருந்தது. இது ரெண்டையும் என் சம்பளப் பணத்திலே வாங்கினேன். இந்தக் கண்ணாடி, சீப்பு, மற்ற சில்லறைச் சாமான் எல்லாம் நான் காசு போட்டு வாங்கினது. சரியாப் பார்த்துக்குங்க!
மீனாட்சி பட்டென்று பெட்டியை மூடினாள். பிறகு படுக்கையைச் சுட்டிக்காட்டி, இந்த ஜமுக்காளமும் தலகாணியும் நீங்க கொடுத்தது. இங்கேயே போட்டுட்டேன்.
படுக்கையிலிருந்து கிளம்பிய ‘மணம்’ அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இல்லை. யசோதை முகத்தைச் சுளித்தாள்.
மீனாட்சி ராதையின் பக்கம் திரும்பினாள். அம்மா, நீ ஒருத்திதான் இந்த வீட்டிலே என்னை மனுஷியா மதிச்சு நடத்தினே. மகராசியா இருக்கணும்!
பிற்கு, ஒரு தடவை முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு அகிலாண்டத்தை முறைத்துப் பார்த்துவிட்டு, தன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
குறுக்கே, மூக்கைக் கைக்குட்டையால் அடைத்துக் கொண்டு நின்ற யசோதை, அதையும் எடுத்துக் கொண்டு போய்விடு!
என்று கீழே கிடந்த படுக்கையைக் காட்டினாள்.
உங்க படுக்கை உங்களோடேயே இருக்கட்டும்! எனக்கு வேண்டாம்
என்று விர்ரென்று போய்விட்டாள் மீனாட்சி.
திமிர் பிடித்த கழுதை!
என்று திட்டிவிட்டுச் சமையலறைக்குச் சென்ற அகிலாண்டம், அடுத்த நிமிஷமே திரும்பி வந்து, கவலை தோய்ந்த குரலில், சமையலறையில் போட்டது போட்டபடி கிடக்கிறது. ராத்திரிச் சாப்பாட்டை நான்தான் தயார் பண்ண வேண்டும். ஒத்தாசைக்கு வாருங்கள் இரண்டு பேரும்,
என்று அழைத்தாள்.
ஐயையோ!
என்றாள் யசோதை, கைக்குட்டையை மூக்கிலிருந்து எடுத்தபடி. அக்கா சமையலா செத்தோம் இன்றைக்கு!
சோபாவில் உட்கார்ந்த அகிலாண்டம் சீறினாள். அப்படியானால் வயிற்றைக் காயப் போட்டுக் கொள்! யார் வேண்டாம் என்கிறார்கள்?
அக்கா, நான் சொல்வதைக் கேளுங்கள். டிபன் காரியரைக் கொடுத்தனுப்பி ஹோட்டலிலிருந்து சாப்பாடு எடுத்துவரச் சொல்வோம்.
வெட்கமாயில்லை உனக்கு? மூன்று பெண்கள் வீட்டில் இருந்து கொண்டு ஹோட்டலிலிருந்து சாப்பாடு எடுத்துவரச் சொல்வதாவது!
யசோதை தலையைச் சோகத்தோடு ஆட்டினாள். மானம் பெரிதா, பிராணன் பெரிதா?
வெங்கு மாமா வீட்டிற்குள் நுழைவதற்கு இதைவிடப் பொருத்தமில்லாத சமயம் வேறு இருந்திருக்க முடியாது. ஆயினும் வினாடி தப்பாமல் அப்போதுதான் அவர் திடுமென நுழைந்து, நூறு! நூற்றொன்று!
என்று கவனமாக எண்ணியபடி, அண்டத்தையே அதிரச் செய்யும் மூன்று ராட்சஸத் தும்மல்களை வரிசையாகப் போட்டார்.
சகோதரிகள் மூவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
மாமா இந்தச் சமயத்தில்தானா உள்ளே நுழைய வேண்டும்? ராதை பதைத்தாள். மாமாவின் கஷ்டத்தை அவள் எப்படி அறிவாள்? பாவம், வாசலுக்கு வெளியே கொட்டிய பனி காரணமாக, அவர் நாசியின் அந்தரங்கத்தில் ஒரு தும்மல் கிச்சுக்கிச்சு மூட்ட ஆரம்பித்து விட்டது. மூக்கைச் சுளித்தத் தேய்த்துப் பார்த்ததில் பலன் காணவில்லை. வெளியிலேயே தும்மி, தாம் ஒளிந்திருந்த குட்டைத் தாமே உடைத்து விடுவதைக் காட்டிலும், வீட்டிற்குள் நுழைந்து பகிரங்கமாகத் தும்முவது மேல் என்று பட்டது அவருக்கு.
கணவரின் தும்மல் புயல் அடங்கியதும் அகிலாண்டம் அவரை ஏறிட்டு நோக்கினாள்.
அதற்குள் அவர், அவளைக் கவனியாதவர்போல், என்ன ராதே, யசோதோ குதிரைப் பந்தயம் எப்படி இருந்தது? எத்தனை ஆயிரம் சம்பாதித்துக் கொண்டு வந்தீர்கள்?
என்று