Naan America Parkka Vendama?
()
About this ebook
உலகம் சுழல்வதும், சுற்றுவதும் ஒரு பயணம். இதில் மனித வாழ்க்கையும் ஒரு பயணமே. ஊர்விட்டு ஊர் செல்லும் போது இதை நினைவில் கொண்டால் வாழ்க்கையே சுவாரசியமாகிறது. அப்படித்தான் என் அமெரிக்கப் பயணத்தில் உணர்ந்தேன். இந்த உணர்வின் பகிர்வே எழுத்துப் பதிவு.
Read more from Isaikavi Ramanan
Pillai Pulampal Rating: 0 out of 5 stars0 ratingsManonmani Malai Rating: 0 out of 5 stars0 ratingsAgathiyar Andhathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan America Parkka Vendama?
Related ebooks
Aindhu Naadugalil Arubathu Naal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsNappaasai Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastman Nira Kolai Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsUla Vara Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Neram Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nila Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Sottu Ratham Rating: 5 out of 5 stars5/5Ethuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/5Uyrin Oli! and Puthithaaga Oru Boogambam! Rating: 0 out of 5 stars0 ratingsKodungal Ketkapadum Rating: 5 out of 5 stars5/5Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsOdi Vaa Iniyaa Rating: 5 out of 5 stars5/5Avan Aval Theevu Rating: 5 out of 5 stars5/5Innamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Ratha Azhaippithazh Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Cinemavai Pattri Pesalam! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsVendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Naan America Parkka Vendama?
0 ratings0 reviews
Book preview
Naan America Parkka Vendama? - Isaikavi Ramanan
https://www.pustaka.co.in
நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா?
(பயணக் கட்டுரை)
Naan America Parkka Vendama?
Author:
இசைக்கவி ரமணன்
Isaikavi Ramanan
For more books
https://www.pustaka.co.in/home/author/isaikavi-ramanan
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
ஊர் திரும்பினோம்...
My sincere thanks to…
Priya, Anand, Shivsundar and Adhya, my son, daughter, grandson and grand daughter
Ravi and Ashish who dropped us and received us at Chennai airport
Bhupathi Raja, who provided his vehicle to take our baggage to the airport
Jothi, Ramakrishna Y V Karthikeya and Hamsika, Abhita, Selva, G S Anand of New Jersey
Kavitha, Balaji, Sathya, Nita, Devi, Nagappan, Anandhi, Pushpaja of New Jersey
Bala, Madhavan, Velmurugan, Bameela, Muthukumar, Govardhan, Anand Ramanujam, Ilango Chinnaswamy of Boston
Geeta Sankaran, Shanthi Akka, Lalitha, Ravi, Asha, Anand, Prabha, Logan, Ganapathy, Raghu of Canada
Marabin Maindan Muthaiah, Coimbatore, for coming forward to carry this as a series of articles in his monthly Namadhu Nambikkai
ஒரு பயணிப் பார்வை...
வணக்கம்.
உலகம் என்பது நில்லாமல் சுற்றிக்கொண்டே கதிரவனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது என்பதைச் சரியாக உணர்ந்தால், நாம் எப்போதும் ஒரு பயணத்தில்தான் இருக்கிறோம் என்பது புரியும். அந்தப் புரிதல் ஒரு சுவாரசியமான விளிம்புக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும்.
இது போக, நம் புவி வாழ்க்கையில் நம்மில் பலர் ஊர் ஊராய்ப் பயணம் செய்வதுண்டு. அது ஊழியத்தின் பொருட்டோ, உல்லாசப் பயணமாகவோ, யாத்திரையாகவோ, சிலருக்குப் புலம்பெயர வேண்டிய நிர்பந்தத்தாலோ இருக்கலாம்.
இதற்கும் மேலாக, சஞ்சலமே இயல்பான மனம் ஓயாமல் பயணம் செய்துகொண்டே இருக்கிறது.
ஆக, எல்லா விதங்களிலும் வாழ்க்கை ஒரு பயணமாக, அல்லது, பயணத்தில் பயணமாகத்தான் இருக்கிறது.
எனக்கு?
நானென்ன விதிவிலக்கா? எனக்கும் இப்படித்தான்.
ஒருபக்கம், ஊழியத்தின் காரணமாக ஊர் ஊராய்ச் சுற்றியவன்தான். இன்னொரு பக்கம், ஓர் யாத்ரியாக 35 முறை இமயப் பயணம் உட்பட, பலப்பல ஊர்களுக்குச் சுற்றி வருபவன்தான். வேறொரு பக்கம், ஒரு கவிஞன் என்ற முறையில் தீவிரத்தன்மை அதிகமுள்ள என் மனது எப்போதும் சஞ்சலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அப்பால், எனது ஆன்மிக நாட்டம், படைப்பு என்பதே எதையோ நோக்கிய ஓர் இடைவிடாத பயணம் என்பதைப் புரிய வைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, இத்தனை கூத்துகள் நடுவிலும் என்னைக் குந்தவைத்துப் பார்க்கவும் வைத்திருக்கிறது.
எதிலும் நான் மயங்கிப் போவதோ, மலைத்துப் போவதோ இல்லை. எதையும் குறைவாகப் பார்க்க வாய்ப்பே இல்லை. பார்க்கும் எதையும், எதையோ நோக்கிய ஓர் இடைவிடாத பயணம்
என்ற நினைப்பே சுருதியாகப் பார்க்கும் பேறு எனக்கு இருக்கிறது. இதனால், எதிலும் ஈடுபாடு இல்லாமல் போனாலும், எதையும் பரபரப்பற்ற சுவாரசியத்துடன் பார்க்க முடிகிறது. இயக்கமே படைப்பின் ரீதி என்ற உண்மை என்னைக் கவிதையாகக் கவர்வதால், உற்சாகமாக உழைத்துக் கொண்டே இருக்க முடிகிறது.
இந்த மனநிலையில்தான் மகன் ஆனந்தின் அழைப்பை ஏற்று என் மனைவியுடன் அமெரிக்கா, கனடா சென்றுவந்தேன். அங்கிருந்தபடி, முகநூலில், புகைப்படங்களுடன் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவை பெற்ற வரவேற்பு எனக்குக் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.
‘இதை ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டும்’ என்று பலரும் சொன்னார்கள்.
இதோ! பிடியுங்கள்!
இதுதான் முதன்முதலாக Digital முறையில் வெளியாகும் என் நூல். இது, Pustaka Digital Media Pvt Ltd மூலமாக வெளிவருவதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால், இதன் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்கள்
என் இனிய நண்பர், எழுத்தாளர் திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்களின் மூலமாக அறிமுகமானவர். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. தேவைப்படுவோருக்கு. அச்சுப் பிரதியும் கிடைக்கும்!
இதை ஒரு தொடக்கமாக வைத்து, என்னுடைய பல நூல்கள் டிஜிடல் தளத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளது!
இதைப் படித்துப் பாருங்கள். நீங்கள் அடுத்த முறை பயணம் செய்யும்போது, உங்கள் பார்வை இன்னும் கூராகலாம். நீங்களும் ஒரு நூலெழுதிப் பார்க்கலாம்.
அதுவே வாழ்க்கை என்னும் பயணத்தை மேலும் சுவாரசியமாக்கும்!
அன்புடன்,
இசைக்கவி ரமணன்
1
அன்று ‘சோ’ சொன்னதுதான். அது போலவே நான் இப்போது அமெரிக்கா செல்வதற்கு வேறு காரணம் ஏதுமில்லை. நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. எங்கள் பாரதி யார்?
நாடகம் அமெரிக்காவில் உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை. மகனும், மருமகளும் அழைத்தார்கள். சும்மா அழைக்கவில்லை. பயணச் சீட்டை அனுப்பி வைத்து, மேற்கொண்டு விவாதத்திற்கும், எதுக்குடா இப்ப செலவு என்றெல்லாம் பிகு பண்ணிக் கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் பண்ணிவிட்டார்கள். ஒரு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர்களே என்னையும், மனைவியையும் கையோடு அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள், சரி, வந்துவிட்டார்கள்.
அம்மாவுக்கு 94. தன்னால் குதிரைச் சவாரி செய்ய முடியவில்லை, நினைத்தபடி பத்ரிநாத், மற்றும் கோயம்பேடு மார்க்கெட் செல்ல முடியவில்லை போன்ற மிக இளமையான ஆதங்கங்கள் நீங்கலாக நன்றாகத்தான் இருக்கிறாள். மாலா அக்கா எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சினையில்லை.
எங்களுக்கு இரட்டைப் பிள்ளைகள். ஆனந்த், விக்ரம். அண்மையில் பாஸ்டனுக்குக் குடும்பத்துடன் சென்றுவிட்டவன் ஆனந்த். பக்கத்துக் கடையில் போய் உப்பு வாங்கவேண்டுமென்றாலும் மனைவி இல்லாமல் போக மாட்டான். சரியான ப்ரியாக் கோண்டு. ப்ரியா, மகளுக்கு நிகரான கொடை. அவர்களுக்கு சிவசுந்தர், ஆத்யாம்பிகா என்று இரண்டு குழந்தைகள். (இன்னொரு மகன் விக்ரம், மதுரையில் தன் குடும்பத்துடன் இருக்கிறான்)
இப்போதுதான் அமெரிக்கா சென்று குடியேறினார்கள் என்றாலும், பாஸ்டன் தம்பதியரை வழியனுப்ப அவர்களுடைய நண்பர்கள் பட்டாளம் வந்திருந்தது, வண்டிகளை எடுத்துக்கொண்டு. நண்பர் பூபதி ராஜாவும் தன்னுடைய வண்டியை அனுப்பி இருந்தது பெரிய வசதியாய்ப் போயிற்று. ஒரு லாரி நிறையப் பெட்டிகளைப் பார்த்து கவுண்டரில் இருந்த இளைஞன், ‘நீங்கள் உங்கள் கைப்பெட்டிகளையும் இவற்றுடன் சேர்த்து விடுங்கள். இல்லையென்றால் துபாயில் ரொம்பக் குடைவார்கள். அங்கிருந்து நீங்கள் உங்கள் அமெரிக்கா விமானத்தைப் பிடிக்க 90 நிமிடங்களே இருக்கும். துபாய் விமான நிலையம் மிகவும் விசாலமானது, நினைவிருக்கட்டும்,’ என்று அறிவுறுத்தியபோது கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. அவன் சொன்னது மிகவும் சரிதான் என்பது பின்னரே புரிந்தது. பிறகு, குடியேற்றம், பாதுகாப்புச் சோதனை எல்லாம் இனிதே நடந்து முடிந்தது – சின்னச் சின்னச் சிக்கல்கள் சுவாரசியமாகவே இருந்தன.
19.08.23
‘விடிந்தும் விடியாத’ ஒரு பொழுதில் துபாய் செல்லும் எமிரேட்ஸ் 543க்காகக் காத்திருந்தோம். 2005ல், கனடா செல்லும்போது, இதே விமானத்தில்தான் சென்றோம் என்பது நினைவுக்கு வந்தது. நடுவில் கழுவியிருப்பார்கள். முட்டை போடாத கேக் ஒன்றும், மசாலா டீயும் எனக்காகக் கொண்டுவந்தாள் ப்ரியா. சிவசுந்தர் அம்மா கொண்டு வந்ததையெல்லாம் சிரத்தையாகச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டான். ஆத்யாவுக்குத் தூங்கினால் ஏதாவது வம்புதும்பைக் கோட்டை விட்டுவிடுவோமோ என்ற கவலையில் கொட்டக்கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.
அறவே உடம்பு சரியில்லாத மனைவி அனு இந்தப் பயணத்தை எப்படித்தான் சமாளிக்கப் போகிறாளோ என்ற கவலையை, முந்தையநாள் வரை தொடர்ந்த என் நிகழ்ச்சிகளின் களைப்பு கூட்டியது. அதிலும் முந்தைய நாள்தான் அத்திம்பேரின் சதாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. ஆனந்த் எங்களுக்காக பிடரித் தலாணி வாங்கிக்கொண்டு வந்தான்.
ஏறி உட்கார்ந்தோம். விமானம் நகரவில்லை. எனக்கோ துபாயில் மறு விமானத்தைப் பிடிக்க வேண்டுமே என்ற பதைப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. யாரோ முறைதவறி ஏறிவிட்டார்கள் என்று மூன்று நான்கு பேர்களை இறக்கிவிட்டார்கள். அதுதான் தாமதம். சரிபார்க்காமல் அவர்களை எப்படி ஏற்றினார்கள் என்பது புரியவில்லை.
ஒருகாலத்தில் ஓயாமல் சினிமா பார்த்தவன்தான், இப்போதெல்லாம் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில்லை. தொலைக்காட்சியில் எப்போதாவது கொஞ்சம் கொஞ்சம் பார்ப்பதுண்டு.
பொன்னியின் செல்வன்
முதல் பாகம் பார்த்தேன். பிரம்மாண்டமான தயாரிப்புதான். அவ்வளவு பெரிய கதையை வரிக்கு வரியெல்லாம் எடுக்க முடியாது. கல்கியின் கதையைப் படமாக எடுக்கும் உரிமையை அவர் வாங்கினார், இவர் ஆசைப்பட்டார் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கோதாவில் துணிந்து இறங்கிய மணிரத்னத்தைப் பாராட்டத்தான் வேண்டும். மற்றபடி விமர்சனங்கள் அவரவர் மனநிலை வெளிப்பாடுகள்தானே? தொடர்ந்து, மணிகண்டனின் கடைசி விவசாயி
படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனதில் பொ.செ. மறந்தே போய்விட்டது. அந்தத் ‘தெய்வத்திரு’ பெரியவரை மறக்கவே முடியாது.
ஒவ்வொரு நாளும் சோற்றை கையில் எடுக்கும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்ட எனது கவிதையொன்று நினவுக்கு வரும்:
அந்தக் கருப்பழகி ஆள்காட்டி விரலால்
பொந்துவைத்து மண்ணில் பொருத்திச் சிரிக்கும்வரை
எந்தக் குடிசையிலோ விலையற்ற விதைநெல்லாய்
சந்தடி ஏதுமின்றிக் காத்திருந்தது
நட்டவளின் கட்டழகை நன்கு ரசிக்கவேண்டி
மொட்டவிழ்ந்த உயிரையொரு மோதிரக் கருப்புக்கை
நாற்றங் காலிலதை நடும்முன்னே, தொடும்சுகத்தால்
ஏற்றம் பெற்றது இறுமாந்து வளர்ந்தது
பம்புசெட்டு; வானப் பரிசுமழை, மண்ணையே
நம்பிவாழும் ஏருழவன் நம்பிக்கைக் கண்ணொளியில்
மலைக்காற்று தலைகோதி மதர்ப்பாக வளர்ந்து
நிலைதாங்க முடியாமல் நெல்சாய்ந்த வேளையிலே
அறுவடையானது; ஆட்கள் வந்தனர்
உறுத்தும் உமிநீங்கி உள்ளிருக்கும் வெள்ளிஉயிர்
கோணியில் புகுந்துபலர் கூடும் சந்தையிலே
போணியாகிப் பரபரப்பாய்ப் பட்டண யாத்திரைக்குப்
புறப்பட்டுப் பலநூறு கரம்மாறித் தரம்மாறி
சிறப்புமிக்க மனைவியின் சிவந்த கைகளினால்
குளிப்பாட்டப்பட்டுக் குக்கரில் தவம்புரிந்து
வெளிப்பட்டு வாசமுடன் ஒளிமயமாய் ஆவிபறக்க
உள்ளங்கையில் சிறு வெள்ளிக் குன்றாய்
அள்ளிவைத்த சோற்றை அன்புடன் பார்க்கின்றேன்
எத்தனைபேர் உழைப்பில்நான் நித்தநித்தம் வாழ்கின்றேன்
அத்தனையில் நானறிந்த தெத்தனைபேர்! என்சொல்ல?
விவசாயியை மதிக்காத நாடும், வீடும் விளங்காது.
தாமதமாகக் கிளம்பினாலும், துபாய்க்குச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டோம். முக்கால் இருட்டில் விமானச் சாப்பாடு. இருட்டு பெரிய வசதிதான். பதறாமல் எங்களை அழைத்துக்கொண்டு போனான் ஆனந்த். ஏதோ ஏஜெண்ட் போல எல்லார் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டான்!!! எங்களுக்குத் துளியும் கவலையோ, பாரமோ கொடுக்கக் கூடாதென்றுதான். அவனும், ப்ரியாவும் எங்களை எவ்வளவோ கவனித்துக் கொண்டாலும், துபாயில் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் விவேகானந்தர் தெருவுக்குப் போய், பார்த்திபனை ஒரு நடை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று எவ்வளவோ சொன்னாலும் கேட்டால்தானே! இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் என்னத்தைச் சொல்ல?
மூன்றரை மணிநேரம் துபாய்ப் பயணம். இப்போது அடுத்த எமிரேட்சில் ஏறிவிட்டோம் – 12.15 மணி நேரம் ஆகுமென்று அறிவித்தார்கள். ப்ரியா சொன்னதன் பேரில் ‘கார்க்கி’ என்னும் படத்தைப் பார்த்தேன். அதுவும் நன்றாக இருந்தது. அப்புறம், ‘சிசு’ என்ற ஆங்கிலப் படம். மண்டை காய்ந்து போனது. அதற்குப் பிறகு பார்த்த படங்கள் ஞாபகத்தில் இருக்க வாய்ப்பே இல்லை. பாதித் தூக்கம் பெரும் தொல்லை.
பேரனும், பேத்தியும் மாற்றி மாற்றி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அது சரி, எதற்காக எல்லாவற்றையும் விவரித்துக் கெடுக்க வேண்டும்? அந்த இருட்டில், அந்தப் பிஞ்சு உள்ளங்களின் தூய்மையில் நெகிழ்ந்து கண்பனித்ததே பயணத்தின் உச்சம். ஆனால், திரும்பி வரும்போது இவர்கள் பக்கத்தில் இருக்க மாட்டார்களே என்பது திடீரென்று நினைவுக்கு வந்து தொண்டையைப் பிடித்தது.
சிவசுந்தரின் சிபாரிசில், ‘ஹேரா பேரி’ என்று என்னவோ ஒரு பேர் வரும் இந்திப் படம் ஒன்றும் பார்த்தேன். அக்ஷய்குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், தபு, அஸ்ரானி. முழுநீள நகைச்சுவைப் படம், தொட்டுக்கொள்ள செண்டிமெண்ட். அக்ஷய் குமார் பாழாய்ப் போகக்கூடாதென்று கொஞ்சம் சண்டைக் காட்சிகள். பரேஷ் ராவலின் நடிப்பு ஒரு பாடமாய் இருந்தது.
மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, சப்பாத்தி, தக்காளி வெங்காய சட்னி, இதையெல்லாம் எதற்கு எடுத்து வருகிறாள் என்று மனைவியைக் கேட்கலாம் என்று நினைப்போடு நிறுத்திவிட்டேன். வரவர உயிர்வாழும் எண்ணம் அதிகரித்து வருகிறது. ஆனால், எல்லோரும் அதைத் தின்றோம். நல்லெண்ணையும், மிளகாய்ப் பொடியும் தடவிய இட்லி இருக்கிறதே, ஆத்தாடி எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! தடவாத இட்லி, அந்த இருட்டிலும் பசியிலும் நிலவாகவே தெரிந்தது. சந்திராயன் இதைப் பார்த்துக் குழம்பிவிடக் கூடாதே என்று வேண்டிக்கொண்டேன். பெயரன் ரொட்டி வகையறாவை ஒரு கை பார்த்தான். சமைத்து அனுப்பிய பிரேமா வாழ்க!
19 ஆம் தேதி அதிகாலை கிளம்பி, கிட்டத்தட்ட 16 மணிநேரம் பயணம் செய்து, அதே பத்தொன்பதாம் தேதி மதியம் 2.20க்கு பாஸ்டன் வந்து சேர்ந்த மாயம்தான் புரியவில்லை. வந்துவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது. காலம் என்பது நாமறியா மாயம். நேரம் என்பது நாமே கண்ணைக் கட்டிக்கொண்ட மாயம். முன்னதை அறிவதற்கில்லை. பின்னதிலிருந்து தப்புவதற்குமில்லை.
குடியேற்றத்தில் பேய்க்கூட்டம். அதில் படிப்புக்காக பாஸ்டன் வந்த மாணவர்கள் பலரும் இருந்தனர். ஆனால், கவுண்டரில் ஐந்து நிமிடங்களே பிடித்தன. நாங்கள் அதை முடித்துவிட்டு வருவதற்குள், நாலாம் நம்பர் பெல்டில், பெட்டிகள் வந்துகொண்டிருந்தன. எங்களை ஒரு வேலையும் செய்யவிடாமல் குழந்தைகள் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு டாக்சி பிடித்து, ஆனந்த், நான், ஆத்யா இருந்த டாக்சி முதலில் வீட்டுக்கு வந்துவிட்டது. வழிநெடுக மரங்கள். வளைவான சாலை. இறங்கினால், தாக்கும் தறுவாயில் இருந்த குளிர். கொள்ளை கொள்ளையாய் அமைதி.
அனுவும், நானும் ஜாகேஷ்வரில் இருப்பது போலவே உணர்ந்தோம்.
அழகான வீடு. எங்களுக்குக் கீழ்த்தளத்தில் கச்சிதமான அறை. எங்களோடுதான் ப்ரியாவும் வந்தாள். ஆனாலும், சுறுசுறுப்பாக, உருளைக் கிழங்கைச் சின்னச் சின்னதாக ஆனந்த நறுக்க, அதைப் பொன்முறுவலாக வறுத்து, சாதமும் வைத்தபோது, ப்ரியாவின் பெரியப்பா மகள் வித்யாவும், கணவர் வருணும் வந்து சேர்ந்தார்கள். சும்மா இல்லை, அதி அற்புதமான பாலக் கிச்சடியுடன்! ஆஹா அப்படியே ஜாகேஷ்வர் ஞாபகம் வந்தது. கொதிக்கக் கொதிக்கக் குளித்துவிட்டு வந்தவுடன் ஒரு பிடி பிடிக்கத்தான் செய்தோம் எல்லோரும்.
தன்னைத் தானே சுற்றிக் கொண்டும்
கதிரவனைத் தினம் வலம் வந்தும்
எப்போதும் ஒரு பயணத்தில்தான்
இந்த உலகம் சுழல்கிறது
ஒருகணம் அது சலித்துக் கொண்டால்
மறுவரி இந்தக் கவிதையில் ஏது!
உலகின் பயணம்; உலகில் உழலும்
உடல்களின் பயணம்; உடல்களை இயக்கும்
உயிர்களின் பயணம்; உயிரை உணரும்
உள்ளமோ கொஞ்சமும் ஓயாத பயணம்
உறக்கத்தில்தான் உறையும் சலனம்...
20.08.23
முந்தைய இரவு எப்போது படுத்தோம் என்ற நினைவில்லை. எழுந்த போதுதான் தெரிந்தது, கொஞ்சம் கூட பிரக்ஞை வராமல் தூங்கியிருக்கிறோம் என்று. உறக்கத்தில், உறங்குவது தெரிவதில்லை. ஆனால், எழுந்தால், நன்றாக உறங்கினோம் என்கிறோம். எப்படி? விடுமுறைக்காக வந்திருக்கிறோம். ‘நான் யார்?’ விசாரணையைச் சற்றே தள்ளிவைப்போம்!
பக்கத்தில் இருந்த மார்க்கெட்டுக்குப் போய், தேவையான பொருள்களையெல்லாம் வாங்கி வந்தோம்.
இன்று அனுவின் 62 ஆவது பிறந்த நாள். காசு சம்பாதிக்கத் தெரியாத கவிஞனைக் கட்டிக்கொண்ட அப்பிராணி. கவிதைக்கும், பாட்டுக்கும் மயங்கும் பேதை. இன்றைக்கும் அப்படித்தான். அவள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு வாழ்த்துக் கவிதையைத் தயாராய் அடித்து வைத்திருந்தேன்:
அன்பு மனைவி வாழ்க! அவள்
ஆயிரம் பிறை காண்க!
நன்றி ஓன்றுதான் உனக்கு
நாளும் சொல்லு கின்றேன்! உன்
நலமிசைத்து நின்றேன்!
மாலையில், ரங்கா வந்திருந்தார். சென்னை மயிலை கபாலி சந்நிதித் தெருவில் இருக்கும் கிரி டிரேடர்ஸ் (மற்றும் சுரங் ஒலிப்பதிவுக் கூடம்) அதிபரான திரு டி எஸ் ரங்கநாதன்தான் எங்கள் ரங்கா. பன்முக வித்தகர். பிள்ளையை இங்குள்ள கல்லூரியில் சேர்க்க வந்திருந்தவர், எங்கள் அழைப்பை அன்புடன் ஏற்று, அனுவை வாழ்த்த வந்தார். ரங்கா இருக்கும் இடம் கலகலப்பும், பாடல்களுமாய்க் களை கட்டும்.