Kanna Varuvaya
()
About this ebook
கண்ணா வருவாயா என்ற இந்த நூல் ஒரு பெரிய காதல் கடிதம். கடமையைச் செய் என்று கண்ணன் சொல்வதும் காதலின் வெளிப்பாடுதான். உன் இயல்புக்கு ஏற்ற தொழிலில் இருப்பாய் என்பதும் காதலால் வந்த கரிசனம்தான்.
இந்த நூலை எழுதிய போது நான் இதுவரை எழுதிய எழுத்துக்கள் எல்லாமே என் மனதில் நிழலாடின. சில சமயம் என் கருத்தை விளக்குவதற்காக என் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறேன். சில உவமைகளையும் உருவகங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். ஒரு அத்தியாயத்தில் கையாண்ட உவமையை மற்றொரு அத்தியாயத்தில் வார்த்தை பிசகாமல் கையாண்டிருக்கிறேன். மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் அப்படிச் செய்திருக்கிறேன். சமயங்களில் நான் என்னை ஒரு பாமரனாகவே உணர்ந்திருக்கிறேன்.
இந்த நூல் ஒரு காதல் கடிதம் என்று பார்த்தோம். சரி காதல் கடிதத்தை எப்படிப் படிப்பீர்கள்? அகராதிகளையும் நிகண்டுகளையும் அருகில் வைத்துக் கொண்டா? ஒரு சட்ட வல்லுனரின் பார்வையிலா? இல்லை ஒரு இலக்கிய விமர்சகரின் கண்ணோட்டத்துடனா? இல்லை.
காதல் வயப்பட்ட இதயத்துடன் இதைப் படியுங்கள். பிடித்த பகுதிகளைப் பென்சிலால் குறித்து வைக்காதீர்கள். கண்ணீரால் குறித்து வையுங்கள்.
Read more from Varalotti Rengasamy
Nee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaakkai Siraginile... Rating: 0 out of 5 stars0 ratingsAcham Thavir Ucham Thodu Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsThaayena Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsPonnai Virumbum Boomiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsVaarai En Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsSolladi Sivasakthi Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithen Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanna Varuvaya
Related ebooks
Solladi Sivasakthi Rating: 5 out of 5 stars5/5Jayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsKai Vilangu Rating: 4 out of 5 stars4/5Kadhalaagi Kanindhu... Rating: 0 out of 5 stars0 ratingsSwami Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Indhu Madham! Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsPanuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsRanga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsPasitha Sinthanai Rating: 4 out of 5 stars4/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Enathu South Africa Payana Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Puthra Rating: 0 out of 5 stars0 ratingsKaalavellam Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsEnbilathanai Veyil Kayum Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Mudivedu Rating: 5 out of 5 stars5/5Parisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyaga Vaazhungal Rating: 1 out of 5 stars1/5
Reviews for Kanna Varuvaya
0 ratings0 reviews
Book preview
Kanna Varuvaya - Varalotti Rengasamy
https://www.pustaka.co.in
கண்ணா வருவாயா
Kanna Varuvaya
Author:
வரலொட்டி ரெங்கசாமி
Varalotti Rengasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1 கண்ணனின் காதலே கீதையாய் வந்தது
2 கண்ணனின் முத்தம்
3 சோகநிலை கூட ஒரு யோகநிலைதான்
4 கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே – இதுவா கீதையின் தத்துவம்?
5 கண்ணனின் காதல் கடிதம் – கீதை
6 எல்லாம் ஒன்றுதான்
7 மானிடம் போற்றுதும்! மானிடம் போற்றுதும்!
8 கண்ணனின் கரிசனம்
9 ஆன்மீகத் தரகர்களும் அழகான அடுக்குமொழிகளும்
10 எல்லா தெய்வமும் கண்ணனே; எந்தச் செயலும் வழிபாடே
11 பாவியாக இருந்தாலும் பரவாயில்லை
12 சமநிலையே யோகநிலை
13 சத்யாவின் சகோதரர்கள்
14 ஆன்மா! பிரம்மம்! தலை சுற்றுகிறதே!
15 கண்ணன் செய்து கொடுத்த சத்தியம் - 1
16 கண்ணன் செய்து கொடுத்த சத்தியம் 2
17 கண்ணா வருவாயா?
18 குடை நிழல் தந்தருள்வாய்!
முன்னுரை
நிதி சால சுகமா
என்று உருகி உருகிப் பாடிக் கொண்டிருக்கிறார் பிரபல பாடகர் ஜேசுதாஸ். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் சங்கீத விமர்சகர் அந்தப் பாடகர் எப்படி கல்யாணி ராகத்தைக் கையாளுகிறார், அவர் குரலில் எந்த அளவிற்கு பாவம் இருக்கிறது, பாடகரின் உச்சரிப்பு எப்படி இருக்கிறது என்று அளந்து கொண்டிருக்கிறார். நாளைப் பத்திரிகையில் அந்தக் கச்சேரியைப் பற்றி விமர்சனம் எழுத வேண்டுமே!
அதே அரங்கில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் குப்புசாமியோ கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். குப்புசாமியைப் பொறுத்தமட்டில் கல்யாணி என்பது அவருடைய சித்தி பெண்ணின் பெயர். அந்தப் பெயரில் ஒரு ராகம் இருப்பதோ அந்த ராகத்தில் தியாகைய்யர் தெலுங்கில் ஒரு கீர்த்தனை பாடியிருப்பதோ அவருக்கு சத்தியமாகத் தெரியாது. தெலுங்கு தெரியாத அவருக்கு அந்தப் பாடலின் பொருளும் தெரியாது. என்றாலும் ஏன் கண்ணீர் வருகிறது? ஜேசுதாஸ் அவர்களின் குரலில் இருக்கும் உருக்கம். கேட்டவர் மனதை நெகிழ வைக்கும் கல்யாணி ராகத்தின் மகாத்மியம். மொழிதெரியாதவர்களைக் கூடக் கண்ணீர் சிந்தவைக்கும் பாடலை இயற்றியவரின் பக்தி இவைதான் காரணங்கள்.
பகவத் கீதையைப் படிப்பது கூட அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான். அது நமக்குத் தெரியாத மொழியில் இருக்கிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் பல சிக்கலான தத்துவங்கள் நமக்குப் புரிவதில்லை. அவை எல்லாம் மெத்தப்படித்த மேதாவிகளுக்கு. கல்யாணி ராகத்தை ஜேசுதாஸ் எப்படி லாகவமாகக் கையாண்டார் என்பது சங்கீத விமர்சகர்கள் கவலைப்படவேண்டிய விஷயம். நமக்கு எதற்குத் தத்துவமும் விமர்சனமும்? நமக்கு நம் நெகிழ்ச்சியும் கண்ணீரும் போதும்.
ஒன்றுமறியாத பாமரனாக பகவத் கீதையை அணுகினால் போதும். அந்த சிலிர்ப்பு அடங்க ஒரு ஆயுட்காலம் ஆகும்.
ஸ்ரீ பகவான் உவாச
என்று சின்மயானந்தர் ஆசிரமத்தில் குழந்தைகள் கோரஸாகச் சொல்லும் போதே உடல் பொருள் ஆவி எல்லாம் ஒரு சிலிர்ப்பு பரவும். அந்தத் தொடருக்கு
இறைவன் சொல்கிறான்" என்பதுதான் பொருள்
இதில் சிலிர்க்க என்னையா இருக்கிறது?
என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அம்பானி உங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பாரா என்ன? அவருக்கு நூறுபடிகள் கீழே இருக்கும் ஒரு குட்டி அதிகாரிதான் அந்தப் பணியைச் செய்வார். அதுவும் வேண்டா வெறுப்பாகத்தான் செய்வார்
சரி நீங்கள் கணினிப் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்று வைத்துக் கொள்வோம். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் பற்றியும் சன் மைக்ரோ சிஸ்டம் அறிமுகப்படுத்திய ஜாவா மென்பொருள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்கள் துறையில் பொறியியல் பட்டம் பெற முடியும். உங்களுக்கு இந்த மென்பொருட்களின் சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது என்றால் பில் கேட்ஸ் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பாரா என்ன? இல்லை சன் மைக்ரோ சிஸ்டத்தின் தலைமை அதிகாரி தன் வேலையை எல்லாம் விட்டுவிட்டுப் பொன் புதுப்பட்டியில் இருக்கும் உங்களுக்கு ஜாவாவைக் கற்றுக் கொடுப்பாரா என்ன?
நிச்சயமாக இல்லை.
உங்கள் பொறியியல் படிப்பின் இறுதித் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. முதல் தேர்வு இன்னும் சில நிமிடங்களில் தொடங்கப் போகிறது. உங்களுக்கோ வெறுப்பாக இருக்கிறது. இந்தப் பாழாய்ப்போன விண்டோஸ் ஜாவா மென்பொருட்களின் செயல்பாடு உங்களுக்கு இன்னும் சரியாகப் புரிபடவில்லை. உங்களுக்கு அழுகை வருகிறது. இதே மனநிலையில் தேர்வு எழுதினால் நிச்சயம் தோற்றுவிடுவீர்கள். தேர்வு எழுதித் தோல்வியைத் தழுவுவதைவிட அதை எழுதாமலேயே போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டீர்கள். வெறுப்பில் உங்கள் கையில் இருக்க்கும் பேனாவைத் தூக்கி எறிகிறீர்கள்.
இந்தச் சூழ்நிலையில் பில் கேட்ஸ் உங்கள் பேனாவை எடுத்து உங்களிடம் கொடுத்து நீ பரீட்சையை எழுதப்பா. நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் சரி, என் நிறுவனத்தில் உனக்கு வேலை நிச்சயம். பின் ஏன் பயப்படுகிறாய்? ம்.. எடு பேனாவை.. எழுது உன் தேர்வை
என்று கீதோபதேசம் செய்வாரா என்ன? சத்தியமாக மாட்டார்.
ஆனால் கண்ணன் அப்படிச் செய்தானே!
போர் செய்யமாட்டேன்
என்று காண்டீவத்தைக் கடாசிய பார்த்தனை மீண்டும் போர் செய்ய வைத்தானே அந்த மாயக் கண்ணன்!
நம்மையும் இந்த உலகையும் படைத்துவிட்டு நம் இன்பத்திற்காகக் கடல், வானம், சூரியன், நிலவு, விண்மீன்கள் அனைத்தையும் படைத்த அந்தப் பரம்பொருள் நம் அருகில் வந்தமர்ந்து எப்படி வாழ்வது என்று ஏனய்யா சொல்லித்தர வேண்டும்? ஆனால் அந்த அன்புத் தெய்வம் அப்படிச் செய்ததே! வேறு யார் அப்படிச் செய்வார்கள்?
நீங்கள் கீதையைப் படிக்க வேண்டாம். கீதை காட்டும் பாதையில் நடக்க வேண்டாம். அதைச் சொன்னவனின் அன்பை நினைத்துப் பார்த்தால் போதும். சர்வ வியாபியாக இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அந்தப் பரம்பொருள் மதிமயங்கிய ஒரு போர் வீரனுக்கு 702 பாடல்களை ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் போர்முனையில்? அந்தப் பாடல்களால் அர்ச்சுனனின் மதிமயக்கம் மட்டும் இல்லாமல் அவனுக்குப் பின்னால் வந்த ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளின் மதிமயக்கத்தையும் ஏன் போக்க வேண்டும்?
கண்ணா வருவாயா என்ற இந்த 496-பக்க நூல் ஒரு பெரிய காதல் கடிதம். கடமையைச் செய் என்று கண்ணன் சொல்வதும் காதலின் வெளிப்பாடுதான். உன் இயல்புக்கு ஏற்ற தொழிலில் இருப்பாய் என்பதும் காதலால் வந்த கரிசனம்தான்.
இந்த நூலை எழுதிய போது நான் இதுவரை எழுதிய எழுத்துக்கள் எல்லாமே என் மனதில் நிழலாடின. சில சமயம் என் கருத்தை விளக்குவதற்காக என் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறேன். சில உவமைகளையும் உருவகங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். ஒரு அத்தியாயத்தில் கையாண்ட உவமையை மற்றொரு அத்தியாயத்தில் வார்த்தை பிசகாமல் கையாண்டிருக்கிறேன். மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் அப்படிச் செய்திருக்கிறேன். பல சமயங்களில் நான் என்னை ஒரு பாமரனாகவே உணர்ந்திருக்கிறேன். இது குறித்த என்னுடைய கருத்தை வல்லமை தாராயோ என்ற நூலின் 302வது பக்கம் காணவும்
என்று எழுத மனம் வரவில்லை. அந்த நூலில் உள்ளதை மீண்டும் எழுதியிருக்கிறேன். கண்ணனின் அன்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற பதைபதைப்பில்தான் அப்படிச் செய்திருக்கிறேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு கட்டத்தில் ஆங்கில நூல்களாகவே எழுதிக் கொண்டிருந்த என்னை வருடம் ஒரு தமிழ்ப் புத்தகமாவது நீ எழுத வேண்டும். நம் அம்மா உன் தமிழைப் படிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறாள்
என்று தாயன்புடன் என்னைத் திருத்திப் பணிகொண்ட என் சகோதரி திருமதி சாந்தி வரதன்
ஆன்மிக உணர்வையே அன்னமாகக் கொடுத்து வளர்த்த என் தாய் திருமதி சுலோச்சனா பிச்சை
சாப்பாட்டு வேளைகளில் மட்டும், சாப்பிடமட்டுமே தலைகாட்டும் என்னைப் பொறுத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொறுமையாகப் பிழைதிருத்திய என் மனைவி இந்து
இவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இந்த நூல் ஒரு காதல் கடிதம் என்று பார்த்தோம். சரி காதல் கடிதத்தை எப்படிப் படிப்பீர்கள்? அகராதிகளையும் நிகண்டுகளையும் அருகில் வைத்துக் கொண்டா? ஒரு சட்ட வல்லுனரின் பார்வையிலா? இல்லை ஒரு இலக்கிய விமர்சகரின் கண்ணோட்டத்துடனா? இல்லை.
காதல் வயப்பட்ட இதயத்துடன் இதைப் படியுங்கள். பிடித்த பகுதிகளைப் பென்சிலால் குறித்து வைக்காதீர்கள். கண்ணீரால் குறித்து வையுங்கள்.
நடுவே என் நினைவு வந்தால் varalotti@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.
உண்ணும் சோறு கண்ணன்
பருகும் நீர் கண்ணன்
தின்னும் வெற்றிலை கண்ணன்
எல்லாம் கண்ணன்
வரலொட்டி ரெங்கசாமி
1 கண்ணனின் காதலே கீதையாய் வந்தது
பகவத் கீதையைப் புனித நூலாக்கியதுதான் நாம் செய்த மிகப் பெரிய தவறு. இன்று பல வீடுகளின் பூஜையறைகளில் அந்தப் புனித நூல் இருக்கிறது என்பது உண்மைதான். செய்தித்தாள்கள், விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் வரவேற்பு அறையிலும் படுக்கையறையிலும் சிதறிக் கிடக்கின்றன. ஆனால் நாம் பத்திரிகைகளைப் பக்கம் விடாமல் வாசித்துவிடுகிறோம். பகவத்கீதையைப் பிரித்துக்கூடப் பார்க்காமல் பூஜை செய்கிறோம். அதன்மேல் மலர் தூவுகிறோம். அதற்குத் தீப ஆரத்தி காண்பிக்கிறோம். புனித நூல்களைப் படிக்கக் கூடாது என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டிருக்கிறோம்.. இந்த அறிவீனம் எப்படி நமக்குள் புகுந்து கொண்டது என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது.
இன்னும் ஒரு சாரார் பணி ஓய்வு பெற்ற பின் படிக்கலாம் என்று பகவத் கீதையை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அறுபது வயதில் உடலில் ஆயிரம் வியாதிகளை வைத்துக் கொண்டு மனதில் லட்சம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கீதையைத் திறந்து பார்த்தால் கொட்டாவிதான் வரும்.. அந்த வயதில் பகவத் கீதையை ஒரு தூக்க மாத்திரையாக மட்டுமே பயன்படுத்தலாம்.
கீதை போர்முனையில் சொல்லப்பட்ட அறிவுரை. போர் தொடங்குவதற்கு முன் சொல்லப்பட்ட பாடம். வாழ்க்கையில் பின் வாங்காதே. எதையும் எதிர்கொள்வாய். போராடி வெற்றி கொள்வாய் என்று ஒரு அரசனுக்குச் சொல்லப்பட்ட உபதேசம். அதனை நம் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் படித்துவிட வேண்டும்.
இருபத்தியைந்து வயதில் படிக்க வேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன்? தேர்வுகள் எழுதி முடித்தபின் பாடங்களைப் படிப்பதில் என்ன பிரயோஜனம்? ‘இது தெரிந்திருந்தால் இந்தக் கேள்விக்கு இன்னும் நன்றாக விடை எழுதியிருக்கலாமே’ என்ற பச்சாதாப உணர்வுதான் மிஞ்சும்.. இப்படி ஒரு நூல் இருப்பது தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே என்ற கழிவிரக்க உணர்வும் குற்ற உணர்வும்தான் மிஞ்சும்.
உங்கள் வாழ்க்கைப் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும்போதே இந்த உன்னத நூலைப் பற்றி நீங்கள் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
இன்னும் சிலர் கண்மூடித்தனமாகக் கீதையைப் பயன்படுத்துகின்றனர். பகவத் கீதை ஒரு சர்வ ரோக நிவாரணி என்று சத்தியம் செய்கின்றனர். கொலையாளிகளுக்குக் கீதையை உபதேசித்தால் மனம் திருந்தி வாழ்வர் என்று நினைக்கின்றனர். ஒழுக்கம் கெட்டவர்கள் கீதையை ஒரு முறை கேட்டால் போதும். ஒழுக்கத்துடன் வாழ்வார்கள் என்று துண்டைத் தாண்டிச் சத்தியம் செய்கின்றனர். இதைவிட அபத்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் விபச்சாரத் தொழில் செய்து போலீசில் பிடிபட்ட பெண்களிடம் கீதையை உபதேசிக்க ஆரம்பித்தான். அத்தகைய பெண்கள் இருக்கும் அரசாங்க மீட்பு விடுதிக்குச் சென்று தினமும் கீதையில் இரண்டு மூன்று சுலோகங்களைச் சொல்லி விளக்கம் சொல்லிவிட்டு வருவான். ஒரு தொண்டு நிறுவனம் மூலமாகக் காவல்துறையின் உயரதிகாரிகள் அனுமதி பெற்றுச் சென்றதால் அவனை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்களுக்கு கீதையின் சுலோகங்களில் நாட்டம் இல்லை.
வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்டு தங்கள் உடலையும் உயிரையும் ஒட்ட வைத்துக் கொள்ள உடலையே விற்றுப் பிழைப்பவர்களிடம் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ...
என்று சொன்னால் அவர்களுக்கு ஆத்திரம்தான் வரும். எங்கிருந்து யாரால் எப்போது ஆபத்து வருமோ என்று தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்களிடம் கர்ம யோகத்தைவிட ஞான யோகமே சிறந்தது
என்று திருப்பித் திருப்பிச் சொன்னால்.. .. ..? அவர்களுக்குக் கொலை வெறிதான் வரும். அது ஒரு நாள் வந்தேவிட்டது.
.
நேற்று சொல்லிக் கொடுத்த சுலோகத்தை ஏன் இன்னும் மனப்பாடம் செய்யவில்லை?
என்று ஒரு பெண்ணை உலுக்கி எடுத்திருக்கிறான் அந்த இளைஞன். பொறுக்க முடியாமல் அவள் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
நல்லதுக்குக் காலமில்லை. நடப்பதெல்லாம் வெளிவேஷம்.
என்று தத்துவம் பேசிக்கொண்டு திரிகிறான் அந்த இளைஞன்.
அந்த இளைஞன் பகவத் கீதையையே உபதேசித்தாலும் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறான் என்று நமக்குத் தெரிகிறது. கீதையைக் கேட்கத் தகுதியில்லாதவர்களுக்கு உபதேசித்ததுதான் அவன் செய்த தவறு என்று சொன்னார் ஒரு சமய ஆர்வலர். கீதையைக் கேட்க எந்தத் தகுதியும் தேவையில்லை.. கீதையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒன்றுதான் தகுதி. இச்சையே அதிகாரம் என்று வைணவத்தில் ஒரு மரபு இருக்கிறது. ஒரு நூலைக் கற்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே அதைக் கற்பதற்கான தகுதி என்பதுதான் அதன் பொருள். அந்த ஆசை இருந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் கீதையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். கடை நிலை ஊழியர்கள், உலகத்தின் மிகப் பழமையான தொழில் செய்யும் பெண்கள், கொலைக் குற்றவாளிகள் எல்லோருக்கும் பொதுவான நூல் பகவத் கீதை.
பின் அந்த இளைஞன் செய்த தவறுதான் என்ன? ஆர்வக் கோளாறு.
கீதையைச் சொன்னவன் கண்ணன். அவன் தெய்வம். பரமாத்மா. முற்றும் உணர்ந்த முழுமுதற் கடவுள். கீதையின் ஒரு அத்தியாயத்தில் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டித் தான் கடவுள் என்று நம்மைப் போன்ற பாமரர்களுக்கும் புரிய வைக்கிறான். அந்தத் தெய்வம் ஒரு படி மேலே நின்று கொண்டு நமக்கு உபதேசம் செய்யலாம். ஏன், வானத்திலிருந்து அசரீரியாகக் கூட கீதையை முழங்கலாம். அதற்கான சக்தியும் அவனுக்கு இருக்கிறது. தகுதியும் இருக்கிறது. ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நாம் அப்படிச் செய்யவும் கூடாது. நமக்குக் கீதையை உபதேசிக்கத்
தகுதியில்லை. நாம் கற்றதை அடுத்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை பகிர்ந்து
கொள்ளலாம். அந்தப் பகிர்தல்தான் இந்த நூல்.
இரண்டடி உயரத்தில் நின்றுகொண்டு விரல்களை மடித்து வைத்துக் கொண்டு இது ஆண்டவன் கட்டளை
என்று கீதையை உபதேசம் செய்யக் கூடாது. சொல்லப் போனால் கீதையை நமக்கு உரைத்த கண்ண பரமாத்மாவே அப்படிச் செய்யவில்லை.
தான் கடவுளின் உருவம் என்று ஐயமற அர்ச்சுனனிடம் காட்டிவிட்டான் கண்ணன். இது கடவுளாகிய என்னால் ஆக்கப்பட்ட நூல். எனவே இதன்படி நடக்க வேண்டும். இது என் கட்டளை.
என்று கீதையின் முடிவில் கண்ணன் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது. என்றாலும் அந்த அன்புத் தெய்வம் அப்படிச் சொல்லவில்லை.
பதினெட்டாவது அத்தியாயம்.. 63வது சுலோகம். இன்னும் சில சுலோகங்களில் கீதை முடிந்துவிடப் போகிறது. அப்போது கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்கிறான்:
நான் சொல்வதைச் சொல்லிவிட்டேனப்பா. அதைத் தீர யோசித்துப் பார். பின் உன் மனதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்..
யதா இச்சஸி ததா குரு.
என்று அர்ச்சுனனுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கிறான் கண்ணன். கடவுள் எப்போதுமே நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது இல்லை. நமக்குப் பாவங்கள் புரியவும் சுதந்திரம் இருக்கிறது. தீமையைச் செய்யச் சுதந்திரம் இருக்கும்போதுதான் நாம் செய்யும் நன்மைகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
அன்பே உருவான அந்த ஆண்டவனை இல்லை என்று மறுக்கவும் அவனைத் திட்டவும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது..
ஆண்டவனே இப்படி ஒரு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கும்போது அந்த இளைஞன் வம்படியாகக் கீதையை உபதேசித்தது தவறல்லவா? அதுவும் கேட்பவர்களின் மனநிலை பற்றிக் கவலைப்படாமல் கீதையை அவர்கள் மேல் திணிக்கப் பார்த்தது அவன் செய்த மாபெரும் குற்றமல்லவா? அதற்காக அவன் கன்னத்தில் வாங்கிய அறை மிகக் குறைவான தண்டனை.
அந்த இளைஞனின் நோக்கம் புனிதமானதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் புனிதமான நோக்கங்களினால் எந்தப் பயனும் இல்லை. இரண்டு வண்டிகள் நிறையப் புனிதமான நோக்கங்களைக் கொடுத்து அதற்குப் பதிலாகச் சந்தையில் பத்து கிராம் உப்பு வாங்க முடியுமா?
ஒரு வாலிபன் ஒரு இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் அழகாக இருக்கிறாள். இவனும் ஒரு அழகன். அவள்பால் ஈர்க்கப்படுகிறான் வாலிபன். உடனே அவள் கையைப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டு ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொன்னால் என்ன நடக்கும்? அவள் தன் காலில் இருப்பதைக் கழற்றி அவனை அடிப்பாள். இல்லை போலீசில் புகார் செய்வாள். இல்லைச் சுற்றி இருப்பவர்கள் அவனுக்குத் தர்ம அடி கொடுப்பார்கள்.
அந்த வாலிபன் என்ன செய்திருக்க வேண்டும்? அவள்தான் தனக்கு ஏற்றவள் என்று நினைத்தால் முதலில் அவளைச் சிறிது நேரம் உறுத்தாமல் பார்க்க வேண்டும். அதன் பின் ஒரு சிறிய புன்னகை. பின் விலகிச் சென்றுவிட வேண்டும். மீண்டும் அடுத்த நாள் அதே பேருந்து நிறுத்தத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தால் மீண்டும் ஒரு சிறு பார்வை. ஒரு சிறிய புன்னகை.. இப்படியே சில காலம் தொடர வேண்டும். அந்தப் பெண்ணும் இவனிடம் ஈர்க்கப்பட்டு பதில் புன்னகை புரிவாள்.
புன்னகைப் பரிமாற்றம் சில நாட்கள் தொடர்ந்தபின் என் பெயர் நரேன். நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு.. நீங்கள்..
மனம் இருந்தால் அவள் சொல்வாள். பின் இது போன்ற சிறு உரையாடல்கள். அதன் பின் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து தன்னைப் பற்றிச் சொல்லலாம். இன்னும் சில நாள் கழித்து உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒரு காபி குடிக்கலாமா?
என்று கேட்கலாம்.
.
பின் இன்னும் நெருக்கமாகப் பேசி கடைசியில் காதலைச் சொல்லலாம். காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் முத்தமிட்டால் காதலி அதனை ஆசையுடன் ஏற்றுக் கொள்வாள். பதிலுக்கு முத்தமும் தருவாள்.
அப்படிச் செய்யாமல் முதல் சந்திப்பிலேயே முத்தம் வரை இறங்கிவிட்டால் கற்பழிக்க முயற்சி செய்ததாக அந்த வாலிபன் கைது செய்யப்படுவான். இதுதான் யதார்த்தம்.
யாரிடமாவது கீதையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் முதலில் அவருக்குக் கடவுள் மேல் காதல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது இல்லையென்றால் அதை முதலில் அவர் மனதில் விதைக்க வேண்டும். விதைத்ததை விளைவிக்க வேண்டும்.
கடவுளின் அன்பைப் பற்றிய சில கதைகளைச் சொல்ல வேண்டும்.. கடவுள் நம்மைக் கண்மூடித்தனமாகக் காதலிக்கிறார் என்பதை எப்படியாவது அவருக்குப் புரிய வைத்துவிட வேண்டும். அவர் மனதிலும் காதல் தோன்றி அது பெரிய ஆலமரமாக வளர்ந்தபின், கடவுள் முத்தம் கொடுத்தால் அதை ஏற்க அவர் தயாராக இருப்பார் என்று நன்றாகத் தெரிந்தபிறகுதான் கீதை போன்ற நூல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கடவுளாகிய கண்ணன் நம்மை நெருங்கி வந்து நமக்கு முத்தம் கொடுப்பதுதான் பகவத் கீதை என்னும் இந்த அரிய பொக்கிஷம். என்னைப் பொறுத்தமட்டில் பகவத் கீதைக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் கண்ணனின் முத்தம்
என்றுதான் வைப்பேன்.
உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். பகவத் கீதையைப் பரப்புகிறேன் பேர்வழி என்று கடவுளைக் காதலிக்காதவர்களிடம் கண்ணனின் முத்தத்தைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடவுளைத் தூற்றுவதைவிட மிகப் பெரிய பாவம் அது. நம் மேல் அன்பைப் பொழிந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகம் அது.
அதை நீ யாரையா சொல்வதற்கு என்று கேட்கிறீர்களா? கண்ணனே இதை அழகாகச் சொல்கிறான். கீதை முடியும் நேரத்தில் அர்ஜுனனிடம் ‘என் மேல் காதல் இல்லாதவர்களுக்கு இதைச் சொல்லாதே’ என்கிறான்.. பாரதியார் இதை அழகாகத் தமிழில் தந்துள்ளார்.
"ஆனால் ஒன்று அர்ஜுனா இதனைத்
தத்துவம் அறியாச் சழக்கரிடத்தும்
பக்தியில்லாத பாவிகளிடத்தும்
விரும்பிக் கேட்கும் விருப்பமில்லாத
வீணரிடத்தும் விரித்து வைக்காதே
என்னை வெறுக்கும் எவனிடமும் இதைச்
சொல்லாதே அட தோள்வலி உடையாய்" (பகவத் கீதை 18-67)
சரி, இந்த பகவத் கீதை சொல்வது என்ன? ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ என்றுதான் பலரும் சொல்வார்கள். இது கீதையின் மொழிபெயர்ப்பை மேலெழுந்தவாரியாகப் படித்த மேலைநாட்டவர் கிளிப்பிள்ளை போல் சொல்லும் வாக்கியம். இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கிப் பார்த்தால்தான் கீதையின் சாரம் தெரியும். அது அன்பு. தன்னலம் கருதாத தூய்மையான அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடுதான் உண்மையான வழிபாடு.
பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வதற்கு மனதில் தூய அன்பு வேண்டும். இந்த உதாரணத்தைப் பாருங்கள். அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மருத்துவர் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்று இரவு விபத்தில் அடிபட்ட ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறார். அவரைப் பார்த்ததும் மருத்துவருக்கு அவர் யார் என்று தெரிந்து விடுகிறது. அந்த மனிதர் மருத்துவரின் ஜன்ம விரோதி.
ஒரு காலத்தில் மருத்துவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பல் துன்பங்களைக் கொடுத்தவர். இப்போது மருத்துவரின் கடமை அவருக்குச் சிகிச்சை அளிப்பது. எப்படியாவது அவரைக் காப்பாற்ற முயற்சிப்பது. இந்த சூழ்நிலையில் மருத்துவரால் கடமையைச் செய்ய முடியுமா?
கொஞ்சம் நியாய உணர்வு உள்ளவராக இருந்தால் என்ன நினைப்பார்? ‘என்னால் இவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. முன் விரோதம் காரணமாக சிகிச்சையில் குறைபாடுகள் வரலாம். எனவே நான் இதில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த வேறு ஒரு மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுக்கச் சொல்கிறேன்.’
அப்படிச் செய்வது ஒரு விதத்தில் சரி என்றாலும் அது இரண்டாம் பட்சம்தான்.
என்னிடம் சிகிச்சைக்கு வந்திருப்பது என் பரம வைரி. என்றாலும் இப்போது அவன் ஒரு நோயாளி. நான் ஒரு மருத்துவன். இந்த உயிரைக் காப்பாற்றும் புனிதமான கடமையைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
என்று சொல்லிவிட்டு தீவிரமாகச் சிகிச்சையைத் தொடங்குவதுதான் அந்த மருத்துவரின் கடமை. அந்த ஒரு சூழ்நிலையில் கடமையைச் செய்ய திறமை மட்டும் போதாது. மனம் கொள்ளாத அன்பு வேண்டும். ‘கடமையைச் செய்கிறேன் பேர்வழி என்று கடனெழவே என்று வேலை பார்த்து நோயாளியின் உயிருக்கு ஆபத்து விளைவித்தால் அந்த மருத்துவரும் ஒரு கொலையாளிதான்.
வந்திருப்பது தன் ஜன்ம விரோதி என்று தெரிந்தாலும் தன் உயிரைக் கொடுத்தாவது அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் ஒரு மருத்துவரின் கடமை. இப்படிச் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டபிறகுதான் அவர்கள் தங்கள் தொழிலையே தொடங்குகிறார்கள். அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற அவர்கள் மனதில் அளவில்லாத அன்பு வேண்டும். அந்த அன்பைச் சொல்வதுதான் கண்ணனின் முத்தம்.. இல்லை இல்லை பகவத் கீதை.
பாரதியிடம் கீதையின் சாரம் என்னவென்று கேட்டார்கள். தனக்கே உரித்தான எளிய கவிநடையில் முழங்கியது அந்தத் தமிழ்ச் சிங்கம்.
"பக்தி செய்து பிழை
பலன் கருதாது உழை"
இந்த இரண்டு வரிகளில் பொதிந்துள்ள பொருளை விளக்க நூறு நூல்கள் எழுதலாம். அந்த நூறில் ஒன்றுதான் இந்த நூல்.
மனிதர்களிடம் காட்டுவது அன்பு. இறைவனிடம் காட்டுவது பக்தி. என்று சிலர் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லி அடிக்கிறார்கள். கனிந்த அன்புதான் பக்தி. மனிதர்களிடம் நாம் கொள்ளும் அன்பு அவ்வளவாகக் கனியாது. அந்த மனிதர் ஏதாவது தவறு செய்வதைப் பார்த்தால் நம் அன்பு மட்டுப்படுகிறது. எல்லாவிதத்திலும் பரிபூரணமாக இருக்கும் இறைவனிடம் கனிந்த அன்பு அதாவது பக்தி கொள்வது எளிது..
பூரணமான இறைவனிடம் அன்பு கொள்வதோடு பக்தி நின்றுவிடக் கூடாது. குறைபாடுள்ள மனிதர்களிடமும் இறைவனிடம் இருக்கும் முழுமையை பூரணத்துவத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் பக்தியின் உச்சகட்டம். இறைவன் மேல் அன்பு வைப்பதைவிட இறைவனின் அடியார்கள் மேல் அன்பு வைப்பதே சிலாக்கியம் என்று சைவமும், வைணவமும் திருப்பித் திருப்பிச் சொல்வது இந்தக் கோட்பாட்டைத்தான்.
நமக்கு நெருங்கிய நண்பர் ஒருவரிடம் அன்பு காட்டுகிறோம். ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக அவர் நம் முதுகில் கத்தியால் குத்திவிடுகிறார். அதன்பின்னும் நம் அன்பு குறையவில்லை என்றால் அதுதான் பக்தி. அத்தகைய அன்பு இருந்தால் நமக்கு எந்தக் கவலையும் இருக்காது. அதுதான் மோட்சம். அதுதான் சொர்க்கம். அந்த நிலையில் நமக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. கனிந்த மனம் வீழ்வதில்லை
என்று கவியரசர் சொன்னது நினைவிருக்கிறது அல்லவா?
பாரதியாரின் கூற்றில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. பலன் கருதாத உழைப்பை முதல் வாக்கியத்தில் சொல்லவில்லை. ஏனென்றால் பலன் கருதாமல் உழைப்பதற்கு பக்தி வேண்டும். கனிந்த அன்பு வேண்டும். அதனால்தான் பக்தி செய்து பிழை என்று முதலில் சொல்லிவிட்டுப் பிறகுதான் பலன் கருதாத உழைப்பைப் பற்றிச் சொல்கிறார்.
அறிவின் துணையில்லாத அன்பினால் யாருக்கும் நன்மையில்லை. ‘ஐயோ அவன் வலியால் துடிக்கிறானே’ என்று நாமும் சேர்ந்து துடிப்பதால் வலியில் இருப்பவனுக்கு எந்தப் பயனும் இல்லை. அவன் மேல் நமக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்த வலுவான, தூய்மையான அறிவு வேண்டும். அந்த அறிவையும் இறைவனே நமக்குக் கீதையின் மூலம் கொடுக்கிறான்.
நம் இயல்பைப் பொறுத்துத்தான் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். நம் இயல்புக்கு ஏற்றவாறு வாழ்ந்து செத்தாலும் பரவாயில்லை. மற்றவர்களுக்காக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்வது அதைவிடக் கொடுமையானது என்கிறான். உதாரணமாக ரத்தத்தைப் பார்த்தால் பயந்து போய் காததூரம் ஓடும் என்னைப் போன்ற ஆசாமிகள் ராணுவத்திலும் காவல்துறையிலும் இருந்தால் கடமையைச் சரியாகச் செய்ய முடியாது.
பற்றுதல் இல்லாமல் எதையும் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறான். இந்த உடல் அழியுமே தவிர ஆன்மா அழியாது என்று சொல்கிறான். மூன்று வகையான குணங்களை விளக்குகிறான். கடமையின் வழியைப் பற்றிச் சொல்கிறான். ஞானத்தின் பாதையையும் கோடிட்டுக் காண்பிக்கிறான். தியானம் பக்தி என்பவை பற்றியும் அறிவுரை சொல்கிறான்.
ஒரு கட்டத்தில் நாம் மலைத்துப் போய் நிற்கிறோம். கண்ணா நீ சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனால் நான் அதையெல்லாம் செய்ய முடியும் என்று நீ நினைக்கிறாயா என்ன?
என்று கண்களில் நீர்வழியக் கண்ணனிடம் மன்றாடுகிறோம். இந்தக் கேள்விக்குக் கண்ணன் சொல்லும் பதிலை வைத்துத்தான் பகவத் கீதை அன்பைச் சொல்லும் அழகிய கவிதை என்பதைத் தெரிந்து கொள்கிறோம். இந்த பதிலை வைத்துத்தான் பாரதியார் பக்தி செய்து பிழை
என்று சொன்னார்.
கண்ணனின் பதிலைப் புரிந்து கொள்ள ஒரு வாழ்வியல் உதாரணத்தைப் பார்ப்போம். என் நண்பர் ஒருவர் வங்கியில் அலுவலராக இருக்கிறார். அவருக்குச் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. அவரிடம் நல்ல வீட்டு மனை இருந்தது. அதில் ஆயிரத்தி ஐநூறு சதுர அடிக்கு ஒரு சிறிய வீட்டைக் கட்ட வேண்டும் என்று திட்டம் போட்டார்.
அவர் பாவம் ஒரு நாளில் சுமார் பதினான்கு மணி நேரம் வேலை பார்ப்பவர். வங்கிப்பணியை விட்டு வெளியே வர முடியாதவர். வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாதவர்.
எனவே அவருக்கு நெருக்கமான ஒரு நண்பரிடம் எப்படி வீடு கட்டுவது என்று அறிவுரை கேட்டார்.
அந்த மனிதர் சுமார் இரண்டு மணிநேரம் அறிவுரைகளை வாரி வழங்கினார். எந்த கட்டடக் கலை வல்லுனரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து தளம் எப்படி அமைப்பது, ஒப்பந்தக்காரரிடம் எப்படிப் பேசுவது, மணல் எங்கிருந்து வாங்குவது, மாநகராட்சியில் எப்படி கட்டட அனுமதி வாங்குவது தாற்காலிக மின் இணைப்பு எப்போது வாங்குவது நிரந்தர மின் இணைப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது குளியலறை கழிப்பறைப் பொருட்களை எப்படித் தேர்ந்தெடுப்பது சமையலறையில் புதிதாக வந்திருக்கும் மாட்யுலர் கிச்சனை எப்படி அமைப்பது, வீட்டின் முகப்பை எப்படி வடிவமைப்பது என்று பேசிக்கொண்டே போனார்...
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட வங்கி அலுவலருக்குக் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது. வங்கி வேலையையும் பார்த்துக் கொண்டு எப்படி வீடு கட்டப் போகிறோம் என்று மலைத்துப் போய்விட்டார்.
நண்பர் அவர் கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரைப் பார்த்துவிட்டார். பேச்சை நிறுத்தினார். எழுந்து போய் அவருடைய தோள் மேல் கையைப் போட்டார்.
நீ எதுக்குப் பயப்படற ராகவா? அதான் நான் இருக்கேன்ல? எல்லா வேலையையும் நானே பாத்துக்கறேன். என்னை நம்பி வீடு கட்டற பொறுப்பக் கொடுத்துரு. உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பாத்துக்கறேன். அடுத்த வருஷம் இதே நேரம் நீ உன் சொந்த வீட்டுல பால் காய்ச்சலாம்.
எல்லாம் தெரிந்த ஒருவர், நமக்கு உதவி செய்யும் வல்லமை படைத்த ஒருவர், நம் மேல் உண்மையாக அன்பு வைத்திருக்கும் ஒருவர் அப்படிச் சொன்னால் எப்படி இருக்கும்?
கண்ணனும் இதையேதான் சொல்கிறான். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது கீதையின் அடிப்படைக் கோட்பாடாக இருந்திருந்தால் கீதையின் முடிவில் கண்ணன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ‘உன் கடமையிலிருந்து தவறினால் உனக்கு மரணம் நிச்சயம்’ என்று சொல்லியிருக்க வேண்டும். ‘உன் பக்தியிலோ ஞானத்திலோ பிழை இருந்தால் உனக்கு நிச்சயம் தண்டனை உண்டு.’ என்று சொல்லியிருக்க வேண்டும்.
மிகக் குறைந்த பட்சமாக ‘பற்றற்ற நிலையிலிருந்து நீ உன் கடமையைச் செய்யாவிட்டால் உன்னைப் பாவங்கள் வந்தடையும்’ என்று மிரட்டியிருக்க வேண்டும்.
கண்ணன் அப்படிச் சொல்லவில்லை. அவன் ஒரு கண்டிப்பான பள்ளி ஆசிரியன் அல்லன். நம் மேல் வெறித்தனமாகக் காதல் கொண்டிருக்கும் ஒரு அன்பு தெய்வம். அந்தத் தெய்வம் அந்த வங்கியலுவலரின் நண்பர் சொன்னதைவிட ஒரு படி மேலே போய்ச் சொல்கிறது.
"எல்லாவற்றையும் விட்டுவிடு. நானே துணை என்று என்னை வந்து சரணடைந்துவிடு. நான் உன் பாவங்களிலிருந்து உன்னை விடுவிக்கிறேன். உனக்கே உனக்கென்று நான் இருக்கும் போது நீ எதற்காகக் கவலைப்பட வேண்டும்?’ (பகவத் கீதை 18-66)
இரண்டாவது அத்தியாயத்தில் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கட்டளையிட்ட கண்ணன் பதினெட்டாம் அத்தியாயத்தில் கடமையாவது கத்தரிக்காயாவது பக்தியாவது பரங்கிக்காயாவது? அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு என்னை நம்பிச் சரணடைந்துவிடு போதும் என்கிறான்.
தன் நண்பரை நம்பிப் பொறுப்பைக் கொடுத்த அந்த வங்கியலுவலருக்கு நல்ல வீடு கிடைத்தது. நாம் கண்ணனை நம்பி நம் வாழ்க்கையை ஒப்படைத்தால் நமக்கு வீடுபேறு கிட்டும்.
‘நீ எதுவும் செய்ய வேண்டாம். என்னிடம் வந்தால் போதும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அந்தத் தெய்வமே பறைசாற்றிய பகவத் கீதையின் சாராம்சம் அன்பாகத்தானே இருக்க முடியும்.
இப்போது பாரதியாரின் சொற்களை மீண்டும் நினைத்துக் கொள்வோம்.
பக்தி செய்து பிழை. பலன் கருதாது உழை.
கண்ணன் என்ற அந்தக் காதல் தெய்வம் தன் காதலைக் கீதையில் எப்படி வெளிப்படுத்துகிறது என்று பார்க்கலாமா?
2 கண்ணனின் முத்தம்
அந்த விளம்பரத்தை ஒரு வலைதளத்தில் பார்த்தேன். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஓடும் வீடியோ காட்சி. ஒரு விமான நிறுவனத்தின் விளம்பரம் அது.
நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் ஏழு வயதுச் சிறுமியும் ஒரு விமானத்தில் முதல் வகுப்பில் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். விமானம் கிளம்பிய சில நொடிகளில் அந்த நாற்பது வயதுக்காரர் தன் சீட் பெல்ட்டை அணிய முயற்சி செய்கிறார். அதை எப்படி அணிய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை.
பக்கத்தில் இருக்கும் அந்தச் சிறுமியைப் பார்க்கிறார். சீட் பெல்ட் எப்படி அணிய வேண்டும் என்று அந்தச் சிறுமி சைகை மூலமாகச் சொல்லித் தருகிறாள். அவள் முகபாவம் இருக்கிறதே, அப்பப்பா அது ஒரு அழகான கவிதை. சிறுமியான தான் நாற்பது வயதுக்காரர் ஒருவருக்கு இந்தச் சின்ன விஷயத்தைக் கற்றுத்தர வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் அவள் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. பிற்காலத்தில் அவள் பெரிய நடிகையாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விமானம் நல்ல உயரத்தில் பறக்கும் போது அந்தச் சிறுமி தன் இருக்கையை இன்னும் பின்னால் தள்ளி வசதியாக சாய்வாக அமர்ந்து கொள்கிறாள். அந்த மனிதரும் தன் இருக்கையைப் பின்னால் தள்ள முயற்சி செய்கிறார். தன் பலத்தை எல்லாம் கொண்டு இருக்கையைப் பின்னால் தள்ளப் பார்க்கிறார் முடியவில்லை.
அந்த மனிதரின் செய்கையில் இருந்த முட்டாள்தனத்தைப் பார்த்த அந்தச் சிறுமி எரிச்சலுடன் எந்த விசையை அழுத்தினால் இருக்கை பின்னால் போகும் என்று செயல்முறை விளக்கம் தருகிறாள். தன் நன்றியைக் காட்டும் விதமாக அந்தச் சிறுமியைப் பார்த்துப் புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் பின் அவள் சொன்னது போல் செய்கிறார் நாற்பது வயதுக்காரர்.
விமானத்தில் உணவு வழங்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடன் அந்தச் சிறுமி தன் இருக்கையின் கைப்பிடிக்குள் மறைந்து இருக்கும் உணவுத்தட்டை லாவகமாக வெளியே கொண்டு வருகிறாள்.
அந்த மனிதரும் அதையே செய்ய முற்படுகிறார். என்றாலும் தவறான கைப்பிடியைப் பிடித்து இழுக்கிறார். உணவுத்தட்டு வெளியே வரவில்லை. அந்தச் சிறுமிக்கு இதைப் பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது. தலையில் அடித்துக் கொள்கிறாள். பின் எந்தக் கைப்பிடியைப் பிடித்து இழுக்க வேண்டும் என்று சாடையில் சொல்கிறாள். அந்த மனிதரும் அப்படியே செய்கிறார்.
இப்போது காட்சி மாறுகிறது. அந்தப் பெண் அந்த நாற்பது வயதுக்காரரின் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருக்கிறாள். விமானத்தின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நாற்பது வயதுக்காரர் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார்.
விமானப் பணிப்பெண் அவர்கள் இருக்கைக்கு வருகிறாள். அந்த நாற்பது வயதுக்காரரிடம் குனிந்து பணிவுடன் பேசுகிறாள்
கேப்டன் மும்பையிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய விமானம் குறித்த நேரத்தில் கிளம்பப் போகிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.
என்று சொன்னபடி விமான ஓட்டியின் கோட்டையும் தொப்பியையும் அவரிடம் தருகிறாள் பணிப்பெண்.
வேறு ஏதாவது வேண்டுமா கேப்டன்?
என்று பணிவுடன் கேட்கிறாள் அவள்.
அந்த விமானத்தின் பைலட் தன் மேல் சாய்ந்தபடி குளிரில் ஒடுங்கிக் கொண்டு படுத்திருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கிறார்.
ஒரு கம்பளிப் போர்வை கொண்டு வர முடியுமா?
நிச்சயமாக.
விளம்பரம் இதோடு முடிகிறது. அதன்பின் அந்த விமான நிறுவனத்தின் விளம்பர வாக்கியம் வருகிறது. நாங்கள் உங்களில் ஒருவர்
என்ற பொருளில் ஏதோ சொல்கிறார்கள்.
இந்த விளம்பரத்தில் வரும் குழந்தையாக அர்ஜுனனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கூட வரும் விமானி கண்ண பரமாத்மா. அண்ட சராசரங்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்ற அந்தப் பரமாத்மா தன்னால் படைக்கப்பட்ட கோடானு கோடிப் பிரபஞ்சங்களில் ஒன்றில் ஒரு சிறிய துகளாக இருக்கும் பூமியில் ஒரு சிறு தூசியாக இருக்கும் ஒரு ஜீவன் குளிரில் நடுங்குகிறதே என்று ஆதங்கப்பட்டு போர்வை வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
இது தெரியாத அந்த ஜீவன் அந்தப் பரமாத்மாவிற்கே எப்படி சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சொல்லித் தருகிறது. சாப்பாட்டுத்தட்டை இழுக்கத் தெரியவில்லை என்பது போல் அவருடைய அறியாமையைக் கண்டு தலையில் அடித்துக் கொள்கிறது.
ஆனால் பாவம் அந்தச் சிறுமி தன் கூடப் பயணிப்பது யார் என்று தெரியாமலேயே உறங்கிவிடுகிறாள்.
ஆனால் நம் வாழ்க்கை என்ற விமானப் பயணத்தில் விமானியான இறைவன் – கண்ண பரமாத்மா – நம் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். தேவைப்படும்போது தான் யார் என்பதையும் காட்டுகிறார்.
இத்தனை நேரம் நாம் பேசிக் கொண்டிருந்தது இறைவனிடத்தில் என்றதும் நாம் உறைந்துவிடுகிறோம்.
இறைவன் பூரணமான அன்பின் வடிவம். அவர் முன் நிற்கும் போதுதான் நமது அன்பின்மை நம் கண்களை உறுத்துகிறது. குளித்துத் தெளித்துப் பளிச்சென்ற ஆடைகளை அணிந்து கொண்டிருப்பவரின் பக்கத்தில் நிற்கும் போதுதான் நாம் குளிக்காததும் அழுக்கான ஆடைகள் அணிந்திருப்பதும் நம் கண்களை உறுத்துகிறது. கடவுளின் காட்சி நமது மதிப்பின்மையை உணர்த்துகிறது.
ஒரு தோழனாக, தோள் மேல் கைபோடாத குறையாக கீதையை உபதேசித்த கண்ணன் ஒரு கட்டத்தில் தான் கடவுள் என்பதைக் காட்டுகிறான். அதை ஏன் அவன் செய்ய வேண்டும்? நட்பு என்ற உரிமையிலேயே கீதை முழுவதையும் சொல்லியிருக்கலாமே?
சொல்லியிருக்கலாம். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே. ஆத்மா அழிவற்றது. உன் சுய தொழிலை விட்டுவிட்டு அடுத்தவர் தொழிலைப் பார்க்காதே. மனதை ஒருமுகப்படுத்தித் தியானம் செய். இது போன்ற உண்மைகளை நண்பன் குருவின் நிலையிலிருந்து சொல்லலாம். நாமும் கேட்டுக் கொள்வோம். ஆனால் இது போன்ற வாக்கியங்களால் அர்ஜுனனின் மனதில் இருந்த பயமும் குழப்பமும் தீரவில்லை. எனவே இந்தக் கட்டத்தில் கண்ணன் தன்னை இறைவன் என்று வெளிக்காட்டுகிறான்.
தன் தந்தைக்கு அருகில் படுத்துக் கொண்டிருக்கிறது குழந்தை. இரவின் இருட்டில் எதையோ கண்டு பயந்து விடுகிறது. வீல் என்று பயத்தில் அலறுகிறது. தந்தை தன் குழந்தையை அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பில் குழந்தையின் உடல் இன்னும் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்கிறார் அந்த அன்புத் தந்தை.
எதுக்குப் பயப்படற செல்லம்? அதான் அப்பா கூடவே இருக்கேன்ல? ஏதாவது நாய் பேய் உன்கிட்ட வரப் பாத்துச்சி தொலச்சிருவேன் தொலச்சி. அப்பா கையப் பாத்தியா எவ்ளோ பலம்! இதப்பாத்தா பேய் பிசாசு எல்லாம் பயந்து ஓடிப் போயிரும். நீ தூங்கு செல்லம். அப்பா உன் கூடவே இருப்பேன்.
இந்தத் தந்தை கூட ஒரு வகையில் ஒரு சின்ன விஸ்வரூப தரிசனத்தைக் காட்டுகிறார். வலிமை மிக்க தந்தை தன்னைக் காப்பாற்றப் பாசத்துடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் குழந்தையும் நிம்மதியாக உறங்குகிறது.
வந்திருப்பது இறைவன் என்று தெரியாமல் நான்பாட்டுக்கு வா போ என்று ஏகவசனத்தில் பேசிவிட்டேனே. என் சக வயதுத் தோழனைத் திட்டுவது போல் திட்டிவிட்டேனே. இப்போது என்ன செய்வது?
என்று அர்ஜுனன் கலங்குகிறான்.
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே
என்கிறாள் ஆண்டாள்.
மெத்தப் படித்த என் நாத்திகவாதி நண்பர் பகவத் கீதையின் 11வது அத்தியாயத்தை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்.
"இறைவன் எல்லார்க்கும் எளியவன் என்கிறாய். அவனை அடியார்க்கு அடியான் என்று சிலர் புகழ்கிறார்கள். அவனை அடைவது சுலபம் என்ற பொருளில் வைணவம் அவனிடம் இருக்கும் சௌலப்யம் என்ற குணத்தை – அதாவது அவனுடைய எளிமையைச் சிலாகித்துச் சொல்கிறது. அப்படிப்பட்ட எளிய இறைவன் எதற்காக ஆயிரம் சூரியன்களின் ஒளியுடன் தோன்ற வேண்டும்? தனக்கிருக்கும் ஆயிரம் விழிகளையும் ஆயிரம் வாய்களையும் காட்டித் தன்னைத்தானே ஏன் பீற்றிக் கொள்ள வேண்டும்?
பணக்காரப் பெண்கள் தன் செல்வச் செருக்கைக் காட்டப் பளபள பட்டுப்புடவையும் கழுத்து நிறைய நகைகளும் அணிவது போலல்லவா இருக்கிறது? இப்படித் தன்னைப் பீற்றிக் கொள்பவனை நான் நல்ல மனிதன் என்றே ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ எப்படித் தெய்வம் என்று . .. ..
பொதுவாக நாத்திகர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். ஆனால் நீ ஏனப்பா இப்படி விதிவிலக்காக இருக்கிறாய்?
நண்பனின் கண்கள் சிவந்துவிட்டன.
உன் சிற்றறிவைக் குறை சொன்னதற்கே உனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே? அறிவுக்கு எல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அந்தப் பேரறிவை நீ பழித்தால்.. அந்த அன்புக் கடலைக் கேவலமாகப் பேசினால் எனக்குக் கோபம் வராதா. சரி அதைவிடு. நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள்.
நான் சொல்ல ஆரம்பித்தேன்.
பொதுவாக நமக்குக் கீழே இருப்பவர்கள் நம் மேல் அன்பு காட்டினால் நமக்கு லேசாகச் சந்தேகம் வரும். நம்மைச் சார்ந்திருப்பவர்கள் நம் மேல் அன்பைக் கொட்டினால் நமக்கு லேசாக எரிச்சல்கூட வரும்.. உதாரணமாக நமக்குக் கீழே வேலை பார்க்கும் ஒரு கடைநிலை ஊழியர் நம்மிடம் எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது.
என்று சொன்னால் என்ன நினைப்போம்? இந்த அலுவலகத்திலேயே நீங்கள்தான் மிகவும் நல்லவர்
என்று நம்மிடம் குழைந்தால்?
அவர் நம்மேல் கொட்டும் அன்பு மழையில் நனைந்துவிட மாட்டோம். "சரி இந்த மனிதருக்கு விடுப்போ முன்பணமோ வேண்டும் போல் இருக்கிறது. அதற்காகத்தான் இப்படி நேரம் கெட்ட நேரத்தில் நமக்குக் குல்லா போடுகிறார் என்று கண்டுபிடித்துவிடுவோம்.
அது கிடக்கட்டும். உனக்கு என்ன வேணும்னு சொல்லு. லீவா அட்வான்சா..
என்று குரலை உயர்த்திக் கேட்டவுடன் அவர்
"அதெல்லாம் இல்ல சார். என் மச்சினன் ஒத்தன் பி.ஏ. படிச்சிட்டு வேலையில்லாம ஊரச் சுத்திக்கிட்டு இருக்கான். அவனுக்கு நம்ம ஆபீசுல ஒரு வேலைக்கு சிபாரிசு பண்ணுங்க