Acham Thavir Ucham Thodu
()
About this ebook
உலகெங்கிலும் உள்ள இரண்டு லட்சம் பெண்கள் ஒரு வலைதளத்தில் (penmai.com) இணைந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பு விருந்தினனாக ஒரு மாதம் இருந்தேன். விருந்தினன் என்றால் வேளா வேளைக்கு அறுசுவை உணவு, உபச்சாரம், உறக்கம் போன்ற எதுவும் இல்லை. இந்த ஒரு மாதம் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்பப்பா! அந்தக் கேள்விகளில்தான் எத்தனை வீரியம்! என்ன வீச்சு! எப்படி எழுதத் தொடங்கினீர்கள் என்று வெள்ளந்தியாக ஆரம்பித்து ‘இனிமேல் எழுதவே வேண்டாம் என்று வெறுத்து வெதும்பிய தருணங்கள் பற்றி...' என்று என் ஆன்மாவைக் குடைந்தெடுத்த கேள்விகள் அவை. இது ஒரு வகையான மூலிகை.
இதற்கிடையே தினமலர் நாளிதழின் இயக்குனர் நண்பர் திரு எல். ராமசுப்பு என்ற சுரேஷ் “படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இருக்கும் பயங்களையும் சந்தேகங்களையும் போக்கி அந்த இடத்தில் தன்னம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டும். செய்வீர்களா?” 26 வாரங்கள் தினமலர் வேலைவாய்ப்பு மலரில் இடமும் ஒதுக்கிக் கொடுத்தார். இது இன்னொரு வகையான மூலிகை.
முன்னேறு மேலே மேலே என்ற அந்தத் தொடர் முடிந்ததும் திரு சுரேஷ் “பாதி வாழ்க்கையைக் கழித்துவிட்டவர்கள் ஒரு மாதிரியான பய உணர்வில் ஆன்மீகத்தை நாடுகிறார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அவர்கள் மனதில் இறையன்பையும் தன்னம்பிக்கையையும் விதைக்க வேண்டும். செய்வீர்களா?” 26 வாரங்கள். மலரட்டும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் தினமலர் ஆன்மீக மலரில் எழுதினேன். இது மூன்றாவது வகையான மூலிகை.
இந்த மூன்று மூலிகைகளையும் அரைத்து, குழைத்துச் செய்த மருந்துதான் ‘அச்சம் தவிர் உச்சம் தொடு.’ என்ற இந்த நூல்.
பாப்கார்னைக் கொறித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்க வேண்டிய புத்தகம் அல்ல இது.
உங்களைப் பாடாய்ப் படுத்தப்போகும் புத்தகம். உங்களைப் புரட்டிப் போடப்போகும் புத்தகம். இந்த நினைப்போடு இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
இனி இந்தப் புத்தகத்துடன் நீங்கள்!
Read more from Varalotti Rengasamy
Nee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaakkai Siraginile... Rating: 0 out of 5 stars0 ratingsPachaipudavaikkaari Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsThaayena Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsSolladi Sivasakthi Rating: 5 out of 5 stars5/5Kanna Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithen Rating: 0 out of 5 stars0 ratingsPonnai Virumbum Boomiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsVaarai En Thozhi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Acham Thavir Ucham Thodu
Related ebooks
Vindhai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsInippin Vetri Rating: 0 out of 5 stars0 ratingsChinmayanandarin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIvvidam Yaavarum Nalam Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Palan Tharum Parigara Koyilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsஅருணகிரிநாதர் Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu 50 Rating: 0 out of 5 stars0 ratingsAndrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsSri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsMagale Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Hindu Madha Ponmozhigal Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsAaram Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Acham Thavir Ucham Thodu
0 ratings0 reviews
Book preview
Acham Thavir Ucham Thodu - Varalotti Rengasamy
https://www.pustaka.co.in
அச்சம் தவிர் உச்சம் தொடு
Acham Thavir Ucham Thodu
Author:
வரலொட்டி ரெங்கசாமி
Varalotti Rengasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
சமர்ப்பணம்
-என் வாழ்விற்கு அர்த்தம் தந்த பெண்களுக்கு
-என் தாய்
-என் தங்கை
-என் மனைவி
-என் மகள்
-மற்றும் என் தோழிகள்
என்னுரை
உலகெங்கிலும் உள்ள இரண்டு லட்சம் பெண்கள் ஒரு வலைதளத்தில் (penmai.com) இணைந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பு விருந்தினனாக ஒரு மாதம் இருந்தேன். விருந்தினன் என்றால் வேளா வேளைக்கு அறுசுவை உணவு, உபச்சாரம், உறக்கம் போன்ற எதுவும் இல்லை. இந்த ஒரு மாதம் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்பப்பா! அந்தக் கேள்விகளில்தான் எத்தனை வீரியம்! என்ன வீச்சு! எப்படி எழுதத் தொடங்கினீர்கள் என்று வெள்ளந்தியாக ஆரம்பித்து ‘இனிமேல் எழுதவே வேண்டாம் என்று வெறுத்து வெதும்பிய தருணங்கள் பற்றி.. ‘ என்று என் ஆன்மாவைக் குடைந்தெடுத்த கேள்விகள் அவை. இது ஒரு வகையான மூலிகை.
இதற்கிடையே தினமலர் நாளிதழின் இயக்குனர் நண்பர் திரு எல். ராமசுப்பு என்ற சுரேஷ் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இருக்கும் பயங்களையும் சந்தேகங்களையும் போக்கி அந்த இடத்தில் தன்னம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டும். செய்வீர்களா?
26 வாரங்கள் தினமலர் வேலைவாய்ப்பு மலரில் இடமும் ஒதுக்கிக் கொடுத்தார். இது இன்னொரு வகையான மூலிகை.
முன்னேறு மேலே மேலே என்ற அந்தத் தொடர் முடிந்ததும் திரு சுரேஷ் பாதி வாழ்க்கையைக் கழித்துவிட்டவர்கள் ஒரு மாதிரியான பய உணர்வில் ஆன்மீகத்தை நாடுகிறார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அவர்கள் மனதில் இறையன்பையும் தன்னம்பிக்கையையும் விதைக்க வேண்டும். செய்வீர்களா?
26 வாரங்கள். மலரட்டும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் தினமலர் ஆன்மீக மலரில் எழுதினேன். இது மூன்றாவது வகையான மூலிகை.
இந்த மூன்று மூலிகைகளையும் அரைத்து, குழைத்துச் செய்த மருந்துதான் ‘அச்சம் தவிர் உச்சம் தொடு.’ என்ற இந்த நூல்.
இன்று ஒரு கணினி அல்லது மென்பொருளின் நுட்பமான செயல்பாட்டை விளக்க வேண்டும் என்றால் அதைக் கேள்வி-பதில் வடிவில்தான் செய்கிறார்கள். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions – FAQ) என்ற இந்தப் படிவம் மென்பொருள் துறையில் புகழ் பெற்ற உத்தி..
நமது வாழ்க்கை என்பது இருப்பதிலேயே மிகவும் நுட்பமான மென்பொருள். அதைப் புரிந்து கொள்வதற்குக் கேள்வி-பதில் பாணிதான் சிறந்தது. அதனால்தான் முதல் முறையாக ஒரு தன்னம்பிக்கை நூலை FAQ பாணியில் – அதாவது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாணியில் - கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.
மூலிகையால் செய்த மருந்து சக்தி வாய்ந்ததுதான். என்றாலும் அதை உட்கொள்ள வசதியான வடிவத்தில் தரவேண்டும் அல்லவா? கொழ கொழவென்று லேகியமாகத் தராமல் எளிதில் முழுங்கக்கூடிய சிறிய மாத்திரைகளாகத் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அதனால்தான் இந்த வித்தியாசமான பாணி.
இந்தக் கருவை என் மனதில் தோற்றுவித்த பெண்மை டாட் காம் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எப்படி நன்றி சொல்லப் போகிறேன்?
ஒரு வருடம் தன்னுடைய பிரபல நாளிதழில் சிறப்பான இடத்தைத் தந்து அதன் மூலம் வாசகர்களின் மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை எனக்குப் பெற்றுத் தந்த தினமலர் இயக்குனர் திரு சுரேஷ் என்னும் ராமசுப்புவிற்கு வாயாக வார்த்தையாக நன்றி சொல்லிவிட முடியுமா என்ன?
நான் எழுதித் தருவதை எல்லாம் சலிக்காமல் கணக்குப் பார்க்காமல் அழகான மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய நூல்களாக வெளிக்கொண்டு வரும் திரு கவிதா சொக்கலிங்கத்திற்கு நன்றி சொல்லி முடிக்க ஒரு வாழ்நாள் போதாது.
என்னுள் இருந்த கதைசொல்லியைக் கதைகளைச் சொல்லிச் சொல்லியே வெளிக்கொணர்ந்த என் தாய் திருமதி சுலோச்சனாவிற்கு நன்றி சொல்லி முடிக்க நானூறு பிறவிகள் போதாது.
என்னை எழுத்துப்பணிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தபின்னும் என்னை ஒரு தாய் போல் பார்த்துக் கொள்ளும் என் மனைவி இந்துவிற்கு நான் பட்ட கடனைத் தீர்க்க அடுத்த பிறவியில் அவளுடைய மகனாகப் பிறந்து அவளுக்குச் சேவை செய்ய வேண்டும். அப்போதும் அவளுக்கு நான் பட்ட கடன் தீராது..
நடுவே நான் பிரச்சினைகளால் துவண்ட போது என்னை அரவணைத்து ஆறுதல் தந்து என்னைத் தொடர்ந்து எழுத வைத்த என் குருதேவர் வில்லிவாக்கம் யோகி திரு ராஜகோபாலன் சீனிவாசன் அவர்களுக்கு என் கண்ணீரையே நன்றியறிதலாகச் சமர்ப்பிக்கிறேன்.
குழந்தைகள் கதைகளில் வரும் மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழு மலை தாண்டி உள்ள ஒரு காட்டில் ஒரு கிளியினுள் இருக்கலாம். அது கற்பனை.
ஆனால் எழுத்தாளர்களாகிய எங்களின் உயிர் வாசகர்களாகிய உங்களிடம்தான் இருக்கிறது. இது நிஜம். வாசகர்களாகிய உங்களுக்கு நான் பட்ட நன்றிக்கடனின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல்.
பாப்கார்னைக் கொறித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்க வேண்டிய புத்தகம் அல்ல இது. உங்களைப் பாடாய்ப் படுத்தப்போகும் புத்தகம். உங்களைப் புரட்டிப் போடப்போகும் புத்தகம். இந்த நினைப்போடு இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
நடுவே என் மேல் ஆத்திரமோ, அன்போ வந்தால் varalotti@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிடுங்களேன்.
இனி இந்தப் புத்தகத்துடன் நீங்கள்!
-வரலொட்டி ரெங்கசாமி
உன்னை அறிந்தால். . . . ..
01 கேள்விகளைத் தொடங்கும் முன் உங்களைப் பற்றிச் சுவையாக, சுருக்கமாக நச்சென்று கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம்
என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்.. என்று ஆறு முழ நீளத்திற்குப் பீடிகை போட்டுச் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.
ஜெயகாந்தன், சுஜாதா, லா.ச.ரா. இவர்களை எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிட்டு அதே வாயால் என்னையும் அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு கதைசொல்லி.
என் நூல்கள் மூலம் இலக்கியத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. என் கதைகள் மூலம் அதைப் படிப்பவர்களின் மனதின் ஒரு மூலையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
பகலில் கணக்குப் பிள்ளை (Chartered Accountant) இரவில் கதை சொல்லி என்று வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. தமிழில் 24 ஆங்கிலத்தில் 8 என்று நூல்கள் எழுதியாகிவிட்டது. இன்னும் நிறைய எழுத வேண்டும் (கதை சொல்ல வேண்டும் என்று படிக்கவும்) என்ற ஆசை (நப்பாசை) மனதில் இருக்கிறது.
எனக்குத் தோழிகள் அதிகம். முகநூலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழிகள். என் கதைகள் முதன் முதலில் ஒரு பெண்கள் வலைதளத்தில்தான் வெளிவந்தன. என்னுடைய பல கதைகள் Womens Era போன்ற பெண் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.
1998ல் ஆசையில் ஒரு கடிதம் என்ற என் சிறுகதை ஆனந்தவிகடனில் வெளியான போது ஒரு வாசகர் நான் ஒரு ஆணின் பெயரில் மறைந்திருக்கும் அழகான பெண் என்று துண்டைத் தாண்டிச் சத்தியம் செய்தார்.
உனக்கு இவ்வளவு பொம்பளை ஃப்ரண்ட்ஸ் இருக்காகளே ஒரு வேளை உனக்கு பொம்பளை வீக்னஸ் இருக்கோ?
என்று ஒரு மகானுபாவர் கேட்டார்.
ராஜேஷ்குமாருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் காவல் துறையில் நண்பர்கள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியும். அவர்கள் துப்பறியும் கதைகள் எழுதுகிறார்கள். போலீஸ்காரன் பழக்கம் வேணும்ல? அப்போத்தானே கதை யதார்த்தமா இருக்கும்?
என் விஷயமும் அப்படித்தான்.
ஏன்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடற?
நான் அன்பைப் பற்றி எழுதுகிறேன். அதனால் எனக்கு பெண்களின் நட்பு வேண்டும். அன்பைப் பெண்களிடம் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்பது என் நம்பிக்கை.
ஆதாரம்..
என்னைப் பெற்றவள். என்னுடன் பிறந்தவள். என்னை மணந்தவள். நான் பெற்றவள். மற்றும் என் ஆயிரம் ஆயிரம் வலைதளத் தோழிகள்.
இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் நூல்களைக் கூட என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த பெண்களுக்குத்தான் அர்ப்பணித்திருக்கிறேன்."
02 ‘ஸ்ரீதர்’ - இந்த பெயரை விடுத்து வரலொட்டி ரெங்கசாமி என்ற பெயரில் எழுதக் காரணம்..
1997ம் ஆண்டு என் முதல் கதை நடிகையின் புடவை
குமுதம் இதழில் வெளியானது. அதில் என் பெயரை ப்ரியம்வதா ஸ்ரீதர் என்றுதான் கொடுத்திருந்தேன். ஸ்ரீதர் என்ற பெயர் ஏதோ சினிமாக் கதாநாயகன் பெயர் மாதிரி இருக்கிறதே என்று சிலர் சொன்னார்கள்.
என் அத்தை இயக்குனர் ஸ்ரீதரின் தீவிரமான ரசிகை. அவருடைய கல்யாணப் பரிசு என்ற படத்தை அவர்கள் மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பிறந்த செய்தி தந்தியாக வந்ததாம். அதனால் ஸ்ரீதர் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இது கிளைக்கதை.
மெயின் கதைக்கு வருவோம். மேலாண்மை பொன்னுச்சாமி என்னும் எழுத்தாளரின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். அந்தப் பெயரில் உள்ள சீர் தளை எல்லாம் சேரும் வகையில் ஒரு பெயர் வைத்துக் கொள்ள ஆசை. வரலொட்டி என்ற ஊரின் பெயரையும் (விருதுநகருக்கு அருகே இருக்கிறது) ரெங்கசாமி என்ற என் தந்தையின் (என்னைத் தத்து எடுத்துக்கொண்ட தந்தை - வழக்கறிஞர். இன்று உயிருடன் இல்லை) பெயரையும் இணைத்து இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன்.
சரி எழுத்தில் கவர்ச்சி இல்லாவிட்டாலும் பெயரிலாவது கவர்ச்சி காட்டலாமே என்னும் ஆசையும் ஒரு காரணமாக இருக்கலாம் பெயர் வைத்த முகூர்த்தமோ அல்லது மறைந்த தந்தையின் ஆசிகளோ தெரியவில்லை. பெயர் நிலைத்துவிட்டது.
03 வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டுமா? நேர்காணல்களில் வெற்றி பெற்று நல்ல வேலையில் சேர வேண்டுமா? பணியிடத்தில் வெற்றிகளைக் குவித்து, பதவி உயர்வு, அதிக சம்பளம், பெரிய கார், அடிக்கடி வெளிநாட்டுப்பயணம் என்று கலக்கலாக வாழ வேண்டுமா? உங்கள் வாழ்வில் பேரும் புகழும் பெற வேண்டுமா? காதலில் வெற்றி பெற வேண்டுமா?
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான்.
என்னடா இது லேகியம் விற்பவனைப் போல் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். முப்பது வருட வாழ்க்கையில் நான் பட்டுணர்ந்த பட்டுப் போன்ற உண்மைகளைப் பட்டென்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக இதை எழுதுகிறேன்.
தேர்வுகளில் வெற்றி நேர்காணல்களில் வெற்றி – சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற - நீங்கள் முக்கியமாகச் செய்ய வெண்டியது பொட்டலம் போடுவதுதான். பலசரக்குக்கடையில் உப்பையும் புளியையும் பொட்டலம் போடுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் திறமைகளை உங்கள் அறிவை உங்கள் அனுபவத்தை, மனித உறவுகளில் உங்களுக்கு இருக்கும் மகத்தான வல்லமையைப் பொட்டலம் போடுங்கள் என்றுதான் சொல்கிறேன். அதாவது சரியாக பேக்கேஜிங்(packaging) செய்யுங்கள் என்று சொல்கிறேன்.
சரக்கு தரமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ பொட்டலம் சரியாக இருப்பதும் அவ்வளவு முக்கியம். இன்று அதீதத் திறமையும் அதிகமான அறிவும் உள்ள பல இளைஞர்களும் இளைஞிகளும் தேர்வில்-, நேர்காணலில்- வாழ்க்கையில்- தோற்பதற்கு ஒரே காரணம் – அவர்களுக்குத் தங்களிடம் இருக்கும் சரக்குகளைச் சரியாகப் பொட்டலம் போடத் தெரியவில்லை என்பதுதான்.
பற்பசை வாங்கக் கடைக்குப் போகிறீர்கள். அம்பது கிராம் கால்கேட் பேஸ்ட் கொடுப்பா.
என்று கேட்கிறீர்கள். கடைக்காரரும் எடுத்துத் தருகிறார். மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டு வருகிறீர்கள். காலையில் அந்தக் குழாயிலிருந்து (tube) சிறிது பற்பசையைப் பிதுக்கி அதைக் கைபடாமல் ப்ரஷ்ஷில் வைத்துப் பல் விளக்குகிறீர்கள். இது ஒரு அன்றாட நிகழ்வு.
பற்பசைத் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் பொட்டலம் போடும் முறை தெரியவில்லை என்றால்.. .. .. .. . .. ஒரு விபரீதக் கற்பனை.
கடைக்காரர் ஒரு பெரிய பித்தளை அண்டா நிறைய குழகுழவென்று பற்பசை வைத்திருக்கிறார். நீங்கள் பத்து ரூபாயை நீட்டியவுடன் தன் கைநிறைய அந்தச் சிகப்பு அல்லது வெள்ளை நிறக் குழகுழப் பசையை எடுத்து ஒரு தராசில் நிறுத்துப் பின் அதை ஒரு கண்ணாடிக் காகிதத்தில் வைத்துக் கட்டித் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதை நினைத்துப் பார்க்கும் போதே வயிறு ஒரு மாதிரி குமட்டுகிறது அல்லவா? சரி, காலையில் எப்படி அந்தக் காகிதப் பொட்டலத்திலிருந்து பற்பசையை எடுப்பீர்கள்? கையால் வழித்து ப்ரஷ்ஷில் தடவிக் கொள்வீர்களா? சொல்லும்போதே வயிற்றைப் புரட்டுகிறது அல்லவா? பற்பசை எளிதாகப் பிதுக்கி எடுக்கும் வகையில் குழாய்களில் வந்தால்தான் வாங்க முடியும். விரயமாகாமல் கை அசிங்கமாகாமல் பயன்படுத்த முடியும்.
தங்கள் அறிவையும் திறமையையும் சரியாகப் பொட்டலம் போடத் தெரியாமல் பற்பசையைக் காகிதத்தில் மடித்துத் தருவது போல் தந்து நேர்காணல் செய்பவர்களையும் தேர்வின் விடைத்தாள்கள் திருத்துபவர்களையும் முகம் சுளிக்க வைப்பவர்கள் பலர்.
பற்பசையை மென் குழாய்களில் அடைத்துவிடலாம். நமது திறமைகளையும் அறிவையும் எப்படிப் பொட்டலம் போடுவது? சொல்கிறேன்.
பிதுக்கும் அளவிற்குத் தகுந்தாற்போல் பற்பசை வருவதுதான் குழாய்களின் சிறப்பு. அது போல் உங்கள் அறிவையும் திறமையையும் சரியான அளவில் வெளிப்படுத்த வேண்டும். என்னுடன் கல்லூரியில் மணி என்று ஒரு மாணவன் படித்தான். பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டேயிருப்பான். நல்ல ஞாபக சக்தி. என்றாலும் வகுப்பில் பத்தாவது இடத்திற்கு மேல்தான் இருப்பான். காரணம்? அவனுக்குத் தன் அறிவையும் நினைவாற்றலையும் தேவையான அளவு வெளிப்படுத்தத் தெரியாது.
ஒருமுறை மாதாந்திரத் தேர்வில் ஒரு கேள்விக்கு மூன்று பக்கங்கள் விடை எழுதியிருந்தான். விடை என்னவோ பிரமாதமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கேள்விக்கு அதிகபட்ச மதிப்பெண்களே மூன்றுதான். முப்பது பக்கத்திற்கு விடை எழுதினாலும் ஆசிரியர் இரண்டு அல்லது இரண்டரை மதிப்பெண்கள்தான் போடுவார். வகுப்பில் முதல் நிலையில் இருக்கும் மாணவன் அதே கேள்விக்கு நான்கே வரிகளில் நச்சென்று பதில் எழுதிவிட்டு இரண்டரை மதிப்பெண்கள் வாங்கிவிட்டான். மணியின் மூன்று பக்க விடைக்கோ இரண்டு மதிப்பெண்கள்தான் கிடைத்திருந்தது. மணி ஆசிரியரிடம் சண்டை போட்டான். ஆசிரியர் அமர்த்தலாகச் சொன்னார்:
விடை சரிதான். அதிக பட்ச மதிப்பெண்கள்கூடக் கொடுக்கலாம். ஆனால் அளவு தெரியாத குற்றத்திற்காகத்தான் மதிப்பெண்களைக் குறைத்தேன்
என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
பற்பசைக் குழாயை லேசாகப் பிதுக்கினால் ஒருமுறை பல் விளக்குவதற்குப் போதுமான பற்பசைதான் வர வேண்டும். அப்படி இல்லாமல் குழாயில் இருக்கும் மொத்தப் பசையும் வந்தால். .. உங்கள் பொட்டலம் போடும் முறை சரியில்லை என்றுதான் பொருள். நீங்கள் மணியைப் போல் மகா மேதாவியாகக் கூட இருக்கலாம். ஆனால் பொட்டலம் போடத் தெரியாவிட்டால் உயரங்களைத் தொட முடியாது. அளவு தெரியாத குற்றத்திற்கு உலகம் கடுமையான தண்டனை கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ரெங்கநாதன் என்ற ஒருவர் இந்தப் பொட்டலம் போடும் கலையாலேயே பெரிய கோடீஸ்வரரானார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் லீவர், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் தன் வழியில் நடக்க வைத்தார். ரெங்கநாதனின் குடும்பத்தில் அனைவருமே தொழிலதிபர்கள். இவருடைய புரட்சிகரமான கருத்துக்களை அவருடைய சகோதரர்கள் ஏற்றுக் கொள்ளாததால் குடும்பத் தொழிலைவிட்டு வெளியே வந்து தனியே தொழில் ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் ஷாம்பூ வாங்க வேண்டுமென்றால் ஒரு பெரிய பாட்டில் அளவுதான் வாங்க வேண்டும். பாட்டிலில் விற்கும் ஷாம்பூவின் விலையோ அதிகம். பலராலும் வாங்க முடியவில்லை. ரெங்கநாதன் அதே ஷாம்புவை சின்னப் பொட்டலத்தில் ஸாஷே (sachet) யில் போட்டு ஒரு ஸாஷே 75 காசுக்கு விற்றார். அதற்கு சிக் (Chik) ஷாம்பூ என்று பெயரிட்டு விற்கத் தொடங்கினார். விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. பாட்டில் ஷாம்பு விற்பனை படுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களும் இவரது பாணியைப் பின்பற்றி ஸாஷேயில் ஷாம்பு விற்க ஆரம்பித்தன. ரெங்கநாதனின் நிறுவனத்தின் பெயர் Cavinkare India.
ரெங்கநாதன் புதிய ஷாம்பூவைக் கண்டுபிடிக்கவில்லை. புதிதாகப் பொட்டலம் போடும் முறையைக் கண்டுபிடித்தார். பயனீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ற அளவில் பொட்டலம் போடும் கலைக்குப் புது வடிவம் கொடுத்தார். வெற்றி பெற்றார்.
அதைப் போல் நீங்களும் உங்கள் அறிவையும் திறமையையும் கவர்ச்சியான, அளவான பொட்டலங்களில் போட்டு விற்று வாழ்க்கையில் வெற்றியடையலாம்.
04 இன்று பொதுவாக இளைஞர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் சினிமாவைப் பார்த்துச் சீரழிந்து போகாதே
என்றுதான் சொல்கிறார்கள். சினிமா நடிகர்களிடம் நடிகைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏதாவது.. . கொஞ்சம் வித்தியாசமான பதிலை எதிர்பார்க்கிறோம்.
என்னை ஒரு சங்கக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்று அந்த சங்கத் தலைவர் சொன்னார். ஆனால் அந்த சங்கத்தின் செயலாளர் – வயது முதிர்ந்தவர் – என்னிடம் குறும்பு ததும்பச் சொன்ன அறிவுரை இதுதான்.
உங்கள் பேச்சு ஒரு பெண்ணின் நீச்சல் உடையைப் போல் இருக்க வேண்டும். மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். அதே சமயம் அதிக நீளமில்லாமல் குட்டையாக இருந்தால்தான் அதில் ஒரு கவர்ச்சி இருக்கும்.
இன்றைய நடிகைகளைப் பார்த்து நாம் கற்க வேண்டிய பாடம் இந்த அளவுகள்தான். இவர்கள் திரைப்படங்களில் தோன்றும்போது அவர்களது ஆடைகள் எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது கஜப் புடவையைப் போட்டுக் கொண்டு இழுத்துப் போர்த்துக் கொண்டு வந்தால் யாரும் அந்தப் படத்தைப் பார்க்க மாட்டார்கள். அதற்காக ஒரேயடியாக ஆடைக் குறைப்பு செய்தால் இரண்டு ஆபத்துக்கள் – ஒன்று தணிக்கை அதிகாரிகள் காட்சிகளை வெட்டி எறிந்து விடுவார்கள். இரண்டு – ரசிகர்கள் அந்த நடிகையைக் கதாநாயகி என்ற பதவியிலிருந்து இறக்கிக் கவர்ச்சி நடிகையாக்கிவிடுவார்கள். அதன்பின் குத்தாட்ட நடிகையாக்கிவிடுவார்கள்.
ஒரு நடிகை கதாநாயகி என்ற நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆடைக்குறைப்பு விஷயத்தில் அதீதக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று நடிகைகள் ஆடைக்குறைப்புக்குத் தக்கபடி தங்கள் ஊதியத்தை நிர்ணயிக்கிறார்கள். சினிமா ஆபாசம் நிறைந்தது. இன்றைய இளைய சமுதாயத்தைச் சீரழிக்கிறது போன்ற பேச்சுக்களை நான் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நடிப்பு என்பது ஒரு தொழில் என்று ஆகிவிட்டது. அந்தத் தொழிலில் வெற்றி பெற அவர்கள் காட்டும் கவர்ச்சி ஒரு சாராரைக் கவர்ந்தாலும் அவர்கள் காட்டும் திறமையிலிருந்து நமக்கு நல்ல பாடங்கள் கிடைத்தால் நல்லதுதானே?
நீங்கள் இளங்கலை இறுதியாண்டுத் தேர்வு எழுதுகிறீர்கள். ஒரு தேர்வு சுமார் மூன்று மணி நேரம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தேர்வில் ஒரு கேள்வி. அதற்குப் பதில் எழுதத் தொடங்கும் முன் அதற்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். உதாரணமாக அந்தக் கேள்விக்கு பத்து மதிப்பெண்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது மொத்த மதிப்பெண்களில் பத்து சதவிகிதம் அந்தக் கேள்விக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீங்கள் ஒரு கறாரான பலசரக்குக் கடைக்காரரைப் போல் நடந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் பத்து சதவிகித மதிப்பெண்கள் உள்ள கேள்விக்கு நீங்கள் மொத்த நேரத்தில் பத்து சதவிகிதம் நேரத்தைத்தான் செலவு செய்ய வேண்டும்.
தேர்வு நேரம் மூன்று மணி நேரம். அதாவது 180 நிமிடங்கள். எழுதிய விடைகளைக் கடைசியில் ஒருமுறை படித்துப் பார்த்துத் திருத்துவதற்காக 20 நிமிடங்களை ஒதுக்கிவிட்டால் மிச்சம் இருப்பது 160 நிமிடங்கள். இதில் பத்து சதவிகிதம் அதாவது 16 நிமிடங்களுக்கு மேல் அந்தக் கேள்விக்குப் பதில் எழுதச் செலவழிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற கேள்விகளுக்குப் பதில் எழுதப் போதிய நேரம் இருக்காது. கடைசியில் அரக்கப் பரக்கத் தப்பும் தவறுமாகப் பதில் எழுத வேண்டும்.
நான் இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டுத் தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அன்று கணக்கியல் தேர்வு. ஒரு பெரிய கணக்கைக் கொடுத்திருந்தார்கள். கணக்கு என்னவோ சுலபமாகத்தான் தோன்றியது. ஆனால் அதில் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருந்தது. கணக்கை முழுதுமாகச் செய்து முடிக்க 20 நிமிடங்கள் பிடிக்கும் என்று தோன்றியது. எவ்வளவு மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அங்கே ஒரு அதிர்ச்சி. வெறும் 3 மதிப்பெண்கள்தான்.
இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று மீண்டும் ஒருமுறை கணக்கை ஊன்றிப் படித்தேன். அந்தக் கணக்கை முழுவதுமாகச் செய்து முடிக்கத் தேவையில்லை. முதல் இரண்டு படிகளை முடித்தால் மட்டுமே போதுமானது என்று சின்ன எழுத்தில் கடைசியில் சொல்லியிருந்தார்கள். மகிழ்ச்சியுடன் அந்த இரண்டு படிகளைச் செய்து விட்டு மற்ற கணக்குகளுக்குச் சென்றுவிட்டேன்.
தேர்வு முடிந்தவுடன் என் நண்பன் சொன்னான் (இன்று அவன் காப்பீட்டுக் கழகத்தில் பெரிய அதிகாரியாக இருக்கிறான்) ஈசியாத்தான் இருந்துச்சி. ஆனா நேரம்தான் பத்தல.
ஆமா, மூணாவது கணக்க முழுசாப் போட்டியா?
என்று கேட்டேன்.
ஆமா, போட்டுத்தானே ஆகணும்.
அவனிடம் நான் கோடிட்ட வரிகளைக் காண்பித்தேன். தலையில் அடித்துக் கொண்டான்.
ஒருவகையில் நம் வாழ்க்கையும் அப்படி ஒரு கேள்வித்தாளைத்தான் நமக்கு முன் வைக்கிறது. கேள்வியைச் சரியாகப் படிக்காமல் நாம் தேவையில்லாதவற்றை எல்லாம் எழுதி நேரத்தை வீணாக்குகிறோம். ஒரு நடிகையின் வியாபார நோக்கத்துடன் கேள்வியைப் படிக்கும் போதுதான் அதில் உள்ள சூட்சுமம் விளங்குகிறது. தேவையானவற்றை மட்டும் எழுதுவதால் நமக்கு நேரம் மிஞ்சுகிறது. அந்த நேரத்தை மற்றக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் செலவழிக்கலாம். வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்..
ஆக நம் திறமைகளைப் பொட்டலம் போடுவதில் முதல் பாடம் அளவுகளைப் பற்றியது. ஒரு நடிகையின் உடையைப் போல் அளவுகளில் அதீதக் கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாவது, நாம் போடும் பொட்டலம் சுத்தமாக,, பார்க்க அழகாக, மற்றவர்கள் விரும்பும்படியாக இருக்க வேண்டும். நீங்கள் சுவையான ஜிலேபி செய்துவிட்டு அதை அழுக்குக் காகிதத்தில் பொட்டலம் கட்டிக் கொடுத்தால் யார் வாங்குவார்கள்? ஜிலேபியைச் சுற்றும் காகிதம்தான் நமது பேச்சுத் திறமை. நமக்கு மொழி மேல் உள்ள ஆளுமை.
ஒரு சமயம் கோவையைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தினர் தங்கள் கம்பெனிகளின் பங்குகள் விற்பனையை விளம்பரப்படுத்துவதற்காக எஸ்.வி.சேகரின் நாடகக் காட்சியை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தனர். ஆயிரம் பேர் கூடியிருந்தோம். அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி – அவர் ஒரு பட்டயக் கணக்காளர் – chartered accountant - அந்தக் கம்பெனியின் பங்குகளைப் பற்றி அரை மணி நேரம் பேசினார்.
ஒரு இழவும் புரியவில்லை. காலாகாலத்தில் நாடகத்தைப் போடுங்கள் ஐயா
என்று ஆங்காங்கே குரல் எழும்பியது. நிறுவனத்தின் தலைவருக்குப் புரிந்துவிட்டது – தலைமை நிதி அதிகாரிக்குச் சரியாகப் பேசத் தெரியாததால் சொதப்பிவிட்டார் என்று. சில லட்சங்கள் செலவழித்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி வீணாகி விட்டதே என்று கவலைப்பட்டார்.
அவருக்கு ஒரு வழி புலப்பட்டது. தலைமை நிதி அதிகாரியிடம் இன்னும் பத்து நிமிடங்கள் இதே ரீதியில் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு நகைச்சுவை நடிகர் எஸ். வி. சேகரைத் தனியே தள்ளிக் கொண்டு போனார்.
கம்பெனியின் பங்குகள், அதன் தன்மைகள் அதை வாங்குவதால் வரும் நன்மைகள். பங்கில் வரும் ஈவுத் தொகை (dividend) எப்படிக் கணக்கு செய்யப்படும், வாங்கிய பங்குகளை லாபத்தோடு விற்பது எப்படி என்று சேகருக்கு வகுப்பெடுத்தார். அவர் பேசி முடித்தவுடன் நீங்கள் பத்து நிமிடங்கள் பேசிவிட்டுப் பிறகு நாடகத்தைப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பத்து நிமிடங்களில் நகைச்சுவை நடிகர் பின்னிவிட்டார். அவர் பேச்சைக் கேட்ட மக்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகள் மேல் ஆர்வம் வந்தது. பங்குகள் அமோகமாக விற்றன. பங்குகளைப் பற்றிய விவரங்களைக் கரைத்துக் குடித்திருந்த அந்த நிதி அதிகாரிக்கு மக்களுக்குப் புரியும் வகையில் அதை எடுத்துச் சொல்ல முடியவில்லை. பங்குகளைப் பற்றி அவ்வளவாகப் படிக்காத ஒரு நகைச்சுவை நடிகர் அதே பணியைத் திறம்படச் செய்தார். பங்குகளைப் பற்றிய விவரங்களை நிறுவனத்தலைவர்தான் கொடுத்தா.ர்,. நகைச்சுவை நடிகர் அதை அழகாகப் பொட்டலம் போட்டார். அவ்வளவுதான்.
05 உங்களுக்கு எழுத்தார்வம் எப்போது, எப்படி வந்தது?
39 வது வயதில்தான் எழுத ஆரம்பித்தேன். வாழ்க்கையைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்க்கக் கத்துக்கொண்டால் போதும். அப்பறம் எழுதாமல் இருப்பதுதான் பெரிய கஷ்டம்.
06 நீங்கள் எழுதியதைப் படித்த முதல் மனிதர் யார்? கிடைத்த முதல் விமர்சனம் நினைவு இருக்கிறதா?
நான் எழுத ஆரம்பித்துப் பல வருடங்கள் வரை நான்தான் எழுதுகிறேன் என்று என் நண்பர்களுக்குத் தெரியாது. என் எழுத்தை எப்போதும் முதலில் படிப்பவள் என் மனைவிதான். கதையை அனுப்பும் முன் அவள் படித்துவிடுவாள். அவளுடைய விமர்சனம் கொஞ்சம் காட்டமாகவே இருக்கும்.
முதலில் பெரிய அளவுக்குப் பேசப்பட்ட கதை என்னுடைய ‘ஆசையில் ஒரு கடிதம்’ தான். வெளிநாட்டில் கணவன் வேலை செய்கிறான். இங்கே மனைவி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கிறாள். இதை என் மனைவியும் தெரிந்த சிலரும் ஆபாசம் என்றார்கள். இன்னும் சிலர் உங்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது?
என்று கேட்டார்கள். ஆனந்தவிகடனின் நிர்வாக ஆசிரியரிடம் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இது என்னோட முதல் கதை சார்
என்று அவரிடம் மார்தட்டிக்கொண்டேன். நம்பவே முடியலையே
என்ற அவருடைய பதில்தான் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தது.
வரலொட்டி என்பது நான்தான் என்று தெரியாமலேயே ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் இந்த வாரம் விகடன்ல வந்திருக்கற கதையப் படிச்சீங்களா ஸ்ரீதர்? யாரோ வரலொட்டியாம். அவனை எல்லாம் நிக்க வச்சிச் சுட்டாத்தான் என்ன?
என்று கோபத்தில் கத்தினார். சிரிப்பை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்.
பாலுணர்வைத் தூண்டும் வகையில் கதை எழுத மாட்டேன். ஆனால் கதையில் பாலுணர்வைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் தயங்காமல் விரசமில்லாமல் சொல்வேன். என் கதையை மூன்றாம் வகுப்புப் பாடப் புத்தக்கத்தில் போட வேண்டும் என்று நான் ஒரு நாளும் சொன்னதில்லை. ஆனால் உரிய வயதில் பக்குவமான மனது உடையவர்கள் படிக்கும் கதைகளில் பாலுணர்வைக் கதையின் தேவைக்காகக் கோடிட்டுக் காண்பிப்பது தவறில்லை என்பது என் கருத்து.
07 வாழ்க்கையில் சிலர் வரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் சபிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வரம் பெற்றவர்கள் வாழ்ந்துவிடுகிறார்கள். சபிக்கப்பட்டவர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவது..
அவர் ஒரு புகழ் பெற்ற, சக்தி வாய்ந்த முனிவர். அவருடைய ஆசிரமம் ஒரு வளமான கிராமத்தை ஒட்டியிருந்த காட்டில் இருந்தது. அவரிடம் பல சீடர்கள் இருந்தார்கள். அந்த முனிவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள். மனைவி இறந்துவிட்டாள். அந்த முனிவரின் பிரதான சீடரின் பெயர் மான்யர். மான்யர் பல வருடங்கள் கற்ற பின் குருவின் ஆசியுடன் இமயமலை சென்று அங்கு தவம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் முனிவர் மகாசமாதியடைய வேண்டிய நேரம் வந்தது. தன் குழந்தைகளுக்கும் சீடர்களுக்கும் ஆசி வழங்கிவிட்டு உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார் அந்த உத்தம முனிவர். அப்போது முனிவரின் மகனுக்கு வயது 14. மகளுக்கு வயது 8.
முனிவரின் குழந்தைகள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள். ஆசிரமத்தில் நிறைய எருமை மாடுகள் இருந்தன. அதுபோக ஊர் மக்கள் வழங்கிய தானியங்கள் வேறு இருந்தன. ஆசிரமத்தைச் சுற்றிலும் காய்கறித் தோட்டம். எந்தக் கவலையும் இல்லாமல் முனிவரின் குழந்தைகள் விளையாட்டிலேயே காலத்தைக்