En Per Aandal
()
About this ebook
முகவுரை எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை. (அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)
புத்தகம் எழுதுபவர்களுக்கு, புத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவது: புத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரி ‘பிரமாதமான’த் தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிடுவார்.
முகவுரையை அப்படிச் சுலபமாகச் செய்ய முடியாது. முகவுரை எழுதுபவர் நண்பராக இருந்தால் நல்லது. எழுதி கொடுத்த பிறகும் தொடர்ந்து நண்பராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது அச்சத்தால்!) ஓஹோ என்று பாராட்டி எழுதி விடுவார். புத்தகம் வெளியான பிறகு யாரும் அவரைக் கேள்வி கேட்டு குதறி எடுக்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்!.
என் நண்பர் சுஜாதா தேசிகன், தன் புத்தகத்திற்கு நான்தான் முகவுரை எழுத வேண்டும் எண்று கண்டிப்புடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே அவருடைய கதைகளை, வலைப்பூவில் வந்த போது படித்துப் பாராட்டிக் கடிதம் எழுதியிருப்பதாலும் முகவுரை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
வெவ்வேறு தளங்களில் கடந்த பல மாதங்களில் கதைகளைப் படித்து இருந்தாலும் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை, இப்போது தொகுப்பாகப் படிக்கும்போது, அதுவும் முன்னுரை எழுத வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கும்போது, புதிதாகப் பல சிறப்புகள். வித்தியாசமான பதப்பிரயோகங்கள், அதிரடியான திருப்பங்கள், மின்னல் போன்ற வர்ணனைகள் கண்ணில் பட்டன; ரசிக்கவும் முடிந்தன!
தமிழ் மொழி எத்தனையோ வகைப்படும். கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், மதுரைத் தமிழ், புகழ் பெற்ற மெட்ராஸ் தமிழ் (ஒரு காலத்தில் டிவியால் வளர்க்கப்பட்ட) ஜுனூன் தமிழ் என்று பல தமிழ்களுடன், பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ், (அரசியல் மேடைகளில் முழங்கும்) வசைத் தமிழ் என்று பலப் பல! சமீபகாலங்களில் கணினித்துறையில் உள்ள இளைஞர்கள் கதை எழுதுகிறர்கள். ஆன்மீகம் அலசுகிறார்கள்; நாலாயிரம் ரசிகர்களாக இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அவர்கள் எழுதும் (கணினித்?) தமிழ் வித்தியாசமான நடையில் இருப்பது மட்டுமல்ல, ஒரு வித ஈர்ப்புடனும் இருக்கிறது.
சுஜாதா தேசிகன் ஒரு கணிப் பொறியாளர். அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவருடைய தமிழ் நடை அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. பலர் இந்த நடையில் எழுதுகிறார்கள் என்றாலும், அதில் ஒரு சிலர் தான் பிசிறு இல்லாமல் எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் சுஜாதா தேசிகன்.
சின்னச் சின்ன சம்பவங்களிலும் ஒரு சுவாரசியமான கதை அம்சம் இருப்பதை இவருடைய கட்டுரைகள் காட்டுகின்றன. ஓட்டத்தைத் தடைபடுத்தாத, திடீரென்று ப்ரேக்கை அழுத்தி விடுவதைப் போன்று சில சொடக்குகள். அது வார்த்தையாக இருக்கலாம். நையாண்டி அடைமொழியாக இருக்கலாம். வர்ணனையாக இருக்கலாம். ஏன் முழு வாக்கியமாகவும் இருக்கலாம் அது கதைக்கு நேர்த்தியைச் சேர்த்து விடுகிறது. இது என் அனுபவம்.
இந்த தொகுதியில் உள்ள கதை, கட்டுரைகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப் போவதில்லை. அவைகளைச் சிபாரிசு செய்கிறேன்.
சுஜாதா தேசிகனுக்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு இருப்புது பல இடங்களில் தெரிகிறது. அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தின் மண்ணின் மணமும், காவிரித் தண்ணீரின் சுவையும் அவர் எழுத்தில் பிரதி பலிக்கின்றது.
நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி “என்னமா கல கல என்று இருக்கிறது!” என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன்.
சில கட்டுரைகள் டெக்னிகலாக உள்ளன. என்னைப் போன்ற அப்பாவிகளை மிரட்டுகின்றன! இந்த முகவுரையை பார்த்த பிறகு அந்தக் கட்டுரைகளை நீக்கிவிட்டிருந்தாலும் நீக்கி இருப்பார்!
மொத்தத்தில் சுஜாதா தேசிகன் ஒரு ‘யூசர் ஃப்ரெண்ட்லி’ புத்தகத்தைத் தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள்!
பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு)
அக்டோபர் 2012
Related to En Per Aandal
Related ebooks
Kaadhal Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Thaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsArangabavan Rating: 5 out of 5 stars5/5Phone Off Pannittu Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kanakaalam Rating: 0 out of 5 stars0 ratingsAayudham Unakkulle!... Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsIvvidam Yaavarum Nalam Rating: 0 out of 5 stars0 ratingsNee Nadhi Pola Odikondiru... Rating: 4 out of 5 stars4/5Vanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsSabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kadalukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsCharectero Charecter! Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsShantha Yen Azhugiral? Rating: 0 out of 5 stars0 ratingsPon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Vaigarai Velaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Cherryblossomum Innum Sila Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsNeram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Per Aandal
0 ratings0 reviews
Book preview
En Per Aandal - Sujatha Desikan
http://www.pustaka.co.in
என் பேர் ஆண்டாள்
En Per Aandal
Author:
சுஜாதா தேசிகன்
Sujatha Desikan
For more books
http://www.pustaka.co.in/home/author/sujatha-desikan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
சுஜாதாவின் எழுத்தை
அறிமுகம் செய்த அப்பாவிற்கு
எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாக சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்க தான் செய்கிறது. இந்த கட்டுரைகள் அப்படி எழுதியது தான். சொல்லும் போது (அறிவியல் கட்டுரைகளை தவிர) கொஞ்சம் மிகைப்படுத்தி பொய்யும் சேர்ந்து விடுகிறது.
சில கட்டுரைகள் ஆனந்த விகடன், சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் வந்தவை.
அவர்களுக்கு என் நன்றி!
சுஜாதா தேசிகன்
பெங்களூர்
உள்ளே
முகவுரை
அனுபவம்
பேருக்கு ஒரு முன்னுரை
என் பேர் ஆண்டாள்
அமுதன்
PAN
எலக்ட்ரானிக்ஸ் கனவுகள்
கலர்க் கனவுகள்
பேட்மேன் பேல்பூரி
துப்பாக்கி நண்பர்கள்
சுஜாதா
சுஜாதாவும் நானும்
அப்போலோ தினங்கள்
லிப்டுக்கு இரண்டு கதவு
ரங்கராஜனும் ரங்கநாதனும்
பொது
கூட்டம்
டெலிபோன் மணி போல்...
மெய் அது பொய்
ஆட்டோவில் போன அசோகமித்திரன்
ஆய கலைகள் கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை
அறிவியல்
லொஸ்கு
லொட்டு லொஸ்கு
சக்கரை இனிக்கிற சக்கரை
சீனிகம்
சொடக்கு
உயிரின் உயிரே
ராக்கெட் வண்டுகள்
பயணகள்
திருமெய்யம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
நவ திருப்பதி
மதுரை திவ்யதேசங்கள் மூன்று
கும்பகோணம்
திருப்பதி
திண்ணனூர் திருஎவ்வுள்
தொட்டமளூர்
சொர்க்கம் நரகம் இடைவெளி 250 Km
பெங்களூர் to பெங்களூரு
மேல்கோட்டையில் ஒரு நாள்
திருவரங்கத்து அமுதனார் திருமாளிகை
நம்பி இருந்த வீடு
நம்பி தெரு நம்பிக்கை விநாயகர்
பயணம் தரும் பாடங்கள்
முகவுரை
முகவுரை எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை. (அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)
புத்தகம் எழுதுபவர்களுக்கு, புத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவது: புத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரி ‘பிரமாதமான’த் தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிடுவார்.
முகவுரையை அப்படிச் சுலபமாகச் செய்ய முடியாது. முகவுரை எழுதுபவர் நண்பராக இருந்தால் நல்லது. எழுதி கொடுத்த பிறகும் தொடர்ந்து நண்பராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது அச்சத்தால்!) ஓஹோ என்று பாராட்டி எழுதி விடுவார். புத்தகம் வெளியான பிறகு யாரும் அவரைக் கேள்வி கேட்டு குதறி எடுக்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்!.
என் நண்பர் சுஜாதா தேசிகன், தன் புத்தகத்திற்கு நான்தான் முகவுரை எழுத வேண்டும் எண்று கண்டிப்புடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே அவருடைய கதைகளை, வலைப்பூவில் வந்த போது படித்துப் பாராட்டிக் கடிதம் எழுதியிருப்பதாலும் முகவுரை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
வெவ்வேறு தளங்களில் கடந்த பல மாதங்களில் கதைகளைப் படித்து இருந்தாலும் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை, இப்போது தொகுப்பாகப் படிக்கும்போது, அதுவும் முன்னுரை எழுத வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கும்போது, புதிதாகப் பல சிறப்புகள். வித்தியாசமான பதப்பிரயோகங்கள், அதிரடியான திருப்பங்கள், மின்னல் போன்ற வர்ணனைகள் கண்ணில் பட்டன; ரசிக்கவும் முடிந்தன!
தமிழ் மொழி எத்தனையோ வகைப்படும். கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், மதுரைத் தமிழ், புகழ் பெற்ற மெட்ராஸ் தமிழ் (ஒரு காலத்தில் டிவியால் வளர்க்கப்பட்ட) ஜுனூன் தமிழ் என்று பல தமிழ்களுடன், பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ், (அரசியல் மேடைகளில் முழங்கும்) வசைத் தமிழ் என்று பலப் பல! சமீபகாலங்களில் கணினித்துறையில் உள்ள இளைஞர்கள் கதை எழுதுகிறர்கள். ஆன்மீகம் அலசுகிறார்கள்; நாலாயிரம் ரசிகர்களாக இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அவர்கள் எழுதும் (கணினித்?) தமிழ் வித்தியாசமான நடையில் இருப்பது மட்டுமல்ல, ஒரு வித ஈர்ப்புடனும் இருக்கிறது.
சுஜாதா தேசிகன் ஒரு கணிப் பொறியாளர். அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவருடைய தமிழ் நடை அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. பலர் இந்த நடையில் எழுதுகிறார்கள் என்றாலும், அதில் ஒரு சிலர் தான் பிசிறு இல்லாமல் எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் சுஜாதா தேசிகன்.
சின்னச் சின்ன சம்பவங்களிலும் ஒரு சுவாரசியமான கதை அம்சம் இருப்பதை இவருடைய கட்டுரைகள் காட்டுகின்றன. ஓட்டத்தைத் தடைபடுத்தாத, திடீரென்று ப்ரேக்கை அழுத்தி விடுவதைப் போன்று சில சொடக்குகள். அது வார்த்தையாக இருக்கலாம். நையாண்டி அடைமொழியாக இருக்கலாம். வர்ணனையாக இருக்கலாம். ஏன் முழு வாக்கியமாகவும் இருக்கலாம் அது கதைக்கு நேர்த்தியைச் சேர்த்து விடுகிறது. இது என் அனுபவம்.
இந்த தொகுதியில் உள்ள கதை, கட்டுரைகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப் போவதில்லை. அவைகளைச் சிபாரிசு செய்கிறேன்.
சுஜாதா தேசிகனுக்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு இருப்புது பல இடங்களில் தெரிகிறது. அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தின் மண்ணின் மணமும், காவிரித் தண்ணீரின் சுவையும் அவர் எழுத்தில் பிரதி பலிக்கின்றது.
நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி என்னமா கல கல என்று இருக்கிறது!
என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன்.
சில கட்டுரைகள் டெக்னிகலாக உள்ளன. என்னைப் போன்ற அப்பாவிகளை மிரட்டுகின்றன! இந்த முகவுரையை பார்த்த பிறகு அந்தக் கட்டுரைகளை நீக்கிவிட்டிருந்தாலும் நீக்கி இருப்பார்!
மொத்தத்தில் சுஜாதா தேசிகன் ஒரு ‘யூசர் ஃப்ரெண்ட்லி’ புத்தகத்தைத் தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள்!
பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு)
அக்டோபர் 2012
அனுபவம்
பேருக்கு ஒரு முன்னுரை
தமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் வாம்மா மின்னலு
என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும்.
இந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா? இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது.
கோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின்ன பையனாகதான் காட்சி தருவார். கூடவே மயில் இருக்கணும். இல்லை என்றால் அவரை நாம் முருகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெருமாள் எப்படி இருப்பார் என்று தெரியாத காரணத்தால்தான் இன்று பழனி முருகனும், பிள்ளையாரும் அக்கரலிக் பெயிண்டால் காலண்டரில் ஜொலிக்கிறார்கள்.
பேர்ல என்ன இருக்கு?
என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். வாட்ஸ் இன் அ நேம்
? என்று ஷேக்ஸ்பியர் கேட்டதை அவரே மறந்து இருக்கக்கூடும். ஆனால் நாம் அதை மறக்கவில்லை. நரசிம்மன், கோவிந்தராஜன், ஜெகந்நாதன், ராஜகோபாலாச்சாரி போன்ற பெயர்கள் கேட்டவுடன் உங்களுக்கு உடனே ஒரு வயதான பிம்பத்தைத் தரும். ஏன் என்றால் உங்களுக்குத் தெரிந்த இந்தப் பெயர்களில் இருப்பவர்கள், மாமாக்களோ, தாத்தாக்களோ. இதே பெயர்கள் தற்போது நரேஷ், கோவிந்த், ஜெகன், ராஜ் என்று சுருக்கப்பட்டதால் வயதும் கம்மியாகிவிட்டது போல் தோன்றுகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக பெயர்கள் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது அதிகமாகும். சில ‘விதி’ விலக்குகள் இருக்கின்றன. என் பெயர் சிறியதுதான்; தேசிகன்
. அதற்கே, ஓ நீங்கதான் தேசிகனா? நான் கொஞ்சம் வயசானவரா எதிர்ப்பார்த்தேன்
என்று சொன்னவர்களின் லிஸ்ட் நீளம்.
சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்
என்றார். நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்
என்றேன். தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது.
சுஜாதா
என்ற பெயர் எப்போதோ ஆண் பெயராகி விட்டது என்று எழுத்தாளர் சுஜாதாவே என்னிடம் அடிக்கடி சொல்லியுள்ளார். சிம்ரன், ஸ்ரேயா, ஸ்நேகா எல்லாம் சீசனுக்குத் தகுந்தாற் போல அழகானவர்களின் பெயர்களைக் குறிக்கும். சில சமயங்களில் யாராவது இந்தப் பெயர்களை, தங்கள் பெயரென்று சொல்லிவிட்டால், படக்கூடாத இடத்தில் அமிர்தாஞ்சன் பட்ட மாதிரி இருக்கும். காரணம் நமக்கு இந்த பெயர்களினால் ஏற்படும் பிம்பம் தான்! விகடன், குமுதம் போன்ற பத்திரிகையில் பார்த்திருக்கலாம் தற்போது உள்ள கதாநாயகன், கதாநாயகிகளுக்கு வயதானால்...
என்று போட்டு ஓவியர்கள் கற்பனை செய்து வரைந்திருப்பார்கள். அந்தப் படத்திலும் இளமை எட்டிப்பார்க்கும்.
மீரா, மாலதி, ரஞ்சனி, காயத்ரி, அனன்யா, ரூபா எல்லாம் நேரில் பார்க்காதவரை வயதைக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள். இன்றைக்கும் என் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்றால் ஏன் சார், சின்னப் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிங்க?
என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் திருப்பாவை எழுதிய ஆண்டாள் சின்ன பெண்தான். ஆண்டாள் என்பது பாட்டி பெயர்! பாட்டி என்றால், கோமளவல்லி, சூடாமணி, ரங்கநாயகி என்று இருப்பதுதானோ மரபு?
யாராவது இவங்க தான் ஸ்ரேயா பாட்டி
என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே?
அந்தப் பாட்டிக்கே பெயர் ஸ்ரேயா
என்றால்... எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? அதே அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் முன் கிடைத்தது. சொல்கிறேன்
அப்போது நான் சென்னையில் இருந்தேன். இணையத்தில் எழுத ஆரம்பித்த காலம். யாராவது நீங்க எழுதியது சூப்பர்
என்று மின்னஞ்சல் அனுப்பினால் நோபல் பரிசே கிடைத்துவிட்ட சந்தோஷம் ஏற்படும். ஒருநாள் என்னை பாராட்டி ஒரு பெண் வாசகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தானும் ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் வேறு! கேட்கவா வேண்டும்? பெங்களூர் வரும் வேலை இருக்கிறது என்று சொன்னவுடன், கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா? கொஞ்சம் யோசிக்கற மாதிரி பாவ்லா செய்துவிட்டு சரி
என்றேன்.
பெங்களூர் வந்து சேர்ந்தவுடன் தொலைபேசியில் பேசினேன் ஓ! நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா? நாங்க கோரமங்களா... நீங்க அப்படியே பி.டி.எம் பக்கமா வந்தீங்கனா ஈஸி. உங்களுக்காக சக்கரை பொங்கல் செஞ்சு ரெடியா வெச்சிருக்கேன்
என்று சொன்னார். (அன்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’). என்ன டிரஸ் இது? ரிசப்ஷனுக்கா போறீங்க? நல்ல யங்கா டி. ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகிட்டு காஷுவலா போங்க
என்று வழி அனுப்பி வைத்தாள் என் மனைவி. நான் அட்ரஸ் குறித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து, விசாரித்துக் கொண்டே அவர்கள் வீட்டைச் சென்றடைந்தேன். வீட்டுக் கதவைத் தட்டியவுடன் வயதானர் ஒருவர் கதவைத் திறந்தார்.
என்ன வேண்டும்?
நான் தேசிகன்
என்று சொன்னவுடன், ஓ, நீங்க தானா அது?
என்று அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு அம்மணி வந்து நீங்க...
என்று ஆரம்பித்தபோது மீண்டும் தேசிகன்
என்றேன். இவங்கதான் வாசகியா என்று அதிர்ந்த மனதை, சே, அப்படி இருக்காது, அவங்க பொண்ணாயிருக்கும், வருவாங்க
என்று அவசர சமாதானம் செய்தேன்.
என்ன தேசிகனா? உங்க பேரைக் கேட்டதும் நீங்க ஏதோ வயசானவரா இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுவும் நீங்க சுஜாதாவோட நெருங்கிய நண்பர், ஆழ்வார் திவ்வியதேசம், பத்தி எல்லாம் எழுதறீங்க
என்று அந்த அம்மணி அடுக்கிக்கொண்டே போக... ஊர்ஜிதமாகிவிட்டது, இவர்தான். இவரேதான். இவ்வளவு சின்னவனாக நான் இருப்பது ஏதோ தெய்வகுற்றம் போல் பார்த்தார். நல்ல வேளையாக மீசை இருந்தது. இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கலுக்குப் பதில் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துவிட்டு அனுப்பியிருப்பார்.
அதே அதிர்ச்சி எனக்கும் இருந்தது. உங்க பேரும் ரொம்ப யங்கா இருந்ததால நான் டி-ஷர்ட் எல்லாம் போட்டுண்டு வந்தேன் பார்க்க இப்படி இருக்கீங்களே
என்று சொல்ல நினைத்தேன்.
அப்புறமாவது நான் சும்மா இருந்திருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியாமல் மேஜை மீது வைத்திருந்த ஒரு ஃபேமலி போட்டோவைக் காண்பித்து இதுதான் உங்க பொண்ணா?
என்றேன்.
என்னது இது? இவ என் பேத்தி. பக்கத்தில் இருப்பதுதான் அவ குழந்தை
என்றார். இப்போது அவரும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பதுதானே சம்பிரதாயம்? கேட்டார்.
திருச்சியில் எங்கே இருந்தீங்க?
நான் சொன்ன பதிலைக் கேட்டு உடனே, உங்க அப்பா நானி தானே?
என்றார் மகிழ்ச்சியாக.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆமாம்
என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருந்தபோது நானி பையன் தேசிகனாடா நீ... அட, ஏண்ணா... இவனைத் தெரியலை உங்களுக்கு? இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா? எப்படித் தெரியும்? நான் உங்காத்துக்கு வந்தபோது நீ சின்னப் பையன், டிரவுசர் போட்டுண்டு (நல்ல வேளை!) ஓடிண்டிருப்பே, உனக்கு என்னை நெனைவு இருக்காது...
ஐயங்கார் எல்லாம் குளோஸ்டு கம்யூனிட்டி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு குளோஸா இருக்கும் என்று நினைக்கவில்லை. புரியாமல் நீங்க யாருன்னு தெரியலையே?
என்று திரும்பவும் அப்பாவியாகக் கேட்டேன்.
என்ன அப்படிக் கேட்டுட்ட... ம்ம்... எப்படிச் சொல்றது? எங்க அம்மாவுக்கு உங்க பாட்டி அத்தை... அப்ப அம்மங்கா... நான் அம்மங்காவுட பொண்ணு... ஒன்றுவிட்ட முறை பையன்
என்றார். என் அகராதியில் மாவடுக்கு அடுத்து அம்மங்கா சேர்ந்து கொண்டது.
அதற்குப் பிறகு தேசிகன் என்ற பெயரைச் சுருக்கி தேசி
என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தார். வயது கம்மியாகிவிட்டது இல்லையா?
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சமயம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்த இது தேவையாக இருக்கிறது.
சில வாரங்களுக்குமுன் எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் என் கதையைப் ஒன்றை படித்துவிட்டு இவ்வாறு மெயில் அனுப்பியிருந்தார்:
உங்கள் கதையைப் படித்தேன். இனிமேல், தேசிகன் என்ற பெயரைவிட, அத்துடன் கூட ஏதாவது சேர்த்துக் கொண்டு எழுதுவது பெட்டர். இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போல இதுவும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று மாதிரி ஆகிவிடும்
என்று சொல்லிவிட்டு கூடவே சில பெயர்களும் கொடுத்துவிட்டு "‘எனக்கு நீங்கள் சுஜாதா தேசிகன்
என்ற பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்று என்று பின்குறிப்பாகவும் ஆசீர்வாதமாகவும் எழுதியிருந்தார்.
என் பேர் ஆண்டாள்
செப்டம்பர் 29 எனக்கு ஹாப்பி பர்த்டே. நான் 2000-பார்ன். இன்னும் எனக்கு நாலு வயசு ஆகலை. சிக்கரமே எனக்கு பேச்சு வந்துடுத்து. சாக்லேட் ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிடிக்காது. எங்கயாவது எனக்கு தெரியாம ஒளிச்சு வெச்சிடுவா.
அப்பறம் POGO பார்ப்பேன். என் பேர் ஆண்டாள். என்னை கேட்காமலே அப்பா எனக்கு இந்தப் பேர் வெச்சுட்டா.
நான் பொறந்த உடனே என்ன பார்க்க நெறைய பேர் வந்தா. எல்லாரும் என்னை ‘புஜ்ஜி’, ‘அம்மு குட்டி’ன்னு கொஞ்சிட்டு, என் அப்பாட்ட ‘கொழந்தக்கு என்ன நட்சத்திரம்’ன்னு கேப்பா. எதுக்குனு தெரியலை. அப்பறம் என்ன பேர்ன்னும் கேப்பா.
இப்டிதான் அப்பாகிட்ட எங்காத்து மாமா, ‘மாப்பிளே! குழந்தைக்கு என்ன பேர் வைக்க போகிறேள்’ன்னு கேட்டா
‘ஆண்டாள்’
‘ஆண்டாளா? நல்ல பேர்! ஸ்கூல் பேர் என்ன?’
‘ஆண்டாள் தேசிகன்'
‘ஜோக் அடிக்காதிங்க மாப்பிளே, நல்ல ஃபேஷனா ஒரு பேர் வையுங்க பிற்காலத்துக்கு உதவும்'
‘நிஜமாகவே ஆண்டாள் தான் அவ பேர்.'
‘அப்புறம் உங்க இஷ்டம்' ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.
அப்பறம் என் அம்மாவோட ஃபிரண்டு ஒரு நாள் என்னப் பாக்க எங்காத்துக்கு வந்தா. அமெரிக்காவ்லேருந்து எனக்கு டெட்டி பொம்மை வாங்கிண்டு வந்திருந்தா. வைட் கலர். அழகா என்னைப் பார்த்து சிரிச்சுது. அம்மா அவாளுக்கு காப்பி கொண்டுவர கிச்சனுக்குப் போனா. நான் மட்டும் ஹால்ல இருந்தேன்.
‘What is your name?’
‘ஆண்டாள்'
'What?... உன் பேர் என்ன?'
‘ஆண்டாள்'
அதுக்குள்ள என் அம்மா வர...,
‘Hey I could’nt understand what she is saying… what’s her name?’
‘ஆண்டாள்’ன்னு அம்மா சொல்ல
'What? You should be crazy. Hey come on ya, ஸ்ரீரங்கத்தில கூட இப்பெல்லாம் இந்தப் பேர் வைக்கரதில்லை'ன்னு அவங்க பங்குக்கு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
அம்மாக்கு ஒரே வருத்தம். அப்பாகிட்ட சொல்லி என் பெயரை ‘சம்யுக்தா’ன்னு மாத்தலாமான்னு கேட்டா. அப்பா அதுக்கு ஒத்துக்கவே இல்லை. எங்கிட்ட யாருமே கேக்கவே இல்ல.
அப்பறம் ஒரு நாள் எனக்கு ஒரே ஜுரம். அப்பா, அம்மா என்னை டாக்டர் கிட்ட அழைச்சிண்டு போனா. அங்கே ரெஜிஸ்டரேஷன் பண்ணும்போது ஒரு நர்ஸ், ‘குழந்தையோட பேர் என்ன?’ன்னு கேட்டா.
அப்பா, ‘ஆண்டாள்’ன்னு சொன்னா.
‘என்ன?'
‘ஆண்டாள்'
'Child's Name'
'Andal'
‘சார் குழந்தையின் பேர்'
‘மேடம், குழந்தையின் பேர்தான் ஆண்டாள்’ன்னு அப்பா கொஞ்சம் கோபமா சொன்னா.
டாக்டர் மாமி எனக்கு ஊசி போடலை.