Panankaattu Annachi
By Stella Bruce
()
About this ebook
Read more from Stella Bruce
Meendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsMoondraam Piraigal Rating: 0 out of 5 stars0 ratingsKannaadi Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsViththiyasamaana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsEn Veettu Pookkal Rating: 5 out of 5 stars5/5Agaala Manithan Rating: 5 out of 5 stars5/5Kaathal Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Athu veru Mazhaikkalam Rating: 5 out of 5 stars5/5Oru Muraithan Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsVegu Thoorathil Manam Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kathavugal Thirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5
Related to Panankaattu Annachi
Related ebooks
Indriravu Rating: 5 out of 5 stars5/5Nayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsVazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAthisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Kaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Ella Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Gnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Megalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Aan Manam Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Kudil Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamillaa Malarithu Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Karpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Alli Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Panankaattu Annachi
0 ratings0 reviews
Book preview
Panankaattu Annachi - Stella Bruce
14
1
பனங்காட்டுப் பாண்டி அண்ணாச்சிக்குக் கடைசியில் இப்படி ஒரு அநியாயச் சாவு வந்திருக்க வேண்டாம். சிகரக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கே ரெண்டாவது மைலில் இருக்கும் பெரிய பாலத்தின் பக்கத்தில் கொல்லம் போகிற ரயிலில் அடிபட்டு அரை நிமிசத்தில் அவருக்கு உயிர் போய் விட்டது. எழுபத்தி ரெண்டு வருசம் பார்த்துப் பார்த்து வளர்த்து; நல்லா பாலிஷ்போட்ட தேக்குக் கர்லாகட்டை மாதிரி பளபளவென்று வைத்திருந்த கட்டுமஸ்தான உடம்பு ஒரே நிமிஷத்தில் கருப்பட்டியும் அடுப்புக்கரியும் வைத்திருந்த பழைய சாக்கு மாதிரி நைந்து கூழ் கூழாகிவிட்டது. ஏற்கெனவே பத்து நாளாய் காலரா பரவியது மாதிரி பயந்து நடுநடுங்கி சவம்போல் கெடந்த சிகரக்கோட்டை சனங்கள் பாண்டி அண்ணாச்சியின் இந்தக் கோர மரணம் பற்றிக் கேள்விப்பட்டதுமே பேயறைந்த மாதிரி வெலவெலத்துப் போனாலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பெரிய பாலத்தை நோக்கித்தான் சோறுகூட உண்ணாமல் ஓடினார்கள். அரைமணி நேரத்தில் சிகரக்கோட்டை சனம் பூராவும் அந்த ரயில் பாலத்தின் பக்கத்தில்தான் ஈக்களுக்குப் போட்டியாக ‘ஹே’ன்னு கூடிக் கிடந்தது.
பாத்திகளா; வேட்டியையே காணோம். அடிச்ச அடியில அரைச்சித் தள்ளிருச்சி இஞ்சின்...
ஒரு கை மைல் தள்ளிள்ள கெடக்காம்.
பல்லுங்க மட்டும் அப்பிடியே மொச்சைக் கொட்டை கணக்கா வெள்ளையா தெரியுது...
பாவம் பாண்டி அண்ணாச்சி.. அவுகளுக்கு வந்த மாதிரி சோதனையும் சாவும் யாருக்கும் வரக்கூடாது....
ஆவியா வந்து பழிக்குப் பழி வாங்கறாரா இல்லையா பாரு...
பாண்டி அண்ணாச்சி செத்து ரொம்ப நாளாகியும் கூட ஊர் வாய் ஓயவில்லை. வாய் ஓயாமல் சிகரக்கோட்டை ஆட்கள் பேசிப் பேசிக் கிடந்தார்கள். ஒவ்வொருத்தர் பேசிய பேச்சை வைத்தும் பாண்டி அண்ணாச்சியின் சாவு பற்றி ஒவ்வொரு புஸ்தகம் போடலாம். அவ்வளவு விசயம் இருக்கிறது. பொதுவா பாண்டி அண்ணாச்சி அந்தப் பாலத்துப் பக்கம் தான் தினசரி ‘வாக்கிங்’ போவார். ஆனா சாவதற்கு முன் பத்து நாள் அவர் வாக்கிங் போகிற நிலையில் இல்லையே.. அதனால் வேண்டுமென்றேதான் தண்டவாளத்தில் போய் ரயிலில் தலையைக் கொடுத்துத் தற்கொலைதான் செய்து கொண்டார் என்ற பேச்சு எல்லார் மத்தியிலும் பரவியிருந்தது.
நெசமா தாத்தா அது?
அழகாபுரியில் இருந்து சுப்பையாசாமியைப் பார்க்க வந்திருந்த அவருடைய தம்பி பேரன் செந்தியப்பன் கேட்டான்.
சுப்பையாசாமி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
நானுந்தேன் எத்தினியோ வாட்டி வந்திருக்கேன் சிகரக்கோட்டைக்கு. ஆனா இந்த வாட்டி கணக்கா ஊரே பயங்கரமா கூடிக்கூடிப் பேசிட்டு இருக்கறது இந்த வாட்டித்தேன். வேற எந்த வாட்டியும் இல்லை. ஏய்யப்பா எவ்வளவு பேச்சி - அவுகளைப் பத்தி...
அந்தக் காலத்ல பெறந்தானே - பாண்டி; அப்பப் பிடிச்சே ஏதாச்சும் அவனைப் பத்தி அப்பப்ப பெரிசா பேசி அலையறது இந்தச் சிகரக்கோட்டை சனங்களுக்குப் பழக்கந்தேன்.
அதென்ன தாத்தா - அவுகளை அப்பிடிப் பனங்காட்டுப் பாண்டின்னு கூப்பிடுறாக?
பாண்டியோட பூர்வீகம் வெளாத்தி குளத்துக்குக் கெழக்கே பனங்காட்டுப் பக்கம். அதனால அவனை அப்பிடிக் கூப்பிடற பழக்கம் வந்திருச்சி.
பாண்டி அண்ணாச்சிக்குக் கூடப்பெறந்த அண்ணந் தம்பி, அக்கா தங்கச்சின்னெல்லாம் யாரும் இல்லையாமே?
பாண்டி அவங்க அம்மாவுக்கு ஒத்தப் பிள்ளை.. அதுவும் ரொம்பச் செல்லப்பிள்ளை...
ஆனா சின்ன வயசில பாண்டி அண்ணாச்சி ரொம்பப் பெரிய பணக்காரரு இல்லீயாமே?
ஆனா என்னைக்கும் அவன் ஏழை கெடையாது. அந்த அளவுக்குத் திட்டம் போட்டு பாண்டியை அவனோட அம்மாதேன் சின்ன வயசிலிருந்தே வளர்த்தா. அந்த அசராத வளர்ப்புத்தேன் பின்னாடி பாண்டியை பெரிய பணக்காரனா ஆக்கியது.
பாண்டி அண்ணாச்சியோட அம்மா பேர் என்ன சொன்னீங்க தாத்தா?
சம்பூர்ணம்.
சம்பூர்ணம் தான் ஆசைப்பட்டது போலவே அவளுக்கு புதுசான கருங்கல் குழவி மாதிரி ஒரு ஆம்பளைப் பிள்ளை பிறந்ததும் அவனுக்குத் தன்னுடைய தாத்தா குலசேகரபாண்டியனோட பேரைத்தான் ரொம்பவும் ஆசைப்பட்டு வைத்தாள். ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி சம்பூர்ணம் ஒருநாளாவது கூப்பிட்டிருப்பாளா? சந்தேகம்தான். சந்தேகம்னுகூடச் சொல்ல முடியாது. கூப்பிட்டதே கிடையாதுன்னுதான் சொல்லணும்.
பெத்தவளே மகனை முழுப் பேரைப் சொல்லிக் கூப்பிட்டிராத சமயத்துல ஊர்சனங்கள் மாத்திரம் எப்படி அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடும்?
இன்னும் சொன்னா; ஊர்சனங்க யாருக்குமே சம்பூர்ணத்தோட மகனுக்குக் குலசேகரபாண்டியன் என்கிறதுதான் பேர்னுகூடத் தெரியாது.
எல்லோருக்குமே அவனைப் பனங்காட்டுப் பாண்டின்னு சொன்னாத்தான் தெரியும். ஏன்னா பாண்டியோட அய்யா பெரிய்யா தாத்தா எல்லாருக்கும் பூர்வீகம் வேம்பார் பக்கத்துல இருக்கிற பனங்காடுங்கதான். அதனால் பாண்டியைப் பார்த்து ‘பாண்டி-பனைமரத்தைத் தோண்டி; பாண்டி பனைமரத்துல பாதி...’ன்னு அந்தக் காலத்திலேயே ஆளுக்கு ஆள் பாட்டெல்லாம் வேறு பாடிக் காண்பிப்பார்கள். எல்லாம் பாட்டோடு சரி, எவனாவது அசலூர்காரன் வந்து ஊர்சனங்ககிட்டே குலசேகர பாண்டியனைப் பாக்கணுமேன்னு கேட்டா அப்படிக் கேட்டவனைத்தான் மேலேயும் கீழேயும் பார்ப்பார்கள். இல்லேன்னா பேய்முழி முழிப்பார்கள். ஏன்னா-அவர்களுக்குத் தெரிஞ்சி அந்த ஊர்ல குலசேகர பாண்டியன் என்கிற பேர்ல ஒருத்தரும் கிடையாதே. அதனாலே ஊர்சனம் பூராவும் குலசேகர பாண்டியன் என்கிற பேர்ல அந்த ஊர்ல ஒரு கோழிகுஞ்சு கூட கிடையாதுன்னு ஒரே அடியா அடிச்சிச் சொல்லிடும்! வேலை மெனக்கெட்டு வந்து விசாரிச்சவனுக்கு எப்படி இருக்கும் - அப்படி எல்லாருமே சேர்ந்து சொன்னா? அநியாயத்துக்கு வேர்த்து விறுவிறுத்து நாக்கெல்லாம் தடுமாறில்ல போயிடும் வந்து கேட்டவனுக்கு... அவன் பாவம்; என்ன தலைபோகிற சோலியா வந்தானோ? வந்த அசலூர்காரன் பிறகு ரொம்ப மனசு வருத்தப்பட்டு யோசிச்சி யோசிச்சி ஒவ்வொரு அடையாளமா சொல்லிட்டு வருவான். ‘பனைமரம்’ மாதிரி ஒசரமா நல்லா கறுப்பா இருப்பாரேன்னு வந்தவன், கொஞ்சம் ‘அசந்து மறந்து’ சொல்லும் போதுதான் ஊர்சனங்களுக்கே புரிய ஆரம்பிக்கும். ‘அட, நம்ம பனங்காட்டுப் பாண்டியைக் கேக்குறாக’ என்று மகிழ்ந்து போய் விடுவார்கள்.
இந்த மாதிரி அப்பப்ப அசலூர்காரன்கள் வந்து வந்து கேட்டதுக்குப் பிறகுதான் சிகரக்கோட்டைகாரன்களுக்கே பனங்காட்டுப் பாண்டியோட முழுப் பேர் என்னன்னு தெரிஞ்சது. அந்தப் பனங்காட்டுப் பாண்டி இன்னைக்கி உயிரோட இருந்தால் அவனுக்கு எழுபத்திரெண்டு வயசு. இரண்டு வருசத்துக்கு முந்திவரை பாண்டியோட வயசைச் சொன்னால் நம்புவானா எவனாவது? எவனும் நம்ப மாட்டான். இருக்கவே இருக்காது. எழுவது வயசுன்னு சொல்லி துண்டைப் போட்டுத் தாண்டச் சொன்னாக்கூட தாண்டுவான் கிடந்து ஒவ்வொருத்தனும்...! அப்படி காயகல்பம் சாப்பிட்ட மாதிரி ரொம்ப ‘எக்குத்தப்பான’ உடம்பும் தோற்றமும் பனங்காட்டுப் பாண்டிக்கு - எழுபது வயசிலும்.. அதுவும் ஒத்த முடிகூட தலையில் நரைக்காமல் கொள்ளாமல்...! இதைப் பாத்துக்கிட்டு எந்தப்பயல் சும்மா இருப்பான். வேற விசயமில்லையே இது. வயசு விசயமாச்சே. மனுசப் பயல்கள் அத்தனை பேருக்கும் வயசாயிக்கிட்டு போற விசயம் ஒண்ணுதானே பிடிக்கவே மாட்டேங்குது...!
பாண்டி அண்ணாச்சி! நெசமாவா சொல்றீக ஒங்களுக்கு எழுபது வயசுன்னு...?
கதிரேசன் என்கிறவன் நூறாவது தரம் இந்தக் கேள்வியை பாண்டியிடம் ஒருநாள் கேட்டான்
ஒன் அப்புத்தாமேல சத்தியமா எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுவது வயசு முடியுது.
நம்பவே முடியலை அண்ணாச்சி...
ஒன் பெரிய்யா பவளக்காரன் இருக்கானே... அவன் எங்ககூட நடுத்தெரு பள்ளியூடத்துல ஒண்ணா படிச்சவன்... அதுல தெரிஞ்சிக்க என் வயசை...
எங்க பெரியப்பா யாரு கூடத்தேன் படிக்கலை சொல்லுங்க.. அவுகதேன் ஒவ்வொரு கிளாஸ்லேயும் நாலு நாலு வருசம்ல உக்காந்திருப்பாக...!
நா மட்டும் என்னத்த கிழிச்சேன்னு பாக்குற? நானுந்தேன் ஒத்த ஒத்த க்ளாஸ்லேயும் நாலு நாலு வருசம் படிச்சிருக்கேன்.
அப்ப நீங்க ரெண்டு பேரும் உக்காந்த பெஞ்சே தேஞ்சி போயிருக்கும் தேஞ்சி...!
பவளக்காரன் தம்பி மவந்தான நீ.. ஏன் பேச மாட்டே...?
நீங்கதேன் சொல்ல மாட்டேங்கிறீங்களே அண்ணாச்சி
என்னத்தடா சொல்ல மாட்டேன்கிறேன்?
இத்தனை வயசாகியும் கொஞ்சங் கூட வயசே ஆகாத மாதிரி இருக்கீகளே - அந்த ரகசியத்தைக் கொஞ்சம் எனக்கும் சொன்னாத்தான் என்னவாம்...
அதுவா - அதெல்லாம் ரகசியம்டா...
எனக்கு மட்டும் சொல்லுங்கண்ணாச்சி... நீங்க சொல்றதை நான் ஒத்தர்கிட்டேயும் சொல்லாம இருக்கேன்...
ஒண்ணை நம்ப முடியாதுரா கதிரேசா..
இந்த ஒத்த விசயத்துல என்னை நம்பலாம்.
அப்பிடியா, அப்ப லச்சரூவா கொண்டா. ஒனக்கு மட்டும் சொல்றேன்.
சொல்ல முடியாதுங்கிறதை இப்பிடிச் சுத்தி வளைச்சி சொல்றீங்க.
நீ இப்பிடி அர்த்தப்படுத்திக்கிட்டா நா ஒண்ணுஞ் செய்ய முடியாது.
நீங்கதேன் லச்ச ரூவாயைக் கொண்டான்னு சொல்றீகளே...
ஆமாண்டா.. விசயம் அவ்வளவு பெரிசாச்சே.
அப்ப லச்ச ரூவா கொண்டாந்தாத்தேன் சொல்லுவீக?
திருப்பித் திருப்பி என்னைச் சொல்லச் சொல்லாத. எனக்கு சோலியிருக்கு தலைக்கு மேல...
ஒங்களைக் கேக்கறதுக்கு சும்மா இருந்திட்டுப் போவலாம்.
தெரியுதுல்ல...?
தெரிந்து என்ன செய்ய? கதிரேசன் வேட்டியை மடித்துக் கட்டிக்கிட்டு எந்திரிச்சிப் போவான்.. பேச்சு எப்பவுமே இப்படித்தான் ‘கோணக்கமாணக்க’னு முடிந்து போகும். அது சரி; முடிந்து போகாமல் என்ன செய்யும்? அவனவனுக்கும் பனங்காட்டுப் பாண்டிக்கு மாதிரியே வேற சோலி இல்லையா என்ன? இருக்கிறது! ஆனால் அதையும் பார்க்காமல் வேலை மெனக்கெட்டுக் கேட்டுக் கொண்டே நிற்பவர்களும் உண்டு. ஏன்னா - அவர்களுடைய உடம்பில் எத்தனையோ பாடு இருக்கே! அந்தப் பாடெல்லாம் அவர்களைப் போட்டு பாடாய்படுத்துக்கிறதே! அதில் ஒரு பாடுகூட இல்லையே பாண்டிக்கு. இப்பிடி அக்கடான்னு இருக்கானே - மனுசன்..!
இவர்களுக்கெல்லாம் இப்பப் பிடிச்சே முறுக்குக்கூட திங்க முடியலை. பல்வலி! படி ஏறி இறங்கறதுன்னா ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. ஏன்னா - முட்டிக்கால் பூரா வலி! முந்தியெல்லாம் ஒண்ணுக்குப் போனா - ஒரே நிமிசம். இப்பப் பத்துப் பதினைஞ்சி நிமிசம் ஆகுது. இப்படி எத்தனையோ பாடு இவர்களுக்கு. பாண்டிக்கு இதில் எந்தத் தொந்தரவும் கிடையாது. இது மட்டுமா? அவனவன் அம்பது வயசிலயே காப்பிக்கு சீனிகூடப் போடாம குடிச்சிக்கிட்டு சக்கரை வியாதியில் சீரழிஞ்சிக்கிட்டு திரியற சமயத்துல; இந்தப் பாண்டி மட்டும் எழுவது வயசிலும் காலையில இட்லிக்கும் தோசைக்கும் தொட்டுக்கிட்டு சாப்பிடறதுக்கு எட்டுக் கரண்டி சீனி தான்னு சொன்னா பார்க்கிறவனுக்கு வயித்தைப் பத்திக்கிட்டு எரியாம என்ன பண்ணும்? அதனால் இந்தக் கதிரேசன் பயல் என்ன செஞ்சான் தெரியுமா? தன் பெரிய்யா பவளக்காரரிடமே இந்த ரகசியத்தைக் கேட்டுப் பாத்திடலாம்னு முடிவு பண்ணி அவர் நல்ல ‘குணமா’ இருக்கிற நேரம் பார்த்துப் போனான். விசயத்தைப் போனதும் நேருக்கு நேரா போட்டுக் கேட்டுட முடியாதே... அப்படி இப்படின்னு விசயத்துக்குக் கொஞ்சம் சுத்தி வளைச்சித்தானே வரணும்... அதனால் ரொம்பவும் ‘மேலுக்கு நல்லால்ல’ என்கிற மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு பவளக்காரரின் எதிரில் போய் உட்கார்ந்தான். பவளக்காரரும் ரொம்பத் ‘தோதாக’ ஒரு கேள்வியை எடுத்த எடுப்பிலேயே கேட்டு விட்டார்.
என்னடா கதிரேசா; ஒரு மாதிரி லம்பிக்கிட்டே வரே?
கதிரேசனுக்கு இது போதாதா? ரொம்ப சலித்துக் கொண்டு பதில் சொன்னான்.
ஆமாங்க பெரிய்யா; வயிறே நல்லாயில்லை. எது சாப்பிட்டாலும் சீரணமே ஆக மாட்டேங்குது. ஓயாம ஏப்பம் ஏப்பமா வருது. அதுவும் புளிச்ச ஏப்பமா...
வயித்ல மந்தம் கெடக்கு!
என்ன பெரிய்யா; இந்த வயசில கூடவா மந்தமும் கிந்தமும் வரும்?
அப்படி வச்சிருக்கே ஒடம்பை நீ!
கொஞ்சம் நீங்கதான் சொல்லிக் குடுங்களேன் - எப்பிடி ஒடம்பை வச்சிக்கிறதுன்னு?
போய் நல்ல டாக்டரைப் பாத்து கேளுரா.
துட்டு நீங்க தருவீகளா - டாக்டருக்கும் மருந்துக்கும்?
நா ஏன் குடுக்கறேன்...?
நா நம்ம பாண்டிணாச்சியைத்தேன் ஒரு நாளைக்குப் போயி கேக்கப் போறேன்.
கேளு கேளு. அவந்தேன் சரியான ஆளு...
அதெப்படி பெரிய்யா பாண்டிணாச்சி மட்டும் அப்பிடியே இருக்காக. ஒங்க வயசுதேன் அவுகளுக்கும். ஆனா இன்னைக்கும் அவுகளுக்கு மண்டையில ஒத்த முடிகூட நரைக்கலை. ஒத்தப் பல்லு ஆடலை இன்னும். நெனைச்சா ஆச்சர்யமாயிருக்கு. ஏதாவது மந்திரம் கிந்திரம் வச்சிருக்காகளா?
வச்சிருந்தாலும் வச்சிருப்பான். எமப்பயலாச்சே!
ஒங்களுக்குத் தெரியாமலா வச்சிருப்பாக?
கேளேன் போயி.
நல்லாச் சொல்லுவாகளே... சும்மாவே அம்மிக் கொழவியை முழுங்கின மாதிரி வாயை மூடிக்கிட்டு இருப்பாக...! அவுகளைப் போயி கேக்கச் சொல்றீங்களே பெரிய்யா...
போயி நான் சொன்னேன்னு சொல்லி அவனையே கேட்டுப் பாரு. சொல்லவே முடியாதுன்னு சொல்லிட்டான்னு வச்சிக்க. நேரா எங்கிட்டவா. அப்ப நா சொல்றேன் ஒனக்கு.
அது எதுக்குப் பெரிய்யா - அவுகளைப் போயி வெட்டியா கேட்டுத் தொங்கிக்கிட்டு.. நீங்களேதேன் சொல்லிப்புடுங்களேன்...
நான் சொல்லிப்புடுவேன் ஒரு நிமிசத்ல. அது பெரிய விசயமில்லை. ஆனா நாளைக்கி பாண்டி வந்து ‘அதெப்படி நீ அந்தக் காலத்துச் சங்கதியை சின்னப் பயல்கள்கிட்டேல்லாம் சொல்லலாம்?’னு மூஞ்சிக்கு நேரா வந்து என்னைக் கேட்டுப்பிட்டான்னு வச்சிக்க - ரொம்ப அசிங்கமா போயிரும்!
ஒடம்பை நல்லபடியா வச்சிக்கறதுக்குத்தான் கெடந்து இப்பிடி கேக்குறேன் - அதைப் புரிஞ்சிக்கிடமாட்டேங்கிறிகளே பெரிய்யா...!
பவளக்காரர் சதை தொங்கும் கண்களை இடுக்கிக் கொண்டு சிரிப்பார் இதுக்கு...
அது மாத்திரம் இல்லடா கதிரேசா..! இனிமேல் போயி நா அந்தச் சங்கதியைச் சொல்லுறதால முக்காதுட்டுக்கு பிரயோசனம் கெடையாது.
"புதிராத்தான் இருக்கு