Aayiram Kathavugal Thirakkattum
By Stella Bruce
()
About this ebook
Read more from Stella Bruce
Meendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsMoondraam Piraigal Rating: 0 out of 5 stars0 ratingsKannaadi Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsViththiyasamaana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsEn Veettu Pookkal Rating: 5 out of 5 stars5/5Agaala Manithan Rating: 5 out of 5 stars5/5Kaathal Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Athu veru Mazhaikkalam Rating: 5 out of 5 stars5/5Oru Muraithan Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsVegu Thoorathil Manam Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Panankaattu Annachi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aayiram Kathavugal Thirakkattum
Related ebooks
ஆயிரம் கதவுகள் திறக்கட்டும் Rating: 0 out of 5 stars0 ratingsகலங்காதே கண்மணியே! Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsKathavillatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Anjangal Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கரம் பிடித்தே... Rating: 0 out of 5 stars0 ratingsVazha Ninaithaal Rating: 0 out of 5 stars0 ratingsNizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsVallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5En Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Vandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsNithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Paasangu Rating: 0 out of 5 stars0 ratings3 கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsVazhithunai Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Janakiyin Dairy Kurippugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Raja Raniyidam Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Maayamaan Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Aayiram Kathavugal Thirakkattum
0 ratings0 reviews
Book preview
Aayiram Kathavugal Thirakkattum - Stella Bruce
1
திரை நீங்கியதுபோல தூக்கம் கலைந்து மன மேடையில் பிரக்ஞை ஓர் வெளிச்சம் என பரவி விரிய மேனகா கண்களைத் திறந்தாள். மின்புகை போன்ற மங்கிய வெளிச்சத்தில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தில் மணி ஐந்து என்று தெரிந்தது. பிப்ரவரி மாதத்தின் மென்பனி இதமாகச் சூழ்ந்திருந்தது. ஜன்னலுக்கு வெளியில் வானத்தில் இன்னும் இருள் நீங்கியிருக்கவில்லை. படுத்திருந்தபடியே சோம்பல் முறித்துக்கொண்ட மேனகா எழுந்து உட்கார்ந்தாள். படுக்கையில் சிறிது தள்ளி கட்டியிருந்த லுங்கி முழங்கால்களுக்கும் மேலே விலகிச் சுருண்டு போயிருக்க, பெரும் தவளை மாதிரி குப்புறக் கிடந்து ஆதவன் தூங்கிக் கொண்டிருந்தான். விடியப் போகிற அந்த நேரத்தில்கூட அவனிடமிருந்து குறட்டை சப்தம் வந்து கொண்டிருந்தது. கணவன் தூங்குகிற தோற்றத்தை மேனகா சின்ன ஒவ்வாமையுடன் பார்த்தாள்.
இப்படி ஆடைகள் விலகிக் குப்புறக்கிடந்து தூங்குகிற தோற்றங்கள் மேனகாவை எப்போதுமே கூசச் செய்பவை. இந்த மாதிரியெல்லாம் அலங்கோலமாகத் தூங்குகிற நிலைகள் அவளுடைய இயல்புகளுக்கு நேர் எதிரானவை. எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்திலும் மேனகாவின் உடைகள் சிறிதளவும் விலகிக் கொள்வதில்லை. தூக்கம் கலைந்து காலையில் எழுந்திருக்கும் போது இரவு பூராவும் அவள் படுத்திருந்த விரிப்பும்கூடச் சிறிதும் கசங்கிச் சுருண்டு கலைந்திருக்காது. சின்னக் குழந்தையாகயிருந்த காலத்திலேயே மேனகா ஓர் மயில் போல மிகவும் ஒயிலாகத்தான் தூங்குவாள் என்று அவளுடைய அப்பா, உறவினர்களிடமெல்லாம் போய் மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு கல்யாணமாகி, ஆதவனுடன் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப தினங்களில் தூங்குகிற நேரத்தில் கணவன் தூங்குகிற கட்டுப்பாடற்ற தோற்றங்களைப் பார்த்து மேனகா திகைத்துப் போயிருக்கிறாள். நவீன மருந்துகள் தயாரிக்கின்ற பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் டெபுடி மேனேஜராக ஆதவன் காலையில் துல்லியமான ஆடை அணிந்து, பெரிய தோரணையுடன் கைனிட்டிக் ஹோண்டாவில் கிளம்பிச் செல்கிற மிடுக்குக்கும், நடு இரவில் வாய் ஓரம் எச்சிலும் வழிய, ஆடை அநேகமாகக் காலடியில் வரை கூட அவிழ்ந்து கிடப்பதும் தெரியாமல் தூங்குகிற அலங்கோல நிலைக்கும் இடையில் தெரிகிற முரண் மேனகாவைப் பல நாட்களுக்கு மலைக்க வைத்திருக்கிறது. ஒரு நாள் ஆதவனை மேனகா தயக்கத்துடன் கேட்டாள். தூங்கறபோது குப்புறப் படுக்காமே தூங்கறதுக்குக் கொஞ்சம் நீங்க முயற்சி செய்யக்கூடாதா?
குப்புறப் படுத்துத் தூங்கறதுதான் எனக்கு வழக்கம். அதை என்னால மாத்திக்க முடியாது?
ஆதவன் சட்டென்று சொன்னான்.
கட்டியிருக்கிற லுங்கி கன்னா பின்னான்னு அவிழ்ந்து போகாமலேயாவது தூங்கலாமே - அட்லீஸ்ட்...
அது என் கண்ட்ரோல்ல இல்லை. தூங்கியாச்சின்னா சுத்தமா நான் செத்த பிணம்தான். பூமியே வெடிச்சாலும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளான எனக்கு லுங்கி அவிழ்றதும், வேட்டி அவிழ்றதும் எப்படித் தெரியும்? நீ கோல்ட் ஃபிஷ்! தூங்கும் போதுகூட அழகா கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டே தூங்குவே. நானென்ன அப்படியா? நான் ஒரு கரையோர முதலை மாதிரியான ஆசாமி! என்னைப் போய் அப்படித் தூங்காதே இப்படித் தூங்காதேன்னு கண்ட்ரோலெல்லாம் பண்ணாதே. முதலை கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் தூங்கும்...! டேக் இட் ஈஸி...
என்று சொல்லி ஆதவன் அவனை நியாயப்படுத்திக் கொண்டான்.
கல்யாணமான மறு வாரம் இரவு தொடர்ந்த சில பாலுறவுச் சேர்க்கைக்குப் பிறகு மேனகா தூங்குவதற்கு அவளுக்கென்று தனிப்படுக்கை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்தபோதும் - ஆதவன் சம்மதம் சொல்லவில்லை.
மேனகா நெற்றியை வருடிக்கொண்டே சொன்னாள்: தூக்கம் வந்தாச்சின்னா அதென்னமோ எனக்குத் தனியாகத்தான் படுத்துக்கணும். என் படுக்கையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் என்கிட்டக்கக்கூட யாருமே படுத்திருக்கக் கூடாது. இத்தனை வருஷமா எங்க வீட்ல அப்படித் தூங்கித்தான் எனக்குப் பழக்கம். பக்கத்ல யார் படுத்திருந்தாலும் முதல்ல எனக்குத் தூக்கமும் வராது...
இதுவரைக்கும் நீ அப்படித் தனியா படுத்துத் தூங்கறது உனக்குப் பழக்கமாகவே இருக்கலாம். ஆனா ‘ஆஃப்டர் மேரேஜ் நீ உன் பழக்கத்தை மாத்தியே ஆகணும் மேனகா. அதுவும் எனக்காகக் கண்டிப்பா மாத்திக்கணும். ஏன்னாக்க - டீன் ஏஜ்ல இருந்தே மனைவிகூட ஒரே கட்டில்ல தூங்கறது என்கிறது ஒரு ஐடியல் ட்ரீம் எனக்கு. ஸோ; சேன்ஜ் யுவர் ஸ்லீப்பிங் ஸ்டைல்...
இதற்கு மேனகாவால் உடனே சம்மதமான பதிலைச் சொல்லிவிட முடியவில்லை. மனதின் ஒற்றைப் புள்ளிக்குள்ளேயே அவளுடைய எண்ணங்கள் உள் பாய்ந்து கொண்டிருந்தன. குப்புறப்படுத்துத் தூங்குகிற கட்டுப்பாடற்ற வழக்கத்தை ஆதவன் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. தனியாகப் படுத்துத் தூங்குகிற வழக்கத்தை மேனகா மட்டும் மாற்றி விட வேண்டும்...
கல்யாணத்திற்குப் பின் மேனகா தான் வேறு சில வழக்கங் களையும் மாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு முன் காலையில் சரியாக எட்டு மணிக்கு காலை உணவு சாப்பிட்டு பழகிப் போனவள் அவள். ஆனால் ஆதவன் எட்டு மணிக்குத்தான் தூக்கம் கலைந்தே மெதுவாக எழுந்து உட்கார்வான். அப்புறம் ஒரே அவசரம் பரபரப்பு... ஒன்பது மணிக்கு மேல் அவதி அவதியென்று சாப்பாட்டு மேஜையின் முன்னால் வந்து உட்கார்வான். காலைச் சாப்பாட்டு நேரத்தை ஒன்பது மணிக்கு மேல் மாற்றிக் கொள்வதற்கு மேனகாவிற்கு முழுதாக மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் மோசம். காலை உணவு நேரம் பத்து மணி கூட ஆகும்.
இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்களில் மேனகா அவளுடைய மனக்கடிகாரத்தை அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி ஓட வைக்க வேண்டியதாகிவிட்டது! குளியல் நேரம் தவறியது. புத்தகம் வாசிக்கும் நேரம் மாறியது. இசை கேட்கும் நேரம் வேறாகியது. எல்லாவற்றுக்கும் மேலாக இரவு படுக்கப் போகிற நேரம் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளானது.
கல்யாணத்திற்கு முன்பு மேனகாவின் இரவுப் பொழுது, ஒன்பதரை மணிக்கு முற்றுப் பெற்று விடும். ஆனால் இப்போது அவளுடைய இரவுகள் பன்னிரெண்டு மணிவரை கூட நீடித்து விடுகின்றன. மேனகாவின் உடை விஷயத்திலும் கூட ஆதவனின் குறுக்கீடு வந்தது. கல்யாணத்திற்குப் பின் அவள் சுடிதார் போன்ற ஆடைகளை அணிய வேண்டாமென்று அவன் உத்தரவிட்டபோது மேனகாவிற்குச் சிறிது அதிர்ச்சியாக இருந்தது. தொலை தூர அந்நிய நாட்டிற்குச் செல்ல நேரிட்ட இந்தியனுக்கு ஏற்படுகிற காலபேதமும் வழக்க மாற்றங்களும் போல மணமான சில மாதங்களுக்கு மேனகாவைச் சிறிது கிறுகிறுக்க வைத்தன. ஆனால் இம்மாதிரியான கிறுகிறுப்புக்கள் மேனகாவிற்கு மட்டும்தான். ஆதவனுக்கு எந்தக் கிறுகிறுப்பும் கிடையாது! அவனுடைய அன்றாட வழக்கங்களிலும் எந்த மாற்றமும் கிடையாது. எந்த மாற்றத்தைச் செய்து கொள்ளவும் அவன் விருப்பப்படவில்லை. மேனகா ஆதவனுக்காகப் பல மாற்றங்களை அவளில் ஏற்படுத்திக் கொண்டாலும் சுடிதார் அணியக்கூடாது என்று கணவன் தடை சொல்லியபோது மட்டும் திருப்பி ஆதவனை ஒரு கேள்வி கேட்டாள்.
ஆபீசுக்குப் போகிற நேரம் தவிர மற்ற சமயங்கள்ள ஜீன்சும் டி - ஷர்டும் போட்டுக்கறீங்களே - அந்த டிரஸ் நீங்க பண்ணிக்கக்கூடாதுன்னு நான் விருப்பப்பட்டா அதை ஒத்துக்க முடியுமா உங்களால?
மேனகாவின் இந்தக் கேள்வி ஆதவனை ஊசி போல அவனுடைய அகங்காரத்தில் தைத்தது. திருப்பி ஊசி போல குத்த அவனின் அகம்பாவம் விம்மிப் புடைத்தாலும் புது மனைவியின் மனதைக் காயப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை. ஏய்; நீ படிச்ச பெண்; கொஞ்சம் சிந்திக்கவும் தெரிஞ்ச பெண். அதனாலேதான் திருப்பி என்னை இப்படிக் கேள்வி கேட்கிறாய் என்பதில் நான் கொஞ்சம் சந்தோஷப்படறேன். ஆனாலும், நீ சுடிதார் அணிவதைத் தவிர்ப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்
என்று மட்டும் அமைதியாகச் சொல்லிப் பொய்யாக ஒரு சிரிப்பையும் முகத்தில் காட்டினான்.
கணவனின் அபிப்பிராயத்திற்காக சுடிதார் அணிகின்ற வழக்கத்தை மேனகா விட்டுவிட்டாலும், ஆதவனின் குறுக்கீடு இல்லாததால் அவளில் மாற்றம் பெறாத ஓர் வழக்கம் மட்டும் இன்றும் சலனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கம் காலை சரியாக ஐந்து மணிக்கு தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வது...
மேனகா கட்டிலில் இருந்து இறங்கி படுக்கை அறையோடு இணைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்து பால்கனிக்குப் போனாள். பால்கனி நிறைய சின்னச் சின்ன தொட்டிகளில் வெவ்வேறு நிறங்களில் பூத்து வளர்ந்திருந்த விருட்சிச் செடிகள் இளம் பனிக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. வீதியில் எதிர் வரிசைக் கட்டடத்தின் முன்புற பன்னீர் மரங்களில் இருந்த நறுமணம் குளிர்க் காற்றுடன் கலந்து வந்தது.
மேனகாவிற்கு இன்று பிறந்த நாள். கல்யாணம் ஆன பின் வந்திருக்கிற முதல் பிறந்த நாள். அந்த ஆனந்தம் மேனகாவை விட ஆதவனுக்குத்தான் அதிகமாக இருந்தது. முதலில் மேனகாவின் பிறந்தநாளையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பங்களூர் போய் மனைவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வரவேண்டுமென்றுதான் திட்டமிட்டிருந்தான். ஆனால் பம்பாயிலிருந்து அவன் பணிபுரிகிற கம்பெனியின் சேர்மன் சென்னை வருகிற அலுவல்கள் தவிர்த்துவிட முடியாமல் குறுக்கிட்டுவிட்டபடியால் பங்களூர் போகிற எண்ணத்தைக் கைவிட வேண்டியதாகிவிட்டது. இன்றுகூட அவன் கட்டாயமாக ஆபீசில் இருக்க வேண்டியிருந்தது. இந்த நேரம் பார்த்து சென்னை வருகிற சேர்மனை மனதிற்குள் ஆயிரம் முறை திட்டிக்கொண்டே யோசனை பண்ணினான். மேனகாவிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவளுடைய பிறந்தநாளுக்கு இனிய அதிர்ச்சி ஒன்று தருவது பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். உஸ்மான் சாலைக்குப் போய் இரண்டாயிரம் ரூபாயில் முத்துக்கள் பதித்த மோதிரம் ஒன்றை மேனகாவிற்குத் தெரியாமல் வாங்கி ரகசியமாக வைத்துக் கொண்டான். மறுபடியும் ஒரு நாள் அவன் தனியாகவே பாண்டி பஜார் போய் ஷோரூம் ஒன்றில் ஒவ்வொன்றும் ஐந்நூறு ரூபாய் விலை மதிப்புள்ள இரண்டு மெட்டல் ஷிஃபான் புடவைகளும் வாங்கிக் கொண்டான்.
நேற்று இரவு மேனகா சிறிதும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு புடவைகளையும் எடுத்து அவள் முன்னால் ஆதவன் விரித்துப் போட்டபோது அவன் அவளிடம் எதிர்பார்த்த அளவிற்கு இனிய அதிர்வு எதுவும் மேனகாவிடம் புலப்படவில்லை. ஆதவனின் இந்தத் திடீர் வெளிப்பாடு அவளுக்கு வேடிக்கையாக மட்டுமே தெரிந்தது. பொதுவாக ‘மெட்டல் ஷிஃபான்’ என்ற மெடீரியல் அவளை ஒரு போதும் கவர்ந்ததில்லை. அதன் பளபளப்பான பகட்டு, மேனகாவிற்கு ஒவ்வாதது. ஆனாலும் தன் ஒவ்வாமையை அவள் ஆதவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
புடவை வாங்கப் போனபோது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே
என்று மட்டும் சொன்னாள்.
முதல்ல இருந்தே இந்த விஷயத்தை உன்கிட்ட நான் சொல்றதா இல்லை. முதல் காரணம் இது உனக்கொரு ப்ளசெண்ட் சர்ப்ரைஸ்ஸா இருக்கணும். ரெண்டாவது காரணம் -உன் பர்த்டே செலக்ஷன் முழுக்க முழுக்க என்னோட சாய்ஸ்ல இருக்கணும். உன்னைக் கூட்டிட்டுப் போனா செலஷன் உன் சாய்ஸ்ல போனாலும் போயிடும் அதனாலேதான் உன்கிட்ட சொல்லலை...
இன்று காலை ஆதவன் ஆபீஸ் கிளம்புவதற்கு முன் மேனகா ஒரு புடவையைக் கட்டி அவனுக்குக் காட்டிவிட வேண்டும். மற்றொன்றை இரவு எட்டு மணிக்குக் கட்டிக்கொண்டு ஆதவனுடன் மெரீனா போய் அரைமணி நேரம் உட்கார்ந்துவிட்டு, பின் பார்க் ஷெரட்டன் போய் ஆற அமர அழகான டின்னர். பத்து மணிக்கு மேல் வீடு திரும்பி பிறந்த நாள் வைபவத்தின் தேசிய கீதமாக சங்கிலித் தொடர் போல் பாலுறவுப் பயிற்சிகள்... நேற்று இரவு புடவைகளைக் காட்டியபோதே ஆதவன் இந்த நிகழ்ச்சி அட்டவணையையும் சொல்லி இருந்தான்.
பால்கனியில் நின்றவாறு இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்ட மேனகாவிற்கு இவை ஆடவனுக்குரிய ஒருவித நகைப்பிற்குரிய அறியாமையாகத்தான் தெரிந்தது. மேனகா சின்னதாகப் பெருமூச்சு விட்டாள். ஆதவனின் இம்மாதிரியான உள் மனத் தளங்கள் ஒவ்வொரு ஆடவனிடமும் வெவ்வேறு விதப் பரிமாணங்களில் பொதிந்து கிடப்பது சட்டென அவளின் ஞாபகத்தில் குறுக்கிட்டது. நீண்ட சரிவில் வேகம் விரைகிற வாகனம் போல மேனகாவின் எண்ணங்கள் ஆலிவரை நோக்கிப் பாய்ந்தன.
ஆலிவர்தான் எப்பேற்பட்ட மனிதன். அவனுடன் பழகி இருக்கின்ற ஆயிரம் நாட்களும் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அழகான புத்தகம் மேனகாவிற்கு. அவளும் ஆலிவரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன இறுதிக் கட்டம் வரை அவன் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளுமே மேனகாவிற்கு மிகவும் அசாதாரணமானவை. இரவு வானத்தில் மின்னுகிற ஆகாய விமான விளக்கு மாதிரி ஆலிவர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் அவளுக்குள் மின்னியது.
மேனகாவிற்கும் ஆலிவருக்கும் அறிமுகமும் நட்பும் ஏற்பட்ட இரண்டு மாதங்களில் தீபாவளி வந்தது. மேனகா எதிர்பார்க்கவே இல்லை. ஆலிவர் அவனே சின்னதாக ஓர் ஓவியம் வரைந்து அதையே தீபாவளி வாழ்த்தாக அனுப்பி இருந்தான். அதன் பிறகு ஜனவரி முதல்தேதி வந்தது. அப்போதும் அவனது ஓவியம் ஒன்றைப் புது வருட வாழ்த்தாக அனுப்பியிருந்தான். அதன் பின் பிப்ரவரி பதினேழு - மேனகாவின் பிறந்த நாள் வந்தது. மேனகா ஆலிவரிடமிருந்து வாழ்த்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். பல தோழிகளிடமிருந்தும் வாழ்த்துகள் வந்தனவே தவிர ஆலிவரிடமிருந்து மட்டும் மேனகாவிற்கு வாழ்த்து வரவில்லை. அவனது தங்கை பெயரில் விசேஷமான மலர்ச்செண்டைக் கூரியரில் அனுப்பி வைப்பானென எதிர்பார்த்தாள். ஆனால் மலர்க் கொத்தும் வரவில்லை. கடிகாரத்தில் சாயந்தரம் ஆறு மணியும் ஆகிவிட்டது. எந்த வாழ்த்தும் இல்லை. மேனகாவிற்குச் சிறிது ஏமாற்றமாக இருந்தது. கிணற்றடிக்குப் போய் செழிப்பாக நிறைய துளிர்கள் விட்டிருந்த இளம் நித்யமல்லிக் கொடியின் அருகில் போய் நின்றாள். செப்டம்பர் மாதம் ஆலிவர் அவனுடைய பிறந்த நாளின் போது மேனகாவை நர்சரிக்கு அழைத்துப்போய் பரிசாக வாங்கித் தந்த இளம் கொடி அது. அந்த ஆலிவரா மேனகாவின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துத் தெரிவிக்கக்கூட மறந்து விட்டான்? மேனகாவிற்கு இது துக்கமாக இல்லை; சிறிது ஏமாற்றமாக இருந்தது. அப்போது வீட்டுக்குள் இருந்து மேனகாவின் தங்கை ரேவதியின் குரல் பலமாகக் கேட்டது.
அக்கா; உனக்கு போன்!
யார்கிட்டே இருந்து?
நின்ற இடத்திலிருந்தே மேனகா கேட்டாள்.
யாரோ ஜெபராணியாம்.
ஜெபராணி - ஆலிவரின் தங்கை. மேனகா வேகமாக உள்ளே போய் ரிஸீவரை வாங்கி ஹலோ
என்றாள்.
இஸிட் மிஸ். மேனகா?
யா
என் பிரதர் ஆலிவர் உங்ககிட்டே பேசணும்னு சொன்னான். ப்ளீஸ் வெயிட்...
மேனகா...
- ஆலிவரின் குரல் கேட்டது.
சொல்லுங்க
இன்னைக்கி மார்னிங் ஹிண்டு பேப்பர் பார்த்தியா?
பார்த்தேனே.
நல்லா பார்த்தியா?
மேனகா சிறிது யோசித்தாள்.
இன்னைக்கி ஹிண்டுவுல ரெண்டாம் பக்கம் வரி விளம்பரங்கள் பகுதியில் இடது பக்கம் டாப்ல ‘பர்சனல்’னு ஒரு பகுதி இருக்கும். அதை எடுத்துப்பார். முடிஞ்சா நாளைக்கி ‘அமைதி வெளி’யில் மீட் பண்ணுவோம்.
ஆலிவர் ரிசீவரை வைத்துவிட்டான்.
உடனே பேப்பரை எடுத்துப் பார்த்தால் வீட்டில் யாராவது ஏதாவது நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் பதினைந்து நிமிஷங்கள் வெறுமே இருந்துவிட்டு மிகவும் இயல்பான தோரணையைக் காட்டிக்கொண்டே மேனகா அன்றைய ஹிண்டுவை எடுத்து இரண்டாம் பக்கத்தின் இடது மேல்புறத்தைப் பார்த்தாள்.
‘என் அன்புள்ள மேனகா - உனக்கு ஏராளமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்- ஆலிவர்.’ என்ற குறுகிய சின்னஞ்சிறிய விளம்பரம் மேனகாவின் விழிகளை நிறைத்தது; முடிந்து போவதற்கு இருந்த பிறந்த நாளை மறுபடியும் அதிகாலை ஆரம்பத்திற்குப் புதியதாக்கிவிட்டது...
2
ஆலிவரின் அந்தச் சின்னஞ் சிறிய விளம்பரத்தை, வீட்டில் வேறு யாருக்கும் தெரியாத அந்த விளம்பரத்தை மேனகா சில நிமிடங்களுக்கு ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கே இருந்தாலும்; எந்த வேலையிலிருந்தாலும் அந்த விளம்பரம் ஓர் அந்தரங்கக் கனவு போல அவளுடைய ஞாபகத்தில் சில நாட்களுக்கு நீர் பிம்பமாக அசைந்தாடிக்கொண்டே இருந்தது.
அதைத் தொடர்ந்து வந்த இரண்டு வருடப் பிறந்த நாட்களின் போதும் அதே மாதிரியான விளம்பரத்தை ஆலிவர் செய்தித்தாளின் மூலம் மேனகாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தான். குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைத்திருந்த மூன்று வருட விளம்பரங்களையும் மேனகா, அவளுக்கும் ஆதவனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆன பின்பு ஒரு நாள் கடைசி முறையாக வாசித்துப் பார்த்துவிட்டுக் கிழித்து நசுக்கிக் கிணற்றுக்குள் வீசி எறிந்துவிட்டாள். உடனே வேறொரு மனத் திடகாத்திரத்துடன் மேனகா வாழ்க்கையின் மற்றொரு தளத்திற்கு வந்து விட்டாள். இந்தத் தளத்தின் அன்றாட ஒவ்வொரு நிமிடங்களையும் அப்படியே ஏற்று வாழ்வதே அவளின் வாழ்க்கை. இங்கு மேனகாவின் துணைவன் ஆதவன். ஆதவனுடன் இன்று அவளுடைய முதல் பிறந்த நாள்.
தீற்றுத் தீற்றலாக வானத்தில் நிறமாற்றம் தெரியத் தொடங்கியது. காற்றில் கலந்திருந்த பன்னீர்ப் பூக்களின் நறுமணத்தை சில நிமிடங்கள் ஆழமாக சுவாசித்துவிட்டு மேனகா பாத்ரூம் சென்று காலைக் கடன்களை முடித்து முகம் கழுவித் துடைத்தாள். ஹாலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள். அலமாரியின் மேல் மக்கில் மடித்து வைக்கப்பட்டிருந்த கம்பளியை எடுத்துத் தரையில் விரித்தாள். சில நிமிடங்கள் பத்மாசன நிலையில் எந்த எண்ணமும் இல்லாமல் அமைதியாகக் கம்பளியின் மேல் மேனகா உட்கார்ந்திருந்தாள். பின் வஜ்ராசனம்; சர்வாங்காசனம்; மத்யாசனம் என தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு யோகா பயிற்சிகளில் உடல் அவயங்களையும், மனநிலைகளையும் முழுவதுமாக சமநிலைப்படுத்தினாள். பின் பதினைந்து நிமிடங்கள் பிராணாயாமம் செய்து சவாசனத்தில் பத்து நிமிடங்கள் ஓய்ந்திருந்து, அகன்று ஆழமாகிவிட்ட நிதானமான சுவாசத்துடன் மேனகா எழுந்தாள். மயில் தோகையாக உடம்பு லேசாகிவிட்டிருந்தது. அரும்பியிருந்த வியர்வையை டவலால் ஒற்றித் துடைத்து, கண்ணாடியைப் பார்த்துக் கூந்தலை வாரி விட்டுக் கொண்டாள். ஆதவன் சிலுவையில் கிடத்தப்பட்டவன் போல மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
மேனகா சப்தம் எழுப்பாமல் கதவைத் திறந்து வெளிப்பக்கமாகப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கி சாலைக்கு வந்தாள். எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு அவளின் மனதில் ஏற்பட்டது. அகலமான இரண்டாம் பிரதான வீதி வாகனங்கள் இல்லாமல் நீண்டு கிடந்தது. இரண்டு பக்கங்களிலும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களைப் பார்த்துக்கொண்டே மேனகா மெதுவாக நடந்தாள். வாக்கிங் போகிற பழக்கம் மட்டும் அவளுக்குக் கல்யாணத்திற்குப் பிறகு வந்திருக்கிறது. கல்யாணத்திற்கு முன்பு மேனகா வாழ்ந்த ஆலந்தூரின் தெருக்கள் நடப்பதற்கே லாயக்கற்றவை. பல தெருக்களைத் தாண்டினால், விசாலமான செயிண்ட் தாமஸ் மௌண்ட் பகுதிக்குப் போகலாம். மேனகாவிற்கு அந்தப் பகுதி விருப்பமானதும் கூட. ஆனால் காலை நேரத்தில் வாகனங்களின் போக்குவரத்து சங்கிலித் தொடராய் சென்றுகொண்டே இருக்கும் என்பதால் அந்தப் பகுதிக்கு வாக்கிங் போவது அவளுக்குச் சாத்தியமில்லாமல் போய் விட்டது. வாக்கிங் போய் வர ராஜா அண்ணாமலைபுரம் வசதியாக இருந்ததால் தனிக்குடித்தனம் வந்த மறு வாரமே மேனகா காலை யோகா பயிற்சிக்குப் பின் வாக்கிங் போகிற வழக்கத்தை ஆரம்பித்துக் கொண்டாள். ஆதவன் இரண்டு நாட்கள் மேனகாவைத் தனியாக வாக்கிங் அனுப்புவதற்கு மிகவும் யோசித்தான். காலை நேரத்தில் தனியாய் வாக்கிங் போகிற அவனுடைய அழகான மனைவியை ஆண்கள் ஒரு மாதிரியாக உற்றுப் பார்ப்பார்களேயென்று யோசித்தான். மேனகாவுடன் அந்த நேரத்தில் துணைக்காகக் கூடப் போய் வருவது அவனால் முடியாத ஒன்று. ஆனாலும் வாக்கிங் போக வேண்டாம் என்று அழகான இளம் மனைவியைத் தடுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. குழந்தை பிறந்துவிட்டால் மேனகாவே வாக்கிங் போவதை நிறுத்திக்கொண்டு விடுவாள் என்ற எண்ணத்தில் வாக்கிங் போக மனைவியை அனுமதித்து விட்டான். ஒரு வாக்கிங் போய் வருவதற்குக்கூட கணவனிடம் ‘அனுமதி’ பெற்றாக வேண்டியிருக்கிறது என்று மேனகா மனதிற்குள் இகழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள்.
இரண்டாவது பிரதான சாலை நெடுக நடந்து சிறிது தூரம் சேமியர்ஸ் சாலையில் சென்று கிரீன்வேஸ் ரோடில் திரும்பி ஒரு வட்டமிட்டு மேனகா வீடு திரும்பியபோது மணி என்றைக்கும் போல ஏழே கால் ஆகியிருந்தது. இரண்டாவது மாடியிலிருக்கும் அவளுடைய அபார்ட்மெண்ட்டை அடைந்தபோது எப்போதும் போல நீலநிற பிளாஸ்டிக் கூடையில் பால் பாக்கெட்டும் அன்றைய ஹிண்டு பேப்பரும் வைக்கப்பட்டிருந்தன. மேனகா முதலில் கதவைத் திறந்துவிட்டு, பின் பேப்பரையும், பால் பாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள். ஆதவன் படுக்கை அறையில் இன்னமும் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். பேப்பரை மேஜையில் போட்டுவிட்டு மேனகா பால் பாக்கெட்டுடன் சமையல் அறைக்குள் போனாள். காப்பிக்காக நீரும் பாலும் கொதித்துக் கொண்டிருந்தபோது அவளுக்குள் கடந்த மூன்று வருடங்களும் ஆலிவர், ஹிண்டுவில் கொடுத்திருந்த பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் மெல்லிய புகை போல விரிந்து ஊர்ந்தன. காப்பியை கலந்து கோப்பையுடன் ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.
மேஜையில் பேப்பர் மௌனமாகக் கிடந்தது. இவ்வருட பிறந்தநாளே அசாதாரண நிசப்தத்தில் ஆரம்பித்திருப்பது போலிருந்தது. மேனகா மெதுவாக காப்பியை உறிஞ்சினாள். காப்பியின் சூடும் சுவையும் இதமான வெயில் போல உடம்பு பூராவும் பரவியது. உதடுகளைக் கடித்துக்கொண்டே பேப்பரை எடுத்தாள். முதல் பக்கத்தை வெறுமே பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டே இருந்தாள். திடீரென மேனகாவிற்குக் காலம் கோபத்திற்கு உரியதாய் இருந்தது. இரண்டாம் பக்கம் இந்த வருஷம் ஆலிவரின் விளம்பரம் இடம் பெற்றிராது என்ற எண்ணத்துடனேயே பேப்பரை இரண்டாம் பக்கத்திற்குத் திருப்பினாள். இடது பக்கத்தின் மேல் மூலையை முன்னதாகவே ஏற்பட்டிருந்த ஏமாற்ற உணர்வடன் மேனகா பார்த்தாள். பார்த்ததும் அவள்தான் ஏமாந்தாள். ஆலிவரின் வாழ்த்து விளம்பரம் கரிய எழுத்துக்களில் மேனகாவிற்காக அச்சாகி இருந்தது. அதுவரை நிசப்தமாக இருந்த அவளின் பிறந்த நாள் காலை உடனே தீவிரமடைந்துவிட்டது. பார்ப்பது நிஜம்தானா என்ற பதட்டத்தில் பார்வையை மேனகா விளம்பரத்திலேயே குவித்தாள். ‘அன்புள்ள மேனகாவிற்கு மிகப் பல பிறந்த நாள் வாழ்த்துகள் - ஆலிவர்’
மேனகா கண்களை மூடிக் கொண்டாள். ஒருவித உணர்வு மாற்றம் அவளின் முகத்தில் வந்திருந்தது. இயல்புக்குச் சிறிது அதிகமாக அவளுடைய மார்பு அடித்துக் கொண்டது. சூனியத்தை வெறிப்பதுபோல மேனகா ஆலிவரின் வரி விளம்பரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். சென்ற வருட விளம்பரத்திற்கும் இந்த வருட விளம்பரத்திற்கும் இடைப்பட்ட கால மாற்றத்தின் பிருமாண்டம் அந்தக் குறுகிய வரியில் அவளுக்குத் தெரிந்தது. மேனகா சட்டென்று பார்வையை மூன்றாவது பக்கத்திற்குத் திருப்பியபோது குட் மார்னிங் டார்லிங்
என்ற ஆதவனின் குரல் கேட்டது. பேப்பரை விலக்கி அவள் பார்க்கவும் மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்
என்று வாழ்த்தியபடி ஆதவன் மேனகாவை நோக்கி அவனுடைய கையை நீட்டினான். அனிச்சையாக மேனகாவின் கையும் நீண்டது. அவளுடன் கை குலுக்கிய ஆதவன் உனக்கு இன்னொரு பிறந்த நாள் பரிசு வாங்கி வச்சிருக்கேன் மேனகா - இரு; இதோ போய் எடுத்திட்டு வந்திடறேன்...
என்று சொல்லிவிட்டு அவனுடைய ப்ரீஃப் கேஸை நோக்கிப் போனான். மேனகா விசித்திரமான உணர்வுடன் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பேப்பரில் ஆலிவர் தெரிவித்திருந்த வாழ்த்தும் நேரில் ஆதவன் தெரிவித்த வாழ்த்தும், வாழ்வின் பிளவுபட்ட இரண்டு புறங்களாக அவளின் மனத்தைத் தாக்கிப் பெயர்த்தன. ஆதவன் வேகமாகத் திரும்பி வந்தான்.
மேனகா; உன் வலது கையை நீட்டு
என்றான்.