Ethirethir Konangal
By Suryaganthan
()
About this ebook
அழகாகப்பிறந்து விட்டதால், நிறைய அவதிகளுக்கு ஆளாகிறாள் நாயகி. அளவோடு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாததால் ஆத்திரத்துக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் இவளின் தந்தை. அந்த அதட்டலுக்கும், அவசரத்திற்கும், அன்புக்கும் சுமை தாங்கியாய் ஆகும் இவளின் தாய்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொருகோணங்கள் எல்லா கோணங்களும் ஒரே திசைவழியில் சாத்தியமில்லை. என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!
Read more from Suryaganthan
Vidhai Cholam Rating: 0 out of 5 stars0 ratingsKal Vaazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ethirethir Konangal
Related ebooks
Nesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Orey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsThavari Podum Thalam Rating: 0 out of 5 stars0 ratingsSahana Oru Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Ther Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Kaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Manakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Chithirai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsUlage Poochendu Rating: 0 out of 5 stars0 ratingsNigazhntha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJathigal Illaiyadi Papa Rating: 0 out of 5 stars0 ratingsNitham Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Devathaigal Thoonguvathillai Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Uravum Pirivum Rating: 0 out of 5 stars0 ratings“Thelivu” Jananesan 3 Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsAgal Vilakku - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Analai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ethirethir Konangal
0 ratings0 reviews
Book preview
Ethirethir Konangal - Suryaganthan
https://www.pustaka.co.in
எதிரெதிர் கோணங்கள்
Ethirethir Konangal
Author:
சூர்யகாந்தன்
Suryaganthan
For more books
https://www.pustaka.co.in/home/author/suryaganthan
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
முன்னுரை
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இதற்கும் முந்திய எனது நாவல்களில் கிராமப்புறங்களை கதைக் களங்களாக்கி எழுதியவன், இந்த நாவலில் பெரிய ஊராகவும், சிறிய நகரமாகவும் ஆகிக் கொண்டிருக்கும்’ பேரூரை’ கதைக் களமாக்கியுள்ளேன். அக்ரஹாரத்துத் தெருவில் இருக்கும் குடும்பம் ஒன்று இதில் அறிமுகமாகின்றது.
அழகாகப்பிறந்து விட்டதால், நிறைய அவதிகளுக்கு ஆளாகிறாள் இதன் நாயகி. அளவோடு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாததால் ஆத்திரத்துக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் இவளின் தந்தை… அந்த அதட்டலுக்கும், அவசரத்துக்கும், அன்புக்கும் சுமைதாங்கியாய் ஆகும் இவளின் தாய்... ஒன்று, இரண்டு, மூன்று என்று தங்கைகள் வரிசையாய்... போதாததற்கு இவர்களுக்குப் போட்டியாய்த் தயாராகிக் கொண்டிருக்கும் இன்னோர் உடன்பிறப்பு.
வரவேற்கத்தயங்காத அக்காவாக, இந்தச் சக உதிரச்சொந்தங்களுக்கு மத்தியில் தனது காதலை, ஆசாபாசங்களை ஒன்றாகக் கட்டி... பரண் மீது தூக்கிப் போட வேண்டியவளாகிறாள். தான் காதலிக்கப்பட்டோ அல்லது காதலித்தோ இருக்கக் கூடாது. என்றுதான் எண்ணுகிறாள். எண்ணியெண்ணி நெஞ்சத்தை வருத்திக் கொண்டிருப்பது ஏற்றதாயில்லை.
பெற்றோர்களின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு மணமேடை ஏறுகிறாள். கணவனாக அமைந்தவனோ அன்றைய இரவிலிருந்து, கந்த வைக்கிறான் இவளின் உடலை. இரத்தக் கண்ணீரைச் சிந்த வைக்கிறான். கந்தகக் கிடங்காக உள்ளம் கொதிக்கிறது. கற்பூரப்பெட்டகமாக இல்லம் கண் மூடித் துயில்கிறது.
மனம் திறந்திருந்தால் மார்க்கம் பிறந்திருக்கும். இவளைக்காதலித்தவனுக்கு, மதம் குறுக்கே நின்று வழியை மறித்திருக்கக்கூடும். ஆனால் இவளின் தந்தை விஷயத்திலோ, பணம் தனது அகன்ற கைகளால் அமுக்கி விடுகிறது. அதிலிருந்து மீள முடியாமல் நசுக்கியும் விடுகிறது.
மேரியம்மையால் வேறு என்ன செய்ய முடியும்?
பழகுவதைத் தவிர
அலமேலுவால் வேறு என்ன செய்ய முடியும்?
அழுவதைத் தவிர
முதிர்ந்த அத்தை, சீரழிவுகளை உணர்ந்தவள், அதனால்தான் இந்தச்சின்னப் புறாவுக்கு சிறகுகளை அடையாளங் காட்டி உதவுகிறாள்.
இங்கே, சமூக அவசியம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலுக்கு இதில் இடமில்லை. பொருளாதாரம், வாழ்வியலின் பொருளை நிர்ணயிக்கிற சக்தியாய் உருமாறிக்கொண்டிருக்கையில் இந்தச்சாமானிய மக்கள் பண்பாட்டு மாற்றங்களை அடைவதைத் தவிர்க்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொருகோணங்கள். எல்லாக் கோணங்களும் ஒரே திசைவழியில் என்பதும் சாத்தியமில்லை.
ஒருகோணத்தோடு இன்னொரு கோணம் மோதாமல் இருக்கவும் முடியவில்லை. ஒருவர் குணத்தோடு மற்றவர் குணம் உடன்படலாம். முரண்பாடும் ஆகலாம்.
ஒருவர் உண்டாக்கும் காயங்களுக்குப் பரிகாரமாக எதிர்த்தாக்குதல் நிகழ்த்தலாம். அதனால் தன் காயங்கள் ஆறும்...! இது போர்க்களம் அல்ல, ஊர்க்களம். உள்ளம் ஆறுதல் கொண்டால் மட்டுமே உள்காயங்கள் ஆறும்...! காலம் மாறும் எனக் காத்திருக்காமல் அதைமாற்ற முற்பட்டவர்களில் இவளும் ஒருத்தி.
மனிதத் தவறுதல்களுக்கு மூன்றாம் கோணம் ஒன்று காரணமாக இருப்பதை உணர்ந்தவர்கள் மிகச் சொற்பமே. அதனால்தான், தனது வேதனைகளுக்கு மருந்தாக, மற்றவர்களின் வேதனைகளைத் தீர்க்க முனைகிறாள்.
எதிரெதிர்த் திசைகள் ஒரு மையத்தில் சந்தித்தால் புதிய பாதைகள் உருவாகும். எதிரெதிர் கோணங்கள் ஒரு நோக்கில் சிந்தித்தால் புறப்பாடுகள் சமமாகும். உணர்ச்சிபூர்வமாகச் சிந்தித்தவள், அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்குகிறாள்.
இவள், எல்லாரிடமும் அன்பு காட்டவே ஆர்வம் கொண்டவள். பெற்றோர்களை, சகோதரிகளை, சிநேகிதிகளை, தனக்குத் துரோகம் செய்தவர்களை என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.
சிலவற்றை மறக்கத்தான் முடியவில்லை.
என்றாலும்
சிலவற்றை மறந்தேதான் தீரவேண்டியுள்ளது.
ஒன்றை இழந்துதான் ஒன்றைப்பெற முடியும் என்பது நியதியாக இருக்கலாம். இவளது முறையிலோ எல்லாவற்றையும் இழந்து ஒன்றே ஒன்றை மட்டும் பெற வேண்டியதாக உள்ளது.
அந்த ஒன்றே ஒன்றுதான்’ வாழ்க்கை’
அதைப்பெறுவதற்காகத்தான் இவளின் அத்தனை போராட்டங்களுமே.
உங்கள் ஊரில், உங்கள் தெருவில், உங்கள் அலுவலகத்தில், உங்களுக்கு அண்மையில் இவளின் பிரதிபிம்பங்களை நீங்களும் கண்டிருக்கலாம்.
வாசக நெஞ்சங்களே...
இந்தச் சகோதரியை, இனிய தோழமைக்குரியவளை நீங்கள் மீண்டும் சந்தியுங்கள் இந்த நாவலின் வழியே...
"விளக்கிலே திரி நன்கு சமைந்தது
மேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே..."
என்று அறைகூவல் விடுத்த மகாகவிபாரதி போற்றிய பெண்ணுரிமை இந்த நாவலில் பெரிதும் சுட்டப்படுகின்றது. கேரளத்தின் புகழ்பெற்ற ‘மங்களம்’ வார இதழின் தமிழ்ப்பதிப்பில் தொடராகப்பரிணமித்த இந்நாவல் அதுசமயமே நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்திய சுதந்திரப் பொன்விழாவின்போது இலக்கிய உலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்த இந்தப் படைப்பு, இப்போது புதிய பதிப்பக வெளியீடாக மீண்டும் மலர்கிறது. இதைச்சிறப்பாகக் கொண்டு வரும் அன்புமிக்க புஸ்தகா டிஜிட்டல் மீடியாவுக்கு எனது மகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
சூர்யகாந்தன்.
1
ஒரு... மார்கழி மாதத்தின் காலை நேரம். ஊட்டிக்கு அடுத்த படியான விறுவிறுப்பில் கோவையின் பெரும்பான்மையான பகுதிகள் வெண்பனியைப் போர்த்திக் கொண்டிருந்தன. நகரத்தை விட்டு மேற்கே ஆறேழு கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் பேரூர்க்கோயில். இந்தக் கோயிலை நடுமையமாக வைத்து பேரூர் பெயருக்கேற்றபடி பெரிய ஊராகப் பரந்திருந்தது. கிழக்கே தமிழ்க்கல்லூரி வரையிலும்... மேற்கே செட்டிபாளையத்தைத் தொட்டுக் கொண்டும் அதன் வளர்ச்சி தெரிந்தது.
இந்தப் பெரிய ஊரின் வீதிகளில் இருந்த பலவீடுகளில் வெளியூர்களிலிருந்து வந்து குடியேறியவர்கள்தான் அதிகம். பாரம்பர்யமாக இங்கேயே வசித்து வரும் குடும்பங்கள் சொற்பம் எனச்சுருங்கி விட்டன. கோயிலை ஒட்டியே நான்கு புறமும் அக்ரஹாரத்து வீதிகள். முன்பெல்லாம் கோயிலின் பூஜைப் பணிகளில் வெகுவாக ஈடுபட்டு வந்த அவர்களின் வாரிசுகளெல்லாம் இப்போது வேறு வேறு பணிகளெனத் தங்களின் தொழில்களை மாற்றிக்கொண்டு விட்டனர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் அர்ச்சகர்களும், புரோகிதர்களும் உள்ளனர்.
கோயிலின் தென்பகுதியை அடுத்து மெயின் ரோட்டை ஒட்டினாற் போல் இருப்பதும் இந்த அக்ரஹாரத்து வீதிகளில் ஒன்று. வீடுகளின் வாசல்கள் தோறும் அழகழகான கோலங்கள். இளவெயில் அவற்றின் மீது இனிமையான புன்முறுவலைப் போல் சிந்திக்கொண்டிருந்தது. அதில் ஒருவீட்டின் வாசல்
"அலமேலு, நம்ப பாக்யாவை பஸ்ஸிலே ஏத்தி அனுப்பிண்டு வந்துடுறேன். என்னெத் தேடீண்டு யாராச்சும் வந்தாள்னா இங்கியே அவாளெ இருக்கச் சொல்லு...’
சீனிவாசன் மகளைக்கூட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி வீதிக்கு வந்தார்.
கீழ்மேல் ரோட்டில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் புத்தகப் பைகளோடு நடந்துகொண்டிருந்தனர். பஸ்களின் ஹாரன் சப்தம், லாரிகள், டெம்போக்களின் இரைச்சல் இவற்றோடு போட்டி போடாமல் சற்று தூரத்தில் விட்டுவிட்டு ஒலிக்கிற குயிலின் குரல் ஒயிலாக இழைந்தபடி இருந்தது. ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியின் அரச மரத்திலிருந்தோ, வடக்குத் தோப்புக்குள்ளிருந்தோ குரல் கொடுக்கும் ஒற்றைக் குயிலாக அது இருக்க வேண்டும்.
பட்டீஸ்வரர் கோயிலின் முன்புற மைதானத்தில் டூரிஸ்ட் பஸ்களும், சில ஆட்டோக்களும், மோட்டார் பைக்குகளும் ஒதுங்கி நின்றிருந்தன. அய்யப்பன் கோயில் பக்தர்கள் உள்ளே போவதும், வருவதுமாகத் தெரிந்தனர். இந்த குழுக்களைத் தவிர வழக்கமாக வந்து போவோரின் எண்ணிக்கையும் கூடியிருந்தது. இந்த மாதத்தில் தொடங்குகிற ஆருத்ரா தரிசனத்திலிருந்து, பங்குனித் தேரோட்டம் வரை இக்கோயிலில் எல்லா நாட்களுமே விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படும்.
இதோ
அரச மரத்து மேடையின் இடது புறமிருந்த பஸ் ஸ்டாண்ட் நெருங்கி விட்டது.
இன்னமும் நானென்ன சின்னப் பாப்பான்னு நெனச்சிட்டு இருக்காரா இந்த அப்பா...! சும்மா ஒரேயடியா எனக்குப் பாதுகாப்பு சொல்லிட்டே வர்றாரே. இதையும் அதையும் காட்டி என்னெ யாராச்சும் தூக்கிட்டுப் போயிடுவாங்களா என்ன? பள்ளிக்கூடத்துல சேர்க்கறப்பவும் சரி, அதை விட்டு இந்த ஹைஸ்கூல் மாற்றல் பண்ணிக்கொண்டு போய் விடறப்பவும் சரி, எப்படியிருந்தாரோ அதே லெவல்லதான் இன்னமும் இருக்கார். கொஞ்சம்கூட மாற்றமே இல்லே.
மனதுக்குள் கிளர்ந்த கோபத்தை வார்த்தைகளில் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவருடன் பின்தொடர்ந்து நடந்து வந்தாள் பாக்யரதி. முகத்தில் அவளின் கோபத்திற்கான அறிகுறிகள் பரவத்தான் செய்தன.
"…ஆபீஸ் வேலையிலே உஷாரா இருக்கவேணும்... தெரிஞ்சுதோ..! கண்ட ஸ்டாப்ஸ்களோட எல்லாம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். அப்பங்காரன் இங்கெ எங்கெ வரப்போறானுங்குற தைரியத்துல டவுனச் சுத்தலாம்னு கனாக் காணாதே... புரிஞ்சுதோ...! ஆபீஸ் விட்டதும் நேரா வீடு வந்து சேர்ந்திடு... என்ன?’
புத்திமதிகளை கிலோக்கணக்கில் வழங்கிக் கொண்டே பஸ் ஸ்டேண்டில் இவர் நின்றபோது, இனியாச்சும் கொஞ்சம் இந்தத் திருவாயை மூடிக்கொண்டு இருந்தாரென்றால் எவ்வளவோ புண்ணியம்
என இவளுக்குத் தோன்றியது.
அருகில் நின்றவர்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்கத்தான் செய்தனர். அதையெல்லாம் சீனிவாசன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. பஸ் ஸ்டேண்டையும் தன்னுடைய வீட்டு முற்றத்தைப் போல் எண்ணிக் கொண்டிருப்பவராகத் தெரிந்தது. இவருடைய குரல் சாமானியப்பட்டதல்ல. ரகசியம் பேசினாலும் கூட இரண்டு மூன்று வீடுகளுக்குத் தாராளமாகக் கேட்கும். அப்படியொரு சாரீரம்.
இவரோட அளவுக்கு மீறின கண்டிப்பும், வீணான அதிகாரமும் மற்றவர்களை எப்படியெப்படியெல்லாம் நோகடித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் துளியாவது நினைத்திருப்பாரா இந்த அப்பா...
என நினைக்கையில் நெஞ்சம் முழுக்க வெறுப்பு ஊடுருவியது. காற்றுக்கு இழுபடும் கம்பி வேலியின் பூப்போல உள்ளுக்குள் உணர்ச்சி படர்ந்து தவித்தது.
இங்கிருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரையிலும் செல்கின்ற பஸ்கள் சில நின்றிருந்தன. தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, கோவைப்புதூர் பக்கங்களில் இருந்தெல்லாம் வருகின்ற பஸ்களில் கூட்டம் கூடுதலாகத் தெரிந்தது. அதனால் இந்த ஸ்டேண்டில் நிற்காமலேயே சில பஸ்கள் சென்றன.
வலது புறம் தெப்பக்குளம். வருஷத்துக்கொரு முறை தெப்பத்தேரோட்ட சமயத்தில்தான் இதில் தண்ணீரைப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் படிக்கட்டுகளில் ஆடுகள் குதித்து விளையாடும். வெயில் சுகத்தில் உறக்கம் போடும். குட்டிகளோடு சுற்றித் திரியும். ஞாயிற்றுக் கிழமைகளில் செட்டிபாளையம் கசாப்புக் கடைகளின் முன்னே கட்டுப்பட்டு தலை குனிந்தபடி படுத்திருக்கும்.
தேருக்குத் தென்புறமுள்ள பரந்த மைதானத்தில் தக்காளி, வாழைக்குலை மார்க்கெட்டின் ஏலம் போடும் சப்தமும் அந்தக் காலை நேரத்தின் சுறுசுறுப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. முகூர்த்த தருணங்களில் களைகட்டும் கல்யாண மண்டபங்கள் எதையோ எதிர்பார்ப்பவைகளைப் போல் தெரிந்தன.
வந்து நின்ற இரண்டு பஸ்களையும் நோக்கி