Azhiyatha Kaadhalin Aalayam
()
About this ebook
திரு/திருமதி சுந்தரம் தம்பதிகளை நான் சில காலமாகத்தான் அறிந்திருக்கிறேன். நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால் நாங்கள் எதிர் எதிர் வீடுகளில் இருப்பது ஆச்சர்யம். தம்பதிகள் இருவரையும் நான் முதன் முதலில் சந்தித்ததே என் வீட்டில்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். 4 ஆகஸ்ட் 2007ம் நாளன்று, கோட்டூர்புரத்திலுள்ள எங்கள் வீட்டில் "பாரதி 200" சந்திப்பிற்கு ஏற்பாடாகி இருந்தது. ஏற்பாடு செய்திருந்த திரு.என்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் "பாரதி 200" கூட்டத்தை அவர் விரும்பியபடி நடத்துவது தான் சரி என்று நண்பர்கள் முடிவு செய்து பாரதியைப் படிக்க நாங்கள் தயாராக இருந்தோம். அப்போதுதான் சுந்தரம் தம்பதிகள், திரு பாலசுப்ரமணியன் அவர்களின் அழைப்பின் பேரில், ''பாரதி 200" கூட்டத்தில் கலந்து கொள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். மிகச்சில வினாடிகளுக்குள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.
அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து, திரு சுந்தரம் அவர்கள் உடனேயே அவர்கள் வீட்டில், எங்கள் நட்புவட்டம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சுமார் 15 பேர் போயிருந்தோம். அபார உபசரிப்பு! மிகவும் நெருங்கிப் போனோம். அதன் பிறகு பத்மா மேடம் நவராத்ரி, கோகுலாஷ்டமி, என அனைத்து விழாக்களுக்கும் கூப்பிடுவார். அவர் மிகுந்த அக்கறையுடன் அலங்கரிக்கும் துர்காதேவியை காண்பதற்காகவே தவறாமல் போய் வருவேன். அந்த தம்பதிகளின் அந்யோன்யம், அறிவுப்பகிர்தல், அன்புப்பகிர்தல், நட்பு கொண்டாடுதல், நலம் விசாரித்தல், விருந்தோம்பல் என்று எத்தனையோ சிறப்புக்களை நான் வெகு குறுகிய காலத்திலேயே அனுபவித்துப் புரிந்துகொண்டேன். ஆனால் என்ன? திருமதி பத்மா சுந்தரம் மறைந்த தருணத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். சென்னை வந்த பிறகும் எனக்கு திரு. சுந்தரம் அவர்களைச் சந்திக்கத் தயக்கமாகவே இருந்தது அவருடைய நண்பர் திரு பாலசுப்பிரமணியன் அவர்களிடம் எப்போதும் வருத்தப்பட்டுச் சொல்வேன். “சுந்தரம் இந்த Formality- களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்” என்று சொல்லி நட்புடன் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டார்.
நான் என் மாலை நேர நடைப்பயிற்சியில் பெரும்பாலும் திரு.பாலசுப்ரமண்யத்தை சந்திப்பதுண்டு. அப்படி ஒருநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவருடைய மேஜையில் சுந்தரம் அவர்கள் தொகுத்திருந்த “Elegies on Padma”வைப் பார்த்தேன். ஒரு சில பக்கங்களில் என் பார்வையை ஓட்டினேன். இப்படிக்கூட ஒரு மனைவிக்காக ஒரு கணவன் உருக முடியுமா? என்று பாலுசாரிடம் வியந்து கேட்டேன். இதனைப் படித்துவிட்டுத் தரட்டுமா- என்று கேட்டு எடுத்துக் கொண்டு போனேன். படித்துப் படித்து கண்ணீர் மல்கினேன். எழுத்தாளராகவே நான் என் வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ படித்திருக்கிறேன்... எத்தனையோ எழுதியிருக்கிறேன். அவை எதிலும் காணாத ஒரு ஆழ்ந்த உணர்வை, ஆழ்ந்த தாக்கத்தை இந்த கவிதாஞ்சலி எனக்குள் ஏற்படுத்தியது. இரவு பகலாக திரு.சுந்தரம் அவர்களின் சில வரிகள்.. வார்த்தைகள் எனக்குள் பிரயாணப்பட்டுக் கொண்டேயிருந்தது. நான் இப்போது திருமதி பத்மா சுந்தரம் அவர்களுடன் மிகவும் நெருங்கி விட்டது போல் உணருகிறேன். இப்படியொரு பெண்மணியா? அவர் இருந்த போது பழகாமல் போய் விட்டோமே என்று வருந்துகிறேன்.
இந்த என் மனநிலையில் நான் இருந்தபோது நான் சற்றும் எதிர்பாராத வகையில் திரு சுந்தரம் அவர்கள் போன் செய்து “Elegies on Padma”படித்தீர்களா? என்றார். படித்தேன் என்றேன். “அதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா” என்றார். அவருடைய ஆங்கிலம் என்றுச் சற்று மிரட்டத்தான் செய்தது. “முயன்று பார்க்கிறேன்” என்றேன். “நான் சில பக்கங்களைச் சொல்கிறேன். முதலில் அதை தமிழில் எழுதுங்கள். உங்கள் எழுத்து என் உணர்வோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறேன். பின் தொடரலாம்” என்றார். நான் அவர் குறிப்பிட்டுத் தந்த பக்கங்களை மட்டுமே மொழி பெயர்த்துக் கொடுத்தேன். தொடரச் சொன்னார்.
என்னால் இயன்றவரை மொழி பெயர்த்துள்ளேன். இதனை நேரடி மொழி பெயர்ப்பு என்று சொல்லிவிட முடியாது. உணர்வுக்கும் கருத்துக்கும் ஏற்றார்போல வார்த்தைகள் சேர்க்கப் பட்டுள்ளன. ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கையும் அதிகம். இதனை திருமதி பத்மா சுந்தரத்தின் பரிபூரண ஆசிகளோடுதான் என்னால் எழுத முடிந்திருக்கிறது. துர்காதேவியின் மடியில் இருந்துகொண்டு எனக்கு மனப்பூர்வமான ஆசிகளை வழங்கி அவரே என்னை எழுத வைத்திருக்கிறார்.
திரு. சுந்தரம் அவர்கள் அறியாத மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இல்லை. அப்படியிருக்க என்னைத் தேர்ந்தெடுத்து இந்த வாய்பினைக் கொடுத்தமைக்காக அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Read more from Dr. Shyama Swaminathan
Sri Durgai Ammanin Magimaigal Rating: 5 out of 5 stars5/5Thathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Karunai Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsSaviyil Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsIniyavale Indhumathi Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Oru Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratingsNallenavellam Tharum Navathirupathi Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsMagaperu Magathuvam Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Payana Ezhuthalargaludan Uttarpradesha Ula Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Sila Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pesum Vaarthai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Azhiyatha Kaadhalin Aalayam
Related ebooks
Sinthaiyil Thulirthavai Rating: 0 out of 5 stars0 ratingsBodhi Maram Rating: 0 out of 5 stars0 ratingsOorani Yappu Rating: 0 out of 5 stars0 ratingsNaanum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsJhangiri Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Udanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsKali Thogai Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendra Kavignan Kannadhasan Rating: 0 out of 5 stars0 ratingsOrayiram Meengalum Ottrai Kokkum Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyil Payanikkum Kadal Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jun 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsNammilirunthu Naam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsMul Rating: 4 out of 5 stars4/5Vaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsThoorikaikku Thookkamillai Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsPaal Tumbler Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Uravadu Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Vizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Azhiyatha Kaadhalin Aalayam
0 ratings0 reviews
Book preview
Azhiyatha Kaadhalin Aalayam - Dr. Shyama Swaminathan
http://www.pustaka.co.in
அழியாத காதலின் ஆலயம்
Azhiyatha Kaadhalin Aalayam
Author:
Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்
Dr. Shyama Swaminathan
For more books
http://www.pustaka.co.in/home/author/shyama-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பத்மாலயத்து பரமாத்மா
அணிந்துரை
நட்புரை – 1
முன்னுரை
நன்றியுரை
இரங்கல் செய்திகள்
பத்மாவுக்கு கவிதாஞ்சலி
அழியாத காதலின் ஆலயம்
பத்மாவுக்கு கவிதாஞ்சலி
(Elegies on Padma)
வி. சுந்தரம் I.A.S.(Retd.)
தமிழாக்கம்
Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன் Ph.D.,
*****
பத்மாலயத்து பரமாத்மா
பாரதியின் சக்தியாய்
பாருக்குள் நுழைந்தாள்...
மாபெரும் சக்தியாய்
மானுடத்தில் வந்தாள்...
காலத்தின் துளிகளில்
கவிதையாய் நின்றாள்...
உள்ளத்தில் வரைந்தாள்
துள்ளிக் குதித்தாள்
கலை அருவியில்
கரித்துக் குளித்தாள்...
இசையுடன் ஊடாக
எல்லாமாய் நின்றாள்.
சர்வமும் சக்தியுமாய்
சகலமும் தந்தாள்.
பத்மாலயத்தின்
பரம சுந்தரரே
இறப்பில்லை என்றும்
இனிய இதயங்களுக்கு...
- குமரி எஸ். நீலகண்டன்
முதுநிலை அறிவிப்பாளர்,
அகில இந்திய வானொலி
*****
*****
அணிந்துரை
திரு.டி.வி.வெங்கட்டராமன்
வி.சுந்தரம் அவர்கள் என்னுடைய ஆப்த நண்பர். பல ஆண்டுகளாக சுந்தரம் -பத்மா தம்பதிகளுடன் நன்கு பழகியிருக்கிறேன்.
வி.சுந்தரம், ஓர் சிறந்த அறிஞர். ஆழமாகக் கற்றவர். இன்னும் கற்று வருபவர். கற்பதைக் கசடறக் கற்பவர். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும், அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்து தெளிவடைந்து, தனக்கென கொள்கைகளை வகுத்துக் கொண்டு வருபவர். உண்மைகளை நன்கு தெரிந்து கொள்ளும்போது, அதற்கேற்ப, தன்னுடைய கருத்துகளையும் மாற்றிக் கொள்ளத் தவறமாட்டார்.
இலக்கியத்திலும், வரலாற்றுக் கல்வியிலும் சுந்தரம் அவர்கள், ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆங்கில இலக்கியம், கவிதை போன்றவை நிறைந்த அவருடைய பேச்சில் கவிதை உணர்வுகள் இருந்து கொண்டே இருக்கும். ஆங்கில கவிதைகளை அவர், மடை திறந்த வெள்ளம்போல் எடுத்துச் சொல்லும்போது அவருடைய இலக்கியத் திறனும், மென்மையான உள்ளுணர்வுகளும் சாலச் சிறந்து வெளிப்படும்.
இவையெல்லாம் கடவுள் அவருக்குத் தந்த பரிசு. அதற்கு மேலாக, இறைவன் சுந்தரத்திற்கு, ஒப்பற்ற ஈடு இணையில்லாத ஒரு பரிசையும் வழங்கினான். அது தான் பத்மா என்கிற தெய்வம். மனைவியாக, நண்பனாக, ஆலோசகராக, காக்கும் சக்தியாக பத்மா, சுந்தரத்திற்காகப் பணிபுரிந்து, அவருடைய வாழ்க்கையிலே ஒரு நிறைவை அடைச் செய்வதற்காகவே கடவுள் பத்மாவை சுந்தரத்துடன் சேர்த்தான். அதன் விளைவாக, சுந்தரத்தின் ஆன்மா கணிசமான அளவில், படிநிலை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அதற்கும் பத்மா என்கிற புனிதமான ஆன்மாவே மூலக் காரணம்.
பத்மாவை நாமெல்லோரும் இழந்திருக்கிறோம். அதாவது, ஸ்தூல, சூக்ஷும தேகங்களில் அவர் நம்மிடம் இல்லை. இது சொல்லவொண்ணாத் துன்பத்தைத் தருகிறது. தனது இழப்பை, துன்பத்தை சுந்தரம் அவர்கள், கவிதையாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அங்கே அவரது துக்கத்தின் ஆழத்தைப் பார்க்கிறோம். உணர்வுகளின் மென்மையிலே மூழ்கி விடுகின்றோம்.
கவிஞன், தன்னுள் தோன்றும் பல உணர்வுகளுக்குக் கவிதை வடிவம் கொடுக்கின்றான். ஆங்கிலக் கவிஞர்கள் இதில் குறைவில்லை. சுந்தரம், பத்மா அவர்களுடைய பல நண்பர்கள் தத்தம் உணர்வுகளையும் போற்றத்தக்க வகையில் கவிதா ரஸனைக்கு இம்மியேனும் குறையாமல் சொற்களைக் கையாண்டு சுந்தரத்திற்கு ஆறுதல் கூறியிருக்கின்றார்கள். அதெல்லாம் நட்பினுடைய ஆழத்தின் வெளிப்பாடு என்று தெரிந்து வியந்து போனேன்.
சுந்தரம் அவர்களோ, நடந்ததையெல்லாம் அனுபவித்தார். பத்மாவினுடைய அன்பின் இன்ப எல்லையைக் கண்டவர். அவ்வழியே மானசீகமாக தெய்வம் என்பதோர் சித்தத்தை நெருங்கியவர். அவருடைய கவிதைகளும் அந்த வகையிலே புனிதமானவை.
சுந்தரம் அவர்கள், ஆங்கிலத்தில் சொல் வன்மை படைத்தவர். ஆகவே, அவர் எழுதியதெல்லாம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அதைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்பது ஒரு கடினமான பணியாகும். சுந்தரம் அவர்களுடைய உணர்வுகளைத் தெரிந்து கொண்டால்தான் தமிழில் சொல்நயமும், எண்ணங்களின் வளமும் தோன்றிக் கொண்டே வரும். மொழி பெயர்த்தல் என்பது சொற்களுக்கோ அல்லது வார்த்தைகளுக்கோ அகராதிப் பொருள் கொடுப்பதாகாது. படைப்பின் உட்பொருள் மொழிபெயர்ப்பில் வெளிவர வேண்டும். அது எப்படி வரும்? படைத்தவரும், மொழி பெயர்த்தவரும் ஒன்றாகிவிட்டால் அது வெளிப்படும். இறைவனுடைய திருவருள் அங்கே இயங்குவதைப் பார்க்கின்றோம். படைத்தவரின் கவிதையை அல்லது இலக்கியத்தை இறைவனே சுவைத்து, அதன் உட்பொருளை மொழிபெயர்ப்பவருடைய உள்ளத்திற்கு மாற்றுகின்றார். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. இது அடியேன் பெற்ற அனுபவம்.
டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், திருவருள் துணையோடு, இந்தப் பணியைச் செய்து முடித்திருக்கின்றார். அவருடைய அறிவு நீண்டு, அகன்று, பரந்து நின்று தக்க உணர்வுகளைப் பெற்று, இந்தத் தமிழாக்கம் செய்து வெற்றி பெற்றிருக்கின்றது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. அவற்றிற்கு அப்பால் ஒரு நிலை உண்டு. இறைவன் நாமெல்லோரும் அந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறான். அதுதான், 'கேடும், ஆக்கமும் கெட்ட திருவாகிய நிலை.; சுந்தரம் அவர்களுடைய நூலை நாம் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுந்தரத்தின் துயரத்தை துடைக்கின்றோம். நம்முடைய துயரத்தின் அடிப்படையை, உண்மையைத் தெரிந்து கொண்டால் பிறருடைய துன்பத்தைத் தவிர்க்கவும், துடைப்பதற்கும் முன் வருவோம். இந்த நூலைப் படிக்கும் போது நமது ஆழ்மனம் அவ்வகையில் பக்குவப்படுமேயானால், பத்மா அவர்கள் விண்ணிலிருந்து அருள்மழை பொழிந்து கொண்டிருப்பார்கள்.
வாழ்க பத்மா!
29.8.2012
திரு.டி.வி. வெங்கட்டராமன்
*****
நட்புரை – 1
சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமசந்திரன் டி.லிட், தஞ்சாவூர்
அன்புள்ள நண்பரே,
உங்கள் தர்மபத்தினி ஒரு குணக்குன்று. இதனை நான் முதன் முதலாக அவர்களை உங்கள் வீட்டில் சந்தித்தபோதே என் ஒவ்வொரு ரத்த அணுக்களிலும் உணர்ந்தேன். ஐய்யஹோ! அவர் இன்று இல்லை. நீங்கள் அனாதையாக்கப்பட்டு விட்டீர்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம் எனக்கில்லை. ஏனென்றால் அதன் இயலாமையை நான் நன்கறிவேன். நான் எல்லாம் வல்ல அந்த ஈஸ்வரனிடம், பிரார்த்தித்துக் கொள்வது என்னவென்றால் அவரே உங்களுக்கு இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளவும், உங்களது மனித சேவைகளைத் தொடரவும் அனைத்து சக்திகளையும் வழங்கட்டும் என்பதே.
பாரதி ‘காதல் செய்யும் மனைவியே சக்திகண்டீர்; கடவுள் நிலை அவளாலே எய்தல் ஆகும்.' என்று உறுதிபடச் சொன்னது நினைவுக்கு வருகிறது. நீங்கள் இதனை நிஜப்படுத்தி விட்டீர்கள். அவள் (பத்மா) உங்களுக்கு அங்கே, இங்கே, எங்கும் நிறைந்திருக்கிறாள். பாரதியின் இந்த வார்த்தைகளை ‘அவளே என் மனதின் அமைதி’ என்று நீங்கள் குறிப்பிடுவதன் மூலம் சத்தியமாக்கிவிட்டீர்கள். உங்கள் கவிதாஞ்சலியைப் போலவே உண்மையாக உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். அவள் (பத்மா) எப்பொழுதும், உங்கள் ஆத்மாவின் தோழியாகவே இருந்து கொண்டிருப்பாள். ஆத்மாவிற்கு மரணம் என்பதே கிடையாது. உங்களுடைய மனவெளிப்பாடுகளும் மந்திரங்களும் உங்களை வாழவைக்கும். நான் கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் உங்களின் ஆங்கில Elegiesஐப் படித்து முடித்தேன். அவள் (பத்மா) உங்களுக்குள்ளேயே வசித்துக் கொண்டு உங்களுக்குப் புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.
கடவுள் மேன்மையானவர்.
இனி, முனைவர் ஷ்யாமா அவர்களின் மொழிபெயர்ப்பு பற்றி:
சாக்காடு நிகழாத நாளில்லை; எனினும் சாதலின் இன்னாதது இல்லை. இயமன் கருப்பையில் இருக்கும் சிசுவைக்கூட பீள் பிதுக்கி எடுத்து விடுவான் என்று நாலடி சாற்றுகிறது. புறநானூற்றுப் புலவன் ஒருவன் படைப்போனைப் பண்பிலான் என்று சாடியிருக்கிறான்.
"இன்னாது அம்ம இவ்வுலகம்;.
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே"
என்ற வாசகத்தை எவரும் மறத்தல் கூடாது.
தேனிசையோன் (Tennyson) பாடிய ஒரு பாடலை என் பிள்ளைப் பிராயத்திலே பயின்றேன். இன்றளவும் அதை மறக்கிலேன்.
இளம் தம்பதி, அவர்களுக்கு ஒரே ஒரு குழந்தை, போருக்குச் சென்ற கணவனின் சடலம் மனைவிக்கு அனுப்பப்படுகிறது. அவள் மயக்கம் உறவில்லை ; அழவும் இல்லை. அருகிருந்தோர், அவள் அழவேண்டும், இல்லையேல் மாண்டு போவாள்,
என்று கூறினர். அவளை அழவைக்கப் பலரும் முயன்றனர். எதுவும் பலிக்கவில்லை. அப்போது தொண்ணூறு வயதுடைய ஒரு மூதாட்டி, மனைவியின் மடியிலே அவள் குழந்தையைக் கிடத்தினாள். உடனே, கோடை மாரி போல் அவள் கண்களில் வெள்ளப்பெருக்கு. என் செல்லச் செல்வமே, நான் உனக்காக உயிர்த்திருக்கிறேன்
என்று கதறினாள்.
அதீதமான துக்கத்திற்கும் போக்கு வீடு அமையாவிட்டால் துக்கப்படுவோன், இல்லாமல் போய்விடுவான். துக்கத்தை அனுபவிப்பவன், போக்கு வீடு ஒன்று அமைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம். நன்கு கற்றவர் தம் துக்கத்தை இரங்கல்பாக்களில் வடித்து விடுகின்றனர். அச்செயல் அவர்களை வாழ்விக்கின்றது.
அன்பர் சுந்தரம் அவர்கள் துக்கம் அனைத்தையும் ஒரே பாடலில் ஒரே சமயத்தில் வடிக்க முடியாதவராக இருந்தார். அவ்வப்பொழுது துயரம் மேலிடுகின்றபோது அழுது, அழுது பாடியிருக்கிறார். இதன் மூலம் அவர் உயிர்த்திருக்கின்றார்.
சுந்தரம் அவர்களுக்கு ஆங்கிலமே தாய்மொழியாகிவிட்டது. ஆங்கிலத்திலேயே சிந்திப்பவராக மாறிவிட்டார். ஆகவேதான் அவர் பாடல்கள் ஆங்கிலத்திலேயே வெளிவந்தன. சுந்தரம் தமிழறிவார்; அதன் சுவையறிவார்; எனினும், தமிழ் மொழியில் சிந்தாமல், சிதறாமல், தம் எண்ணங்களை முழுமையாக வெளியிட முடியாதவராக இருக்கின்றார். என்றாலும் தாம் பாடிய இரங்கல் பாடல்கள் தமிழில் ஆக்கம் பெறுதல் வேண்டும் என்று சாலவும் விழைந்தார்.
தெய்வாதீனமாக மறைந்த உத்தமியான பத்மா அம்மையாரோடு நெருங்கிப் பழகி வந்த முனைவர் திருமதி ஷ்யாமா சுவாமிநாதன் அவர்கள் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டார். ஆங்கிலப் பாக்களின் சுவாசிப்பை, நாடி பிடித்துப் பார்த்து, பாட்டுத் திறனைத் தம் வசமாக்கிக் கொண்டு பயிலுவாரை ஈர்க்கும் தமிழில் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். உவப்பிலா தமிழ் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றது.
படிப்போர் உள்ளங்களை உருக்கும் பகுதிகளை நான் இங்கு பட்டியலிட்டுக் காட்டவில்லை. அதற்கான தேவையுமில்லை.
அன்பர்களே, மொழி பெயர்ப்பை விமர்சனம் செய்ய வேண்டாம். அதை மீண்டும் மீண்டும் படியுங்கள்.
துக்க வெளிப்பாடே துக்கத்தைத் தாங்கும் சக்தி பெற்றது. துக்கமும் ஒரு புனிதமே. துக்கம் நம்மை நமக்குக் காட்டும்; தேற்றும்; முறையாக வாழ வழி வகுக்கும்.
சகோதரி ஷ்யாமா அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
*****
நட்புரை – 2
கார்லண்டு N. ராஜகோபாலன்1.A.S., (R)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் பத்மா!
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
உன் அன்புள்ள ஆத்மா என்னை விட்டகலாது!
- வி. சுந்தரம்
ஸ்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்
அழிவற்ற உண்மையான பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
என்கிற அழிவற்ற உண்மையின் தெளிவற்ற மனோ நிலையுடனும் தேக அசௌகரியத்துடனும், மிச்சம் மீதியள்ள மூளை வளத்துடனும், ‘சூர்யஸ்ச்ச’ என்கிற ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டே நான், என்னைத் தேடி என் ஜன்னல் வழியாக நுழைந்து கொண்டிருந்த பாரபட்சமற்ற ஜனநாயகத்தின் முழுமுதற் சின்னமான சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் இன்ப அதிர்ச்சியாக, மிக நேர்த்தியாகவும், மிகுந்த காதலுடனும், மதி மயக்கும் தெளிவுடனும், உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத உயர்ந்த மனிதன் ஸ்ரீ.வி.சுந்தரம் I.A.S.(R), அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீமதி பத்மாவின் கவிதாஞ்சலின் ஒரு பிரதி கிடைக்கப்பெற்றேன். வசீகரமான அதன் வடிவமைப்பால் கவரப்பட்டு, முதலில் நான் ‘பத்மா’வைப் பற்றிய, அதாவது ஐஸ்வர்யங்கள் மற்றும் ஞானத்திற்கு வளமானவளும் ‘பத்மலோசனி’, ‘பத்மமாலினி’, ‘பத்மஹஸ்தா’ ‘பத்மபாதா’, ‘பத்மநாபா’ என்றெல்லாம் போற்றப்படுபவளைப் பற்றிய ஒரு படைப்பு என்று நினைத்தேன். உள்ளே, பக்கங்களைத் திறந்து படித்துப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். இது 28, அக்டோபர், 2011 அன்று இறைவனடி சேர்ந்துவிட்ட இந்த புண்ணிய பூமி, பாரதத்தின் புனித பண்பாட்டுச் சின்னமான ஸ்ரீமதி பத்மா சுந்தரத்தின் மீது, ஸ்ரீ சுந்தரம் வடித்துள்ள தூய்மையான காதலின் வெளிப்பாடு என்று.
சில பண்டிகை நாட்களில், இந்த தம்பதிகளுடன் அவர்களுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்க, நான் அனுமதிக்கப்பட்டிருந்த வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். மனம் கவர்ந்த இந்த தம்பதிகளிடம் குறிப்பாக, அன்பான, பாங்கான, புன்னகைமாறாத பாரதத்தின் பெருமை மிகு பெண்ணிமணியான ஸ்ரீமதி பத்மாவிடம் என் இதயம் மற்றும் ஆத்மாவைப் பறி கொடுத்து விட்டேன். இந்தக் கவிதாஞ்சலி, சிறந்த குணவானான ஸ்ரீ சுந்தரம் அவர்களின் ஆழ்ந்த அன்பான வெளிப்பாடு.
இந்தப் புத்தகம் உயர்ந்த மனிதர்களின் உணர்வு பூர்வமான இடம் பிடிக்கக் கூடியதுமான வகையில் அமைந்துள்ளது. கண் கவரும் இந்தப் புத்தகம், இதனை வாசிக்கும் சான்றோர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கின்ற துர்பாக்கியசாலிகளுக்கும் அருமருந்துப் பரிசாக இருக்கும். ஸ்ரீ சுந்தரம் எப்பொழுதும் மேன்மையுடைய ஓய்வற்ற ஆத்மா. இந்த கவிதாஞ்சலி அவரால் மிகவும் நேசிக்கப்பட்ட வாழ்க்கைத் துணையின் மறைவினால் உருவான வெற்றிடத்தின் வெளிப் பாடு. ‘இறப்பு’ என்பது பூலோக வாழ்க்கையின் முடிவுதான் என்றும் ‘ஆத்மா’ அழிவற்றது, நிலையானது என்றும் நாம் அறிவுறுத்தப் பட்டிருக்கிறோம். எனவே ஸ்ரீமதி பத்மா, ஸ்ரீ சுந்தரத்தின் இந்தக் கவிதாஞ்சலியில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
ஸ்ரீமதி பத்மாவின் மேன்மையான, அழிவற்ற ஆத்மா, எப்பொழுதும் ஸ்ரீ. சுந்தரத்துடன் உடன் இருந்து அவரை அனைத்து செயல்களிலும் ஊக்குவித்துக் கொண்டிருக்கட்டும்.
*****
நட்புரை – 3
திரு. இந்திரா பார்த்தசாரதி
சிலரைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கும் போது, அவர்கள் முகங்கள் தனித் தனியாக நமக்குத் தெரிவதில்லை . இரட்டை வடிவில் கணவன்- மனைவியாகத்தான் நம் மனக்கண்முன் காட்சி அளிக்கும். அவர்களை ஒருவரிடமிருந்து மற்றவரைப் பிரித்துக் காண முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.
பத்மாவும் சுந்தரமும் அத்தகைய தம்பதியினர். அவர்களைத் திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தது முதல் இன்று வரை இதுதான் என் அனுபவம்.
பத்மா சுந்தரம், அவர் குறிப்புக்களில் எழுதியிருப்பது போல், அவருள் கலந்து, நீக்கமற நிறைந்து, இன்னும் இரட்டை முகங்களாகத்தான் என் நினைவில் நிற்கின்றனர்.
அவர் தம் மன உணர்வுகளை எழுத்தில் வடித்து, தம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பத்மாவும் அவருடன் இணை பிரியாமல் இன்றியமையாத ஓர் அம்ஸமாகத் தோற்றம் கொண்டிருப்பது போல்தான் தோன்றுகிறது.
மிக அந்தரங்கமான, உள்ளத்துடன் ஒன்றிவிட்ட ஆழமான உணர்வுகள், எழுத்தில்தான் தம் அடையாளத்தைப் புலப் படுத்திக் கொள்ள முடியும்.
நான் ஆங்கிலத்தில் இக்குறிப்புக்களைப் படித்தபோது, அவ்வுணர்வுகளின் தீவிரத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. ‘ஊகிக்க முடிந்தது’ என்று ஏன் சொல்லுகிறேன், என்றால், சொற்களைக் கடந்து நிற்கும் அச்சிந்தனைப் போக்கையும் குறித்துக் காட்டும் ஒரு சாதனமாகத்தான் அவ்வெழுத்து அமைய வேண்டும். சுந்தரத்தின் எழுத்து அத்தன்மை வாய்ந்தது. முதல் பக்கத்திலிருந்து இறுதி வரை ஒரு பிரவாகமாகத்தான் இருந்தது.
இந்தக் குறிப்புக்களைத் தமிழில் தந்திருக்கிறார் திருமதி ஷியாமா ஸ்வாமிநாதன். மூல எழுத்திற்கு உணர்வுகளின் மொழி பயர்ப்பு என்றால், அந்த மூல எழுத்தை இன்னொரு மொழியில் ஆக்கும்போது உணர்வுகளுக்கும், மூல எழுத்துக்கும் சேதாரம் இல்லாமல் இதைச் செய்தாக வேண்டும். இவ் வகையில், ஷ்யாமா வெற்றி அடைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சரளமான நடை, மொழிபெயர்ப்பில் செயற்கைத் தன்மை இல்லை. ஆங்கில மூலத்தைப் படிக்கத் தூண்டுகிறது என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
*****
முன்னுரை
என் அன்புக்குரிய மனைவி பத்மா, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி நள்ளிரவில் திடீரென்று தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டாள். ஒரு பேரொளி, சூரியப் பேரொளி, நாற்பத்தியோரு ஆண்டுகளுக்கும் மேலாக என்னோடு, என்னருகே ஜொலித்துக் கொண்டிருந்த பேரொளி. ஒரு நள்ளிரவில் என்னை நிர்கதியற்ற(யான) தனிமையில் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாள்/து.
அவள் மறைந்த அந்த என் தனிப்பட்ட சோக தினத்திலிருந்து, கடந்த ஐந்து மாதகாலமாகத் தினம் தினம், என்னைவிட்டுச் சென்றுவிட்ட அவளின் ஆத்மாவுடன் நான் மேற்கொண்டிருந்த மிக நெருக்கமான தெய்வீகமான உரையாடல்களின் வெளிப்பாடுதான் இதோ இந்த இரங்கல் கவிதைகளின் தொகுப்பு. என் பத்மாவுக்கான கவிதாஞ்சலி!
வில்லியம் வோர்ட்ஸ்வொர்த், 'லிரிகல் பேலாட்ஸ்’ (1800) (Lyrical Ballads) எனப்படும் தனது படைப்பின் இரண்டாவது பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளது என்னவென்றால் கவிதை என்பது ஆழ்மன உணர்வுகளின் இயற்கையான வெளிப்பாடு. ஆழ்ந்த மௌனத்திலிருந்து வலுவான உணர்ச்சிகள் பிறக்கின்றன. தீவிரமாகச் சிந்திக்க வைக்கின்றன. நினைவுகளால் தூண்டப்படும் வரை அமைதிநிலை மெல்ல மெல்லக் கரைந்து, உணர்வுகள் மேலோங்கி, மனம் முழுவதும் வியாபித்து விடுகிறது
என்கிறார். நானும் அப்படி ஒரு நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
ஸ்ரீமதி பத்மா சுந்தரமும் ஸ்ரீ