About this ebook
Read more from Yandamoori Veerendranath
Avan Aval Kadhalan Rating: 5 out of 5 stars5/5Professional Killer Rating: 3 out of 5 stars3/5Priyamanaval Rating: 0 out of 5 stars0 ratingsPanam Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsSaagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsRadhaiyum Kunti Deviyum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Andharmugam
Related ebooks
Thedal Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Arai Rating: 5 out of 5 stars5/5Nee Enthan Athisayam! Rating: 5 out of 5 stars5/5Periyar Rasigan Rating: 0 out of 5 stars0 ratingsTharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsAdichuvadugal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkenave Kaathiruppen Rating: 2 out of 5 stars2/5Mouna Yutham Rating: 4 out of 5 stars4/5Eriyum Panikkattikal Rating: 0 out of 5 stars0 ratingsNayana Theetchai Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Oonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Idhaya Regai Rating: 5 out of 5 stars5/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsNimmi 2 Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsஎன் மனம்... உன் வசமே..! Rating: 0 out of 5 stars0 ratingsநெருப்பைத் தீண்டிய தென்றல்… Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsபெண்ணே, நீ வாழ்க! Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Theruvil Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Yenada... Rating: 5 out of 5 stars5/5Yaarivalo…? Devathaiyo…? Rating: 4 out of 5 stars4/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsஇமையாக நானிருப்பேன்… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Andharmugam
0 ratings0 reviews
Book preview
Andharmugam - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
அந்தர்முகம்
Andharmukam
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
என்னுரை
திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய 'அந்தர்முகம்' என்ற நாவலைத் தெலுங்கிலிருந்து தமிழாக்கம் செய்து கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன் அவர் எழுதிய சிறு கதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து, அவை பிரசுரமாகி இருந்த போதிலும், நாவல் என்று வரும் போது, இது என்னுடைய முதல் முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
மனித உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் சுயநலம் எத்தனை விதமாக இருக்கும் என்பதைத் தனக்கே உரிய நடையில் ஆசிரியர் சித்தரித்து உள்ளார். அச் சுயநலத்தைக் கண்டு மனிதர்களைத் துவேஷிப்பதும், தனக்குள்ளேயே ஒடுங்கிப் போவதுமாய் இருந்த நாயகனை (இந்நாவலில் நாயகனின் பெயர் எங்கேயும் பிரஸ்தாபிக்கப் படாதது ஒரு சிறப்பு அம்சமாகும்) பிரணவி என்ற சிநேகிதி, அன்பு எனும் மந்திரக் கோலால் அவன் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறாள். இறப்பதற்கு முன் அவள் அவனுக்கு எழுதிய கடிதம் அவன் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்கிறது.
வயதான பிறகு படுக்கையில் நோயாளியாகக் கிடந்தவன், இறந்து போனபிறகு சுவர்க்கத்தில் கடவுளைச் சந்தித்து, மனித உறவுகளின் சிறப்பைப் பற்றி வாதம் புரிகிறான். கடவுளால் சாகாவரம் பெற்று இவ்வுலகிற்கு அதே நிலையில் வருகிறான். மனிதநேயம் அறவே இல்லாத உறவுகளைக் கண்டு அவனுக்கு மறுபடியும் வெறுப்பு ஏற்படுவதோடு, அதே எண்ணத்துடன் சுவர்க்கத்திற்குச் செல்கிறான். கடவுளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போகும் முன், வழியில் பழைய சிநேகிதி பிரணவியைச் சந்திக்கிறான். தன்னலமற்ற அவளுடைய அன்பு, மற்றொரு முறை அவன் எண்ணங்களை மாற்றி விடுகிறது.
இன்றைய சமுதாயத்தில் நாளுக்கு நாள் முறைகேடுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. மன்மதராவ், சத்யம், சரவணன், அவன் மனைவி மல்லிகா போன்றவர்களை நாம் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மனிதர்களிடம் படிந்துவிட்ட மன அழுக்குகளை அலசி ஆராய்வதோடு, சுயநலத்தைக் குறைத்துக் கொண்டு, மனிதநேயத்தை வளர்த்துக் கொண்டால் இந்தச் சமுதாயத்தை சுவர்கத்திற்கு இணையாய் மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்துடன் கதை முடிகிறது.
இந்த நாவலை மொழி பெயர்க்க அனுமதி வழங்கிய திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியதாகும்.
கௌரி கிருபாநந்தன்
சென்னை- 78
tkgowri@gmail.com
yandamoori@hotmail.com
1
என் கை என் சுவாதீனத்தில் இல்லை. என் பேரனின் தலையை வருடிக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன். என் பேரன் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது பத்து இருக்கும். என் நிலைமை அவனுக்கு வேடிக்கையாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக என் உடலில் எந்த விதச் சலனமும் இல்லை. ஒரு மனிதன் சலனமே இல்லாமல், விரலைக் கூட அசைக்காமல் நான்கு நாட்களாக 'அப்படியே' கிடப்பது அந்தச் சின்னப் பையனுக்கு வியப்பளித்தது. மிருகக்காட்சி சாலையில் விலங்கினைப் பார்ப்பதுபோல், அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். 'என்ன கண்ணா! அப்படிப் பார்க்கிறாய்?' என்று கேட்க நினைத்தேன். குரல் ஒத்துழைக்கவில்லை. சிரிப்பதற்கும் உதடுகள் அசையவில்லை.
அதற்குள் அந்த அறைக்குள் இரண்டு குழந்தைகள் வந்தார்கள். ஒருத்தி என் இரண்டாவது மகனுடைய மகள். மற்றவள் மூத்த மகளின் மகள். இருவரும் என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
'தாத்தா பொம்மை மாதிரி இருக்காங்க இல்லையா?' என்றாள் சின்னவள்.
'இல்லை. பார்பி டால் மாதிரி கண் மட்டும் அசையறது பார்' என்றாள் பெரியவள்.
பேரன் அவர்களைப் பார்த்து உதட்டின் மீது விரலை வைத்து, 'உஷ்!' என்றான், என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது என்பது போல். எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. பக்கத்தில் வெடி வெடித்தாலும் நான் டிஸ்டர்ப் ஆக மாட்டேன். என் கால்கள், கழுத்து, கைகள், விரல்கள் எதுவும் என் சுவாதீனத்தில் இல்லை. மரணம் என் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் செயலிழக்க வைத்து, என் உயிரை குறி வைத்து வந்து கொண்டிருந்தது. எழுபது வயது கடந்த என் சரீரம் முழுவதுமாக சிதிலமடைந்து விட்டது. காதுகள், கண்கள், மூளை மட்டும் இயங்கிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் எல்லோரும் மடிந்து, அடிபட்ட சிப்பாய்கள் இருவர் மட்டும் எஞ்சி இருந்தால்,ஒருவருக்கு மற்றொருவர் உதவி புரிவதுபோல் என் கண்களும், மூளையும் பரஸ்பரம் உதவி செய்து கொண்டிருந்தன.
என் அறையில் யாராவது நுழைந்தால், என்னால் கழுத்தைக் கூடத் திருப்பிப் பார்க்க முடியாது. எனக்குப் பசியும், தாகமும் தெரியவில்லை.
கேட்கும் திறனும், கண் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாயக் குறைந்துகொண்டே வந்தது. இன்னும் சில மணி நேரங்களில் கோமாவில் போய் விடுவேன். அதன் பிறகு கோமாவிலேயே இறந்து விடுவேன். என் இரண்டாவது மகளைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அவள் பக்கத்து அறையில்தான் இருந்தாள். ஆனால் என் அருகில் வர மாட்டாள். அவளிடம் எனக்கு அன்பு அதிகம். மற்றவர்கள் அவளைப் பார்த்துப் பொறாமை படும் விதமாய் வளர்த்தேன். அவளுக்குத் திமிர் என்றும், அகம்பாவம் என்றும் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவள் இளகிய மனம் படைத்தவள் என்று எனக்குத் தெரியும்.
நான் அதிகம் சம்பாதிக்கவில்லை. இருப்பதில் பெரும் பகுதியை அவளுடைய திருமணத்துக்காக ஒதுக்கி வைத்தேன். என் மூன்று மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்தேன். எல்லோரும் செட்டில் ஆகி விட்டார்கள். என் மூத்த மகனை நானே புகழக் கூடாது. ரொம்ப மேதாவி. மருமகள் பார்வதியும், சாட்சாத் பார்வதி தேவிதான்.
இரண்டாவது மருமகள் ரொம்ப இளகிய மனம் படைத்தவள். நான் படுக்கையில் விழுந்ததிலிருந்து, என் மகனுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள். பக்கத்து அறையிலிருந்து அவர்களின் உரையாடல் எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்குள் மூத்த மகன் உள்ளே வந்தான். பேரனையும், பேத்திகளையும் அதட்டினான். 'தாத்தாகிட்டே சத்தம் போடக் கூடாது. வெளியில் போங்க' என்று அதட்டினான். என்னுடைய தனிமையைப் போக்கிக் கொண்டிருந்த ஒரே ஆதாரத்தை அவன் விரட்டியதைப் பார்த்தபோது, வேதனையாக இருந்தது. வேண்டாமென்று சொல்ல நினைத்தேன். ஆனால் பேச முடியாது என்று நினைவுக்கு வந்தது.
யாராவது மரணத்தை அனுபவித்திருப்பார்களா? முட்டாள்தனமான கேள்வி இது. நிஜமாகவே எனக்கு மூளை இல்லை. இல்லா விட்டால், யாராவது மரணத்தை 'அனுபவிக்க' முடியுமா? அதென்ன தலைவலி, கால்வலி போலவா ஆறுமாதத்திற்கு ஒரு தடவை அனுபவிப்பதற்கு! ஆனால் நான் மரணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலைமை பகையாளிக்கும் வரக்கூடாது.
உலகத்தையே ஆட்டிப் படைத்தவனாகட்டும், பெரிய அரசியல்வாதி ஆகட்டும், பணக்காரனாகட்டும்.... யாராக இருந்தாலும் சரி, இறப்பதற்கு முன் ஒரே நிலையில்தான் இருப்பார்கள். மூன்று, நான்கு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் பதற்றமாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். பத்து தொண்டர்களை அழைத்துக் கொண்டு தலைவன் ஒருவன் நோயாளியின் அறைக்கும் வந்து முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு சற்று நேரம் நிற்பான். பிறகு வெளியேறிவிட்டு நிம்மதியாக மூச்சைவிட்டுக் கொண்டு தன் வேலைகளில் மூழ்கிவிடுவான்.
நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதாக டாக்டருக்கும் தெரிந்துவிடும். தேவைப்பட்டால் அழைக்கும்படி நர்சிடம் சொல்லிவிட்டுப் போய் விடுவார். விடிவிளக்கு வெளிச்சத்தில் நர்ஸ், தன் காதலன் எழுதிய கடிதத்தை நூறாவது தடவையாகப் படித்துக் கொண்டிருப்பாள். எங்கும் நிசப்தமாக இருக்கும், கடியாரத்தின் டிக்.. டிக் ஒலியைத் தவிர.
சலைன் பாட்டிலிலிருந்து ஒவ்வொரு சொட்டாய் இறங்கிக் கொண்டிருக்கும். மெள்ள மெள்ளமாய் அந்தச் சத்தமும் நின்று விடும். சந்தேகம் வந்த நர்ஸ் ஓடி வந்து பார்த்துவிட்டு, உடனே டாக்டர்களை அழைத்து வருவாள்.
ஒரு டாக்டர் நெஞ்சின் மேல் கைகளை வைத்து அழுத்துவார். மற்றொருவர் கடவுளைத் தியானம் செய்வார். மூன்றாமவர் அங்கிருந்த மிஷின்களை வெறுமையாய்ப் பார்ப்பார். கடைசியில் செய்தி வெளியேறும், 'அவர் தன் கடைசி மூச்சை விட்டார்' என்று. கட்டிலின் மேல் போர்வையை மாற்றுவார்கள். மற்றொரு நோயாளி, மறுபடியும் பதற்ற நிலைமை.
என் பேரப் பசங்கள் மறுபடியும் உள்ளே வந்தார்கள். நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மனிதனின் வாழ்க்கையில் கடைசி நேரத்தின் தனிமையைப் போல் கொடுமை வேறு எதுவும் கிடையாது. 'ஆமாம்' என்று என் அறையே பறை சாற்றியது. ஷஅறை பேசுமா?|
என் மூத்த மகன் மறுபடியும் உள்ளே வந்தான். 'பசங்களா! இங்கே என்ன பண்ணறீங்க? பயப்படுவீங்க. போங்க' என்று அவர்களைத் துரத்திவிட்டு என் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிந்தாற்போல் இருந்தது.
ஷபயப்படுவீங்க. போங்க. ப.. ய...ப்...ப...டு...வீ...ங்...க.|
அந்த வார்த்தை என்னை ஈட்டியைப் போல் துளைத்தது. அவனைப் பார்த்தேன். அவனும் என் கண்களையே பார்த்து,
'நீங்க கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்றான்.
நான் சாகப் போகிறேனா? இல்லை வாழப் போகிறேனா? எது நல்லபடியாக நடக்கும் என்கிறான்?
'அம்புலுவின் (கடைசி மகள்) கல்யாணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நல்லபடியாக நடத்துவேன்.'
கண் இமைகளை மூடித் திறந்தேன், புரிந்து கொண்டதற்கு அடையாளமாய்.
'அவளைக் கொஞ்சம் நேரம் இங்கு உட்காரச் சொல்லுகிறேன்.'
எனக்கு வேண்டியது அதுதான். என் மனதில் இருப்பதை அவன் சரியாக உணர்ந்ததற்கு மகிழ்ச்சி அடைந்தேன். அவன் சென்று விட்டான். பக்கத்து அறையிலிருந்து பேச்சுக் குரல் கேட்டது.
'நான் அப்பாவை அந்த நிலைமையில் பார்க்க மாட்டேன். நான் செத்துப் போய் விடுவேன்' என்று என் மகள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ரொம்ப இளகிய மனம். அவளை அனுப்பத் தேவையில்லை என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல முடியாத நிலை.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அம்புலு அறைக்குள் வந்து, என் கட்டிலுக்குச் சற்றுத் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்தாள். என் பக்கம் பார்க்கவில்லை. தரையைப் பார்த்துக்கொண்டு, இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அவள் வெளியேறும் வரை கண்களைத் திருப்பிப் பார்த்தேன்.
மறுபடியும் தனிமை. கண்களை மூடினால் இருட்டு. திறந்தால் கூரைதான் கண்ணில் படும். சில நாட்களாகக் கூரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் எங்கே சிலந்தி வலை இருக்கிறதோ, எங்கே காரை பெயர்ந்து விட்டதோ நன்றாகத் தெரியும். இந்த வீடு நான் கட்டியதுதான். கடன் வாங்கிக் கட்டினேன். கடனைத் தீர்க்கக் கஷ்டப்பட்டேன். வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டேன். இதையெல்லாம் யோசித்து பார்த்தால், ஏன் செய்தேன் என்று தோன்றுகிறது.
என் மூத்த மருமகள் அறையில் நுழைந்தாள். என் அருகில் வந்து கீழே வைத்திருந்த பாலை எடுத்து, கைகளால் என் தலையைச் சற்று உயர்த்தி வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினாள். அந்த அன்பைப் பார்த்தபோது என் தாய் நினைவுக்கு வந்தாள். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு, என்னைச் சரியாகப் படுக்க வைத்துவிட்டுப் போய் விட்டாள்.
அவள் அப்படிப் போய்விட்டது எனக்குப் பிடிக்கவில்லை. என்னைச் சேர்ந்தவர்கள் என் அருகிலேயே இருக்கவேண்டும் என்ற என் விருப்பத்தை எப்படி தெரிய வைப்பேன்? எனக்குக் கொஞ்சம் சத்தம் வேண்டும். இந்த சூனியத்தை, நிசப்தத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அறைக்கு வெளியே எல்லோரும் எனக்காக வருத்தப் படுகிறார்களோ, பேசிக் கொண்டிருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. 'கட்டாயம் நிகழப் போகின்ற' ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. இந்த நிலைமையில் அவர்களின் அருகாமை எனக்குத் தேவை என்று என் மக்களுக்கே புரியாதது வேதனையாய் இருந்தது. என் உயிர் போன பிறகுதான் அருகில் வருவார்களோ!
சுவர் கடிகாரம் மணி அடித்தது. அந்தப் பக்கம் பார்க்க நினைத்தேன். தெளிவாகத் தெரியவில்லை. கடைசியாக சுவாமி படத்தைப் பார்க்க நினைத்தேன். அந்த அறையில் படம் எதுவும் இல்லை. ஏதோ திரை என்மேல் போர்த்தப் படுவதுபோல் உணர்ந்தேன். சத்தமாகக் கூப்பிட முயன்றேன். குரல் எழும்பவில்லை.
மு...டி...ந்...து ... வி..ட்..ட..து.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், வேதனைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. என் மனிதர்களை விட்டுவிட்டுப் போக என் மனம் ஒப்பவில்லை. இந்த வீடு... நான் வளர்த்த செடிகள்... நான் போட்டுக் கொண்டிருக்கும் உடைகள்கூட எனக்குப் பிரியமானவையாகத் தோன்றின. என் மனம் வேதனை அடைந்தது. ஊமை வேதன. உடல் கட்டையைப் போல் கிடக்க, மனம் மட்டும் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இறக்கப் போகிறேன். நான் போன பிறகும் இந்த உலகம் இப்படியே இருக்கும். மனிதர்கள் காதலிப்பார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
நான் மட்டும் இருக்க மாட்டேன். யாரோ சொன்னது போல் இந்த உலகத்தில் நதிகளும், மலைகளும்தான் என்றும் நிலைத்திருக்கும். ஏதேனும் பிரளயம் ஏற்பட்டு எல்லாம் நாசமாகி விட்டால் யாருமே இருக்க மாட்டார்கள் இல்லையா? லட்சக்கணக்கான வருடங்கள் கழித்து இந்த பூமி நிர்மானுஷ்யமாகி, எரிந்து கொண்டிருக்கும் அக்னி கோளமாக மாறிவிடும். அண்டத்தில் சாம்பலாய்க் கலந்து விடும். நான்.... இந்த உடல்... இந்த யோசனைகளை... என்னுடைய ஆன்மா.....எங்கே போகும்?
நான் இங்கிருந்து எப்படிப் போகப் போகிறேன்? நிஜமாகவே போய் விடு'வேனா? ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது என் போன்றவர்களைத் திருப்தி படுத்த ஏற்பட்ட சித்தாந்தமா? என் சிறு வயதிலேயே இறந்துவிட்ட என் தந்தையின் ஆவி இப்போ என் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்குமா? என் ஆவியும், என் தந்தையின் ஆவியும் பேசிக் கொள்ளுமா? இல்லை, என் தந்தை மறுபிறவி எடுத்திருப்பாரா? எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தக் கடைசி நேரத்தில் மறுபிறவி இருக்கும் என்று நினைத்தால் திருப்தி ஏற்படும் அவ்வளவுதானே தவிர இது உண்மை இல்லை. நான் இல்லாமல் போய் விடுவது மட்டுமே சத்தியம்.
இந்த யோசனை வந்ததும் என் இடது கண்ணிலிருந்து கண்ணீர் துளி ஒன்று காது பக்கம் வழிந்தது. அதைத் துடைத்துக்கொள்ள வழி இல்லாததால் ரொம்ப எரிச்சலாய் இருந்தது. அது போதாது என்று ஒரு ஈ பறந்து வந்து மூக்கின் மேல் உட்கார்ந்தது. என் எரிச்சல் அதிகமாயிற்று. இமைகளைக் கொட்டிக் கொட்டி அதை விரட்ட முயற்சி செய்தேன். அது பறந்து முகத்தைச் சுற்றிவிட்டு மறுபடியும் அதே இடத்துக்கு வந்தது. காதுக்கு அருகில் பறந்த போது, அதன் ரீங்காரம் எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. என் உடல் சீக்கிரத்தில் அழுகிப் போகப் போகிறதென்று அந்த ஈக்குக் கூடத் தெரிந்துவிட்டது. அது அசையவில்லை. அந்த நரகவேதனையை அனுபவித்தால் தான் புரியும்.
உடல் சுவாதீனத்தில் இல்லாதபோது, உடைந்த மரக்கிளைகள் போல் கைகள் இருபுறமும் விழுந்து கிடக்கும் போது ஒரு ஈயினால்கூட எவ்வளவு வேதனை ஏற்படும் என்பதை சுயமாய் உணர்ந்தேன். தனிமையின் உச்சநிலை அது.
எனக்கு எல்லோரும் இருந்தார்கள். ஆனால் இந்தத் தனிமை வேறு. ஒவ்வொரு பந்தமும் அறுபட்டுக் கொண்டு இருக்கும் தனிமை இது. மனிதன் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முடியாத போது ஏற்படும் தனிமை இது.
ஈயுடன் என்னுடைய போராட்டம் இன்னும் நீடித்து இருக்கும். அதற்குள் என் மூத்த மகன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். என் மனைவியின் உறவினர்கள். இருவருக்கும் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவ்வளவு அறிமுகமானவர்கள் அல்ல. இருவரும் கைகளைக் கட்டிக் கொண்டு என் கட்டிலுக்குச் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு என்னை இரக்கமாய்ப் பார்த்தார்கள். அந்த மௌனம்தான் எனக்கு வேதனையாய் இருந்தது, இவர்கள் எல்லோரும் என்னை ஒரு மனிதனாக பார்ப்பதை இ..ப்...பொ...ழு...தே.. ஏன் நிறுத்தி விட்டார்கள்? என்னுடன் சிறிது நேரம் பேசினால்தான் என்ன? பிணத்திற்கு முன் கடவுளைப் பிரார்த்திப்பது போல் இந்த இரக்கமான பார்வை எதற்கு?
அவர்களின் முகத்தில் செயற்கையான துக்கம் தெரிகிறது. உண்மையில் என் மரணத்துக்காக அவர்கள் வேதனை அடையத் தேவை இல்லை. அவர்கள் எனக்கோ, என் மகனுக்கோ நெருங்கியவர்கள் இல்லை. என் மகனுக்காவும், இந்தச் சூழ்நிலையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாலும் அப்படிக் கம்பீரமாய் இருந்தார்கள். என் மகன் அவர்களை உட்கார வைத்து விட்டுச் சென்று விட்டான்.
அவர்கள் என் பக்கமே பார்த்துக்கொண்டு, தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மற்றவரிடம் ஏதோ சொல்ல, அவர் கம்பீரமாய்த் தலையை அசைத்துக் கொண்டு இருந்தார். அணைக்கட்டில் விரிசல்கள் ஏற்பட்டால் இஞ்சினியர்கள் எப்படி அதைப்பற்றி விவாதித்துக் கொள்வார்களோ அதுபோல் என்னைப் பார்த்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மறுபடியும் ஈ வந்து என் மூக்கின் மேல் உட்கார்ந்தது.
என் மகன் வந்து அவர்களை அழைத்துச் சென்று விட்டான். அப்பொழுதுதான் உள்ளே வந்த என் பெரிய மருமகள் என் மேல் ஈ மொய்ப்பதைப் பார்த்துவிட்டு, வருத்தப்பட்டுக் கொண்டு மின் விசிறியைப் போட்டாள். என் முகத்தைத் துணியால் துடைத்து,துளசி ஜலத்தை வாயில் சிறிது ஊற்றிவிட்டு சென்றுவிட்டாள். சிலந்தியும் நானும் ஒருவருக்கொருவர் துணையாய்...
திடீரென்று என் உடல் கொஞ்சம் நடுங்கியது. ஒரு கறுப்புத் திரை அலைபோல் வந்து என் பார்வையை ஒரு நிமிடம்போல் மறைத்தது. மரணத்துக்கு முதல் அறிகுறி அது. எனக்குத் தெரிந்துவிட்டது. என் பார்வை மறைந்து கொண்டே வந்தது. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. நாளை இந்நேரத்துக்கு என் உடல் சாம்பலாகிவிடும். இதுவரை நான் படித்த படிப்பு, கற்றுக் கொண்ட ஞானம் எல்லாம் அழிந்து விடும். என் மரணத்துக்கே இவ்வளவு வருத்தப் படுகிறேனே! சங்கீத வித்வான்கள், அரசியல் வாதிகள், விஞ்ஞானிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஞானத்தையும், அறிவையும் சம்பாதித்து இருப்பார்கள்? அத்தனை முயற்சிகளும் மரணத்தினால் அழிந்து போவதை நினைத்தால் எனக்கு வேதனையாய் இருந்தது.
என் மூளை மரத்துப் போகத் தொடங்கிற்று. கோமாவில் எத்தனை காலம் இருப்பேனோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அதுக்கும், மரணத்துக்கும் வித்தியாசமில்லை. கண் இமைகள் மூடி இருக்கிறதோ இல்லையோ தேரியாது. ஆனால் கண் தெரியவில்லை. யாரோ என் கையைப் பிடித்து நாடியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். என்னைச் சுற்றிலும் மக்கள் சூழ்ந்து இருக்கிறார்களா?
என்னமோ தெரியவில்லை. என் கையை விட்டு விட்டார்கள். அது உடைந்த குச்சியைப் போல் கட்டிலில் விழுந்து விட்டது. இருட்டில் தொலைவில் தெரியும் அகல்விளக்கு போல் எனக்குக் கொஞ்சம் நினைவு மட்டும் இருந்தது.
ஆனால் வானத்தில் கறுத்த மேகம் சூழ்வது போல் மயக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. என் உடல் இலேசாகி விட்டது போல் தோன்றியது. எங்கோ பாதாளத்தில் நழுவுவது போல் எதுவுமே தெளிவாக இல்லை. ஆழ்ந்த உறக்கத்துக்கு முன் ஏற்படும் உணர்வு. மெள்ள மெள்ளமாக பாம்பு ஊர்ந்து வருவது போல் என்னைச் சுற்றிலும்
