Avan Aval Kadhalan
5/5
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Casanova - 99 Rating: 0 out of 5 stars0 ratingsDharmayutham Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsThalapathi Rating: 0 out of 5 stars0 ratingsProfessional Killer Rating: 3 out of 5 stars3/5Saagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsBest Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5Panam Rating: 5 out of 5 stars5/5Panimalai Rating: 4 out of 5 stars4/5
Related to Avan Aval Kadhalan
Related ebooks
Thulasidhalam Rating: 3 out of 5 stars3/5Best Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5Kanbathellam Unmai Rating: 5 out of 5 stars5/5Pathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Thavam Rating: 5 out of 5 stars5/5Nerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsUdhayachandran Rating: 0 out of 5 stars0 ratingsPei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Jaalam Rating: 5 out of 5 stars5/5Sandhiya Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsYezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Aindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Brahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Yaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5Kanavu Kanavan Rating: 3 out of 5 stars3/5Thulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsUllamellam Thalladuthey! Rating: 0 out of 5 stars0 ratingsThoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsMohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Idhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Chola Ilavarasan Kanavu Rating: 4 out of 5 stars4/5Vivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Avan Aval Kadhalan
3 ratings1 review
- Rating: 5 out of 5 stars5/5This novel can be made as cinema. Super crime,fiction and thriller story
Book preview
Avan Aval Kadhalan - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
அவன் அவள் காதலன்
Avan Aval Kaadhalan
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
1
'உன் கடைசி ஆசை என்ன?"
சாப்பிட்டுக் கொண்டிருந்த மகரிஷி மெதுவாக நிமிர்ந்தான். ஜெயிலரின் முகம் கடுகடுப்பாக இருந்தது. மறுநாள் தூக்கில் ஏற்றப் போகும் கைதியை ஏதோ கேட்டுத் தீர வேண்டுமே என்பதற்காகக் கேட்டாற்போல் இருந்ததே தவிர அந்தக் குரலில் மகரிஷியின்பால் இரக்கம் கொஞ்சமும் இல்லை.
மகரிஷி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
'ஏன் பேசமாட்டேங்கிறாய்?"
'யோசித்துக் கொண்டிருக்கிறேன், கடைசி ஆசையாக எதைக் கேட்கலாம் என்று." அவன் குரல் கரகரப்புடன் அலட்சியமாக ஒலித்தது.
'கண்டதையெல்லாம் கேட்காதே. உன் பெயரில் ஏதாவது சொத்து இருந்தால் உயில் எழுதுவது, நீ யாரையாவது பார்க்கணும் என்று விரும்பினால் அவர்களுக்காகச் செய்தி அனுப்புவது .. இது போன்றவற்றைத்தான் அனுமதிப்போம்."
'சாதாரணமாக தூக்குப் போடுவதற்கு முன்னால்தான் கடைசி ஆசை என்ன என்று கேட்பார்கள்? நீங்கள் ஒரு நாள் முன்னாடியே கேட்கிறீங்களே?"
'என்னடா? பெரிசாக ரூல்ஸ் எல்லாம் தெரிந்தாற்போல் பேசுகிறாயே. சினிமாக்களைப் பார்த்தும், புத்தகங்களைப் படித்தும் தெரிந்துக் கொண்டாயோ? அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உனக்கு யாரையாவது பார்க்கணும் போலிருந்தால் சொல்லு. அழைத்து வரச் சொல்கிறேன்."
மகரிஷி கையிலிருந்த கவளத்தைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தான். ஜெயிலர் தொடர்ந்தார். 'அதற்காகத்தான் ஒரு நாள் முன்பே கேட்கிறேன். தூக்குமேடையின் மீது நின்று கொண்டு எனக்குக் குறிப்பிட்ட நபரைப் பார்க்கணும் என்று சொன்னால், தூக்குப் போடுவதை நிறுத்தி விட்டு அவர்களை அழைத்து வரச் செய்வார்கள் என்று எண்ணி விடாதே. அதெல்லாம் கதைகளில் தான் நடக்கும்."
மகரிஷி இன்னும் கையில் இருந்த கவளத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெயிலர் பொறுமையின்றி 'என்னடா? ஏதாவது சொல்லப் போகிறாயா இல்லையா? நான் போய் தூக்கு போடுவதற்கு ஏற்பாடுகளை செய்யட்டுமா?" என்று கேட்டார்.
'எனக்கு ஒரு ஆசை இருக்கு சார்" என்றான் மகரிஷி.
'அது என்ன? சீக்கிரமாக சொல்லித் தொலை."
'எனக்கு ஒரு பெண்ணைப் பார்க்கணும்னு இருக்கு."
ஜெயிலர் திடுக்கிட்டார். நெற்றியைச் சுளித்துவிட்டு 'பெண்ணா? உனக்கு மகள் இருப்பதாக தெரியாதே? அதான் கல்யாணமான ஆறு மாதத்திற்குள்ளேயே மனைவியைக் கொன்றுவிட்டாயே?" என்றார்.
'மகள் இல்லை. என் சிநேகிதி."
'என்ன? உனக்கு சிநேகிதிகூட இருக்கிறாளா?"
'ஆமாம். படிக்கும் நாட்களில் என் கிளாஸ்மேட். சாகும் முன்னால் அந்தப் பெண்ணை ஒரு தடவை பார்க்கணும் போலிருக்கு. அழைத்து வரச் செய்வீங்களா?"
'வருவதற்கு அந்தப் பெண் சம்மதிப்பாளா?"
'தெரியாது."
'எங்கே இருக்கிறாள்?"
'அதுவும் தெரியாது."
ஜெயிலர் முகத்தில் எரிச்சலும், கோபமும் வெளிப்பட்டன. 'பெயர்?" கேட்டார்.
'சிரிசந்தனா."
'அவள் உனக்கு என்னவாகணும்? சிநேகிதி என்றுதானே சொன்னாய்?"
'நான் அந்தப் பெண்ணைக் காதலித்தேன்."
'அவளும் உன்னைக் காதலித்தாளா?" கோபத்தை அடக்கிக்கொண்டே கேட்டார்.
'தெரியாது. நான் என்றுமே அவளிடம் சொன்னதில்லை. அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள் என்றுகூட தெரியாது. ஒருக்கால் கல்யாணம் கூட ஆகிவிட்டதோ என்னவோ? சந்தோஷமாக குடித்தனம் செய்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும். என்னை அடையாளமாவது தெரியுமோ இல்லையோ."
'நீ உன் மனைவியைக் கொன்றது உண்மையா பொய்யா?"
'கொன்றது உண்மைதான்."
'சாதாரணமாக இல்லை. ரொம்பக் கொடுமையாக கழுத்தில் கம்பியால் குத்திக் கொன்றாய். உன் மனைவியைக் கொன்றுவிட்டுக் காதலியோடு சேர்ந்து இருப்பதற்காகத்தானே இதையெல்லாம் செய்தாய்?"
'நான் என் காதலியைச் சந்திப்பதற்கும், என் மனைவியைக் கொன்றதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை."
அவன் வார்த்தைகள் முடியக்கூட இல்லை. ஜெயிலர் அவன் காலரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, கன்னங்களில் மாறி மாறி அடித்தார். அதே வேகத்தில் கழுத்தைப் பிடித்து வளைத்து பலமாக மூன்று நான்கு முறை அடித்துவிட்டு தொலைவிற்குத் தள்ளிவிட்டார். தட்டிலிருந்த சாதம் சிதறியது. மகரிஷி வேகமாக போய் சுவற்றோரமாக விழுந்தான்.
ஜெயிலர் மூச்சிரைக்கக் கத்தினார். 'டேய் திருட்டுப் பயலே! யாரோ ஒரு பெண்ணைக் காதலித்து விட்டு, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாமல், இன்னொரு அப்பாவிப் பெண்ணை பண்ணிக் கொண்டாயா? செய்து கொண்ட பிறகு காதலித்தவளை மறந்து போகாமல் மனைவியைக் கொன்றாயா? அதோடு இப்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் குடியைக் கெடுப்பதற்காக நீ தூக்கில் தொங்கப் போவதை பார்க்க வரச் சொல்கிறாயா? இதுதானா உன் கடைசி ஆசை? அதற்கு தான் ... அதற்காகத்தான் உனக்கு தூக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது" என்று திரும்பவும் ஆவேசம் பொங்கி வரவே, அருகில் சென்று மற்றொரு முறை ஓங்கி அடித்தார்.
*****
வெங்கட்ராமன் முத்து தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, விடாமல் அலறிக் கொண்டிருந்த கடியாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை நிறுத்தினான். அலாரம் நின்றுவிட்டது. அவன் உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தான்.
அப்பொழுது நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவனுக்கு அது ஒன்றும் நல்ல விடியல் இல்லை. இன்னும் இரண்டு மணி நேரத்தில் தூக்குப் போடுவதற்காக ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும். விடியற்காலை ஆறு மணிக்கு தூக்குத் தண்டனை. அதற்கு முன்னால் இரண்டு மணி நேரம் வேலை இருக்கும். அருகில் இருந்து கைதியைக் குளிக்க வைப்பது, பகவத்கீதை புத்தகத்தைத் தருவது, தூக்கு மேடைக்கருகில் ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கடைசி முறையாக பார்த்துக் கொள்வது முதலிய பொறுப்புக்கள் எல்லாம் அவனுடையவைதான்.
வெங்கட்ராமன் முத்துவுக்கு வயது ஐம்பது. கொஞ்ச நாட்களில் ரிடையராகி கேரளாவுக்குப் போய் செட்டில் ஆகி விட வேண்டும் என்பது அவன் ஆசை. சமீப காலத்தில் பல வருடங்களாக ஜெயிலில் தூக்குத் தண்டனை எதுவும் இல்லை. இப்பொழுதுதான் இது வந்திருக்கிறது.
வெங்கட்ராமன் முத்துவுக்கு தூக்குப் போடப்படும் கைதிகளின் பால் ரொம்பவும் இரக்கம் உண்டு. தன் கையால் ஐம்பது முறை தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறான். சர்வீஸ் முடிவதற்குள் இன்னும் ஐந்தாறு பேரை தூக்கில் போட வேண்டியிருக்குமோ என்னவோ. ஒவ்வொரு முறையும் தூக்கில் போடும் முன் அவன் ரொம்பவும் வருத்தப்படுவான். குற்றவாளி எப்படிப்பட்டவனாகத்தான் இருக்கட்டும். கொலையை ஏதோ ஒரு ஆவேசத்தில்தான் செய்திருப்பான் என்பது அவன் நம்பிக்கை. அவ்வாறு ஆவேசத்தால் செய்த கொலைக்கு தண்டனையாக அவனைக் கொல்வது எந்த நிலையிலும் நியாயம் இல்லை என்று அவன் நம்பினான்.
ஆனால் இந்த முறை அவன் அவ்வாறு எண்ணவில்லை. திருமணமான ஆறுமாதங்களுக்குள்ளேயே மனைவியைக் கொன்ற குற்றவாளியின் மீது அவனுக்கு கொஞ்சமும் இரக்கம் ஏற்படவில்லை. கொலையுண்டவளின் போட்டோவைக் கூட அவன் பார்த்தான். இரும்புக் கம்பி கழுத்தில் பின்பக்கமாக குத்தப்பட்டு முன்னால் வந்திருக்கிறது. அவ்வளவு கொடுமையான கொலையை அவன் இதுவரை கண்டதில்லை. சொந்த மனைவியைக் கொல்ல வேண்டிய காரணம் என்ன என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. இன்று பிற்பகலில் அந்த விஷயம் ஜெயிலில் அதிகாரிகளுக்கிடையே விவாதத்திற்கு வந்தது. ஜெயிலர் அப்பொழுது தனக்குத் தெரிந்த புதிய சமாசாரத்தைச் சொன்னார். குற்றவாளிக்கு அதற்கு முன்பே வேறொரு பெண்ணோடு சிநேகம் இருந்து வந்தது என்றும், அவளைக் காதலித்தான் என்றும், அதன் காரணமாக மனைவியைக் கொன்று விட்டான் என்றும் ஜெயிலர் சொன்னபோது வெங்கட்ராமன் முத்துவின் இரத்தம் சலசலவென்று கொதிக்கத் தொடங்கியது.
முத்துவுக்கு கடவுள் பக்தி அதிகம். மனைவியிடம் அளவுக் கடந்த பிரியம். அப்படிப்பட்டவன், இந்த விஷயம் தெரிந்த பிறகு, ஒரு ஆளை தூக்கில் போடப் போவதற்காக, முதல் முறையாக ரொம்ப சந்தோஷப்பட்டான். மனைவியை அவ்வளவுக் கொடுரமாக கொலை செய்த பிறகும், கடைசி ஆசையாக தான் காதலித்த பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தான் என்று தெரிந்தபோது அவன் மேலும் ஆவேசமடைந்தான். கையில் அதிகாரம் மட்டும் இருந்திருந்தால் முதல்நாளே தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருப்பானாய் இருக்கும்.
இரண்டரை மணியளவில் அவன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு குவார்டர்ஸிலிருந்து வெளியே வந்தான். ஜெயில் காம்பவுண்டுக்கு அப்பால் இருந்தது சிப்பந்திகளின் குவார்டர்ஸ். அங்கிருந்து பத்து நிமிஷங்கள் நடந்து ஜெயிலுக்குள் நுழைந்தான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அங்கே ஒரு ஆள் தூக்கில் ஏற்றபடவிருக்கிறான் என்ற விஷயம் தெரிந்துதான் போலும் சூழ்நிலை கூட சலனவில்லாமல் இருந்தது. டிசம்பர் மாதம் என்பதால் குளிரும் அதிகமாகவே இருந்தது. சென்ட்ரியின் புத்தகத்தில் முத்து கையொப்பமிட்டான். அங்கிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருந்த தூக்கு மேடைக்கருகில் போனான். தலையாரி கூட இன்னும் வரவில்லை. போலீஸ்காரன் ஒருவன் தூக்குமேடைக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்தபடி தூங்கி வழிந்து கொண்டிருந்தான். மணல் மூட்டை, கயிறு, தூக்குக் கம்பம் எல்லாவற்றையும் பரிசீலித்துவிட்டு முத்து கைதி இருந்த செல்லை நோக்கிப் போனான்.
தூக்கில் ஏற்றப் போகும் கைதியை மற்ற கைதிகளை விட்டு தொலைவாக தனி செல்லில் வைத்திருப்பார்கள்.
முத்துவைப் பார்த்ததும் அங்கிருந்த சென்ட்ரி சாவியை எடுத்துத் தந்துவிட்டு சல்யூட் செய்தான். முத்து இரண்டாவது காம்பவுண்டுக்குள் நுழைந்தான். அங்கே குரோட்டன்ஸ் செடிகள் வரிசையாக இருந்தன. நடுவில் நிலா வெளிச்சத்தில் பாதை மின்னிக் கொண்டிருந்தது.
திடீரென்று அவனுக்கு ஏதோ சந்தேகம் வந்தது. எல்லாம் சரிவர நடக்கவில்லை என்ற உணர்வு ஏதோ அவனுக்குத் தோன்றியது. அதற்குக் காரணம்கூட புரிந்துவிட்டது. காம்பவுண்ட் கதவைத் திறந்ததுமே உள்ளே இருக்கும் சென்ட்ரி அந்த இடத்திற்கு வரவேண்டும்.
ஆனால் வரவில்லை.
முத்துவின் சந்தேகம் உண்மையாகிவிட்டது. தன்னையும் அறியாமல் வேகமாக நடக்கத் தொடங்கினான். ஏறக்குறைய ஓட்டம் பிடித்தாற்போலவே அந்த செல்லை நோக்கிப் போனான். படிகளுக்குப் பக்கத்தில் சென்ட்ரி விழுந்து கிடந்தான். பாதி திறந்துக் கிடந்த கதவு அவனைப் பார்த்து பழிப்பது போல் இருந்தது.
உள்ளே மகரிஷி இல்லை.
...............
முத்து ஜேபியிலிருந்து விசிலை எடுத்து இரண்டு முறை சத்தமாக ஊதினான்.
தெலைவில் போலீசாரின் காலடியோசைகள் கேட்கத் தொடங்கின. சென்ட்ரி ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
முத்து சென்ட்ரியையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு ஆளை இன்னொரு ஆள் இவ்வளவு கொடுரமாக கொல்லக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. சென்ட்ரியின் முகம் சப்பையாகிவிட்டிருந்தது.
அவன் ஆன்மாவின் சாந்திக்காக ஒரு நிமிஷம் மௌனமாக கடவுளைப் பிரார்தித்துக் கொண்டான் முத்து.
அவனிடம், மனைவியைக் கொடுமையாகக் கொன்ற அந்தக் கைதியின்பால் அதுவரை இருந்து வந்த வெறுப்பு இப்பொழுது பத்து மடங்காகிவிட்டது.
'உன்னை எங்கள் ஆட்கள் எப்படியாவது பிடிக்காமல் விடமாட்டார்கள் மகரிஷீ! அப்பொழுது நானே சுயமாக என் கையால் உன்னைத் தூக்கில் ஏற்றுவேன். நீ துடிதுடித்துச் சாவதைக் காணாமல் நான் சர்வீஸிலிருந்து ரிடையராக மாட்டேன்" என்று சபதம் எடுத்துக் கொள்வது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
2
காலிங்பெல் ஒலித்த சத்தத்தைக் கேட்டுவிட்டு, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தான் வர்மா. எதிரே தென்பட்ட ஆளைப் பார்த்தவன் தன்னையறியாமல் ஓரடி பின் வாங்கினான். 'நீயா...?" என்றான், தன் கண்களைத் தானே நம்ப முடியாதவனாக.
மகரிஷி உள்ளே அடியெடுத்து வைத்துக் கொண்டே 'என்ன? பேயாக வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டாயா?" என்றான் சிரிக்க முயன்றபடி.
வர்மா வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு யாரும் தம் வீட்டை கவனிக்கவில்லை என்று உறுதியாய் தெரிந்து கொண்ட பிறகு திரும்பி வந்தான்.
'ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு விட்டாயா?"
'தப்பித்துக் கொண்டிருக்காவிட்டால் இன்று காலையிலேயே தூக்கில் ஏற்றபட்டு உயிரையும் இழந்திருப்பேன்."
'ஆனால் இதெல்லாம் பேப்பரில் வரவில்லையே?"
'விடியற்காலை இரண்டு மணிக்குத் தப்பித்துக் கொண்டேன். அதற்குள் பேப்பர் ப்ரிண்டிங் முடிந்துவிட்டிருக்கும். ஒருக்கால் நாளைக்கு வருமோ என்னவோ இந்தச் செய்தி என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் வந்து உட்கார்ந்தவன் 'ரொம்ப களைப்பாக இருக்கு ரவிவர்மா, எனக்கு ஒரு கப் காபி வேண்டும்
என்றான்.
வர்மா சமையலறைக்குள் நுழைந்து ஸ்டவ் மீது தண்ணீரை வைத்துவிட்டு வந்தான். அவன் மனம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. வந்து மகரிஷிக்கு எதிரே உட்கார்ந்துக் கொண்டு 'இதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. நீ இவ்வளவு சாகசம் செய்வாய் என்று நான் நினைக்கவில்லை" என்றான்.
'நானும் நினைக்கவில்லை. இதனால் எந்த லாபமும் இருக்காது என்று தெரியும். போலீசார் என்றாவது ஒருநாள் என்னைப் பிடிக்காமல் இருக்க மாட்டார்கள். தூக்குக் கம்பத்தில் ஏற்றும் வரையில் தூங்க மாட்டார்கள்."
'அப்படி இருக்கும்போது..."
நண்பனின் சந்தேகத்தைப் புரிந்துக் கொண்டவன்போல் மகரிஷி சொன்னான். 'எப்படியும் தூக்கிலிருந்து தப்பித்துக் கொண்டு விடமுடியாதுன்னு தெரிந்தும் இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் தப்பித்துக் கொண்டாய் என்பதுதானே உன் கேள்வி?"
வர்மா பதில் பேசவில்லை.
மகரிஷி ஆழ்ந்து பெருமூச்சு விட்டுவிட்டு 'மரணமடைவதற்கு முன்னால் சிரிசந்தனாவை ஒரு முறை பார்க்க விரும்பினேன். ஜெயிலரைக் கேட்ட போது ஒப்புக்கொள்ளவில்லை. மரணம் நெருங்க நெருங்க சந்தனாவைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகிவிட்டது. அதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. வெளியே வந்துவிட்டேன்" என்றான்.
'ஆனால் இது எவ்வளவு ரிஸ்க் என்று யோசித்துப் பார்த்தாயா?"
'மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. இறப்பதற்கு முன்னால் அவளைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்."
'உன்னைப் பைத்தியக்காரன் என்பதா அல்லது காதலுக்கு யாருமே தராத அளவுக்கு மதிப்பைத் தரும் அபூர்வ மனிதன் என்பதா என்று புரியவில்லை."
வெகு நேரம் கழித்து மகரிஷி சிரித்தான். 'நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். நான் எப்படியும் சந்தனாவைப் பார்க்கணும்."
'அவள் எங்கே இருக்கிறாள்?"
'தெரியாது."
'ஒரு பக்கம் போலீசார் உன்னைத் தேடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்தப் பெண் எங்கே இருக்கிறாள் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும் உன்னால்? யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாளோ, அசல் இந்த ஊரில்தான் இருக்கிறாளோ இல்லையோ, ஒன்றுமே தெரியாதே?"
'கல்லூரிக்குப் போய் பழைய ரிகார்டுகளைப் பரிசோதித்தால் அவள் முகவரி கிடைக்கலாம். அதைக் கொண்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்."
'ஒருக்கால் அவள் இந்த நாட்டிலேயே இல்லாவிட்டால்?"
'முதலில் ரிகார்டுகளில் முயற்சி செய்தால் அவள் பர்சனல் அட்ரஸ் கிடைக்கலாம். அதிலிருந்து விசாரித்துக் கொண்டே போனால், தற்சமயம் எங்கே இருக்கிறாள் என்று தெரியக்கூடும்."
'இதெல்லாம் நடக்கக் குறைந்தது வாரம் பத்து நாட்களாவது ஆகும்."
'ஒரு மாதம் ஆனாலும் சரி, நான் பார்த்தே ஆகணும்."
வர்மா மகரிஷியை விநோதமாக பார்த்தான். 'அவளுடன் ஒன்றாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் உன் காதலை நீ வெளிப்படுத்தவில்லை. முதலில் உன் பெயராவது அந்தப் பெண்ணிற்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. இப்போ நீ செத்துப் போவதற்கு முன்னால் அவளைப் பார்க்கணும் என்று விரும்புகிறாய் என்று ஆழ்ந்து பெருமூச்சு விட்டுவிட்டு 'சரி, என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன். ஆனால் இந்த பத்து நாளும் நீ எங்கே இருப்பாய்?
என்று கேட்டான்.
'எங்கே இருந்தால் நல்லது என்கிறாய்?" எதிர்க்கேள்விக் கேட்டான் மகரிஷி.
'என்னிடம் இருந்தால் ஆபத்து. உன்னைப் போலீசார் அரெஸ்ட் செய்த போதும், கோர்ட்டில் விசாரணை நடக்கும் போது நான் உனக்கு நிறைய உதவி செய்தது எல்லோருக்கும் தெரியும். நீ தப்பித்துக் கொண்டு விட்டது தெரிந்ததுமே அவர்களின் சந்தேகம் என் மேல்தான் வரும். இங்கே இருப்பது நல்லது இல்லை."
'ஏதாவது ஹோட்டலில் தங்கிக் கொள்கிறேன்" என்றான் மகரிஷி.
'ஹோட்டலிலா?" வியப்புடன் கேட்டான் மகரிஷி.
'ஆமாம். சாதாரணமாக ஜெயிலிலிருந்து யாராவது தப்பித்துக் கொண்டால் எங்கேயாவது ஒளிந்துக் கொண்டிருப்பார்கள் என்றும், வெளியே வருவதற்கு பயப்படுவார்கள் என்றும்தான் எல்லோரும் நினைப்பார்கள். நான் ஏதாவது ஹோட்டலில் தங்கிக்கொண்டால் யாருக்குமே சந்தேகம் வராது. தோற்றத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். அந்தப் பெண் எங்கே இருக்கிறாள் என்று நீ தேடு. தெரிந்ததுமே எனக்குத் தெரியப்படுத்து. போய் ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்தே நேராக ஜெயிலுக்குப் போய் விடுகிறேன்."
'அந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு திரும்பி ஜெயிலுக்குப் போவாயோ அல்லது திரும்பவும் உயிர் மீது ஆசை துளிர்க்குமோ யார் கண்டது? சரி, அந்தப் பெண்ணைத் தேட முயற்சி செய்கிறேன் என்றவன் எழுந்துகொண்டு 'வா, உன்னை ஹோட்டலில் இறக்கி விடுகிறேன்
என்றான் வர்மா.
'வேண்டாம். நீயும் நானும் சேர்ந்து வெளியே போனால், நீ சொன்னது போல் யாருக்காவது சந்தேகம் வந்து விட்டால் ஆபத்து. நான் மட்டும் தனியாக போய் அறை எடுத்துக் கொள்கிறேன். என்றாவது நான் பிடிபட்டுப் போனாலும் இந்தக் கேசில் உனக்கு பங்கு இருப்பது போல் ருசு இருக்காது" என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான் மகரிஷி.
அவன் கதவைத் திறக்கப் போனபொழுது பின்னாலிருந்து அழைத்தான் வர்மா. 'மகரிஷி!"
நின்று திரும்பிப் பார்த்தான் மகரிஷி.
'ஒரு நிமிஷம்" என்று உள்ளே போனான் வர்மா.
சுமார் ஐந்து நிமிஷம் தேடிப் பார்த்துவிட்டுப் பெட்டியின் அடியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தான் வர்மா.
'என்ன இது?" கேட்டான் மகரிஷி.
'உனக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதுமே இனி இது அவசியம் இல்லைன்னு நினைத்து பெட்டிக்கடியில் எங்கேயோ போட்டு விட்டேன். இப்போ நீ வெளியே வந்து விட்டாய். ஒரு முறை இதைப் படித்தால் நல்லது."
மகரிஷி ஆச்சரியமடைந்தவனாக அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். முதல் பக்கத்தைத் திருப்பினான். அது ஒரு டைரி.
முதல் பக்கதில் பெயரைப் பார்த்ததுமே அவன் முகம் களையிழந்தது.
' ஸ்ரீவாணி"
தன் மனைவி!
சிரிக்க முயன்றவனாக 'இந்த டைரியைப் படித்து நான் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது என்ன இருக்கு வர்மா?" என்று கேட்டான்.
'படி. படிப்பதால் நஷ்டம் ஒன்றுமில்லையே?" என்றான் வர்மா சுருக்கமாக.
'சரி, போய் வருகிறேன்" என்று மகரிஷி அந்த டைரியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
அங்கிருந்து நேராக ஹோட்டலுக்குப் போனான். வாழ்க்கையின் கடைசி பத்து நாட்களையும் நல்ல ஹோட்டலில் கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். வர்மா தந்த பணம் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது.
'ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்ட கைதி" என்று பெரிய போட்டோ முதல் பக்கத்தில் வருவதும், பிடித்துத் தருபவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிப்பதும் சினிமாக்களில் மட்டும்தான் நடக்கும் என்று அவனுக்குத் தெரியும். இன்று காலையில் நடந்த இந்த விஷயம் இன்னும் வெளியே பரவவில்லை. அதனால் தான் பயப்படத் தேவையில்லை என்றெண்ணிக் கொண்டான்.
சாதாரணமாக நடந்துகொண்டே போய் கௌண்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு அறையை எடுத்துக் கொண்டான்.
மூன்று மாடி கட்டிடம் அது.
மூன்றாம் மாடியில் கடைசி அறை அவனுடையது. ஒரு விதத்தில் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டே, ரிசப்ஷனிலிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.
கையிலிருந்த டைரியைக் கட்டிலில் போட்டுவிட்டு பாத்ரூமிற்குப் போய் சுமார் ஒரு மணி நேரம் குளித்தான். ரொம்ப நாட்களுக்குப் பிறகு வெந்நீரில் குளித்தது சுகமாக இருந்தது.
திரும்பி அறைக்குள் வந்தான்.
தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அதுவும் நேற்றிரவு ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஆழ்ந்து போய் தூங்கவேயில்லை. அப்படியே படுக்கையில் சரிந்தான். கைக்கு டைரி தட்டுப்பட்டது. அதை வெறுப்புடன் தொலைவில் வீசியெறிந்தான். மனைவியின் பொருட்கள் மட்டுமே இல்லை. யோசனைகள் கூட அவனுக்கு வெறுப்பைத் தந்தன.
அதுவரை கண்களை சுழற்றிக் கொண்டு வந்த தூக்கம் மாயமாகிவிட்டது. வலுக்கட்டாயமாக உறங்க முயன்றான். மெல்ல மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான். அவன் யோசனைகள் கடந்த காலத்தை நோக்கித் தாவிக் கொண்டிருந்தன.
3
ஆணும் பெண்ணும் வாழ்க்கையின் இரண்டாவது கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் முதலிரவு...
மணமகளின் கனவுகளுக்கு அஸ்திவாரம் போட வேண்டும் என்றாலும், மணமகனின் எதிர்காலம் சீட்டு மாளிகையைப் போல் சரிந்து விழ வேண்டுமென்றாலும், அன்றிரவுதான் ஆரம்பம். ஒருத்தரையொருத்தர் புரிந்து கொள்வதற்கும், ஒருத்தர்பால் இன்னொருத்தர் வெறுப்பைக் காட்டிக் கொள்வதற்கும் அன்றிரவுதான் வாழ்க்கைப் புத்தகத்தின் முதல் வரி.
பூ முழுமையாக மலர வேண்டுமென்றாலும், விட்டில் பூச்சியாக மடிந்துபோக வேண்டுமென்றாலும்அதற்கு வித்திடப்படுவது அன்றிரவுதான்.
அவ்வறையில் ஜாதி மல்லிகைப் பூக்களின் வாசமும், ஊதுபத்தியின் நறுமணமும், பட்டு மெத்தையும் எல்லாமே விரகதாபத்தால் சூடேறிக் கொண்டிருந்தன.
எல்லாவற்றையும் விட வருத்தத்துடன் இருந்தது அந்த அறையில் இருந்த ஒரே ஒரு விளக்குதான். அன்றிரவு தன் தேவை, அவர்களுக்கு இல்லை என்ற வருத்தத்தோடு அது குறுகிப் போய் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
சரியாக அந்த சமயத்தில் பெண்டுகளின் சிரிப்பு சத்தத்துடன் அந்த கதவு திறந்து கொண்டது. வளைல்களின் கலகல சத்தம் அவளை உள்ளே தள்ளியது. சிரிப்பு சத்தத்திற்கு இடையில் கதவு வெளியில் தாழிடப் பட்டது.
தானே முன்னோக்கிப் போக வேண்டுமா, அல்லது அவனே வந்து இடுப்பைச் சுற்றிக் கையைப் போட்டு நடத்தி அழைத்துச் செல்வானா என்று தெரியாமல் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவள் கொஞ்ச நேரம்.
அவன் நிலைமையும் ஏறத்தாழ அதுபோலவேதான் இருந்தது.
கடைசியில் அவள் நகர்ந்தாள். அவனுக்கு எதிரே வந்து தலை குனிந்தபடி நின்றாள்.
அன்றிரவுக்காக மனதில் எத்தனையோ முறை ஒத்திகையைப் போட்டுப் பார்த்துக் கொண்டு, கடைசியில் எல்லாவற்றையும் மறந்துபோய், என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
கடியாரத்தின் வினாடி முள், வினாடிக்கு வினாடி முள்ளாக குத்துவது போல் உணர்வு. தொண்டையைச் செருமிக்கொண்டே 'உட்காரு ஸ்ரீவாணி" என்றான்.
அவள் நிசப்தமாக பால் டம்ளரை அவனிடம் தந்து விட்டு கட்டில் விளிம்பில் உட்கார்ந்துகொண்டாள்.
அவன் பாதி பாலைக் குடித்துவிட்டு, டம்ளரை அவளிடம் தந்தான். அவள் குடித்ததும் உரிமையோடு டம்ளரை வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான். அவ்விடத்தில் சூழ்ந்து கொண்டிருந்த நிசப்தம் அவனுக்கு அசௌகரியமாக இருந்தது. அதனைச் சிதறடித்தபடி 'ஏதாவது பேசு ஸ்ரீவாணி" என்றான்.
என்ன பேசுவது என்பதுபோல் அவள் இமைகள் படபடத்தன. அவன் பேச்சிற்கு பதிலளிக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணிக் கொண்டாளோ என்னவோ, மெதுவாக நிமிர்ந்து 'என்ன பேசுவது?" என்றாள்.
'ஏதாவது... உனக்குப் பிடித்த டாபிக்" என்றான்.
அவள் பதில் சொல்லவில்லை. தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்களில் என்ன யோசனைகள் நிழலாடிக் கொண்டிருந்தனவோ அவனுக்குப் புரியவில்லை.
அவ்வளவு நிசப்தத்தைத் தாங்க முடியாதவனாய் அவளை நோக்கி நகர்ந்தான். உரிமையோடு அவள் கைகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டு 'உன்னிடம் என்னைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்" என்றான்.
அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. சுருக்கமாக 'உங்க இஷ்டம் என்றாள். அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்ததுதான் தாமதம், அவன் அவளுக்கு இன்னும் நெருக்கமாக நகர்ந்துகொண்டு, அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு 'நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாயே?
என்றான்.
முதலிரவன்று கணவன் ஒரு கேள்வி கேட்பதற்குக்கூட தன் அனுமதியைக் கேட்டது அவளுக்குத் திருப்தியைத் தந்தது.
'கேளுங்கள்" என்றாள்.
'கல்யாணத்திற்கு முன்னால்... ஒரு வினாடி நிறுத்திவிட்டு முடித்தான். 'யாரையாவது காதலித்தாயா?
முதலில் அவளுக்கு அந்த வார்த்தை புரியவில்லை. புரிந்ததும் சட்டென்று அவனை விட்டுவிட்டு தொலைவிற்கு நகர்ந்து கொண்டே 'உங்களுக்கு ஏன் வந்தது இந்த சந்தேகம்?" என்று கேட்டாள்.
அவன் சிரித்துக்கொண்டே அவள் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு அழுத்திவிட்டு, அதைவிட்டான். 'பயப்படாதே. சும்மா கேட்டேன், அவ்வளவுதான். தெரிந்துகொள்வோம் என்று" என்றான்.
அவள் உடனே மறுத்துத் தலையசைத்துவிட்டு 'நான் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் ரொம்ப தூரம் என்றாள். அவள் குரலில் பிரதிபலித்த அப்பாவித்தனத்திற்கு மெய்மறந்தவனாக அவளை அணைத்துக்கொண்டே 'உண்மையில் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ளும் உத்தேசம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் உன்னைப் பண்ணிக் கொண்டு நான் தவறு செய்யவில்லை என்று தோன்றுகிறது
என்றான்.
அவள் உடனே 'ஒருக்கால் நான் யாரையாவது காதலித்ததாக சொல்லியிருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?" என்று கேட்டாள்.
அவன் ஒரு வினாடி வாயடைத்துப் போய்விட்டான். அவள் அவ்வாறு கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகு சிரிக்க முயன்றவனாய் 'அப்படி எல்லாம் நடந்திருக்காது" என்றான்.
'ஒருக்கால் நடந்து இருந்தால்?"
அவன் திடமான குரலில் 'திரும்பவும் உங்களை ஒன்று சேர்த்து வைக்க முயன்றிருப்பேன்" என்றான்.
அவள் அவன் முகத்தைப் பார்த்துத் தலை குனிந்தபடி மெல்லிய குரலில் சொன்னாள். 'ஆனால் நான் இதுவரை அப்படிப்பட்ட யோசனைகளை செய்ததில்லை. என் இருபது வருட வாழ்க்கையும் படிப்பதற்கே சரியாக இருந்தது. வேறு யோசனைகள் வருவதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. ஆனால் வாழ்க்கையில் கல்யாணம் என்று நடந்தால் என்னை முழுவதுமாக அவனுக்கே அர்பணிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்."
அதைக் கேட்டு அவன் பரவசமடைந்து போனான். அவன் கண்கள் பனித்தன. அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த அவன் கைகள் நடுங்கின. சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
பிறகு மெல்ல தொலைவிற்கு நகர்ந்துகொண்டான். அவள் புனிதத்திற்கு முன்னால் தன்னுடைய நேர்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. இரு மனமும் ஒன்று சேர வேண்டுமென்றால் முதலில் திரை விலகவேண்டும்.
'வாணீ! என்றான். 'நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.
எரிமலை வெடித்துவிடவில்லை. குறைந்தது