En Priya Sakiye
By Jera
()
About this ebook
கற்பகம், அசோக் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அசோக் கற்பகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அவன் அதிர்ச்சிக்கு காரணம் என்ன? அதன் பின்னர் அசோக்கின் நிலை என்ன? இன்னும் சில சிறுகதைகளை பற்றியும் வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்...!
Read more from Jera
Yaaro Parkirargal Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Kaayum Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Priya Sakiye
Related ebooks
Kangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Dhvani Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Irupathu Ennidamey! Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Kuttravali Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Thottil Rating: 0 out of 5 stars0 ratingsParvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsThottachinungi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPaavai Vilakkin Olichitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsVaanile... Theanila... Rating: 2 out of 5 stars2/5Sudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsEn Devathai Neeye Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aaviye! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Priya Sakiye
0 ratings0 reviews
Book preview
En Priya Sakiye - Jera
https://www.pustaka.co.in
என் ப்ரிய சகியே
En Priya Sakiye
Author:
ஜெரா
Jera
For more books
https://www.pustaka.co.in/home/author/jera
பொருளடக்கம்
என் பிரிய சகியே
நிசப்தப் போராட்டம்
உறவுச்சங்கிலி
திரைகள்
செண்பகம் மாறிவிட்டாள்
காகிதப் பஞ்சு
வரம்பு மிறிய வட்டங்கள்
ஒரு நள்ளிரவு ஞானோதயம்
ஊமைக் காயங்கள்
மண்குதிரைகள்
திரைகள் விலகினால்
ஒரு சத்தியப் பிரவேசம்
ஜன்னல் கதவுகள்
ஏற்றிய தீபம் அணையாமல்...
புடவைக்குப் பின்னால் ஒளிபவர்கள்
நிமிடத்துக்கொரு நிறம்
நுனிப்புல் மேய்தல்!
என் பிரிய சகியே
1
எங்கேயாவது ஒளிந்துகொள்ள இடம் கிடைக்குமா என்று அவன் கண்கள் தவித்தன. எழுந்து ஓடிவிடுவதற்குக் கால்கள் மூளையின் முன் அனுமதியை வேண்டிக் கொண்டிருந்தன.
காலையிலிருந்து யோசித்து யோசித்து சோர்ந்து போயிருந்த மூளை ஒரு முடிவுக்கு வருவதற்குள்... அவள் சமீபித்து விட்டாள். ஆயிற்று... இன்னும் சில நொடிகள்தான்... நேற்றிலிருந்து சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டிருக்கும் அந்த சந்திப்பு இதோ நிகழப்போகிறது! மனதின் ஒருபுறம் இந்த சந்திப்பு வேண்டாம் என்று அடம்பிடித்தாலும், மறுபுறத்தில் சில்லென்ற ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை!
அவளோடு பேசப்போகும் அந்த ஒரு கணத்துக்காக ஏங்கிச் சாகும் தன் இதயத்தின் வெட்கங்கெட்டத்தனத்தை இருட்டில் போட்டு அமுக்கிவிட அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் முற்றுமாகத் தோற்றுப்போக, என்ன செய்வது என்று தெரியாமல் அசைவை மறந்தான். அவன் இச்சையை மீறி தலை தரையைப் பார்த்தது.
அவள் நெருங்கிவிட்டாள் என்பதை ‘இன்டிமேட்டின்’ மணமும், பட்டுப்புடவையின் சரசரப்பும் உணர்த்திய பின்பும் தலையைத் தூக்கிப் பார்க்கத் தோன்றாமல் கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் திடீரென சிலிர்த்துக் கொண்டான். இவளை நேருக்கு நேர் பார்ப்பதற்கு ஏன் தயங்கவேண்டும்...? குற்றம் செய்துவிட்ட குறுகுறுப்போடு ஏன் தலைகுனிய வேண்டும்? தவறு செய்தவள் அவள்தான். வாஸ்தவத்தில் அவளுக்குத்தான் இந்த தாழ்வுணர்ச்சி எல்லாம் ஏற்படவேண்டும்! அடிப்பாவி! நீ செய்தது எந்த விதத்தில் நியாயம்?
என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேட்கவேண்டியவன் கோழையைப் போலக் குனிந்து கொள்வதா?
அவன் நிமிர்ந்தபோது, அவள் லேசாக முறுவலித்தபடி நின்று கொண்டிருந்தாள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கம் கண்களில் மின்ன புடவையின் தலைப்பை விரலில் சுற்றிப் பிரிப்பதில் சிலகணங்களைக் கரைத்தாள்.
காலம் அப்படியொன்றும் அவள் உருவத்தில் கை வைத்திருக்கவில்லை. இயற்கையான அவள் கருப்புநிறம் மாநிறத்துக்குத் தாவலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. பூஞ்சையாய் இருந்த உடல் கொஞ்சம் புஷ்டியாக முயற்சித்துக் கொண்டிருந்தது. மற்றபடி உருவத்தைப் பொறுத்தவரை பத்துவருடங்களுக்கு முன்பு அவன் பார்த்த அதே கற்பகம்தான் இப்போதும் நின்று கொண்டிருக்கிறாள். ஆனால் உள்ளத்தைப் பொறுத்தமட்டில்... உறவைப் பொறுத்தமட்டில்...
லேசான கசப்பு நெஞ்சில் இறங்க அவன் வானத்தில் பார்வையைச் செலுத்தினான். அவளுடைய அருகாமை உள்ளுக்குள் அவஸ்தையைக் கொடுத்தாலும் வெளியே பாதிக்கப்படாதவன் போல ‘பாவ்லா’ பண்ண முயன்றான்.
என்னை ஞாபகமிருக்கா அசோக்?
அவள் மிக மெதுவாகத்தான் இதைக் கேட்டாள். அவன் நெருப்புத்துண்டு மேலே விழுந்தாற்போல் துள்ளி எழுந்தான். பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடப்பதில் தன் உணர்ச்சிப் பிரவாகத்தை வடித்துவிட முடியுமா என்று பரீட்சை செய்தான்.
எப்படிப்பட்ட கேள்வி கேட்கிறாள் இவள்? மறக்கக்கூடிய காரியத்தையா இவள் செய்தாள்? உடம்பில் ரணத்தை உண்டாக்கிவிட்டு, ‘ரொம்ப வலிக்குமே’ என்று போலி அனுதாபம் காட்டுவதைப்போல் அல்லவா இருக்கிறது இவள் கேள்வி? அவள் குரலில்கூட அந்த பழையமென்மை தேய்ந்து போய்விட்டது. வலிமையான தொனி போர்த்தப்பட்டிருக்கும் இந்தக் குரலில் பத்தாண்டு பக்குவம் மட்டுமல்ல, பழக்கத்தை மீறிய அந்நியத்தன்மைகூட அதிகமாகப் பளிச்சிடுகிறது.
ஓ! இவள் என் கற்பகம் அல்ல... எவளோ ஒரு பெண்! எவனோ ஒருவனின் கையால் மஞ்சள் விலங்கைப் பூட்டிக் கொண்டவள். நான் பார்த்தறியாத பிஞ்சுமுகங்களுக்குத் ‘தாய்’ என்ற புதுப்பதவி ஏற்றுக் கொண்டிருப்பவள்.
அடுப்பு ஊதுவதில் ஆரம்பித்து, அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு ஆபீஸ் போய்த்திரும்பி, படுக்கையில் சாய்ந்ததும், விளக்கணைய, உடம்பை வருடும் ஆண்மையின் ஆளுமைக்கு இழைந்து கொடுக்கும் இந்த நாட்டின் இலட்சக்கணக்கான சாதாரணப் பெண்களில் இவளும் ஒருத்தி. இவளுடைய கேள்விக்காகத் தடுமாறிப் போய்விடுவது கேவலமான விஷயம்.
அசோக் சமாளித்துக் கொண்டான், லேசாக விசிலடித்தான், நேருக்கு நேர் அவள் விழிகளோடு பார்வையை உறவாட விட்டான்.
என்ன கேட்டிங்க...?
என்னை... ஞாபகமிருக்கான்னு...
மருளும் அவள் கண்களைப் பார்த்ததும் அவனுக்கு ஏகமாக சிரிப்பு வந்தது. இருந்தாலும் பலமாகச் சிரிப்பதைவிட, இகழ்ச்சி ததும்பும் இதழ்க்கடை நெளிவு அவளை இன்னும் துன்புறுத்தும்போலத் தோன்றியது. தோன்றியதைச் செயலாக்கினான்.
எங்கேயோ பார்த்திருக்கறதா வேஃகா ஒரு ஞாபகம்... யுவர் குட்நேம் ப்ளீஸ்...?
அவளுடைய அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. கண்கள் கடமை உணர்வோடு உற்பத்தி செய்துவிட்ட கண்ணீர் இவள் கட்டளைக்காகத் காத்திருக்காமல் பயணம் ஆரம்பிக்க, சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சற்றுதூரத்தில் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருந்த கும்பலில் இருந்து ஓடிவந்த சிறுமி ஒருத்தி சிலையாக நின்று கொண்டிருந்த கற்பகத்தின் கைகளைப் பிடித்துத் தொங்கினாள்.
மம்மி... வா மம்மி, கோயிலுக்கு போலாம்.
டோண்ட் டிஸ்டர்ப் மீ இந்து, வேர் இஸ் ராஜேஷ்?
உடைந்துபோன இவள் குரலையும், மாறிப் போயிருக்கும் முகபாவத்தையும், குழந்தை அடையாளம் கண்டு கொண்டாள் போலும். இவளையும் லேசான எரிச்சலோடு அசோக்கையும் மாறிமாறிப் பார்த்தாள்.
ஏன் மம்மி அழறே?
இன்னும் இதே இடத்தில் நின்று கொண்டிருந்தால், குழந்தை கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்று அனுமானித்துக் கொண்டவளாக இந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் கற்பகம்.
நோ, நோ அழலியே! கண்ணிலே தூசு விழுந்துடுச்சு! கமான், கோவிலுக்குப் போகலாம்...
இருவரும் நடந்தார்கள். ஒரு பொடியன் ஓடிவந்து உரிமையோடு கற்பகத்தின் இடுப்பை அணைத்துக்கொள்ள, அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு, வாத்யகோஷ்டி வழிகாட்ட அப்போதுதான் கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் சங்கமமானாள்.
இந்த புஷ்டியான குழந்தைகள் பத்துவருட தாம்பத்யம் அவளுக்குத் தந்த பரிசுகள் போலிருக்கிறது. இந்துவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது கல்யாணமான மறுவருடமே அவள் பிறந்திருக்கவேண்டும்.
சே! என்ன ஒரு ஈடுபாட்டுடன் இந்த கற்பகம் மண வாழ்க்கையில் மூழ்கி இருக்கிறாள்? இஷ்டமில்லாமல் தாலிகட்டிக் கொள்ளும் எந்தப் பெண்ணாவது இதற்கு உடன்படுவாளா? வக்ரமான எண்ணங்கள் மனதைப் பிழிய அசோக்கின் அறிவு தடுமாறியது. கோவிலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இந்தக் கல்யாணத்துக்கு வராமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால்... தவிர்க்கமுடியாதது கற்பகத்தின் சந்திப்பு மட்டுமல்ல, இந்தக் கல்யாணமும் கூடத்தான். இவனுடைய சித்தப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மாப்பிள்ளை உறவையும்விட நெருக்கமான நண்பனும்கூட. அதுவுமில்லாமல் உறவுக்காரர்களின் வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் சரி, கெட்டகாரியத்துக்கும் சரி, இவனுடைய பெற்றோர்களின் தலைமை அவசியமானதாகக் கருதப்பட்டது. அசோக் இதற்கு ‘ஆப்ஸண்ட்’ ஆகவே முடியாது.
ஆனால் திடும்மென கற்பகம் வந்து நிற்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறான். ஏன்? பலநிகழ்ச்சிகளில் இவள் வரமாட்டாளா? என்று ஏங்கியபடி வாசலில் தவம் இருந்திருக்கிறான். அப்போதெல்லாம் இவளுடைய பெற்றோர்கள் மட்டும்தான் வந்து நிற்பார்கள். இவன், விசாரித்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார்களே என்று அடுத்தவர்களை விட்டு கற்பகத்தைப் பற்றி விசாரித்திருக்கிறான்.
ஒரிஸ்ஸா ரொம்ப தொலைவாச்சே! ஆ, ஊன்னா வந்துட்டுப் போக முடியுமா? வாழ்த்து, அனுதாபம் எதுன்னாலும் தபால்மூலமாதான்.
கற்பகத்தின் அம்மா நீட்டி முழக்கிவிட்டு நகர்ந்து விடுவாள். இவன் நெஞ்சம் சூம்பிப்போக நெடுநேரம் நின்று விடுவான். இவள் எவனையோ கல்யாணம் செய்துகொண்டு தொலையட்டும்! அடிக்கடி முகத்தைப் பார்த்தாவது நிம்மதி பெறக்கூடிய தூரத்தில் இருக்கக்கூடாது? எங்கோ வெகுதொலைவில் கடந்த காலத்தை எல்லாம் கனவுகளாகக் கரைத்துவிட்டு சட்டெனப் பற்றிய பரபரப்பான வாழ்க்கையில்...
நேற்று மாலை அவள் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது அசோக் பஸ்ஸ்டாண்டை ஒட்டி இருந்த பெட்டிக் கடையருகேதான் நின்றுகொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் அடிவயிற்றில் ஒரு பந்து அவசரமாக எழுந்து இதயத்தைத் தாக்கியது. எங்கே பார்த்துவிடுவாளோ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். விரல்கள் நடுங்கி, புகைந்துகொண்டிருந்த சிகரெட்டைத் தரைக்குத் தூதனுப்பின. பதட்டத்தில் சில்லரையை வாங்கக்கூட மறந்து எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தான்.
இதெல்லாம் அசோக்கிற்கு புதுமையான அனுபவங்கள். இந்த உணர்ச்சிகள் எதில்சேர்த்தி என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் தாறுமாறாக உணர்ச்சிகளைச் சிதறவிடும் அரைவேக்காடான ஆளல்ல அவன். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவன். எந்தப் பிரச்சினையையும் அவனுக்கு அடிமைப்படுத்தத்தான் தெரியுமே தவிர அவனே அடிமையாகி விடுவது அபூர்வம். ஆனால், இவள்... கற்பகம் கொஞ்சம் புரட்டி இருக்கிறாள். ஒருக்கால் எந்த அறிவுமே ‘ஆப்போஸிட் செக்ஸால்’ அதிவேகமாக இழுக்கப்பட்டுவிடுமோ?
ஸ்வாமி தரிசனம் முடிந்து மாப்பிள்ளையும், பரிவாரங்களும் கிளம்பியபின் அசோக் அரசமரத்தடி பிள்ளையாரை தஞ்சமடைந்தான். சிமெண்ட் மேடையின் விரிசல்களில் ஊர்வலம் போகும் சிற்றெறும்புகளையும், சற்றேனும் நிற்கத் தோன்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அவைகளின் சுறுசுறுப்பையும் பார்க்கும்போது இளம்பிராயத்து நினைவுகள் எட்டிப்பார்த்தன. துருதுருவென்று அலையும் குழந்தை கற்பகம் கண்களை அகலவிழித்துக் கொண்டு கையாட்டினாள்.
கொட்டும் ரத்தத்தைப் பார்த்து இவன் கண்களை மூடிக்கொண்டு அழ, உடைந்த பிளேடை கையில் வைத்துக்கொண்டு, அசோக், அம்மாகிட்டே சொல்லாதேடா...
என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்துக் கற்பகம் மின்னி மறைந்தாள். இப்போது நினைத்தால்கூட அவள் கீறிய இடம் வலிக்கத்தான் செய்கிறது. உடம்பைக் கீறி விளையாடுபவள் ஒருநாள் உள்ளத்தையும் கீறிவிடப் போகிறாள் என்று அன்றே தெரிந்திருந்தால் எல்லோரையும் போல அசோக்கும் இவளை ஒதுக்கியே வைத்திருப்பான்.
என் பேரு கற்பகம்.
அசோக் நிமிர்ந்தான். அவள் முகம் மலர சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
இப்பவாவது ஞாபகம் வருதா அசோக். நான் யாருன்னு...?
அவன் பதில் பேசவில்லை, இவ்வளவு இயல்பாக இருப்பதற்கு இவளால் எப்படி முடிகிறது?
நான் இப்படி உட்காரலாமா...?
அவன் பதிலுக்குக் காத்திருக்காமல், பக்கத்தில் சற்றுத் தள்ளி தூசிதட்டிவிட்டு உட்கார்ந்து கொண்ட கற்பகம் சட்டென்று சோகத்தில் புதைந்து போனவளாக தரையைப் பார்த்தாள்.
உனக்கு என்மேலே இருக்கற கோபம் தணிஞ்சிருக்காதுன்னு எனக்குத்தெரியும்.
பரவாயில்லியே, இந்த அளவுக்காவது என்னைப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே... குட்!
அவள் முகத்தை ஏதோ ஒரு பரவசம் தொட்டுவிட்டு மறைந்தது. முதன்முதலாக வாயைத்திறந்து பதில் சொன்னானே என்ற நிம்மதி மூச்சுக் காற்றாக வெளியே போனது.
இந்த அளவுக்கு எனக்கு நீ மரியாதை குடுக்கணுமா அசோக்...
ஷ்யூர், இப்ப நீங்க பாப்பா கற்பகம் இல்லே, ரெண்டு பாப்பாக்களுக்கு அம்மாவாயிட்ட கற்பகம். தாய்க்குலம்... மரியாதை சகஜம்தானே.
நான் உன்னைவிட இளையவ அசோக்.
பட்...
வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கஷ்டப்பட்டு தலையை உசுப்பிக்கொண்ட அசோக் எங்கோ பார்த்தபடி முணுமுணுத்தான்:
நீங்க இன்னொருத்தர் மனைவி. எனக்கு வெகுதூரத்திலே இருக்கிறீங்க.
நோ
சத்தமில்லாமல், அதேசமயம் எஃகின் உறுதியோடு அவள்பதில் முகத்தை அறைய திரும்பிப் பார்த்தான் அசோக். அவள் கண்களில் கெஞ்சல் வழிந்து கொண்டிருந்தது.
ப்ளீஸ் அசோக், என்னைப் புரிஞ்சுக்கோ, நான் உன்னைத்தான் இப்பவும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
அசோக் இதைக் கேட்டதும் குபீரெனச் சிரித்தான். கண்ணில் நீர்முட்ட, எக்கிய வயிறு கீழே இறங்க மறுக்க, வெறி பிடித்தவன்போல அவன் சிரிப்பதைப் பார்த்து நடுங்கிப்போனாள், கற்பகம். கோவிலுக்குள் வந்து செல்பவர்கள் கொஞ்சம் நிதானித்து, அதிசயப்படுவதை உணர்ந்துக் கொண்டவளாக, ஸ்டாப் இட்
என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி பல்லைக் கடித்தாள்.
அசோக், நீ என்னை எப்படி வேணுமானாலும் நினைச்சுக்கோ. நான் இன்னொருத்தர் வொய்ப்தான், இரண்டு குழந்தைகளுக்கு தாய்தான். பட்... ஸ்டில் ஐ லவ் யூ... இதைச் சொல்றதிலே எனக்கு வெட்கமோ, வேதனையோ இல்லே... ஏன்னா நான் சொல்றது அப்பட்டமான உண்மை...
அவன் அதிர்ந்து போனான். லேசாக வியர்த்துகூட விட்டது. இவளென்ன பைத்தியமா? எந்த தைரியத்தில் இப்படி எல்லாம் பேசுகிறாள்? அப்படி என்றால் பத்துவருட தாம்பத்யம் இவள் போட்டுக் கொண்ட வேஷமா? தெரிந்தே வேஷம் போட்டுக் கொண்டு வேடிக்கை காட்டுவதற்கு இதென்ன மேடையா? இவளை நம்பி இருக்கும் கணவனும், குழந்தைகளும் போலி உறவுகளா? நினைக்கவே அருவருப்பாய் இருந்தது அசோக்கிற்கு. ‘இவள்... கற்பகம் லேசுப்பட்டவளில்லை’ என்ற நினைப்பு நெஞ்சை அறுக்க சொல்லிக் கொள்ளாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தான் அசோக்.
2
தாறுமாறாக எல்லோரும் விழுந்து கிடந்தார்கள். சாப்பாட்டை முடித்தகையோடு உடம்பைச் சாய்க்க இடம் தேடி ஓரிருவர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர். கல்யாணக் களைப்பு, நல்லபடியாக காரியம் முடிந்துவிட்ட திருப்தி, இரண்டும் சேர்ந்து மணமகளை இழுத்து மூடிக் கொள்ளும்படி அடம்பிடித்துக் கொண்டிருந்தன. ஒரு கோஷ்டி ‘செகண்ட்ஷோ’ சினிமாவுக்குப் புறப்பட ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஓப்பன் வெராண்டா என்பதினால் விசுவிசுவென்று வீசும் இரவுக் காற்று வேறு தாராளமாகக் குளிரை இறைத்துக் கொண்டிருந்தது.
கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்த அசோக், சுவர் மூலையில் ஒரு வெற்றிடம் யாராலும் கைப்பற்றப்படாமல் இருக்கவே, ஜாக்கிரதையாக கைகளையும், தலைகளையும் தாண்டி, அதை அடைந்தான். ஆண்களும், பெண்களும் வித்தியாசம் பார்க்காமல் தூக்கத்தைச் சுகிப்பதற்காக இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, நீளமான கால்களை நீட்ட இன்னொருவரின் முகம் அனுமதிக்காததால் முடிந்த அளவு சுருக்கிக் கொண்டு, ஒருக்களித்துப் படுத்து கொட்டாவி விட்டான் அசோக். வீட்டுக்குள் இருந்த சுவர்க் கடிகாரம் பதினொருமுறை அடித்து ஓய்ந்தபோது இமைகள் கனத்து இறங்கிக் கொண்டன.
எல்லாம் கொஞ்ச நேரம்தான். காதில் வந்து ரீங்காரம் பாடிவிட்டுத் தாக்கத் தொடங்கிய விமானப்படையை அவ்வப்போது தட்டித் தகர்த்துக் கொண்டிருக்கும்போதே குளிர் நட்டு வாங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டது. முடிந்தவரை சமாளித்துப் பார்த்த அசோக் லேசாகப் புரளும்போது சில்லென்ற பஞ்சுக்கை ஒன்று அவன் கன்னத்தைத் தொட்டது.
ரொம்ப குளிருதா அசோக்?
‘ஓ! கற்பகம்... இவள்... இங்கே... பக்கத்தில்தான் படுத்திருக்கிறாளோ?’ அந்த நினைப்பே நெஞ்சில் ஊசியேற்ற கண்களை இறுக மூடிக் கொண்டான் அசோக். இதயத்தின் ஆட்டோமாடிக் தறி தன் ஆர் பி எம்மை அதிகப்படுத்திக் கொண்டது.
அசோக்!
அவள் குரலுக்கு அவன் பதில்தரவில்லை. கொஞ்சநேரம் கழித்து வெது வெதுப்பான சேலை ஒன்று அவன் உடம்பைப் போர்த்தியது. கொசுக்களும், குளிரும் கைகுலுக்கி விடைபெற்றுக்கொள்ள தூக்கம் நுழைந்து ‘ஷிப்ட்’ பார்க்கத் துவங்கியது.
அவன் மீண்டும் விழித்துக் கொள்ளும்போது கண் சிமிட்டும் டிஜிட்டல் மணி அதிகாலை நான்கு என்று பல்லைக் காட்டியது. கற்பகத்தின் பட்டுப்புடவை உடம்பை போர்த்தி இருப்பதைப் பார்த்ததும், தூக்கம் பறந்துபோக, எழுந்து கொண்டான். அசோக். நான்கு அடி தள்ளி கற்பகம் பந்தாகச் சுருண்டிருந்தாள். பக்கத்துக்கு ஒன்றாக அவள் ‘படைப்புகள்’ தழுவிக்கிடந்தன. குழந்தைகள் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்க, கற்பகம் மட்டும் சுருண்டிருந்தாள்.
அசோக் புடவையைப் பிரித்து மூவருக்கும் சேர்த்துப் போர்த்தினான். மெதுவாகத் தடைகளைக் கடந்து