Amuthum Thenum
By Shobana Ravi
()
About this ebook
அஜய் வெள்ளிநிற மேல்பூச்சைத் துடைக்கத் துடைக்கப் பொற்சிலையாள் மின்னத்தொடங்கினாள். அவளது நகைகளில் பதிக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கற்கள் இப்போது ஒளியை வண்ணச் சிதறல்களாகப் பிரதிபலித்து அக்கூடமெங்கும் அள்ளித் தெளித்தன. அவளது நுண்ணிய மகுடத்தை கோஹினூரை விடப் பெரிய வைரமொன்று அலங்கரித்தது. அதைச் சுற்றிலும் மஞ்சளும் நீலமுமாக வைர வரிசைகள் கிளம்பி சூரியக் கதிர்களைக் கேலிசெய்வனபோல் நீண்டு ஒளிர்ந்தன. தங்கப் பிறை நெற்றியில் முன்னுச்சிக் கூந்தல் சுருண்டு விழாதிருக்க அடர் பச்சை நிறத்தில் ‘மஸ்க்ரவைட்’ (musgravite) கல் பதித்த கொண்டை ஊசியைச் செறுகி இருந்தாள். அது ‘சூடாமணி’ தானோ? மரகதத்தாலான மயில்கள் அவள் கிளிஞ்சல் போன்ற காதுகளுக்கு அணிசெய்தன. பலவண்ணச் சிறுமுத்துகள் சுருண்ட இறகுகள் போலக் கொத்தாக அவளுடைய காதணிகளிலிருந்து பின்னால் கூந்தல் வரை ஓடின. கிடைத்தற்கரிய சிவப்பு மரகதங்களும் நீலவண்ண லபிஸ் லசூலியும் தொடுத்தபூக்களாக அவள் கூந்தலை அலங்கரித்தன. இப்போது உலகில் யாரும் பார்த்தறியாத வண்ணக் கனிம நவமணிகள் அவளது மெல்லிய கழுத்திலும் வார்த்தெடுத்த தோள்களிலும் மெல்லிய மாலைகளாக கோடிட்டிருந்தன. வைரங்களும் செவ்வந்திக்கற்களும் கோத்த கழுத்தணியில் தோகை விரித்தவாறும் சிறகொடுக்கி அமர்ந்தவாறும் மரகதமயில்கள் ஊசலாடின. அப்பப்பா! மல்லிகாவும் சுற்றியுள்ள மற்றவர்களும் சிலையை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி நின்றனர். ஒளிசிந்திய நகைகளின் மொத்த பிரகாசத்தையும் தூக்கி அடித்தன அந்தப் பொற்சிலையாளின் கண்கள்! பிரபஞ்சத்தின் அடர்ந்த கருப்புவெளிகளில் அதிர்ந்தபடியிருக்கும் வேதக்கருப்பொருள் ததும்பும் தடாகங்கள் அவை! அப்படியொரு இருட்டை தங்கத்தில் எப்படிக் கொண்டுவந்தான் அந்தச் சிற்பி?
“அவள் கண்களைப் பார்!” என்று மெல்லச் சொன்னாள் மல்லிகா. அவன் பார்க்கவில்லை. சிலையை இறுகப் போர்த்தியிருந்த மஞ்சள் துணியை அகற்றினான். ஒரு ஜோடிக் கையுறைகளை மல்லிகாவிடம் கொடுத்தான். பிறகு அவளிடம் ‘ஸ்பஞ்சை’க் கொடுத்து "தயவுசெய்" என்றான். அஜய்யின் உதடுகள் நடுங்கின. அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பது மல்லிகாவுக்குத் தெரிந்தது. தன் இதயத்தையும் சோகம் இறுகக் கவ்விக் கொள்வதை அவள் உணர்ந்தாள். அவன் விட்ட இடத்திலிருந்து மல்லிகா வேலையைத் தொடர்ந்தாள்.
அவளது உடலையும் பாதங்களையும் துடைத்தாள். ஒட்டியாணம் ஒன்று அவள் இடையை அன்போடு அணைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பொற்சிலையாள் ஓர் இளம் பெண். இன்னும் தாயாகவில்லை. ‘அதுவும் சரி, அயோத்தியில் இருந்த அனைவரின் நினைவிலும் அவள் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும்’ என்று மல்லிகா யோசித்தாள். அந்தச் சிலை செய்யப்பட்ட அதே சமயம் வேறெங்கோ ஓரிடத்தில் சீதை தன் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒற்றைப் பெற்றவளாக, இவ்வளவு சின்னதாகச் சிலை போல் இல்லாமல், இத்தனை அலங்காரம் இல்லாமல், இவ்வளவு இளமையும் அழகுமாக இல்லாமல் இருந்திருப்பாள்! மல்லிகா சீதையின் சிலையைச் சீர் செய்து முடிப்பதற்குள் அஜய், ராமன் சிலை மேலிருந்த பூச்சை முற்றிலுமாகத் துடைத்திருந்தான். சிலைகளுக்கு முன் தரையில் பூக்கோலம் அமைப்பதில் அரண்மனைப் பெண்கள் மும்முரமாக இருந்தனர்.
Related to Amuthum Thenum
Related ebooks
Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Marantha Nilave Rating: 5 out of 5 stars5/5Sowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsAnjangal Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKrishnai Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Varum Kanney Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Thavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsVaippirukku Raja! Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Veera Thalapathy Rating: 0 out of 5 stars0 ratingsThagappatta Meengal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Maariyathu Yeno Maragatha Pathumaiye Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Idhyathile Rating: 0 out of 5 stars0 ratingsSembulapeyal Neer Rating: 0 out of 5 stars0 ratingsUn Viral Idukkile Rating: 1 out of 5 stars1/5Mupathu Naalum Nilavu Rating: 4 out of 5 stars4/5Nee Pookkalin Theevu Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Pookkal Thoovum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணில் தெரிகின்ற வானம்! Rating: 0 out of 5 stars0 ratingsKannil Therigindra Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Amuthum Thenum
0 ratings0 reviews
Book preview
Amuthum Thenum - Shobana Ravi
https://www.pustaka.co.in
அமுதும் தேனும்
Amuthum Thenum
Author:
ஷோபனா ரவி
Shobana Ravi
For more books
https://www.pustaka.co.in/home/author/shobana-ravi
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
அத்தியாயம் 63
அத்தியாயம் 64
அத்தியாயம் 65
அத்தியாயம் 66
அத்தியாயம் 67
அத்தியாயம் 68
அத்தியாயம் 69
அத்தியாயம் 70
அத்தியாயம் 71
அத்தியாயம் 72
அத்தியாயம் 73
அத்தியாயம் 74
அத்தியாயம் 75
அத்தியாயம் 76
அத்தியாயம் 77
அத்தியாயம் 78
அத்தியாயம் 79
அத்தியாயம் 80
அத்தியாயம் 81
அத்தியாயம் 82
அத்தியாயம் 83
அத்தியாயம் 84
அத்தியாயம் 85
அத்தியாயம் 86
அத்தியாயம் 87
அத்தியாயம் 88
அத்தியாயம் 89
அத்தியாயம் 90
அத்தியாயம் 91
அத்தியாயம் 92
அத்தியாயம் 93
அத்தியாயம் 94
அத்தியாயம் 95
அத்தியாயம் 96
அத்தியாயம் 97
அத்தியாயம் 98
அத்தியாயம் 99
அத்தியாயம் 100
அத்தியாயம் 101
அத்தியாயம் 102
அத்தியாயம் 103
அத்தியாயம் 104
அத்தியாயம் 105
அத்தியாயம் 106
அத்தியாயம் 107
அத்தியாயம் 108
அத்தியாயம் 109
அத்தியாயம் 110
அத்தியாயம் 111
அத்தியாயம் 112
அத்தியாயம் 113
அத்தியாயம் 114
அத்தியாயம் 115
அத்தியாயம் 116
அத்தியாயம் 117
அத்தியாயம் 118
அத்தியாயம் 119
1
பாதரஸமாக ஓடிக்கொண்டிருந்தது நதி. ஆங்காங்கே நீரோட்டத்தின் மேடுபள்ளங்களில் மாலைச் சூரியன் பளபளத்துக்கொண்டிருந்தது. சுழித்துக்கொண்டு ஓடும் நீரில் கால்கள் தோய மல்லிகா அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒரு காதலனைப் போல, ஓரிரு மீன்கள் அவள் கால்களை மென்மையாக வருடின. மல்லிகா தனது சல்வாரை முழங்கால்வரை சுருட்டிவிட்டிருந்தாள். ஆனாலும் அது ஈரமாகிப்போயிருந்தது. தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது. வானம் மெல்லமெல்லச் சாம்பல் நிறமாக மாற மாலைவானத்தின் முதல்நட்சத்திரம் புடைத்துக் கொண்டு தோன்றியது. வெளிச்சம் கிட்டத்தட்ட போயே விட்டது. ஏதோ ஒரு தூண்டுதலில், இரும்புக்கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஓடும்நீரில் சரிந்தாள். பாகீரதி நதி அவளது மென்மையான தேகத்தைச்சுற்றிச் சுழன்றது. மல்லிகாவுக்கும் அந்த சுகம் இதமாக இருந்தது. முணுமுணுக்கும் ஆற்றின் அணைப்பில் தன்னை இழந்த அவள் கண்கள் மூடிக்கொண்டன. அலையின் போக்கு அவள் மேனியை மேலும் கீழுமாகத் தாலாட்டிக்கொண்டிருந்தது. குறும்பு மீனொன்று குர்தாவுக்குள் நுழைந்தது. அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.
நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு மென்மையான ஆனால் உறுதியான குரல் மல்லிகாவைத் திடுக்கிட வைத்தது. அவள் வேகமாக நீரிலிருந்து தன்னை மேலிழுத்துக்கொண்டு பின்னால் பார்த்தாள். வெளிச்சத்தின் பின்னணியில் அந்த நிழலுருவம், ஓர் உயரமான, திடகாத்திரமான இளைஞனாகத் தெரிந்தது.
ஆம், மிக்க நன்றி!
என்று மெல்லச்சொன்னவாறு காரணம் புரியாமல் நீரிலிருந்து வெளிவந்தாள்.
ஆம், நீர்மட்டம் ஓரடிக்கு மேல் உயர்ந்திருந்தது. மரகதம் போன்ற பச்சை நிறத்து பாகீரதி நதி இப்போது மண்ணின் நிறத்தில் மங்கலாக ஓடிக்கொண்டிருந்தாள். மல்லிகா தன் ஈர சல்வாரைக் கீழே இழுத்துச் சீர் செய்து கொண்டு நிமிர்ந்தாள். அந்த மனிதன் நகரவில்லை. தன் உயரம் அவனை ஈர்த்ததை அவள் உணர்ந்தாள்.
நான் அஜய்,
என்று அவளை நோக்கிக் கையை நீட்டினான் அவன். அவள் உள்ளூர் கிராமப்பெண்ணில்லை என்று பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது போலும்
நீட்டிய கையை உறுதியாகப் பற்றியவள், நான் மல்லிகா
என்றாள்.
உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
என்றான் அவன்.
நானும்,
என்று அவள் சொன்ன போது அதில் தொனித்த அழுத்தம் அவளுக்கே வியப்பாக இருந்தது. ஒரே கணத்தில் அவளும் ஈர்க்கப்பட்டாளா!.
நீங்கள் நீந்துவீர்களா?
என்று நதியைக் காட்டிக் கேட்டான்.
பந்தயத்தில் ஓடுவதுபோல் திமிறிப் பாய்ந்து கொண்டிருந்த நதியை அவள் திரும்பிப் பார்த்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பிடித்துக் கொண்டிருந்த இரும்புக் கைப்பிடி இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. அதையும் கடந்து வெள்ளம் கரையின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தது.
இந்த வெள்ளத்திலா? மாட்டவே மாட்டேன்
என்று பதட்டமாகச் சிரித்தாள். என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்! இந்த இடத்திற்கு நீங்கள் எப்படி?
அவள் தங்கியிருந்த விடுதியிலிருந்து அந்த நதிக்கரைக்கு ஒரே ஒரு பாதைதான் இருந்தது. அவளுக்குத் தெரிந்தவரை வேறெந்த வழியும் இல்லை. அவனுக்கோ அவளுடைய கேள்வி வேடிக்கையாக இருந்தது போலும். தலையைத் தூக்கிச் சிரித்தான். நீங்கள் ஆபத்தில் இருப்பதை அறிந்து ஓடிவந்தேன்
என்று ‘ஜோக்’அடித்தான். கண்ணடித்தானோ என்று சந்தேகம்... இருட்டில் தெரியவில்லை.
மேலே எழும்பிப்போய்த் திரண்ட மேகங்களின் இடைவெளியில் எட்டிப்பார்த்து ஒளியைப் பொழிந்துகொண்டிருந்த நிலா பரபரத்தோடிய நதியின் மேல் பட்டுத்தெறித்து நடனமாடிக் கொண்டிருந்தது. அந்த அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்தவளாய் பாகீரதியை பார்த்தபடி நின்றாள் மல்லிகா. வெட்டிச் சுழன்றெழுந்த காளிங்கன் மேல் கண்ணன் ஒளிப்பாதம் பட்டுத் தெறித்தாற் போலிருந்தது அவளுக்கு அந்தக் காட்சி.
ம்...!
என்று ஆமோதிப்பது போல் மெதுவாகச் சொன்னான் அவன்.
என்ன?
அவள் சட்டெனத் திரும்பினாள். இவ்வளவுநேரம் தன் மனத்தைப் படித்துக்கொண்டிருந்தானா?
நதியும் நிலாவும் பார்க்க எவ்வளவு அழகு!
என்றான் அஜய், இன்னும் மென்மையான குரலில்.
அவன் இப்போது அவளுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தான். அந்த அருகாமை அவளுக்குப் பாதுகாப்பாகத் தோன்றியது. நதியில்பட்டுப் பிரதிபலித்த நிலா வெளிச்சத்தில் அவனது முகம் இப்போது தெளிவாகப் புலப்பட்டது. பிரமாதமில்லை என்றாலும் தீர்க்கமான மூக்கும் ஒளிபொருந்திய கண்களுமாகத்தோன்றினான் அவன்.அவள் ஆராய்ந்து கொண்டிருந்த போதே அவன் மின்னல்போலப் பளீரென்று புன்னகைத்தான்."ஆஹா! அந்தச் சிரிப்பில் அவன் முகம் மிக்க ஒளிபொருந்தியதாயிற்று.
இடிபோல ஆர்ப்பரித்துக் கொந்தளித்த நதி, வேரறுந்த மரங்களையும் துண்டிக்கப்பட்ட கிளைகளையும் அடித்துக் கொண்டு போயிற்று.
ஓ, கடவுளே!
என்றாள் அதைப் பார்த்த பயத்தில்.
திடீர் வெள்ளப்பெருக்கு
என்றான் அஜய். நேற்றிரவு மலைகளில் பெய்த மழையாக இருக்கவேண்டும். சரி போகலாம். மழை வந்துவிடும்.
இருவரும் திரும்பி அவள் தங்கியிருந்த விடுதியை நோக்கி நடந்தார்கள். சுற்றிலும் சில்வண்டுகளும் தும்பிகளும் இரவுப் பூச்சிகளும் ஏராளமாகப் பறந்தன. அஜய் மௌனமாக இருந்தான். அதனால் மல்லிகாவும் இயல்பாகவே அந்த மௌனத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள். வெளிச்சம் குறைந்த வராந்தாவை அடைந்ததும், அவன் நின்று, அப்புறம்...?
என்றான்.
அப்புறம்?
அவளும் திரும்பி, அவனை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள்.
நான் விடைபெற்றுக் கொள்கிறேன்
அவள் பார்வையைச் சந்தித்து அஜய் தனது புன்னகையால் அவளை நிராயுதபாணியாக்கினான்.
இருங்கள், என்னைக் காப்பாற்றியவரல்லவா நீங்கள்! என்னுடன் உணவருந்திவிட்டுத்தான் போகவேண்டும்
என்றாள் மல்லிகா.
இல்லை! இன்றைக்கு முடியாது. வேறொரு சமயம் பார்க்கலாம்!
அவனுக்கே உரித்தான புன்னகையை உதிர்த்தபடி மீண்டும் ஒரு முறை கைகுலுக்கினான். மறுபடி சந்திக்கலாம்
, என்று சொன்னவன், அவள் பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்தான்.
நல்லது, சந்திக்கலாம்!
அவள் குரலுயர்த்திச் சொன்னாள். அவன் திரும்பிப் பார்த்துத் தலையசைத்தான். கொஞ்ச தூரம் நடந்து சென்று பிரம்மாண்டமான மரங்களின் பின்னால் மறைந்துபோனான். அடுத்த சில கணங்களில் ஒரு பெரிய மின்னல் கீறிப்படர்ந்து மெழுகு வானத்தைச் சிலந்திவலையாக்கியது. பூமியே பிளந்ததுபோல் இடித்தது. அப்புறம் அடைமழை.
2
ஜன்னலில் வந்தமர்ந்த பறவையின் சத்தம் கேட்டு மல்லிகா துயிலெழுந்தாள். முந்தைய இரவின் திடீர் நதிப்பெருக்கும் அஜயுடனான தற்செயலான சந்திப்பும் உடனே நினைவுக்கு வந்தன. ஆனால் அந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அசைபோட அவளுக்கு நேரம் இல்லை. பாகீரதி நதிக்கரையில் அவள் இருந்த தேவப்பிரயாகையிலிருந்து அன்று மாலைக்குள் அவள் கோவிந்த்காட்டை அடைய வேண்டும். அங்கிருந்து ‘ஹேம் குண்ட் சாஹிப்’ என்ற இடத்திற்குக் கால் நடையாகவே ஏறிச்சென்று ‘பூப் பள்ளத்தாக்கை" எட்டவேண்டும். அதற்கருகே ‘கங்காரியா’வில் நடக்கவிருந்த ஒரு யோகா வகுப்பில் பங்கேற்க இருந்தாள் மல்லிகா.
மழை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்தது. ஒவ்வோராண்டும் அந்தப் பருவத்தில் மழை பெய்வது வழக்கமே. ஒவ்வொரு பருவமழைக்குப் பிறகும் இமயப்பள்ளத்தாக்குகள் ஆல்பைன் இனப் பூக்களால் உயிர்த்துக் கொள்வதும் வழக்கமே. இந்த வருடமோ பூப்பள்ளத்தாக்கு சீக்கிரமே விதவிதமான மலர்களைச் சூடிக்கொண்டு வண்ணக் களஞ்சியமாகக் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டதாக அவளுடைய யோகா டீச்சர் ஈஸ்வரி எழுதியிருந்தாள்.
மல்லிகா தாவரவியல் பட்டமேற்படிப்பில் இந்த மலைச்சாரல்களில் இயற்கையாகப் பூக்கும் ஆல்பைன் வகைப் பூக்களைப் பற்றி நிறையப் படித்திருந்தாள். யோகா வகுப்பு அங்கு அவள் வருவதற்கு ஒரு சாக்கு மட்டுமே. சில அபூர்வமான பூக்களை ஆராய்வதற்காக மல்லிகா பூப்பள்ளத்தாக்கைச் சுற்றிப்பார்க்கவேண்டியிருந்தது. அவளது எம் ஃபில் ஆய்வுத் தலைப்பு ‘இன்றும் மண்ணில் விளையும் இராமாயண காலத்துத் தாவரங்கள்’ என்பதாகும். ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவுக்கு அது பயனுள்ள விஷயமா என்று அவளுடைய பிற ஆசிரியர்கள் சந்தேகித்தாலும் அந்தத் தலைப்பைக் கேட்டு அவளுடைய துறைத்தலைவர் மகிழ்ச்சி அடைந்து அவளை ஊக்குவித்தார்.
மல்லிகா தனது ஹோல்டாலைக் கட்டி எடுத்துக் கொண்டு அறையைக் காலிசெய்தாள். விடுதியிலிருந்து வெளியே வந்தபோது, அவள் முன்பதிவு செய்த கார் தயாராகக் காத்திருந்தது. சாமான்களைக் காரின் டிக்கியில் வைப்பதற்கு டிரைவர் உதவினான். அப்போது அவளுடையதைத் தவிர வேறு சாமான்கள் அங்கு இல்லை என்பதை மல்லிகா கவனித்தாள். காரில் அமர்ந்ததும் அவளுடன் கார்-பூல் செய்த மற்ற இருவரையும் அவள் ஆராய்ந்தாள். ஒருவர் வாட்டசாட்டமான வெள்ளைக்காரன், இன்னொருவர் அவரது ஆசியத் தோழி. வெள்ளைக்காரன் முன் இருக்கையில் அமர்ந்திருந்தான். மல்லிகா அப்பெண்ணுடன் பின்னிருக்கையைப் பகிர்ந்துகொண்டாள். டிரைவர் தலையில் குடுமியும் நெற்றியில் நாமமும் வைத்த ஒரு நடுத்தர வயது பிராமணன். பொதுவாக பிராமணர்கள் அத்தொழிலுக்கு வருவது அபூர்வமே. கண்களை மூடி, அமைதியாகப் பிரார்த்தனை செய்தபிறகு காரைக் கிளப்பினான். விடுதியின் வாயிலிலிருந்து கார் சாலைக்கு வந்த போது சைரன் ஒலித்தபடி ஒரு போலீஸ் ஜீப் சாலையின் எதிர்முனையில் இருந்து வேகமாக வருவது மல்லிகாவுக்குக் கேட்டது. அந்தக் கணத்தில் ஆசியப்பெண் சற்று உறைந்துபோவதுபோல் தனக்குத்தோன்றியது பிரமையோ? வண்டி சாலையில் வேகமெடுத்தபோது அவள் திரும்பிப்பார்த்தாள். போலீஸ்ஜீப் விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
என்பெயர் சஷாங்க்
என்று டிரைவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
என்பெயர் ஜெஃப்ரி. என்னை ஜெஃப் என்று அழைக்கலாம்...
என்று வெள்ளையன் கூறினான். இவள் என் மனைவி நாடலி …
, என்றவன், நீங்கள் மேடம்?
என்று கேட்டான்.
என்பெயர் மல்லிகா
என்றாள்.
நீங்கள் புனித யாத்திரை செல்கிறீர்களா?
கேட்டது ஜெஃப்.
ஜெஃப், ‘ஹேம்குண்ட் சாஹிப்’ கோவிலைக் குறிப்பிடுகிறான் என்று மல்லிகாவுக்குப் புரிந்தது.
இல்லை,
என்றாள். நான் ஒரு குறிப்பிட்ட வகைத் தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது சம்பந்தமாகப் போகிறேன்.
அது என்ன வகையானது, மல்லிகா?
ஜெஃப் கேட்டான்.
ஜெஃப் சிரமமின்றித் தனது பெயரை நினைவு கூர்ந்து சரியாக உச்சரித்தது மல்லிகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. "பரவாயில்லையே!’, என்று நினைத்துக்கொண்டாள்.
மல்லிகா பேச வாயைத் திறந்தபோது, சைரன் மீண்டும் ஒலித்தது. ஜெஃப்பும் நாடலியும் பொருள்பொதிந்த பார்வையொன்றைப் பரிமாறிக்கொண்டனர். இப்போது சைரன் ஒலி இன்னும் பக்கமாக வந்து விட்டிருந்தது. ஒரே கணம்தான். ஜெஃப்பின் பெரிய தேகம், இருக்கையிலிருந்து எழுந்து, சஷாங்கின் மீது விழுந்தது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த கதவை எட்டித் திறந்து ஜெஃப், சஷாங்கை காரிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து வெளியே தள்ளினான். சஷாங்க் பல முறை உருண்டு சாலையில் இருந்து பல அடி தூரத்தில் போய் ஒரு பள்ளத்தில் விழுந்தான். நடப்பதை நம்பமுடியாமல் மல்லிகா நடுங்கிப்போனாள். அவள் ஏதும் செய்வதற்குள் பக்கவாட்டில் ஏதோ ஒன்று கடினமாகத் தன் இடுப்பை அழுத்துவதை உணர்ந்தாள். அவளது விலா எலும்புகளை ஒரு ரிவால்வரால் குத்தினாள் நாடலி. பயத்தில் மல்லிகாவின் தொண்டை வறண்டு போயிற்று. மல்லிகாவின் கைப்பையைப் பிடுங்கிய நாடலி, அதற்குள்ளிருந்த செல்பேசியை வெளியே இழுத்தாள். ஜன்னலைத் திறந்து, செல்பேசியை வெளியே வீசி எறிந்தாள். நாடலி ஜன்னலை மூடுவதற்குமுன்பே மல்லிகாவுக்குத் தன் செல்பேசி பாறையில் மோதி நொறுங்கும் சப்தம் கேட்டது. மல்லிகா அதிர்ந்து போனாள். தனக்கு இப்படி நேர்வதை அவளால் நம்ப முடியவில்லை. ஜெஃப் இப்போது டிரைவர் இருக்கைக்கு மாறிவிட்டிருந்தான். பின்னால் ஜீப் இன்னும் பார்வையில் வரவில்லை, ஆனால் சைரன் அருகாமையில் தான் கேட்டது. ஜெஃப் காரை வலமாக வளைத்து, பக்கத்திலிருந்த சந்துக்குள் திருப்பினான். காரின் வேகம் அதிகரித்தபோது சைரன் ஓசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து முற்றிலுமாக நின்று போயிற்று. "ஐயோ, எப்படித் தப்புவது?’
ஒரு சிற்றோடைக்கு அருகில் இருந்த வளைவைத் திறமையாகக் கடந்துகொண்டே மல்லிகா, நீ எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்
என்று ஜெஃப் அதிகாரமாகச்சொன்னபோது, இவனிடம் பாச்சா பலிக்காது என்று மல்லிகாவுக்குப் புரிந்தது.
3
ஹரீஷ் தனது வீட்டைவிட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தான். 2013 ஆம் ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, மழைக்காலத்தை அவன் பார்க்கும் விதமே வேறாகிப் போயிருந்தது. இயற்கையின் சீற்றத்துக்கு அவன் சாட்சியாக இருந்த அன்றைய தினம், அலக்நந்தா நதியின் ஆவேசத்தில் அவன் நடுங்கித்தான் போனான்...
தன்னைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த பலவகைப்பறவைகளுக்கும் அவன் தானியங்களை இறைத்துக்கொண்டிருந்த அதேவேளை, அவன் மனம் அந்தப் பிரளய வெள்ளம் நேர்ந்த நாளின் நிகழ்வுகளில் லயித்தது.
அதுவும் ஒரு பிற்பகலே. தன் கரைகளை உடைத்துக்கொண்டு கார்மேகச்சூழலில் சேற்றுக்கரைசலாய்ச் சுழித்தோடி, எதிர்ப்பட்ட அனைத்தையும் அரக்கனைப்போல் அலக்நந்தா நதி தூக்கிப்போட்டு விழுங்கி கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரம். கேதார்நாத் நகரமே அடித்துச்செல்லப்பட்டதாகச் செய்தி கசிந்தபோது தன் செவிகளை அவனால் நம்பமுடியவில்லை. எல்லாப்பாலங்களும் வெள்ளத்தில் தகர்ந்தன! சுற்றுலாப்பருவம் அப்போது உச்சத்தில் இருந்ததால், வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஊர் திரும்பமுடியாமல் தவித்தனர். நூற்றுக்கணக்கில் மக்கள் காணாமற் போயினர். மழை நிற்பதாயில்லை, ஆகவே மீட்புப்பணிகளையும் செய்யமுடியவில்லை. மின்சாரம்இல்லை. தொலைத்தொடர்பும்இல்லை. பலசாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன.
வெள்ளம் பெருகிய அந்தச்சோதனை நாளில்தான் அவள் அவனைத்தேடி வந்தாள்.
அலக்நந்தாவின் கரையில் அவர்களுக்காக சஷிபாபா கட்டிக்கொடுத்திருந்த வீட்டோரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த ‘ஆல்டர்’ மரம்,
அதன் அடிமண்ணை வெள்ளம் கிளறி அரித்துச் சென்றதால் நிலைகுலைந்து அன்று ஆற்றில் கவிழ்ந்தது. இருப்பினும் வேர்கள் நிலத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தன. மரம் அப்படியே தாக்குப்பிடிக்க வேண்டுமே என அன்று காலை முழுவதும் ஹரீஷ் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான்.
மாலை மூன்று மணியளவில் அது நிகழ்ந்தது. இரண்டு கார்களை அலக்நந்தா வெள்ளம் பம்மிப் புரட்டி அடித்துவந்தன. எங்கோ கரையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை வெள்ளம் இழுத்து வந்திருக்கவேண்டும். ஒருகார் நடு ஆற்றில் உருண்டுபோயிற்று. இன்னொன்று மண்ணரித்துக் கவிழ்ந்திருந்த அவன் வீட்டு ஆல்டர் மரத்தின் கிளையொன்றில் சிக்கிக்கொண்டது. அது ஒரு மாருதி ஆம்னி. நீரின் வேகம் அதை அவன் இருந்த கரைக்கருகே தள்ள மரக்கிளையொன்று முன்கண்ணாடியைக் குத்தித் துளைத்ததில் கார் நெட்டுக்குத்தாகிப் பின்கதவு கீழாகச் சறுக்கித் திறந்துகொண்டது. பெரிய சாக்கு மூட்டையொன்று திறந்த கதவு வழியாகத் தண்ணீரில் விழுந்து நதிக்கரையோரச்சேற்றில் இரண்டடி வரை புதைந்தது. அது என்னவாகஇருக்கும்? ஹரீஷ் வேகமாகத்தண்ணீரில் இறங்கி, ஓரடி வெளியே தெரிந்த மூட்டையின் மேற்புறத்தைப் பிடித்திழுத்தான். ஆஹா! மூட்டை மிகவும் கனமாகவன்றோ இருந்தது! உள்ளே கடினமான பொருள் ஏதோ இருக்கவேண்டும். இரண்டு கைகளாலும் மூட்டையைத் தடவிப்பார்த்தான். பனியில் உறைந்த ஓருயிரைத் தொடுவதுபோல்இருந்தது. தீயைமிதித்தவன் போல் ஹரீஷ் பின்வாங்கினான். அந்தக் குளிரிலும் அட்ரினலின் சுரந்து அவனை வியர்வையில் நனைத்தது. நீரோட்டம் சேற்றில் புதைந்த தன் கால்களை உந்தித்தள்ளுவதையும், மூட்டையும் தன்பக்கமாகச் சாய்வதையும் ஹரீஷ் உணர்ந்தான். ஒருபக்கம் பயமாக இருந்தாலும், மூட்டையிலிருப்பது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் குறையவில்லை.
ஆற்றங்கரைக்கும், சேற்றில் புதைந்த காருக்கும் நடுவில் சுழன்ற நீரின் விசையைப் பயன்படுத்தி ஹரீஷ் மூட்டையைத் தன்னைநோக்கி இழுத்தபோது, காரும் மெல்லமெல்ல நீரில்மூழ்கத்தொடங்கிற்று. ஓரடி அளவுக்கே கார் வெளியே தெரிந்த நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்த ‘ஆல்டர்’ மரத்தின் வேர்கள் அறுபட்டுப் பொங்கியோடிக்கொண்டிருந்த வெள்ளத்திடம் வேறுவழியின்றி மரத்தை ஒப்படைத்தது. மரத்தின் பிடிமானத்தை இழந்த மாருதி வாகனமும் மரத்தோடு புரண்டு கவிழ்ந்தது. கொஞ்ச நேரத்தில் கார், மரம் இரண்டுமே ஆற்றோடு சென்று அவனுடைய பார்வையிலிருந்து மறைந்தன. அன்று சீக்கிரமே இருட்டிவிட்டது.
பொழுது புலர்ந்ததும் ஹரீஷ் வெளியே வந்து பார்த்தான். மூட்டை இன்னும் சேற்றில் புதைந்தே கிடந்தது. மழை நின்று விட்ட போதிலும் நதி அமைதியாகவில்லை. சிறிய அலைகள் அடையாளம் அழிந்துவிட்ட கரைகளைத் துழாவிக்கொண்டிருந்தன, நீரில் புதைந்திருந்த மூட்டையின் மேல்பாகம் நைந்துபோயிருந்தது. சற்று எச்சரிக்கையோடு அருகில் சென்ற ஹரீஷ் மூட்டையை லேசாகத் திறந்தான்.
அவள், அவனை நேர்படப்பார்த்து முறுவலித்தாள். ஒருகணம் அதிர்ச்சியில் அவனுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. உடல் சிலிர்த்து நடுங்கியது. ஓ, யாரிவள்? காலங்காலமாக உறைந்து கிடப்பவளோ! அளவெடுத்தது போல் நுட்பமாக வடிக்கப்பட்டிருந்த அவள் முகத்தின் அழகு எந்தவொரு மானிடமுகத்திலும் காணாவொண்ணாதது. ‘அவள்’ ஒரு புராதனைக் கலைப்பொருளாக இருக்கவேண்டும்! காலம் அவள் அவயங்களை மென்மையாக்கியிருந்தது. எப்போதோ கண்ட கனவு போல் இருந்தாள் அவள். நுட்பமாகச் செய்யப்பட்ட அழகிய மகுடம் அவள் தலையை அலங்கரித்தது. பதிய வாரப்பட்ட கூந்தல், நடுவகிட்டில் ஓடி மேல்நெற்றியில் கண்ணீர்த்துளிபோன்ற பதக்கத்தோடு தன்னை முடித்துக்கொண்ட நெற்றிச்சுட்டி. கண்களில் தொலைதூரத்து நிலவொளி. அளவான நாசி. அப்போது பிறந்த புன்னகைக்குத் தொட்டிலாக ரோஜாமொட்டிதழ்கள்! அவள் கல்லில் வடிக்கப்பட்ட சிலையில்லை. உலோகமாக இருக்குமோ? வெள்ளியாக இருக்கலாம்... நீரில் படிந்திருந்ததால் நிறம் குன்றியிருந்தது போலும். மூட்டையை மேலும் பிரித்தான் ஹரீஷ்.
பின்புறத்தில் இருந்து, வேண்டாம்!
என்று கண்டிப்போடு சொன்னது ஒரு மிருதுவான குரல்,
ஹரீஷ் திடுக்கிட்டுக் குற்றஉணர்வோடு பின்வாங்கினான். ஆரம்பத்திலிருந்தே ஏதோவொன்று,அவளை நெருங்கவிடாமல் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது.
திரும்பிப் பார்த்தான் அவனுக்குப் பின்னால் இரண்டு ஆடவர் நின்று கொண்டிருந்தனர். இருவரும் வேட்டி சட்டை அணிந்து சால்வை போர்த்தியிருந்தனர். அவர்களில் மூத்தவர், காவியுடையில் நடுத்தர உயரமாக இருந்தார். முதல்பார்வையிலேயே அவர்கள் தீங்கு விளைவிக்கக் கூடியவர்களில்லை என்று ஹரிஷுக்குத் தெரிந்தது.
அவர்களுக்கு வணக்கம் கூறும் விதமாகக் கைகளைக்கூப்பி ராம்ராம்
என்றான்.
ராம்ராம்
, என்றார் பெரியவர். மற்றவர் தலையசைத்தார்.
அவர்கள் அவனைத் தாண்டிக்கொண்டு அவளருகில் சென்றார்கள். பெரியவரோடு பார்வைப் பரிமாற்றத்துக்குப்பிறகு இளையவர், தனது சால்வையை எடுத்து பயபக்தியுடன் அவள் தலையை மூடி, முழுவதும் போர்த்தினார். அவர்கள் அவளோடு ஏற்கெனவே பரிச்சயப்பட்டவர்களென்றும், அவளைப் பாதுகாக்க முற்படுகிறார்கள் என்றும் அவனால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. அதற்காகவே அவர்கள் கடினமான நீண்ட மலைப்பாதையில் பயணம் செய்து வந்திருக்கவேண்டும்.
இருவருக்கும் தேநீர் தயாரிக்கட்டுமா?
என்று ஹரீஷ் அவர்களிடம் கேட்டான்
அவர்கள் ஆவலோடு தலையசைத்தார்கள். ஹரீஷ் சிலபடிகள் ஏறித் தன் வீட்டிற்குள் சென்றான். வீடு பலஇடங்களில் ஒழுகிக்கொண்டிருந்தது. மரம் சரிந்து விழுந்த போது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பலமாகச் சேதமடைந்திருக்க வேண்டும். ‘அதைப் பழுதுபார்க்க வேண்டும், அல்லது ஆற்றிலிருந்து இன்னும் உயரத்தில் புதியகுடிசையொன்றைக் கட்டவேண்டும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். மழை தொடங்கியபோதே முன்னெச்சரிக்கையாக ரொட்டிகளை வாங்கி வைத்திருந்தான். வீட்டில் கடைந்தெடுத்த வெண்ணெயும் கொஞ்சம் ஜாமும் கூட மிச்சமிருந்தன. பாத்திரத்தில் தேனீர் கொதித்திருக்க அதில் தோட்டத்து இஞ்சித்துண்டை நசுக்கிப் போட்டு, சில கிராம்புகளையும் சேர்த்தான்... தட்டு நிறைய சாண்ட்விச்களையும் தயாரித்தான். குருநாதர் ‘சஷிபாபா’ காலத்திலிருந்து தன்னோடிருக்கும் மரத்தட்டில் அவற்றை வைத்தான். தேநீர் மணம்வரக் காத்திருந்துப் பின் வடிகட்டி, அந்தக் கறுப்புத்தேநீரை மூன்று உயரமான குவளைகளில் நிரப்பி சர்க்கரையும் சேர்த்து, ஆறிப்போவதற்குள் கொடுத்துவிடவேண்டுமென்றுவிரைவாக வெளியே வந்தான். ‘அதிதி தேவோ பவ - விருந்தாளிகளைக் தேவர் போல் நடத்து’ என்று பாபா அவனுக்கு போதித்திருந்தார்.
சாண்ட்விச்சையும் பெரியகுவளைகளில் தேநீரையும் பார்த்து அந்த விருந்தாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் இப்போது ஒருபாறை மேல் அமர்ந்திருந்தனர். சில அடிதூரத்தில் அவள் இருந்தாள். ஹரீஷ் அவர்களுக்கு இடையே தட்டை வைத்தான். பெரியவர் அதை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றார். அவளை மூடிய சால்வையை மிகமென்மையாக விலக்கினார். அந்த இளைஞனும் அவளை நெருங்கினான். ஆவிபறக்கும் தேநீரையும் வெண்ணெய் தடவிய சாண்ட்விச்சையும் அவளுக்கு நிவேதனம் செய்யும் விதமாக இருவரும் ஒருகணம் அவள்முன் மெய்ம்மறந்துப் பணிவோடு நின்றனர். பிறகு அவர்கள் பாறைக்குத்திரும்பியதும் ஹரீஷைப் பார்த்துப் புன்னகைத்த பெரியவர், அவனிடம் ஒருதேநீர்க்குவளையைக் கொடுத்தார். சீக்கிரமே தட்டு காலியாயிற்று.
இன்னும் பசிக்கிறது என்று பறவையொன்று நட்போடு அவன் கையைக் கொத்தியது. ஹரீஷ் தன் நினைவலைகளில் இருந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்தான்.
4
விரைவில் ஏதாவது செய்து தப்பிக்கவேண்டும் என்பது மல்லிகாவுக்குப் புரிந்தது. ஜெஃப் நன்றாகக் காரோட்டியது மட்டுமில்லாமல் சாலையின் ஒவ்வொரு மேடுபள்ளத்தையும், திருப்பத்தையும் அறிந்து வைத்திருந்தது அவளுக்கு வியப்பைத்தந்தது. சஷாங்க்கே சொன்னாலொழிய, தேவப்பிரயாகை போலீசாருக்கு நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. பள்ளத்தில் விழுந்த சஷாங்க் உயிரோடு இருக்கிறானா என்பதும் தெரியவில்லை. கார் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தால் காவல்துறையினர், கார் சக்கரத்தின் தடயத்தை வைத்து அவர்களைத் தேடி வரக் கூடும். மழை பெய்திருந்ததால் சாலையில் டயரின் பதிவுகள் இருக்கக்கூடும். அவளுடைய எண்ணத்தைத் தெரிந்து கொண்டவன் போல, ஜெஃப் பாதையை விட்டிறங்கி பாறைகளுக்கு இடையில் காரைச்செலுத்தி, நீட்டிக்கொண்டிருந்த பாறை ஒன்றின் கீழ், புதருக்குள் ஓட்டிச்சென்று காரை நிறுத்தினான். இருள் சூழ்ந்தது. ஜெஃப் கார் விளக்கைப் போடுவதற்குள், அதிகம் நகராமல் தனது கைப்பையை மல்லிகா நொடியில் இருக்கைக்கு அடியில் தள்ளினாள். ஜெஃப் காரில் இருந்து இறங்கி மல்லிகாவின் பக்கமிருந்த கதவைத் திறந்தான். அவள் விலாவில் நாடலி ரிவால்வரை அழுத்தினாள்...
வெளியே வா!
என்றான் ஜெஃப். ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைக்காதே!. அந்தப் பெண் மிக மோசமானவள்
என்று நாடலியைச் சுட்டினான்.
‘ஆக, அந்தப்பெண் இவனுடைய மனைவி இல்லை, கூட்டாளி’. ஆனால் என்னிடம் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?’ ஜெஃப் முட்களை விலக்க, காரிலிருந்து இறங்கிப் புதரைவிட்டு வெளியே வந்தாள் மல்லிகா. அவளைப் பின்தொடர்ந்து அவளையொட்டியே நடந்தாள் நாடலி. மல்லிகா ஓரக்கண்ணால் பார்த்து ஜெஃப் கார் விளக்கை அணைக்கத் திரும்பிப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். அவன் அவசரத்தில் இருந்தான். அவன் முன்னால் போக, முதுகில் ரிவால்வர் முனையழுந்த, மல்லிகா பின் தொடர்ந்தாள். அந்தப் பாறையைச் சுற்றி மூவரும் நடந்தார்கள். தாவர அறிவு, அவளைச் சுற்றுமுற்றும் இருந்த மரங்களை கவனிக்கத்தூண்டியது. இமயப் புதர்-செர்ரி நிறையத் தென்பட்டன. அப்போதைய நெருக்கடியிலிருந்து, தனக்குப் பரிச்சயமான பிரதேசத்துக்குள் அவள் மனம் தப்பிச் சென்று தஞ்சமடைந்தது.
அருகில் நதியின் சலசலப்பு கேட்டது, நிலம் சரிவாகி நதிக்கரையைத் தொட அங்கே, கலங்கிய நீரும், வேகமுமாக அலக்நந்தா! கரையில் மரமொன்றில் ஒரு படகு கட்டப்பட்டிருந்தது. ஜெஃப் அதை அவிழ்த்து நீரருகில் தள்ளினான். பின்னர் குனிந்து, தனது இருகைகளிலும் சேற்றையெடுத்து, கைகளிலும், கால்களிலும், முகத்திலும் பூசிக்கொண்டான். நாடலியும் அப்படிச் சேற்றைப் பூசிக்கொள்ளும் வரை மல்லிகாவைத் தன்பக்கம் இழுத்து அவள் கையை இறுகப் பிடித்துக்கொண்டான் ஜெஃப். நாடலி படகில் ஏறி, மல்லிகாவையும் மேலே இழுத்து ஏற்றிக்கொண்டாள். இடையில் போன் பேச ஜெஃப் ஓரிரு நிமிடங்கள் எடுத்துக்கொண்டான். பின்னர் படகைத்தண்ணீருக்குள் இழுத்து, அதில் ஏறி ஒரு பலகையின் மேல் கால்களைப் பரப்பி நின்றுகொண்டான். படகு சிறிதுதூரம் ஆடியபடிச் சென்று நீருக்குள் சறுக்கி அலக்நந்தா நதியில் நீரின் போக்கில் பயணமாயிற்று. நாடலியின் ரிவால்வர் இப்போதும் மல்லிகாவின் இடுப்பை உறுத்திக்கொண்டிருந்தது. படகு விரைந்து கொண்டிருந்தபோது, கரைகளில் மக்கள் அமர்ந்தும் நடந்தவாறும் இருப்பதை மல்லிகா கண்டாள். அந்த மக்களோ இவர்களைக் கவனித்ததாகத் தெரியவில்லை. முதல்நாள் மாலையிலிருந்தே அலக்நந்தாவில் நீர்வரத்து அதிகமாகி இருந்திருக்க வேண்டும். நதியின் ஆழமும் அதிகம் என்று மல்லிகாவுக்குப் புரிந்தது. செய்வதறியாது தோள்கள் துவளப் பெருமூச்செறிந்தாள். உதவியற்ற தன் நிலமையை எண்ணிச் சோர்வெய்தினாள்.
5
சஷாங்க் முனகியபடி உருண்டான். உடம்பு முழுக்க வலி. தன் படுக்கையில் இருப்பதாக நினைத்துக் கண்திறந்து பார்த்தபோது, மேலே வானம் புலப்படுவது அவனுக்குப் புரியவில்லை. கைகளால் சுற்றிலும் தடவிப்பார்த்தான். புல்லும் சேறும் பாறையும்! சற்று நேரத்தில் அவனுக்குப் பெருமளவு ஞாபகம் வந்தது. தான் காரில் இருந்து தள்ளப்பட்டது நினைவுக்கு வந்தது. ஓ! கார் இப்போது எங்கே? அவர்கள் தப்பி ஓடியிருக்கவேண்டும்! சஷாங்க் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான். ஊசிகுத்துவது போல் உடம்பெங்கும் வலி. தனது காரை எப்படியாவது திரும்பப் பெற்றாகவேண்டுமே! தான் விழுந்து கிடந்த பள்ளத்தின் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டு ஒருவாறு எழுந்துநின்றான். அவன் உடை கறைபடிந்து அலங்கோலமாக இருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகள்! தன்னையறியாமல் குட்டிக்கரணமடித்தும் உருண்டும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உதவியது தான் கற்றிருந்த பாரம்பரிய உடற்பயிற்சி நடனமான லாங்க்வீர் நிருத்யம் என்பது அவனுக்குத் தெரியும். மனஉறுதியும், உடல்உறுதியும், சமூகப்பிரக்ஞையும் கொண்டவராக மனிதரை மேம்படுத்துவதற்கான இந்து அமைப்பொன்றிலும் அவன் உறுப்பினன். நல்லவேளை, கற்பாறை மீதோ வேறு கடினமான தரைமீதோ மோதாமல் தப்பியிருந்தான்!
சுற்றுமுற்றும் பார்த்தபோது, சேற்றில் ஒரு நீண்டமூங்கில் புதைந்திருக்கக் கண்டான். அதை முட்டுக்கொடுத்துத் தன் கனத்தால் உந்திப் ‘போல்வால்ட்’ (Pole Vault) செய்து வெளியே குதித்தான். வலித்தது! ‘உன்னால் தாங்கிக்கொள்ள முடியும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். மீண்டும் பள்ளத்துள் சறுக்கிவிடாமல் இருக்க ஒரு புதரைப் பிடித்துக்கொண்டான். மழைபெய்யத் தொடங்கியது. பருவமழையின் பெருந்துளிகள் அருவியாய் விழுந்து அவன் மேல் படிந்திருந்த சகதியையும் இரத்தத்தையும் கழுவிவிட்டன. ‘மழையில் நில்! அது உன் மூளைக்கு நல்லது!’ என்று அவன் தந்தை சொல்வதுண்டு.
எண்ணம் பந்தய வேகத்தில் ஓடிற்று. போலீசில் புகார் செய்யவேண்டும். ஆனால், அதற்குமுன் தன் காரைக் கண்டுபிடிக்க வேண்டும். தன் கையே தனகுதவி! அதிகாரிகளிடம் சென்றால் காலதாமதமாகும். தான் காரிலிருந்து பள்ளத்தில் விழுவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைக் கோவையாக நினைவுக்குக் கொண்டுவர சஷாங்க் முயன்றான்; முடியவில்லை. காரில் ஏற்றிக்கொண்ட மூவருடைய முகங்கள் நினைவிலிருந்தன... மூவரும் ஒரே குழுவாக இருக்கலாம். அவர்கள் தமக்குள் அறிமுகம் செய்துகொண்டார்களா என்பதை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை.
6
மழைத்துளிகள் பெரிதாக விழத் தொடங்கியதும், ஹரிஷ் இறைத்த தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த பறவைகள், இறகுகளைப் படபடத்தபடி பறந்து போயின. ஹரிஷ் அண்ணாந்து பார்த்தான். மழை நன்றாகப் பெய்யப்போகிறது. வேகமாக நடந்து, தனது ஈரமில்லாத, கதகதப்பான நான்கு அறைகள் கொண்ட வீட்டிற்குத் திரும்பினான்.
2013 வெள்ளத்திற்குப் பிறகு, பல விஷயங்கள் நடந்துவிட்டன. வெள்ளத்தில் அடிக்கப்பட்டு அந்தச் சிலை கரைக்கு வந்த சமயம், கம்பட்டில் இருந்த அவனது வீட்டிற்கு அந்த இருவர் முதன்முறையாக வந்தனர். அதன் பின்னர் அடிக்கடி வரலாயினர்.
ஹரீஷ் தனக்கு எல்லாமுமாகிவிட்ட சஷி பாபாவை அன்போடு நினைத்துக்கொண்டான். சஷி பாபா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஹரிஷுக்குப் பன்னிரண்டு வயதும், அவன் தங்கை சரஸ்வதிக்கு மூன்று வயதும் இருந்தபோது, பாபா அவர்களைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டார். அவர்கள் உத்தரப்பிரதேசத்தின் தொலைதூர நகரத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் இருவரும் விபத்தில் இறந்துவிடவும், ஹரிஷின் அத்தை அவர்களை ரிஷிகேஷுக்கு அழைத்து வந்து எப்படியாவது பிழைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டுச் சென்றார். தங்களைப் போன்றே திக்கற்றுத் திரிந்துகொண்டிருந்த வீதிச்சிறுவர்களுடன் ஹரிஷும் சரஸ்வதியும் நண்பர்களாக ஒட்டிக்கொண்டனர். மூன்று முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட மொத்தம்18 பேர்கள். அவர்களுக்கு உணவு கிடைப்பது சுலபமாயில்லை.
கிடைத்த கொஞ்சம் உணவுக்காகத் தங்களுக்குள் அவர்கள் சண்டையிட நேர்ந்ததும் உண்டு. பசியின் கொடுமையால் எரியும் சடலங்களின் மாமிசத்தை உண்ணும் பழக்கமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இரகசியமாகவே செய்தாலும், அது அவசியமான விஷயமாகிவிட்டது. அதைபற்றித் தெரிந்தவர்களும் தடுக்கமுடியவில்லை. காரணம், அந்த அளவுக்கு அவர்களாலும் உணவை இலவசமாக வழங்கமுடியவில்லை.
அந்தச் சூழ்நிலையில்தான் அவர்களை ஓர் இரவில் பார்த்தார் சஷி பாபா. கண்ணீர் பீறிட்டு அவர் கன்னங்களில் வழிந்தது. பொழுதுவிடிந்ததும் அவர்களுக்கு ‘கிச்சடி’ கொண்டு வந்து கொடுத்தார். அன்றிலிருந்து அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினார். கம்பாட்டில், அலக்நந்தாவின் கரையின் மேடான பகுதியில் வசித்துவந்த ஒரு ‘சாது’வை அவர் அறிந்திருந்தார். எல்லாக் கேள்விகளுக்கும் எது ஒரே பதிலாக இருக்குமோ ‘அதை’க் கண்டுபிடிக்கும் முயற்சியில் நீண்ட காலத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறித் துறவியானவர் அவர். கொஞ்சம் நிலம் வாங்கிக் கொண்டு தனக்கென ஒரு எளிய வீட்டைக் கட்டியிருந்தார். அதில் சிறு பகுதியை வலியுறுத்திப் பெற்றுக்கொண்டார் பாபா. அந்தச் சிறுவர்கள் மற்றும் சில நாடோடிப் பிச்சைக்காரர்களின் உதவியோடு அவர்களுக்காக ஒரு குடிசை வீட்டை உருவாக்கினார்.சமைக்கவும், காய்கறிகளை விளைவிக்கவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
கூட்டமாகப் பாடித் தொழும் வழக்கத்தையும் போதித்தார்.
கடவுளின் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த ஒரே வடிவத்திலிருந்து விலகாமல் இருங்கள்
என்று அவர் அறிவுறுத்துவார். நாள் முழுதும் வேலைசெய்த களைப்பில் அவர்கள் இருந்தால், சில மந்திர தந்திரங்களைச்செய்து அவர்களை மகிழ்விப்பார்! தோட்டத்துப் பூசணிகளைச் சமையலறையில் வரவழைத்துக் காட்டுவார்! சிறுவர்கள் வீட்டுப்பாடப் புத்தகங்களைப் பள்ளியிலிருந்து கொண்டு வர மறந்திருந்தால், பாபாவிடம் சொன்னால்போதும், அவை அவர்களின் மேசைகளில் இருக்கும்! அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்போனால் சீக்கிரமே குணமாகிவிடும். ஆனால் உடனடியாக பாபாவின் உடல்நிலை சரியில்லாமல் போகும். பாபா அவர்களுடன் ஒரு மாதம் தங்குவார். பிறகு வெளியே போய்விடுவார். வரும்போது, துணிமணிகள், அன்றாடம் தேவைப்படும் மளிகைப் பொருட்கள் மற்றும் கொஞ்சம் ரொக்கமும் கொண்டுவந்திருப்பார். சிறுவர்களில் சிலரை பாபா உள்ளூர்ப் பள்ளியில் சேர்த்தார். கொஞ்சம் பெரியவர்களைத் தொழிற்பயிற்சியில் ஈடுபடுத்தி தச்சர், கருமார் மற்றும் குழாய் பழுதுபார்ப்பவராக உருவாக்கினார். பதினெட்டு பேரில் பதின்மூன்று பேர் இப்படிப் பயிற்சி பெற்றனர். மற்றவர்கள் தங்களுக்குப் பழக்கமான செயல்களில் தொடர்ந்தனர்.
பதின்மூன்று பேரில், ஹரிஷ் மற்றும் அல்லா ரக்கா இருவரும்தான் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தவர்கள். பாபாவைச் சந்தித்தபோது ஹரிஷுக்கு வயது பன்னிரண்டு. இப்போது முப்பதைத் தாண்டி விட்டது. அவர்களுக்கு நிலம் கொடுத்த ‘சாது’, அதை பாபாவிடமே விட்டுவிட்டு மறைந்துபோனார். அஸ்பெஸ்டாஸ் கூரையைக் கொண்டிருந்த அவரது சிறிய வீட்டிற்குச் சிறுவர்களாகச் சென்றவர்கள் இப்போது பெரியவர்களாகி இருந்தனர். அவர்களில் இருவர் கல்லூரி மாணவர்களுமாவர்.
சில சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தம்பதிகளுக்குத் தத்து கொடுக்கப்பட்டனர். பிரிந்து செல்லும்போது அச்சிறுமிகள் எப்படி அழுதார்கள் என்பது ஹரிஷ் நினைவில் இன்னும் அழியாமல் இருந்தது. பாபாவும்