Anbulla Amma…
()
About this ebook
இந்நூல் படிப்பதற்கு மட்டுமன்று. தாய் என்பவள் என்றும், யாராலும் போற்றித் துதிக்கப்பட வேண்டிய தெய்வம். தாயன்பு தவறாது போற்றப்பட வேண்டும் என்ற நல்லுணர்வினை அனைவரது நெஞ்சிலும், ஓங்கி ஒலிக்க செய்யவந்த ஓர் அன்பு முரசு என்றால் அது மிகை அல்ல. பெற்ற தாயின் பெருமைகளைக் கூறும் வகையில் எல்லா வெற்றியாளர்களும் தாய்ப்பாசத்தின் பல்வேறு பரிணாமங்களை, தங்களின் மன நெகிழ்வுகளை இந்நூலில் காண வாசிப்போம் வாருங்கள்.
Read more from Kalaimamani Manavai Pon. Manickam
Ainthaam Vedham Rating: 0 out of 5 stars0 ratingsMugavari Thantha Paadal Rating: 0 out of 5 stars0 ratingsVaariyaarai Kavarnthavargal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsEttavathu Vallal M.G.R. Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anbulla Amma…
Related ebooks
Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Paavai Vilakkin Olichitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsதிருமகள் தேடி வந்தாள் Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Devakiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsMudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsYaar Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ilamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Kalyana valaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsIvvidam Yaavarum Nalam Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kanavugalodu Naan... Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Ammavin Petti Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Kanna Mango Thinna Asaiya Rating: 0 out of 5 stars0 ratingsKarpu... Karpariya Aaval! Rating: 5 out of 5 stars5/5Saathanai Pengal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Anbulla Amma…
0 ratings0 reviews
Book preview
Anbulla Amma… - Kalaimamani Manavai Pon. manickam
https://www.pustaka.co.in
அன்புள்ள அம்மா...
Anbulla Amma…
Author:
கலைமாமணி மணவை பொன். மாணிக்கம்
Kalaimamani Manavai Pon. Manickam
For more books
https://www.pustaka.co.in/home/author/kalaimamani-manavai-pon-manickam
பொருளடக்கம்
ஆசானின் அன்னையும் ஆசியும்...
வாழ்த்துரை
லட்சுமி மகனா நீ
அன்புரை...
ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்
வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்.
டாக்டர். கமலா செல்வராஜ்
எழுத்தாளர் பாலகுமாரன்
ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்
லேனா தமிழ்வாணன்
ஜி. திலகவதி I.P.S.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி
டி.எஸ். ரவீந்திரதாஸ்
டாக்டர். விஜயபாஸ்கர் M.L.A
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
எம். ரவி I.P.S.
வின் டிவி. நிறுவனர் தேவநாதன்
ஜெர்ரி
இயக்குநர் இமயம் பாரதிராஜா
க. மலைச்சாமி ஐ.ஏ.எஸ்
தோழர் நல்லகண்ணு
டாக்டர். ஜி. பழனி பெரியசாமி
சொல்வேந்தர் சுகி சிவம்
இயக்குநர் ஷங்கர்
கலைப்புலி எஸ். தாணு
தோழர் தா. பாண்டியன்
இயக்குநர் இராம. நாராயணன்
காசி விஸ்வநாதன் I.A.S
கல்வியாளர் இங்கர்சால்
ஸ்ரீபால் ஐ.பி.எஸ்
ரபி பெர்னாட்
தயாரிப்பாளர் ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
நெல்லை கண்ணன்
டைரக்டர் பி. வாசு
வஸந்தபவன் ரவி
மதர்லேண்ட் கோவைதம்பி
நீயா நானா கோபிநாத்
அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா
காந்தி கண்ணதாசன்
த. ஸ்டாலின் குணசேகரன்
நக்கீரன் கோபால்
தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம்
வழக்கறிஞர் அருள்மொழி
நடிகர் சத்யராஜ்
தமிழருவி மணியன்
இயக்குனர் பேரரசு
அழகன் தமிழ்மணி
செந்தில் கணேஷ்
இயக்குனர் ரா. பார்த்திபன்
அகட விகடம் பாஸ்கர்ராஜ்
பூஷன்ஜி பழனியப்பன்
லக்ஷ்மன் ஸ்ருதி
ஜேடி (ஜோசப் டி. சாமி)
இயக்குனர் லிங்குசாமி
அவ்வை நடராசன்
டைரக்டர் விக்ரமன்
டாக்டர் C. பழனிவேலு
S. சூர்யபிரகாஷ்
உ. சகாயம் I.A.S
நடிகர் இளவரசு
வெரைட்டி வர்கீஸ்
பாரதரத்னா, டாக்டர். ரஜினி
இயக்குநர் மனோஜ்குமார்
கலைமாமணி விக்ரமன்
பத்மஸ்ரீ விவேக்
குமணன்
நடிகர் செந்தில்
இயக்குனர் சீமான்
S. பாலசுப்ரமணியம்(S.B)
Lion எஸ். சுரேஷ்குமார்
டாக்டர். என். சேதுராமன்
அடையார் ஆனந்தபவன்
MA. ஸ்காட் தங்கவேல்,M.A.JMC.
P.L.A. ஜெகநாத் மிஸ்ரா
புனிதா கணேசன்
ஆர். பாண்டியராஜன்
ஜே.சி.டி. பிரபாகர் M.L.A
விக்கிரமராஜா
ஆசானின் அன்னையும் ஆசியும்...
1-minஎன்னையும், என் அண்ணன்மார் இருவரையும் பிள்ளைகளாய் பெறும் முன்னரே, அம்மா எனும் ஸ்தானத்திலிருந்த பிறவியல்லவா நீ!
ஆம்! உன் குடும்பத்தில் நீதான் மூத்தவளாகப் பிறந்தாய். உனக்குப் பின்னால் பிறந்த இருவரும் ஆண் மக்கள் என்றாலும், உன்னையே தலைமகனாய் பாவித்து, உன் குடும்ப பாரத்தை பாசத்தோடு நீ தோள் சுமந்தாயே!
படிக்கும் பிராயத்திலேயே உனக்கு விவாகம் முடிக்கப்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த குடும்பம் வறட்சியால் கிராமத்திலிருந்து கோவைக்கு குடிபெயர்ந்து, உனக்கு படித்துக் குடும்பத்தை கரைசேர்க்கும் வைராக்கியம். ஆனால், பச்சிளம் குழந்தை கையில்; பள்ளி மதிய உணவின் இடைவேளையில் பலரது பரிகாசத்துக்கும் இடையே வீட்டிற்கு ஓடோடி வந்து, உன் குழந்தைக்கு பாலூட்டி பின் சென்று படித்தாய். டபுள் ப்ரமோஷன் அளவு மார்க் பெற்றதால் பள்ளிக்கு வருகை தந்த ஒரு கிறிஸ்துவ வெள்ளைக்கார டாக்டர் பெண்மணியிடம் பாராட்டும், பரிசும் பெற்றதோடு, அமராவதி, என்ன உதவி தேவைப்பட்டாலும் கேள்
என ஊக்கப்படுத்தப்பட்டாய். உன் குடும்ப வறுமையும், கணவனின் இடையூறும் படிப்பை நீ தொடர முடியாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்த, நம் திரைப்படங்களில் வருவதுபோல், நீ உன் சகோதரரின் வேட்டி சட்டையுடன் தலைப்பாகை அணிந்து ஈரோட்டிற்கு ஓடினாய். காரணம், கோவையில் உனக்கு பரிசளித்து உதவி செய்வதாய் ஊக்குவித்த வெள்ளைக்கார டாக்டர் பெண்மணி, ஈரோடு கோஷாஸ்பத்திரியில் பொறுப்பான பணியில் இருந்தார்கள். அவர்கள் கருணையால் நீ அதுவரை படித்த படிப்பிற்கு மருத்துவ மகப்பேறு உதவியாளர் ட்ரெய்னிங் கோர்ஸ்க்கு கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டு, பின் அவர்களால் அதுவே உனக்கு தொழிலானது. ஈரோடு மாவட்டம் கோபியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அரசாங்க மகப்பேறு மருத்துவ உதவியாளராக நியமிக்கப்பட்டாய். அந்நாளில் அது குறைந்தபட்சம் ஏழெட்டு கிராமங்களுக்கு ஒரு டாக்டர் அளவுக்கு மதிப்புள்ளதாய் இருந்தது. தினசரி மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் ஆட்கள் வந்து போவார்கள் அல்லது வந்து கூட்டிப்போன வண்ணமிருப்பார்கள். கைராசிக்காரியென பேர் எடுத்ததால் புண்ணியவதி நல்லாயிருங்க
என ஊரார் கைநிறைய அள்ளிக் கொடுத்தார்கள்.
கோவையில் உன் தம்பிமார்கள் வெளியார் கம்பெனிகளில் வார, மாத சம்பளத்திற்கு சிரமத்துடன் வேலைபார்த்து வந்த நிலையில் நீ, சுய தொழில் தொடங்க இடம், மெஷினுக்கு முதலீடு செய்ய, சொந்தக் கம்பெனி உருவாகி குடும்ப நிலை படிப்படியாக உயரத்தொடங்கியது.
உன் திருமண வாழ்வு அவ்வப்போது அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும், உன் தம்பிமார்கள் இருவரது திருமணத்திற்காகவும் நீ அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாய். அவர்களது மனைவிகள்மீது எவ்வளவு அன்பு காட்டினாய். அவர்களுக்கு ஒவ்வொரு குழந்தை பிறந்தபோதும், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தபோது, உனக்கு பெண் குழந்தைகள் இல்லாத குறை தீர, அவர்களை வெள்ளாங்கோவிலுக்கு அழைத்துச் சென்று, கோபி நகைக்கடையில் விதவிதமாய் நகைகள் செய்து, ஆசை தீர அணிவித்து அழகு பார்த்து, அவர்கள் பெற்ற அன்னையைவிட நீ பூரித்து ரசிப்பாயே! இன்றளவும் என் மனதில் அது பெருமையான பசுமையான நினைவு!
கோவையில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமாக்கள் ‘பாரதிபுரம்’ எனும் அம்மன் குளத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்தபோது, நாங்கள் அவர்களுடன் இருந்து படித்துக் கொண்டிருந்த காலம். நீ மட்டும் வெள்ளாங்கோவிலில் வேலையில் இருந்தாய். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாரதிபுரத்தில் எங்கள் வீட்டின்முன் திடீரென வீதி ஜனம் கூட்டம்கூடி நிற்கும். பாக்யாவோட அம்மா லாரி நிறைய கோபியிலிருந்து அரிசி அனுப்பிருக்கு
என வேடிக்கை பார்க்கும். ஆம்! நீ வயல்வெளியிலிருந்து சுடச்சுட லாரியில் அனுப்பிய உயர் ரக நெல் மூட்டைகளைப் பற்றி பாரதிபுர மக்கள் ஆச்சர்யமாக அன்பாக பெருமையாகப் பேசுவார்கள். அது எதையும் நீ கணக்கில் வைத்துக் கொண்டதில்லை. கோவைக்கு எங்களைப் பார்க்க ஒருநாள் நீ வந்திருந்தாய். மாலை பள்ளியிலிருந்து திரும்பிய நான் வீட்டினுள் நுழைந்தபோது தாத்தா, அத்தைகள், மாமன்மார்கள் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்க, பாட்டி உன்னை ஏதோ திட்டிக்கொண்டிருந்தது.
போடி பைத்தியம்! யாரோ வெள்ளாங்கோவில் பள்ளிகூடத்துக்கு வந்தாங்களாம். மீட்டிங் போட்டாங்களாம். டாக்டரம்மா வராங்கன்னு உன்னையும் கூப்புட்டாங்களாம். சீனாக்காரன்கூட யுத்தம் வந்துருச்சு, நாட்டுக்கு கஷ்டம் ஏதோ கைல இருக்கறதை நிதியாக குடுங்கன்னு கேட்டா, வீட்டுக்கு போய் ஐம்பதோ, நூறோ இல்லே அதிகம் போனா ஐநூறோ எடுத்துட்டு வந்து குடுப்பியா. அதை விட்டுட்டு அங்கேயே கையிலிருந்த தங்க வளையலுங்க, மோதிரம் எல்லாத்தையும் துணியில் மூட்டையா கட்டியா குடுப்பாங்க. பைத்தியம் பைத்தியம்
என்று திட்ட மீண்டும் எல்லோரும் உன்னைப் பார்த்து சத்தமாக சிரித்தார்கள். ஆனால் எனக்கு? வெள்ளாங்கோவிலில் அத்தனை மக்கள் மத்தியில், உடனுக்குடன் தாய்நாட்டுக்காக என் தாய், உணர்ச்சி பொங்க நகைகளை கழற்றித் தந்தது எத்தனை பேரை ஊக்குவித்திருக்கும்!
என்ற பூரிப்பையே தந்தது.
வெள்ளாங்கோவிலில் ஒருமுறை விடுமுறை நாளில் உன்னுடன் இருந்தேன். அன்று திடீரென ஒரு காரில், கோவையிலிருந்து சின்ன மாமா, அவருடைய மனைவியின் அண்ணன்மார்களை (இப்போதைய அன்னபூர்ணா, கௌரிசங்கர் அதிபர்கள்) கூட அழைத்து வந்திருந்தார். ‘என்ன திடீர்னு இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க’ என நீ விசாரித்தபோது, செய்த தொழிலில் லாரி விபத்துக்குள்ளாகி பலத்த நஷ்டம். புதுத்தொழில் தொடங்க பணப் பற்றாக்குறை. உன்னைத்தான் நம்பி வந்திருக்கோம் அம்முலு
என்று உருக்கமாக வேண்டினர். ‘ஒரு நிமிஷம்’ என்று கூறி, வீட்டின் உன் அறைக்குச் சென்று சற்று பொறுத்து வந்தாய்.
இதோ! இப்போதைக்கு என்னிடம் பணமாக உள்ளது இவ்வளவுதான், மீதி எல்லாம் எனது நகைகள். கிராமத்தில் இதைப் போட்டுக்கிட்டு நான் எங்கே போகப் போகிறேன். உங்கள் குடும்பம் பெரியது. இதைப் பணமாக்கி நல்லப்படியாகத் தொழில் தொடங்கி கஷ்டத்திலிருந்து கரைசேருங்கள்
என்றாய். அவர்களது கண்களில் அப்படி ஒரு நன்றி பனித்தது.
உன் உடன்பிறந்த சகோதரர்களுக்காக மட்டுமே உன் இதயத்தில் ஈரம் சுரக்கவில்லை. நம்பி வந்த நலிந்தவர் எவர்க்கும் பாகுபாடின்றி கசிந்தது. ஆனால், காலப்போக்கில் உன் சகோதரர்களுக்கு அவரவர் குடும்பத்தில் குழந்தைகள் பெரிதாக, அவரவர் உறவினர் உள்ளே வர, உங்களிடையே விரிசல் வந்து பாகப்பிரிவினை எனும் கொடூரம் அரங்கேறியது. அதுவரை எங்களைப் பிரிந்து நீ வேலை பார்த்து வந்தாய். அப்போதுதான் இத்தனை நாள் நான் வேலை பார்த்தது போதும். இனியாவது என் குழந்தைகளோடு வாழ்கிறேன்
என்று வந்த உன்னிடம், ‘கம்பெனியின் முதலீடு உன்னுடையதாக இருக்கலாம். ஆனால், உழைத்து கஷ்டப்பட்டவர்கள் நாங்கள்தானே?’ என ரொக்கப் பணத்துடன் உடன் பிறந்தவர்கள் விலக, கடனில் மூழ்கியிருந்த வெறும் கம்பெனியுடன் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வின் அர்த்தம் புரியாமல் பொங்கும் குமுறலை அடக்கித் தவித்து நின்றாயே அம்மா!
நீ வாங்கிய சொந்தவீடும் பாகப் பிரிவினையில் உன் சகோதரருக்குப் போய்விட, வாடகை வீட்டிற்கு அனுப்பப்பட்டாய். வெள்ளாங்கோவிலில் முதல்முதலாய் கார் என்ற ஒன்று நின்றது உன் வீட்டில்தான். இன்று கோவையில் நீ பஸ் ஸ்டாப்பில் நின்றாய். பின் நடந்தும் சென்றாய்.
கடன்காரர்கள் வந்தபோது கால அவகாசம் கேட்டாய். சிலர் ஏற்றுக்கொண்டனர். சிலர் ஏடாகூடமாக வார்த்தைகளை விட்டனர். பக்கத்தில் நின்று இதைப் பார்க்க முடியாமல் நீ பெற்ற மகன்கள் மூவரும் அழுதோம். அண்ணன்களாவது கம்பெனியை சரி செய்ய அவரவர்க்கு தெரிந்த வேலைகளை செய்தனர். படிப்பில்லாத நான் உனக்கு ஆறுதலைத்தான் தர முடிந்தது. பழையபடி உன்னை அரியணை ஏற்றிப் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியானது?
இடையே ஒருநாள் நீ என்னிடம், டேய் நீ நல்லா வருவே! வரும்போது உன் அண்ணன்களை கைவிட்றாதே
என்றாய். எனக்கு பேரதிர்ச்சி! அண்ணன்களில் ஒருவர் தொழில் தெரிந்தவர். இன்னொருவர் பட்டதாரி. பியூசியிலேயே பெயிலான நான் எப்படி அவர்களை? விழித்தேன்!
ஆனால், நீ இல்லாடா என் மனசுக்கு தோணுது. நீ வந்து என் ஸ்தானத்துல அவங்களைப் பார்க்கணும்!’ என்றாய். குழம்பித் தவித்தேன். இதன்பின் உன் கஷ்டத்தைக் காண சகிக்கமுடியாது, சென்னைக்கு சினிமாவை நோக்கிப் படையெடுத்தேன்.
பல இன்னல்களைத் தாண்டி நான் சினிமாவில் உதவியாளன் ஆகிய நிலையிலும், நீ வாடகை வீட்டில்தான் இருந்தாய். உதவி இயக்குனரின் சம்பளத்தில் உனக்கு வெறும் புடவைதான் என்னால் வாங்கித் தர முடிந்தது. நான் சினிமாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்த வேளை, பிரவீணாவுடன் பழகி அவளது போட்டா சூட்கேசில் இருப்பதைப் பார்த்து ஒரு முறை, ‘யார் இந்த பெண்?’ என விசாரித்தாய். தெரிந்த தெலுங்குப் பெண் என்றேன். அந்த நேரத்தில் என் கவனமெல்லாம் சினிமாவின்மீது மட்டுமே இருந்தது. பிரவீணாவைப் பார்த்து வருடங்களாகி, சென்னையில் அவள் எங்கு இருக்கிறாய் என்பதே தெரியாத ஒரு நிலையிலிருந்தேன்.
‘கிழக்கே போகும் ரயில்’ படம் ரிலீஸ் ஆனதும் கோவை வந்தேன். அதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நான் தலைகாட்டியதைப் பார்த்துவிட்டு, ‘நீ ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது?’ என்றாய். ‘காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. உன் கண்ணுக்கு நான் அழகாய் தெரியலாம். ஹீரோ ஆக ஒரு தனி லட்சணம் வேண்டும்’ என்றேன். நீ சிரித்துக்கொண்டே, நீ கண்டிப்பாக ஹீரோ ஆவாய். அதுவும் கூடிய சீக்கிரம் உங்க டைரக்டரே உன்னை ஹீரோவாகப் போட்டு படம் எடுப்பார். இது நிச்சயம் நடக்கும். என் வாக்கு பொய்யாகாது
என்றாய். வெளிப்படையாகவே சத்தம் போட்டு நான் சிரித்துவிட்டேன். நீ அதோடு நில்லாமல், ‘அந்தத் தெலுங்குப் பெண்ணை மறுபடியும் பார்த்தாயா?’ என்றாய். ‘இல்லையம்மா’ என் வேலையே எனக்கு சரியாக இருக்கிறது. ‘அவள் எங்கிருக்கிறாள் என்றே தெரியாது’ என்றேன். திடீரென நீ, உனக்குப் பிடித்திருந்தால் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள்
என்று கூறியதும் நான் அதிர்ச்சிக்குள்ளாகி ஒரு நிமிடம் மௌனமாக உன்னையே பார்த்தேன். பின், இன்னும் சின்ன அண்ணனுக்கே கல்யாணம் ஆகவில்லை. ஏன் திடீரென இப்படிக் கூறுகிறாய்
என்றேன். ‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கு. நீ அவளையே கல்யாணம் செய். நல்லதே நடக்கும்’ என்றாய். நான் குழப்பத்துடன் சென்னை புறப்பட்டேன்.
அதன் பின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம் துவங்கி, அது முடிந்து நான் எனது டைரக்டரிடமிருந்து தனியே வந்து ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ முதல் படம் டைரக்ஷன் செய்ய வேலையைத் துவங்கினேன்.
எங்கள் டைரக்டரிடமிருந்து திடீரென போன் கால். என் சொந்தப் படம் ‘புதிய வார்ப்புகள்’ கதையில் பின்பாதி க்ளைமாக்ஸ் திருப்தியாக வரவில்லை. கொஞ்சம் கதை விவாதத்திற்கு வா என்றார். நான் போய் சொன்ன யோசனைகள் அவருக்கு பிடித்துப் போக, ‘நீயே வசனமும் எழுதித் தந்துவிட்டுப் போ’ என்றார். பாதி எழுதி முடித்த நிலையில். ‘ராஜன்! எனக்கு ஹீரோ சரியா அமையல, நீயே ஹீரோ ரோல் பண்ணிடு’ என்றதும், சார்! நான் டைரக்ஷன் செய்ய வேலைகள் தொடங்கிவிட்டேன்
என்று கூறியும், யோவ்! ஒரே ஷெட்யூல், 4வது நாள்ல முடிஞ்சிரும். அப்புறம் வந்து நீ டைரக்ஷன் பண்ணு
என்று பிடிவாதமாக ரயில் ஏற்றினார்.
முதல் இரண்டு நாட்கள் மதுரையில் சூட்டிங் முடிந்து, மூன்றாம் நாள் ரஷ் பார்த்த பின் டைரக்டர் ஓகே. சூட்டிங் தொடரலாம்
என்றதும், அன்றிரவு கண்ணீர் மல்க அம்மா! நீ கூறியபடியே எங்க டைரக்டரே என்னை ஹீரோவா வச்சு படம் எடுக்கிறார். நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்
என உனக்கு முதல் கடிதம் எழுதினேன். படம் முடிந்து இன்னும் 15 நாட்களில் நீ பார்த்து மகிழப் போகிறாய் என்று கனவு கண்டு கொண்டிருந்த வேளை, கடைசியாக என்னைப் பார்க்கக்கூடு இயலாத மயக்க நிலையிலேயே நித்திரை யாத்திரையில் பணித்துவிட்டாய்! வாடகை வீட்டோடே?
குடும்பத்தார் எல்லோரையும் சந்தோஷப்படுத்திய நீ, இறுதிவரை ஒரு சந்தோஷமான சூழ்நிலைக்கு வராமலே மறைந்த பிரிவை, நீ பெற்ற பிள்ளைகள் எங்கள் மூவரையும்விட, ஜீரணிக்க முடியாத ஒரு ஆத்மா நம் குடும்பத்தில் இருந்தது. அது உன்னைப் பெற்ற அப்பா, எங்கள் தாத்தா.
குடும்பத்துக்காக நீ எப்படியெல்லாம் ஓடாய் உழைத்தவள் என்பதைப் பார்த்து பார்த்து உன்மேல் உயிரையே வைத்திருந்தவர். பாகப் பிரிவினையில் நீயும் உனது சகோதரர்களும் பிரிந்தவேளை, வசதியான அவரது மகன்கள் தங்களுடன் அழைத்தபோது, ‘இல்லை. நான் என் பொண்ணுடன்தான் இருப்பேன்’ என, உன் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டவர். நீ இறந்தபோது அவரிடம் தகவலை சொன்னால், எங்கே இன்னொரு சாவு விழுந்துவிடுமோ என, அன்று அப்படி ஒரு அச்சமான சூழல் இருந்தது. எப்படியோ சமாளித்தார்கள்.
ஆனால், விரைவிலேயே ஒருநாள் நள்ளிரவு தடாலென ஒரு சத்தம். அனைவரும் கண்விழித்துப் பார்த்தால், தாத்தா தரையில். கழுத்தில், அவரது துண்டு சுருக்கு கயிறுபோல் மாட்டப்பட்டிருந்தது. ஜன்னலில் சுருக்கு மாட்ட முயற்சித்து உருவிக்கொண்டு கீழே சாய்ந்துள்ளார். ஏன் இப்படி செய்தீர்கள்?
எனக் கேட்டபோது, எம் பொண்ணே போனபின் நான் வாழ வேண்டுமா?
எனக் கண் கசிந்தார். அந்த எண்பது வயதுக்காரர் பாசத்திற்கு முன், பிள்ளைகள் நாங்கள் வேஷதாரிகள் ஆகிப்போனோம்.
‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்து நல்லபடியாக ஓடியதும், நானும் டைரக்டராகி, உன்னை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு வாங்கி குடியமர்த்த நினைத்த என் கனவு, கனவாகவே முடிந்த சோகம் என்னுள் மிகப்பெரிய உறுத்தலாக குடிகொண்டுவிட்டது.
‘புதிய வார்ப்புகள்’ ரிலீஸான பின் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ என் முதல் பட டைரக்ஷன் வேலையைத் துவங்கியபோது திடீரென ஒரு போன். பாரதிராஜா படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு தியேட்டருக்குப் போனேன். படம் ஆரம்பிச்ச பிறகு ‘ஓ’ன்னு நான் கத்திட்டேன். ஏன்ன ஹீரோவா ராஜா நீ!
ன்னு தெலுங்குல ப்ரவீனா குரல். ‘என்னும் அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கு. நீ அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ’ நீ சொன்ன குரல் என் காதில் ஒலித்தது. அப்போதே சந்தித்து முடிவெடுத்து பின் அவளையே கரம் பிடித்தேன்.
உன் வாய் முகூர்த்தப்படி நீ சொன்ன இரண்டு விஷயமும் நல்லபடியாக நடந்துவிட்டாலும், உன்னைக் கடைசிவரை வாடகை வீட்டிலிருந்து மீட்க முடியலையே என்ற உறுத்தல் இன்னும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. வைராக்கியமாக காசு சேர்த்து, நீ சொந்தமாக வாங்கி எங்களையெல்லாம் குடி வைத்திருந்து பின் பாகப்பிரிவினையால் உன் கையை விட்டுப்போன அதே வீட்டை, இரட்டிப்பு விலை கொடுத்து திரும்பவும் வாங்கி, அதில் உன் போட்டோவை மாட்டி, அண்ணன்மார்கள் இருவரையும் அழைத்துப்போய் குடியமர்த்தினேன். கடனில் தவித்த கம்பெனியையும் மீட்டு, அவர்கள் கையில் ஒப்படைத்தேன். இப்போதுதான் எனக்கு என் உறுத்தல் மறைந்து, நான் உன் பிள்ளையாக நீ சொன்னபடி நடந்துகொண்ட ஒரு நிம்மதி கிடைத்தது.
சமீபத்தில் கோவையில் ஒரு கல்யாணத்தில் அன்னபூர்ணா, தாமோதர சாமி அண்ணன் அவர்களின் மனைவி லட்சுமி அம்மா அவர்களை சந்தித்தேன். அப்போது, கூட இருந்த லட்சுமி அம்மா மகன் சீனு, ‘என்னவோ தெரியலை, எங்கம்மாகிட்ட எப்பவும் உங்க அம்மாவோட போட்டோ இருக்குது. அதை தினம் எடுத்துப் பார்க்கிறாங்க’ என என்னிடம் சொன்னார். நான் லட்சுமி அம்மா அவர்களைப் பார்த்தேன். லட்சுமி அம்மா அவர்கள் கண் கலங்க பாக்கியம்! நான் யாரை வேணும்னாலும் மறப்பேன். உங்கம்மாவை மட்டும் ஒவ்வொரு நாளும் நினைச்சுப் பார்ப்பேம்பா
என்று என் கைகளைப் பற்றி கூறினார்கள்.
நீ என் மனதில் மட்டுமல்ல, இன்னும் இப்படி எத்தனையோ நல்லவர்கள் மனதில், இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறாய் அம்மா
***
அன்பு வாசக உள்ளங்களே!
என் தாயைப் பற்றிய துக்கத் தேக்கங்கள் இன்னும் என்னுள் தூங்காமலிருக்கின்றன.
இதே புத்தக்கத்தில் எண்ணற்ற நல் இதயங்கள், தங்களது தாயின் நினைவுகளை அழகழகாக வடித்துள்ளார்கள். அவற்றை வாசிக்க வாசிக்க வாழ்க்கையின் பாசப் பிணைப்புகள் எவ்வளவு உயிரோட்டமானவை என்பதை உணர முடியும்.
மணவை பொன் மாணிக்கத்தின் ‘அன்புள்ள அம்மா’ என்ற இந்த புத்தக முயற்சி, படித்து ரசிப்பதற்கல்ல - பாசம், பண்பு, ஒழுக்கம் இவற்றை நம் சந்ததியினர் கற்று வழிப்பற்றவே!
அந்த வகையில் எனது நண்பர் மணவையின் சிறப்பான இந்தத் தொண்டிற்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன்
உங்கள் கே. பாக்யராஜ்
2-minவாழ்ந்து காட்டி, வழிகாட்டு!
என்ற தத்துவத்தை
நான் கொள்கையாகக் கொண்டவன்.
மணவை எழுதிய
பெற்ற தாயின் பெருமை பேசும்
அன்புள்ள அம்மா
நூலைப் படித்தால்
நான் கடைப்பிடிக்கும்
வாழ்வியல் தத்துவத்தை
எல்லோரையும் பின்பற்ற வைக்கும்
என்று முழுமையாக நம்புகிறேன்.
வாழ்த்துக்களுடன்
சைதை சா.துரைசாமி
தலைவர். மனித நேய அறக்கட்டளை
சமர்ப்பணம்
3-minதிருமிகு. பொன்னன் திருமதி. லட்சுமி
எதை
எதையோ
எதிர்பார்த்து
எதிர்பார்த்து...
இறுதியில்
நலம் விசாரிக்கும்
கடிதம் மட்டுமே
எதிர்பார்த்து...
இறுதி மூச்சு விட்ட
என் தாய் தந்தையர்க்கு...
-மணவை பொன். மாணிக்கம்
வாழ்த்துரை
4-minச. ரமேஷ், உரிமையாளர் - போத்தீஸ்
மணவை பொன். மாணிக்கத்தின் அன்புள்ள அம்மா
என்ற அருமையான நூலை படித்து நெஞ்சம் நெகிழ்வுற்றேன்.
தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை
, அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை
, கருவறைத் தெய்வம்
, அம்மாவைக் கும்பிடுபவனுக்கு ஆண்டவனைக் கும்பிட வேண்டியதில்லை
, அம்மா என்றால் அன்பு
என்ற வாக்கியங்களை உறுதிப்படுத்தி, பெற்ற தாயின் பெருமைகளைக் கட்டியம் கூறும் வகையில் எல்லா வெற்றியாளர்களும் தாய்ப்பாசத்தின் பல்வேறு பரிணாமங்களை, தங்களின் மனநெகிழ்வுகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நூலிலுள்ள அன்னையர்கள் அனைவரது முகத்திலும் எனது தாய் வேலம்மாள் அவர்களின் முகத்தைக் காண்கின்றேன். இன்றும் என் அன்புமிகு அன்னையின் கரம்பிடித்துதான் பயணிக்கின்றேன்.
கருவறையில் சுமப்பது ஒன்(பத்து)பது மாதம். மன அறையில் தாய் சுமப்பதென்பதோ காலம் முழுவதும்.
Mother is an Angel of selfless love
என்ற வரிகளை நினைவு கூர்வதோடு இன்றைய சூழலில் குழந்தைகளும், இளைஞர்களும் மனதில் கொள்ளவேண்டிய, கடைபிடிக்க வேண்டிய அவசியமான வேதவாக்கு.
மணவை பொன். மாணிக்கத்தின் இம்மாணிக்க நூல் படிப்பதற்கு மட்டுமன்று. தாய் என்பவள் என்றும் யாவராலும் போற்றித் துதிக்கப்பட வேண்டிய தெய்வம். தாயன்பு தவறாது போற்றப்பட வேண்டும் என்ற நல்லுணர்வினை அனைவரது நெஞ்சிலும் ஓங்கி ஒலிக்கச் செய்ய வந்த ஓர் அன்பு முரசு என்றால் அது மிகையல்ல.
லட்சுமி மகனா நீ
5-minஉன் கைவிரல்களின் எண்ணிக்கையை விட, நீ பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும், ஐந்தாவது பிள்ளையான என்மீது மட்டும் உனக்கு கூடுதல் கவனம். எனக்குப் பிடித்ததை எல்லோருக்கும் பிடிக்க வைப்பாய். எனக்கு மிஞ்சிதான் மற்றவர்களுக்கு. வகை வகையாய்ப் பதார்த்தம் செய்ய வசதி இல்லாவிட்டாலும், ஒரே பதார்த்தத்தில் ஒரு கும்பா சோறு சாப்டுற மாதிரி சுவை இருக்கும். காஞ்ச மிளகாயை கருக்க வைத்து, புளி ரசம் வைத்தாலும் சரி, உப்புக் கறியை வேகவைத்துக் கொடுத்தாலும் சரி, உன் சமையல் ருசியை ஒருவரும் வெல்ல முடியாது.
மோட்டா அரிசிக்கு மொச்சைக்கொட்டை குழம்பு, கம்பங்கூழுக்கு கருவாட்டுக் குழம்பு, கேழ்வரகு கூழுக்கு காராமணி குழம்பு, சோளக் கூழுக்கு சுரக்காய் குழம்பு, தும்மல் வந்தால் தூதுவளை ரசத்துடன் துவையல், பித்தத்தில் அவஸ்தைப்பட்டால் பிரண்டை குழம்புடன் துவையல், இருமினால் கொள்ளு ரசத்துடன் துவையல். இந்த நளபாக காம்பினேஷனெல்லாம் ஏதோ நீயே கண்டுபிடித்ததாகவே கணக்கில் வைத்திருக்கிறேன்.