Frankfurt Marxiyam
()
About this ebook
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும் எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் ஆகியன பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் தமிழாக்கம் செய்துள்ள நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
Read more from S. V. Rajadurai
Manitha Gundugalum Marana Vandigalum Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsKal Theppam Rating: 0 out of 5 stars0 ratingsSinthikkum Naanal Rating: 0 out of 5 stars0 ratingsAugust 15 Rating: 0 out of 5 stars0 ratingsIrelandin Porattam Desiyamum Socialismum Rating: 0 out of 5 stars0 ratingsUchangalin Yugam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Frankfurt Marxiyam
Related ebooks
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6 Rating: 0 out of 5 stars0 ratingsUchangalin Yugam Rating: 0 out of 5 stars0 ratingsKamban Tamizhum Kanini Tamizhum Rating: 0 out of 5 stars0 ratingsLenin Rating: 0 out of 5 stars0 ratingsSamuthaya Marumalarchi Ilakkiyangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathasiriyarin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMaanidar Padhitha Kaaladi Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaran Manamum Maranthu Pona Puratchiyum Rating: 0 out of 5 stars0 ratingsAllangadi Santhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsAshokamitran's Puthiya Tamil Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsMax Muller Marmam! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsBooker T. Washington Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2022 Rating: 0 out of 5 stars0 ratingsDalit Kalai, Ilakkiyam... Rating: 0 out of 5 stars0 ratingsTolkappiya Athisayangal Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsIrelandin Porattam Desiyamum Socialismum Rating: 0 out of 5 stars0 ratingsValmiki Mudhal Valluvar Varai! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Tamizhum Chitrithazhgalum Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Ulagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Pootha Kamala Malar Rating: 0 out of 5 stars0 ratingsManitham Punitham Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsMalargalukkaga Malarnthavai! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Frankfurt Marxiyam
0 ratings0 reviews
Book preview
Frankfurt Marxiyam - S. V. Rajadurai
http://www.pustaka.co.in
ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்
Frankfurt Marxiyam
Author:
எஸ்.வி.ராஜதுரை
S. V. Rajadurai
For more books
http://www.pustaka.co.in/home/author/sv-rajadurai
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை
முதல் பதிப்பிற்கான முன்னுரை
ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனையாளர்கள்: வாழ்வும் வரலாறும்
ஜார்ஜ் லூகாச்
விமர்சனக் கோட்பாடு
அதிகாரத்துவ முதலாளித்துவமும் நாஜிசமும்: நியூமேன், போல்லாக்
நாஜிசம்: ஹோர்க்ஹைமர், அதோர்னோ
வால்ட்டர் பெஞ்சமின்
அறிவொளியின் முரண்வளர்ச்சி - 1
பண்பாட்டுச் சந்தை
ஹெர்பர்ட் மார்க்யூஸெ
யொர்கென் ஹேபர்மாஸ்
முடிவுரை
இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை
'ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்' நூலின் முதல் பதிப்பு வெளிவந்து சரியாக இருபதாண்டுகள் முடிவடைகின்றன. இந்த இருபதாண்டுக் காலத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் எத்தனையோ அரசியல், பொருளாதார, சமுக, பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மார்க்ஸியம் எதிர்பார்த்த சோசலிசப் புரட்சிகள் ஏதும் இந்தக் காலகட்டத்தில் நிறைவேறவில்லை. முன்னாள் சோவியத் யூனியனில் உறுப்பியம் வகித்த நாடுகள், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பிற சோசலிச நாடுகள், வியெத்நாம், லாவோஸ், மங்கோலியா, சீனா ஆகிய அனைத்தும் முழுவீச்சில் முதலாளியப் பொருளாதாரத்தைக் கொண்டு வந்துள்ளன. சோசலிசத்தின் அடையாளங்கள் ஓரளவு இன்று கியூபாவிலும் இன்னும் சற்றுக் குறைவாக வெனிசூலாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. உலக முதலாளியம், 'நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை’ மிக மூர்க்கதனமாக நடைமுறைப்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள வெகுமக்களின் பொருளாதார நலிவு, பண்பாட்டுச்சீராழிவு, புவியின் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ள சுற்றுச்சூழல் (சூழலியல்) கேடு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய முதலாளிய மையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்தாலும், அவற்றின் இராணுவ வலிமையோ பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் தன்மையோ சிறிதும் குறையவில்லை. கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய யூனியன் ஆகியன முன்னாள் யூகோஸ்லேவியா, இராக், ஆஃப்கானிஸ்தான், சூடான், லிபியா ஆகிய நாடுகளில் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தின, நடத்தி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புப் போர்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன உத்திகள், நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் சாத்தியப்படுத்தியவை என்பதில் சந்தேகமில்லை. ஏகாதிபத்திய முதலாளிய மைய நாடுகளும், உலக முதலாளியத்தின் ஆளுகைக்குட்பட்டுள்ள 'ஓர நாடுகளும்', தத்தம் நாட்டு மக்களையும் பிற நாட்டு மக்களையும் ஒடுக்குவதற்கு அதிநவீனமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. அதன் காரணமாக, அந்த ஆக்கிரமிப்புகளையும் ஒடுக்குமுளைகளையும் எதிர்த்துப் போராடும் சக்திகளும் ஆக்கிரமிப்பாளர்களின் வழிமுறைகளைப் பயன்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகின்றன.
'உலகளாவிய பயங்கரவாதம்' என்றும் ‘இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம்' என்றும் சொல்லப்படும் நிகழ்ச்சிப் போக்குகள் கடந்த இருபதாண்டுக் காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்தற்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியனவே முதன்மையான காரணமாக உள்ளன. உலக அளவில், சோசலிசப் புரட்சிக்காகப் போராடும் சக்திகள் இன்னும் இருந்து வருகின்றன என்றாலும், எந்தவொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்தி அவற்றை அரசு அதிகாரத்திலிருந்து அகற்றக்கூடிய வலிமையையோ, மூல உத்திகளையோ, தந்திர உத்திகளையோ இன்னும் போதுமான அளவு வளர்க்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நேப்பாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மாவோயிஸ்டுகள், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது. எனினும் சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு ‘வரலாறு முடிந்துவிட்டது' என்னும் கருத்துக்கும், 'மார்க்ஸியம் இறந்துவிட்டது' என்னும் மற்றொரு கருத்துக்கும் எவ்வித அடிப்படையும் இல்லை என்பதைக் கடந்த இருபதாண்டுக் கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
சோவியத் யூனியனின் தகர்வு, சீனாவில் ஏற்பட்ட மாற்றம், மின்னணுத் தொழில்நுட்பம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சி, பிற நாடுகளில் சோசலிசப் புரட்சி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தமை ஆகியனவற்றின் காரணமாக, பின் - நவீனத்துவச் சிந்தனைப் போக்குகள் வளர்ச்சியடைந்து, தமது 'வெற்றிக் கொடியை' நாட்டுவதில் - சமூக, அரசியல் களத்தில் அல்ல - கல்விக்கூடங்களிலும் அறிவாளிகளின் உலகிலும் தற்காலிக வெற்றி அடைந்தன. உலகில் நடக்கும் கொடிய அடக்குமுறைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய ஒரு ‘எதிரி' பின்-நவீனத்துவத்துக்குத் தேவைப்பட்டது. 'ஐரோப்பிய அறிவொளி’ தான் அந்த எதிரி என்னும் பின் நவீனத்துவப் புரிதல், தனக்கான ஊட்டத்தை ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட பல்வேறு மூலங்களிலிருந்து பெற்றுக் கொண்டது: நீய்ட்ஷ்செ, ஹைடெக்கர், ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த மாக்ஸ் ஹோர்க்ஹைமர், அடோர்னோ, அல்தூஸ்சர் இன்ன பிறர்.
ஐரோப்பிய அறிவொளியின் நேரடியான தொடர்ச்சி என்னும் தவறான புரிதலின் அடிப்படையில் மார்க்ஸியமும் பின் - நவீனத்துவச் சிந்தனையாளர்களின் கடும் விமர்சனத்துக்கும் நிராகரிப்புக்கும் உள்ளாகியது. அறிவொளி மரபுக்கும் மார்க்ஸியத்துக்குமுள்ள தொடர்பு, தொடர்பின்மை ஆகியன குறித்த ஒரு விரிவான கட்டுரை தமிழில் விரைவில் வெளிவரவிருக்கிறது.
மார்க்ஸியத்தின் வளர்ச்சிப்போக்கில் காணப்பட்ட பல்வேறு போக்குகள், விளக்கங்கள் ஆகியனவற்றை விளங்கிக் கொள்ளவும், மார்க்ஸியத்தின் புரட்சிகரமையக்கூறுகளை அடையாளம் கண்டு அவற்றை உயர்த்திப் பிடிக்கவும் விரும்பிய இடதுசாரி ஈழத் தமிழ் நண்பர்களின் ஊக்குவிப்பின் காரணமாக நாங்கள் சில அறிமுக நூல்களை எழுதத் தொடங்கினோம். அந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள், அவர்களுக்கும் எங்களுக்கும் இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு, மூன்று நூல்களுக்குப் பிறகு எங்களால் அந்த முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.
கடந்த இருபதாண்டுகளில் எங்களது படிப்பாற்றல் விரிவடைந்தது; முந்திய புரிதல்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதையும் உணர்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன், நல்ல, ஆழமான விஷயங்கள் கொண்ட புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. இன்றோ, மின்னஞ்சலில் 'ஆர்டர்' கொடுத்தால் ஒரு சில நாள்களில் தேவையான நூல்கள் நம் கைக்குக் கிடைத்துவிடுகின்றன. இணைய தளங்கள் இந்தப் பேரண்டத்தின் அளவுக்கு 'விஷய தானம்' செய்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் விரிவானதொரு நூலை எழுதியிருக்க முடியும். குறிப்பாக, மார்க்சியத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்ட ஹேபர்மார்ஸ் பற்றிய மறுமதிப்பீட்டை செய்திருக்க முடியும். மறுபுறம், மார்க்ஸியத்தால் இன்னும் வளர்க்கப்படாத உளவியல் குறித்து ஹெர்பெர்ட் மார்க்யூஸெ, எரிக் ஃப்ராம் ஆகியோரின் கருத்துகளை எடுத்துக் கூறியிருக்க முடியும் (கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களிலிருந்து சாதாரண மனிதர்கள் வரை, பொறாமை, கோபம், வனமம் போன்ற எதிர் மறைக்குணங்கள் ஏன் இருக்கின்றன என்பதற்கான நிறைவான விளக்கம் மார்க்ஸியத்தில் இல்லை என்னும் புறக்காரணங்களை - சமூக, பொருளாதாரக் காரணங்களை - மட்டும் கொண்டு இவற்றை விளக்க முடியாது என்றும் காலஞ்சென்ற மனித உரிமைப் போராளியம் சிந்தனையாளருமான டாக்டர் கே. பாலகோபால் சில ஆண்டுகளுக்கு முன் கூறியதற்கு சரியான பதில் ஏதும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களிடமிருந்து வரவில்லை; மாறாக, அவர் எதிர்கொண்டது அவதூறுகள்தான். மார்க்யூஸெ, ஃப்ராம் ஆகியோர் மார்க்ஸியத்தை ஃப்ராய்டியக் கருத்துகளுடன் இணைத்துப் பார்த்த போதிலும், அந்த முயற்சி, திட்டவட்டமான குறிப்பிட்ட மனிதர்களின் உளவியலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தி விவரங்களைத் தொகுக்கும் திசையில் செல்லவில்லை.) எனினும் இன்னொரு விரிவான நூலை எழுத நேரமும் ஆற்றலும் எங்களிடம் இல்லை.
கடந்த இருபதாண்டுகளில், ஃப்ராங்ஃபர்ட் மார்க்ஸியம் தொடர்பாக எங்களில் ஒருவரால் எழுதப்பட்ட ஒரே கட்டுரையான ‘வால்டர் பெஞ்சமின் வரலாற்றில் ஒரு தேவதூதன்': எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘புது விசை’ இதழில் வெளிவந்தது. பின்னர் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘பார்வையிழத்தலும் பார்த்தலும்' என்னும் நூலில் அக்கட்டுரை சேர்க்கப்பட்டது. இந்த நூலைப் பொருத்தவரை, எந்தவொரு மாற்றத்தையும் செய்யவோ, உள்ளடக்கத்தை செழுமைப்படுத்தவோ தேவையான நேரமோ, சக்தியோ எங்களுக்கு இருக்க வில்லை என்றாலும் இதனை நாங்களும், கூர்மையான படிப்பாற்றல் உள்ள ஓரிரு நண்பர்களும் (இவர்களில் குறிப்பிடத்தக்கவர், இந்த இரண்டாம் பதிப்பின் மெய்ப்புகளைப் படித்து, தக்க திருத்தங்களைச் செய்து கொடுத்த மு. பாண்டியராஜன்) மீண்டும் படித்துப் பார்த்தபோது, ஓர் ‘அறிமுக நூல்' என்பதற்கான இலக்கணம் இதில் உள்ளதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது.
எஸ். வி. ராஜதுரை
முதல் பதிப்பிற்கான முன்னுரை
1941 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவின் முடிவு
என்ற கட்டுரையில் மாக்ஸ் ஹோர்க்ஹைமர் எழுதினார்: இன்று அறிவின் செயல்பாடு - மானுடம் தன்னைப் பேணிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு - கொலை ஆயுதங்களைக் கொண்டும், பீரங்கி டாங்கிகளைக் கொண்டும் சமூகத்தை ஒழுங்கமைக்க வந்துள்ள பாசிசச் செயல்பாடாகவே தன்னைப் பிரதிநிதித்துவம் செய்து கொள்கிறது.
ஆறாண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ‘அறிவொளியின் முரண்வளர்ச்சி' என்ற நூலில் அவரும் தியோடோர் அதோர்னோவும் அறிவொளி மரபின் மீது மேலும் கடுமையான தீர்ப்பொன்றை வழங்கினர்: அறிவொளி சாத்தியப்படுத்தியவை நாஜிகளின் கொலைக்கூடங்களான ஒளச்விட்சும் டாகாவும்தான்.
ஃப்ராங்க்ஃபர்ட் (மார்க்சியச்) சிந்தனைப் பள்ளியின் தலையாய பிரதிநிதிகளான அவர்கள் இருவரும் ஐரோப்பிய அறிவொளி மரபு பற்றி முன்வைத்த கடுமையான விமர்சனங்களிலுள்ள உண்மை வளைகுடாப் போர் மூலம் மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டுவிட்டது. நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மானுடர்களின் மனங்களையும் உடல்களையும் கொடூரமான முறையில் ஆக்கிரமித்து அவற்றைச் சிதறடிக்கின்றன, சின்னா பின்னமாக்குகின்றன என்பது மீண்டும் வெளிப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய - இராணுவ ஆதிக்கச் சக்திகளின் கொலை வெறிச் செயல்களில் நவீன விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் உற்சாகமான பங்கேற்பு தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அணுகுண்டுகளையும் லாசர் கதிர்களையும் ஏந்தித் தமது வெற்றி ரதத்தை ஹிரோஷிமாவிலிருந்து பாக்தாத் வரை பிணக்குவியல்களினூடே செலுத்தியுள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் பிரேசில் நாட்டுப் பூர்வீக வனங்களுக்கும் இமாலய மலைச் சாரல்களுக்கும் பேரழிவை விளைவித்துள்ளன. ஐரோப்பிய அறிவொளியின் இந்திய விசுவாசியான நேருவின் பிரம்மாண்டமான திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின், ஏழை உழவர்களின் உயிர்வாழும் உரிமையைத் துடைத்தெறிந்துள்ளன. நர்மதாப் பள்ளத்தாக்கிலிருந்து எழுமலை வரை, பாலியாப்பாலிலிருந்து கூடங்குளம் வரை வெற்றிப்பயணம் மேற்கொண்ட நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் இராணுவ ஆராய்ச்சியும் இந்தியாவின் 'முற்போக்குச் சக்தி'களின், 'இடதுசாரி’களின் ஆரவாரமிக்க வரவேற்புரைகளைப் பெற்றுள்ளன.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரால் தனக்குக் குறுக்கீடாக உள்ள தடைகளை - மரபுவழியான பொருளாதாரங்கள், சுற்றுச் சூழலுக்கு இயைந்த வாழ்க்கை முறைகள், வெவ்வேறு பண்பாட்டு வகைகள் முதலானவற்றை - ஒரேபடித்தானவையாக்கும் ஒரே நோக்கம் கொண்ட நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் புதிய கடவுள்களாக இன்று அமர்த்தப்பட்டுள்ளன. விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் புதிய புரோகிதர்களாகவும் பூசாரிகளாகவும் அமைய அவர்கள் சொல்வதே புதிய வேதமாக மாறியுள்ளது. 'நடுநிலையான', 'மதிப்பீடுகள் சாராத,' 'உலகு தழுவிய' என்ற அடைமொழிகளைத் தனக்குச் சூட்டிக்கொண்டுள்ள இந்த நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உண்மையில் ஆதிக்கச் சக்திகளுக்கு மட்டுமே துணைபோகின்றவையாக, மக்களிடமிருந்து பிரிந்து, அவர்களுக்கு அந்நியமான பகைச் சக்தியாக விளங்குகின்றன. பரந்துபட்ட மக்களின் - உழைக்கும் மக்களின் - கட்டுப்பாட்டுக்குள் உள்ள, அவர்களால் கையாளப்படுகிற விஞ்ஞான அறிவும் தொழில் நுட்பமும் ஆதிக்கச் சக்திகளால் புறக்கணிக்கப்பட்டு ஒழிக்கப்படுகின்றன. அவரவர் சூழலுக்கும் தேவைகளுக்கும் பொருந்துகிற விஞ்ஞானங்களும் தொழில்நுட்பங்களும் வாழ்வுக் களத்திலிருந்து அகற்றப்பட்டு, மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்கும் அதிகாரத்துக்கும் உகந்த, ஒருசில நவீன விஞ்ஞானப் புரோகிதர்களுக்கு மட்டுமே வசப்படுகிற மையப்படுத்தப்பட்ட விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மட்டுமே பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.
பூர்ஷ்வா ஐரோப்பாவின் அறிவொளி மரபும் மறுமலர்ச்சி மரபும் சாத்தியப்படுத்திய நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் 'சோசலிச' நாடுகளிலும்கூட விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. உற்பத்திச் சக்திகளை வளர்த்தல், அவற்றை நவீனமயமாக்குதல் என்ற பெயரால் 'சோசலிச’ நாடுகளிலும் சுற்றுச்சூழல் கேடுகள் உருவாக்கப்பட்டன. முடிவு எடுக்கும் உரிமைகள், உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் உரிமைகள் ஆகியவற்றை உழைக்கும் மக்கள் இழக்க நேரிட்டது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய நிர்பந்தங்களின் காரணமாகத் தவிர்க்கமுடியாதபடி மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களில் மட்டுமில்லாது, பொருளாதார வளர்ச்சி பற்றிய பொதுவான சிந்தனையிலும் கூட நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பிட்ட பண்பாட்டு, வரலாற்று, சமுதாய, பொருளாதார அடிப்படையில் மேற்கு நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் புரட்சி நடந்த சமுதாயங்களில் உருவான அதிகாரத்துவ, பாசறைச் சோசலிசத்திற்கு மிகவும் உகந்தவையாக இருந்தன.
இந்த 'சோசலிச’ நாடுகளில் திட்டமிடுவதிலும், உற்பத்தி இயக்கத்தையும் விநியோகத்தையும் கட்டுப்பாடு செய்வதிலும், தகவல் - தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், அதிகாரம், நிர்வாகம் ஆகியவற்றிலும் எந்தவிதப் பங்கையும் உழைக்கும் மக்கள் வகிக்கவில்லை. அங்குக் கட்சி, அரசாங்கம், தொழிற்சாலைகள், இராணுவம், விஞ்ஞான - தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றிலுள்ள அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஒரு புதிய ஆளும் சமூக அடுக்கு உருவாகிய போது, மக்களின் எதிர்ப்புணர்வை ஒடுக்கவும், மாற்றுக் கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கவும், உண்மையான சோசலிசக் கருத்துகளுக்கு இடம் இல்லாமல் செய்யவும், அதிகாரவர்க்கப் பிரச்சாரத்தைச் சோசலிசச் சித்தாந்தம் எனப் பிரச்சாரம் செய்யவும், உள்நாட்டு - வெளிநாட்டு நடப்புகளை இருட்டடிப்பு செய்யவும் இப்புதிய ஆளும் சமூக அடுக்கிற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாத்தியப்படுத்திய கருவிகளும் இயந்திரங்களும் பயன்பட்டன.
முதலாளித்துவ நாடுகளிலும் 'சோசலிச' நாடுகளிலும் மனிதர்கள் உட்பட எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வெறும் ‘காரியவாத அறிவாக' அறிவு சீரழிந்ததைத் தான் ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனைப் பள்ளியினர் மிக ஆழமாக விமர்சித்தனர். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சமூக உறவுகளின் ஒரு வடிவம் என்பதை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியவர்கள் அவர்கள்தான். இயற்கையின் மூலவளங்கள் வரம்புக்குட்பட்டவை; இயற்கையை ஒரு பகைச் சக்தி போல் கருதி அதன் மீது ஆதிக்கத்தை நிலைநாட்டி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்ற பெயரால் அதனை ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலையாக மாற்றுவது மானுட குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தவர்கள் அவர்கள்.
நவீனத்துவத்தின் ஓர் அம்சமாக விளங்கும் பூர்ஷ்வா ஜனநாயகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டதை, பொது மக்கள் கருத்து என்பது செயற்கையாக உருவாக்கப்படுவதை, அவர்களது மனங்கள் ஆதிக்கச் சக்திகளின் விருப்பத்திற்கேற்ப ஆட்டிவைக்கப்படுவதை, ஆளும் வர்க்கங்களும் அரசும் மேற்கொள்கிற முடிவுகளுக்குப் பொதுமக்கள் இசைந்து போகுமாறும் சம்மதிக்குமாறும் செய்யப்படுவதை, எதிர்ப்புணர்வுகளையும் மறுப்புணர்வுகளையும் இருக்கக்கூடிய அமைப்பு தனக்குள் இழுத்துக்கொண்டு அவற்றைச் செயலற்றதாக்குவதை, மார்க்யூஸெ போன்றோர் விளக்கினர். ‘ஒடுக்குமுறை சார்ந்த சகிப்புத் தன்மை' என்று அவரால் கூறப்பட்ட விஷயம் அண்மையில் நடந்த வளைகுடாப் போரின் போது அமெரிக்க அரசாங்கமும் தகவல் தொடர்பு சாதனங்களும் இணைந்து நடத்திய பிரச்சாரப் போரின் போது தெளிவாக வெளிப்பட்டது.
உற்பத்திச் சக்திகளை அரசுடைமையாக்குதல், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம், உற்பத்திச் சக்திகளை வளர்த்து நவீனப்படுத்துதல் என்பன தம்மளவில் சோசலிசத்தை உருவாக்கி விடா என்பதையும் அவை புதிய அதிகாரத்துவ அமைப்புக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையும் ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனையாளர்கள் 1930-களிலேயே சுட்டிக்காட்டினர் (சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் அனுபவங்களை ஆராய்ந்தறிந்தமாவோ, 'உற்பத்திச் சக்திகள் பற்றிய கோட்பாடு' என்று மேற்காணும் போக்கை விமர்சித்து உற்பத்தி உறவுகளுக்கும் சமூக உறவுகளுக்கும்தான் முதன்மை தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது). புரட்சிக்குப் பிந்தைய சமுதாயங்களில் கட்சியின் தலைமை, அரசு அதிகாரம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியன மையப்படுத்தப்பட்டு ஓரிடத்தில் ஒன்றுகுவிக்கப்பட்ட நிலையில், வரலாற்றின் நாயகர்களான உழைக்கும் மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அவர்களுக்கு எஞ்சியது அந்நியமாதலும் வோட்காவும் கஞ்சாவும்தான். உழைக்கும் மக்களின் அகத்தன்மையை மறுத்து, அதிகாரத்துவ முறைகள் மூலம் சோசலிச நீதியையும் சமத்துவத்தையும் உருவாக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியவர்கள் ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனையாளர்கள்.
ஜெர்மனியில் தோன்றிய நாஜிசம், அங்கு முதலாளித்துவ அந்நியமாதலுக்கு உள்ளாகி அடையாளமற்றவர்களாக, தன்னிலை இழந்தவர்களாக, சமூகப் பிணைப்பு பற்றி ஏக்கம் கொண்டோராக வாழ்ந்த ஜெர்மானிய மக்களுக்கு ஓர் அடையாளத்தைத் தருவதாக வாக்களித்தது; எல்லா ஜெர்மானியர்களும் தமக்குள் ஒன்றுபட்டும் இயற்கையோடு ஒன்றிணைந்தும் வாழ்க்கை நடத்தியதாகச் சொல்லப்படும் ஒரு தூய
ஆதிநிலைக்கு அவர்களை இட்டுச் செல்வதாகக் கூறியது; ஜெர்மானியர்களின் ஒற்றுமைக்கும் அவர்களது ஏற்றத்துக்கும் உள்ள தடை என யூதர்களைச் சுட்டிக் காட்டியது; முதலாளித்துவத்தின் கணக்கீட்டுக்குட்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டியிருந்த ஜெர்மானிய மக்களின் இயல்பூக்கங்களும் உணர்ச்சிகளும் வெளிப்பாடு காணும் வகையில் பேரணிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது; ''தேசிய,
பண்பாட்டுச்" சின்னங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியது; வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட முழு ஜெர்மனியையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியது; அதேசமயம் அறிவொளி மரபின் அனைத்து எதிர்மறைக் கூறுகளையும் (நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பம் உட்பட) பயன்படுத்திக் கொண்டது. நாஜிகள் பற்றி ஃப்ராங்க்ஃபர்ட் பள்ளியினரின் ஆய்வு, 'ஹிந்துத்வா' என்ற நவீன ஹிந்து சாம்ராஜ்யத்தைப் படைக்கவும் அதன் பொருட்டு முஸ்லிம்கள் என்ற தடைக்கற்களை அகற்றி உடைத்து நொறுக்கவும் முயலும் இந்து மதவெறிச் சக்திகளைப் புரிந்துகொள்ள உதவும்.
சோசலிசமும் மார்க்சியமும் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட நம் காலத்தில் - குறிப்பாக வளைகுடாப் போரின்போது சோவியத் யூனியனும் சீனாவும் மேற்கொண்ட ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டுக்குப் பின் - அந்த நெருக்கடிக்கான அரசியல், பொருளாதார, வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களை ஆழ்ந்து கற்பதற்கான முயற்சிக்குப் பதிலாக, கோர்ப்பசெவைவிட ப்ரெஸ்னெவே மேல்,
ஸ்டாலின் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது
என்ற பேச்சுகளைத்தான் மார்க்சிய வட்டாரங்களில் கேட்க முடிகிறது. இன்றைய ரஷ்யா, சோவியத் 'சோசலிச' முன்மாதிரியின் தர்க்கரீதியான இறுதி விளைவு என்பதை இவ்வட்டாரத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இங்கு நாம் ரஷ்ய எழுத்தாளர் ஸினியாவ்ஸ்கியின் கூற்றை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது:
"சிறைச்சாலைகள் என்றென்றைக்குமாக மறைந்து விட வேண்டும் என்பதற்காக நாம் புதிய சிறைச்சாலைகள் கட்டினோம். எல்லைகளெல்லாம் வீழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக நாம் நம்மைச் சுற்றிலும் ஒரு சீன மதிலை எழுப்பினோம். வேலை என்பது போய் ஓய்வும் ஆனந்தமும் வரவேண்டும் என்பதற்காக நாம் கட்டாய உழைப்பைப் புகுத்தினோம். ஒரு சொட்டு இரத்தம்கூட இனி சிந்தப்படக் கூடாது என்பதற்காக நாம் கொன்றோம், கொன்றோம், கொன்றோம்.
குறிக்கோள் என்பதன் பெயரால் நாம் நமது எதிரிகள் பயன்படுத்திய வழிமுறைகளை நாடினோம். ஏகாதிபத்திய ரஷ்யாவை நாம் போற்றினோம். ப்ராவ்தா
(உண்மை) வில் நாம் பொய்களை எழுதினோம். இப்போது காலியான சிம்மாசனத்தில் புதிய ஜாரை ஏற்றினோம். அதிகாரிகளுக்கான பதக்கங்களையும் சித்திரவதை முறைகளையும் நாம் அறிமுகப்படுத்தினோம். சில சமயங்களில் நாம் நினைத்தோம் - கம்யூனிசத்தின் வெற்றிக்குத் தேவை இனி ஒரே ஒரு கடைசித்தியாகம்தான் என்று; அதாவது கம்யூனிசத்தைத் துறப்பதுதான் அது."
கம்யூனிசத்தைத் துறத்தல்
என்ற கடைசிக் காரியத்தைத்தான் இன்று கோர்ப்பசெவ் முழுமையாகச் செய்கிறார் என்றே கொள்ள வேண்டும். ஆயினும் மார்க்சிய உலகம் அவர் செய்த ஒரு நற்செயலுக்காக நன்றி கூறவேண்டும்: அதிகாரத்துவ, பாசறைச் சோசலிசம் இதுகாறும் அணிந்திருந்த சோசலிச மரவுரியைக் களைந்தெறிந்து அதன் உண்மை வடிவத்தை உலகுக்கு வெளிப் படுத்தினார். மேலும், மார்க்சியத்துக்குரிய ஒரே விளக்கம் எனப் பவனி வந்து கொண்டிருந்த சோவியத் மார்க்சியத்தின் மறைவைத் துரிதப்படுத்தினார்.
உலகின் பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகளில் அச்சடிக்கப்பட்டு மலிவு விலையிலும் இலவசமாகவும் விநியோகிக்கப்பட்டு வந்த சோவியத் நூல்கள், மார்க்சியத்திற்கு ஒரே ஒரு விளக்கம்தான் உண்டு என்றும் அது சோவியத் சித்தாந்திகள் கூறும் விளக்கம்தான் என்றும் உரிமை கொண்டாடின. சோவியத் அதிகாரத்துவ சோசலிசத்தை நியாயப்படுத்தும் வாதங்களையும் அதன் உண்மை வடிவத்தை மூடி மறைக்கும் கோட்பாடுகளையும் முன்வைத்த அந்த நூல்கள், அச்சமூக அமைப்பை விமர்சித்த அல்லது மார்க்சியத்திற்கு வேறுவகை விளக்கங்கள் கூறிய சிந்தனையாளர்களைக் கொச்சைப்படுத்தின; அவர்களது சிந்தனையைத் திரித்துக் கூறின. ரோஸா லுக்ஸம்பர்க், லூகாச், த்ரோத்ஸ்கி, புகாரின் பான்னகோயக், மாவோ, எர்னஸ்ட் ஃபிஷர், ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனையாளர்கள் முதலிய எல்லாருடைய முகங்களுமே சோவியத் மார்க்சியர்களால் சிதைக்கப்பட்டன (காந்திக்கும் நேருவுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதைகூட மாவோவுக்குத் தரப்படவில்லை). செகுவேரா போன்ற புரட்சியாளர்கள் சோவியத், கிழக்கு ஐரோப்பிய 'சோசலிசம்' பற்றிக் கூறியிருந்த கடுமையான விமர்சனங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. இத்தகைய நூல்களே இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள மார்க்சியர்கள் பலரது மார்க்சியத்தை வடிவமைத்தன. பெரெஸ்த்ரொய்கா பொருளாதாரத்திற்கு எத்தகைய மார்க்சிய நூல்களும் தேவையில்லாமல் போய் விட்டதால், மேற்கூறிய நூல்கள் பிரசுரிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுவிட்டன. சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சியத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டதால் மார்க்சியத்தைக் கற்றல் என்பது கட்சிக்கு வெளியே உருவாகியுள்ள புதிய மார்க்சியக் குழுக்களிடையே மட்டுமே நடக்கிறது. அக்குழுக்கள் மார்க்சியத்தின் பல்வேறு போக்குகளைத் தெரிந்து கொள்ள அக்கறை காட்டுவதை போரிஸ் ககார்லிட்ஸ்கி போன்றவர்களின் எழுத்துகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ரஷ்யா போன்ற நாடுகளில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட சரிவுகள் பற்றிய ஏராளமான விளக்கங்களும் காரணங்களும் பல்வேறு தரப்பினரால் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு காரணம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது. 'உற்பத்திச் சக்திகளை வளர்த்தல்' என்பதோடு தொடர்புடைய ஒருவகைப் ‘பொருளாதார வாதம்'தான் அது. சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் முதலாளித்துவச் சமுதாயங்களில் உள்ள அரசியல் உரிமைகள், குடியுரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியன வழங்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் கடுமையான வடிவங்களை மேற்கொண்டன. எனவே அரசியல், அறவியல், பண்பாட்டு அடிப்படைகளில் சோசலிசம் என்பது முதலாளித்துவத்தை விடச் சிறந்தது என்பதை மெய்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. பொருளாதார வகையிலாவது முதலாளித்துவத்தை வெற்றி கொள்ளலாம் எனில் அதுவும் இயலாமல் போய்விட்டது. ஏன்?
இச்சமுதாயங்களிலுள்ள ஆட்சியாளர்களும் சித்தாந்திகளும் தம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்திச் சாதனங்களை, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாட்டுச் சாதனைகளுடன் ஒப்பிடுவதும் அவற்றை எட்டிப் பிடித்துவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது. முதலாளித்துவ - ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள வாழ்க்கைத் தரத்தை எட்டிப்பிடிப்பதே சோசலிச இலட்சியம் என்று பறைசாற்றப்பட்டது. அந்த நாடுகளில் உள்ள உயர்ந்த வாழ்க்கைத் தரம், உலகின் இயற்கை வளங்களில் மிகப் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காலனிய, நவ - காலனியச் சுரண்டல் மூலமும்தான் சாத்தியமாயின என்பதை 'சோசலிச' நாடுகளின் ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்தனர். அந்த உயர்ந்த வாழ்க்கைத் தரம் பண்புவகையில் மேன்மையானதல்ல என்பதையும் எடுத்துக் கூறத்தான் செய்தனர். ஆயினும், மேற்குநாட்டுச் சாதனைகள்தாம் அடையப்படவேண்டிய இலக்குகளாகக் காட்டப்பட்டதன் காரணமாக நுகர்வுப் பண்பாடு மக்கள் மனத்தில் வளர வழிகோலப்பட்டது. மேலும், இந்தச் 'சோசலிச' நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது நாடுகளில் ஏற்பட்ட ‘உயர் வளர்ச்சி' பற்றிச் செய்து வந்த பிரச்சாரத்தில் பொய்கள் மலிந்திருந்தமையால் மக்கள் தம் நாட்டில் ஏற்பட்ட ‘வளர்ச்சி'கள் பற்றிய பிரச்சாரத்தை மட்டுமல்லாது முதலாளித்துவ நாடுகள் பற்றித் தமது நாட்டில் செய்யப்பட்ட பிரச்சாரத்தையும் நம்ப மறுத்தனர். ஏகாதிபத்திய முதலாளித்துவ